உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு
கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய் நான்
உன்னை என்னில் மூடி வைத்தேன் அன்போடு
சொல்லடா சொல்லடா என்னை விட்டு விலகி தூரமாய் போனதேன்
நில்லடா நில்லடா உந்தன் அன்பில் வாழ்ந்து கொள்கிறேன் நானுமே
இருளும் அது விலகி புதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே
இதயம் அது துடிப்பதற்கு அர்த்தம் கொஞ்சம் கூடுதே
உருகினேனோ நான் உடைகிறேனோ உந்தன் அன்பில் நானே கரைகிறேனோ
மீண்டும் உன்னை சேர்வதென்றால் நான் இன்று கூட பிரிந்து போவேன்
என் அன்பே
போதுமே போதுமே இந்த பந்தம் ஒன்று போதுமே போதுமே
வாழுமே வாழுமே நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும் வாழுமே
பாடல் மொத்தமும் விதுரனை மட்டுமே பார்த்துக்கொண்டே அவள் பாடி முடிக்க இமைதட்டாமல் பார்த்தவனுக்கு அவளின் குரலில் பார்வையில் எதுவோ பொதிந்திருப்பதை போல தோன்றியது. மனதை பிசைவதை போலவே தோன்ற மூச்சை இழுத்துவிட்டவன் அனைவரின் கைதட்டலில் தெளிந்தான்.
எப்படி என்பதை போல புருவம் உயர்த்தி அவனிடம் கேட்க மூன்று விரலை காண்பித்து அருமை என்பதை போல சொல்ல லேசான வெட்கம் பூத்தது அவளின் முகத்தில்.
அதையும் தாண்டிய ஒரு எதிர்பார்ப்பு. தன் நேசத்தை கண்டுகொண்டானா என்பதை போன்ற எதிர்பார்ப்பு. அதற்குள் விளையாட்டு தொடங்கி சாப்பிட ஆரம்பித்து உறங்க செல்ல அறைக்குள் நுழையும் பொழுதே அவன் கேட்டுவிட்டான்.
“உனக்கு இவ்வளவு பாட வருமா ரோஜா? சூப்பரா பாடற?…” என சொல்லவும் சப்பென்று தான் போனது. ஆனாலும் விளையாட்டாய்,
“ஹ்ம்ம், இதை விட இன்னொரு இடத்துல நல்லா பாடுவேன்…” என சொல்லவும் ஆர்வமாய் அவன் பார்க்க,
“பாத்ரூம்ல. சும்மா சங்கீதம் தண்ணி மாதிரி கொட்டும்…” என்று சிரிக்கவும்,
“உன்னை…” என அவளின் காதை பிடித்து திருகியவன்,
“நம்ம மேரேஜ் முடிஞ்சு ஒரு மாசம் மேல ஆகி போச்சு. என்னால நம்பவே முடியலை தானே? எனக்கே ஆச்சர்யமா இருக்கு…” என்று சொல்ல,
“எனக்கு இல்லையே?…” என ரோஜா சொல்ல,
“ஏன்?…” என்றவனின் கேள்வியில் தடுமாறியவள்,
“அது ஒருத்தர் ஆச்சர்யப்பட்டா தான் இன்னொருத்தர்ட்ட ஷேர் பண்ணிக்க முடியும். நானும் இதே மாதிரி ஆச்சர்யத்துல இருந்தா உங்களோட பீலிங்க்ஸ என்னால பீல் பண்ண முடியாம போய்டுமே…” என்று சமாளிக்க,
“ரொம்ப குழப்புற நீ…” என்றவன்,
“ரொம்ப தூக்கம் வருது ரோஜா. நாளைக்கு மதுரை போறேன். திருவேலன் சித்தப்பா வர சொல்லிருக்காங்க. ஒரு த்ரீ டேய்ஸ் வொர்க் இருக்கும் அங்க. அதுவரை நீ இங்க இரு…” என சொல்ல ரோஜா யோசனையுடன் இருந்தாள்.
