பிரஷாந்தியையும் அவளை பற்றிய அந்த நிகழ்வையும் நினைக்க விருப்பமில்லாதவராய் ஒரு நொடி கண்களை மூடி திறந்தவர் பின் ரோஜாவை பார்த்தார். ஆராயும் பார்வையே. அவளை ஊடுருவினார் பார்வையால்.
அனுபவ அறிவும், இப்பொழுது அவள் தன்னிடம் பேசிய விதமுமே சொல்லியது அவளின் குணத்தையும், பண்பையும்.
உங்கள் மகன் மகன் என்று அவருக்கு எத்தனை முறை உணர்த்துகிறாள் இந்த பெண். அவளின் சமயோசித புத்தியில் சற்று வியப்பும் கூடத்தான். எந்த இடத்திலும் தன் உரிமையை காட்டிக்கொள்ளாமல் தன்னை சுற்றிலும் வேலியிட்டு எப்புறமும் வெளியேறவிடாமல் அணைக்கட்டினாற் போல் நிற்பவள் மீது சிறிதளவு நல்ல அபிப்பிராயம் அந்த நொடி வேரூன்றியது.
கயல்விழி ரோஜா, விதுரன் திருமண செய்தியில் ரோஜாவின் குடும்பத்தினரை ஆணிவேர் முதற்கொண்டு ஆராய சொல்ல வசதியில் குறைவில்லை என்றாலும் குடும்ப பின்னணியில் முற்றிலும் திருப்தி இல்லாமல் போயிற்று.
காரணம் கிடைத்த தகவல்களில் ரோஜா சில வருடங்களுக்கு முன்னான விதுரனின் வாழ்வில் வந்த பிரஷாந்தியின் உடன்பிறந்த தங்கை, சேகரனின் மகள் என்பதே அவரை யோசனைக்குள்ளாக்கியது.
ரோஜாவை பார்க்கும் பொழுதே பிரஷாந்தியின் தங்கை அவளை போலத்தான் இருப்பாளோ என்று அவரே முடிவாகிக்கொண்டார்.
அதனாலேயே பார்த்ததில் இருந்தே ஒருவிதமான ஊசலாட்டத்திலேயே இருந்தார். மகனுக்காக ஏற்பதா? பெண் சரியில்லை என்றால் அவனின் எதிர்காலம் என்று அவரின் மொத்த எண்ணமும் மகனை வைத்து தான் இருந்தது.
ஆனால் மகன் இந்தளவிற்கு முடிவெடுத்திருக்கிறானே அதில் நிச்சயம் ஒரு நியாயம் இருக்கும், நம்பிக்கை இருக்கும் என்று நினையாமல் போய்விட்டார்.
அதிலும் பார்த்ததில் இருந்து ரோஜாவும் துடுக்காய் பேச மதிக்க தெரியாத பெண் என்ற எண்ணம் வேறு. ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தவித்ததென்னவோ உண்மை.
ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் மகனுக்காகவேணும். ஆனால் உடனே என்பது தன்னால் முடியாதென நினைத்திருக்க அவளிடம் பேசுவதையே தவிர்த்து வந்தார்.
இப்பொழுது அவளின் நேரடியான பேச்சில் சற்று தெளிந்ததை போல உணர்ந்தவர் அதையும் அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை.
பிரஷாந்தியின் செயலில் உண்டாகியிருந்த பிடித்தமின்மை ரோஜாவின் வாழ்க்கையை பாதிக்க இருந்ததை நினைத்து சற்று வருந்தவும் செய்தார்.
யார் சொன்னது ஒருபானை சோற்றுக்கு ஒரு பதம் என்று? இதோ சேற்றில் முளைத்த செந்தாமரை. அவசரப்பட்டு உடன் பிறந்தவளை கொண்டு இவளை எடை போட்டுவிட்டேனோ? என நினைத்தார்.
முன்பெல்லாம் பெற்றோரை கொண்டு பிள்ளை வளர்ப்பை அனுமானித்து சொல்வது போய் இப்பொழுது பிள்ளைகளை கொண்டு மொத்த குடும்பத்தையும் கணித்து விடக்கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டதென எண்ணினார். அந்த கணிப்பும் சில இடங்களில் சரியாகவும் இல்லை தவறாகுவதும் உண்டு.
