விதுரனின் இல்லம். சக்தி எரிச்சலின் மிகுதியில் அமர்ந்திருக்க விதுரன் வேகமாய் திரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தான்.
“ஏன்டா குடிச்சோமா வீட்டுக்கு வந்ததும் படுத்து தூங்குனோமான்னு இல்லாம இப்படி மாங்கு மாங்குன்னு இதுல ஓடிட்டு இருக்க?…” என சக்தி புலம்பியபடி தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.
சக்தி அன்று விதுரன் மற்றும் நண்பர்களுடன் பப்க்கு சென்றதனால் வீட்டிற்கு வர முடியாதென சொல்லிவிட்டு விதுரனின் வீட்டில் தங்கிவிட்டிருந்தான்.
எப்பொழுதும் கொஞ்சம் குடித்தாலும் சக்தி அவன் வீட்டிற்கு செல்வதில்லை. அது போல இன்றும் சொல்லியிருக்க பாதியில் அழைத்து வந்துவிட்டான் விதுரன்.
வியர்வை உடலில் ஆறாய் பெருகி ஓட புசுபுசுவென மூச்சை விட்டுக்கொண்டே த்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தான்.
“அப்படி ஒன்னும் வெய்ட் போடலைடா. ஏன்டா?…” என்ற சக்திக்கு தூக்கம் வேறு கண்களை சுழற்ற அப்படியே சோபாவில் சாய்ந்து படுத்தவன் கண்களை மூட அவனின் மேல் பேப்பர் வந்து விழுந்தது.
பதறி எழுந்தவன் விதுரனை பார்க்க அவன் ஒற்றை விரலில் மிரட்ட தூக்கம் கலைந்த கடுப்பில்,
“என்னடா உன் பிரச்சனை?…” என அழாத குறையாய் கெஞ்ச,
“நீதான கூட்டிட்டு போன. உட்கார்…” என இரக்கமற்ற குரலில் விதுரன் சொல்ல,
“சத்தியமா சொல்றேன்டா. இனி நான் உன்னை கூப்பிடவே மாட்டேன். எங்கயும். ஏன்டா விட்டுட்டு போன்னு கேளு. வச்சிக்கறேன் அன்னிக்கு…” என்று கோபமாய் சொல்ல,
“இன்னைக்கும் ஹேண்ட்சம் சொல்றாடா. அதுவும் அவ ப்ரெண்ட்ஸ்க்கிட்ட என்னை நியாபகப்படுத்தறேன் பேர்வழின்னு மூஞ்சியில தொப்பை வச்ச ஹேண்ட்சம்ன்னு ரிப்பீட் பன்றா…” என சொல்லிக்கொண்ட அவனின் கைகள் தன் கன்னத்தை தடவியது.
“இதுவரைக்கும் இப்படி என்னை யாருமே சொன்னதில்லை தெரியும் தான? உனக்கு கொஞ்சமும் வருத்தமே இல்லையாடா? இதுக்கு நீ பீல் பண்ண வேண்டாமா?…” என்ற விதுரனின் கேள்வியில்,
“உன் மூஞ்சியில தொப்பை வந்தா நான் ஏன்டா பீல் பண்ணனும்? ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளைய பார்த்து கேட்கிற கேள்வியாடா இது? வர வர உன் போக்கே சரியில்ல. இப்படி 24 மணிநேரமும் டவுட்லையே வச்சிருந்தா எப்படிடா?…” என்றவனின் சலிப்பில்,
“ப்ச், அதை விடு, நான் கவனிக்காம விட்டுட்டேனா? கொஞ்சம் வெய்ட் போட்ட மாதிரி தான் எனக்கு பீல் ஆகுது…” என்றவன் தன் கைகளை உயர்த்தி பார்த்து மீண்டும் கன்னத்தை தடவ,
“தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுப்பா” என்ற குரல் சக்தியின் மண்டைக்கு மேல் பல்லாயிரம் நட்சத்திரங்களுடன் சுழல அதற்கு மத்தியில் ஜனகராஜ் விஷுவலாய் தோன்றி மறைந்தார்.
“என்னடா மேல பாக்கற?…” என்ற விதுரனிடம் இதனை சொல்லிவிட முடியுமா? சட்டென விதுரனின் தந்தைக்கு அழைத்தவன் அழைப்பு சென்றதும் அதனை கட் செய்துவிட அவர் விதுரனுக்கே அழைத்துவிட்டார்.
