விருதுநகர். அது ஆண், பெண் இருபாலாரும் பயிலும் பொறியியல் கல்லூரி. விதுரனும், சக்தியும் இருவரும் முதுகலை படிப்பில் இரண்டாம் வருடம் பயின்று கொண்டிருந்தனர்.
பிரஷாந்தி இளங்கலை சேர்ந்து மூன்றாம் வருடம். அதுவரை அப்படி ஒருத்தி அங்கே பயிலுவதோ தன்னை பார்ப்பதோ விதுரன் அறிந்ததில்லை.
அவளை என்றில்லை யாரையுமே. தனது சின்ன ஒரு அசைவு கூட யாரையும் கவர்ந்துவிட வேண்டாம் என்பதில் மிக கவனமாய் இருப்பவன்.
ஏனோ அவனின் குடும்பத்தில் யாரும் பேச்சிற்கு கூட காதல் என்றோ பெண்களை பார்த்தேன் என்பதை போன்ற வார்த்தைகளையோ சாதாரணமாக கூட பேசி பார்த்ததில்லை அவன்.
அதானாலோ என்னவோ அவன் வயதுக்கே உரிய எந்தவித சில்மிஷங்களும் அவனிடம் இருந்ததில்லை. அதில் கர்வம் கூட அவனுக்கு உண்டு.
அந்த வயதில் படிப்போடு தங்கள் தொழிலில் தான் அதிக கவனம் செலுத்தினான். படிப்பு அவனை பொறுத்தவரை பெயருக்கு பின்னால் சேர்த்து பெற்றோருக்கு பெருமை சேர்ப்பது மட்டுமே.
மற்றபடி அவனின் நோக்கம் முழுவது தொழில் தொழில் மட்டுமே. இன்னும் அவர்களின் கடையை தமிழகம் மட்டுமின்றி அணைத்து இடங்களிலும் பெயர்பெற செய்யவேண்டும் என்பது தான் நோக்கம்.
ரத்தித்திலேயே ஊறி போனதாலோ என்னவோ அவனின் பேச்சுக்கள் கூட அதிகமாய் தொழிலை முன்னெடுப்பதில் தான் இருக்கும். படிப்பு கூட கயல்விழி சொன்னதற்காக படிப்பது. அதையும் ஏனோதானோவென்று இல்லாமல் திறன்படவே படித்தான்.
“இப்போ இதை அனுபவிக்காம எப்படா அனுபவிக்க? இந்த வருஷத்தோட நம்மோட லைப் மாறிடும்…” என்று சக்தி சொன்னாலும்,
“இதெல்லாம் ஒரு ஜாலியா?…” என கடந்து போய்விடுவான். மற்றபடி சக்தியை எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் அவன் திணிக்கவில்லை.
அப்போதிலிருந்தே காதல் என்ற ஒன்று அவனை கவரவே இல்லை. திருமணம் முடித்தால் காதல் தானாக வந்துவிட போகிறது மனைவியினிடத்தில் என்பது தான் அவனின் கொள்கையாக இருந்தது.
அதிலும் அங்கு காதல் என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் மிக சாதாரணமான ப்ரேக் அப், அடுத்த பிக்அப் இதெல்லாம் ஒரு வித அசூயையை தான் அவனிடம் தோற்றுவித்தது.
அவனோடே இருந்தலால் சக்தியும் அப்படி இல்லை. அவன் பெண்களுடன் பேசுவது அரட்டை அடிப்பது என அக்மார்க் கல்லூரி மாணவனாகவே அவன் திகழ்ந்தான்.
அவனிடம் நட்பு பாராட்டும் பெண்கள் விதுரனிடம் பேசுவதற்கு அச்சப்படவே செய்வனர். பட்டென்று இடம் பொருள் பார்க்காமல் வார்த்தையை விட்டுவிடுவான்.
அதற்காகவே சிலர் அவனிடம் ஒதுங்கி இருக்க அதற்காகவே அவனின் மேல் விருப்பம் கொள்ளவும் செய்தனர். அதில் ஒருத்தி பிரஷாந்தியும் கூட.
