“போ போ, சும்மா மூஞ்சியை தூக்கி வச்சிட்டு. டாக்டர் மாதிரி இரு…” என்று உசுப்பேற்றி அனுப்பினான்.
“அக்கா, நானும் ஹர்ஷியும் வெளில இருக்கோம். மாமா வந்தா சொல்லனும் தானே?…” என்று நாசூக்காய் அவர் மகளுடன் சென்றுவிட்டார்.
அதன் பின் பொதுவான கேள்விகளுக்கு பின் ரோஜாவை அழைத்துக்கொண்டு பரிசோதிக்க உள்ளே சென்றவர் சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே வந்தார்.
“நீ வெளில இரும்மா…” என்று அவளை அனுப்ப ரோஜா விதுரனின் முகம் பார்த்தாள்.
“நான் பேசிட்டு வந்து உன்கிட்ட சொல்றேன்…” என்றதும் தான் வெளியே வந்து அமர்ந்தாள்.
அதன் பின்னர் தான் டாக்டர் கேட்ட கேள்விகளுக்கு பதில்களை சொன்ன விதுரனிடம்,
“நல்ல பொண்ணு, ஆனா நிறைய பயம் இருக்கு. அவங்க கேள்விகள் எல்லாமே ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருக்கு. வீட்ல நார்மலா எப்படி இருப்பாங்க?…” என கேட்டு அவளின் பயம், அவளிடம் பேசியதில் இருந்து தான் யூகித்த சில விஷயங்கள் என அவன் சொல்ல,
“அவங்க ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸா பீல் பன்றாங்க. தைரியமா காட்டிக்கறாங்க. ஆனா ரொம்ப சென்ஸிட்டிவ். அவங்களை நிறைய பேச வைங்க. மனசு விட்டு பேசுங்க. அது ஒண்ணுதான் ப்ராப்ளம். மத்தபடி எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க மனசளவில் அமைதியா இருந்தா தான் குழந்தையும் ஆரோக்கியமா பிறக்கும்…”
“அதோட போன மாதமே வந்திருந்தா தெரிஞ்சிருக்கும். அந்த பொண்ணு கவனிக்கலை. உடம்பில எந்த சிம்டம்ஸ் எதுவும் இல்லாம இருந்ததால உங்க யாருக்கும் ஏன் அவங்களுக்கே தெரியலை. ரெண்டு மாசம் ஆகியிருக்கு தள்ளி போய். அது கூட அந்த பொண்ணு புரியலை…”
“இப்பவும் தானா தான் போய் செக் பண்ணிருக்கு எதுக்கும் பார்த்திடலாமேன்னு. இல்லைனா சொல்லிருக்கமாட்டாங்க. கொஞ்சம் கவனமா பாருங்க…”
இப்படி இன்னும் சில அறிவுரைகளும் ரோஜாவை பார்த்துக்கொள்ளும் முறைகளும் சொல்லி அனுப்ப வெளியே சடகோபனும் வந்துவிட்டார் இவர்களை பார்க்க.
“கொஞ்சம் நாள் நாம இங்க இருந்தா என்ன?…” என்று வந்ததும் சாப்பிட்டு முடித்து மாத்திரைகள் கொடுத்து ரோஜா உறங்கியதும் வெளியே வந்து அவர் கேட்க,
“தாராளமா, இருக்கலாமே?…” என சடகோபனும் சொல்ல,
“ஹைய்யா அப்ப நானும் இங்கதான்…” என ஹர்ஷியும் குதூகலிக்க,
“ஏன் அக்கா, வேணும்னா ரோஜாவை நம்மோட அங்க கூட்டிட்டு போய் நல்லா பார்த்துப்போமே. அங்கனா எல்லாரும் இருப்போம். விது மட்டும் தான் வந்து போகனும்…” என வைத்தீஸ்வரி சொல்ல,
“எனக்கு எதுவும் பிரச்சனை இல்லைம்மா. நான் வரேன்…” என்று அவனும் சொல்ல,
