“ஊருக்கு போனா கண்டிப்பா வீட்ல இருக்க முடியாது. பகல் ஃபுல்லா நீ தனியா இருக்கனும். அதுவும் அந்த வீட்ல சித்தி உன்கூட மெர்ஜ் ஆகலை இன்னும். உனக்கும் அன் கம்பர்டபிளா இருக்குமேன்னு தான்…” என்றவன்,
“சேரிலாம் கட்டிட்டு எப்படி ஸ்கூட்டி ஓட்டிட்டு வந்த நீ?. எனக்காகவா?…” என பேச்சுக்கொடுக்க ரோஜாவோ அனைத்தையும் மறந்தவளாய் அவனோடு பேசியபடி அவள் கதை பேச சிரிப்புடன் அவள் பேசியவற்றை கேட்டுக்கொண்டே இருந்தவன் அங்கேயே தனக்கும் போட்டுக்கொண்டுவந்து சாப்பிட்டு முடித்து கை கழுவி,
“நீ சேரி மாத்திக்கலையா? இப்படியே படுத்தா உனக்கு கஷ்டமா இருக்காதா?…” என கேட்டு அவளுக்கு உடையை எடுத்து தர அதற்கு கூட நேரமில்லாதவள் போல உறங்கிவிட்டாள்.
அடுத்தடுத்து சக்தியும் மணிவாசகமும் அழைக்க தொழிலில் மூழ்கியவன் நேரம் போனதே தெரியாமல் அப்படியே சோபாவில் சாய்ந்து தனது மொபலில் ஆழ்ந்து போனான்.
மாலை மயங்கி இரவு சூழ கண்ணை திறந்து பார்த்த ரோஜா பயந்தே போனாள். அறை கதவு கூட திறந்திருக்கே வீடே இருளில் மூழ்கி இருக்க அலறிக்கொண்டு எழுந்து அமர்ந்தவளின் சத்தத்தில் விதுரன் பதட்டமாய் உள்ளே வந்தான்.
“அங்கிள், அங்கிள்…” என்றவளின் உச்ச குரலில்,
“ரோஜா நான் இங்க தான் இருக்கேன்…” என அவன் வேகமாய் விளக்கை கூட போடாமல் ஓடி வர அவனின் குரல் கேட்ட திசையில் இவளும் சென்று அவன் மீது மோதிய வேகத்தில் மீண்டும் கட்டிக்கொண்டாள் அவனை.
“ஏன் விட்டு போன அங்கிள்?, பயந்துட்டேன் அங்கிள்…” என்று அவனின் மார்பில் அடித்து, அடித்து கோபமாய் சண்டை பிடித்தவள் கண்ணை திறக்கவே இல்லை.
அவளின் நடுக்கத்தை உணர்ந்து மெதுவாய் அவளை நகர்த்தி விளக்கை அறைக்குள் ஒளிரவிட்டவன்,
“கண்ணை திற ரோஜா, இங்க பாரு. லைட் ஆன் பண்ணிட்டேன். என்னை பாரு…” என்று அவளின் முகத்தை வலுக்கட்டாயமாய் நிமிர்த்த பார்க்க,
“மாட்டேன் விஸ்கி பயங்காட்டுவா. மாட்டேன்…” என தன்னை மறந்தவளாய் பதற அவனின் மனதில் ஏதோ பயம் சூழ்ந்தது.
“ரோஜா இங்க பாரு என்னை. நான் மட்டும் தான இருக்கேன். இங்க…” என அவளை உலுக்க அவளோ அவனின் நெஞ்சில் புதைந்த முகத்தை மீண்டும் நிமிர்த்தவே இல்லை.
இது வேலைக்காகாது என்று அப்படியே அள்ளி சென்றவன் பாத்ரூமில் ஷவரின் கீழ் நிறுத்தி தண்ணீரை திறக்க அதன் பின்னரே தன்னுணர்வு வந்தாள் ரோஜா. உதடுகள் நடுங்க விதுரனின் டிஷர்ட்டை பிடித்துக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க,
“கனவு கலைஞ்சிருச்சா?…” என்றான் சிரிப்புடன்.
