“ஆளை விடுங்கடி. விட்டா கடிச்சே மூக்கை கழட்டிருவீங்க. இப்ப நான் ஆபீஸ்ல ஒரு ரீசன் சொல்லனும். அதுக்கு ஹெல்ப் பண்ணுங்க…” என கேட்க ஆளுக்கொன்றாய் சொல்ல,
“சுத்தம் இதுல ஒன்னும் வேலைக்காகாது. நானே பார்த்துக்கறேன்…” என்று உண்டு முடித்து கையை கழுவி வர ரோஜாவும் ஸ்ரீயும் கூட அவளுடனே கிளம்பினார்கள்.
ஒரு வழியாக ட்ராபிக்கில் சிக்கி சற்று தாமதமாக தான் அலுவலகம் வந்து சேர்ந்தனர்.
வழக்கம் போல ரோஜா சலசலத்துக்கொண்டே வேலையில் ஆழ்ந்து விட்டாள். அங்கே பார்வையிட வந்த விதுரன் இவர்களை பார்த்து உள்ளே வந்தான்.
கட்டிடத்தில் வேலை ஆரம்பித்திருந்தது. ரோஜாவும், ஸ்ரீயும் டிஸைன்களை தயார் செய்ய செய்ய ஒருபக்கம் வேலையும் ஆரம்பித்துவிட்டான். மொத்தமாய் என்று தயாரித்து முடிக்க என்று வேலை ஆரம்பிக்க என ஒரே நேரத்தில் துவங்க சொல்லிவிட்டான்.
பிடிக்கவில்லை, சரிவரவில்லை, ஒத்துப்போகவில்லை இப்படி எதுவும் என்றால் கூட உடனே மாற்றிவிடலாம் என்றும் கூட தான் இதை முடிவு செய்தான்.
அதனால் தங்களின் மற்ற கிளைகளில் அதற்கென ஆட்களை நியமித்துவிட்டு விதுரனே இதில் முழு மூச்சாக இறங்கிவிட்டான்.
ஏற்கனவே சடகோபன் சொல்லியிருந்தது தான். விதுரனை பார்க்க சொல்லி. மற்றதை சக்தி மேற்பார்வையில் விட்டிருந்தார்.
இன்றும் முதல் தளத்தில் வேலைகளை பார்வையிட்டுவிட்டு மேலே வந்தவன் தன்னறைக்கு செல்லாமல் இவர்களை தேடி வர ஸ்ரீ மட்டுமே அமர்ந்திருந்தாள் கேபினுள்.
“குட் மார்னிங்…” என்றவனை நிமிர்ந்து பார்த்த ஸ்ரீ,
“குட் மார்னிங் ஸார்…” என்றாள் புன்னகையுடன்.
இந்த பத்து நாளில் விதுரனிடம் மெல்லிய தோழமை உணர்வு வர ஆரம்பித்திருந்தது ஸ்ரீக்கு.
வந்த அன்று மட்டுமே அத்தனை கண்டிப்பாக இருந்தான். அதன் பின்னான நாட்களில் அவர்களிடம் கொஞ்சமே இலகுவாக பேச ஆரம்பித்திருந்தான். தட்டி கொடுத்து வேலை வாங்கும் பாங்கு அவனுக்கு நன்றாகவே வந்தது.
பேச்சுக்கள் கூட ஒரு எல்லை தான். ஒரு சிரிப்புடன் வரவேற்பான பார்வை. அவ்வளவு தான்.
ஆனால் வேலையில் சிறு தவறு என்றாலும் சட்டென கோபமாகிவிட்டாலும் பல்லை கடித்துக்கொண்டு வார்த்தைகளை அளந்து தான் பேசுவான். அதிலேயே அவனின் பிடித்தமின்மை புரிந்துவிடும் இவர்களுக்கு.
