விதுரன் கிளம்பிய பின்னர் சக்தி சங்கவியை பிடித்து சத்தம் போட ஸ்ரீநிதி கூட அமைதியாக நின்றாள்.
இந்த சில நாட்களில் அவனின் ஒதுக்கத்தையும் வரவு குறைந்ததையும் கவனித்துக்கொண்டுதானே இருந்தாள் ஸ்ரீ.
நிம்மதி என்று முதலில் நினைத்தவள் பின் தன்னுடைய செயலால் தான் என்று நினைக்கும் பொழுது மனதின் ஓரத்தில் சிறு குறுகுறுப்பு பரவத்தான் செய்தது. ஆனாலும் அதனை அடக்கி வைத்தாள்.
அதிலும் சற்று நாட்களாய் தாயின் அனத்தல் இப்படி பெண் கேட்டு வந்தவர்களை வாசலில் வைத்து அவமானப்படுத்தியதால் அக்கம்பக்கத்தினர் அவளின் குணத்தை ஒன்றுக்கு இரண்டாக திரித்து பேச அது சுற்றும் பரவ வேறு வரன்கள் கூட வந்தாலும் இதை கேட்டு தட்டி சென்றது.
இப்படி உன் வாழ்க்கையில் நீயே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டாயே என்று பேசி அழுதார். போதாததிற்கு சில நாட்களாய் தன் அக்காவின் மகன் தன் அம்மாவிடம் வீடியோகாலில் பேசி பேசி உறவை வளர்த்துக்கொண்டு இருப்பது வேறு தலை வேதனையை கொடுத்தது.
மறுத்து சண்டையிட்டால் அதற்கும் தாயும், தம்பியும் தன்னிடமே முகத்தை காண்பிக்க என்னவோ போ என்றுவிட்டாள் ஸ்ரீ. அவளுக்கே அலுத்து சலித்தது.
அவனுக்கு தெரிந்து பேசுகிறார்களா தெரியாமலா என்று தெரியாமல் அதற்கும் அவனை தவறாய் நினைக்க அதற்கு அவசியமே இல்லை என்பதை போல சக்தி அவளின் முகத்தை கூட காண்பதில்லை.
இதற்கு மூலக்காரணம் ரோஜாவாக இருக்கும் பொழுது அதை அறியும் நேரம் ஸ்ரீயால் மட்டும் ரோஜாவை என்ன செய்துவிட முடியும்?
இவளின் எண்ணவோட்டங்களின் சொந்தக்காரனோ நிற்க வைத்து பிடிபிடியென பிடித்துக்கொண்டிருந்தான் இருவரையும்.
“ப்ரெண்ட்ஸ்ன்னு இருந்துட்டு இப்படி எர்லி மார்னிங் இப்படி தனியா ரோஜாவை அனுப்பலாமா? கூட யாராவது போயிருக்கலாம் தானே? இதுக்கு மட்டும் வாயே திறக்கறது கிடையாது…” என சங்கவியிடம் சொல்லிவிட்டு ஸ்ரீநிதியை ஒரு பார்வை பார்த்தவன் கோபமாக கிளம்பிவிட,
“தப்பு பண்ணிட்டமோன்னு கில்ட்டியா இருக்கு ஸ்ரீ. இப்ப விதுரன் ஸாரும் கோபம். சக்தி ஸாரும் திட்டறார். பாவம் ரோஜா…” என்று சங்கவி வருத்தப்பட ஸ்ரீநிதி அவளை சமாதானம் செய்தாள்.
அவர்களின் கவலையின் நாயகியோ கட்டிப்போன தொண்டையில் இருந்து பேச்சு வருகிறதா என பார்க்க அம்மா, அப்பா, ஆடு, இலை, ஈட்டி என சொல்லி பழகிக்கொண்டிருக்க பார்த்த விதுரனுக்கு பயங்கர கோபமானது.
கயல்விழியோடு வீட்டிற்கு வந்த வைத்தீஸ்வரி ரோஜா வந்ததும் அவளின் நிலையை பார்த்து கஷாயம் வைத்து கொடுத்தார்.