ஆனாலும் மனதில் பலவித யோசனைகள். ஒன்று மட்டும் புரிந்தது. அவள் வீட்டில் அவள் இயல்பாய் வளரவில்லை என்பது மட்டும். அதுவும் விஸ்கி என்ற வார்த்தை ஒன்றே போதுமாக இருந்தது விதுரனின் ஆத்திரத்தை கிளப்ப. ஆனால் அதனை காட்டிக்கொள்ளாமல் அவளிடம் இயல்பாய் இருந்தான்.
“போச்சு சேரியோட ஃபுல்லா நனைஞ்சிட்டேன். போங்க. உங்களால தான்…” என அவனை முறைத்துக்கொண்டு இடுப்பில் கைவைத்து நிற்க முழுதாய் நனைந்தவளின் கோலம் கணவனாய் அவனின் உணர்வுகளை தூண்ட,
“நனைஞ்சா மாத்திக்கலாம் லிட்டில் டெவில். அதுக்குன்னு என்னை படுத்தாத…” என்று அவளை அணைக்க,
அவனை தள்ளிவிட்டு மீண்டும் அவனிடமே அவள் குற்றம் சொல்லி சரணடைய வெகுவாய் உருகியது அவனுக்குள் அவள் மீதான நேசம்.
“உன்னை தனியா விட்டுட்டு எங்கயும் போகமாட்டேன் ரோஜா. ஏன் உனக்கு நம்பிக்கை இல்லையா?…” என கரகரத்த குரலில் அவன் கேட்க அவனுக்கு பதில் சொல்ல கூட தோன்றவில்லை அவளுக்கு.
தவிப்புடன் பார்த்தவளின் பேச்சற்ற நிலை பார்க்க முடியாமல் அவளை அணைத்துக்கொண்டவன்,
“கிஸ் பண்ணிக்கலாம் தானே எல்டி?…” என கேட்டு பதிலை எதிர்பாராமல் அவளிதழ்களின் வழியாய் அவளுள் தன்னுணர்வுகளை கடத்தினான் விதுரன்.
அவனின் இதழணைப்பில் முழுமையாய் தன்னை ஒப்படைத்த ரோஜா மெதுவாய் முகம் சாய்க்க விலகியவன்,
“குளிரும். வா போகலாம்…” என ஷவரை ஆஃப் செய்துவிட்டு அவளுக்கு டவலையும் உடையையும் கொடுத்துவிட்டு ஈரத்துடன் வெளியே வந்தவன் தானும் உடை மாற்றி அறையில் இருந்த ஈரத்தை துடைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
வீட்டின் அனைத்து விளக்குகளையும் ஒளிரவிட்டவன் இருவருக்குமான காபியை தயாரிக்க சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே வந்த ரோஜா பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி சாமி கும்பிட விதுரனின் பார்வை முழுவது ரோஜாவிடம் தான்.
இத்தனை பயம், இவ்வளவு பெரிய பெண்ணிடம். இன்னமும் ரோஜா அவனுக்கு புதிராய் புதிதாய் இருந்தாள்.
அவளின் மனதை மொத்தமாய் அறியும் முன் மனைவியாய் முழுவதும் அறிந்திருந்தவனுக்கு இப்பொழுது அவளின் சிறுவயது பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும் என நினைத்தான்.
“காபி ரெடியா அங்கிள்? இப்ப நீங்க தான் கனவு உலகத்துல இருக்கீங்க?…” என்று பளிச்சென்ற புன்னகையுடன் தன்னுடைய ரோஜாவாய் அவள் மலர்ச்சியாய் நிற்க இப்போதைக்கு எதையும் கேட்க வேண்டாம் என்ற முடிவுடன் காபியுடன் வந்தான்.
