அருப்புக்கோட்டையில் இருந்த நான்கு நாட்களும் சொர்க்கம் எனலாம். அப்படி ஒரு மகிழ்ச்சியில் திளைத்தாள் ரோஜா.
குடும்பமே கொண்டாடவில்லை என்றாலும் அவர்களின் வரையறுக்கப்பட்ட அந்த சுதந்திரத்தில் கூட ஆனந்தமாய் அன்பாய் உணர்ந்தாள்.
பூஜைக்கு மறுநாள் மட்டுமே வீட்டில் இருந்தவள் அதன் பின்னான இரண்டு நாட்களும் விருந்து விருந்தென உறவினர்கள் வீட்டிற்கு செல்வதற்கே சரியாக இருந்தது.
புது புது மனிதர்கள். முரட்டுத்தனமான பாசம். ஏதோ மந்திரக்கோலை சுழற்றியத்தை போல வாழ்க்கை தானாகவே வண்ணமயமாக மாறியதை போல குதூகலித்தாள்.
ஆனால் அனைத்தும் மனதினுள் மட்டுமே. இதை விதுரனிடம் கூட வெளிப்படுத்திக்கொள்ள முயலவில்லை. அத்தனை ஆரவாரம் அவளுள்.
ஒருவழியாக சென்னை கிளம்பி நேராக பெரியவீட்டிற்கு செல்ல கயல்விழி ஆரம்பித்துவிட்டார்.
தனியாக இருக்க வேண்டாம், இங்கு இருந்து போகலாம் அது இதுவென மறுக்க, அவருக்கு மேல் பிடிவாதம் மகன். முடியவே முடியாதென்று மறுத்துவிட ரோஜாவோ எதுவானாலும் சரி என்று அமர்ந்திருந்தாள்.
அன்று அங்கேயே தங்கி இருந்துவிட்டு மறுநாள் செல்லலாம். தாங்களே கொண்டுவந்து விடுகிறோம் என்று சொல்ல இந்தளவிற்க்கேனும் இறங்கி வந்தாரே என்று சரி என்றுவிட்டனர்.
மறுநாள் சக்தியிடம் மதியத்திற்கு பின் கடைக்கு வருவதாய் சொல்லிவிட்டு கிளம்ப ரோஜாவோ தன்னால் அங்கே தனியாக இருக்க முடியுமா என வைத்தீஸ்வரியிடம் உருக்கமாய் பாட்டுப்பாடிக்கொண்டிருக்க பல்லை கடித்தான்.
“இவ வேற கிளம்பினவன இங்கயே இருக்க வச்சிருவா போல” என கயல்விழியை பார்ப்பதை தவிர்க்க,
“பாரு நேத்து வந்தவ, போக மனசில்லைன்னு வருத்தப்படறா…” என்று அவர் சொல்லவும் ரோஜா விதுரனை பார்த்து கண்ணடிக்க,
“உன்னை” என பார்வையால் மிரட்டினான்.
“என்னவோ கொஞ்ச நாள் போக வர வசதியா இருக்குமேன்னு சொல்லி அங்க அலைச்சல் இல்லாம இருப்பன்னு பார்த்தா இப்படி ஒட்டாம நிக்க பழகிருக்க. இது இப்ப சரி, நாளைக்கே குழந்தைன்னு ஆனா ஒத்துவருமா?…” என்று வேறு கேட்க ரோஜா வேகமாய்,
“நாளைக்கே குழந்தையா? அது எப்படி?…” என்று சொல்லி வாயை விட்ட பின்னர் தான் என்ன பேசினோம் என்றே புரிய,
“சரிங்க சித்தி நான் கார்ல இருக்கேன். நீங்களும் ஹர்ஷியும் வாங்க…” என்று அசடு வழிய ஓடிவிட்டாள்.
அவளின் ஓட்டத்தை பார்த்தவர்கள் முகம் புன்னகை சிந்த வைத்தீஸ்வரியிடம் சொல்லிவிட்டு அதே சிரிப்புடன் வாசலுக்கு சென்றனர்.
“பொறுப்பாவும் பேசறா, சின்ன பிள்ளையாவும் இருக்கா. நீ தான் பார்த்துக்கனும். நான் ஏன் சொல்றேன்னு உனக்கு புரியுதா?…” என்று சடகோபன் சொல்லவும் விதுரனின் முகம் இறுகிற்று.
