அத்தனை நேரம் இருந்த டென்ஷன் மறந்து சக்தி விதுரனின் பாவனையில் சிரிக்க,
“நீ ஏன்டா சிரிக்க மாட்ட? என்னைக்காச்சும் உன் போனுக்கும் வச்சாலும் வைப்பா. பார்த்துட்டே இரு…” என்று சாபம் போல சொல்ல அது விரைவில் பலிக்கபோவது தெரியாமல்,
“அது நடக்கவே நடக்காது. உன்னை மாதிரியா நான் டோன் செட் பன்ற வரைக்கும் கவனிக்காம இருப்பேன்….” என இறுமாப்பாய் சொல்ல,
“சரி சரி. அதை விடு. இங்க பாரு சக்தி இங்க மொத்தமா வராம இருக்க முடியாது உன்னால. எப்படியும் இந்த ப்ராஞ்ச் நாம தான் பார்க்கனும். அதனால இங்க நாம தான் இருந்து எல்லாம் பண்ணனும். அதை விட்டுட்டு ஓட பார்க்காத….”
“என்னை என்ன பயந்து ஓடறேன்னு நினைக்கறியா? நான் எதுக்கு பயப்படனும்? எனக்கும் புடிக்கலை தான். அதுக்காக தான் அவ மூஞ்சில முழிக்க கூடாதுன்னு போகனும்னு சொல்றேன்…” என்றான் வெறுப்பாய்.
“புடிக்காமத்தான். ப்ச் அதை விட. அதை பேச வேண்டாம்…” என விதுரன் ஆரம்பித்து விட்டுவிட்டாலும்,
“எனக்கும் அந்த கில்ட்டிநஸ் இருக்குதுதான். அதுவும் கூட இங்க இருக்கவிடாம பண்ணுது. இப்படி பண்ணிட்டேனேன்னு. என் கண்ட்ரோல்ல நான் இல்லை விது. திரும்ப எதுவும்…” என்றவனை விதுரன் நிமிர்ந்து முறைக்க,
“சும்மா இப்படி முறைக்காத. ஜென்மத்துல அப்படி நடக்காது…” என்று சொல்லவும் புன்னகைத்தவன்,
“ஓகே லெட்ஸ் ஸீ…” என்று வேலையை பார்க்க இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.
சங்கவிக்கும், ஸ்ரீநிதிக்கும் ரோஜா எப்படி இருக்கிறாள் என கேட்பதற்கு கூட வாய்ப்பளிக்காமல் விதுரன் அது என்ன? இது எப்படி? என்று அவர்களை சுழற்றிக்கொண்டு இருந்தான்.
மாலை சங்கவியும், ஸ்ரீநிதியும் கிளம்பவும் தான் நேரத்தை பார்த்தவன் தானும் கிளம்ப,
“விது வீட்டுக்கா?…” என்று சக்தி வர,
“ஹ்ம்ம் ஆமா, நீயும் கிளம்பு, நாளைக்கு வரலாம்…” என்று சொல்லி கார் சாவியையும் தனது போனையும் எடுக்க,
“இல்லை மணி அங்கிள் வர சொல்லிருக்காரு. அந்த கடைக்கு போகனும்…” என சோர்வுடன் சொல்ல,
“என்னடா உடம்புக்கு முடியலையா?…” என அவனின் நெற்றியில் கை வைத்து பார்க்க,
“அதெல்லாம் இல்லைடா…” என்று அவனின் கையை தட்டிவிட்டவன் முன்னால் நடக்க,
“என்னோட வீட்டுக்கு வரியா?…” என்ற விதுரனிடம் மறுப்பாய் தலையசைத்த சக்தி,
“எனக்கு என்னவோ மாதிரி இருக்கு விது. அந்த இன்சிடன்ட்க்கு பின்னால நிம்மதியா தூங்க முடியலை. ப்ச்…” என்று தலையை தட்ட,
“சரி விடு சக்தி…” என அவனை வெகுவாய் சமாதானம் செய்து அங்கிருந்து கிளப்பியவன் அதன் பின்னர் தானும் கிளம்பி வீட்டுக்கு வர அங்கே காபி போடுவதை பற்றி கயல்விழி ரோஜாவிற்கு சொல்லிக்கொண்டிருந்தார்.