“என்னடா அப்பாவுக்கு கால் பண்ணுனியா?…” என கேட்டுவிட்டு சக்தியை முறைத்துக்கொண்டே அட்டன் செய்து காதில் வைக்க,
“என்ன விது, என்ன பன்ற இந்நேரம்?…”
“நீங்க என்ன பன்றீங்க? இப்ப எதுக்கு கால் பண்ணுனீங்க?…” என கேள்வி கேட்க,
“சும்மா அதான். தூக்கம் வரலை…” என சடகோபன் சொல்ல,
“எல்லாம் தெரியும். சும்மா ஓட்டாதீங்கப்பா…” என்றான் மூச்சு வாங்கிக்கொண்டு.
“என்ன டென்ஷன் உனக்கு?…” என்று மகனின் குரலில் இருந்தே ஆரம்பிக்க,
“ப்ச், கதை கேட்கத்தான் இப்ப கால் பண்ணீங்களா?…” என முறுக்கி கொண்டாலும் நடந்த விஷயத்தை சொல்ல சொல்ல மறுபுறம் அப்படி சிரித்தார் சடகோபன்.
“ப்ச், அப்பா…” என்ற இவனின் கத்தலில் சற்று அடக்கியவர்,
“உன்னை யார் அந்த பொண்ணுக்கிட்ட போய் சண்டைக்கு நிக்க சொன்னா?…”
“நானா தேடி போகலை, அவ தான் என் கேமராவை தட்டிவிட்டா, அதுக்கு கொஞ்சம் கூட பீல் பண்ணலை…”
“உன் கேமரா விழுந்ததுக்கு அவ ஏன் பீல் பண்ணனும்?…” என்ற தகப்பனின் பேச்சில் இவன் பல்லை கடிக்க,
“சரி, சரி, இங்க பார் விது, அது ஜஸ்ட் ஒரு ஆக்ஸிடென்ட். தெரியாம தவறுதலா நடந்ததுக்கு நீ இவ்வளவு ரியாக்ட் பண்ண வேண்டாம்…”
“அந்த லிட்டில் டெவில் ஸாரி கூட கேட்கலை…”
“அதனால என்ன? உடனே கேமரா சரியாகிடுமா? விடேன்…”
“வெடிங் ரிசப்ஷன்ல ஸ்டேஜ்ல வச்சு என்னை பார்த்தது…”
“ஜஸ்ட் தெரிஞ்சவன் போல இருந்திருப்ப, அதனால பார்த்திருக்கலாம். இல்லை உனக்கு பின்னால யாராச்சும் இருந்திருப்பாங்க. இது ஒரு பிரச்சனையா? அதோட அந்த பொண்ணா வந்து உன்கிட்ட பேசலை. நீயா போய் சண்டைக்கு நின்னா உடனே அந்த பொண்ணு சரின்னு போகனுமா? நீ எக்ஸ்பெட் பண்ணது தப்பு….”
இப்படி பேசி பேசியே விதுரனை சமாளித்து டென்ஷனை இறக்கியவர் அவளின் கேலியில் சிரிக்க இப்பொழுது விதுரனுக்குமே புன்னகை.
“லிட்டில் டெவில், என்கிட்டையே என் மூஞ்சில தொப்பைன்னு சொல்றாப்பா. அவ்வளோ வாய்…” என்று அவனும் சொல்லி சிரித்தான்.
“சில நேரம் இதை எல்லாம் ரசிக்க கத்துக்கனும் விது. அப்பத்தான் வாழ்க்கை ஸ்மூத்தா இருக்கும். கலாட்டாவான பொண்ணா இருப்பா போல. இன்ட்ரெஸ்ட்டிங்…” என்றவர் வார்த்தையில் சட்டென மௌனமாகி அவன் பதில் பேசாமல் இருக்க அவரும் பேச்சை மாற்ற எண்ணி,
“சரி, சரி, லீவ் இட். நாளைக்கு நம்ம வேலை…”
“அது எல்லாம் பக்காவா ரெடி. இன்னும் ஒன் மந்த்ல வொர்க் முடிஞ்சிரும். முடியவும் அடுத்த வேலையை ஆரம்பிச்சுடலாம்…” என்றவன் தாயை பற்றி கேட்டுவிட்டு பத்து நிமிடங்கள் தங்கள் தொழிலை பற்றிய பேச்சுக்களை முடித்து விதுரன் போனை வைத்துவிட்டு பார்த்தால் சக்தி அங்கே இல்லை.