“சரி நீ போ ரோஜா. நான் வரேன்…” என்று அவளை அனுப்ப பார்க்க தலையசைத்துவிட்டு திரும்பியவள் தடுமாற,
“ஹேய் பொண்ணே பார்த்தும்மா…” என்று அவளை பிடித்து நிறுத்தினார்.
“புடவை தடுக்கிருச்சு…” என்றபடி சிரிக்க,
“பார்த்து கட்ட கூடாதா?…” என கடிந்துகொண்டார் கயல்விழி.
“எனக்கென்ன அம்மாவா இருக்காங்க சொல்லிக்குடுக்க? இப்ப மாமியார் நீங்க கூட கத்துக்குடுக்க மனசில்லை தானே? விடுங்க…” என்று வேண்டுமென்றே பேச,
“ஹ்ம்ம், கொஞ்சம் கேப் விட்டா பேசிட்டே இருப்ப போல? விது எப்படி சமாளிக்கிறான் உன்னை?…” என்று அவரறியாமல் சொல்லி,
“வைத்தியை வர சொல்றேன். கட்டிக்கோ…” என சொல்ல,
“அதான் நீங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கள்ள. நானே அட்ஜஸ்ட் பன்றேன். எல்லார்டையும் கோவில்ல வச்சு எனக்கு புடவை கட்ட வரலைன்னு போய் நிக்க முடியாது. பரவாயில்லை…” என்றவளை பார்த்து ஐயோவென நினைத்தவர்,
“சரி வா. யார்ட்டையும் சொல்ல வேண்டாம்…” என கையை பிடித்து அழைத்துக்கொண்டு ஓரிடத்தில் வந்து நின்றவர் சுற்றிலும் பார்த்துவிட்டு புடவையை சரி செய்ய ரோஜாவின் முகத்தில் முறுவல் படர்ந்தது. கயல்விழியோ,
“உனக்கு கொஞ்சம் பிடிவாதமும் இருக்கும் போல? கட்ட தெரியாதுன்னும் சொல்லிட்டு யார்ட்டையும் ஹெல்ப் கேட்க வேண்டாம்னும் சொல்ற. பின்ன சபையில் எப்படி நிப்பியாம்?…”
“யூட்யூப் பார்த்து தான் கட்டினேன். திரும்பவும் அதையே செய்ய வேண்டியது தான். மொபைல் உங்க பையன்கிட்ட இருக்கு…” என்றாள் கூடுதல் தகவலாக மாமியாருக்கு.
அவளின் பேச்சில் சிரிப்பு வர பார்த்தாலும் முறைப்பை கைவிடாதவராய் அவளுக்கு கட்டி முடித்து தள்ளி நின்று பார்க்க கச்சிதமாக தான் இருந்தது.
“திரும்பவும் கால் தடுக்கி அவிழ்ந்துடாது தானே?…” என கேட்டு மாமியாருக்கு பிபியை அதிகப்படுத்த,
“உன்னோட…” என்று எதற்கும் இருக்கட்டும் என பின் பண்ண வேண்டிய இடங்களில் சேஃப்டிபின்களை குத்தியவர்,
“இனி நீயே இழுத்தாலும் விழறது கஷ்டம் தான். நீ இழுக்காம இருந்தா சரி…” என சொல்ல,
“நீங்க கட்டிவிடறதா இருந்தா இன்னொரு முறை நல்லா இழுத்துட்டா போச்சு. திரும்ப கட்டமாட்டீங்களா என்ன?…” என்று கேட்க,
“எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா?…” என்றார் கோபமில்லாத முகத்துடன். தோளை குலுக்கி கண்சிமிட்டி அவள் சிரிக்க கயல்விழி அசந்து நின்றார்.
“பயமே இல்லை உனக்கு…” என்று வேறு சொல்ல ரோஜா பதில் சொல்லும் முன்னர்,
“அக்கா, அங்க தேடறாங்க. பூஜைக்கு நேரமாச்சுன்னு கூப்பிடறாங்க…” என வைத்தீஸ்வரி வந்து சொல்ல,
“வா…” என்றவருடன் ரோஜாவும் இணைந்தே நடந்து வர பார்த்த விதுரனுக்கு என்னடா இது? என ஆச்சர்யமாக இருந்தது.
