“அம்மா தூங்கறாங்கலாப்பா?…” என்று கார் சாவியை எடுக்க,
“ஹ்ம்ம் ஆமாப்பா, கிளம்பிட்டியா? பார்த்து போய்ட்டுவா…” என்ற சடகோபனும் உறங்க செல்ல தயாராக இருக்க விதுரனுடன் வெளியே வந்த ரோஜாவிடம்,
“நீயும் வேணும்னா கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் கிளம்பவும் டோர் லாக் பண்ணிக்கோ. ப்ரிட்ஜ்ல ஜுஸ் இருக்கு. எடுத்து குடி. காபி போடறேன்னு எதையாச்சும் குடிச்சு திரும்ப வாமிட் பண்ணாத. புரியுதா?…” என்று ஆயிரத்தெட்டு அறிவுரைகள் சொல்ல புன்னகையுடன் தலையாட்டினாள் ரோஜா.
“எனக்கும் எல்லாம் தெரியும் அங்கிள். கிளம்புங்க…” என்று அனுப்பியதும் தான் காரை கிளப்பினான்.
அவன் சென்றதும் கதவை பூட்டிவிட்டு உள்ளே செல்ல சடகோபன் இவளுக்காக காத்திருந்தார்.
“நீ போய் ரெஸ்ட் எடும்மா. நானும் கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்துக்கறேன்…” என சொல்லி உள்ளே சென்றுவிட வழக்கமாக அவளை சூழ்ந்துகொள்ளும் தனிமை நாலுகால் பாய்ச்சலில் அவளை அடைந்தது.
திருமணம் முடிந்ததில் இருந்து அவளுடன் யாராவது இருந்து கொண்டே இருந்ததில் தனிமையை உணரவே இல்லை. அதற்கு முன்புமே தோழிகளுடன் தான் வேலைக்கும் சென்று அவர்களுடனே இருந்து உண்டு உறங்கி என யாரோடாவது இருந்து கொண்டே இருப்பாள்.
இப்பொழுது மீண்டும் யாருமற்றது போன்ற ஒரு உணர்வு. அதை தாள முடியாதவள் தலையை உலுக்கிக்கொண்டு கிட்சனிற்குள் நுழைந்தாள்.
எங்கே என்னென்ன இருக்கிறது என பார்த்துக்கொண்டு முடிக்க ஒருமணி நேரம் பிடித்தது.
ஒவ்வொரு கபோர்டையும் திறக்க அதில் உள்ள ஸ்டோரேஜ் பாக்ஸ்களை திறக்க அதில் என்ன உள்ளதென பார்க்க என மிக நிதானமாக பார்த்தபடி இருந்தாள்.
கிட்சனை விட்டு வெளியே வந்து தங்கள் அறைக்குள் நுழைந்தவள் உடைகளை பிரித்து எதில் அடுக்கவென தெரியாமல் இழுத்துபோட்டு புரண்டுகொண்டிருக்க பில்டிங்க்கு சென்றுவிட்டதாய் விதுரன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
புன்னகையுடன் மொபைலோடு சாய்ந்தவள் தங்கள் திருமணத்தில் இருந்து எடுத்த புகைப்படங்கள் என்று ஒவ்வொன்றாய் பார்த்தபடி பொழுதை கழித்தாள்.
இங்கே பில்டிங்கில் பயங்கர கோபத்துடன் சக்தி இருக்க விதுரனுக்கு ஏன் எதற்கென ஒன்றும் புரியவில்லை.
சங்கவி மட்டும் அவ்வப்போது வந்து தங்களின் டிஸைன்களை காண்பித்து செல்வதும் போவதுமாய் இருக்க ஸ்ரீநிதி வரவே இல்லை.
இவனை பார்த்ததும் ஹலோ ஸார் என்றதோடு சரி. அதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசவில்லை. எதுவோ இங்கு சரியில்லை என்றுமட்டும் புரிந்தது.