அவன் விதுரன் பேச ஆரம்பிக்கும் பொழுதே விட்டால் போதும் என்று அங்கிருந்து சென்றுவிட்டான். ஒரு தலையசைப்புடன் தானும் உறங்க சென்றான் விதுரன்.
“நான் மட்டும் இன்னக்கு தனியா ஆபீஸ்ல. எனக்கு வேலையே ஓடாது…” என்று சிணுங்க,
“இப்படியே நீ சொல்லிட்டே இரு, நாங்க போன மாதிரி தான். டைமிங் கரெக்ட்டா கீப் அப் பண்ணனும்னு வேற சொல்லிட்டாங்க. பெரிய ஆபர் போல இது. அத்தனை கண்டீஷன்ஸ் போடறாங்க. இங்க இருந்து ஒரு மணிநேரம் ஆகும் ட்ராபிக்ல. ஏன் நீயும் இப்படி பன்ற?…” என எரிச்சலில் ஸ்ரீ கத்திவிட,
“அப்பிடியே போய்ருங்க. யாரும் பேச வேண்டாம்…”என்ற சங்கவியை ரோஜா தான் அணைத்து சமாதானம் செய்தாள்.
ஸ்ரீ ஏற்கனவே பயங்கர டென்ஷனில் இருந்தாள். எப்பொழுதும் புது ப்ராஜெக்ட் என்று வந்துவிட்டால் அங்கே போய் அந்த இடம் மற்றும் சூழல் பிடிபடும் வரை இப்படி தான் டென்ஷன் ஆகிவிடுவாள்.
போதாததற்கு இந்த ப்ராஜெக்டில் தங்கள் அலுவலகத்தில் அத்தனை அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் வேறு வரிசை கட்ட இப்பொழுதே படபடத்து போனது.
“ஸ்ரீ நீ லிப்ட்டுக்கு போ. நான் வரேன்…” என்ற ரோஜா சங்கவியிடம் சமாதானம் செய்து மாலை வந்ததும் இரவு உணவிற்கு வெளியே செல்லலாம் என்று சொல்லி மலையிறக்கிய பின்னர் தான் கிளம்பினாள்.
அதற்குள் ஸ்ரீ கீழே பார்க்கிங் சென்றுவிட அவளை திட்டியபடியே வந்த ரோஜா ஸ்ரீயின் முகத்தை பார்த்துவிட்டு,
“சும்மா எல்லாத்துக்கும் கையை காலை உதறாத ஸ்ரீ. இப்ப என்ன அங்க போனா தெரிஞ்சிட போகுது. இங்கயே கஷ்டமோ, முடியுமோன்னு பயந்தா ஆச்சா?…”என வழியிலெல்லாம் இருக்கும் டென்ஷனை குறைக்கிறேன் பேர்வழி என்று கூட கொஞ்சம் தான் ஏற்றியிருந்தாள் ரோஜா.
சரியாக ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே வந்து சேர்ந்தவர்கள் செக்யூரிடியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அந்த கட்டிடத்தின் பார்க்கிங்கில் சென்று வண்டியை நிறுத்திவிட்டு வெளியே வர அவளுக்கு முன்பாக கட்டிடத்தின் முகப்பில் நின்று அதனை தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
சென்னையின் முக்கியமான பிரதான சாலையில் அமைந்திருந்தது அந்த மூன்று மாடி கட்டிடம். அகலமும் அத்தனை பெரியது.
வெறுமனே கட்டி முடிக்கப்பட்ட காட்சியுடன் இருக்க ஸ்ரீயின் மனதில் அதன் வெளிப்பகுதியில் என்ன செய்யலாம் என்பதை எல்லாம் அதற்குள் மனதினுள் ஓட்டிப்பார்த்துவிட்டாள் கற்பனையில். இனி தான் அவர்களின் வேலை இங்கே.