“ஆனாலும் அண்ணா எத்தனை முறை பெரியம்மா சொல்லிருப்பாங்க. கேட்டீங்களா? இப்ப வொய்ப்க்காக வரனும்னு முடிவு பண்ணிட்டீங்க…” என்று ஹர்ஷி கிண்டல் பேச,
“ஷ்ஷ் பேசாம இரு…” என சடகோபன் சொல்லவும் அமைதியாகி கயல்விழியை பார்க்க,
“இல்லை வைத்தீ நான் யோசிச்சுட்டேன். அங்க வந்தா நம்மோட வழக்கத்துக்கு அவ வருவா. நாம வேண்டாம்னு சொன்னாலும் ரோஜா அப்படித்தான். இப்ப அது வேண்டாம். மாசமா இருக்கற பொண்ணு. இங்கன்னா அவ எப்பவும் இருக்கிற மாதிரி இருப்பா. வீக்கென்ட் நாங்க அங்க வரோம்…”
“ரோஜாட்ட கேட்டு பார்க்கலாமே கயல்?…” சடகோபன் கேட்க,
“ம்ஹூம், நாம கேட்டா சரின்னு தான் சொல்லுவா. அவளே கேட்கட்டும். அதுவரை அவ விருப்பம் போல இருக்கட்டும்…” என கயல்விழி சொல்ல,
“வேற எதுவும் பிரச்சனையா கயல்? உன் முகமே சரியில்லையே….” என அவர் கேட்க,
“ச்சே, ச்சே விஷயம் இருந்தா நான் சொல்ல மாட்டேனா? கலகலப்பா பேசுறா இதுதான் நமக்கு தெரிஞ்சது. ஆனா அவளுக்குள்ள எதுவோ இருக்கு. முழுமையான உரிமையை நாம அவளுக்கு குடுத்திருக்கோம். ஆனா அவ அதை உணரவே இல்லையோன்னு தோணுது…”
“கயல்…”
“சரியாகிடும்ங்க…” என்று ஆறுதலாய் சொல்லியவர்,
“நீங்க வைத்தீயை ஹர்ஷியை கூட்டிட்டு போய்ட்டு நாளைக்கு இங்க வாங்க…” என்று சொல்லி,
“வைத்தீ அங்க…”
“நாங்க பார்த்துக்கறோம் அக்கா, நீங்க கவலை படவேண்டாம். ஒன்னே ஒன்னு, அப்பப்ப இங்க நினைச்ச நேரம் ரோஜாவை பார்க்க நாங்க வருவோம்…” என சொல்ல,
“நீ சொல்லனுமா இதை. கண்டிப்பா வா. நீ தான் பார்த்துக்கனும் அவளை…” என்றுசொல்ல சிறிது நேரத்தில் அவர்கள் கிளம்பிவிட்டனர்.
மகனுக்கும் தனக்கும் பால் காய்ச்சி எடுத்து வந்தவர் டீப்பாயில் வைக்க விதுரன் யோசனையுடன் அமர்ந்திருந்தான். அவனிடம் தொழில் சம்பந்தமான பேச்சுக்களை ஆரம்பித்தவர் புது கிளையின் வரவு செலவுகள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தார்.
பேசிக்கொண்டிருக்கும் நேரம் வீட்டின் மொத்தமாய் கரண்ட் கட் ஆகி வீடே இருளில் சூழ,
“என்ன விது, யுபிஎஸ் என்னாச்சு?…” என்று கயல்விழி லேப்டாப்பில் இருந்த வெளிச்சத்தால் மெழுகுவர்த்தியை தேடி எடுத்து பற்ற வைத்தார்.
“ட்ரிப் ஆகிருக்குன்னு நினைக்கேன். நான் பார்த்துட்டு வரேன்…” என மொபைலில் வெளிச்சத்தில் அவன் செல்ல அறையில் ரோஜா விழித்துவிட்டாள்.
“அங்கிள், அங்கிள்…” என்ற அவளின் பதட்டமான குரலில் அடித்துபிடித்து கயல்விழி பதறி ஓடிவர,
“ரோஜா…” என்ற அவரின் குரலில்,
“அத்தம்மா விஸ்கி…” என்று அவள் கட்டிக்கொள்ள உடல் பயத்தில் நடுங்கியது.
விதுரன் பவர் ட்ரிப் ஆகியிருந்ததை சரி செய்துவிட்டு மீண்டும் பவரை ஆன் செய்து வேகமாய் வர கயல்விழியின் அணைப்பில் ரோஜா.