சக்தியோ வந்துவிட்டான் என்ற நிம்மதியில் அவனில்லாத நாட்களில் நடந்தவற்றை வேகவேகமாய் ஒப்புவிக்க ,
“டேய் என்னடா இப்ப அவசரம்? அதான் ஏற்கனவே சொன்னியே…”
“போதும்டா சாமி இந்த பிராஞ்ச் சவகாசம். இனி இந்த பக்கத்துக்கே ஒரு கும்பிடு….” என்று எரிந்துவிழ,
“லூஸா நீ? என்ன பேசற?…”
“வேணும்னா உங்க கடை பொறுப்புல இருந்து மொத்தமா வெளியேறட்டா? வேற இடத்துல வேலைக்கு பார்த்துடறேன்…” என்றதும்,
“அப்படியெல்லாம் உன்னை விட்டுட முடியாது. என்னன்னே தெரியாம உளறிட்டு இருக்க…” என்றவனை பார்த்து சக்தி ஆக்ரோஷமாய்,
“குடும்பத்தோட கொலகேஸ்ல உள்ள போயிறாதீங்க அம்புட்டுத்தான்…” என்று சொல்லும் பொழுதே குரல் எரிச்சலில் மிக,
“கொலகேசா? என்னடா உளர்ற?…”
“ஆமா எழுதிவச்சுட்டு என்னைய நானே கொன்னுப்பேன். எல்லாரும் உள்ள போயிருவீங்க…” என சக்தி புலம்ப அவனை கண்டு விதுரன் சிரித்தான்.
“இப்ப இங்க என்ன நடந்துச்சுன்னு முதல்ல சொல்லு. உனக்கும் ஸ்ரீநிதிக்கும் என்ன ப்ராப்ளம்?…” என்று நேரடியாய் விஷயத்துக்கு வர,
“பொண்ணாடா அவ? என்னவோ பெரிய இவளாட்டம் பேசறா. அடிக்க வரா…” என்று சொல்லவும் புருவம் சுருக்கியவன்,
“அடிக்க வர அளவுக்கு நீ என்ன பண்ண?…” என்று கேட்டதும் ஒரு நிமிடம் மௌனமாய் இருக்க,
“நீ என்ன நடந்ததுன்னு சொன்னா மட்டும் தான் ஏதாவது பேச முடியும். சொல்லாம தாம்தூம்னு குதிக்கிற…”
“ஹ்ம்ம் அவளை கட்டிப்புடிச்சேன். அப்படித்தான் செய்வேன்னு சொன்னேன். அதுக்கு அடிச்சுட்டா…” என்று தன் கன்னத்தை தடவ அடப்பாவி என அதிர்ந்து எழுந்தார் விதுரன்.
“சக்தி ஆர் யூ சீரியஸ்? ஜோக் பண்ணாத…” என கேட்க,
“நான் அடிவாங்கினேன்னு அசிங்கப்பட்டு சொல்றேன். நீ என்னடான்னா ஜோக்கான்ற. என்னை பார்த்தா எப்படி இருக்கு?…” என்று எகிற,
“இதுக்கு நான் கோபப்படனும். நம்மளை நம்பி வேலை பார்க்க வந்திருக்க பொண்ணுங்க. அவங்கக்கிட்ட நீ நடந்துக்கிட்ட முறை சரியில்லை. தப்பு உன் பேர்ல. இதுக்கு நான் தான் ஆக்ஷன் எடுக்கனும்…” என விதுரன் கண்டிக்க,
“சொல்லுவடா நீ ஏன் சொல்லமாட்ட? எடேன். ஆக்சன் தான எத்தனை எடுப்ப? இதுக்குத்தான் வேற யாரையாச்சும் பொறுப்புல போடுங்கன்னு கெஞ்சினேன். உங்கப்பா கேட்டாரா? நீ தான் போகனும்னு பிடிவாதமா சொல்லி என்னை கொலையா கொன்னுட்டார்…” என்று சொல்ல,
“என்ன நடந்ததுன்னு சொல்லித்தொலை…”
“ப்ச், அன்னைக்கு பெரியவீட்டுக்கு போன மறுநாள் நான் இங்க வந்தேன். அன்னைக்கு…” என்றவன் முகம் நினைத்ததிலேயே ஜிவுஜிவுத்தது.
காலை பதினோரு மணிக்கு மேல் தான் அந்த பில்டிங் வந்து சேர்ந்தான் சக்தி. சங்கவியுடன் ஸ்ரீநிதி மும்மரமாய் எதையோ விவாதித்துக்கொண்டு இருக்க உள்ளே நுழைந்தான்.