அதன் பின்னர் யாரும் எதுவும் அவளிடம் கேட்கவில்லை. விதுரனைத்தான் சொல்லி கடிந்துகொண்டனர்.
கடைசியில் நீ விட்டுவிட்டு சென்றதால் தானே இதெல்லாம், நீ தான் காரணம் என சொல்ல அப்பொழுதுதான் ரோஜாவிற்கு தெரியும் தன்னையும் சேர்த்து அழைத்து செல்ல சொல்லி அதனை விதுரன் தன்னிடம் சொல்லவே இல்லை என்பது.
கஷாயம் குடித்த பின்பு கொஞ்சம் பரவாயில்லாமல் தோன்ற தங்களுடன் அங்கே வருகிறாயா என வைத்தீஸ்வரி ரோஜாவிடம் கேட்டார். அவளோ விதுரனை பார்க்க அவன் கண்டுகொள்ளவே இல்லை.
‘நீ தானே அழைத்தாய், நீதான் பதில் சொல்ல வேண்டும்’ என நினைக்க தான் சென்றால் அவன் அங்கே இருக்க முடியாதே? இவ்வளவு தூரம் வந்து செல்ல முடியாதென ரோஜாவும் மறுத்துவிட விதுரனுக்கு நிம்மதியானது.
“உடம்பை பார்த்துக்கோ…” என சொல்லி சடகோபன் கிளம்பி விட ரோஜாவை அழைத்துக்கொண்டு தனியாக வந்த வைத்தீஸ்வரி அவளிடம் சில கேள்விகளை கேட்க அதற்கு அவள் பதில் சொல்லியதிலேயே தாங்கள் யூகித்த விஷயம் இல்லை என்பதை புரிந்துகொண்டவர்,
“வேணாம் அத்தை, அதான் ரீசன் நீங்க சொன்னீங்களே? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்…” என்று சொல்ல ரோஜாவின் மொபைலுக்கு சங்கவி போன் செய்ய,
“ஸ்டார்ட் ம்யூஸிக், ஐயாம் வெரி ஹேப்பி” என கவுண்டமணி குதூகலமாய் சொல்லி ஊர்கோலம் போகும் ரிங்டோன் கேட்க சத்தியமாய் விதுரனுக்கு தன் கோபத்தை எப்படி அடக்கவென்றே தெரியவில்லை.
அதற்கு நேர்மாறாக கயல்விழி சிரித்துவிட உள்ளே இருந்து பதறிக்கொண்டு வெளியே ஓடிவந்தாள் ரோஜா. வந்ததும் விதுரனின் கோப முகத்தை பார்த்தவள் அங்கிள் என்று சொல்ல போய் சட்டென மாற்றி,
“இன்னைக்கு நீங்க ஊர்ல இருந்து வரீங்கன்ற ஆர்வத்துல வச்சது. சப்ரைஸ்…” என்று கண்ணை மூடி மூடி திறக்க,
“டேய் போதும்டா, ரொம்பத்தான் கோவப்படற…” என்று கயல்விழியே சொல்ல வைத்தீஸ்வரியும் ரோஜாவை பார்த்து சிரிக்க,
“நீ இப்போதைக்கு உன் சமைக்கிற ஆர்வத்தை மூட்டை கட்டி வை. மெதுவா கத்துக்கலாம். அவ்வளோ அவசரம்னா நானே உனக்கு ரொம்ப சிம்ப்ளா ரெண்டு மூணு டிஷ் சொல்லித்தரேன். இப்போதைக்கு அதை செய்…” என வைத்தீஸ்வரி சொல்ல,
“என்ன அத்தை நீங்களும்?…” என சிணுங்கியவள்,
“என்கிட்டே எதாச்சும் ஒரு காய் கேளுங்களேன். சும்மா டக்கு டக்குன்னு சொல்லுவேன். அதே மாதிரி எதுனாலும்…” என சொல்ல வேறு வழியின்றி அவளுக்காக,
“சரி ஒன்னு என்ன உனக்கு தெரிஞ்ச காயெல்லாம் சொல்லேன்…” என்று அவரும் கேட்க கயல்விழி மருமகள் சொல்ல போவதை கேட்க பார்த்தார்.