ஓரளவு அவனின் குண இயல்புகள் இவர்கள் இருவருக்கும் பிடிபட்டுவிட்டது எனலாம். எதுவும் அவன் இருக்கும் மூடை பொருத்தது.
அவ்வப்போது ரோஜா ஏதாவது எடக்குமடக்காக பேசிவிட்டாலும் என்னதான் சிரிப்பு வந்தாலும் சட்டென சிரித்துவிடமாட்டான். புன்னகை கூட அளவாய் தான். ரோஜா தான் அதையும் கிண்டல் செய்வாள்.
ஆனால் ஸ்ரீ மட்டும் உணர்ந்த ஒன்று. ரோஜாவை கண்டுவிட்டால் அவனின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை குடிகொண்டுவிடும். ஆனால் கட்டிக்கொள்ளாமல் இருக்க பிரயத்தனப்படுவதை போல தோன்றும். இருந்தும் கண்கள் சிரித்துக்கொண்டே தான் இருக்கும் விதுரனுக்கு.
ஏனோ விதுரன் ரோஜாவிடம் சற்று சலுகையுடன் இருப்பதாகவே தோன்றியது அவளுக்கு. ஒருவேளை ரோஜாவின் கலகலப்பான பேச்சு பிடித்ததால் கூட இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள்.
அன்றும் வந்து அமர்ந்தவன் ஸ்ரீயிடம் அவர்களின் வேலையை கேட்டுவிட்டு பார்வையால் ரோஜாவை தேடினான்.
ஸ்ரீயும் அவனாக கேட்கட்டும் என்று வாயை திறக்கவில்லை. வேலையில் ஆழ்ந்துவிட்டதை போல பாவனை செய்துகொண்டு அவனை பார்த்தும் பார்க்காததை போல இருக்க,
“எங்க ரோஜாவை காணலை? இன்னைக்கு வரலையா?…” என கேட்டேவிட்டான்.
அவனின் முகத்தை சட்டென ஆராய்ந்த ஸ்ரீக்கு எதுவும் பிடிபடவில்லை. அவனின் கேள்வி மிக சாதாரணமாக தான் இருந்தது.
“என்ன ஸ்ரீ, ரோஜா வரலயான்னு கேட்டா இப்படி பார்க்கறீங்க? ஓகே கேரிஆன்…” என்று எழுந்துகொள்ள,
“இல்ல செகெண்ட் ப்ளோர் வரைக்கும் ஒரு மெஷர்மென்ட் எடுக்க போய்ருக்கா…” என சொல்ல,
“ஓஹ் ஓகே…” என்றான் தன்னறைக்கு சென்று அமர்ந்தான் விதுரன்.
ஒவ்வொரு கிளைகளுக்கும் அழைத்து பேசிக்கொண்டிருந்தவன் கடைசியாக சக்திக்கு அழைக்க,
“விது, அங்க போடறதுக்கான லைட்ஸ் எல்லாம் நியு டிஸைன் ஒரு செட் வந்திருச்சு. போய் செக் பண்ணிக்கோ. செகெண்ட் ப்ளோர்ல இருக்கு. பார்த்திட்டு கால் பண்ணு. டீலர்ட்ட நெக்ஸ்ட் பேஜ் அனுப்ப சொல்லனும். இல்லைனா வேற டிஸைன் பார்க்கனும்…” என சக்தி சொல்ல,
“நான் பார்த்துட்டு கூப்பிடறேன்…” என்று எழுந்து கொண்டவன் மொபைலை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
ஸ்ரீயும் தன் அறையில் இருந்து அவன் செல்வதை பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவன் கிளம்புகிறான் என்று நினைத்திருந்தாள்.
“போய்ட்டான், ரோஜாவை மேல வர சொல்லுவோம். இன்னும் என்ன பன்றாளோ கீழ?…” என சொல்லிக்கொண்டே அவளுக்கு அழைக்க ரோஜாவின் அலைபேசி அறைக்குள்ளேயே தான் இருந்தது. அவள் எடுத்து செல்லவே இல்லை.