சங்கவி தான் தாங்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை சொல்ல யோசனையோடு கேட்டவன்,
“ரெண்டு டிசைனையும் எடுத்துட்டு வாங்க. பார்த்துக்கலாம்…” என சொல்லி விதுரனின் அறைக்குள் சென்றுவிட சங்கவி மட்டுமே வந்திருந்தாள். ஸ்ரீநிதியை காணாமல் எங்கே என பார்த்தவன்,
“ரெண்டு டிஸைனும் நீங்க பண்ணினதா?…” என,
“நோ ஸார், இது ஸ்ரீ பண்ணினது…”
“அப்ப அவங்க எங்க? நீங்க எக்ஸ்ப்ளைன் பண்ணுவீங்களா?…” என்றதும் அவளை அழைக்க திரும்ப,
“இருங்க நீங்க சொல்லிட்டு போய் அவங்களை வர சொல்லுங்க…” என்றவனை தட்டமுடியாது சங்கவி தான் செய்ததை விவரித்துவிட்டு ஸ்ரீநிதியிடம் சொல்ல கடுகடுவென்று எழுந்து வந்தாள்.
“உங்களுக்கு இப்போ சொல்ல முடியலைன்னா கொஞ்சம் நேரம் கழிச்சு கூட சொல்லலாம். அதுக்குன்னு இப்படி சொல்ல தேவையில்லை…” என பட்டென்று சொல்ல உடனே முகத்தை திருப்பிக்கொண்டு வெளியேற சென்ற ஸ்ரீ திரும்பி வந்து,
“இங்க பாருங்க ஸார், உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்துவராதுன்னு முடிவு பண்ணியாச்சு. இதுக்கு மேல என்கிட்டே நீங்க அந்த மாதிரி பேசினீங்கன்னா நல்ல இருக்காது சொல்லிட்டேன்…” என எச்சரிக்கும் குரலில் அவள் பேச,
“வாட்? என்ன உரிமை? நான் எப்போ உரிமையா பேசினேன்?…” என்று அவனும் எழுந்து வந்துவிட படபடப்பாய் போனது அவளுக்கு. வேகமாய் அறையை விட்டு வெளியேற அவள் பார்க்க சட்டென அவளின் கையை பற்றியவன்,
“நில்லு ஸ்ரீ, முழுசா சொல்லிட்டு போ. நான் உன்னை என்னவோ பண்ணிட்ட மாதிரி பேசற…” என்று அவளிடம் வள்ளென்று விழ ஸ்ரீயும் கொதிப்புடன் பார்த்தாள்.
“விதுரன் ஸார் வீட்ல அவங்க பேரன்ட்ஸ் முன்னால என்னமோ பொண்டாட்டியை பேசற மாதிரி போன்றீங்க, வான்றீங்க? என்ன நினைச்சுட்டு அப்படி பேசுனீங்க? அவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க?…” என்று படபடவென பொரிந்தவளை சட்டென இழுத்து அணைத்தவன்,
“நீ சரின்னு சொல்லியிருந்தா எப்பவோ பொண்டாட்டியா ஆகிருப்ப தானே? நீ தானே குதிச்ச? நிச்சயம் பண்ண வந்த எங்களை அவமானப்படுத்தி பேசினதும் இல்லாம தட்டை தூக்கி வீதிக்கு எரிஞ்சு வெளிய போக வச்ச தானே?…” என்று அவளுக்கும் குறையாத கோபத்துடன் அவன் பேச அவனின் அணைப்பில் விதிர்விதிர்த்தாள் ஸ்ரீநிதி.
“விது அம்மாவே கோபத்துல இருக்காங்க. உங்கக்கிட்ட கோபத்தை காட்டிட கூடாதேன்னு உள்ள போக சொல்றப்போ வாய் தவறி பேசினா அதை பிடிச்சுட்டு வந்து என்னவோ உன்னை பண்ணிட்ட மாதிரி பேசற. இப்ப என்ன பண்ணுவ?…” என்றவனை ஒரே தள்ளில் தள்ளி கன்னத்தில் அறைந்தவள்,
“அவ்வளவு தான் பார்த்துக்க…” என்று சொல்லிவிட்டு வேகமாய் வெளியே சங்கவியிடம் சொல்லி கிளம்ப பார்க்க அவளோ ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டாள்.
தலைவலி தான் மிஞ்சியது ஸ்ரீநிதிக்கு. பேசாமல் அப்படியே கண்ணை மூடி அமர்ந்துகொள்ள சக்தி கிளம்பிவிட்டான் கோபத்துடன். செல்லும் பொழுது அவனின் பார்வை ஸ்ரீநிதியை தீயென எரித்தது.