“அந்த குடும்பத்துல இந்த பொண்ணு என்னனு வளர்ந்துச்சோ தெரியலை. பாவம்….”
“என்ன பாவம், அதெல்லாம் புத்திசாலி பொண்ணுதான். சும்மா பாவம் சொல்லாதீங்க…” என கயல்விழி படபடக்க அன்று பாவம் சொல்லியதால் தானே அந்த கோபம் வந்தது ரோஜாவிற்கு.
அதை கொண்டு அந்த வார்த்தையை தவிர்க்க சொல்ல விதுரனும், சடகோபனும் சிரித்துவிட்டனர்.
“ப்ச், சிரிக்காம சொல்றதை கேளுங்க. விது நீ ரோஜாவை வீட்டில தனியா விட வேண்டாம். நாம அவ்வளோ பேர் இருக்க ஊர்லையே அந்தாளு வந்து எப்படி பேசினார் பார்த்த தானே?…” என்று கயல்விழி சேகரன் வந்ததை ஞாபகப்படுத்து தலையசைத்தான்.
இரண்டு நாட்களுக்கு முன் அருப்புக்கோட்டைக்கு சேகரன் தனது சொந்தங்களில் சில முக்கியஸ்தர்களை திரட்டிக்கொண்டு வந்துவிட்டார் ஊர்த்தலைவர் வீட்டிற்கு.
விருந்திற்கு சென்றிருந்த விதுரனுக்கு இந்த விஷயம் சொல்லப்பட அவனும் ரோஜாவை வீட்டில் விட்டுவிட்டு அங்கே செல்ல ஏற்கனவே சடகோபனும், மணிவாசகமும் அங்கே இருந்தனர்.
திருமண வீட்டில் நடந்த சில கருத்து வேறுபாட்டில் மூக்கை நுழைத்து பெண்ணை பேசி மயக்கி திருமணம் செய்து கடத்தி வந்துவிட்டதாக சொல்ல அவரின் அபாண்டமான பேச்சில் கொந்தளித்த மணிவாசகம் அங்கு நடந்ததை சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் வெகுண்டார்.
அதன் பின்னர் ஊர்த்தலைவரை தனியே அழைத்து விஷயத்தை மேலோட்டமாய் சொல்ல அவர் கயல்விழிக்கு போன் செய்து பேசியவர் ரோஜாவிடம் நலம் விசாரிப்பதை போல பேசி அவளின் பேச்சில் இருந்து எந்தளவிற்கு விருப்பத்துடன் அங்கே வாழ்கிறாள் என்பதை அறிந்து கொண்டார்.
“பொண்ணு மனசொப்பி தான் வந்துருக்கு போல. நீங்க பேசறது நல்லதுக்கா இல்லையே. இங்க பாருங்க இதோட விட்டுடுங்க. பொண்ணுக்கு தகப்பனா நல்லவிதமா ஆசிர்வாதம் செய்யுங்க. ஏத்துக்கிடுதோம். அதை விட்டுட்டு பொண்ணை அனுப்புங்கன்னா வாழ வந்த பொண்ணை அப்படியெல்லாம் அனுப்ப முடியாது. மீறி எதாச்சும் பேசினா ஊரே சேர்ந்து நிப்போம்…”
மிரட்டல் அல்லாத மிரட்டலாகவே சொல்ல சேகரன் வெறும் கையுடன் விதுரனை முறைத்தபடி சென்றார்.
“என்ன விது? யோசிக்கிற?…” கயல்விழி கேட்க,
“சரிங்கம்மா, புரியுது. நான் கூட்டிட்டு போறேன்…” என்றவன் காருக்கு வர ரோஜா வெளியில் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்தாள்.
தூரத்தில் மூன்று காவல்நாய்களும் அவளை பார்த்தபடி. இன்னமும் அவளுக்கு அந்த பயம் அகலவே இல்லை. நகர்ந்தால் துரத்துமோ என்று யோசித்தவள் கேட் வேறு மூடியிருக்க வெளியில் வேறு யாருமில்லாமல் இருக்க சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தாள்.
“அங்க ஏன் நிக்கற ரோஜா?…” என விதுரன் குரல் கேட்டதும் வேகமாய் ஒடி அவனருகே நின்றுகொள்ள இவள் ஓடியதில் நாய்களும் துரத்த,
“இப்ப என்ன பண்ணுவியாம்?…” என்று அவைகளுக்கு பழிப்பு காட்ட,
“வாய் தான் உனக்கு. போ. கார்ல ஏறு…” என்று சொல்லி கிளம்பி விதுரனின் வீடு வந்து சேர்ந்தனர்.
