பெரிதாய் சாதித்ததை போல விதுரன் சொல்ல அவனை கண்டு நமுட்டு சிரிப்பு சிரித்தவள்,
“நீங்களே வச்சுக்கோங்க…” என அவனிடம் நீட்டிவிட நம்பாத பார்வை பார்த்து,
“ரோஜா என்ன பண்ணி வச்சிருக்க நீ?…” என்று கேட்க,
“விது வா சாப்பிடலாம்…” என வெளியில் மணிவாசகம் கூப்பிடுவது கேட்டு ரோஜாவையும் கூட்டிக்கொண்டு வெளியே வந்தான்.
ஹாலில் கயல்விழி கீழே கால் நீட்டி அமர்ந்திருக்க அருகே சடகோபன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இவர்களை பார்த்ததும்,
“சாப்பிடலாம்…” என சடகோபன் சொல்ல கயல்விழி கால்வலியால் எழ முடியாமல் தடுமாற,
“கொஞ்சம் நேரம் இரு கயல். இங்கயே கொண்டு வர சொல்றேன். சாப்பிட்டுக்கலாம். அப்பறம் மெதுவா எழுந்துக்கலாம்…” என சடகோபன் சொல்ல,
“இத்தனை பேருக்குமா? சும்மா இருங்க…” என்றதும்,
“ப்ச், அம்மா இத்தனை பேர் என்ன இத்தனை பேர். எல்லாருமே ப்ளேட்ல போட்டு இங்க வச்சு சப்பிட்டுப்போம். வேணும்னா திரும்ப போய் எடுத்துப்போம். அவ்வளவு தானே?….” என விதுரனும் சொல்ல,
“நீங்க இருங்க நானும் ஹர்ஷியும் எடுத்துட்டு வரோம்…” என ரோஜா சொல்லவும் வைத்தீஸ்வரியும் வந்துவிட மற்றவர்கள் அமர்ந்து கொண்டனர்.
விதுரன் தண்ணீரும் இட்லி வைத்திருந்த பெரிய ஹாட்பாக்ஸ் சகிதம் வந்துவிட ரோஜா அனைவருக்கும் சாப்பிட தட்டும், ஒரு கையில் சட்னியும் கொண்டு வந்தாள்.
வைத்தீஸ்வரி சாம்பாரை கொண்டு வர ஹர்ஷி இன்னொன்றை தூக்கி வர ஒருவர் இட்லி வைக்க சாம்பார் ஊற்ற என்று கீழே அமர்ந்து சாப்பிட அத்தனை நிறைவாய் இருந்தது.
பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க கயல்விழியை அங்கேயே கையை கழுவ சொல்லிவிட்டு அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு பாலை காய்ச்சி கொண்டு வந்து வைத்தீஸ்வரி அனைவருக்கும் கொடுக்க வாங்கிக்கொண்டு பேசியபடி இருந்தனர்.
“விது இன்னும் ரெண்டு நாள் இங்க தான் இருக்கனும். ஞாபகம் இருக்குது தானே?…”
“ஹ்ம்ம் இருக்கும்மா…” என சொல்ல மீண்டும் அதே சத்தம்.
“ஒத்தரோசா ஒத்தரோசா” என்னும் குரல் ரிங்டோனாய்.
எங்கே கேட்கிறதென தெரியாமல் விதுரன் சுற்றும் முற்றும் தேட யாரின் மொபைலில் இருந்தென தெரியாமல் முழித்தான்.
“என்ன இது விது? நீ இப்படி கூட வைப்பியா?…” என்று கயல்விழி அவனை பார்க்க,
“அம்மா, இது என்னோட போன்…” என்றவன் ரோஜாவை பார்க்க,
“உன் போன் தான். சாப்பிட உட்காரும் போது எடுத்து வெளில வச்ச தானே? நான்தான் தண்ணீர் கொட்டிடுமோன்னு என் பக்கமா வச்சேன். உன் சின்ன சித்தப்பா தான் பேசறார்…” என்றவர் அட்டன் செய்து பேசிவிட்டு சடகோபனிடம் தர அவரும் பேசிமுடித்து வைக்க,
“சின்ன பிள்ளையா நீ இப்படிலாம் வச்சுட்டு இருக்க?…” என மீண்டும் கயல்விழி சொல்ல,
“என் ஞாபகமா கூட வச்சிருப்பாங்க போல. ஒரே ரோஜா. அதான் ஒத்தரோசா. ஒத்தரோசா. மீனிங்ஃபுல் ரிங்டோன்…” என்று சொல்லி விதுரனை குறும்பாய் பார்க்க கயல்விழிக்கு புரிந்துவிட்டது மருமகளின் வேலை என்று.
