“எடுத்து பேசுடி, உன்னோட இதே தொல்லையா போச்சு. ஒவ்வொரு தடவையும் சொல்லனும் உனக்கு…” என ஸ்ரீ திட்ட சலிப்புடன் எடுத்தாள் ரோஜா.
“சொல்லு விஸ்கி…” என அழைக்க,
“ரோஜா…” என பிரஷாந்தி பல்லை கடித்தாள்.
“அமைதிக்கு பெயர் தான் சாந்தி. சாந்தி. சாந்தி. ஓம் சாந்தி…” என்று பாடியவள் கடைசியில் ஓம் சாந்தியை நித்யானந்தா சிஷ்யை போல சொல்ல ஸ்ரீயும், சங்கவியும் வாயை பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்க பாடுபட்டனர்.
பின்னே அவர்கள் சிரிப்பு சத்தம் கேட்டால் பத்து நிமிடத்தில் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை விட்டுவிட்டு பலமணி நேரங்களுக்கு அல்லவா இழுத்துவிடுவாள்.
குடும்பத்தினருடன் பேசும் பொழுது இப்படித்தான் மூணாவது மனிதர்கள் முன்பு பேசி கிண்டலடிப்பாயா? என்ன பழக்கம்? நம் குடும்பம் என்ன? பாரம்பரியம், பரம்பரை என்ன? என்று பேசி அதனுடன் நிற்காது பிரஷாந்தியின் அறிவுரை.
உடனே வளர்மதிக்கு கான்பரென்சில் அழைத்து பெரிய பஞ்சாயத்தே நடத்திய பின்னர் தான் அந்த அலைபேசி ஓய்வுபெறும்.
ரோஜாவும் விடாமல் வம்பு பேசுவதை போல அக்காவை பேசி டென்ஷன் ஏற்றிவிட்டு தாயிடம் பம்மிக்கொண்டு இருப்பாள். அதனாலேயே வீட்டிலிருந்து போன் வந்துவிட்டால் இவர்கள் யாரும் மூச்சு விடமாட்டார்கள்.
தனியாய் சென்று பேசு என்றாலும் அலட்சியமாய் மறுத்துவிடுவாள். அவர்களே தான் அவ்விடம் விட்டு தனிமை கொடுத்து விலகி செல்வார்கள். இப்பொழுதும் அப்படியே இருக்க,
“விட்டா இவ பேசறதுல நாம சிரிச்சு காட்டிக்குடுத்து இவளை மாட்டி விட்ருவோம். வா உள்ள போலாம்…” என ஸ்ரீ சங்கவியை இழுத்துக்கொண்டு சென்றாள்.
சங்கவிக்கு எப்பொழுதும் ரோஜாவை பற்றி தெரிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம் இருக்கும். சில விஷயங்கள் கேட்காமல் தானே சொல்வாள் ரோஜா. சில விஷயங்கள் கேட்டால் கூட சிரித்து பேச்சை மாற்றிவிடுவாள். அதன் பின்னர் கேட்க நினைக்க மாட்டாள் சங்கவி.
இருவரும் இரவு உணவிற்கு சந்திரா என்ன செய்கிறார் என்று பார்க்க சென்றுவிட அவர்கள் கிளம்பியதை பார்த்துக்கொண்டே ரோஜா ‘ம்ம்’ சொல்லி இருந்தாள்.
“நான் என்ன பேச வந்தா நீ என்ன பாடற? கிண்டலா பேசற? நான் சொல்றதை கேட்கறியா இல்லையா ரோஜா?…” என்ற பிரஷாந்தி,
“உன் ப்ரெண்ட்ஸ் வச்சிக்கிட்டு பேசறியா நீ?…” என்று கேட்க,
“அவங்க இங்க இல்லை…” என்றாள் ரோஜா.
“அவங்களை வச்சுக்கிட்டு பேசாதன்னு உன்கிட்ட எத்தனைவாட்டி சொல்ல? புரிஞ்சுக்க மாட்டியா? நீ இப்படி இருந்தா என்னை அவங்க எப்படி மதிப்பாங்க?…” என்று மூச்சு விடாமல் பேச,
“வெய்ட் வெய்ட், நான் தான் சொல்றேன்ல இங்க யாரும் இல்லைன்னு. திரும்ப நம்பாம பேசற நீ?…”
“அப்ப நான் கால் கட் பண்ணிட்டு வீடியோ கால் பன்றேன்…” என நம்பாமல் பிரஷாந்தி காலை கட் செய்துவிட்டுவீடியோ காலில் அழைக்க ரோஜா எடுக்கவே இல்லை.
