இருவரும் வரும் போது கதவு லேசாய் திறந்து தான் இருந்தது. அப்பொழுது தான் ஸ்ரீநிதி பேச ஆரம்பித்திருந்தாள். காலிங் பெல்லை அடிக்கும் முன்பு விதுரன் தடுத்துவிட ஸ்ரீநிதி மனதில் உள்ளதை தெரிந்துகொள்ளும் ஒரு ஆர்வத்தில் சக்தியும் அமைதியாக நின்றுவிட்டான். அனைத்தையும் கேட்டுவிட்டான்.
அவனின் வரவை எதிர்பாராதவள் டைனிங் டேபிளில் இருந்து தடுமாறி எழுந்து நிற்க சக்தியின் முகத்தில் பயங்கரமான கோபம்.
“ஆமா யார் நீ என் மேரேஜ் பத்தி பேசறதுக்கு? உன்கிட்ட வந்து கேட்டேனா? இல்லை என் பையனுக்கு அம்மாவா இருன்னு சொன்னேனா? உன்னோட லிமிட் உன் வீட்டு வாசல்ல தட்டை விட்டெறிஞ்சு என்னை வெளியே இழுத்துட்டு போய் தள்ளின பாரு அத்தோட முடிஞ்சது…”
“சக்தி…” என விதுரன் அமைதிப்படுத்த பார்க்க,
“நீ சும்மா இருடா, யாரை கேட்டு கண்ணனை இங்க கூட்டிட்டு வந்தீங்க?…” என்று எரிச்சலாக,
“யாரை கேட்கனும்? நான் தான் கூட்டிட்டு வந்தேன். ஏன் கூடாதா?…” ரோஜா வந்து கேட்கவும் சட்டென அமைதியானவன் குறையாத கோபத்துடன் அப்படியே நிற்க,
“ஸார் இந்தாங்க தண்ணி, ரொம்ப கோபமா இருக்கீங்க? தண்ணி குடிச்சுட்டு உட்காருங்க ஸார்…” என சங்கவி அவனுக்கு தண்ணீர் கொடுக்க அவளை முறைத்தவன்,
“கண்ணன் எங்க?…” என்றதும்,
“குழந்தை தூங்கறான். இவ்வளோ நேரம் நல்லா விளையாண்டான். அதான்…”
“போய் குழந்தையை தூக்கிட்டு வாங்க…” என்று சொல்ல,
“சக்தி ரொம்ப பண்ணாதடா. உட்கார் முதல்ல…” என்று அவனை அமர்த்தி அவனருகே விதுரனும் அமர்ந்துவிட,
“விடு விது, இப்ப கூட இந்தம்மா நான் தான் அவனை இங்க அனுப்பிச்சேன்னு பழி போட்டாலும் ஆச்சர்யமில்லை. போடுவாங்க….” என்று ஸ்ரீயை பார்த்து பல்லை கடிக்க,
“என்ன பேச்சு ரொம்ப அதிகமா போகுது? என்ன பழி போட்டேன் நான்? வந்ததும் வா போன்னு பேசினீங்க, இப்ப அந்தம்மா இந்தம்மான்னு பேசறீங்க?…” என்று மூக்கை விடைத்துக்கொண்டு ஸ்ரீ பொங்க,
“அப்ப பேசினதுக்கு மேடம்க்கு கோபம் இல்லை போல…” என்று சக்தியும் நக்கலாய் சொல்ல அவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் சிரிக்க ஸ்ரீக்கு ஆத்திரமாய் வந்தது.
“கண்ணன் இங்க தான் இருப்பான். இத்தனை வருஷம் நீங்க பார்த்தீங்க தானே? இனி என்னோட அவன் இருக்கட்டும்…” ஸ்ரீ சொல்லவேண்டும் என்று எல்லாம் இல்லாமல் அவளறியாமல் வார்த்தைகள் வந்துவிட்டது.
“என்ன உரிமை கொண்டாடுறீங்களோ? இத்தனை வருஷம் வளர்த்த எங்களுக்கு இனியும் வளர்க்க தெரியும். உங்க வேலையை நீங்க பாருங்க…” சக்தியும் இதுதான் சாக்கென்று அவளை பந்தாட ஸ்ரீக்கு பதில் சொல்ல முடியவில்லை.
பார்த்த இடத்திலெல்லாம் சக்தியை அத்தனை அலட்சியப்படுத்தினாள். பேசும் நேரம் அவமதித்தாள். இன்று அவை எல்லாம் சேர்ந்து அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைக்க செய்தது.