சக்தியிடம் பேசி பழகி அமைதியான நல்ல பெண் என்று பெயர் வாங்கியிருந்த பிரஷாந்தி விதுரனிடம் பேச விரும்ப அவனோ தவிர்த்து சென்றுவிட்டான்.
“அவனை விடும்மா, அவன் எப்பவுமே அப்படித்தான். உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னை கேளு, நான் அவன்கிட்ட சொல்றேன்…” என்று அவளிடம் சக்தி சமாதானமாய் சொல்ல,
“இல்லைண்ணா ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட்ஷிப் தான். இந்த காலேஜ்ல அவர் மேல அவ்வளவு நல்ல ஒபீனியன். அதனால தான் நானே பேச ட்ரை பண்ணேன். அவங்க தப்ப புரிஞ்சுக்கிட்டாங்க போல…” என்று கண்கலங்குவதை போல சொல்ல சக்திக்கு தாளமுடியவில்லை.
“இப்ப என்ன அவன் கூட ப்ரெண்டா இருக்கனும். அதான? ஆனா அவ்வளவு சீக்கிரம் அது நடக்காதே?…” என்று சொல்லி அனுப்பியவன்,
“நீ மனுஷனே இல்லடா, அந்த பொண்ணு ஜஸ்ட் ப்ரென்ட்லியா தான பேசனும்னு சொல்லுது. ஒரு ஹாய் சொன்னா என்ன? மத்த பொண்ணுங்க மாதிரி எல்லாம் கிடையாது. பாவம் வெளியூர்ல இருந்து வந்து படிக்குது. வேற யாரோடையும் அவ்வளவா பேசி பார்த்ததில்லை. கொஞ்சம் பயந்த சுபாவமும் கூட…” என,
“அம்புட்டு பயந்த பொண்ணுன்னா அப்பாம்மா கூடவே இருந்து உள்ளூர் காலேஜ்ல படிக்கனும். எதுக்காம் இங்க வந்துச்சு?…” என விதுரனும் பட்டுக்கொள்ளாமல் கேட்க,
“திமிர்டா, உனக்கிருக்க திமிர் யாருக்கும் கிடையாது. வந்துருச்சு படிக்கனும்னு. நம்ம காலேஜ்ன்னு மூச்சுக்கு மூச்சு சொல்லுவியே. அப்ப இங்க படிக்கிற பொண்ணுங்களுக்கு நம்ம ஒரு சப்போர்ட்டிவா இருக்கனும் தானே?. இங்க மொத்த காலேஜும் உன்னை கோபக்காரன் முசுடுன்னு மட்டுமா சொல்றானுங்க, நீ ஒரு ஹீரோ பிகர்டா…” என்று சக்தி பிரஷாந்திக்காக பேச,
“ரொம்ப பாசம் பொங்குது. வேணும்னா நீ சப்போர்ட்டா இருடா. நான் ஏன்? அந்த பொண்ணுக்கு காவல் காக்கத்தான் நான் இங்க படிக்கறேனா? அவனவன் இங்க வர வேலையை பார்த்துட்டு போனாலே எந்த பிரச்சனையும் இல்லை…”
“விது…” என்ற சக்தியை இடைமறித்தவன்,
“இங்க பாரு சக்தி, நாம நார்மலா ஜஸ்ட் ஒரு ஸ்மைல் பண்ணி பேசிடலாம். ஆனா சில பொண்ணுகளுக்கு அந்த சின்ன ஸ்மைல் தான் லேசான பிடித்தத்தை குடுக்கும். எனக்கு தெரிஞ்சு மட்டுமில்லை தெரியாம கூட யாரையும் அட்ராக்ட் பண்ண வேண்டாம். அதுக்கு நான் கோபக்காரனா, முசுடா இருந்துட்டு போய்டுவேன்…” என சொல்ல,
“நல்ல விளக்கம்டா. இப்ப மட்டும் உன்னை யாருக்கும் புடிக்காதா என்ன?…”
“அது எனக்கு தேவை இல்லாதது. இப்ப நீ சொல்றதும் எனக்கு தேவை இல்லாதது. புரியுதா?…” என்று அந்த பேச்சிற்கு விதுரன் முற்றுப்புள்ளி வைத்தாலும் சக்தியை பிரஷாந்தி விடுவதாய் இல்லை.