“என்ன லிட்டில் டெவில் ரொம்ப தின்க் பன்றீங்க?…” என அவளை தன் மீது சாய்த்துக்கொண்டு கேட்க,
“இல்லை எல்லாரும் நாளைக்கு கிளம்பிருவாங்க. நான் மட்டும் தான் இங்க. ஹர்ஷி கூட காலேஜ் போய்டுவா. ராஜமாதா இங்க இருந்து அவ்வளவு என்னை அனுப்ப மாட்டாங்க. அதனால…” என இழுக்க,
“ஸ்ரீநிதி, சங்கவி கூட தங்கனும்னு நினைக்க போல?…” என அவன் சொல்லவும் அதிசயத்து அவள் பார்க்க,
“வேற என்ன நினைக்க போற? அப்பப்ப அவங்களோட நீ கிளம்பறதை பார்த்தாலே தெரியும் தானே? கரெக்ட்டா சொன்னேனா?…” என்று கேட்டவனின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டவள்,
“கரெக்ட்டா சொல்லிட்டீங்க அங்கிள். மூஞ்சில தொப்பை வச்ச மை ஸ்வீட் அங்கிள்…” என்று வேறு ஆர்ப்பரித்து சொல்ல,
“அங்க போகனும்னா உனக்கு இவ்வளோ ஹேப்பியா? அம்மா வீட்டுக்கு போகனும்னு பொண்ணுங்க சொல்ற மாதிரி இருக்கு…” என சொல்லிவிட்டு அச்சொவென்று அவளின் முகம் பார்க்க அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.
“ஹர்ட் பண்ணிட்டேனா ரோஜா?…” என அவளின் முகம் வருடி கேட்க,
“ம்ஹூம், சொல்ல போனா அம்மா வீடுன்னே சொல்லலாம். அம்மா வீடு எப்படி இருக்கனும்னு நான் நினக்கறேனோ அது அப்படி இருந்ததில்லை. நான் சந்தோஷமா இருக்கற வீடு அம்மா வீடு. அப்போ என்னோட அம்மா வீடு இதுவும், என் ப்ரெண்ட்ஸ் கூட இருக்கற வீடும் தானே?…” என சொல்லி சிரித்தவளின் கண்ணில் நீர் மினுமினுக்க,
“ரோஜா…” என்றவனின் மார்பில் சாய்ந்து கொண்டவள்,
“போய்ட்டு வரட்டுமா அங்கிள்?…” என்றவளின் வார்த்தையை அதற்கு மேலும் மீற முடியுமா விதுரனால்?
மறுநாள் கயல்விழியிடம் பேச அவர் மறுக்கவே இல்லை. “சந்தோஷமாக போய் இருந்து வரட்டும்” என்று சொல்லவிட சட்டென அவரை சென்று கட்டிக்கொண்டவள்,
“ராஜமாதா உங்க கட்டளையே சாசனம் பிரமாதம்…” என்றுவேறு சொல்லி அவரிடம் செல்ல முறைப்பை வாங்கிக்கொண்டு விதுரனோடு சங்கவி வீட்டிற்கு சென்றாள்.
தோழிகள் இருவருக்கும் தலைகால் கொள்ளாத ஆனந்தம். சிறிது நேரமே விதுரன் இருந்துவிட்டு கிளம்பிவிட அதன் பின்னர் அடுத்த மூன்று நாட்களும் கொண்டாட்டம் தான்.
நினைத்த நேரமெல்லாம் விலாசினிக்கு வீடியோகாலில் அழைத்து அவளை வெறுப்பேற்ற ஏற்கனவே அங்கிருக்க பிடிக்காமல் கடுப்பாய் இருந்த விலாசினிக்கு மீண்டும் தோழிகளுடன் அந்த நேரத்தை கழிக்கும் ஆசை பிறக்க அதன் பின்னர் நெகிழ்வான தருணங்கள்.
நான்காம் நாள் காலை விதுரன் ஊர் வந்துவிடுவேன், நேராக பில்டிங் வருவதாய் சொல்ல அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவென விடியற்காலையே சங்கவியிடம் சொல்லிக்கொண்டு ஸ்ரீநிதிக்காக கொடுத்து இருந்த தனது ஸ்கூட்டியில் கிளம்பி வந்துவிட்டாள் இங்கே.
வந்தவள் யூட்யூப்பில் பார்த்து அவனுக்காக சமைத்து எடுத்துக்கொண்டவள் தானும் சாப்பிட்டு ஆசையாய் ஒரு புடவையை எடுத்து கட்டிவிட்டு தனது மொபைலை எடுக்க அது சார்ஜ் இல்லாமல் உயிரை விட்டிருந்தது.
“ப்ச், வரப்பவே சார்ஜரை கொண்டு வந்திருக்கனும்.” என நொந்துகொண்டவள் விதுரனிடம் ஸ்பேர் சார்ஜர் உள்ளதே என்று ஞாபகம் வந்தவளாய் தேட அவனின் கபோர்டை குடைந்தாள்.
அவனின் சில கோப்புகள் தாண்டி அவனுடைய சான்றிதழ்கள் கிடைக்க ஆர்வமாய் அதை பார்த்தவளுக்கு அவன் படித்த கல்லூரி அதிர்ச்சியாக இருந்தது. அதிலும் அவன் பயின்ற வருடம்.