“வெண்டைக்காய், கத்தரிக்காய், மாங்காய், ஏலக்காய்…” என்று அடுக்க,
“ரொம்ப தெளிவா இருக்க ரோஜா நீ. ஆனா பாரு இதை எல்லாம் இன்னொரு நாள் மெதுவா பேசிக்கலாம். தொண்டை வலிக்கும். போதும். போய் ரெஸ்ட் எடு…” என்றவர்,
“பார்த்துக்கோ விது, நாங்க கிளம்பறோம்…” என கயல்விழியை பார்க்க அவரும் எழுந்துகொண்டார்.
“உனக்கு முடியலைன்னா அங்க கிளம்பி வா ரோஜா. இவனை எதிர்பார்க்க வேண்டாம். உன் மாமாவுக்கு போன் பண்ணு. கார் அனுப்பிருவாங்க…” என சொல்லியவர் வாசலுக்கு சென்றவர் மகனிடம்,
“அவ கூட சண்டை பிடிக்காத….” என சொல்லிவிட்டு கிளம்பிவிட மெதுவாய் கதவை சாற்றிவிட்டு உள்ளே வர அவனுக்காக காத்திருந்தாள் ரோஜா.
கண்டுகொள்ளாமல் அங்குமங்கும் அவன் சுற்ற அவனின் பின்னே சென்றவள் சில நிமிடங்களில் அவனின் செயலில் வெறுப்புற்று எரிச்சலுடன் சென்று படுத்துவிட்டாள்.
அப்படியே தூங்கியும் விட மதிய உணவை வெளியே ஆடர் செய்து வரவழைத்திருந்தவன் அவளை எழுப்ப வேண்டுமென்றே எழாமல் படுத்திருக்க,
“உனக்கு என்ன தான் பிரச்சனை ரோஜா? சாப்பிட்டு வந்து தூங்கு, யார் கேட்கறா? வா…” என மீண்டும் சொல்ல வேகமாய் எழுந்து அமர்ந்தவள்,
“நானும் தான் பின்னாடியே சுத்தி வந்தேன். நீங்க கேட்டீங்களா? இல்லையில்ல. எனக்கு இப்படி ஆகும்னு தெரியாது. உங்கம்மா தான் எப்போ ஏதாவது முடியலைன்னாலும் சொல்லிடுன்னு சொல்லிருக்காங்க…”
“சொன்னா சொல்லிருவியா? முதல்ல நமக்கு என்னன்னு நாம தான் பார்த்துக்கனும். அதை கன்பார்ம் பண்ணிட்டு தான் மத்தவங்களுக்கு சொல்லனும். எத்தனை ஆசையோடு வந்தாங்க தெரியுமா?…” என அவன் கேட்க அவன் சொல்லியதில் பாதியை மட்டுமே கேட்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவளின் முகமே சரியில்லாமல் சட்டென மாறுபட்டதை கவனித்துவிட்டவன் என்ன பேசினோம் என்று யோசித்து அவளை அழைத்தான்.
“ரோஜா, என்னை பாரு…” என்று தன்னை நோக்கி அவளின் முகத்தை திருப்ப,
“இத்தனை வருஷமா என்னை நான் தான் பார்த்துட்டே இருந்தேன். எனக்கு எதுவானாலும் நானே பார்த்துப்பேன். நானே சரி பண்ணிப்பேன். இப்ப பார்த்துக்க நாங்க இருக்கோம்னு உங்கம்மா சொல்லவும் கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்து சொல்லிட்டேன் போல. இனி இப்படி பண்ணலை…”
“இதுவரைக்கும் நான் முடியலைன்னு சொல்லி கேட்க யாருமில்லை. நானும் சொன்னதில்லை. இப்ப சொல்ல எனக்கு இருக்காங்கன்ற ஒரு சந்தோஷத்துல லேசான்னதும் என்னவோன்னு நினைச்சு சொல்லிட்டேன். அதுவும் இல்லாம என் மைண்ட் அங்க போய்ருச்சு. அதான் அம்மாவா அவங்கக்கிட்ட சொல்லனும்னு சொல்லிட்டேன். இனிமே இல்லை…”
பட்டுக்கொள்ளாத தன்மையுடன் அவள் சொல்லிய விதமும் முகத்தில் இருந்த உணர்ச்சி குவியலும் அவனுக்கு சட்டென முகத்தில் அடித்ததை போல் ஆனது.