“இவ்வளோ சுகர் போட கூடாது ரோஜா. டேஸ்ட் மாறிடும். ரொம்ப இனிப்பா குடிக்க கூடாது. லேசான காபி கசப்பும் மைல்டான ஸ்வீட்னஸ் தான் டேஸ்ட்….” என்றவரிடம் கர்மசிரத்தையாய் ரோஜா தலையாட்டி கேட்டுக்கொண்டிருக்க பார்த்தவன் முகம் புன்னகை பூசியது.
“வா விது…” என்ற சடகோபனை திரும்பி பார்த்தவன்,
“என்னப்பா கிட்சன் களைகட்டுது போல?…” என கேட்டுக்கொண்டே ஷர்ட் பட்டனை கழற்ற,
“அங்கிள்…” என்று கிட்சனில் இருந்து ரோஜா சத்தம் போட,
“ரோஜா…” என்ற கயல்விழியின் கண்டிப்பில் திரும்பி பார்த்தவள்,
“வந்து அங்கிள் தான் அங்கிள்னா மாமான்னு…” என உளற,
“சொல்லு ரோஜா…”என கேட்டுக்கொண்டே அங்கே சென்றான் விதுரன் அம்மாவிடமிருந்து அவளை காப்பாற்ற.
அவளோ அறைக்கு செல்லும் படி சைகை காண்பிக்க அவனுக்கு புரிந்தாலும் என்னவென கேட்டுக்கொண்டே அவன் சிரித்தபடி நிற்க சொல்லி சொல்லி பார்த்தவள் கடுப்புடன்,
“அட உள்ள போய் ஷர்ட்டை கழட்டுங்க காது டமாரம் அங்கிள்…” என கத்திவிட,
“ரோஜா…” என கயல்விழி நெற்றிக்கண்ணை திறந்ததும் மாட்டிக்கொண்ட பாவனையில்,
“ராஜமாதா நமஸ்தே…” என சொல்லிவிட்டு அவரை தாண்டிக்கொண்டு ஓடிவிட அதில் விதுரனும் சடகோபனும் விழுந்து விழுந்து சிரிக்க,
“இது சரியில்லை விது. இன்னைக்கு ரெண்டு பேர் முன்னாடி பேசறது தான் எல்லார் முன்னாடியும் வரும். இப்பவே சொல்லி வை…” என்று மாமியாராய் அவதாரமெடுக்க,
“ம்மா, நான் தான் அவளை கொஞ்சம் டென்ஷன் பண்ணிட்டேன். அதான் இப்படி கத்திட்டா. மத்தபடி…”
“அட போதும்டா, சும்மா பரிஞ்சுட்டு. போய் ப்ரெஷ் ஆகிட்டு வா. காபி தரேன்…” என சொல்லி,
“ரோஜாவை வர சொல்லு…” என்றும் சொல்லி அனுப்ப தலையாட்டலுடன் அறைக்குள் நுழைந்தான்.
அங்கே கோபமாய் அவனின் புகைப்படத்தில் மார்க்கரில் எதையோ கிறுக்கி கொண்டிருக்க,
“என்ன பன்ற ரோஜா?…” என வேகமாய் வந்தான்.
“கோவமா வருது. உங்களை திட்டனும்ல. உங்கம்மா கிளம்பவும் மறந்துட்டா? அதான் உங்க போட்டோல எழுதி வச்சிட்டு இருக்கேன். அவங்க கிளம்பட்டும், வந்து திட்டறேன். சண்டை போடறேன்…” என சொல்ல வாய்விட்டு சிரித்தவன்,
“சரி திட்டிக்கோ. இப்ப கட்டிக்கோ…” என்று அணைக்க அவனின் நெருக்கத்தில் மனைவியாய் நெகிழ்ந்தவள்,
“ஒன்னும் வேண்டாம். போய் ப்ரெஷ் ஆகுங்க பர்ஸ்ட். இன்னைக்கு நோ கட்டிக்கோ. பெட்ல ரெண்டுபேர்க்கு நடுவுல ஒரு பில்லோவை ஒட்டிக்கோ தான்…” என்று முறைக்க,
“அதை நான் நைட்ல பார்த்துக்கறேன். இப்ப அம்மா கூப்பிடறாங்க போ…” என சொல்ல “வந்து பேசிக்கறேன்” என்னும் பார்வையை கொடுத்துவிட்டு செல்ல புன்னகையுடன் பாத்ரூம் சென்றான் வேறுடை எடுத்து.