“அப்போ அங்கிளுக்கு விஸ்கியை தெரியுமா? ஒரே காலேஜ் போல. ஆனா எதுவும் சொல்லவே இல்லை…” என்று முணங்கியபடி மீண்டும் அதனை அதற்குள் வைத்தவள் நேரமானதை கண்டு அங்கே சென்று சார்ஜ் போட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
வேகமாய் கிளம்பி போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வந்து சேரும் முன்னரே விதுரன் வந்துவிட்டிருந்தான் அங்கே. பதினோரு மணி ஆகிவிட்டிருந்தது.
வெயிலில் வந்த களைப்பு வேறு அவளை வாட்ட மெதுவாய் மேலே வந்தாள். ஒரு மாதிரி வயிற்றை பிரட்ட தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தவள் வியர்வையை புடவை தலைப்பில் ஒற்றிக்கொண்டாள்.
நேராக தோழிகள் இருந்த அறைக்குள் சென்று தனது மொபைலை சார்ஜ் போடுமாறு சங்கவிக்கு தந்து பொத்தென அமர,
“ஏன் ரோஜா இவ்வளோ லேட்? ஸார் வந்துட்டாரு. ரொம்ப கோபமா இருக்கார். உன்னை தனியா அனுப்பி வச்சதுக்கு எங்களுக்கும் செம்ம திட்டு. போய் பாரு. திட்டு வாங்கிட்டு வா. உனக்கு பிடிச்ச லெமன் ஜுஸ் கொண்டு வந்திருக்கேன். குடிச்சுட்டு ப்ரெஷ் ஆவியாம்…” என சங்கவி கிண்டலும் கோபமுமாக சொல்ல எழுந்து சென்றாள் ரோஜா.
“இதுக்குத்தான் உன்னை உன் ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு அனுப்பினேனா நான்?…” என கதவை திறந்ததுமே விதுரன் கத்த,
“நானா தான் போனேன் உங்களுக்கு சப்ரைஸ் குடுக்கலாமேன்னு. லேட் ஆகும்னு நினைக்கலை…” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கீழே இருந்து சக்தி அழைக்க எழுந்தவன்,
“வந்து பேசிக்கறேன் உன்னை…” என சென்றதும் அவனின் கோபத்தில் லேசாய் மிரண்டவள் சலித்த முகத்துடன் அடுத்த அறைக்கு சென்றாள்.
அவளின் உற்சாகம் மொத்தமும் வடிந்துவிட்டிருந்தது. உடல் அசதி வேறு. வந்து சேரில் அமர்ந்ததும்,
“என்னடி செம்ம டோஸ் விழுந்துச்சா?…” என சங்கவி கேட்டு முடிக்கும் முன்னர் வாயை மூடிக்கொண்டு வாஷ்ரூம் ஓடினாள். அவளின் வேகத்தில் இருவரும் பதறி சேர்ந்து எழுந்து போக காலை சாப்பிட்ட மொத்தமும் வாமிட் செய்திருந்தாள் ரோஜா.
“என்னாச்சு ரோஜா இவ்வளவு எடுக்கற? டயர்டா வேற இருக்க…” என ஸ்ரீநிதி கேட்க மீண்டும் சென்று எடுத்து விட்டு வர வயிற்றில் இருந்ததெல்லாம் காலி.
“நான் கீழே போய் சார்ட்ட சொல்லிட்டு வரேன். இவளை நீ உட்கார வை…” என ஸ்ரீநிதி சொல்லி செல்ல ரோஜாவை சேரில் அமர வைத்தவள்,
“இரு நான் போய் கிளீன் பண்ணிட்டு வரேன்…” என சங்கவி உள்ளே செல்ல சற்று நேரத்திற்கெல்லாம் விதுரன் மேலே ஓடி வந்தான். உடன் சக்தியும்.
“வாட் ஹேப்பண்ட் ரோஜா? ஆர் யூ ஓகே?…” என அவளின் வாடிய முகத்தை பார்த்து அவன் கேட்க,
“ஹ்ம்ம், ஹ்ம்ம்…” என முணங்கியவள் அவனை பார்க்க,
“என்னத்த சாப்ட்ட?…” என்றான் உடனே.
