ரோஜா, சங்கவி இருவரிடத்திலும் ஸ்கூட்டி உள்ளது என்பதால் ஸ்ரீ அவர்களில் ஒருவருடன் சென்றுவிடுவாள்.
முன்பு அந்த அலுவலகத்தில் சேருவதற்கு முன்பு வேறு இடத்தில் வேலை பார்த்ததால் ஹாஸ்டலில் தான் தங்கியிருந்தது. இரண்டு வருடங்களாக தான் சங்கவி, ரோஜாவுடன் சேர்ந்து வந்து தங்கியிருக்கிறாள்.
ஹாஸ்டலை விட இதில் செலவும் சற்று குறைவென்பதால் மட்டுமே. அதோடு தோழிகளின் வற்புறுத்தல் வேறு.
குறைவான செலவு, நிறைவான உணவு, மனதிற்கு நிம்மதியான இடம், கலகலப்பிற்கு பஞ்சமில்லாத தோழிகள் என்று சந்தோஷமாக இருந்து வருகிறாள்.
அந்த அப்பார்மெண்ட்டின் சொந்தக்காரர் சங்கவியின் உறவினர் என்பதால் மிகவும் குறைவான வாடகை தான் அதற்கு.
மூன்று படுக்கையறைகள் கொண்ட அந்த ப்ளாட் அவர்களுக்கு மிகவும் சவுகரியமாகவும் உள்ளது. ஒரு அறையில் ஸ்ரீ மட்டும். இன்னொரு அறையில் ரோஜாவும், சங்கவியும்.
ரோஜாவிற்கு தனியாக உறங்குவதென்றால் அத்தனை பயம். அவளின் வீட்டில் கூட சமைக்கும் அம்மாவை தனக்கு துணையாக படுக்க வைத்துக்கொள்வாள் தனதறையிலேயே.
இன்னொரு அறை யாரும் பயன்படுத்தாமல் இருக்க இப்பொழுது அவர்களுடன் உடன் இன்னொரு தோழியும். சங்கவியுடன் படித்தவள். சமீபமாய் தான் ஆறு மாதங்களாய் இவர்களுடன் தங்கி இருக்கிறாள்.
விலாசினி. இவள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவள். அத்தனை கலகலப்பான பெண். ரோஜாவும் விலாசினியும் சேர்ந்தால் ஸ்ரீயும், சங்கவியும் சத்தமின்றி ஒளிந்துகொள்ளும் அளவிற்கு ஆட்டம் பாட்டம் என்று அல்லோல்படும்.
ரோஜா திருப்பூரை சேர்ந்த பெண். சங்கவியும், ஸ்ரீயும் திருச்சியை சேர்ந்தவர்கள். அதில் ஸ்ரீ திருச்சியிலேயே படித்திருக்க ரோஜா, சங்கவி படிப்பு மொத்தமும் சென்னையில் தான். ஆனால் வேறு வேறு இடங்களில்.
சங்கவி, விலாசினி இருவரும் ஒரே கல்லூரி. விலாசினி இருப்பிடம் சென்னை தான். ஆனால் வீடு அலுவலகத்திற்கு தூரம் என்பதால் இவர்களுடன் தங்கி வார இறுதி நாட்களில் மட்டும் தன் வீட்டிற்கு சென்று வருவாள்.
ரோஜா, சங்கவி, ஸ்ரீ மூவரும் ஒரே அலுவலகத்தில் ஒரே நாளில் வேலையில் சேர்ந்ததால் அன்று ஆரம்பித்த நட்பு. இன்றுவரை நன்முறையில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
சங்கவி முதலிலேயே படித்துக்கொண்டிருந்ததில் இருந்தே அந்த வீட்டில் தங்கி வருவதால் வேலையில் சேரவும் இவர்களும் அவளுடனே வந்து தங்கி இருக்கின்றனர்.