வெளியே வந்தவன் இன்னும் சடகோபன் அப்படியே அமர்ந்திருக்க திரும்பி கிட்சனை பார்த்தான்.
“என்னப்பா இன்னுமா காபி வரலை?…” என கேட்டுக்கொண்டே கிட்சனிற்குள் செல்ல அங்கே கயல்விழி ரோஜாவிற்கு வகுப்பெடுத்துக்கொண்டு இருந்தார்.
“இந்த பருப்பு சாம்பாருக்கு போடறது. இது குழம்பு பருப்பு. இது கூட்டு வைக்கிறது…” என ஒவ்வொன்றிற்கும் காண்பித்து விளக்கம் சொல்ல ரோஜாவோ மாற்றி மாற்றி கேட்டு கயல்விழியை கலங்கடித்தாள்.
“ம்மா, காபி வருமா வராதா?…” என விதுரனின் குரலில் திரும்பிய கயல்விழி,
“இதோடா, நீ வரதுக்குள்ள ஆறிடுமேன்னு தான் வெய்ட் பண்ணேன். பால் சூடா இருக்கு. இப்ப கலந்துடறேன்…” என கயல்விழி நால்வருக்கும் கப்பை எடுக்க,
“இவ்வளோ நேரம் கதை பேசிட்டு இருந்துட்டு இப்ப கலந்து தரேன்னு இது ரொம்ப அநியாயம்…” என சொல்ல,
“ப்ச், ரோஜாவுக்கு என்னன்னன்னு தெரியல. சொல்லித்தாங்கன்னு கேட்டா. அதான் சொல்லிட்டு இருந்தேன். அவளும் கத்துக்கனும்ல…” என சொல்லி காபியை கலக்க மெதுவாய் கிட்சனை விட்டு வெளியே வந்த ரோஜா விதுரனிடம் கண்ணடிக்க,
“கேடி உண்மையை சொல்லு, நீ கத்துக்கவா கேட்ட?…” என்று மெதுவாய் கேட்க,
“எப்படி கண்டுபிடிச்சீங்க?…” என பிடிபட்ட பாவனையில் ரோஜா விழிக்க,
“நீ தான் டெவில் ஆச்சே மை லிட்டில் டெவில்…” என்று சிரிக்க அசடு வழிய பார்த்தவள்,
“கண்டுபிடிச்சுட்டீங்களா? நல்ல வேளை ராஜமாதா கண்டுபிடிக்கலை. திரும்ப வரப்போ உங்களை அங்கிள்ன்னு சொன்னதுக்கு கிளாஸ் எடுப்பாங்களோன்னு தான் ஒரு டப்பாவை காட்டி என்னன்னு கேட்டேன். அவங்க என்னன்னா எல்லா டப்பாவையும் காமிச்சு என்ன குழம்பு செய்யனும்னு கூட சொல்லிட்டிருந்தாங்க…” என சொல்ல,
“அப்ப நீ தான் திரும்பவும் சிக்கிருக்க…” என்று அதற்கும் விதுரன் சிரிக்க கயல்விழி காபியுடன் வந்துவிட்டார்.
நால்வரும் பேசிக்கொண்டே காபியை குடிக்க இரவு உணவிற்கு இருக்க சொல்லி விதுரன் சொல்ல,
“வைத்தீஸ்வரிட்ட கார் அனுப்ப சொன்னேன். டின்னர் செய்யவேண்டாம், நானே குடுத்து விடறேன்னு சொல்லிட்டா. நாங்க அங்க போய் சாப்பிட்டுக்கறோம். நீங்க இங்க சாப்பிடுங்க. இப்ப கார் வந்திரும்…” என்று கயல்விழி சொல்லி முடித்து ரோஜாவை பார்த்து,
“போய் முகம் கழுவிட்டு தலை வாரிட்டு வந்து விளக்கேத்து ரோஜா…” என்று சொல்லவும் அவளும் அதன் படி செய்ய,
“இன்னைக்கு மட்டுமில்லை, தினமும் செய்யனும். கடைக்கு போய்ட்டு வந்து செய்யனும் மறக்காம…” என சொல்லி இன்னும் சில பல அறிவுரைகள் சொல்லி எதுவாக இருந்தாலும் தன்னிடம் போன் செய்து சொல்லிவிடவேண்டும் என்றும் சொல்ல சரி என்றவள் முதன் முறையாய் சற்று மிரண்டாள்.