அவன் மட்டுமல்ல அனைவருமே இதை பார்க்க கயல்விழிக்கு என்னவோ போல் ஆனது.
“விது கூட போய் சேர்ந்து நில்லு. ஏன் என் கூடவே வர?…” என கயல்விழி அவளை அனுப்ப ரோஜாவும் மேலும் அவரை பந்தாடாமல் அமைதியாய் சிரித்தபடி சென்று விதுரன் அருகே நின்றுகொண்டாள்.
மருமகளை இத்தனை சீக்கிரம் ஏற்றுக்கொண்டாரே கயல்விழி என மொத்த உறவினர்களும் சந்தோஷமாகவும், சில எரிச்சலாகவும், சிலர் கிண்டலாகவும் பேச கயல்விழிக்கு மூச்சு முட்டுவதை போல இருந்தது.சடகோபன் தான்,
“இங்க பாரு கயல் எல்லாரும் ஆளுக்கொரு நியாயம் பேசத்தான் செய்வாங்க. அதுக்கு எல்லாம் பார்த்து நம்ம மகன் சந்தோஷத்தை தொலைக்க முடியுமா? இன்னைக்கு வரவங்க அவங்களுக்கு தோணினதை அறிவுரையா சொல்லத்தான் செய்வாங்க. அவங்க குடும்பம்னு வரப்போ அந்த நியாயமே மாறுபடும்…”
“இருந்தாலும் நம்மளை பார்த்து பேச துணியாதவங்க எல்லாம் இதை வச்சு பேசறாங்க பாருங்க…” கயல்விழி சொல்ல,
“அவங்க பேச இது ஒரு வாய்ப்பு. அதை அவங்க பயன்படுத்திக்கறாங்க. அவ்வளவு தான். இதனால அவங்களுக்கொரு சந்தோஷம். இதை நினைச்சு முக்கியத்துவம் குடுத்து நம்ம சந்தோஷத்தை நாம இழக்கனுமா?…” என்றும் தெளியாமல் கயல்விழி இருக்க,
“அங்க பாரு கயல் நம்ம விதுவையும், அவன் மனைவியையும்…” என்று காண்பிக்க இருவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி. அவர் பார்த்துக்கொண்டே இருக்க,
“நாளை நம்ம குடும்பத்தோட இன்னொரு ஆணிவேரா மாற போறவங்க. நம்ம மொத்த குடும்பத்தையும் வழி நடத்த போறவங்க. இன்னைக்கு நாம முழுமனசோட ஆசிர்வதிச்சாதான் அவங்களோட ஆரம்பம் சுபமா இருக்கும். நாமலே நம்ம பிள்ளைங்களை விட்டுட கூடாது கயல்…” என சடகோபன் சொல்லவும்,
“பூஜைக்கு நேரமாச்சு வாங்க போகலாம்…” என்று நடந்தார் கயல்விழி.
அதற்கு மேல் பேசவும் எதற்கும் நேரமில்லாமல் போனது. பூஜை துவங்க அனைவரும் மனமுருகி வேண்ட ரோஜா விதுரனை பார்த்தாள்.
விதுரனின் மறுபுறம் கயல்விழி. தாயும் மகனும் ஒரே போல கையை நீட்டி வாய்க்குள் முணுமுணுத்தபடி வேண்டுதல்கள் வைக்க அவற்றை பார்த்து ஒரு புன்சிரிப்பு.
பின் தன் குடும்பத்தை நினைத்து பார்த்தாள். எங்கேயும் ஞாபக அடுக்கில் தாங்கள் குடும்பமாய் நின்று இப்படி சாமி கும்பிட்டிருக்கிறோமா என. இல்லவே இல்லை.
முஹூர்த்தக்கால் ஊன்றும் அன்று தந்தைக்கு முக்கிய வேலையாய் மாட்டிக்கொள்ள அவரின்றி நடைபெற்றது.