“ரோஜா சொல்லேன்…” என்று தோழியை பார்க்க,
“கூட்டிட்டு வந்ததுக்கே சக்தி அண்ணா இவ்வளவு கோபப்படறாங்க….”
“அண்ணாவா? இது எப்போதிருந்து?…” என்று ஸ்ரீ வாயை பிளக்க,
“என்னவோ நீ எல்லாம் சொல்லி அவ ஒன்னும் சொல்லாத மாதிரி பேச்சை மாத்தாத. இப்ப இந்த விஷயத்துக்கு வா…” என்று சங்கவி அவளின் தலையில் தட்ட நடப்பவற்றை விதுரன் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“சரிடா கிளம்புவோமா?…” என்ற விதுரன்,
“ரோஜா லெட்ஸ்…” என்று சொல்லி முடிக்கும் முன்,
“ஸாரி ஸார், ப்ளீஸ், கொஞ்சம் நேரம் ரோஜா இருக்கட்டும்…” என ஸ்ரீ பதற,
“ஓகே அப்போ நான் கிளம்பறேன்…” என்று எழுந்துகொண்ட விதுரன்,
“சக்தி…” என்றதும் அவன் சங்கவியை பார்த்தான்.
“போய் பையனை தூக்கிட்டு வாங்க சங்கவி, நேரமாகுது…” என்று சொல்ல,
“அவன் இன்னைக்கு இங்க இருக்கட்டும்….” என்று ஸ்ரீ வேகமாய் பதில் சொல்ல,
“இன்னைக்கு ஒரு நாள் இருந்தா இதை அடிக்கடி எதிர்பார்ப்பான். என்னால சமாளிக்க முடியாது. இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும் அவன் இங்க வரது. இது அவனுக்கும் நல்லதில்லை உனக்கும் நல்லதில்லை…” என உறுதியாக சொல்லியவன்,
“இஃப் யூ டோண்ட் மைண்ட்…” என்று சொல்லி வேகமாய் ஒரு அறைக்குள் சென்று அங்கில்லாமல் இன்னொன்றில் தேட அங்கே இருந்தான் குழந்தை.
அவனை பார்த்ததும் முகம் கனிந்துவிட மெதுவாய் அவனின் முகத்தை வருடியவன் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வெளியே வர ஸ்ரீநிதிக்கு கண்ணனை அணைத்துக்கொள்ள மாட்டோமா என்றிருந்தது.
அவளின் தவிப்பு அப்பட்டமாய் கண்களில் வெளிப்பட அதனை உணர்வின்றி பார்த்தான் சக்தி. ஆம் இனி ஸ்ரீ விஷயத்தில் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
“தேங்க்ஸ் & பை…” என்று நகரும் பொழுதே குழந்தை விழித்துக்கொள்ள மெல்ல நிமிர்ந்து சக்தியை பார்த்ததும்,
“சக்திப்பா…” என்று சொல்லி தூக்க கலக்கத்தில் அணைத்தவன்,
“அம்மா வேணு, அம்மா அழா. அம்மா வேணு…” என்று சொல்ல சக்தியின் உள்ளம் உருகியது.
அதுவரை சக்தியை நெருங்காமல் தள்ளி நின்ற ஸ்ரீ வேகமாய் வந்து குழந்தையை வாங்கிக்கொண்டவள்,
“அம்மா இருக்கேன் கண்ணா, இங்க தான் இருக்கேன்…” என்று அவள் கொடுத்த அழுத்தத்தில் முற்றிலும் உறக்கம் கலைந்தவனாக கண் விழித்தவன்,
“அம்மா, சக்திப்பா,அம்மா நம்ம வீட்டுக்கு…” என்று அவனை அழைத்து செல்ல சொல்ல சக்தி பதில் சொல்லாமல் ஸ்ரீயை தான் பார்த்தான்.
“அம்மாவுக்கு நம்ம வீட்டுக்கு வர பிடிக்காது கண்ணா. இனி அம்மாவு டிஸ்டர்ப் பண்ண கூடாது. வா போகலாம். அப்பா இருக்கேன்ல…” என்றவனின் பேச்சில் குழந்தை மாறி மாறி இருவரையும் பார்த்த பார்வை அத்தனை பரிதாபமாய் இருக்க,
“விது என்னால முடியலடா. இனி இவனை நான் எப்படி சமாளிக்க. இந்த முகத்தை இப்படி பார்க்க முடியலை. அவனுக்கு என்னால புரிய வைக்கவும் முடியாது. நான் என்னடா பண்ண போறேன்?…” என்றவனின் பேச்சு ஸ்ரீயை உறுத்தியது.