தான் வளர்ந்த சூழலும் அவள் வளர்ந்த சூழலும் வேறு வேறு. அதிலும் அவளின் வாழ்க்கையில் ஆறாத ரணங்களும் ஏதோ விதத்தில் புரையோடி போய் உள்ளது போல அவனுக்கு தென்பட தன்னையே நிந்தித்துக்கொண்டான்.
“ஹேய் ரோஜா, ஸாரிடா. அங்கிள் தான் தப்பு. தப்பு பண்ணிட்டேன். என் கிட்டதான் சொல்லனும்…” என அவளை அணைத்துக்கொள்ள மறுக்காமல் சாய்ந்துகொண்டவள் அவனை அணைத்துக்கொள்ளவே இல்லை.
அவனாக அவளின் கையை எடுத்து தன் இடுப்பை சுற்றி போட்டுக்கொள்ள கை அப்படியே தான் இருந்தது.
“ரோஜா ப்ளீஸ், நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு, காலையில வந்ததும் உனக்கு கால் பண்ணினா ரீச் ஆகவே இல்லை. உன் ப்ரெண்ட்ஸ்ட்ட கேட்டா நீ கிளம்பி போய்ட்டதா சொல்றாங்க. லேன்லைன்ட் டெட். தெரிஞ்ச பையனை விட்டு வீட்டை பார்க்க சொன்னா லாக்ல இருக்கு…”
“தப்புதான், இனிமே சார்ஜ் போட்டுடறேன்…” என்று மட்டும் சொல்ல,
“சில விஷயங்கள் நமக்கே நமக்கு மட்டுமே பிரத்யோகமானது. இப்படி ஒரு விஷயத்தை நீ உன் ப்ரெண்ட்ஸ் முன்னாடி பேசலாமா? அதை விட இப்போ இதை அம்மாக்கிட்ட சொன்னா அவங்க என்ன நினைப்பாங்க?…”
“இனிமே சொல்லலை…” ரோஜா அதில் அழுத்தமாய் இருக்க அது விதுரனுக்கு தெரியவில்லை.
“முதல்ல நமக்கு என்னன்னு நாம தெளிவாகனும். அதுக்கு பின்னால சொல்லவேண்டியதை சொல்லனும். புரியுதா?…” என்றதற்கு தலையை மட்டும் அசைக்க,
“இன்னும் கோபமா மை லிட்டில் டெவில்?…” என்று அவளை நிமிர்த்தி மூக்கோடு மூக்கை வைத்து உரச அப்போதும் ரோஜா அமைதியாகவே இருக்க,
“சரி வா சாப்பிடுவியாம். சாப்பிட்டு அந்த கஷாயத்தை குடிச்சுட்டு தூங்கு…” என்று எழுப்ப,
“இல்லை பசிக்கலை…” என சொல்லி மீண்டும் படுக்க போக இன்னும் எதுவோ அவளின் மனதை அழுத்துகிறது என்பதை உணர்ந்தவன் எழுந்து சென்று வெறும் ரசம் சாதம் மட்டும் போட்டுக்கொண்டு வந்து மீண்டும் அமரவைக்க,
“வேண்டாம்னா விடுங்க ப்ளீஸ். எனக்கு சாப்பிட வேண்டாம். பசிக்கலை…” என வேறெங்கோ பார்த்தபடி சொல்ல அவளுக்கு ஒரு கவளத்தை பிசைந்து எடுத்து வாயினருகே கொண்டு வைக்க திரும்பி பார்த்தவளின் கண்கள் கலங்கியது.