அவளின் யோசனையில் சுளித்த முகத்தையும், ஆழ்ந்த சிந்தனையை பார்த்து உச்சு கொட்டியபடி வந்த ரோஜா,
“ஸ்ரீ, இதுதான் அந்த பேலஸ். இங்க வரப்போறவங்க ராஜ பரம்பரையை சேர்ந்தவங்களாம். இவங்க மனசு வச்சா நாம எங்கையோ போய்றலாம்…” என்று சீரியஸாக அவளிடம் சொல்ல அதுவரை இருந்த டென்ஷன் மறைந்து ஸ்ரீ சிரித்துவிட,
“ஹப்பாடா சிரிச்சியா, சும்மா வந்தன்னைக்கே உன் தொழில் பக்தியை இதுல செலுத்தாத. உன் ஸ்பீட் எனக்கு ஜெர்க் ஆகுது…” என்று கிண்டல் செய்ய,
“உன்னை வச்சு இங்க வேலை பார்க்கனும் பாரு. எனக்கு தான் ஜெர்க் ஆகும்…” என பேசியபடி இருவரும் உள்ளே செல்ல முதல் தளத்தில் யாருமற்ற அந்த கட்டிடத்தின் அமைப்பை பார்த்தபடி அங்கேயே நின்றுவிட,
“ஸ்ரீ அங்க பார் பிளாஸ்டிக் சேர் இருக்கு….” என எடுத்து வந்து ரோஜா அமர்ந்து கொள்ள,
“இவ்வளோ நேரம் உட்கார்ந்து தான வண்டி ஓட்டிட்டு வந்த…” என கடிந்து கொண்டே தானும் அமர,
“அப்ப இனி நீ வண்டி ஒட்டு. நான் உன் பின்னால உட்கார்ந்து வரேன்…” என ரோஜா அவளை மறைமுகமாய் மிரட்ட,
“தெரியாம சொல்லிட்டேன் தாயே?…” என சரணடைந்தாள்.
“நாம கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டோம் போல. இன்னும் ஒருத்தரையும் காணோம்…” ஸ்ரீ சுற்றிலும் பார்த்தபடி சொல்ல,
“ஹலோ மேம்…” என்றபடி ஒருவர் வந்துவிட்டார். அவரை பார்த்ததும் எழுந்து நிற்க,
“நான் தான் மேனேஜர் கந்தசாமி. இந்த பிராஞ்ச் இன்சார்ஜ்…” என அறிமுகப்படுத்தியவருக்கு தாங்களும் சுய அறிமுகம் செய்துகொள்ள,
“நீங்க வருவீங்கன்னு ஸார் சொல்லியிருந்தார். வாங்க ஆபீஸ் ரூம் தேர்ட் ப்ளோர்ல இருக்கு…” என்றவர் அழைத்து செல்ல லிப்டில் சென்றனர்.
அங்கே மூன்று அறைகள் தனித்தனியாக இருக்க அதில் ஒரு அறைக்கு அழைத்து சென்றவர்,
“இங்க தான் உங்களுக்கு கேபின் ஒதுக்கியிருகோம். நீங்க இங்க இருங்க. இப்ப தம்பி வந்துடுவார்…” என்று அவர் சென்றுவிட ஒரு பெருமூச்சுடன் அமர்ந்தனர் ரோஜாவும், ஸ்ரீநிதியும்.
அந்த அறையில் மேலும் இரண்டு இருக்கையும் மேஜையும் இருக்க அறையின் இன்னொரு பக்கத்தில் ப்ரஜெக்டர், அதற்கு ஸ்க்ரீன் என அனைத்தும் தயாராய் இருந்தது.
“இதெல்லாம் வேணும்னு நாம வந்து தான சொல்லுவோம். அதுக்குள்ளே எல்லாம் ரெடியா இருக்கு போல…” என ரோஜா சொல்ல,
“இது யுவர்ஸ் ஹோம்ஸோட புது பிராஞ்ச். இதையே மெயினா மாத்தறதா ப்ளான். அதான் இந்த பில்டிங்க்கு நமக்கு இத்தனை இன்ஸ்ட்ரக்ஷன். இதை ரெடி பண்ணி தந்தா நம்மோட கம்பெனில நெக்ஸ்ட் மூவ் ஆரம்பிச்சுடுவாங்க. என்ன ஒன்னு மத்த ப்ராஜெக்ட்ல நாம முடிச்சு குடுத்து ரிப்போர்ட் பண்ணா அதோட வேலை முடிஞ்சிரும். ஆனா இங்க மொத்த வேலையும் முடியற வரைக்கும் நாமக்கும் இங்கதான் வொர்க்…”
யுவர்ஸ் ஹோம்ஸ் & அப்ளையன்ஸ் சென்னை, மதுரை, சேலம், திருச்சி என மிகவும் முக்கிய நகரங்களில் பிரபலமான கடை.