கண்ணனை கட்டிக்கொண்டு அவள் அப்படியே அமர்ந்திருக்க சற்று நேரம் பொறுத்த ஸ்ரீ,
“என்னால யாரையும் கட்டாயப்படுத்த முடியாதுடா. அதுக்காக என் பையனை வச்சு கேம் ஆட நான் அனுமதிக்கவும் முடியாது. இது என்னோட கான்ஷியஸ் இல்லாம நடந்த ஒன்னு. இனி இப்படி நடக்க விடமாட்டேன் கண்டிப்பா….” என்றவன் ஸ்ரீயை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“இனி யார் லைப்லையும் நானும் இல்லை, கண்ணனும் இல்லை. நான் கிளம்பறேன்டா…” என்றவன் கண்ணன் கத்த கதற அவனை தூக்கிக்கொண்டு வேகமாய் வீட்டை விட்டு வெளியேறிவிட அப்படியே இடிந்துபோய் அமர்ந்திருந்தாள் ஸ்ரீநிதி.
“ரோஜா நீ இங்க இரு. நான் அவனை ட்ராப் பண்ணிட்டு உனக்கு கால் பன்றேன். கீழே வா…” என சொல்லி விதுரன் சென்றுவிட சற்று நேரம் அங்கே எந்த பேச்சுக்களும் இல்லை.
ஸ்ரீநிதி அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருக்க ரோஜாவும் சங்கவியும் அவள் யோசிக்கட்டும் என்று அமைதியாக இருந்தனர். அரைமணி நேரம் சென்ற பின் ஸ்ரீ எழுந்து சென்று முகத்தை கழுவிவிட்டு வர,
“என்ன ஸ்ரீ, இப்ப நீ ஓகே தானே?…” என ரோஜா கேட்க,
“ஹ்ம்ம், ஓகே தான். இரு அம்மாட்ட பேசிட்டு வரேன்…” என்றவள் மொபலை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றவள் தாயிடம் பேசி வர,
“என்ன ஸ்ரீ பேசின?…” என ஆர்வம் தாளாமல் சங்கவி கேட்க,
“ஒண்ணுமில்லை, இனிமே கண்ணாவோட பேச வேண்டாம்னு சொன்னேன். அவனுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்னு தான்…” என்று சொல்ல ரோஜாவிற்கு அவளை அமர வைத்து தலையில் நூறு கொட்டுக்கள் கொட்டலாமா என்று இருந்தது.
ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அவள் எடுத்த முடிவு சரி என்பதை போல பேசிவிட்டு வீட்டிற்கு வந்தவள் பொருமி தள்ளிவிட்டாள் விதுரனிடம்.
“சரியான பிடிவாதம்ங்க ரெண்டும். அவ வடக்க இழுத்தா சக்தி அண்ணா தெற்க இழுக்காரு. ஊடால கயித்தை பிடிச்சிட்டிருக்க நாம தான் கீழே விழனும்…” என்று குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டே அவள் பேச,
“உன் உழைப்பெல்லாம் வீணா போய்டுச்சோ?…” என்று விதுரன் உச்சுக்கொட்ட அவனை திரும்பி பார்த்து முறைத்தவள்,
“யார்க்கிட்ட? இந்த ரோஜா நினைச்சு நடக்காம போய்டுமா? பார்த்துட்டே இருங்க அங்கிள்…” என்றவளை இழுத்து மடியில் அமர்த்தியவன்,
“பார்த்துட்டே தான் இருக்கேன். நீ தான் பார்க்கறதில்லை…” என்று சில்மிஷம் பேச,
“டைவர்ட் பண்ண கூடாது. இல்ல செம்ம கடியாகிடுவேன்…” என்று அவனை எச்சரித்து கண்களை மூடியவள்,
“ஐடியா?…” என்று குதிக்க,
“இன்னொன்னா?…” என்றவனிடம் பதில் சொல்லாமல் இருக்க,
“என்ன ஐடியா?…” என்றான் அவன் மீண்டும்.
“உங்கக்கிட்ட சொன்னா பலிக்காது. அதனால சொல்லமாட்டேன். இப்ப போய் தூங்கறேன்…” என்றவள் உறங்க சென்றுவிட அதற்குள் அழைப்பிதழ்கள் வைப்பது பற்றி பேச கயல்விழி அழைத்துவிட்டார் அவனுக்கு.