முன்பு போல அல்லாமல் விதுரனை பற்றியே அவளின் பேச்சுக்கள் அதிகமாய் இருக்க சக்திக்கே சந்தேகம் வந்தது.
“நீ அவனை விரும்பற மாதிரி இருக்கேம்மா?…” என கேட்டுவிட,
“எஸ் அண்ணா, எனக்கு அவங்களை புடிச்சுருக்கு…” என்று லேசான வெட்கத்துடன் அப்பாவியாய் அவள் சொல்ல அவளுக்காக வருந்தினான் சக்தி.
“இங்க பாரும்மா, விதுரன் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டான். நீ உன் மனசை மாத்திக்கறது தான் சரின்னு தோணுது…” என சக்தி முடிவாய் சொல்லவும் அதிர்ந்து போன பிரஷாந்தி,
“அண்ணா எனக்கு இந்த காலேஜ் மெரிட்ல கிடைச்சது. என்னதான் அப்பா வசதியா இருந்தாலும் என்னோட மேல்படிப்பு நான் படிச்சதுக்கான அங்கீகாரத்துல கிடைக்கனும்னு ஆசைப்பட்டேன். அதே மாதிரி இந்த காலேஜ் கிடைக்கவும் எனக்கு இங்க படிக்க புடிக்கலை. வேற வழி இல்லாம இங்க படிக்க வந்தேன்…”
“அப்பா கூட வேற மாத்திக்கோன்னு சொன்னப்போ அந்த ஐடியால தான் இருந்தேன். ஆனா எப்போ உங்க ப்ரெண்டை பார்த்தேனோ அப்ப இருந்தே அவருக்கா தான் இங்க படிக்கறேன். அவர பார்க்க தான் தினமும் வரேன். அவர் இல்லைனா…” என உருக்கமாய் சொல்லி விசும்பியவளை இரக்கம் பொங்க பார்த்தான் சக்தி.
“நீ சொல்றது புரியுதும்மா, ஆனா இது நடக்காது…” என வருத்தமாய் சொல்ல உள்ளுக்குள் புகைந்தது பிரஷாந்திக்கு.
“நீங்க கூட எனக்கு உதவ மாட்டீங்களா?…”
“ம்ஹூம், இந்த விஷயத்துல என்னால எதுவும் பண்ண முடியாதும்மா…”
“நீங்களே இப்படி சொல்லிட்டீங்களே? என்னோட ப்ரெண்ட்ஸ் கூட அவர் கோபக்காரர், ஈகோ புடிச்சவர், இது வேண்டாம்னு எவ்வளவோ சொல்லி பார்த்தாங்க. ரொம்ப முரட்டு சுபாவம், பேச கூட மாட்டார்ன்னு. ஆனா என்னால என் மனசை மாத்திக்க முடியலையே…” என்று முகத்தை மூடிக்கொண்டு அழ சக்திக்கு பதட்டமானது.
“இந்தாம்மா, அழாத, யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க. முதல்ல கண்ணை துடை நீ. ஹாஸ்டல் கிளம்பு…” என அவளை அனுப்ப பார்க்க,
“உங்களை நம்பி தானே சொன்னேன்? எனக்காக அவர்கிட்ட பேசி பார்க்க கூடாதா நீங்க?…” என பிரஷாந்தி மீண்டும் கேட்டாள்.
அவளின் பிடிவாதத்திலும், அழுத்தத்திலும், அழுகையிலும் வேலியில் ஓடுவதை பிடித்து சட்டைக்குள் விட்ட தினுசில் அவஸ்தையாய் நெளிந்தவன் ஒருவாறாக தலையை ஆட்டிவைத்து அனுப்பிய பின் தான் மூச்சே வந்தது சக்திக்கு.
