“ரோஜா, என்ன பன்ற இன்னும்?…” என்றவனின் இரைச்சலில் கடுப்புடன் அறையை விட்டு வேகமாய் வெளியே வந்தவள்,
“உங்களுக்கு வேற வேலையே இல்லையா? எப்ப பார்த்தாலும் என்னை ஏலம் விட்டுட்டே இருக்கறது. மெதுவா கூப்பிட்டா வராம என்ன பண்ண போறேன்? அப்டியே உங்கள விட்டுட்டு ஓடிருவேனா?…” என்று அவனுக்கு மேல் கத்திக்கொண்டு வந்தாள் அவள்.
“சொல்லுவ நீ. ஐஞ்சு மணிக்கு ரெடியா இருக்க சொன்னா டைம் என்ன பாரு? எப்போ நாம போறது?…” என்று தனது வாட்சில் நேரத்தை பார்த்து சொல்ல,
“இன்னும் அஞ்சு ஆகலை தானே?…” என அவளும் மணியை பார்த்து சொல்ல அப்பொழுது தான் அவளின் உடையை கவனித்தான் விதுரன்.
தலை சீவி நெற்றி வகிட்டில் குங்குமம், தலை நிறைய மல்லிகை பூ, தான் அவளுக்கு அணிவித்த திருமாங்கல்யம் சகிதம் முழு அலங்காரத்துடன் அழகுடன் மிளிர்ந்தவள் ஒன்றை சரியாய் செய்யாமல் விட்டிருந்தாள்.
“என்னடி இது ஒழுங்கா கட்டலை?…” என இடுப்பில் கை வைத்து அவளை பார்த்து மிரட்டலாய் கேட்க,
“அதுதான் தினமும் யோசிக்கிறேன். உங்களை நான் ஒழுங்கா பார்த்து கட்டிருக்கலாம். ஒழுங்கா கட்டலை தான். இப்ப யோசிச்சு என்ன செய்ய?…” என எகிறிக்கொண்டு வந்தவளை கண்டு சிரித்தவன்,
“ஹேய் அந்த கட்டலை இல்லை. புடவை ஒழுங்கா கட்டலை…” என்று சிரிக்க தன்னை குனிந்து பார்த்தாள் ரோஜா.
புடவையை கன்னாபின்னாவென்று சுத்தியிருந்தாள் தன் மேல். ஏற்கனவே புடவை கட்ட முடியவில்லை என்ற எரிச்சலில் இருந்தவள் விதுரன் வேறு கிண்டல் செய்யவும் முகத்தை சுருக்கிக்கொண்டு அதனை எங்கெங்கோ சொருக அவளின் முயற்சியில் இன்னும் வாய்விட்டு சிரித்தவனை கோபத்துடன் பார்த்தவள்,
“நான் வரவே இல்லை. நீங்களே போங்க. எனக்கு புடவையும் கட்ட வரலை. உங்களையும் கட்ட வரலை…” என்று முறுக்கிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்து அறைக்குள் நுழைய அவளின் பின்னே வந்து கதவை சாற்றியவன்,
“செல்லம்ல. இப்ப என்ன புடவை கட்ட வரலைனா நான் சொல்லி தரேன்…” என்று அவளை பின்னிருந்து அணைத்துக்கொள்ள,
“அதெப்டி உங்களுக்கு தெரியுமாம்?. கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல எனக்கே தெரியலை…” என்று அவனை விட்டுவிட்டு விலகுவதில் முனைப்பாக,
“கொஞ்சம் சைலன்ட்டா நில்லு ரோஜா. என்னை கட்ட எப்படி சொல்லி தந்தேனோ அப்படி சொல்லித்தரேன். கட்டிக்கலாம் புடவை மட்டுமில்லை…” என்று அவளோடு இழைந்தபடி இன்னும் நெருக்கமாய் அவன் ஒட்ட,
“இது கட்டற மாதிரி இல்லை. பசை மாதிரி ஒட்டுற மாதிரி தெரியுது. போகலையா நீங்க?…”
“ம்ஹூம் நீ இல்லாம போறதா இல்லை. நீ வரலைன்னா நோ ப்ராப்ளம். நாம இங்கயே புடவை கட்ட கத்துக்கலாம்…” என்று தன் பக்கமாய் திரும்பி அவளின் மூக்கை உரசியவனின் கைகள் சுதந்திரமாகவும், உரிமையாகவும் அவளின் அங்கமெங்கும் மின்னல் வேகத்தில் உரசி, காது மடல்களுக்கு முத்தமிட்டுக்கொண்டே,
“நீராக உன் உடல் நெளியுது, வளையுது மூழ்கவா, தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா…” என்று பாடியவனின் குரலில் மனம் மயங்க அவனின் தோள் சாயவிருந்தவள்,
“உங்களுக்கு பாட்டு வேற, ஒன்னும் எனக்கு கத்து குடுக்க வேண்டாம்…” என அவனை தள்ள,
“ரோஜா…” என்ற முணங்கலுடன் ஒரு கையால் அவளின் முகத்தை தனக்கு நெருக்கமாய் கொண்டு வந்தவனின் இன்னொரு கை அவளின் புடவையை பற்றி இழுக்க,
“விடு, ப்ச், விடுங்கறேன்ல. என்னை கலாய்ச்ச உன் கையால புடவை கட்டிக்க மாட்டேன்…” என்று அவள் திமிற அவளின் இதழ்களை சமீபித்தவனின் மூக்கை எக்கி நன்றாய் கடித்தவள் ஒரு கையால் தனது புடவையையும் ஒரே வேகத்தில் பிடுங்கி அவனை கீழே தள்ளினாள்.