கண்ணன் வந்து சென்று ஒரு வாரம் தான் கடந்திருந்தது. அதை கடக்கவே பெரும்பாடுபட்டு போனாள் ஸ்ரீ.
அவள் தான் வீட்டில் கண்ணனுடன் பேச வேண்டாம் என்றது. ஆனாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது அவளுக்கு.
பேசுகிறார்கள், ஆனால் தன்னிடம் அதை பற்றி சொல்வதோ முன்பு போல வீடியோ, போட்டோ என்றும் எதையும் அனுப்புவதோ கிடையாது. அந்த ஒரு வாரத்திலேயே எதையோ இழந்ததை போல உணர்ந்தாள்.
பழைய வீடியோக்கள், போட்டோக்கள் என்று கண்ணனை சுற்றியே அவளின் எண்ணங்கள் வட்டமிட்டுக்கொண்டு இருக்க அதனை கவனித்து சங்கவி ரோஜாவிடம் சொல்ல,
“அவ பார்க்கட்டும், நீ ஏன் பீல் பன்ற? அவளை டிஸ்டர்ப் பண்ணாத. டைவர்ட் ஆனா அவ லைஃபையும் தொலைச்சிட்டு சக்தி அண்ணா, கண்ணா ரெண்டுபேரையும் தொலைச்சிடுவா. நீ கொஞ்சம் பேசாம அவளை கவனி…” என்று சொல்லியிருக்க ஸ்ரீயை பார்க்க சங்கவிக்கு பாவமாக இருந்தது.
சரியாக சாப்பிடுவது கூட இல்லை. ஏதாவது மெசேஜ் வந்துவிட்டாலே கண்ணனாக தான் இருக்குமோ என்று தேட ஆரம்பித்தவள் பைத்தியம் பிடிப்பதை போல உணர தாய்க்கு அழைத்துவிட்டாள்.
“நீ சொன்னதுல இருந்து நான் பேசறதே இல்லைம்மா…” என சொல்ல,
“பொய் சொல்லாதீங்க…” என்று எரிச்சலாக பேசினாள்.
“ஆமா பேசறோம் தான். உனக்கு தெரிஞ்சா திட்டுவன்னு சொல்லாம மறைச்சேன். உனக்கு தான் பிடிக்காதுல…” என்றவர் கூடுதலாக,
“முன்னை போல ரொம்ப கலகலப்பு இல்லை குழந்தைட்ட. அம்மா அம்மான்னு ரொம்ப ஏங்கி போய் இருக்கான். உடம்புக்கு முடியலையோ என்னவோ, மெலிஞ்சா மாதிரி இருக்கான். ஸ்ரீ அம்மா ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்ட தான? அங்க கிளம்பி வரட்டுமா? ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்தா மனசு ஆறும்…”
அவர் பேச பேச ஸ்ரீயின் கண்களில் கண்ணீர். ஏன்தான் அவனை நேரில் பார்த்தேனோ என்று மனதினுள் அரற்றியவள்,
“அம்மா, எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம். ஆனா ஒரே ஒரு கண்டிஷன். நான் அந்த வீட்டுல போய் இருக்க மாட்டேன். அவ்வளோ தான்…” என்று இவள் சொல்லியிருக்க அன்று மாலையே ஸ்ரீக்கு போன் செய்து சக்தி கத்தியிருந்தான்.
“நினைச்சா வேண்டாம்னுவ, நினைச்சா சரின்னு சொல்லுவ. போதாதுக்கு கண்டிஷன் வேறையா? ஒன்னும் தேவையில்லை. உனக்கு வந்து இருக்க முடியாதுன்னா நானும் என்னை பெத்தவங்க, கூட பொறந்தவன்னு எல்லாரையும் விட்டுட்டு வரனுமா? தேவையே இல்லை போடி…” என்று சொல்லியிருந்தான்.
ஸ்ரீநிதிக்கு அதனை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. முதலில் இவனை திருமணம் செய்துகொள்வதே பெரிது, இதில் கோபம் வேறையா இவனுக்கு? என்று நினைத்தாள்.
அதன் பின் அவனின் பக்கம் இருந்து யோசித்தவள் பின் இனி அவனின் முடிவு அவனின் இஷ்டம் என்றுவிட்டாள். இனி இதனை பற்றி பேசுவதாக இல்லை என்ற எண்ணத்தில் ஸ்ரீநிதி.