“சரி சரி எல்லாரும் போய் தூங்குங்க. நாளைக்கு பார்க்கலாம்…” என்ற கயல்விழிக்கு ஒரு கை கொடுத்து வைத்தீஸ்வரி தூக்க மற்றவர்களும் எழுந்து சென்றுவிட விதுரனின் பார்வையை கண்டு அறைக்கு செல்லவே தயங்கி நின்றாள்.
உண்மையில் அத்தனை கோபம் அவனுக்கு. முறைப்புடன் அவளை பார்த்தபடி இருக்க சடகோபன் தான்,
“விது சக்திக்கு கால் பண்ணி பேசினியா? புது பில்டிங்க்கு இன்னைக்கு போகவே இல்லை போல அவன். அந்த பொண்ணுங்க என்ன பண்ணியிருக்காங்கன்னு தெரியலை….”
“அப்பா அவன்ட்ட பேசிட்டேன் நான். நாளைக்கு போவான். இன்னைக்கு வேற பிராஞ்ச்ல வேலை ஜாஸ்தி. போய் பார்க்க முடியலை. அந்த பொண்ணுங்க எனக்கு மெயில் அனுப்பிட்டாங்க. அதை நாளைக்கு முடிச்சுடலாம்…” என்றவன் மேலும் பேசிக்கொண்டு நிற்க ரோஜா உள்ளே போக முடியாமல் அவனுக்காக காத்திருந்தாள்.
தனியாய் மேலே செல்ல பயம். சிறிய வீடு என்றால் கூட பரவாயில்லை. அந்த வீடு பகலில் கூட்டத்துடன் இருக்கும் பொழுது அழகாய் தெரிந்தது இப்பொழுது ஆட்கள் அரவம் குறைந்ததும் அமானுஷ்யமாய் தெரிய கண்களை மூடிக்கொண்டு சோபாவில் அமர்ந்துகொண்டாள்.
அவளை பார்த்தவனுக்கு தெரியும் ஏன் என்று. இருந்தாலும் பேசி முடித்து வருவதற்குள் லேசான உறக்கத்திற்கே சென்றுவிட,
“ரோஜா, வா…” என்று அழைத்ததும் கோபமாய் அவனை முறைத்துவிட்டு முன்னே நடக்க விதுரன் அப்படியே நின்றுகொண்டான்.
இவன் வராததை முதலில் கவனியாதவள் பின் திரும்பி பார்க்க குடுகுடுவென ஓடிச்சென்று அவனின் கையை பிடித்துக்கொண்டவள் அவனை முறைக்க,
“இவ்வளவு பயத்தையும் வச்சுட்டு உனக்கு வீராப்பு வேற?…” என்று அவனும் கோபமாய் சொல்ல,
“அப்படி ஒன்னும் என்னை நீங்க கூட்டிட்டு போக வேண்டாம்…” அவனின் கையை விட்டுவிட்டு தள்ளி நின்றாள்.
“நான் ஏன் ஹால்ல இருக்கனும்? இதோ இருக்கு என் மாமியார் ரூம். அங்க போய் படுத்துப்பேன்…” என கயல்விழி அறை நோக்கி செல்ல,
“அடங்கவே மாட்ட நீ…” என்றவன் அவளின் கையை பற்றி கூட்டி செல்ல இளமுறுவலுடன் அவனுடன் இழுத்த இழுப்பிற்கு சென்றவள் அறைக்குள் நுழைந்ததும் முகத்தை மாற்றிக்கொள்ள,
“உன்னால பாரு, என்னை என்ன நினைப்பாங்க?…” என குதிக்க ஆரம்பிக்க,
“எல்லா அம்மாக்களும் மகனை என்ன நினைப்பாங்க? சும்மா இப்படி பர்பெக்ட்டா இருந்தா நல்லாவா இருக்கும். அப்பப்ப இப்படி இருந்தா தான் ஜாலிய இருக்கும்…” என்று அவனுக்கு சொல்லிக்கொடுக்க,
“அம்மா என்னை பேசினதை பார்த்த தான?…”
“ஹ்ம்ம் ஹ்ம்ம், என்ன பேசினாங்க? ஒன்னும் திட்டலை. இதை கூட பேசலைனா போரடிச்சுடும்…”
“நீ எதுக்கு என் போன்ல அந்த வாய்ஸ் செட் பண்ணின?…”
“என் போன்ல பண்ணிருந்தேன். நீங்க ஒளிச்சு வச்சதால இதுல பண்ணேன். இனி நீங்க ரோஜா போனை ஒளிச்சு வைக்க யோசிக்கனும்ல…” என்று சொல்லவும்,
“நீ நிஜமாவே இன்னைக்கு லிட்டில் டெவில் தான்டி…” என கோபமாய் சொல்லியவன் அப்படியே படுத்துக்கொள்ள,
“நான் ஆரம்பத்துல இருந்தே லிட்டில் டெவில் தான். என்னமோ இன்னைக்கு தான் சொல்லற மாதிரி…” என்றவள் அவனை ஒட்டினார் போல வந்து படுத்துக்கொள்ள,
“இப்ப என்ன?…” என்று திரும்பி அவளை பார்த்து படுக்க,
“பயமா இருக்குல. தூக்கம் வரலை…” என்று முறைப்பாகவும், பாவமாகவும் முகத்தை வைத்து சொல்ல வந்த சிரிப்பை அடக்கியவன்,
“எனக்கு கூட தூக்கம் வரலை அதனால…” என்று அவளை அணைத்துக்கொள்ள சில நொடிகளில் உறங்கிவிட்டாள் ரோஜா.