சமைக்க, மற்ற வேலைகள் என அனைத்திற்கும் ஒரு பெண் வந்து செல்வதால் இவர்கள் நால்வரும் அதற்கான செலவை பகிர்ந்து கொள்கின்றனர்.
இன்றும் அதை போல ஸ்ரீயும் ரோஜாவும் கிளம்பி காலை உணவை உண்டு கொண்டிருக்க ஸ்ரீ ரோஜாவை பார்ப்பதும் சாப்பிடுவதுமாக இருந்தாள்.
ரோஜா டிவியை பார்த்தபடி சுவாதீனமாக சாப்பிட ஸ்ரீக்குத்தான் உணவு இறங்கவில்லை. சங்கவியும் தயாராகி வந்து சாப்பிட அமர்ந்தவள் தனக்கும் இரண்டு தோசையை வைத்து சாம்பாரை அதில் ஊற்ற ஸ்ரீ அவளின் காலை சுரண்டினாள்.
“ப்ச், என்னடி?…” என கிசுகிசுக்க,
“கேளேன் அவக்கிட்ட. நைட் எதுவும் பேசாம படுத்துட்டா…” என ஸ்ரீ சொல்ல,
“கேட்டா மட்டும் உடனே சொல்லிட்டுதான் மறு வேலை பார்ப்பா. போடி…” என சங்கவி விட்டேற்றியாக பேச,
“உன்னையெல்லாம்…” என பல்லை கடித்தவள் ரோஜாவின் புறம் திரும்பினாள்.
“ரோஜா இன்னொரு தோசை…” என ஹாட்பாக்சை அவள் புறம் தள்ள,
“ம்ஹூம், ஹெவி…” என வயிற்றை பிடித்துவிட்டு சிரித்தபடி எழுந்துகொள்ள,
“ஹே உட்காரு. என்ன ஓடுது உன் குட்டி மூளையில? நேத்து பேசி முடிக்கவும் சாப்ட்டு போய் படுத்துட்ட. என்ன சொன்னாங்க உன் அக்கா?…” என ஸ்ரீ வம்படியாக அவளை பிடித்துக்கொள்ள,
“எனக்கான டைம் முடிஞ்சதாம். எனக்கு மேரேஜ் பண்ணலாம்னு அலையன்ஸ் பாக்கறாங்கலாம் வீட்ல. இதை கேட்கவா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கண்ணை காமிச்சுட்டு இருந்தீங்க? ஏன்டி நைட்டே கேட்ருந்தா நான் சொல்லியிருக்க மாட்டேனா?…” என அசால்ட்டாக சொல்லி எழுந்து செல்ல,
“ரோசு பாப்பா, கல்யாணமா? எனக்கு பட்டுச்சேல தான் எடுத்து தரனும். ஆமா…” என வேலைக்காரப்பெண் சந்திரா சொல்ல,
“உனக்கு வெறும் பட்டு என்ன? வஸ்தரக்கலா பட்டே எடுத்துருவோம். கலர் மட்டும் சொல்லு….” என்று அப்பெண்ணின் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு தனது பிளேட்டை போட்டு கையை கழுவியவள்,
“சந்து ஒரு காபி, நல்லா ஸ்ட்ராங்கா…” என அவள் கேட்டதிலேயே தோழிகளுக்கு புரிந்துபோனது அவள் இன்னும் சரியாகவில்லை என்று.
“ஸ்ரீ, இனி இந்த டாப்பிக் வேண்டாம். ரோஜா டென்ஷன்ல இருக்கா போல. விடு. மெதுவா பேசலாம்…” என சங்கவி அவளின் காதை கடிக்க ஸ்ரீ மௌனமானாள்.
“ஓகே இன்னைக்கு நீ ரோஜாவோட வா. நான் கொஞ்சம் லேட்டா வரேன். வினி இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவா. அவளை பார்த்துட்டு வரேன்…” என சொல்லவும் ஸ்ரீ சரி என்றாள்.