“ப்ரெண்ட்ஸ்க்கு தெரிஞ்சிருக்கா? இவனுக்கு இது தெரிஞ்சா என்னை கொன்னே போடுவானே?…” என புலம்பியபடி மரத்தடியிலேயே அமர்ந்திருக்க லைப்ரேரியில் இருந்து சக்தியை தேடி வந்த விதுரனோ,
“என்னடா மந்திரிச்சு விட்ட மாதிரி உட்கார்ந்திருக்க?…” என்று கேட்டவனிடம் ஒன்றுமில்லை என்று தலையாட்டி கிளம்பினான் சக்தி.
விதுரன் வீட்டில் தான் சக்தி தங்கியிருந்து படித்துவந்தான். அதனால் இருவரும் சேர்ந்தே கிளம்பிவிட சக்திக்கு இது அவனிடம் எப்படி சொல்வதென்று பயமாய் வந்தது.
பிரஷாந்தியோ விதுரனிடம் சக்தி சொல்வானா மாட்டானா என்னும் மனநிலையில் இருந்தாள். உண்மையில் அந்த கல்லூரி அவளுக்கு பிடித்துதான் இருந்தது.
சேகரன் தான் இத்தனை தூரம் வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டுமா என்று கேட்டு மறுக்க பாவமாய் முகத்தை வைத்து அமர்ந்திருந்தவளுக்காக விட்டுகொடுத்தார் அவர்.
படிப்பை கூட அத்தனை சிரத்தையுடன் அவள் படிக்க காரணம் தன் வகுப்பில் தான் தான் முதலில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே. எங்கும் தன்னை மட்டுமே உயர்த்தி பேசவேண்டும் என்னும் நினைப்பு அவளுக்கு படிப்பை அள்ளி கொடுக்க மெரிட்டில் மருத்துவத்தில் கிடைத்தும் மறுத்து பொறியியல் சேர்ந்தாள்.
வந்ததில் இருந்து விதுரன் புராணம். இந்த கல்லூரியில் அவன் அப்படி, அவன் இப்படி என்ற பேச்சு அவனை பார்க்க வைத்தது. அவனின் அலட்சியம் பிடித்தது. தன்னை போல் ஒருவன் என்ற எண்ணம் அவளுக்குள் அவன் மீதான காதலை விதைக்க உண்மையாகவே அவனை விரும்பினாள் பிரஷாந்தி.
யாருக்காகவும் அவனை காதலிக்கவில்லை. அவனை தனக்காக மட்டுமே விரும்பினாள். அதற்காகவே சக்தியிடம் மெது மெதுவாய் நட்பு பாராட்ட ஆரம்பித்தாள்.
எதுவும் நினைத்ததும் கிடைத்தே பழக்கப்பட்ட பிரஷாந்தி விதுரன் தன்னை மறுக்க எந்த காரணமும் இருக்கபோவதில்லை என நினைக்க அவனோ முகம் பார்க்க கூட மறுத்தான்.
அவனையும் பார்க்க வைத்து அவனே அழைத்து பேசவும் வைத்தான் அவள். இதை சக்தியே அவளிடம் எதிர்பார்க்கவில்லை.
“என்னம்மா இப்படி பண்ணிட்ட?…” என சக்தி கோபமாய் வந்து கேட்டவன் அவளின் முகம் பார்த்து தன் கோபத்தை குறைத்தான்.
