“ரோஜா நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசற?…” என அவளின் பேச்சின் வீரியத்தில் தொலைந்தவனாய் கேட்க,
“சரி என்ன பேசனும்? சொல்லுங்க. என்ன சொல்ல வந்தீங்க?…” என கேட்க,
“நீ வேற எதோ நினைக்கிற ரோஜா? ஆனா நீ நினைக்கிற மாதிரி அம்மா இல்லை….”
“அட அங்கிள், உங்கம்மாவை நான் என்ன கம்ப்ளைன்ட் பண்ணினேனா? இல்லை கொடுமை பன்றாங்கன்னு சொன்னேனா? எதுக்கு இந்த ரியாக்ஷன்? எப்பவும் உங்களை கஷ்டப்படுத்தற மாதிரி நான் அந்த சங்கடத்துக்கு ஆளாக்க மாட்டேன். ப்ராமிஸ். அதுக்காக அம்மா அம்மான்னு என்னை போட்டு டம்ப் பண்ண கூடாது…”
“நீ இவ்வளவு தெளிவா இருக்க கூடாது லிட்டில் டெவில்…”
“நான் சொல்றது உங்களுக்கும் சேர்த்து தான். இன்னைக்கு நாம நம்ம பண்ணினதால தான் இப்படி நடந்துக்கறாங்க. கொஞ்சம் நாள் போகட்டும்னு அமைதியா நாம போகலாம். ஆனா அது வேற மாதிரி தான் டர்ன் ஆகும். அதுக்கப்பறம் நாம முதல்லையே அப்படி இருந்திருக்கலாமேன்னு யோசிக்கனும்…”
“ஹ்ம்ம், பாய்ண்ட். ஆனாலும் உனக்குள்ள இப்படி ஒரு ரோஜா. நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை…” என்றான் விதுரன்.
“நான் எப்படி இருப்பேன்னு நீங்களா ஒரு ஜட்ஜிங் மைண்டோட இருந்தா அது என் தப்பில்லை மிஸ்டர் தொப்பை அங்கிள்…” என்று அவள் சிரிக்க,
“ஹ்ம்ம் சரி தான். ஆனா சீக்கிரமே எல்லாம் சரியாகும்….” என்றவன்,
“கேட்கனும்னு நினைச்சேன், மார்னிங் ஏன் நீ ரிங் டோன் மாத்தின. அதுக்குள்ளே அப்படி ஒரு சாங். அம்மா ஒரு மாதிரியாகிட்டாங்க…” என்றவனையே பார்த்திருந்தாள் ரோஜா.
“என்ன அப்படி பார்க்கற?…” என்றவன் உல்லாச மனநிலைக்கு தாவியிருக்க அவளை தன்னருகே அமர்த்திக்கொண்டவன் அணைத்துக்கொள்ள,
“உங்களுக்கு அம்மான்னா ரொம்ப புடிக்குமா?…” என கேட்டாள் ரோஜா.
“இதென்ன கேள்வி, அம்மான்னா யாருக்குதான் புடிக்காம இருக்கும். அம்மான்னா அம்மா தான். அவங்களோட இடத்தை யாராலும் ரீப்ளேஸ் பண்ண முடியாது இல்லையா?…” என்று சிலிர்ப்புடன் கேட்க அவளோ அதில் சிலிர்த்துக்கொண்டு,
“அப்போ பொண்டாட்டியோட இடத்தை மட்டும் இன்னொருத்தி ரீப்ளேஸ் பண்ணிடுவாளா?…” என்று கேட்க,
“அப்படி எங்க சொன்னேன்?…” என பதறியவன்,
“நீ என்னை ரொம்ப படுத்தற…” என அவளின் கழுத்தடியில் குனிந்தவனை தள்ளியவள்,
“பதில் சொல்லுங்க…” என்று கண்களை உருட்ட,
“அம்மா மட்டுமில்லை உன் இடத்தையும் யாராலையும் ரீப்ளேஸ் பண்ண முடியாது ரோஜா. இட்ஸ் ட்ரூ…” என்றவனின் குரல் ஆழ்ந்திருந்தது.