அவர்கள் இருவரின் பெற்றோர்கள் மூலமாக விஷயம் ரோஜாவின் காதுக்கு வரவும் சக்தியிடம் பேசிய ரோஜா,
“முதல்ல ஸ்ரீ பக்கமும் நீங்க யோசிங்க அண்ணா. அவளோட இழப்பு ரொம்ப பெருசு. இதை எல்லாம் தாண்டி அவ சரின்னு சொன்னதுக்கு காரணம் கண்ணன் மட்டுமே. இப்போதைக்கு கல்யாணம் முடியட்டும். அதுக்கு பின்ன உங்க குடும்பத்தை அவளோடதா உணர்த்த வேண்டியது உங்களோட கடமை…”
இப்படி அப்படி பேசி ஒரு கல்யாணத்தையே பேசி முடித்துவிட்டாள் ரோஜா. சக்தி, ஸ்ரீநிதி இருவரின் குடும்பம் மட்டும் திருமணம் விஷயங்கள் பேசி நிச்சயம் ஒன்றை எளிமையாக நடத்தியிருக்க சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதையோ பேசுவதையோ தவிர்த்தனர்.
இதற்கிடையே கடை திறப்புவிழாவும் அமோகமாய் சிறப்பாய் மிகப்பெரிய அளவில் நடந்து முடிந்தது. கடையின் பொறுப்பு விதுரன், ரோஜா, சக்தியிடம். மெயின் பிரான்ச் ஆக மாற்றியிருந்தனர்.
அன்று வெளியில் சென்றுவிட்டு கடைக்கு வந்த விதுரன் அங்கே ரோஜாவை காணாமல் சூப்பர்வைசரிடம் கேட்க அவரோ ரோஜா கிளம்பி சென்று இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது என்றார்.
அவளுக்கு அழைத்து பார்த்தவன் மூன்று முறைக்கு பின்னர் அவளின் அழைப்பு ஏற்கப்பட,
“என்ன ரோஜா இப்படி பன்ற? எங்க போன? சொல்லாம் வேற போய்ருக்க?…” என்று படபடக்க,
“ப்ரெண்டை பார்க்க வந்தேன். இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுக்கு வந்திருவேன் அங்கிள்….” என்று சொல்ல,
“வீட்டுக்கா? ஏன்? இங்க வா…” என சொல்ல,
“ம்ஹூம் நான் வீட்டுக்கு போறேன். நீங்க முடிச்சுட்டு வாங்க…” என சொல்லி வைத்துவிட விதுரன் சில நிமிடங்கள் நெட்டி தள்ளியவன் அதற்கு மேல் முடியாமல் சக்தியிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் வீட்டிற்கு.
அப்போது தான் ரோஜாவும் ஆட்டோவில் வந்து இறங்க அவளை பார்த்துக்கொண்டே வீட்டை திறந்தவன் கோபத்துடன் உள்ளே வந்து அவளை கேள்வி கேட்கும் முன் வேகமாய் சென்று தண்ணீரை பருகியவள்,
“டயர்டா இருக்கு….” என சொல்லி தனது ஹேண்ட்பேக்கில் இருந்தவற்றை மொத்தமாய் எடுத்து டைனிங்டேபிளில் வைக்க அனைத்தும் மெடிக்கல் சம்பந்தமான மாத்திரைகள், ரிப்போர்ட்ஸ் என்று இருக்க,
“என்ன இதெல்லாம் ரோஜா?…” என்றான் புரியாமல்.
“இதை பாருங்க…” என்று விரல் நடுங்க ஒன்றை எடுத்து நீட்டியவள்,
“இப்போ கன்பார்ம், எல்லாருக்கும் சொல்லலாமா? இதையுமே வேற யார்ட்டையும் சொல்லாம இருக்க முடியாதுல. உங்களுக்கு கண்டிப்பா சொல்லனும் தானே?…” என அவனிடம் கேட்டுவிட்டு அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொள்ள அவளை தடுக்கமுடியாமல் அவனை தடுத்திருந்தது அவள் கொடுத்து சென்றிருந்த விஷயம்.
அது கர்ப்பத்தை உறுதி செய்யும் ப்ரெக்னேன்சி கிட். டேபிளில் அவளுக்கு எடுத்த டெஸ்ட்களுக்கான ரிப்போர்ட். பார்த்தவனுக்கு ஒருவித பரவசம் ஆட்கொள்ள,
“ரோஜா…” என்றவனின் சத்தம் அவளை அடையவே இல்லை.
இத்தனை நாள் குழந்தை என்று பேசும் பொழுதெல்லாம் அமைதியாக இருந்தவளின் மனதில் இருந்த உறுத்தல் என்னவென்று இன்று புரிந்துபோனது அவனுக்கு.