திருமண வாழ்க்கை, மிகப்பெரும் பொறுப்பு. பெரியவர்கள் இருந்தவரை தெரியாத ஒன்று இப்பொழுது மலைப்பாக தெரிந்தது. அதிலும் கயல்விழி பேசியது இன்னுமே அவளை கலவரப்படுத்தியது.
இதுவரை பெரிதாக எந்த பொறுப்பென்று எதுவும் இருந்ததில்லை. அவளாய் படித்தாள். அவளாய் ஒரு வேலையில் சேர்ந்தாள். அவளாய் தோழிகளுடன் வாழ்ந்தாள்.
ஆனால் இது ஒரு குடும்ப அமைப்பு அல்லவா? புரிந்தது தான். ஆனாலும் தடுமாற்றம் உள்ளுக்குள். அதிலும் கயல்விழி சொல்லிய மூத்த மருமகள். குடும்பத்தின் முதல் மருமகள். இதுதான் சற்று அழுத்தத்தையும் கொடுத்தது.
எப்படி இருக்கவேண்டும்? எப்படி இருக்கவேண்டும்? என்ற எண்ணம் அலைகழித்தது. இப்படித்தான் நீ இருந்தாகவேண்டும் என்று அதிகாரமாய் கயல்விழி சொல்லியிருந்தால் அதை உடனே ரோஜா ஏற்பது சந்தேகம் தான். ஆனால் அவர் அப்படி சொல்லவில்லையே.
“கிளம்பறோம் ரோஜா…” என காரில் ஏறும் முன் அவளின் கையை பிடிக்க அதில் லேசான நடுக்கத்தை உணர்ந்தவர்,
“நீ ஏன் இவ்வளவு ரெஸ்ட்லெஸா பீல் பன்ற? நான் சொன்னதை நினைச்சா? உன்னால முடியும் ரோஜா…” என்று நம்பிக்கையாய் சொல்லவும் புன்னகைத்து தலையசைத்தவள் மீண்டும் உள்ளே வரும் வரை அதனுள்ளேயே உழல,
“இப்ப எதுக்காம மூளையை போட்டு கசக்கற? நான் தான் இருக்கேன்ல…” என அவளின் கையை பிடித்து அழுத்தம் கொடுக்க “அங்கிள்” என அணைத்துக்கொண்டாள் அவனை.
“பார்ரா லிட்டில் டெவில் தானா கட்டி பிடிக்காங்க…” என்று சிரித்துக்கொண்டே அவளை தூக்கி ஒரு சுழற்று “அய்யோ தலை சுத்துது அங்கிள்” என அவள் கத்தும் வரை விடவே இல்லை.
பின் மெதுவாய் சோபாவில் பொத்தென்று அவளை போடவும் வீடே அவளை துற்றி வருவதை போல சுழல கிறங்கி போய் கண்களை மூடிக்கொண்டாள்.
விதுரனும் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு பின் கிட்சனிற்குள் சென்று அவளுக்கு ஒரு காபியை போட்டு கொண்டு வந்து நீட்ட அப்பொழுதுதான் எழுந்து அமர்ந்து நீரை பருகினாள்.
“ஹப்பா காபி, அதுவும் எனக்கு புடிச்ச பெரிய கப்…” என சந்தோஷமாய் வாங்கிக்கொண்டவள்,
“ராஜமாதா சின்ன கப்ல குடுத்துட்டாங்க தெரியுமா?…” என்றபடி அவள் காபியை ரசித்து குடித்துக்கொண்டே,
“சாப்பிடலையா?…” என கேட்டாள் அவனை பார்த்து.
“நேரமாகட்டும். இப்போ வேண்டாம்…” என்றவன் அவளருகே வந்துமர்ந்து லேப்டாப்பை ஆன் செய்ய,
“இன்னைக்கு பில்டிங் போனீங்களே, சங்குவும், டேக்ஸ்ஸும் எப்டி இருக்காங்க?…” என கேட்க,
“நல்லா தான் இருக்காங்க. அவங்க தான் உன்னை கேட்கவே இல்லை….” என போட்டு கொடுத்தான் அவளிடம்.