“நிஜமாவா?…” என்றாள் கேலியாக.
அவளுக்குமே தெரியவேண்டி இருந்தது. இத்தனை தூரம் அம்மா அம்மாவென சுற்றி வருபவன் எப்படி அவரை மீறி தன்னை கரம் பிடித்தான் என்று. சற்று ஆர்வமாகவும் இருக்க அவனை பேச வைத்தாள்.
“நம்ப மாட்டியா நீ? ஆனா அது உண்மை தான். என்னால உன்னை தவிர வேற ஒருத்தியை அந்த இடத்துல நினைச்சும் பார்க்க முடியாது. உன் மேரேஜ்க்கு வர வரைக்கும் கூட எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு நினைப்பே இல்லை…”
“என்னது என் மேரேஜா? எப்ப எனக்கு தனி? உங்களுக்கு தனி?…” என அவனிடம் சண்டை பிடித்தாள்.
“சொல்லவிட்டேன்டி…” என்று அவளின் வாயை பொத்த,
“டியா?…” என மூடிய கரங்களுக்குள் மொழிந்தவள் கண்களை விரிக்க அதில் முத்தமிட்டவன்,
“ஒரு ப்ளோல வந்திருச்சு. அட்ஜஸ்ட் பண்ணிக்க…” என்று சிரிக்க மேலே சொல் என்பதை போல அவளின் விழிகள் அபிநயம் பேச,
“நம்ம மேரேஜ் போதுமா?…” என்றவனை பார்வையால் “அது” என்று கெத்தாய் பார்க்க,
“அங்க நடந்த சம்பவம், ஹரிஷ் அந்த நாய் பாடம் புகட்டறேன்னு ஆரம்பிச்சு உண்மைக்கும் எனக்கு தான் பாடம் சொல்லிக்குடுத்தான். ரோஜா உனக்கானவ, அவளை விட்டுடாதன்னு…” என சொல்லவும் நெகிழ்ந்திருந்த அவனின் கையை வெடுக்கென கீழே இறக்கியவள்,
“அவன் பேச பேச அப்படி ஒரு வேகம், உன்னை அழ வச்சுட்டான்னு. அத்தோட உங்கப்பா என்ன மனுஷன் அவன்?…”
“வயசுக்கு மூத்தவர், அவன் இவன்னு…”
“சேகரன்ற பேரு எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது…” என்றான் அவன் முறைப்புடன். அவனின் கோபம் எதற்கென புரியாமல் அவள் கேட்பதற்கு முன்,
“எனக்கு உன்னை யாரும் திட்டினாலே புடிக்கலை. அன்னைக்கு வீட்டுக்கு பர்ஸ்ட் டைம் வந்தப்ப ஸ்ரீநிதி அதட்டினாங்க. அதுவே புடிக்கலை. அப்படி இருக்கப்போ உன்னை அத்தனை பேர் முன்னால எப்படியெல்லாம் அழ வச்சுட்டாங்க. அதுவும் என்னை காரணமா வச்சு…”
“ஹ்ம்ம் அப்பறம்?…” என சுவாரஸியமாய் கதை கேட்கும் பாவனையில் அமர,
“நான் என்ன கதையா சொல்றேன்? கிண்டலா அப்பறம்னு சொல்ற? எனக்கு நீ அழ பார்க்க புடிக்கலை. அதான் அந்த நிமிஷம் முடிவு பண்ணேன் உன்னை கல்யாணம் செய்துக்கனும்னு. அப்படி ஒரு முடிவு எடுத்த பின்னால உன்கிட்ட எந்த தயக்கமும் இல்லை எனக்கு. இப்படி உன்னை பார்த்துட்டு உன் இடத்துல இன்னொருத்தி. நினைக்க கூட புடிக்கலை. நீ பேசற?…” என்று அவளின் தலையில் குட்ட,
“அட அங்கிள், அதுக்கு பேரு தான் பொசஸிவ்…” என்று அவள் எடுத்து சொல்ல,
“ஹ்ம்ம் ஆமான்னு வச்சிக்க. இப்ப நான் கேட்டேனே? ரிங்டோன்…”
“அடிங்…” என்றவனை ரோஜாவின் மொபைல் சத்தம் கலைத்தது. அதை கேட்டவன் முகம் அஷ்டகோணலாக மாறியது.