“கட்டிப்புடிச்சதுக்கே அசந்து தூங்குற ஒரே ஆள் நீதான் லிட்டில் டெவில். நாளைக்கு உனக்கு இருக்கு வேடிக்கை…” என சிரிப்புடன் உறங்கினான் விதுரன்.
விதுரன் ரோஜாவை சிக்கவைக்க நேரம் பார்க்க அவளோ அவனின் கண்களிலேயே படவில்லை. வைத்தீஸ்வரி ஹர்ஷியுடன் சுற்றிக்கொண்டு இருந்தாள்.
மதியவேளைக்கு வைத்தீஸ்வரி சமையல்கார பெண்ணுடன் சேர்ந்து சமைத்துக்கொண்டிருக்க ஹர்ஷியும், ரோஜாவும் அங்கே உதவிக்கொண்டு இருந்தனர்.
அதாகப்பட்டது சமைக்கும் களைப்பு தெரியாதபடிக்கு அவர்களுக்காக வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள் ரோஜா. அதனை கேட்டுக்கொண்டே வேலைகள் நடக்க ஹர்ஷிக்கு போன் வர வெளியில் பேசிக்கொண்டு சென்றுவிட்டாள்.
“ரோஜா இந்த தேங்காயை அரைச்சு பால் எடுக்கனும். மிக்ஸி ஸ்விட்ச் மட்டும் ஆன் பண்ணேன்…” என்ற வைத்தீஸ்வரி பெரிய ஜாரில் தேங்காயை போட்டு கொண்டு வந்து மிக்ஸியில் பொருத்த முதல் சுற்று சுற்றி பார்த்தவள்,
“இதை நான் பன்றேன் சித்தி, நீங்க அங்க பாருங்க. கழட்டும் போது வந்து எடுங்க. சும்மா சுத்தி விடறது தானே?…” என்றவள் அதை சுற்றி சுற்றி விளையாட,
“வைத்தீ…” என்ற மணிவாசகத்தின் குரலில் ரோஜாவை பார்த்தவர்,
“ரோஜா நான் தண்ணி விட்டுட்டேன். நீ நல்லா சுத்த மட்டும் செய். நல்லா மைய்யா அரையனும். நான் என்னன்னு போய் பார்த்துட்டு வரேன்…” என்றவர் சமையல் பெண்ணிடம் பார்த்துக்கொள் என்றுவிட்டு சென்றுவிட,
“அம்மா, நான் இந்த அரிசியை கலைஞ்சி தண்ணியை வெளில ஊத்திட்டு வரேன்…” என்று அவளும் சென்றுவிட ரோஜா தேங்காயை அரைக்க அது சிக்குவதை போல தெரிய,
“பால் எடுக்கனும்னா தண்ணி நிறைய விடனும் தானே? இல்லனா எப்படி பால் வரும்?…” என்று சொல்லிக்கொண்டே ஜாரின் மூடியை திறந்து தண்ணீரை அளவு தெரியாமல் சற்று கூடுதலாக ஊற்றிவிட்டு மூடியை பார்க்க பின்னிருந்து அவளை அணைத்த விதுரன் அவளின் தோளில் அழுத்தமாய் முத்தமிட துள்ளி திரும்பியவள்,
“அங்கிள், சொல்லமாட்டீங்களா? இப்படித்தான் வந்து கிஸ் பண்ணுவீங்களா?…” என்று கத்த,
“என்னது கிஸ் பண்ணேனா? எப்போ?…” என்றவன்,
“நான் அம்மா உன்னை கூப்பிடறாங்கன்னு சொல்லத்தான் வந்தேன். நீ என்னன்னா கனவு கண்டுட்டு இருக்க…” என சொல்லவும் குழப்பமாய் அவனை பார்த்தாள்.