ரோஜா கிளம்பி வர ஸ்ரீ தங்கள் லஞ்ச் பேக் சகிதம் எடுத்துக்கொண்டு அவளுடன் லிப்டில் சென்று நின்றாள்.
கதவு திறக்க உள்ளே நுழையும் முன்னர் அதிலிருந்து புயல் போல வெளியே வந்த விலாசினி,
“ஹேய் பேப்ஸ்…” என்று அவர்கள் இருவரையும் கட்டிக்கொண்டு குதிக்க,
“வினி…” என ரோஜாவும் அவளை கட்டிக்கொண்டு அவளுடன் ஒரு சுற்று சுற்றினாள்.
“விடுங்கடி, யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?…” என ஸ்ரீ இருவரையும் சத்தம் போட,
“சரியான ரூல்ஸ் பாக்ஸ் இந்த டேக்ஸ்…” என்று அவளை பழிப்பு காட்டிய ரோஜா,
“என்ன இன்னைக்கு ஏக குஷில இருக்கீங்க மேடம்?…” என அலுவலகம் செல்வதை விட்டுவிட்டு கதை கேட்க ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் கை கடிகாரத்தை பார்த்த ஸ்ரீ,
“ஹேய் ஈவ்னிங் வந்து பேசுங்கடி. டைம் போகுது…” என்று கீழே சென்று விட்ட லிப்டின் பட்டனை அழுத்த,
“அது நம்ம ப்ளோர் வரதுக்குள்ள குவிக்கா சொல்லிடறேன். எனக்கு ப்ரமோஷன் சாங்க்ஷன் ஆகிருக்கு. அதுவும் இங்க இல்லை…” என்று பறப்பதை போல கையை காண்பிக்க,
“ஹே கங்க்ராட்ஸ்டி…” என இருவருமே விசாலினியை அணைத்து விடுக்க லிப்ட் வந்துவிட்டது.
“ஓகே ஓகே, ஈவ்னிங் வந்து பேசறோம். பை பை…” என ரோஜாவை லிப்டினுள் தள்ளிய ஸ்ரீ பட்டனை அழுத்தும் முன்னர் கை நீட்டிய விலாசினி,
“ஹேய் இருடி, ஒன் மினிட். ஈவ்னிங் ஹோட்டல்ல பார்ட்டி இருக்கு. கண்டிப்பா நாம போறோம். சீக்கிரமே வந்திருங்க. நான் லொகேஷன் ஷேர் பன்றேன்…” என சொல்லி கை எடுக்க லிப்ட் மூடிக்கொண்டது.
“நான் வரமாட்டேன் பார்ட்டிக்கு…” என்றாள் ஸ்ரீ எடுத்த எடுப்பிலேயே.
“ஆரம்பிச்சுட்டா…” என ரோஜா சலித்துக்கொள்ள ஸ்ரீ முறைத்தாள்.
அவர்கள் அலுவலகம் சென்றதும் அரைமணிநேரத்தில் சங்கவியும் வந்துவிட கேரளாவில் இவர்கள் சென்று வந்த விவரங்களை தெரிவித்து அதன் பற்றி கலந்தாலோசித்தவர்களுக்கு அடுத்த ப்ராஜெக்ட் ரெடியாக இருந்தது.