“இப்ப இதை எதுக்கு வச்சிருக்க? மாத்து முதல்ல…” என அவளின் மொபைலை பறிக்க பார்க்க அவள் மீது விழுந்தான்.
ரோஜா சிரித்தபடி “தரமாட்டேன்” என சொல்ல இருவருக்குமான போராட்டத்தில் மொபைல் ஆன் ஆனதை கவனிக்க மறந்தனர்.
“எல்லாமே விளையாட்டு, விளையாட்டு மட்டும் தான்…” என்று விதுரன் சிரிக்க,
“முதல்ல விடுங்க, நான் யார் கால் பண்ணான்னு பார்க்கனும்…” என்று சொல்ல,
“ஒன்னும் பார்க்க வேண்டாம். அதை தூக்கி போடு. நாளைக்கு பேசிக்கோ யாரா இருந்தாலும்…” என்று ரோஜாவை அணைத்தபடி அவளை தனக்குள் அடக்க பாற்க்க,
“ப்ச், விடுங்க முதல்ல. சொல்றேன்ல…” என திமிறி எழுந்தவள்,
“காலையில வார்ன் பண்ண எதுவும் ஞாபகத்துல இல்ல. உங்களை…” என தலையணையை எடுத்து அடித்தவள் சுட்டு விரலை நீட்டி எச்சரிக்க படுத்துக்கொண்டு சிரிப்புடன் ‘வா’ என அழைத்தான்.
“போயா அங்கிள்…” என திட்டிவிட்டு மொபைலை பார்க்க அது லைனில் இருக்க முகம் சுருங்கிவிட்டது ரோஜாவுக்கு.
“என்னாச்சு ரோஜா?…” என்ற விதுரனிடம் அமைதியாக இருக்கும் படி சைகை காண்பித்தவள் மொபைலை காதில் வைக்க மறுபக்கம் நிசப்தம். இவளும் சில நொடிகள் அமைதியாக இருக்க மறுபுறம் சத்தமில்லை.
“சொல்லு விஸ்கி, அட்டன் பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்? நானும் நீ பேசுவன்னு பார்த்தா நீ நாங்க என்ன பேசறோம்னு கேட்கறதுலையே இருக்க…” என்று நக்கலாக சொல்லவும் விதுரன் சட்டென எழுந்தமர்ந்தான்.