தனது கழுத்தை தொட்டு பார்த்து யோசித்தவள் பின் முகத்தை திருப்பிக்கொண்டு அவன் மீதான கோபத்தில் மூடியை சரியாய் மூடாமல் லேசாய் பிடித்தபடி சுவிட்சை தொட்டாள்.
மீண்டும் அவளை முத்தமிட்ட இடத்தில் லேசாய் கடித்தும் வைத்துவிட்டு திரும்புவதற்குள் விதுரன் ஓடிவிட அதில் தடுமாறிய இவள் சுவிட்சை தொட்டதும் ஓடிய மிக்சியின் மூடி தெறித்து தேங்காய் பால் மொத்தமும் அந்த அறையை அலங்கோலமாக்கி ரோஜாவை நனைத்தது.
“என்ன ரோஜா இது?….” என்று வந்து பார்த்த வைத்தீஸ்வரி அவள் நின்ற கோலத்தில் சிரித்துவிட,
“எல்லாம் அவங்களால தான்…” என காலை உதைத்துக்கொண்டு அவனை தேட,
“என்னால இல்லை, எல்லாம் உன் மாமியாரால…” என சமையலறை வாசலில் நின்று விதுரன் சொல்ல,
“உங்களை…” என விரட்டிக்கொண்டே அவள் ஓட விதுரன் அவளிடம் அகப்பட்டுவிடாதவாறு வெளியில் ஓட அங்கே அடுத்த ஆப்பு ரோஜாவிற்கு.
வாசலுக்கு வெளியில் மேலே அலங்கார பூந்தொட்டிகள் இருக்க அதற்கு மண்ணை மாற்றுவதற்காக கயல்விழி சிறிய ஸ்டூலை போட்டு மண்ணை நிரப்பிக்கொண்டு இருந்தார்.
அவருக்கும் பிடித்தமான ஒரு வேலை இது. வாசலுக்கு முன்பு சிறு சிறு தொங்கும் தொட்டிகளும் அதில் உள்ள பூக்களும் அவரின் கண்களை நிறைக்கும் பொழுதெல்லாம் மனதில் ஒரு உற்சாகம் பரவும்.
இன்றும் அதற்காக அவர் இருக்க உடன் உதவிக்கு சடகோபன் பக்கத்தில் இருக்க விதுரன் அவரின் பின்னால் சென்று,
“காப்பாத்துங்கப்பா…” என்று ஒளிய யாரென திரும்பி பார்த்த சடகோபன் சிரிக்க கயல்விழி அப்பொழுது தான் அவளை திரும்பி பார்க்க ஓடிவந்த வேகத்தில் ரோஜா நிலைதடுமாறி ஸ்டூலை தட்டிவிடவும் இருவருமாய் தரையில் விழுந்தனர். கீழே ரோஜா, மேலே கயல்விழி.
“ஐயோ ராஜமாதா செம்ம வெய்ட்…” என விழுந்த வேகத்தில் ரோஜாவின் வாயிலிருந்து வார்த்தைகளும் வந்துவிட்டிருந்தது.
கயல்விழி தொட்டியை பிடித்ததில் அதுவும் அவிழ்ந்து அதிலிருந்த மண் மொத்தமும் கயல்விழியின் கழுத்துவளைவின் இடையே கீழே கிடந்த ரோஜாவின் மேல் கொட்ட கயல்விழி ஆவேன அவரறியாமல் கத்திவிட்டார்.
அவர் கத்தியதில் அவரை தள்ளிவிட்டு விழுந்துவிட்டோம் என்ற பயத்தில் ரோஜாவும் கத்த விதுரன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.
முகத்தில் விழுந்திருந்த மண்ணை கை கொண்டு தள்ளியவள் முகத்தை இப்படியும் அப்படியுமாய் திருப்ப கயல்விழி மெதுவாய் நகர்ந்து அமர்ந்து,
“என்ன விளையாட்டு ரோஜா இது?…” என்று அவளை முறைக்க,
“தவறு செய்துவிட்டீர்கள் ராஜமாதா. என்னை கூப்பிடனும்னா இவர்கிட்ட ஏன் சொன்னீங்க? பாருங்க உங்க மகனால…” என்றவள்,
“நான் போய் குளிச்சுட்டு வந்து என்னன்னு கேட்கறேன்…” என்று எழுந்தவளுக்கு அமர கூட முடியவில்லை.
உடையிலும் தலையிலும் தேங்காய் விழுதுகள் ஒட்டியிருக்க நேர்மாறாய் முகமெல்லாம் மண் அப்பியிருந்தது.