“ப்ரைட் ரைஸ் பண்ணேன். உங்களுக்கு கூட எடுத்துட்டு வந்தேன் தெரியுமா?…”
“நினைச்சேன். உன்னை யார் சமைக்க சொன்னா?…” என்று கேட்க,
“ரோஜா எப்படி இருக்கா விது?…” என்று தான் அவர் கேட்டார். அவருக்கு பதில் சொல்லிவிட்டு வைத்தவன்,
“சரி, வீட்ல அம்மாக்கு போன் பண்ணி யார் சொன்னா?…” என ரோஜாவை தாண்டி ஸ்ரீநிதி, சங்கவியை பார்க்க,
“நாந்தான் சொன்னேன். எனக்கு முடியலனா யார் சொல்லுவா? யார் சொல்லனும். நான் தான் சொன்னேன்…” என்று சொல்ல,
“போச்சு உன்னை பார்க்க இங்கையே வராங்களாம்…”
“முடியலனா பார்க்க வரத்தான் செய்வாங்க அங்கிள்…” என்றவளை அங்கே வைத்து ஒன்றும் சொல்ல முடியாமல் பார்க்க அதற்குள் சடகோபன் அழைத்துவிட்டார்.
இவளை முறைத்துக்கொண்டு விதுரன் மொபைலுடன் வெளியே செல்ல ரோஜாவிற்கு குடித்த தண்ணீரும் மீண்டும் உமட்டிக்கொண்டு வர தொண்டை எரிந்தது வாமிட் செய்த காரணத்தால்.
இன்னுமே வர ஓடிச்சென்று எடுத்துவிட்டு வந்தவள் டேபிளில் சங்கவி இவளுக்காக ஊற்றி வைத்திருந்த லெமென் ஜுஸை எடுத்து குடிக்க “ஏய் ஏய் ஏய்” என்றவன் பிடுங்கும் முன் காலி செய்திருந்தாள்.
“ஒரே புளிப்பு…” என தம்ளரை அவனிடம் நீட்ட,
“வாமிட் பண்ணதோட லெமென் எடுத்தா தொண்டை கட்டிக்கும். உன்னை யார் குடிக்க சொன்னா?…” என்று தலையில் அடித்துக்கொள்ள,
“என்னால நிக்க முடியல…” என உதடு பிதுக்கி அவள் சொல்லியவிதம் விதுரனை அமைதிப்படுத்தியது.
“உட்கார் இப்படி, நான் அம்மாவுக்கு கால் பண்ணி வீட்டுக்கு வர சொல்றேன். இங்க வச்சு கூட்டம் போட முடியாது. நாம கிளம்புவோம்…” என்று சொல்லியவன் மீண்டும் கதவை திறந்துகொண்டு வெளியே செல்ல,
“சங்கு ஒரு வேளை இந்த வாமிட் நல்ல வாமிட்டா இருக்குமோ?…” என அவள் அலப்பறையை கூட்ட அதை வெளியே கேட்ட விதுரனுக்கு தூக்கிவாரி போட்டது.
ரோஜாவை திரும்பி பார்க்க அவளோ விரல் விட்டு நாட்களை எண்ணிப்பார்க்க இவனுக்குள் சிரிப்பும் கோபமும் போட்டிப்போட்டது.
“இவளை வச்சுட்டு இன்னும் என்னலாம் இருக்கோ எனக்கு” என புலம்பியவன் வேகமாய் உள்ளே வந்து மற்ற பெண்களை பார்க்காமல்,
“வா கிளம்புவோம். போற வழியில சொல்லிக்கலாம். விட்டா இன்னும் என்னலாம் பேசுவியோ?…” என சொல்லி அவளை எழுப்பியவன் அவளின் ஹேண்ட்பேக்கையும் எடுத்துக்கொண்டு சங்கவியிடம்,
“அந்த ப்ரைட் ரைஸ்ஸ சாப்பிட்டுடாதேங்க. தூக்கி குப்பையில கூட போட்டுட வேண்டாம்…” என்று கிண்டலாய் சொல்லியவனிடம்,
“அங்கிள்…” என சிணுங்கியவளை பொருட்படுத்தாமல் அழைத்துக்கொண்டு செல்ல காரில் ஏறியதும் கண்ணை மூடி படுத்துவிட்டாள். வீட்டிற்கு சென்றதும் கண்ணை திறந்தவளுக்கு தொண்டை நன்றாக கட்டி இருந்தது பேச முடியாதபடி.
வீட்டில் அனைவரும் சூழ்ந்திருக்க இவள் பேசிய குரல் “ஓடுற நரியில ஒரு நரி குள்ள நரிடா” என்னும் கட்டை குரல் தான். அனைவரும் ஐயோவென்று தெறித்து ஓடாத குறைதான்.
“அய்யோ என் ஸ்வீட் வாய்ஸ் போச்சு” என ரோஜா பரிதாபமாய் விதுரனை பார்க்க “கேட்டியா நீ?” என்பதை போல அவன் முறைத்தான் இவளை.
ஆனால் உண்மையில் பரிதாபத்துக்குரியவனாய் ஆனது அவன் தான். அத்தனை கேள்விகள் அனைவரிடமும் ரோஜாவின் குரலால் இவன் தான் பதில் சொல்லவேண்டியதாக ஆனது.