“அது வந்து நீ வேணும்னு தான அட்டன் பண்ணிட்டு என்கூட பேசாம உன் உன்…” என திணறியவள்,
“இங்க வீட்டுல நாங்க எல்லாரும் இடிஞ்சு போய் இருக்கோம். நீ இப்படி பண்ணி குடும்ப மானத்தை வாங்கிட்டன்னு அப்பா துடிதுடிச்சு போய் இருக்காரு. நீ என்னனா அந்த கவலை கொஞ்சமும் இல்லாம இவ்வளோ சீப்பா அவனோட கொஞ்சிட்டு இருக்க. உங்களோட கொஞ்சல் எல்லாத்தையும் நான் கேட்கனுமா?…” என பிரஷாந்தி கேட்க,
“அவன் இவன்னு பேசின பார்த்துக்கோ. உன் புருஷனை சொன்னா ஏத்துப்பியா நீ? அது மாதிரி தான். உன்னால உன் புருஷனை திட்டவேண்டியதா இருக்கு பாரேன். மரியாதையா பேசு…” என ரோஜா எச்சரிக்க,
“என்னடி ரொம்ப துள்ளுற? ப்ளான் பண்ணி பக்காவா நடத்திட்ட தானே?. நீ ஏன் பேச மாட்ட?…” என கோபத்தில் அவள் கொந்தளிக்க,
“விஸ்கி என்னை ரொம்ப பேச வைச்சிடாத பார்த்துக்க. எனக்கு கால் பண்ணின சரி. ஆனா நான் பேசலைன்னதும் கட் பண்ணிட்டு திரும்ப கூப்பிட்டிருக்கனும். இல்லையா கொஞ்சமாவது இங்கிதம் இருந்திருந்தா இப்ப பேசறது சரியில்லன்னு நாளைக்கு கூப்பிட்டிருக்கனும். அதை விட்டுட்டு நாங்க பேசறதை கேட்டுட்டு இருந்திருக்க. என்ன மனுஷி நீ?…”
“ரோஜா…” பிரஷாந்தி இரைய,
“கால் பண்ணாத, அவ்வளோ தான் சொல்லுவேன்…” என்று துண்டித்துவிட்டு மொபைலை சுவிட்ச் ஆஃப் பண்ணிவிட,
“மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தற. மொபைலை ஆஃப் பண்ணனுமா என்ன?…” என்றவன் கண்ணை மூடி உறங்க ஆரம்பிக்க ரோஜா இருந்த எரிச்சலில் அவனை கவனிக்கவே இல்லை.
“தூங்குவோம். நாளைக்கு ஊருக்கு போகனும்னு சொன்னாங்க தானே?…”
“எங்கம்மா. அதான நீ கம்ப்ளீட் பண்ண வந்த?…” என்று சொல்லி அவளை தான் தோளில் சாய்த்துக்கொள்ள ரோஜா எதையோ தேடினாள்.
“என்ன ரோஜா? என் கிட்ட சொல்லு எடுத்து தரேன்….” என்றவனை பாராமல்,
“ஹேர்கிளிப் இங்க வச்சிருந்தேன் அதான் தேடறேன்…” என சொன்னவளை தூக்கி வந்து படுக்க வைத்தவன்,
“உன் முகத்துல என் முடி படாம பார்த்துக்கறேன். இந்த கிளிப் மாட்டி என்னை மாட்டி விடற வேலை எல்லாம் இங்க வேண்டாம்…” என்றதும் ரோஜா சிரிக்க அவளை நம்பாத பார்வை பார்த்தவன்,
“நிஜமா சொல்லு, தூங்கின பின்னால் எதுவும் பண்ண மாட்ட தான?…” என சந்தேகமாய் கேட்க,
“பார்க்கலாம்…” என சொல்லி திரும்பி படுத்துக்கொள்ள,
“என்னது?…” என இவன் அதிர,
“ப்ச், அதை விடுங்க. என்னோட கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் சங்கு வீட்ல இருக்கு. போய் எடுக்கனும்…”
“அதெதுக்கு உனக்கு?…” என்றான் பட்டென்று.
“அதெல்லாம் நான் வாங்கினது, எனக்கு வேணும் தானே?…” என்றதும் தான்,
“ஓகே காலையில ட்ரைவரை அனுப்பி எடுத்துட்டு வர சொல்லுவோம்…” என சொல்ல அப்பொழுதே விதுரன் எண்ணில் இருந்து சங்கவிக்கு அழைத்து தனக்கு வேண்டியதை மட்டும் சொல்ல அவளும் சரி என்றுவிட்டாள். அதன் பின்னே ரோஜாவும் தூங்கி விதுரனையும் தூங்கவிட்டாள்.
மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்டு ரோஜா அறைக்குள் நுழைந்ததும் யூட்யூப் பார்த்து ஒருவாறாக புடவை கட்டிக்கொள்ள அவளை அழைக்கவென உள்ளே வந்த விதுரன் அவளை பார்த்ததும் அப்படியே நின்றான்.