அழைப்பு நான்கு முறை சென்றும் எடுக்காமல் அதனை பார்த்துக்கொண்டே இருந்தாள் ரோஜா. இந்த சத்தத்தில் வெளியே வந்த சங்கவி,
“என்னடி கால் பன்றாங்க, எடுத்து பேசு…” என்று சொல்ல அதற்குள் வளர்மதி அழைத்துவிட்டார். அதனை பார்த்த சங்கவி ஒரு பெருமூச்சுடன் மீண்டும் உள்ளே சென்றுவிட எரிச்சலுடன் எடுத்தாள் ரோஜா.
“அக்கா கால் பண்ணா அட்டென் பண்ண மாட்டியா ரோஜா? ஏன் இப்படி பன்ற?…” என எடுத்ததும் கண்டிப்புடன் பேச,
“அவ என்ன சொன்னான்னு தெரியுமா உங்களுக்கு?…” என்றாள் ரோஜாவும் கண்டன குரலில்,
“என்ன சொன்னா உன்னை பார்த்துட்டு ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னா பேசறதுக்கென்ன உனக்கு? வீடியோ கால் அட்டன் பண்ணா என்ன?…” என சொல்ல,
“மாம், அவ பேசறதை நான் என் ப்ரெண்ட்ஸ் கூட உட்கார்ந்து கேட்கறதா நினைக்கறா. அவங்க இல்லைன்னு சொல்லியும் அவ நம்பலை. அதுக்கு வீடியோ கால்ல காண்பின்னு சொல்றா. என்னை நம்பாம…”
“உன் விளையாட்டு புத்தி தான் அவளுக்கு தெரியுமே. நீ இப்படி செய்வன்னுதான் அவ வீடியோ கால்ல கூப்பிட்டிருப்பா. உன்னை விட பெரியவ. எவ்வளவு பொறுப்பா குடும்பத்தோட மரியாதை பத்தி தெரிஞ்சு வச்சிருக்கா. அவ சொன்னா உன் நல்லதுக்கு தான் இருக்கும்…”
“நீங்களும் அவளை மாதிரியே பேசறீங்க…” என்று ரோஜா வருத்தமான குரலில் சொல்ல தாய் அதனை கண்டுகொள்ளவே இல்லை. தான் சொல்வதை கேட்கிறாளா என்பதில் தான் இருந்தார்.
“இப்ப உன்னை நம்பி என்ன ஆக போகுது? அவளே விடிஞ்சதும் உன்கிட்ட பேசனும்னு எவ்வளவு ஆசையா கால் பண்ணியிருக்கா. கடல் கடந்து இருக்கறவட்ட முகத்தை காண்பிக்காத. அவளை கஷ்டப்படுத்தாத. அவ கூப்பிடுவா. பேசு. பேசிட்டு பேசிட்டேன்னு எனக்கு நீ சொல்லனும்…”
“நார்மல் கால் பண்ண சொல்லுங்க. கண்டிப்பா வீடியோ கால் பண்ண அட்டன் பண்ண மாட்டேன்…” என்று ரோஜா போனை கட் செய்துவிட அந்த பக்கம் வளர்மதி திகைத்துவிட்டார்.
என்றோ ஒரு நாள் தான் இப்படி நடந்துகொள்வாள் ரோஜா. அத்தகைய நேரங்களில் சற்று விட்டுபிடிப்பார் வளர்மதி. சமீபமாக அப்படி எதுவும் நடக்காமல் இருந்ததில் நிம்மதியாக இருந்தார். இன்று பெரிய மகளால் மீண்டும் ரோஜாவின் பிடிவாதம் தலைதூக்க கவலையாகி போனது அவருக்கு. பிரஷாந்திக்கு அழைத்தவர்,
“நீ தங்கச்சிக்கு பேசு. வீடியோ கால் பண்ணாத. அவ எடுக்க மாட்டா…” என சொல்ல,
“மாம், அவ அவ ப்ரெண்ட்ஸ் கூட…” என பிரஷாந்தி புகார் வாசிக்க,
“கொஞ்சம் நாள் தானே? விட்டேன்டி. அவ சின்ன பொண்ணு…” என்றதும்,
“பார்த்தீங்களா? சின்ன பொண்ணுன்னு அவளை தான் எல்லாரும் பார்க்கறீங்க. என்னை?…” என விசும்பலுடன் பிரஷாந்தி பேச,
“அடடா, என்னடி நீ?. கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் ஆகிடுச்சு. இப்ப போய் அவளோட போட்டி போட்டுட்டு…” என்றவர் ஒரு சிரிப்புடன்,
“என்னைக்கா இருந்தாலும் நீ என் மூத்த மகடி. சரி அவக்கிட்ட நீதான சொல்லனும்னு சொன்ன. எங்களையும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்ட. பேசிட்டு கூப்பிடு…” என்று வைத்துவிட்டார்.