அடுத்த இரண்டு மாதங்களும் கடந்து சென்ற வேகம் கூட அறியாது வாழ்கையை சந்தோஷமாய் கழித்தனர் விதுரனும் ரோஜாவும்.
அன்று ரோஜாவும், விதுரனும் மால் ஒன்றிற்கு சென்றிருந்தனர். கயல்விழி சடகோபனின் திருமண நாள் வருவதால் அவர்களுக்கு உடை எடுக்க சென்றிருந்தனர்.
ரோஜா ஒவ்வவொரு புடவையாக மாற்றி மாற்றி எடுக்க விதுரன் பொறுமை போனது.
“உனக்கு கூட நீ எப்படி எடுத்து நான் பார்க்கலை. நீ செலெக்ட் பண்ணிட்டு கால் பண்ணு. வரேன். அதுவரைக்கும் அப்பாவுக்கு போய் பார்க்கறேன்…” என சடகோபனுக்கு எடுக்க வேறு இடம் நகர்ந்தவன் அங்கே தனக்கும் சேர்த்து உடைகளை பார்த்துவிட்டு வெளியே வந்தான்.
“உன்னை இங்க பார்ப்பேன்னு நான் நினைக்கலை. ஆனா பார்த்துட்டேன்…” என பிரஷாந்தி வந்து நின்றதும் விதுரன் திகைத்து நின்றது ஒரு நொடி தான். அதன் பின் முகம் சுருக்கி,
“ச்சீ ப்போ…” என்று முகத்தை சுளித்துக்கொண்டு நகர அவனை வழி மறித்த பிரஷாந்தி,
“நான் கேட்கறதுக்கு பதில் சொல்லிட்டு போ…” என்று நிற்கவும் திடுக்கிட்டவன் சுற்றிலும் பார்த்துவிட்டு,
“பப்ளிக்ல வச்சு ஸீன் க்ரியேட் பண்ணி அறை வாங்காத சொல்லிட்டேன். தெரியும்ல என் அறை எப்படி இருக்கும்னு. வாங்கி நாளானதுல மறந்துடுச்சோ?…” என்று இளக்காரமாய் அவன் கேட்டதும் அவளின் முகமே மாறிவிட,
“இங்க வச்சு எல்லோர் முன்னாடியும் வாங்கிட்டு அசிங்கப்படாத நீ…” என்று வேறு எச்சரிக்க,
“அதெப்படி மறப்பேன். என்னோட பேரன்ட்ஸ் கூட என்னை அடிச்சதில்லை. அப்படி இருக்க என்னை நீ அடிச்சியே, மறந்திருவேனோ?…” என கோபத்துடன் கேட்க,
“தெரியுதுல, போ நகர்ந்து….” என்றவனை பார்க்க பார்க்க பிரஷாந்திக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“அதெப்படி உனக்கு ஆளுக்கு தகுந்த மாதிரி உன் ஈகோ ஹர்ட் ஆகுது? என் தங்கச்சி இக்கட்டுல இருக்கறப்போ மட்டும் உன் ஈகோ ஹர்ட் ஆகி அவளை கல்யாணம் பண்ணின? அப்போ நான்…”
பிரஷாந்தி கேட்கவும் அவளின் கேள்வியின் சாரம்சத்தில் “நீயெல்லாம் என்ன பெண்?” என பார்த்து முகத்தை சுருக்கினான் அவன்.