இழுத்து பிடித்து சொருகியபடி சரிபார்த்துக்கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைக்க துள்ளி விலகியவள்,
“நானே எவ்வளோ கஷ்டப்பட்டு சேரி கட்டிருக்கேன். ஒரு நிமிஷத்துல கலைக்க பார்த்தீங்க அங்கிள்…” என்றவளின் கூற்றில் வாய்விட்டு சிரித்தவன் பின் ரசனையுடன் அவளை பார்வையால் தழுவினான்.
அவனின் பார்வையில் முதலில் சற்று நாணியவள் பின் வேண்டுமென்றே அவனை வம்பிழுத்தாள் ரோஜா.
“மிஸ்டர் மூஞ்சியில தொப்பை வச்ச ஹேண்ட்சம், இந்த சேரில நான் அழகா இருப்பேனே?…”
“ஹ்ம்ம்…”
“எனக்கே எனக்குன்னு செஞ்சது போல இருக்குமே?…”
“ஹ்ம்ம்ம், ஆமா…”
“புடவையால நான் அழகா? என்னால புடவை அழகான்னு டவுட்டா இருக்குமே?…”
“எக்ஸாக்ட்லி…”
“அப்டியே பாத்துட்டே இருக்கனும் போல இருக்குமே?…” என மையலுடன் அவனை பார்த்துக்கொண்டே ரோஜா பேச,
“வர்ரே வாஹ், எப்படி இப்படி கரெக்ட்டா சொல்ற லிட்டில் டெவில்…” என அவனும் அவளிடம் இழைந்தபடி கேட்க,
“இதுதான் எல்லா ஹீரோவும் சொல்வாங்க. நீங்களும் இதையே சொல்லாம புதுசா யோசிங்க. இல்லைனா ஹீரோன்னு யாருமே ஏத்துக்க மாட்டாங்க…” என சொல்லி அவள் சென்றுவிட அவள் பேசியதில் காண்டாகினான்.
அன்றொருநாள் இதை சொல்லிய சக்தியை நினைத்து பல்லை கடித்தவன் அவனுக்கு போன் செய்தான்.
“சொல்லுடா புதுமாப்பிள்ளை. இப்பதான் பில்டிங்கு போக போறேன். நேத்து சொல்லாம கிளம்பிட்டேன். உனக்கு மெசேஜ் பண்ணிருந்தேன் நீ பார்க்கவே இல்லை…” என எடுத்தும் அவனே கேட்டு பேச,
“பேச்சாட பேசற? நீ கண்ணை வச்ச இப்ப என் பொண்டாட்டி நீ ஹீரோவான்றா. எல்லாம் உன்னால…” என்று பொரிய,
“எங்க கஷ்டம் எனக்கு தான் தெரியும். இனி எதாச்சும் பேசு வச்சுக்கறேன்…? என போனை வைத்துவிட கையில் வைத்திருந்த காபியை குடிக்க கூட தோன்றாமல் “இவன் எதுக்கு திட்டினான்னே தெரியலையே” என புரியாமல் அமர்ந்திருந்தான்.
மதிய உணவை முடித்துவிட்டு மொத்த குடும்பமும் அருப்புக்கோட்டை கிளம்பிவிட்டனர்.
செல்லும் வழியில் வெளியில் இரவு உணவை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர வெகு நேரம் ஆகிவிட்டது. அங்காங்கே நிறுத்தி நிறுத்தி வந்தாலும் எட்டுமணி நேர தூர பயணம் பத்து மணிநேரமாக மாற நள்ளிரவு தான் வீடு வந்து சேர்ந்தனர்.
மறுநாள் கோவிலில் பூஜை. மதியம் விருந்து. அதற்கு அணைத்து ஏற்பாட்டையும் ஏற்கனவே போன் வாயிலாகவே முடித்திருந்தபடியால் எந்த அவசரமும் பதட்டமும் இன்றி நிதானமாகவே இருந்தனர்.