“என் புடவை குடுக்க மாட்டேன். போடா நீ போ…” என்று கத்தி கையில் இருந்ததை யாரும் உருவிவிட முடியாதபடி சுருட்டி தன் நெஞ்சோடு இறுக்கி கொண்ட ரோஜா கண்களை திறப்பேனா என்று மூடி இருக்க,
“ரோஜா ஸ்கர்ட்டை குடுடி, ஸ்கர்ட்டை குடு…” என அவளின் கையில் இருந்த தன் ஸ்கர்ட்டை உருவ போராடிக்கொண்டிருந்தாள் சங்கவி.
“மாட்டேன். நான் கேட்டேனா புடவை கட்டி விடுன்னு…”
“புடவையா? அடிப்பாவி அது என் ஸ்கர்ட்டுடி. குடு ரோஜா…” என்ற சங்கவியின் சத்தத்தில் ஸ்ரீயும், விலாசினியும் எழுந்து வந்து விட்டனர்.
கதவை திறந்து கொண்டு அவர்கள் வந்து லைட்டை போட்டதும் வேகமாய் ஒரு டவலை எடுத்து இடுப்பில் கட்டினாள் சங்கவி.
“என்ன கோலம்டி இது?…” என்று ஸ்ரீ கேட்க அவளை பார்த்த விலாசினி வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க,
“என்ன கவி உன் மூக்குல?…” என இன்னும் பக்கத்தில் வந்து பார்க்க ரோஜாவின் பற்கள் நன்றாய் பதிந்துவிட்டிருந்தது அவளின் மூக்கில். தொட்டதும் வலியில் முகம் சுருக்கியவள்,
“இவ தான். தூக்கத்துல என்ன கனவை கண்டானு தெரியலை. என்னை அசைய விடாம இழுத்து புடிச்சு மூக்கை கடிச்சு வச்சதும் இல்லாம புடவையை தான்னு கேட்டு என் ஸ்கர்ட்டை உருவி என்னை கீழ தள்ளி விட்டுட்டா. கடிச்சதுல மூக்கும், கீழே விழுந்ததுல காலும் வலிக்குது…” என்று கலங்கிவிட்ட கண்களுடன் சொல்ல,
“இரு நான் எழுப்பறேன்…” என்ற ஸ்ரீ ரோஜாவை அடித்து எழுப்ப,
“நா புடவையை தரமாட்டேன். போடா…” என இன்னமும் கனவு கலையாமல் ரோஜா உளற,
“போடாவா?…” என ஸ்ரீ குழப்பத்துடன் பார்க்க,
“இதத்தான் சொல்றா. அப்பத்தான்டி திரும்பி கையை தான் போட்டேன். கடிச்சு வச்சுட்டா…” என்று மூக்கை காட்ட ஸ்ரீக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு,
“ஹேய் தெரியாம பன்றா. நீ அழற? இரு எழுப்புவோம்…” என மீண்டும் ஸ்ரீ தட்ட,
“இதெல்லாம் ரோஸ்க்கு கரெக்ட் கிடையாது….” என்ற விலாசினி ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்து ரோஜாவின் முகத்தில் ஊற்ற அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்தாள் அவள்.