“என்னோட அப்பா வந்து கேட்டப்போ எத்தனை கெஞ்சினேன்? அப்போ அந்த ஈகோ எங்க போச்சு?…” என்று பிடிவாதமாய் நிற்க,
“என்ன பொண்ணு நீ? கல்யாணம் ஆகி புருஷனோட வாழ்ந்துட்டு இப்ப வந்து என்கிட்டே இப்படி பேச உனக்கு வெக்கமா இல்லை? அதுவும் உன் தங்கச்சிக்கு புருஷன் நான்…” என அடிப்பதை போல வர,
“அதுதான் எனக்கு தாங்கிக்கவே முடியலை. எங்கையோ என் கண்ணுல படாம நீ எப்படியும் இருந்துட்டு போய்ருந்தா நான் ஏன் உன்னை கேட்க போறேன்? நீ என் தங்கச்சி கல்யாணத்துக்கே வருவியாம், அவளை பேசினா உடனே ஆமாடான்னு தாலியை கட்டுவியாம்?…” என்றவள்,
“நானும் தான அன்னைக்கு கேட்டேன். எங்கப்பாவும் கோபமா பேசினார் தானே என் பொண்ணை மயக்க பார்த்தியான்னு? அப்படித்தான், ஆமான்னு சொல்லி என்னை ஏன் நீ?…” என்றவளை முடிக்க விடாமல்,
“ஏய்…” என்று விரல் நீட்டி எச்சரித்தவன்,
“அவ்வளோ தான் சொல்லிட்டேன்….” என்று உதட்டை கடித்துக்கொண்டு மிரட்ட,
“இங்க உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது. ஆனா நான் நினைச்சா…” என்று நக்கலாய் சொல்லியவள்,
“அப்படி என்ன என்னை விட அவ உனக்கு உயர்த்தி? எங்க வீட்ல கூட நான் தான் ராஜகுமாரி தெரியுமா? அவ இல்லை…” என்று பெருமையாய் சொல்ல,
“உங்க வீட்டோட லட்சணம் உன் நடத்தையில் தெரிஞ்சிருச்சே அஞ்சு வருஷம் முன்னாடியே. நீ சொல்லனுமா என்ன? ஆனா ரோஜா ம்ஹூம், என் பொண்டாட்டி எப்படி உங்க குடும்பத்து பொண்ணா இருந்தான்னு தான் ஆச்சர்யமா இருக்கு….” என்று விதுரன் இகழ்ச்சியாய் பார்க்க,
“பொண்டாட்டி, பொண்டாட்டி, இதை சொல்லாத நீ. உனக்கு அப்படி என்ன என் மேல வெறுப்பு? நான் உன்னை விரும்பினதை தவிர என்ன பண்ணேன்? என்னை வேண்டாம்னு ஏன் சொன்ன?…” என்றவளிடம் பதில் சொல்லாமல் முகத்தை திருப்ப,
“அதுவும் எங்கப்பாட்ட என்ன சொன்ன உன் பொண்ணும் சரியில்லை. நீயும் சரியில்லை. உனக்காக உன் பொண்ணு வேண்டாம். உன் பொண்ணுக்காக நீயும் உன் குடும்பமும் வேண்டாம்னு எவ்வளவு தெனாவெட்டா சொன்ன? ரோஜாவும் சேகரன் பொண்ணுதான். இப்போ எங்க போச்சு உன் ஈகோ?…”
பிரஷாந்தி அவனை அவமானப்படுத்துவதாக பேசியதை கேட்டு விதுரன் சத்தமாய் சிரித்து,
“நீ ஒரு ஜென்மம்னு உன்கிட்ட இதை சொல்லனுமா என்ன?…” என்று அவளை உசுப்பேற்ற,
“உண்மையை சொல்லு, நீ ரோஜாவை லவ் பண்ணுனியா?…” என்று கேட்க,
“ஆமான்னா வயிறேரிஞ்சே பொறாமைல புகைஞ்சு போய்டுவியோ? அப்போ அதுதான் எனக்கு வேணும். ஆனா ரோஜா எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் தான். ரோஜாவுக்கா தான் அவளை கல்யாணம் பண்ணேன். உன்னோட தங்கச்சின்றதாலவோ, இல்ல சேகரனோட பொண்ணுன்றதுக்காகவோ கூட என்னால ரோஜாவை விட்டுகுடுக்க முடியாது…” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல் சென்றுவிட பிரஷாந்தி மனது ஆறவில்லை.