எலக்ட்ரானிக்ஸ் முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமான முறையில் விற்பனை செய்யப்படும் இடம். சென்னையில் மட்டுமே மூன்று கிளைகள் கொண்டு அந்தந்த இடங்களில் முன்னணி வகிக்கிறது.
ஸ்ரீ அதனை பற்றிய விவரங்களை மீண்டும் சொல்ல சொல்ல ரோஜாவிற்கு காது வலிக்க ஆரம்பித்தது.
“கேட்டதையை திரும்ப நீ சொல்லாத ஸ்ரீ. அதான் ஆபீஸ்ல அத்தனை தடவை சொன்னாங்கல்ல. போதும்…” என்றவள் அங்கிருந்த டெக்ஸ்டாப்பை ஆன் செய்ய மீண்டும் மேனேஜர் வந்துவிட்டார்.
“தம்பி வந்தாச்சு. உங்களை கூப்பிட்டார்…”
“பெரிய ராஜா, இதை தாண்டி தான போயிருப்பார். இருக்கற நாலு ரூம்ல ஒரு ரூம்ல வந்து ஒரு ஹாய் சொல்ல என்ன? இப்ப தான் டெக்ஸ்டாப் ஆன் பண்ணேன்…” என ரோஜா சொல்ல,
“நீ தான சொன்ன இது பேலஸ், இங்க இருக்கறவங்க ராஜ பரம்பரையை சேர்ந்தவங்கன்னு. அதான் ராஜா நம்மளை வர சொல்லி கட்டளை போட்டிருக்கார்…” என்று ஸ்ரீ கிண்டலடிக்க,
“ரிவெஞ்சா, வச்சிக்கறேன்…” என்று ரோஜாவும் செல்ல இருவரும் அங்கே இருந்த இன்னொரு அறைக்குள் நுழைய ரோஜாவின் சிரித்த முகம் அப்படியே இன்னும் அகலமாகியது. அந்த அதிர்ச்சியில்,
“ஐயோ தொப்பை அங்கிள்…” என்று சொல்லிவிட ஸ்ரீ அவளின் காலை மிதித்தாள் பட்டென்று. அதில் சுதாரித்தவள் அங்கு அமர்ந்திருந்தவனை பார்த்து,
“ஹலோ ஸார்….” என்றாள் அஷ்டகோணலான முகத்துடன்.
பதிலுக்கு ஒரு வரவேற்கும் பார்வை கூட பாராமல் இருவரையும் அளவிடுவதை போல அவன் பார்த்துவிட்டு தனது லேப்டாப்பை ஓபன் செய்ய,
“போச்சு பெரிய கம்ப்ளைன்ட்டோட நம்மளை இன்னைக்கே அனுப்ப போறான்…” என்ற ரோஜாவின் முணுமுணுப்பில் எரிச்சலான ஸ்ரீ,
“ஜஸ்ட் ஷட் அப் ரோஜா…” என்று சொல்ல,
“பார்த்தியா, இவன் பக்கத்துல யார் இருந்தாலும் இந்த ஆங்ரி வைப்ரேஷன் அட்டாக் பண்ணுது. அவன மாதிரியே கோபப்படற. இந்த வைப்ரேஷன் நமக்கு செட் ஆகுமா?…”
“ம்க்கும், தென்…” என கேட்க,
“எஸ் ஸார்…” என்றாள் ஸ்ரீ தன்மையாக.
“பர்ஸ்ட் பில்டிங்கை பார்த்துட்டு வாங்க…” என சொல்லி அவர்களை அனுப்ப ரோஜா அவனை திரும்பி பார்க்க என்னவென்று புருவத்தை உயர்த்தினான் விதுரன். பதறி ஸ்ரீயின் பின்னால் ஓடியேவிட்டாள் ரோஜா.