“ஹ்ம்ம், சுத்தம், மொபைலை வைச்சுட்டு போய்ட்டாளா? இவளுக்கு பேச ஆள் கிடைச்சா பேசிட்டே வேற இருப்பாளே. இன்னைக்கு யார் சிக்குனாங்களோ?…” என முணுமுணுத்துக்கொண்டே வேலையில் மூழ்க கீழே ரோஜா இருக்கும் திசையை நோக்கி சென்றான் விதுரன்.
அவளுக்கு பக்கவாட்டில் இருந்த இடத்தில் தான் அந்த பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டிருந்தன.
“ஹேய் ரோஜா, இன்னும் இங்க தனியா என்ன பன்றீங்க?…” என கேட்டதும் திடுக்கென திரும்பி பார்த்தவளுக்கு தூக்கிவாரிப்போட்டது அவனின் உடை.
கனவில் அவள் கண்ட அதே உடை. சட்டையின் முழு கையில் அதனை சரியாக மடித்துவிடாமல் இரண்டு மடிப்பை மட்டுமே ஏற்றி இருந்தான். அப்படியே கனவில் அவன் நின்ற அதே தோரணையுடன் புன்னகை முகமாய் நின்றான்.
கண்களை அழுத்தமாய் மூடி மீண்டும் திறந்து பார்த்தவளின் செய்கை அவனுக்கு விசித்திரமாய் பட,
“என்ன கேட்டேன்னு பேய பார்த்த மாதிரி பார்க்கறீங்க?…” என இரு கைகளையும் விரித்து தலையசைத்து அவன் கேட்க அந்த விரல்களில் இருந்த மோதிரமும், லேசாய் மடித்துவிட்டிருந்த கைக்கு வெளியே தெரிந்த பிரேஸ்லெட்டும் அவளின் கண்களை இன்னும் விரிய செய்ய,
“ரோஜா ஆர் யூ ஓகே…” என்றவனின் குரலில் தெளிந்தவள்,
“எஸ், எஸ், ஓகே ஓகே ஸார்…” என படபடத்தவள் அங்கிருந்து மெதுவாய் நகர அவளை பார்த்தவன் பின் தோளை குலுக்கிவிட்டு திரும்பி பெட்டிகளை பிரித்து பார்க்க ஆரம்பித்தான்.
“மெல்ல மெல்ல விரலில் திரன தீம் தனா,
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா,
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்…” என்றவனின் குரல் ரோஜாவின் நடையை தடை செய்ய சட்டென திரும்பி பார்த்தாள்.
அவன் பெட்டியை திறந்து கொண்டே மெல்லிய குரலில் பாட அந்த காலியான தளத்தில் அந்த குரல் பரவலாக எதிரொலித்தது.
அசைவற்று அவள் நின்றுவிட அந்த பெட்டியை தூக்கி கீழே வைக்க முயன்றவன் அது முடியாமல் மீண்டும் மறுபக்கத்திற்கு சென்று தூக்க பார்த்தவன் அங்கே நின்ற ரோஜாவை அப்பொழுது தான் பார்த்தான்.
“இன்னும் போகலையா? தேங்க் காட். கம் ரோஜா. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க…” என்று அழைக்க,
“ஐயோ போயிருக்கலாமே. இப்ப கூப்பிடறான்” என்ற பார்வையுடன் அங்கேயே நிற்க,
“ரோஜா?…” என்ற கேள்வியுடன் அவளை மீண்டும் அழைக்க போகாமல் இருக்க முடியாதென சென்றாள்.
“லைட்ஸ் வெய்ட்டா இருக்கு. க்ளாஸ் வேற. ஒரு கை பிடிங்க…” என்றதும் கையில் இருந்த குறிப்பேடை கீழே வைத்துவிட்டு அவனுக்கு உதவினாள்.