தன் பின்னர் மண்டபத்திற்கு கிளம்பும் நேரம் கூட வீட்டில் சாமி கும்பிட்டு கிளம்புகையில் பெற்றோர் ஆசிர்வாதத்திற்காக காலில் விழுந்த நொடி தன் தலையில் தட்டிவிட்டு யாருடனோ போனில் பேசியபடி சேகரன் நகர்ந்துவிட்டார்.
வளர்மதியோ பாப்பா என பெரியமகளிடம் எதையோ பேசிக்கொண்டு இவளை கூட்டிட்டு வாங்க என உறவுக்காரர்களிடம் சொல்லி சென்றுவிட்டார்.
அனைத்திற்கும் எதிர்பதமாக தான் விரும்பியதை போல ஒரு குடும்பமும், உயிராய் நேசித்த கணவனும். தெய்வத்திடம் வேண்டுவதற்கு எதுவுமில்லை.
“இது போதும், இந்த வாழ்க்கை நிலைத்தால் மட்டுமே போது. வேறு எதுவும் வேண்டாம்” என்று மனதினுள் வேண்டுதல் கூட இல்லை அது. மன்றாடல் என்றும் சொல்லலாம்.
வெளியில் புன்னகையுடன் சிரித்தபடி இருந்தாலும் மனதினுள் நடுக்கம் தான். இந்த சந்தோஷத்தை பறித்துவிடமாட்டாய் தானே என்னும் விதமாய் வேறு எதுவும் கேட்காமல் கொடுத்ததை என்னிடமே விட்டுவிடு என்னும் மன்றாடல்.
“எனக்குத்தான் கிடைச்சாச்சே, என் புருஷனும், என் மாமனார், மாமியாரும். அற்புதமான அருமையான குடும்பமும். இது போதாதா எனக்கு? பேராசை கூடாதுன்னு சொல்லுவாங்க. இதுவே பேராசை தான் எனக்கு. இது கிடைச்ச பின்னால வேற என்ன வேணுமாம்? போதும் சாமி…” என உணர்ச்சிவயப்பட்டவளாய் என்ன பேசுகிறோம் என தெரியாமல் அவள் பேச கண்கள் கூட லேசாய் கலங்கி இருந்தது.
“ரோஜா?…” என விதுரன் அவளின் கையை பிடிக்க அதன் நடுக்கத்தை உணர்ந்தவன் கயல்விழியை பார்த்தான்.
“விது நீ ரோஜாவை நடுவில விடு. எல்லாரும் கொஞ்சம் விலகி நில்லுங்க. வெளிக்காத்து உள்ள வரட்டும்…” என சொல்லும் பொழுதே படபடப்பில் மயங்கி கயல்விழியின் மீதே சாய்ந்துவிட்டாள் ரோஜா.
சட்டென ஒரு சலசலப்பு. அதிலும் சிலர் சகுனம் பார்க்க ஆளுக்கொன்றாய் பேச கயல்விழி தன் கொழுந்தனாரை பார்க்க அதை புரிந்தவராய் மணிவாசகம் தான் அதட்டினார்.
“மொத்தமா எல்லாரும் கோவிலுக்குள்ள இருக்கப்ப எல்லாருக்குமே ஒரு படபடப்பு வரது தான். அதிலும் மருமகப்பொண்ணு புதுசு. நாம எல்லாருமே மாத்தி மாத்தி அலைக்கழிச்சுட்டோம். காலையில சாப்பிடாம விரதம் வேற…”
“விரதமா?…” என வீட்டினர் வாய்க்குள் சிரிப்பை அடக்க,
“மூச்சு முட்டத்தான செய்யும். அதோட இவ்வளவு கூட்டத்த பார்த்தா மிரளத்தான செய்யும். அதான் புள்ளைக்கு வடியா வந்துருக்கு…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே பூசாரி தண்ணீருடன் வர முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு ரோஜாவை எழுப்பி அமரவைத்தனர்.
“ரோஜா ஆர் யூ ஓகே?…” என விதுரன் கேட்க தலையசைத்தவள் அசடு திரும்பினாள் வழிய கயல்விழியிடம்.
“கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன் போல…” என்று மெதுவாய் சொல்ல,
“உனக்கு எப்பவும் இப்படி வருமா என்ன?…” என்றார் அவர் அடுத்த கேள்வியாய்.