குடும்பத்தோடு ஒரு விசேஷத்திற்காக சென்னை வந்திருந்தார்கள். வளர்மதியும் சேகரனும் கூட. இன்றுவரை வளர்மதியை வைத்தே ரோஜாவை பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்களை கட்டிவைத்திருந்தாள் பிரஷாந்தி.
அவளுக்கு தெரியாமல் தான் சேகரன் அருப்புக்கோட்டை சென்றது. சென்றுவிட்டு வந்ததில் இருந்து பிரஷாந்தி வீட்டில் ஆடிய ஆட்டம் உடல்நிலை சரியில்லாதது போல படுத்து உண்ணாமல் தின்னாமல் கிடந்து என்று குடும்பத்தை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருந்தாள்.
நாளுக்கொரு முறையாயினும் வீட்டில் இப்படி குடும்ப மானத்தை வாங்கிவிட்டு சென்றுவிட்டாளே என்றும், முதலிலேயே அவளை வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றேனே கேட்டீர்களா என்றும் சொல்லி சொல்லியே ரோஜாவின் மீதான வெறுப்பை தணியவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பிரஷாந்தி.
நிர்மல் மீண்டும் பாரின் கிளம்ப உடன் கிளம்புமாறு பிரஷாந்தியிடம் சொல்ல பெற்றோர்களுக்கு ஆறுதலாக இருக்கிறேன் என்று சொல்லி அவனோடு செல்லாமல் இருந்துகொள்ள அவனோ அவள் வரும் வரை தான் நிம்மதியாய் இருப்போம் என விட்டுவிட்டு சென்றுவிட்டான்.
அது தெரியாமல் இங்கே இவள் ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தாள். தன்னை ஒருவன் மறுத்து தன் தங்கையை மணந்து வாழ்வது அவளின் குணத்தை சீண்ட தாளமுடியாமல் இப்பொழுது நிம்மதி இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
தன்னுடைய கோபமும், ஆத்திரமும் அர்த்தமற்றது என்பதை உணராமல் தன்னை ஒருவன் அவமதித்து தன் தங்கைக்கு கொண்டவனாகி வாழ்வதா என்பது அவளின் கண்ணை மறைத்தது.
விதுரன் சென்ற திசை நோக்கி பிரஷாந்தியும் செல்ல அங்கே பில்லிங் செக்ஷனில் ரோஜாவுடன் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தான் அவன்.
இருவருமாக பில் போட்டுவிட்டு கிளம்ப பார்த்தவளுக்கு அத்தனை ஆத்திரம் கிளம்பியது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லையே. அதுவே இன்னும் அதிகமான கோபமாகியது.
காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வழியில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவர்கள் உடைமாற்றி அமர வழக்கம் போல விதுரன் காபி போட சமையல் மேடையில் காலாட்டியபடி அமர்ந்திருந்த ரோஜா,
“நீங்களும் விஸ்கியும் ஒரே காலேஜா அங்கிள்?…” என்று கேட்டதும் பாலை கப்பில் ஊற்றிக்கொண்டிருந்தவனின் கை அப்படியே நிற்க,
“காபி போட்டுட்டு ஷாக் ஆகலாம். ஹ்ம்ம், சீக்கிரம். தலை வலிக்குது விஸ்கியை பார்த்ததுல இருந்து…” என்று தலையை பிடித்துக்கொள்ள விதுரனுக்குள் அச்சமாய் இருந்தது இவள் தான் சொல்வதை நம்புவாளோ இல்லையோ என்று.
“ரோஜா இன்னைக்கு நீ அவளை பார்த்தியா?…” என கேட்டதும்,
“ஹ்ம்ம், பார்த்தேன். உங்ககிட்ட கூட கோபமா பேசிட்டிருந்தா தானே?…” என சொல்லி அவனின் இதயத்துடிப்பை வேறு அதிகரிக்க செய்தாள்.