“என்ன பண்ணேன் அண்ணா? சொல்லாம பேசினா எனக்கெப்படி புரியும்?…” என்று கேட்க,
“உன்னை ப்ரப்போஸ் பண்ணின பையன்கிட்ட விதுரனை விரும்பறதா சொல்லிருக்க. அதை எச்.ஒ.டி பார்த்து என்னன்னு கேட்க அவர்கிட்டையும் அதையே சொல்லியிருக்க. என்ன நினைச்சு இப்படி பண்ணின?. இப்ப காலேஜ் ஃபுல்லா பேசறாங்க. உனக்கும் பேர் கெட்டுச்சு…”
“வந்து அண்ணா அந்த பையனை அவாய்ட் பண்ண எனக்கு வேற வழி தெரியலை. அதான்…”
“இது என்னவோ நம்பற மாதிரியே இல்லையே. ஒரு ப்ரபோசலை அவாய்ட் பண்ண இதுதான் வழியா? நீ பெரிய தப்பு பண்ணிட்ட…” என்று அதிருப்தியுடன் சக்தி முகத்தை சுளிக்கவும் பிரஷாந்திக்கு தெரிந்துபோனது இனி அவனிடமிருந்து தனக்கு எந்த உதவியும் வராதென்று. பதில் பேசாமல் அவள் நகர,
“நில்லும்மா, விது உன்னை பார்க்கனும்னு சொல்லிட்டிருந்தான். அவன்கிட்ட ஏடாகூடமா பேசிடாதே அதை சொல்லத்தான் உன்னை கூப்பிட்டேன்…” என்றதும் மிதப்பாய் அவனை பார்த்தாள் பிரஷாந்தி.
ஒரு நொடி சக்தி அயர்ந்து நின்றான். என்ன பார்வை இது? இதுவரை பச்சை குழந்தை போல பார்த்த பெண்ணிடம் படையெடுக்கும் நாகத்தின் வெற்றி பார்வை போல.
“சொல்லிட்டீங்கள்ள, நான் பார்த்துக்கறேன்…” என்று பட்டென சொல்லிவிட்டு விதுரனை தேடி செல்ல அவன் அவனின் க்ளாஸ் ரூமில் தான் அமர்ந்திருந்தான். அவன் மட்டும் அமர்ந்திருந்தான்.
“ஹாய்…” என இவள் போய் நின்றதும் புருவம் சுருக்கி அவளை பார்த்தவன்,
“யார் நீ?…” என்றான் வெடுக்கென்று.
“நான் பிரஷாந்தி…” என்றதுமே விருட்டென இருக்கையில் இருந்து எழுந்தவன்,
“நீ தான் அந்த ரூமரை கிளப்பி விட்டதா? என்ன துணிச்சல் உனக்கு?…” என்று எடுத்த எடுப்பில் அவன் எகிற பிரஷாந்தி நிதனித்தாள்.
“ரூமர் எல்லாம் இல்லை. நிஜமா தான் சொன்னேன். எனக்கு உங்களை பிடிக்கும். அதத்தான சொன்னேன்?…”
“உனக்கு பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்ன? என்னையும் சேர்த்து ஏன் இழுத்து விட்ட? என்ன சொல்லியிருக்க நீ? நானும் நீயும் போய். ச்சே…” என வார்த்தையாக கூட அவளோடு தன்னை சேர்த்து பேச பிடிக்காமல் விதுரன் கொந்தளிக்க,
“நான் உங்களை விரும்பறேன். அதை தானே சொன்னேன்? அதுல எந்த தப்பும் எனக்கு தெரியலை…” அவளும் அழுத்தம் திருத்தமாய் சொல்லியதையே சொல்ல சக்தி வந்துவிட்டான். ஆனால் உள்ளே செல்லாமல் வெளியில் நிற்க,
“நீ விரும்பறது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா அது நானா இருக்கறது எனக்கு பிடிக்கலை. இந்த உளறலை இத்தோட நிறுத்திட்டு படிப்பை பாரு. இன்னொருவாட்டி வேற யார்ட்டயாவது இப்படி சொல்லி உன் பேரோட என் பேர் அடிபட்டுச்சு, தொலைச்சுடுவேன் உன்னை…” என விரல் நீட்டி எச்சரிக்க அவனருகே வந்தவள்,
“ம்ஹூம், மாட்டேன். என்னால உங்களை மறக்க முடியாது விதுரன். கொஞ்சம் என்னை கன்ஸிடர் பண்ணுங்க. என்னை யோசிங்க. கண்டிப்பா பிடிக்கும்…” என்று இன்னும் நெருங்கி வந்து அவனின் கையை பிடிக்க உதறியவன்,
“வெக்கமா இல்லையா உனக்கு? சக்தி சொன்னான் வெளியூர்ல இருந்து படிக்கிறன்னு. இதுக்குத்தான் இங்க வந்து சேர்ந்தியா நீ? வந்த வேலையை பார்க்காம…” என்று எரிந்து விழ சட்டென அவனிடம் பேசும் முறையை மாற்றினாள் அவள்.