மூவரும் நிற்பதை பார்த்தவள் ஒரு நிமிடம் என்ன நடந்ததென புரியாமல் விழித்துவிட்டு சங்கவியை பார்த்து,
“என்னடி டவலோட நிக்கிற? டயரியாவா? நீ போறதுனா போ. என்னை எதுக்குடி எழுப்பின? கூட இவளுங்க வேற? இப்ப பாரு பெட் எல்லாம் தண்ணி….” என்றவள் உதறிக்கொண்டு எழுந்து நிற்க அவளின் மேல் இருந்த ஸ்கர்ட்டும் சேர்ந்து கீழே விழுந்தது.
“என்னடி ஸ்கர்ட்டை கழட்டி என் மேல போட்ருக்க?…” என்றவளை மீண்டும் பெட்டின் மேல் தள்ளி மொத்த ஆரம்பித்தாள் சங்கவி.
“ஸ்கர்ட்டை உருவிட்டு மூக்கையும் கடிச்சுட்டு ஒன்னும் தெரியாத புள்ளையாட்டம் கேள்வியா கேட்கற? இப்ப நான் நாளைக்கு எப்படி ஆபீஸ் போக? எல்லாரும் என்னன்னு கேட்பாங்களே? போச்சு போச்சு என் மானமே போச்சு…” என சொல்லி சொல்லி அடிக்க அவர்களை பிரித்து விடுவதில் மற்ற இருவரும் மும்மரமாக நான்குபேரும் சேர்ந்து அந்த அறையின் தரையில் உருண்டனர்.
மூச்சு வாங்க ஆளுக்கொரு மூலையில் சுவற்றில் சாய்ந்து அமர ரோஜாவின் முகத்தை பார்த்துவிட்டு மூவரும் விழுந்து விழுந்து சிரிக்க பாவமாய் பார்த்தாள்.
அப்பொழுது தான் தான் கண்ட கனவே ரோஜாவுக்கு உரைக்க தூக்கிவாரி போட்டது அவள் உடல். இது எப்படி? என மனது அத்தனை குழம்பி போய் இருந்தது.
முதல்நாள் அவனின் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து தான் இந்த குழப்பம் என உணர்ந்தவள் தலையில் கை வைத்து அமர்ந்தாள்.
“என்னடி கனவு, இப்போலாம் உனக்கு அடிக்கடி கனவு வருதே?…” என விலாசினி கண்ணடித்து கேட்க,
“ஹேய் வெய்ட் வெய்ட், என்ன கதையா இருந்தாலும் நான் ஸ்கர்ட் போட்டுட்டு வரவும் சொல்லு…” என்று எழுந்த சங்கவி வேறொரு ஸ்கர்ட்டை போட்டுவிட்டு வேகமாய் வர,
“இதை முதல்லையே செஞ்சிருக்கலாம் தானே? நாங்க வேற ப்ரீ ஷோ பார்த்துட்டோம். சரியான ஷேம்லஸ் கேர்ள் நீ…” என ஸ்ரீ சிரிக்க,
“ஒரு நாளாச்சும் இவளோட நீ தூங்கி பாரு. அப்ப தெரியும்…” என சங்கவி சொல்ல,
“உன் பஞ்சாயத்துக்கு அப்பறமா ஜட்ஜ்மென்ட் வச்சுக்கலாம். இப்ப நம்ம ஹீரோயின் சொல்லட்டும். யாருடி அது கனவுல வந்து புடவை கேட்ட ஆள்?…” என்று விலாசினி கேட்ட விதத்தில் முகத்தை மூடிக்கொண்ட ரோஜா,
“சொல்லமாட்டேன், சொல்லமாட்டேன்…” என மூவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு அவளின் செயலில்.
“புது ப்ராஜெக்ட் போக ஆரம்பிச்சு பத்து நாள் ஆகியிருக்குமா? அதுக்குள்ளே இத்தனை ட்ரீம்ஸ்…” என்றவளின் பேச்சில் முகம் சிவக்க அவர்களை முறைத்தவள்,
“எழுந்து போங்கடி, தூங்குங்க. என்ன கனவுன்னு மறந்து போச்சு…” என விரட்ட,
“அதான் நீ பேசின டயலாக்கை கவி சொல்றா இல்ல. அதை வச்சு யோசனை பண்ணி பாரு. ஞாபகம் வரும்…” விலாசினி விடுவதாய் இல்லை.
அவளோடு சங்கவியும் சேர்ந்துகொள்ள இருவருமாய் ரோஜாவை ஓட்டிக்கொண்டு இருக்க ஸ்ரீ மட்டுமே அவளை அமைதியா பார்த்தபடி புன்னகையுடன் அமர்ந்து இருந்தாள்.