இரவு வீடு வந்ததும் அவரவர் அறைக்கு சென்று உறங்குவதற்கே சரியாக இருக்க அலுப்பில் படுத்ததும் உறங்கிவிட்டனர்.
விடிந்த பின்னர் தான் அந்த வீட்டையே பார்த்தாள் ரோஜா. பழமை வாய்ந்த அந்த வீடு கீழ் இரண்டு தளம் பழமை மாறாமலும் மேலே எடுத்துக்கட்டப்பட்டும் இருந்தது.
அத்தனை பிரமாண்டமாய் இருக்க பார்த்து பிரமித்து நின்றாள். அவளை தேடி வந்தவன் தோட்டத்தில் இருப்பதை பார்த்து,
“இங்க என்ன பன்ற லிட்டில் டெவில்?…” என்க,
“இல்ல இந்த வீட்ட கட்டிட்டு குடி வந்தீங்களா? இல்ல குடி வந்துட்டு கட்டுனீங்களான்னு திங்க் பன்றேன்…” என்றவளின் தீவிரமான குரலை கேட்டு அவள் முகம் பார்க்க கேலியே விரவி இருந்தது.
“கொழுப்பு…” என்றான் கன்னத்தை நிமிண்டி,
“உங்கம்மா பார்க்கறாங்க…” என்று கயல்விழி வருகையை காண்பிக்க,
“இங்க என்ன பன்றீங்க? போய் ரெடி ஆகுங்க. கோவிலுக்கு கிளம்பனும்…” என்று உத்தரவிட்டுவிட்டு செல்ல அவரை பார்த்தபடி நிற்க,
“பயப்படாத நான் இருக்கேன்…” என்று யாரும் அறியாமல் அவளின் கையை பிடித்து ஆறுதலாய் தட்டி கொடுக்க,
“ப்ச், நீங்க வேற ஏன் கஸ்டமர்கேர் மாதிரி நான் இருக்கேன் இருக்கேன்னுட்டே இருக்கீங்க. நீங்க இருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது. என்னோட பயம் எல்லாம் யாரையும் பார்த்து இல்லை. என்னை பார்த்து. சும்மா இல்லாம ஏதாச்சும் பேசிடறேன். அங்கதான் பிரச்சனை. ப்ச்…” என்று முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு அவள் சொல்ல அவன் சிரிப்புடன்,
“அதானா…”
“அதேதான். நீங்க தான் சும்மா சும்மா பயப்படாதடா ஹ்ம்ம்ம் பயப்படாதன்னு சொல்லி பயம் காட்ட பார்க்கறீங்க…”
“நீயும் பயந்துருவ…” என்று சிரித்து,
“வீடு அம்மா பிறக்கமுன்ன கட்டினதாம். அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா குடும்பம் பெருசாக அதுக்குன்னு கட்டி கட்டி இப்ப இத்தனை பெருசு ஆகிடுச்சு. அதான் கீழே ஒரு மாடலாகவும், மேல வேற மாதிரியும் இருக்கும். ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு…”
அவன் அந்த குடும்பத்தின் சில கதைகளை சொல்லிக்கொண்டே செல்ல பேசிக்கொண்டே இருவருமாய் கிளம்பி கோவிலுக்கு வந்தனர்.
ரோஜா மிரண்டுவிட்டாள். அத்தனை கூட்டத்தை பூஜைக்கு எதிர்பார்க்கவில்லை அவள். திருமணத்தை போல ஒரு கூட்டம்.
உள்ளே நுழைந்தது தான் தெரியும் விதுரன் ஒரு பக்கமும் ரோஜா ஒருபக்கமுமாய் சற்று நேரத்திற்கெல்லாம் அழைத்து செல்லப்பட அறிமுகப்படலம் நடந்தது.
பலருக்கு காலில் விழுந்தும், சிலருக்கு தலையசைத்து குனிந்து வணங்கியும் ஆசிர்வாதம் பெற்றுகொண்டவளின் புடவை எப்போது நழுவும் என்னும் அபாயத்தை உணர்ந்தவள் ஹர்ஷியின் அம்மாவை தேடினாள்.