“நீங்க என்ன வேணா சொல்லுங்க. என்னால உங்களை மறக்க முடியாது. உங்க காதல் கிடைக்க நான் என்ன வேணாம் செய்வேன். கண்டிப்பா…” என்றவளின் அர்த்தம் பொதிந்த வார்த்தை விதுரனின் ஆத்திரத்தை கிளப்ப அறைந்துவிட்டான் கன்னத்தில்.
“இதை போய் சொல்லு யார்ட்ட வேணாலும். எனக்கு பயமில்லை. ஆனா இந்த உளறல் இதுவே லாஸ்ட்டா இருக்கனும். புரியுதா? பீ கேர்ஃபுல்…” என்று மிரட்டிவிட்டு செல்ல அங்கே சக்தி நின்றிருந்தான்.
“இவளுக்கா தான என்கிட்டே பேச வந்த. பாரு இவ லட்சணைத்தை. என்ன பேசினா கேட்ட தான?…” என்று அவனையும் திட்டிவிட்டு செல்ல சக்தியும் அவனுடனே சென்றான்.
அறையை வெளியே வந்த பிரஷாந்தி வெளியே ஐந்தாறு பேர் விதுரனின் உடன் பயிலுபவர்கள் நிற்க அவமானமாய் நினைத்தாள் தன்னிலையை. கோபமும் ஆத்திரமும் போட்டிப்போட இதை இப்படியே விட கூடாது, முன் வைத்த காலை பின் வைக்க கூடாதென்னும் முடிவுடன் ஹாஸ்டல் சென்றாள்.
விதுரனின் எண்ணிற்கு அழைத்தவள் மன்னிப்பு கேட்டு பேச முதலில் இவளுக்கு எப்படி தன் நம்பர் கிடைத்தது என யோசித்து பேச்சை தவிர்க்க நினைக்க அழுது மன்னிப்பை கேட்டாள்.
அவளுக்கு சில புத்திமதிகள் சொல்லி போனை வைத்தவன் இனி அவள் தன்னை நினைக்காமல் இருந்தாள் சரி என்னும் மனநிலைக்கு வந்தான். ஆனால் அதற்கு நேர்மாறாய் சிந்தித்துக்கொண்டிருந்தாள் பிரஷாந்தி.
அங்கே தனது அறை பெண் பிரஷாந்தியின் கன்னத்தை பார்த்துவிட்டு என்னவென்று கேட்க நடந்ததை அவளிடம் சொல்லிய பிரஷாந்திக்கு ஆறவே இல்லை.
“இதை விட முடியாது பிரேமி, அவன் என்னைத்தான் கல்யாணம் பண்ணி ஆகனும். என்னால அவனையும் விட முடியாது. அவன் அவமானப்படுத்தினதையும் விட முடியாது…” என்று கோபமாய் சொல்ல,
“கல்யாணமா?…” என திகைத்த தோழி,
“முடிவே பண்ணிட்டியா? இது எப்படி ஒத்துவரும்…” என கேட்க,
“அதுதான் யோசிக்கறேன். நீ ஏதாவது ஐடியா சொல்லேன்…” என கேட்டவளுக்கு அவளுக்கே ஒரு யோசனை உதிக்க,
“எனக்கு தெரிஞ்சிருச்சு. நான் பார்த்துக்கறேன்…” என்ற பிரஷாந்தி தன் தந்தைக்கு அழைக்க சேகரன் கிளம்பி வந்துவிட்டார் மறுநாள் நேராக கல்லூரிக்கே. மகள் விஷயம் என்பதால் வேறு யாரிடமும் எதுவும் பேசாமல் தான் மட்டும் கிளம்பி வந்தார்.