“நான் வேணும்னா அன்னைக்கு அப்படி பேசினேன். அவ வீட்டு வாசல்ல வச்சு என்னைக்கு என் அப்பா, அம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பினாளோ இன்னைக்கு வரைக்கும் அவ இருக்கற திசைக்கே ஒரு கும்பிடுன்னு தானே இருக்கேன். இவ என்னடான்னா?…” என்றவனின் கண்கள் கூட கலங்கி விட,
“எவ்வளவு கோபம் வந்தாலும் அந்த பொண்ணை தொட்டது தப்பு தான் சக்தி…” என விதுரன் மனதாறாமல் சொல்ல,
“தப்புதான்டா, சத்தியமா தப்புதான். மன்னிப்பு கேட்க கூட தயார். ஆனா அவ என்னவோ அவ பின்னால நான் சுத்தறேன்ற மாதிரி என்னை சீப்பா நினைக்கறா. கல்யாணம் பண்ணிக்க கேட்க கூட நானாவா போனேன்? உனக்கு தெரியும் தானே?…” என்றதற்கு வருத்தமாய் விதுரன் தலையசைக்க,
“அம்மாவும், அப்பாவும் தான் அண்ணனை பாரு, அண்ணன் குழந்தையை பாருன்னு என்னை பேசி பேசி கரைச்சு கூட்டிட்டு போனாங்க. செஞ்ச தப்புக்கு ஒரு பரிகாரமோ பிராயச்சித்தமோ எதுவோ ஒன்னு. அதை செஞ்சிருவோம்னு தான் போனேன்…”
“புரியுது சக்தி. ஆனா…”
“அட தப்புதான் சாமி, உன் கடைக்கு வேலைக்கு வந்த பொண்ணை நான் கட்டிப்புடிச்சது தப்புதான். மன்னிச்சுக்க….” என்றவனுக்கு மனதில் பலவித ஓட்டங்கள்,
“குட்டிப்பையனுக்காக போனேன்டா. அவனுக்கொரு அம்மா வேணும்னு தான் போனேன். அதுவும் அவளோட அம்மாக்கிட்ட பேசி அவங்க சம்மதிச்சதால தான போனோம். இல்லைனா அவ்வளவு தூரம் போய் அசிங்கப்படனும்னு தலையெழுத்தா? என்ன பேச்சு பேசினா. அவ பேசின பேச்சுக்கு எவனும் அவ பக்கம் திரும்ப மாட்டான். நான் மட்டும் என்ன? நெவர்…” என்று சொல்ல,
“இன்னும் அதை மறக்காம, ப்ச், என்னடா நீ? அதை விட்டுடு. அதில இருந்து வெளில வா…” என விதுரன் சமாதானம் செய்ய,
“போடா, இப்பலாம் கல்யாணம்னு வீட்ல பேச்செடுத்தாலே எனக்கு இவ பேசின பேச்சு தான் கண்ணு முன்னால வருது. மறக்கவா முடியும்?…” என்று சொல்லி சேரில் அமர்ந்துகொள்ள அவனுக்கு குடிக்க தண்ணீரை தந்தான் விதுரன்.
அவனுக்குமே இவ்வளவு நேரம் பேசியதற்கு அது தேவையாக இருக்க வாங்கி ஒரு மடக்கு அருந்தியிருப்பான்,
“மாமா, நீங்க எங்க இருக்கீங்க?…” என்ற சத்தத்தில் புரையேற தலையை தட்டியபடி திரும்பி பார்க்க அது குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் என்று அப்பொழுது தான் புரிந்தது.
“அடிப்பாவி ரிங்டோன்ல இருந்து மெசேஜ்ல செட் பண்ணிருக்கியா?…” என விதுரன் அயர்ந்து போக சக்தியின் டென்ஷன் மொத்தமும் கரைந்து சிரிக்க ஆரம்பித்தான்.
“இனி இருபத்திநாலு மணிநேரமும் நீ அலார்ட் தான்டா…” என்று சக்தி சிரிக்க அவனை பார்த்துக்கொண்டே மெசேஜை ஓபன் செய்ய,
“அங்கிள் மெசேஜ் டோன் வால்யூம் போதுமா? கேட்டுச்சா? சரியா வச்சிருக்கேனான்னு எனக்கு ரிப்ளே பண்ணிடுங்க…” என்று அனுப்பியிருந்தாள் ரோஜா.