அறையை விட்டு வெளியே வர சங்கவியின் முகம் தான் வாடிப்போய் இருந்தது. ஸ்ரீ அவளை சமாதானம் செய்வதை போல பார்க்க,
“நோ, நோ, இதெல்லாம் சேர்த்தியே இல்லை. நான் ஒத்துக்க மாட்டேன்…” என்று கோவமாய் சொல்ல,
“ஹேய் இதுவும் கொஞ்சம் நாள்ல முடிஞ்சிரும் சங்கு. இதுக்கெல்லாம் பேபி டென்ஷன் ஆகலாமா?…”
“என்னை பேபி சொல்லாத நீ. நீ சொன்னா நானும் உன்னை பேபி சொல்லுவேன்…” என ஆரம்பித்த விஷயத்தை மறந்து சங்கவி பேபிக்கு சண்டையிட ரோஜா சிரிக்க,
“பாரு ஸ்ரீ கிண்டல் பன்றா…” என அவளிடம் சொல்ல,
“விடுங்கடி, இப்ப என்ன இந்த ப்ராஜெக்ட்ல ரெண்டு பேர் போதும்ன்னு எங்களை அனுப்பறாங்க. இன்னொரு பெரிய ப்ராஜெக்ட்ல நெக்ஸ்ட் சேர்ந்துப்போம். அதான் ஈவ்னிங் வீட்டுல மீட் பன்றோம்ல. இதெல்லாம் ஓவர் கவி…” என்று ஸ்ரீ சொல்ல,
“வினி மெசேஜ் பண்ணிருக்கா. என்ன பண்ணலாம்?…” என சங்கவியை அறிந்தவளாக ரோஜா பேச்சை மாற்ற ஸ்ரீ முறைத்தாள் அவளை. அவளின் முறைப்பை கண்டுகொண்ட சங்கவி,
“அதெல்லாம் முடியாது ஸ்ரீ. நான் ரொம்ப சேட் ஆகிட்டேன். என் மூடை மாத்தனும். நீ பார்ட்டிக்கு வரத்தான் வேணும்…”
“கவி, அவ அனுப்பிருக்க ஹோட்டல் பார்த்தியா? அது பப் சேர்ந்து இருக்குது…”
“இருந்தா உனக்கு என்ன நாலு கிளாஸ் ஊத்தியா விட போறாங்க? வருவியா? எங்களுக்கு மட்டும் அங்க போய் பழக்கமா? நம்ம வினிக்காக. இன்னும் ஒன் மந்த். அவ பாரின் போய்ருவா. இப்ப நாம அவ இன்வைட்டை அவாய்ட் பண்ணா பீல் பண்ணுவா…” ரோஜா சொல்ல சங்கவியும் சேர்ந்து ஸ்ரீயை கரைத்தனர்.
மாலை சரியான நேரத்திற்கு விலாசினியுடன் அந்த இடத்திற்கு சென்றதும் மூவருக்குமே கொஞ்சம் படபடப்பாக தான் இருந்தது.
“ஹே இதெல்லாம் சும்மாடி. பயப்படாம வாங்க…” என விலாசினி தான் அவர்களை உள்ளே அழைத்து சென்றாள்.
அங்கே விலாசினியின் அலுவலக நண்பர்களும் வந்திருக்க ஹாட் ட்ரிங்க்ஸ் வேறு புழங்கப்பட மூவரும் ஒரு ஓரத்தில் வந்து அமர்ந்தனர்.
இவற்றை எல்லாம் வெளியில் இருந்து பார்த்திருக்கின்றனரே தவிர உள்ளே சென்று பார்த்ததில்லை.
ரோஜாவிற்கே அந்த இடம் பிடிக்கவில்லை. முகத்தை சுழித்துக்கொண்டு அவள் அமர்ந்திருக்க ஸ்ரீயும், சங்கவியும் அவளின் முகம் போன போக்கில் சிரித்துவிட்டனர். நேரம் செல்ல செல்ல,
“வினி கீழே போலாம்…” என ரோஜா அவளின் கைகளை சுரண்ட ஆரம்பித்துவிட்டாள்.
“ஜஸ்ட் ஒரு பிப்டீன் மினிஸ்ட். இவங்களை பார்த்துட்டு வரேன். டின்னர் நாம மட்டும் தான். கீழே போய்டுவோம். சரியா? எனக்காக ப்ளீஸ்…” என்று கொஞ்சிவிட்டு அவர்களுக்கு ஜுஸ் சொல்ல ரோஜாவும் குடிக்கவில்லை. மற்ற இருவரையும் தொடவிடவில்லை.