அதற்குள் வீட்டை சுத்தம் செய்து சமையலும் செய்து வைத்து சென்றிருந்தார் விதுரன் வீட்டின் வேலைக்கார பெண்.
“கிளம்பும் போதே சொல்லிட்டியா?…” என சடகோபன் கேட்டுக்கொண்டே என்ன செய்திருக்கிறார் என பார்த்தார்.
“இல்லப்பா, நேத்தே சொல்லிருந்தேன். காலையில வந்து எல்லாம் முடிச்சுட்டாங்க. ப்ரஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுவோம்…” என சொல்ல கயல்விழி வந்ததும் அமர்ந்தவர் அப்படியே இருக்க,
“ம்மா, இன்னும் என்ன உங்களுக்கு?…” என்று கேட்க,
“நீ தனியா இருக்கற வரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை. எனக்கு பயமும் இல்லை. ஆனா இப்ப அந்த பொண்ணை பார்த்துக்கற கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கு. அதோட நம்ம வீட்டு பொண்ணு…” என்று சொல்ல,
“அதெல்லாம் பார்த்துக்கலாம்மா. நான் இருக்கேன்ல…” என்று சொல்லி ரோஜா முகம் கழுவி வரவுமே நால்வரும் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
மீண்டும் அனைத்தையும் எடுத்து உள்ளே வைத்துவிட்டு வந்து அமர்ந்தும் கயல்விழி பேசவே இல்லை. சடகோபனிடம் ரோஜா கண்ணை காண்பித்து சமாதானம் செய்ய சொல்ல அவரோ உதடு பிதுக்கினார்.
“அட பாடுங்க மாப்பா…” என்று எடுத்துக்கொடுத்தாள். மாமா என்றும் அப்பா என்றும் சேர்த்து மாப்பா அழைக்க சடகோபனும் முழுமனதாய் அதனை விரும்பினார்.
“சரி வரும்ன்ற?…” என்றார் சந்தேகமாய்.
“லவ் சாங்ஸ்க்கு இருக்க பவரே வேற லெவல். நீங்க பாடுங்க. எந்த ஸ்டெப்பும் எடுக்காம அவங்க மைண்டை மாத்த முடியுமா? பாடித்தான் பாருங்களேன். உங்க வாய்ஸ் எபெக்ட்ல சும்மா பஞ்சா பறப்பாங்க ராஜமாதா…” என்று தூண்டிவிட,
“மாய நதி இங்கு மார்பில் வழியுதே. தூய நரையிலும்…” என சடகோபன் முணுமுணுக்க படக்கென கண்ணை திறந்து பார்த்த கயல்விழி முறைத்துவிட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டார்.
“மாப்பா, வேற சாங் ட்ரை பண்ணுங்க. ராஜமாதா இன்னும் செம்ம கோபம். இந்த சாங் செட் ஆகலை….” என ரோஜா அவரின் காதில் முணுமுணுக்க விதுரனுக்கு தான் அங்கே என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை.
கயல்விழி இருவரின் பேச்சுக்களை கவனித்தாலும் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க,
“இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ…” என பாடிக்காட்டியவர் அதனை சத்தமாய் பாடிவிட குரலில் அப்படி ஒரு துள்ளல்.
“அடி தூள். கலக்குங்க…” என ரோஜா சொல்ல அதனை பொறுக்கமுடியாமல்,
“என்ன விளையாட்டு இது உங்களுக்கு? சின்ன பொண்ணு, அவளுக்கு தான் தெரியலை. நீங்களும் கூட சேர்ந்துட்டு…” என்று கத்த,
“பிச்சுக்கோ…” என எழுந்து ஓடியே போனாள் ரோஜா. அவள் சென்ற வேகத்தில் திருதிருத்த சடகோபன்,
“இல்ல நீ கோபமா இருக்கன்னு…”
“இருந்தா பாடுவீங்களா? அதுவும் மகனையும் மருமகளையும் வச்சுக்கிட்டு. கொஞ்சம் கூட வருத்தமே இல்லை புள்ளைங்களை தனியா விட்டுட்டு போறோமேன்னு…”
“அப்படியில்ல கயல், அவ தான் பாட சொல்லி…” என்றவர் விதுரனை பார்க்க,
“ரோஜா…” என அழைத்துக்கொண்டே அவனும் எழுந்து உள்ளே சென்றுவிட தனியாக சிக்கிக்கொண்ட பாவனையில் சடகோபன் இருக்க,
“என்ன பாடறதா இருந்தாலும் ரூம்ல வச்சு பாடுங்க. புள்ளைங்க முன்னாடி இப்படி இனி செய்ய கூடாது…” என முறைப்பை கைவிடாமல் கயல்விழி சொல்ல கதவை முழுவதுமாய் சாற்றாமல் இங்கே காதை வைத்துக்கொண்டிருந்த ரோஜாவிற்கும் விதுரனுக்கும் நன்றாகவே கேட்டது.