அவருக்கு கவலையாகிவிட்டது ஒரு கூட்டத்திற்கு தாங்கமாட்டாதவளா இந்த பெண் என்று.
“ம்ஹூம், நீங்க சேரி கட்டிவிட்ட சந்தோஷம். அதான் எமோஷனல் ஆகிட்டேன்…” என சொல்லி புன்னகைக்க,
“நான் என்ன கேட்டேன்?…”
“அதான் சொன்னேனே?…” என்று மீண்டும் அதையே சொல்ல அவளுக்கு குடிக்க தண்ணீர் தந்தவர்,
“இப்ப ஓகே தானே? பூஜை நிக்குது…” என்றதும் எழுந்தவள் கயல்விழியை ஒட்டியே நிற்க,
“ரோஜா என்ன இது? இன்னும் நீ சரியாகலையா?…” என்றார் அவர்.
“இல்லை சேரி எதுவும் மிஸ் ஆகிருக்குமா? கழண்டுடாது தானே? அதான் ஒரு சேப்டிக்கு…” என்று சொல்லவும் அவளை பார்த்தவர்,
“எல்லாம் கரெக்ட்டா தான் இருக்கு. நீ விது பக்கத்துல நில்லு…” என்று சொல்லவும் அவனருகே அவள் நிற்கவும் தான் நிம்மதியானது.
அதன் பின் மீண்டும் பூஜை ஆரம்பிக்க சடகோபனும், கயல்விழியும் தம்பதி சமேதரராய் அந்த பெரிய தாம்பாளத்தட்டை எடுத்து மகனுக்கும் மருமகளுக்கும் கொடுக்க விதுரனுக்கு ஆச்சர்யம்.
ஏற்கனவே வைத்தீஸ்வரி வந்து விதுரனிடம் சொல்லியிருந்தார் தன்னை எடுத்து கொடுக்க சொல்லியிருக்கிறார்கள் என்று. வருத்தமாக இருந்தாலும் சரி என்றுவிட்டான். கயல்விழி விருப்பம் எதுவோ அப்படியே செய்யட்டும் என்று.
இப்பொழுது அவரே எடுத்து கொடுக்க வாங்கியவனுக்கு அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது. அதை பார்த்தும் பாராமல் கண்டுகொண்ட ரோஜா மாமியாரை பார்த்து புன்முறுவல் பூத்தாள்.
“ஓகே, போய் ரெண்டுபேரும் சாப்பிடுங்க….” என்று அனுப்பிவிட சாப்பிட்டு முடிக்கவும் உறவுகள் சூழ்ந்துகொண்டனர்.
அனைவருக்கும் உபசரிப்புகள், வாழ்த்துக்கள், மற்ற வேலைகள் எல்லாம் முடிந்து கோவிலை விட்டு வீடு வந்து சேர மாலை நெருங்கியது. வந்ததும் இருவருக்கும் திருஷ்டி கழித்தனர்.
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் குடும்பத்தினர் அவரவர் ஊர்களுக்கு கிளம்பிவிட அத்தனை பெரிய வீட்டில் பத்துபேர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
வந்ததில் இருந்து ரோஜா தன் மொபைலை யாரிடம் குடுத்தோம் என்று யோசித்து தேட தேட அது கிடைக்கவே இல்லை. முகம் கழுவி விட்டு வந்த விதுரன் அவள் தேடலை கண்டு சிரிப்புடன் தலையணைக்குள் இருந்து மொபைலை எடுத்து நீட்ட,
“இது எப்படி உங்கக்கிட்ட வந்துச்சு?…” என இடுப்பில் கை வைத்து முறைக்க,
“நீ சும்மா இருந்திருந்தா கூட விட்டிருப்பேன். அது எப்படி இதையெல்லாம் ரிங்டோனா வைக்கற நீ? இன்னைக்கு கோவில்ல வச்சு எந்த கலாட்டாவும் வேண்டாம்னு பார்த்து தான் ஹர்ஷிட்ட இருந்து மொபைலை வாங்கி ஆஃப் பண்ணி வச்சிட்டேன்…”