வாஷ்ரூம் போக வேண்டும் என ஸ்ரீ சொல்ல அவளுக்கு துணையாக சங்கவி செல்ல ரோஜா மட்டும் அந்த இடத்தை யாருக்கும் தரமாட்டேன் என்பதை போல் சுவற்றோடு ஒட்டி அமர்ந்திருந்தாள்.
அவர்கள் அமர்ந்து இருந்த சோபாவின் எதிர் இருக்கையில் வந்து தொப்பென அமர்ந்தவனை நிமிர்ந்து பார்த்தவள் இவனா என பார்க்க அவனும் அப்பொழுது தான் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“ஹேய் லிட்டில் டெவில் இங்கயும் நீயா?…” என்ற விதுரனின் வாய் பிளந்த பார்வையில் அத்தனை நேர டென்ஷன் மறைந்து சிரிப்பு வர,
“நானே தான் ஹேண்ட்சம்…” என்று குறும்புடன் அவள் சொல்ல விதுரனின் கைகள் தன்னை போல தானாக தன் தாடையை வருடி,
“என்னை பார்த்தா அங்கிள் மாதிரியா இருக்கு லிட்டில் டெவில்?…” என முறைப்பாய் கேட்க,
“நான் எப்ப அங்கிள்ன்னு சொன்னேன்?…” என அவனை திருப்பி அவள் கேட்க,
“நீ பப்க்கு எல்லாம் வருவியா? வாய் மட்டும் தான் ஜாஸ்தின்னு பார்த்தா இதுவுமா?…” என்றான் நக்கலாய்.
அவனின் நக்கலை கண்டு கொண்டாலும் அதனை புறம் தள்ளியவள் அந்த நேரத்தில் தனியாக இல்லாமல் இருப்பதே போதுமாக இருக்க அவனுடன் சங்கவி, ஸ்ரீ வரும் வரை பேச்சுக்கொடுத்தாள்.
தனியாக இருந்து யாரேனும் வந்து பேசினால் என்ன செய்வது என்று தான் விதுரனிடம் அவள் பேசியது.
“வாட் எ கண்டுபிடிப்பு? செம போங்க…” என்று சிரிக்க,
“ஹேய்…” என்றவனின் முறைப்பில்,
“பப்க்கு வரனும்னா குடிக்க மட்டும் தானா ஹேண்ட்சம்?…” என்றாள் ரோஜா.
“பின்ன? இங்க எதுக்கு வந்தியாம்? சாமி கும்பிடவா?…” என விதுரனும் பேச,
“இத சாமியா நினைச்சு கும்பிட்டு குடிக்கறவங்கள பார்க்க கூட வரலாம்…”
“அப்டி நீ யார பார்க்க வந்த லிட்டில் டெவில்?…”
“ஏன் நீங்க கூட தான் குடிச்சிருக்கீங்க குட் லுக்கிங் கைய். உங்களை பார்க்கத்தான்னு வச்சுக்கோங்களேன்…” என்றவளின் பதிலில் அசந்தவன்,
“ஓஹ் மை காட்…” என முகத்தை மூடிக்கொண்டான் விதுரன்.
“ரோஜா என்ன பன்ற?…” என்று ஸ்ரீ வந்துவிட,
“நமக்கு தெரிஞ்சவர் தான். நம்ம மூஞ்சில தொப்பை வச்ச ஹேண்ட்சம். நீங்க வர வரைக்கும் டைம் பாஸ்…” என்று சொல்லி,
“பை ஹேண்ட்சம்…” என்று வேறு அவள் சொல்லி செல்ல அந்த ஹேண்ட்சம் அவனின் காதுகளில் அங்கிள் அங்கிள் என்றே விழுந்தது.