விதுரன் குடும்பத்தில் தானாக தன்னை இன்முகமாக ஏற்றுக்கொண்டவர். அதனால் அவரிடம் உதவியை நாட தேட அவர் செல்லும் திசையில் சென்றாள். அங்கே கயல்விழி இருக்க அவர் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு அதிர்ச்சியானாள் ரோஜா.
“அக்கா இது சரிவருமா? அதுவும் இத்தனை சொந்தக்காரங்க இருக்கப்ப என்னத்தையாச்சும் பேசுவாங்க…” என்று தயங்க,
“சபையில தட்டை நீ எடுத்து குடு வைத்தீ. யாரும் பேசாம நான் பார்த்துக்கறேன்…” என கயல்விழி தன் ஓரகத்தியிடம் சொல்ல,
“நான் குடுத்தா விது எதுவும் கேட்க மாட்டானா?…” என வைத்தீஸ்வரி கேட்க,
“நான் பார்த்துக்கறேன்…” என,
“சரிங்க அக்கா…” என வைத்தீஸ்வரி நகர்ந்துவிட்டார்.
“சின்னத்தை இதைப்பத்தி சொன்னாங்க. இதை மாமியார் தான் குடுக்கனும்னு சொன்னாங்க. ஏன் நீங்க தரமாட்டீங்களா?…” என்று ரோஜா கேட்க கயல்விழி சட்டென திரும்பி பார்த்தவர்,
“நீ ஏன் இங்க வந்த? விது கூட தானே இருக்க சொன்னேன்?…”
“உங்களை காணோமேன்னு உங்க மகன் தேடினார். அதான் நான் கூட்டிட்டு வரேன்னு வந்தேன்…” என்றாள் வேண்டுமென்றே.
அவன் தேடவுமில்லை. அவன் அழைக்கவும் சொல்லவில்லை. ஆனால் வேண்டுமென்று தான் அப்படி சொன்னது. கயல்விழியோ அவளிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல்,
“வைத்தீஸ்வரி தான் தட்டை குடுப்பா. பேசாம வாங்கு ரோஜா. அங்க வச்சு இது மாதிரி எல்லார் முன்னாடியும் பேசி வைக்க கூடாது. புரியுதா?…” என்றார் கயல்விழி.
“அடடா இங்க வந்து இதை கேட்காம இருந்திருந்தா அங்கயே கேட்டிருக்கலாம் போல?…” என்று ரோஜா உதட்டை பிதுக்க,
“யார்க்கிட்ட பேசறோம்னு தெரிஞ்சு பேசும்மா. நான் ஒரு முடிவெடுத்தா அது யோசிச்சு எடுத்ததா தான் இருக்கும். அதனால உன் விளையாட்டுத்தனத்தை ம்ஹூம் அதி புத்திசாலித்தனத்தை காட்ட இது நேரமில்லை. இங்க ஊர் பெரியவங்க நம்ம குடும்பத்து மூத்தோர்ங்க எல்லாரும் இருக்காங்க. இந்த குடும்பத்து மருமகளா கொஞ்சம் அமைதியா இருக்க பழகு…” என்று அதிகாரமாய் சொல்ல,
“இதை நீங்க வேற மாதிரி எனக்கு சொல்லியிருக்கலாம். போகட்டும். நான் இந்த குடும்பத்து மருமகள்னா உங்களுக்கு யார்? எனக்கே தெரியலை. போன போகுதுன்னு பன்ற மாதிரி தோணுது. ப்ச், அது என்னை ஒப்பாம கூட இருக்கலாம். அதை நான் புரிஞ்சுக்கறேன்…” என்றவளின் பேச்சில் எரிச்சல் அடைந்தவர்,
“நீ பேசின வரை போதும் ரோஜா…” என்றார் கயல்விழி.