அவருக்கு அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் வருந்தினால் தாளாது. உடனே சென்று பார்த்துவிடும் தூரம் அல்ல என்பதால் இன்னும் அதிகமாய் அவளை தாலாட்டுவார். தாலாட்ட வைத்துவிடுவாள்.
இதுதான் பிரஷாந்தி. எந்த விதத்திலும், எந்த இடத்திலும் தன் மேல் எந்த தவறும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாய் இருப்பவள். தான் தவறே செய்தாலும் கூட ஐயோ என் மகளுக்கு இது தவறென்றே தெரியாது என்றுதான் சொல்லவேண்டும் என்பதில் அத்தனை விவரம்.
தங்கையின் விஷயத்தில் மட்டும் அவள் பிடிவாதமே பிடித்தாலும் இப்பொழுது அவளை தாங்க துவங்க தனக்கான முன்னுரிமை பறிபோய்விடுமோ என நினைத்துக்கொண்டிருந்தவள் தாயின் சமாதானத்தில் சற்று பெருமிதம் கொண்டாள்.
எங்கே தான் சொல்ல முடியாதென முறுக்கிக்கொண்டாள் தன் மீது வருத்தம் கொண்டு அம்மாவே விஷயத்தை தங்கைக்கு சொல்லிவிட்டால் தந்தை தன்னை என்ன நினைப்பார் என நினைத்து மீண்டும் ரோஜாவிற்கு அழைக்க அவள் எடுத்ததும்,
“ஒரு முக்கியமான விஷயத்தை பேசத்தான் உனக்கு கூப்பிட்டேன். நீ என்னன்னா வேற பேசி டைவர்ட் பண்ணிட்ட. இப்ப பாரு தேவையில்லாம அம்மாவுக்கு டென்ஷன்…” என்று சொல்ல,
“யாரு நானு? டைவர்ட் பண்ணேன்? அதுவும் உன்னை. சரி சொல்லு என்னன்னு…” என ரோஜா கவனமாய் வார்த்ததைகளை கோர்த்தாள்.
இல்லை என்றால் மீண்டும் பேச்சை திசை திருப்பி திரும்பவும் தாய் அழைத்து இந்த தலைவலியே வேண்டாம் என பல்லை கடித்துக்கொண்டு இருந்தாள் ரோஜா.
“உனக்கு அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க ரோஜா. அப்பா எனக்கு தான் முதல்ல போன் பண்ணி சொன்னார். அத்தான்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும் இல்லையா? அதுக்குத்தான். அப்படியே உனக்கு கன்வே பண்ண சொல்லியும் என்கிட்டே சொல்லிட்டார். பிஸியா இருப்பார் போல…” என சொல்ல,
“ஓஹ் அதான் விஷயமா? ஓகே பார்க்கட்டும்…” என சாதாரணமாக சொல்ல,
“என்னடி இவ்வளோ பெரிய விஷயத்தை சொல்றேன். நீ என்னன்னா சப்புன்னு ஓகே சொல்ற?…” என சொல்ல,
நன்றி சொல்லி பிரஷாந்தியின் சின்ன மனதை மகிழ்விக்க விரும்பவில்லை ரோஜா. அதே நேரம் திருமணம் வேண்டாம் என்றால் அதனை கொண்டு தன் மீது ஏதேனும் புகாரை சொல்லி பிரச்சனையை பெரிதாக்க நினைப்பாள்.
அதனால் சரி என்று சொல்லிவிட பிரஷாந்திக்கு தான் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை என்ற ஆற்றாமை கொப்பளித்தது.