“ஒண்ணுமில்லடா, ரோஜாம்மா ஒண்ணுமில்ல…” என்று சொல்லி,
“விது தண்ணி கொண்டு வா…” என அறைக்குள் அழைத்து சென்று அமர வைத்தவர்,
“என்ன பயம் உனக்கு? வீட்ல நாங்க எல்லோரும் தான இருக்கோம்?…” என சொல்லிக்கொண்டிருக்க விதுரன் தண்ணீரோடு வந்துவிட்டான். கயல்விழி மேலும் எதுவும் சொல்லும் முன் அவரிடம் வேண்டாம் என்பதை போல தலையசைக்க,
“சரி இந்த தண்ணியை குடி…” என்று வாங்கி குடுக்கவும் வேகமாய் பருகினாள் ரோஜா.
“மெதுவா குடி ரோஜா, குழந்தை இருக்குது. மறந்திடாதே…” என்று சொல்லவும் குடிப்பதை நிறுத்திவிட்டு சற்று நேரம் அமைதியாக இருக்க,
“பால் குடிக்கிறியா? ரொம்ப சீக்கிரமாவே சாப்பிட்டு படுத்துட்ட. பசிக்கிற மாதிரி இருக்கா?…” என கேட்டதும் அவள் ஒன்றும் சொல்லாமல் பார்க்க,
“பேசு ரோஜா. இது உன் வீடு, உனக்கு தேவையானதை நீ கேட்கனும். அதிகாரம் பண்ணனும். இதெல்லாம் எப்போ கத்துக்குவ? அப்போ தானே நம்ம வீட்டு வாரிசுக்கு நீ சொல்லி குடுக்க முடியும். இந்த குடும்பத்தோட முதல் வாரிசு. நீயும் எல்லாமே தெரிஞ்சுக்கனும். சீக்கிரமே என் பொறுப்புகளை உன்கிட்ட ஒப்படைச்சுட்டு நான் என் பேர குழந்தைங்களோட செட்டில் ஆக வேண்டாமா?…” கயல்விழி பேச,
“உங்க பொறுப்புகளா? ரோஜா காலி. அத்தம்மா ம்ஹூம். இதுக்கு நீங்க எதுவேணாலும் செஞ்சு குடுங்க. லைட்டா…” என்று டக்கென்று அவள் இலகுவாகி பேச அதுதான் விதுரனுக்கு கவலையாக இருந்தது.
டாக்டர் சொல்லியது போல தனக்கு வருத்தமாக இருக்கும் விஷயத்தை ஆராயாமல் அதை விட்டு வெளியேறி முயன்று தன்னை வேறொன்றில் செலுத்திக்கொள்கிறாள் என்று.
அவன் கயல்விழியை பார்க்க அவர் எழுந்து சென்று இட்லி ஊற்றிவிட்டு சாம்பாரை சூடு செய்தார்.
“அங்கிள்…” என கிசுகிசுப்பான குரலில் ரோஜா அழைக்க அவளருகே வந்து அமர்ந்தவன்,
“ட்ரிப் ஆகிடுச்சு ரோஜா. அதான் பவர் கட் ஆகிடுச்சு. பயந்துட்டியா?…” என அவளின் கையை பிடித்துக்கொண்டு கேட்க,
“ஹ்ம்ம், ஆனா கொஞ்சம் தான். இப்போ ஓகே…” என்றவளின் புன்னகையில் அவளின் கலைந்திருந்த முடியை காதோரம் ஒதுக்கியவன்,
“சரியான பயந்தகோழி, பேச்சு மட்டும் நீளும்…” என்று அவளின் மூக்கை பிடித்து நிமிண்ட,
“பேசாம இருந்தா இந்த உலகம் மதிக்காது அங்கிள்….” என்று சொல்லியவள்,
“பேபியும் பயப்படுமா?…” என கேட்க,
“ம்ஹூம், இப்ப பயப்படாது. ஆனா கொஞ்சம் உன்னை நினைச்சு கவலையாகும். உனக்குள்ள இருக்கற வரைக்கும் நீதான் பார்த்துக்கனும்…” என சொல்லியவன் முகத்தை பார்த்தவாறு அவள் அப்படியே இருக்க கயல்விழி வந்துவிட்டார்.