“எனக்கு போதாதே? இப்ப நீங்க இப்படி செய்ய காரணம் நானா இருக்கும் போது அதை பேச எனக்கும் உரிமை இருக்குன்னு தான் நினைக்கறேன். இப்ப இங்க நீங்க குடுக்கப்போற இந்த மரியாதை, இதை நீங்க எனக்கு மட்டும் குடுக்கல, உங்க மகனுக்கும் சேர்த்து தான். உங்க மகனை வைத்துத்தான் உங்க மருமகளுக்கும் தப்பு தப்பு இந்த குடும்பத்து முதல் மருமகளுக்கும்…”
“அது எனக்கு தெரியாதா?…” என கயல்விழி வெளிப்படையாகவே கோபமாய் பார்த்து கேட்க,
“இன்னைக்கு விட்டுட்டு நாளைப்பின்ன அய்யோ என் மகனுக்கு செய்யலைன்னு வருத்தப்பட கூடாது பாருங்க. அதான்…”
“எனக்கு நீ சொல்லி தறியா? அப்படி எந்த வருத்தமும் எனக்கு இல்லை. வரவும் வராது….” என்றார் மிதப்பாகவே.
“நிஜமாவே இல்லை. ஆனா உங்களுக்கே இது தெரியனும்னும் விரும்பறேன். தாயா உங்க மகன் மேல உள்ள உரிமையை ஏன் என் மேல உள்ள கோபத்தால விட்டுக்குடுக்கறீங்க? பெத்தவங்களுக்கான கடமையை யார் செஞ்சாலும் பெத்தவங்களாகிட முடியாது. புரிஞ்சா சரி…”
“ரோஜா…” என்று அடக்கப்பட்ட குரலில் சீற்றத்துடன் அவளை பார்த்தார் கயல்விழி.
“என்னை பேசுங்க. பதில்க்கு நானும் என் பக்க நியாயத்தை சொல்றேன். அதுக்காக இப்படி உங்க கடமையில இருந்து நீங்க விலகி ஓடறது எனக்கென்னமோ பயந்து ஓடற மாதிரி இருக்கு…”
“ப்ச் உண்மைகள் சில நேரத்துல துவர்க்கத்தான் செய்யும் மாமியார் ராஜமாதா…” என்று வழக்கமான குறும்பை அவிழ்க்க,
“என்ன?…”என்று திகைத்து பார்த்தார் கயல்விழி.
“உங்களோட கம்பீரமும், நிமிர்வும் இந்த இடத்துல இன்னும் பலமடங்கா தெரியனும். அதை விட்டுட்டு நான் ஒரு சின்ன பொண்ணு. உங்க அனுபவத்துக்கு முன்னால நான் யார்?…” என்றவளுக்கு பதில் சொல்லாமல் கயல்விழி முகம் திருப்ப,
“என்னை வச்சு உங்க முடிவை இப்படி மாத்தி உங்க மகனுக்கு செய்யவேண்டியதை செய்யாம விட்டா உங்களுக்கு இப்போ வேணா அது சரியா இருக்கலாம். ஆனா பின்னால நீங்க வருத்தப்படலைனாலும் உங்க மகனுக்கு வருத்தம் இருக்கும் தானே? அம்மாவின் கையால் வாங்கமுடியலைன்னு…”
ரோஜா சொல்லவும் முகம் அமைதியாக தூரத்தில் நின்றிருந்த விதுரனை தான் தழுவியது. முகமெல்லாம புன்னகையுடன் சந்தோஷமாய் நிற்பவனை பார்க்க பார்க்க அவர் மனம் உவகை கொண்டது.
ஆனாலும் பிரஷாந்தியின் தங்கையாக ரோஜா நினைக்கவே மனது கசந்தது. கண்ணில் விழுந்த தூசியாய் உறுத்திக்கொண்டிருந்தது பிரஷாந்தியை பற்றி அவர் காதில் விழுந்த விஷயம்.