“ஏன் சொல்லாம? சொல்லனும் தானே? அப்பா எவ்வளோ பெரிய பொறுப்பை என்கிட்டே விட்டிருக்கார். சரி சொல்லு உனக்கு எப்படி பட்ட மாப்பிள்ளை வேணும்? ஏதாவது ஐடியா வச்சிருக்கியா?…” என ரோஜாவின் வாயை பிடுங்க பார்க்க,
“அதான் பார்க்கறாங்கல. அவங்களுக்கு தெரியாதா? உன் மேரேஜ் அப்போ உன்னோட ஐடியாவே செல்லுபடி ஆகலை. இத்தனைக்கும் அவங்க செல்ல பொண்ணு வேற நீ. இதுல என் ஐடியா? அப்படியே நீ நடத்தியும் குடுத்துடுவ…” என்று பேச,
“ரோஜா…” என இரைந்தாள் பிரஷாந்தி.
“எதுக்கு கத்துற விஸ்கி? உண்மையை சொன்ன கோபம் வருதா? சரி விடு. எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. பார்க்கறாங்கல. அவங்களே முடிவு பண்ணட்டும். இல்லைனா அதான் உன்கிட்ட பொறுப்பு ஒப்படைச்சாங்கள்ள. நீயே உன் ஐடியா படியே பாரேன்…” என்றவளை திட்ட கூட முடியாமல் பிரஷாந்தி பல்லை கடிக்க,
“என்ன விஸ்கி? ஐடியான்னதும் பேச்சையே காணோம்? ஓஹ் உன் மைண்ட் ரொம்ப லாங்கா போய்ருச்சு போல? அம்மாக்கிட்ட இதை சொல்ல முடியாதேன்னு கோவமா வருதா? வரட்டும் வரட்டும். ஒரே ஒரு ரிக்வெஸ்ட் பார்க்கற மாப்பிள்ளை உன் புருஷனை மாதிரி மட்டும் இருக்க வேண்டாம். இனி இது விஷயமா என்கிட்டே பேசாத…” என்று சொல்லிவிட்டாள் ரோஜா.
பின் போனை கட் செய்துவிட்டு வளர்மதிக்கு பேசிவிட்டேன், தூங்க போகிறேன் என்று மட்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அமைதியாக சாப்பிட்டு வந்து படுத்துக்கொண்டாள் ரோஜா.
ரோஜாவிற்கு தெரியும் பிரஷாந்தி வேண்டுமென்றே தான் இதை தன்னிடம் பேசியிருப்பாள் அவளின் முக்கியத்துவத்தை தன்னிடம் நிரூபிக்க.
ஒரே வயிற்றில் தான் பிறந்தனர். எப்பொழுதும் எனக்கு பின்னர் தான் நீ என்பதை ரோஜாவிற்கு உணர வைத்துக்கொண்டே இருப்பதில் ஒரு அலாதி சுகம் பிரஷாந்திக்கு.
அதற்கேற்றார் போல அவளின் பெற்றோரும், அண்ணனும் கூட. அவளைத்தான் தூக்கி வைத்து கொண்டாடி இவளை சேட்டைப்பிள்ளை, அறுந்தவாலு, சொன்ன பேச்சு கேட்காதவள் என்று பேச பேச முதலில் வருந்தியவள் பின் அப்படித்தான் என்பதை போன்றே தன் செயல்களில் காண்பிக்க ஆரம்பித்துவிட்டாள்.
திருமணமாகி சென்று ஆறு வருடங்கள் ஆனாலும் அந்த தன் ஆதிக்கத்தை ரோஜாவிற்கு நினைவூட்டிக்கொண்டே தான் இருப்பாள் பிரஷாந்தி.
தனது பால்யகால நினைவுகளை குடும்பத்தினர் பற்றிய வருத்தங்களை விரட்டிய ரோஜா அப்படியே உறங்கியும் போனாள்.
அன்று காலை எழுந்ததுமே அலுவலகம் செல்லும் பரபரப்பு தொற்றிக்கொண்டது அவர்களிடத்தில்.
முதலில் ஸ்ரீ குளித்து முடித்து கிளம்பி தங்கள் உணவை பேக் செய்து எடுத்துக்கொள்ள அவளுக்கு துணையாய் ரோஜாவும் வந்துவிடுவாள்.
சங்கவி எப்பொழுதும் இதிலெல்லாம் கலந்துகொள்ள மாட்டாள் என்பதை விட எடுத்து வைப்பதில் காலம் தாழ்த்துவாள். அதற்காகவே அவளுக்கும் சேர்த்து தாங்களே பேக் செய்து கொள்வார்கள்.