“ரோஜா இட்லி கொண்டு வந்தேன்…” என வர,
“நானே வந்திருப்பேன்ல…” என்றவள் கயல்விழி முகத்தில் இருந்த கவலையில்,
“ரொம்ப பயம் காட்டிட்டேனா?…” என கேட்டு அவர் மறுக்கும் முன்,
“நானும் நினைப்பேன் அத்தம்மா இதெல்லாம் சும்மா. பயப்பட எதுவும் இல்லை. தைரியமா இருக்கனும்னு. ஆனா என்னை சுத்தி இருட்டாகிட்டா என்னால என்னையே கன்ட்ரோல் பண்ண முடியாது. நான் சொல்றது சைல்டிஷா தான் இருக்கும். ஆனா அதை அனுபவிச்சவங்களுக்கு தான் புரியும். நான் அனுபவிச்சிருக்கேன்…”
“இப்ப பாருங்க, இப்ப எனக்கு எந்த பயமும் இல்லை. பக்கத்துல இருக்கீங்க. சுத்திலும் வெளிச்சம். லைட் ஆஃப் பண்ணிட்டாலும் இதே பாதுகாப்பு தான். புத்திக்கு புரியுது. ஆனா என்னால முடியலை…” என்று சாதாரணம் போல சொன்னாலும் குரலில் அத்தனை வலி.
கயல்விழியிடம் இருந்து பிளேட்டை வாங்கி கொண்டவள் உணவை பார்த்துக்கொண்டே சில நொடிகள் அப்படியே இருந்து பின் அவரை பார்த்து,
“எனக்கு விவரம் தெரிஞ்சு அம்மா ஊட்டினது ரொம்ப கம்மி. கம்மின்றதை விட இல்லைன்னு சொல்லலாம். வளர்ந்துட்டு இருக்கேன். நானா சாப்பிடனும்னு சொல்லுவா விஸ்கி. அப்போலாம் ஆசையா இருக்கும் அம்மாட்ட சாப்டனும்னு. ஆனா நடக்காதே?…”
உருக்கமாய் சொல்லவும் அவளருகே ஒரு குஷனை இழுத்து போட்டு அமர்ந்தவர் பிளேட்டை வாங்கி ஊட்ட ஆரம்பிக்க மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.
“எனக்கு யாராவது சாப்பாடு ஊட்டினா அவ்வளோ பிடிக்கும். ஆனா யார் ஊட்டுவா? எப்போவாச்சும் ஸ்ரீ ஊட்டுவா. அவக்கிட்ட ஆ வாங்கன்னே ஏதாவது வேலையா இருக்கற மாதிரி சாப்பிடாம இருப்பேன். ஊட்ட ஊட்ட வாங்கிப்பேன். அப்பறம் அங்கிள். இப்ப நீங்க…”
தாயிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவியை பார்த்தபடி சிலையாய் சமைந்து தான் அமர்ந்திருந்தான் விதுரன். ஒவ்வொரு வார்த்தைகளும் உளி கொண்டு கொத்துவதாய் இருந்தது அவனுக்கு.
“உடனே தூங்காதே. கொஞ்சம் நேரம் சாய்ஞ்சு உட்கார். நான் இதை வச்சுட்டு வரேன்…” என்று சொல்லியவர் அவளிடம் இப்பொழுது பேச்சுக்கொடுத்தால் என்ன என்ற யோசனையுடன் தான் இருந்தார்.
மீண்டும் வர விதுரன் பேசிக்கொண்டிருந்தான் அவளிடம் அவளின் கல்லூரி படிப்பை பற்றி.
“இங்க சென்னையில் தான் படிச்சேன். முடிச்சதும் அப்படியே இங்க ஜாப் பார்த்து கடைசியில சென்னையில தான் வாழ்க்கை முழுசுக்கும் டஸ்பின் தூக்கி போடனும்னு இருக்கு போல…” என குறும்புடன் அவள் சொல்ல,
“ஸ்கூல் எல்லாம் திருப்பூர்லையா?…” என்று கயல்விழியும் வந்து அமர ரோஜாவின் உதடுகளில் வெறுமையான புன்னகை.
“ம்ஹூம், இல்லை அத்தம்மா. நான் எங்க வீட்ல இருந்ததே ரொம்ப கம்மி தான். ஸ்கூல் ஸ்டடீஸ் முழுக்க ஹாஸ்டல். காலேஜும்…” என்றவள் மெதுவாய் கண்ணை மூடிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் கடைசி பொண்ணு. உங்களுக்கு தெரியும் தானே? ஆனா அவங்க பொண்ணா நான் பெர்த் சர்டிபிகேட்ல தான் பீல் பண்ணுவேன்….”