உள்ளே வரும் பொழுதே அவர்களை பார்த்து விட்டான் விதுரன். ஒரு நிமிடம் தான் அவன் யோசித்ததெல்லாம். அதன் பின்னர் அவர்கள் வேலைக்கென வந்திருக்கிறார்கள். இதில் என்ன இருக்கிறதென்று அமைதியாகிவிட்டான்.
அதை விட தன்னை ரோஜா பார்க்கும் நேரம் எப்படி ரியாக்ட் செய்வாள் என்பதை பார்க்க அவனுக்கு சற்று ஆவல் பிறந்ததும் உண்மை. அதற்கென்றே அவர்களை வரவழைக்க அவன் எதிர்பார்த்ததை போல ரோஜா அதிர இவனுக்கு சந்தோஷமாக இருந்தது.
தனது லேப்டாப்பில் அவள் செல்லும் இடங்களையும், பார்க்கும் விதங்களையும் இவன் கவனிக்க ஆரம்பித்தான்.
ஒரு இடத்தில் பெரிய பிள்ளையார் சிலை விளக்கேற்றப்பட்டு பூஜை செய்யப்பட்டு இருந்தது. அதனை பார்த்ததும் அருகே சென்று சாமியை கும்பிட்டவள் ஸ்ரீயை பார்க்க அவள் மேனேஜருடன் சென்று கொண்டிருந்தாள். மீண்டும் கை கூப்பிய ரோஜா,
“குடுத்தவனே பறித்துக்கொள்வான்டி என் மானேன்ற மாதிரி நானே அல்லாடித்தள்ளாடி வீட்டை சமாளிச்சு இந்த வேலைக்கு வந்தா காலு வைக்கிற இடத்துல எல்லா கண்ணிவெடி வச்சா எப்படி என் தெய்வமே என் தெய்வமே?…”
முணுமுணுப்பான குரலில் முறையிட அவளுக்கு அருகே இருந்த கேமராவில் அவளின் வேண்டுகோள் அச்சு பிசகாமல் விதுரனுக்கு கேட்க அவள் மேலும் என்ன சொல்வாள் என்பதை சிரிப்புடன் கவனித்தான்.
“என்னை உனக்கு அகைன்ஸ்ட்டா மாத்தாம விடமாட்டியா என் தெய்வமே? குட் லுக்கிங்ன்னு சொன்னதுக்கே கொலைவெறி லுக் தான் டெலிவரி. இதுல தொப்பை பஞ்ச் வேற அள்ளி வீசிருக்கேன். என்ன ஆக போகுதோ?. ஹ்ம்ம் சமாளிப்போம்…” என புலம்ப அவளை பார்த்தபடி அறைக்குள் இருந்து பார்த்து சிரிப்பை அடக்கியபடி பார்த்தான் விதுரன்.
அவள் அவ்விடம் விட்டுவிட்டு நகர்ந்ததும் விதுரனின் இதழ்களில் புன்னகை அப்படியே இருந்தது.
அவளின் பேச்சுகள் இப்பொழுது சற்று சுவாரஸியத்தை தர சிரிப்புடன் அவர்கள் வருவதற்காக காத்திருந்தவன் அங்கே என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் பட்டியலிட்டுக்கொண்டிருந்தான்.
மூன்று தளங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சில குறிப்புகளும் எடுத்துக்கொண்டு அவர்கள் வந்துவிட தன்னுடைய ப்ளானை அவர்களுக்கு விவரித்தான் விதுரன்.