அதில் சிரித்தபடி கதவை மூடிய ரோஜா அதற்கு மேல் அவர்கள் பேசியதை கேட்கவில்லை. கதவில் அப்படியே சாய்ந்து நிற்க அவளை அணைத்ததை போல நின்றான் விதுரன்.
“என்ன கிளம்பலையா? மத்யானம் கிளம்புவேன்னு சொன்னீங்க அங்கிள்?…” என கேட்க,
“கிளம்பனும் தான், வாயேன் நீயும். அப்படியே உன் ப்ரெண்ட்ஸ கூட பார்த்த மாதிரி இருக்கும்…” என்றதும் வேகமாய் அவள் தலையசைக்க,
“எல்லாத்துக்கும் தலையாட்டு…” என அவளின் தலையில் கொட்டியவன் தனது மொபைலை எடுக்க சக்தி அழைத்திருந்தான்.
“போச்சு, அவன் அப்பவே கூப்பிட்டிருந்தான். சாப்பிட்டு பேசலாம்னு விட்டுட்டேன்…” என்றபடி அவனுக்கு அழைக்க ஒரு அழைப்பிலேயே எடுத்தவன்,
“எப்ப வர இங்க? இன்னுமா உனக்கு மத்யானம் ஆகலை?…” என்று அதிகாரமாய் பேச,
“என்னடா பேச்செல்லாம் ஒரு மார்க்கமா போகுது? என்ன விஷயம்?…”
“வரேன்னு ஏன் இன்னும் வரலை நீ?…” என்று இன்னும் கடுகடுத்த குரலிலேயே சக்தி பேச,
“ப்ச், இப்ப என்ன அதான் நீ இருக்க தானே? வரேன் வரேன்…” என்றவன் போனை வைத்துவிட்டு,
“செம்ம காண்டுல இருக்கான், என்னன்னு தெரியலை…” என்றவாறு வேறு உடைக்கு மாறியவன் தனது மொபைலை எடுத்து ரிங்டோனை செக் செய்தான்.
“பார்ரா, அலார்ட் அங்கிள?…” என ரோஜா சிரிக்க,
“உன்னை மாதிரி ஒருத்தி கூட இருக்கும் போது தானாவே வரும் தானே? அதான்…” என சிரித்தவன்,
“போய்ட்டு ஈவ்னிங் சீக்கிரமே வர பார்க்கறேன். சரியா?…” என அவளின் கன்னம் பற்றி கொஞ்ச விதுரனின் மார்பில் சாய்ந்த ரோஜா லேசான விசும்பலுடன்,
“நீங்க இல்லாம இந்த வீட்ல நான் எப்படி இருப்பேன் அங்கிள்? என்னால முடியுமா?…” என வசனம் பேச முதலில் உண்மையில் வருந்துகிறாளோ என எண்ணி பின் அவளின் நாடகபாணி இழுவையில் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் அடக்கப்பட்ட புன்னகையில்,
“கேடி லிட்டில் டெவில்…” என்றவன் வலிக்காமல் கன்னத்தை கடிக்க,
“பின்ன நீங்க கிளம்பவா கிளம்பவான்னு சொல்றதுக்குள்ள ஈவ்னிங் ஆகிடும். அப்பறம் எங்க கிளம்ப. சூரியன் கிளம்பினது தான் மிச்சம்…” என்று கிண்டல் பேச,
“கொழுப்பு கொழுப்பு…” என்று அவளை அணைத்துவிட்டு வெளியே வர கயல்விழி உள்ளே படுக்க சென்றிருந்தார்.