“ஸ்ரீ நான் உன்னோட வந்து படுத்துக்கறேன். இங்க தண்ணியாகிடுச்சு…” என சொல்லியவள் முகம் வியர்த்துப்போய் அமர்ந்திருக்க,
“ஒன்னும் வேணாம். இங்கயே படுக்கலாம்…” என ஒரு பெரிய பெட்ஷீட்டை எடுத்து விரித்த விலாசினி நால்வருக்கும் தலையணையையும் எடுத்து போட அங்கேயே படுத்துக்கொண்டனர்.
படுத்த சில நொடிகளில் விலாசினியும் சங்கவியும் உறங்கிவிட ஸ்ரீ கைகள் ரோஜாவை தேடியது. அவள் இன்னும் தூங்கவில்லை என்பதை புரிந்து கொண்ட ஸ்ரீ அவளின் தோளில் மெதுவாய் மென்மையாய் தட்டிக்கொடுக்க,
“நீ தூங்கு ஸ்ரீ…” என்றாள் ரோஜா.
“எனக்கு தெரியும், நீ தூங்கு முதல்ல. பின்ன நாளைக்கு அங்க வந்துட்டு தூங்கினா அந்த விதுரன் எதாச்சும் நக்கலா பேசுவார்…” என சொல்ல,
“இப்ப ஏன் அவனை பேசற?…” என ரோஜா எழுந்து அமர அவளின் செய்கையை வித்தியாசமாய் பார்த்த ஸ்ரீ,
“என்ன ரோஜா?…” என்றாள் தானும் எழுந்து அமர்ந்து. உடனே சுதாரித்த ரோஜா,
“அது வந்து, இல்ல தூங்கறப்பவும் எதுக்கு ஆபீஸ் டென்ஷன். அதான், பேசாம தூங்கு…” என்ற ரோஜா அதன் பின் அசையவே இல்லை.
மனதிற்குள் அவனின் வீட்டிற்கு சென்றிருக்கவே கூடாது, அதனால் தேவையில்லாமல் நினைத்து இப்படியெல்லாம் நடக்கிறது என மானசீகமாய் தன்னை திட்டிக்கொண்டாள்.
அவள் முயன்று அப்படி இருப்பதை உணர்ந்துகொண்ட ஸ்ரீ கண்ணை மூடினாலும் இது விதுரன் சம்பந்தப்பட்ட ஒன்றுதான் என உறுதியாக நினைத்தாள்.
மறுநாள் காலை எழுந்ததும் கனவின் தாக்கம் இன்னும் அவளின் மனதை விட்டு அகலவில்லை. குளித்துவிட்டு கிளம்பி வந்து கண்ணாடியின் முன்பு நின்றவள் விரல்கள் அவளறியாமல் தன் நெற்றி வகிட்டிற்கு சென்று வருடியது.
பின் கழுத்தில் இறங்க கழுத்தை ஒட்டிய மெல்லிய தங்க செயின் தான் அவளின் கைகளுக்கு தட்டுப்பட்டது. கண்ணை மூடி கனவில் நடந்ததை நினைவு கூற அதில் தடிமனான தாலி சரடும், இன்னொரு செயினும் இருக்க நெற்றியில் குங்குமம் ஒளிர்ந்தது.
படக்கென கண்ணை திறந்தவள் தலையை உலுக்கிக்கொண்டாள். அதை நினைக்காத என மனதிற்கு சொல்லிக்கொண்டவள்,
“ரோஜா நீ சரியில்ல, சரியில்ல. கனவு கனவாவே போகட்டும்…” என தன்னை பார்த்து சொல்லிக்கொண்டவள் ஒரு நிமிடம் கண்ணை மூடி ஆழ்ந்த மூச்செடுத்துக்கொண்டாள்.
கண்ணை திறக்கும் பொழுது அதிலிருந்து விடுபட்டு பழைய ரோஜாவாய் மீண்டிருந்தவள் உற்சாகத்துடன் கிளம்ப ஆரம்பித்தாள்.
குளியலறையில் இருந்து இவற்றை கவனித்துக்கொண்டிருந்த ஸ்ரீ ரோஜா கிளம்பி வெளியே வரும் முன்பே வெளியில் வந்து மற்ற இருவரையும் எச்சரித்தாள் எதுவும் ரோஜாவிடம் கேட்க கூடாதென.