“இந்த யுவர்ஸ் ஹோம்ஸ் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்ன்னு நம்பறேன். இங்க எல்லா மால் போலவும் இருக்க கூடாது. எதோட ரிலேட்டடாகவும் இருக்க கூடாது. கொஞ்சம் புதுசா வரவங்களை இம்ப்ரெஸ் பன்ற மாதிரி இருக்கனும்…” என்று சொல்லி முடிக்க,
“பிப்டி பர்சண்டேஜ்க்கு மேல ஆஃபர் குடுத்தா தானா இம்ப்ரேஸ் ஆக போறாங்க. இதுல புதுசாவாம்…” என்று ஸ்ரீயிடம் ரோஜா முணுமுணுக்க,
“உங்களோட ப்ச், யூ, மிஸ் ரோஜா உங்களோட ஓவர் ஸ்மார்ட்னஸ் இங்க காண்பிக்க வேண்டாம். காட் இட்…” என்று அவளை சுட்டிக்காட்ட,
“ஸார், பேசிக்கலி. நான் ரொம்ப ஒபிடியண்ட் கேர்ள் தான். என்ன ஒண்ணு என்கிட்ட யாராச்சும் கோபமா பேசினா தான் நானும் என் கன்ட்ரோலை லூஸ் பண்ணிடுவேன். மத்தபடி நான் ரொம்ப ஸ்வீட் கேர்ள் யூ நோ…” என்று ரோஜா சொன்ன விதம் விதுரனின் இதழ்களில் மெல்லிய சிரிப்பை வரவழைத்தது.
ஆனாலும் அதனை அடக்கிக்கொண்டவன் அவளை கூர்மையாக பார்த்து,
“இதை தான் சொன்னேன், இப்படி பேசறதுக்கு வேலையை கவனிக்கலாம்ன்னு. இந்த பில்டிங்கை பத்தி உங்க ஆபீஸ்ல சொல்லியிருப்பாங்க தானே? இந்த நாங்க மெய்ன் ப்ராஞ்ச்சா மாத்தறதா இருக்கோம். ஸோ…”
“எஸ் ஸார். எங்க பெஸ்ட்டை குடுப்போம்…” என்ற ஸ்ரீ அதற்கு மேல் ரோஜாவை அங்கே இருக்க விடாமல் இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். தங்களறைக்குள் நுழைந்ததும்,
“ஏன் ஸ்ரீ பேச விடாம இழுத்துட்டு வந்த?…” என்ற ரோஜாவை முறைத்த ஸ்ரீ,
“நீ பேசின வரைக்கும் போதும். பேசாம இரு…”
“காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்ன்னு கேஜிஎஃப்ல சொல்லிருக்காங்க…” என சொல்ல,
“இப்ப எதுக்குடி இது?…” என்ற ஸ்ரீ தண்ணீரை குடித்துவிட்டு தனது இருக்கையில் அமர,
“ஒரு ப்லோல போகும் போது பேசாம கேட்கனும். கூட கூட பேசி டைவர்ட் பண்ணாத ஸ்ரீ…” என்ற ரோஜாவை முறைத்த ஸ்ரீ,
“உன்ன வச்சு ஒரு ஆணி கூட அடிக்க முடியலடி. அதை விடு. முதல்ல வந்த வேலையை பார்ப்போமா?…”
“நான்லாம் நேசமணி மாதிரி, எப்ப ட்ரெண்ட் ஆவேன்னு யாருக்கும் தெரியாது. ஆணி என்ன அரண்மனையே கட்டறேன் பாரு…” என்று அப்பொழுதும் விடாமல் பேச,
“உள்ள வேலையைவே பார்க்க விடமாட்டேன்ற நீ. இது ஆகறதில்லை. நான் இங்க இருந்து ரிலீவ் ஆகிட்டு சங்குவை உனக்கு போட சொல்றேன். அவளுக்கும் சேர்த்து நீயே எல்லா வேலையையும் பாரு…” என ஸ்ரீ மிரட்டவும் தான் அமைதியானாள் ரோஜா.
எத்தனை பேச்சுக்கள் இருந்தாலும் வேலை என்று வந்துவிட்டால் அத்தனை சுறுசுறுப்பு தான்.
இருவரும் சேர்ந்து அதன் வடிவமைப்பை தயாரித்து அதற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டு வர ஆரம்பித்தனர்.
மாற்றங்கள் அந்த கட்டிடத்தில் மட்டுமா? கனவுகள் நிறைந்த கன்னிகையிடத்தில் நிகழுமா? அல்ல கடமைகள் கொண்ட காளையின் மனதில் முகிழுமா?
விதுரனிடம் தான் இப்பொழுது மகள் வேலை பார்க்கிறாள் என்று சேகரனுக்கு தெரிந்தால்?
அனைத்து கேள்விகளுக்கும் விடை வந்து சேரும் அந்த மையப்புள்ளி ஒருவருக்கு முற்றுப்புள்ளி.