“கேர்ஃபுல்…” என சொல்லிக்கொண்டே அவன் கீழே வைக்க அவளும் மெதுவாய் இறக்கி வைத்தாள்.
“இந்த பாக்ஸையும் ஓபன் பண்ணிடலாம்…” என்றவன் மேலும் மூன்று பெட்டிகளை பிரிக்க ரோஜாவிற்கு வேலையில் கவனம் செல்லவே இல்லை. ரோஜாவை பார்த்தவனுக்கு அவள் சரியில்லாததை போல தோன்ற,
“ஓகே, தேங்க் யூ. நீங்க போகலாம்…” என்றவன் வெளியே எடுத்த அலங்கார விளக்கை உள்ளே வைத்தவன் யோசனையுடன் ரோஜாவை பார்த்தான்.
அவனின் பார்வையை கவனிக்காத அவனை கடந்து செல்ல தாண்டியவளின் கால்கள் கீழே கிடந்த வயரில் சிக்கி தடுமாறி கீழே விழ இருந்தாள் ரோஜா.
“ஹேய் லிட்டில் டெவில்…” என்ற சத்தத்துடன் சட்டென அவளின் கையை பிடித்து இழுத்த வேகத்தில் அவன் மேலேயே வந்து விழுந்தவளை தடுமாறாமல் பிடித்து நிறுத்திய விதுரனின் அணைப்பினுள் நின்றவள் உடல் வெளிப்படையாய் நடுங்கியது.
அங்கே ஓரத்தில் கீழே வெட்டி போடப்பட்டிருந்த டைல்ஸ்களும், அறுத்து போடப்பட்ட கண்ணாடிகளும் குவிந்து கிடக்க விழுந்தால் அதில் தான் விழுந்திருப்பாள். அதனால் உண்டான நடுக்கமும் அவனின் அணைப்பும் அவளை வசமிழக்க செய்ய மனம் செல்லும் போக்கில் சட்டென சுதாரித்தவளை,
“நத்திங். அதான் விழலைல. ரிலாக்ஸ்…” என்று அவளின் தோளை தட்டிக்கொடுக்க,
“இட்ஸ் ஓகே, விடுங்க. ப்ச். ஆ’ம், ஓகே, விடுங்க…” என்று அவனின் கைகளுக்குள் இருந்து வெளியே வந்தவளின் கால்கள் நிதானமாய் தரையில் நிற்காமல் இன்னும் வெடவெடக்க,
“ஹேய் திரும்ப விழுந்திடாத. வேணும்னா என் கையை பிடிச்சுக்க லிட்டில் டெவில்…” என்றவன் அவளின் கையை பிடிக்க பிடித்திருந்தவனின் கையை வேகமாய் தட்டிவிட்டவள் ஒற்றை விரலை நீட்டி எச்சரிப்பதை போல முறைத்துவிட்டு வேகமாய் அங்கிருந்து ஓடியே போனாள்.
“இவ்வளவு தான் உன் தைரியமா லிட்டில் டெவில். நீ சரியான பயந்த கோழி டெவில்…” என சொல்லியவனின் உதடுகள் புன்னகையில் விரிந்தது.
அவள் எதற்கு பயந்து ஓடியிருப்பாள் என்று யூகிக்க முடியாத அளவிற்கு முட்டாள் அல்லவே அவன். அதிலும் அவனின் கையை தட்டிவிட்டு முறைத்து விட்டு வேறு அவள் செல்ல அவளை நினைத்து சிரிப்புதான் அவனிடத்தில்.
அறைக்குள் நுழைந்தவளுக்கு மனது ஒரு நிலையில் இல்லாமல் சதிராட்டம் ஆட தண்ணீரை குடித்து தன்னை நிதானப்படுத்த முயன்றாள்.
நிற்கமுடியாமல் உடல் வியர்க்க வியர்க்க துடைத்தவள் கண்ணை மூடி இருக்கையில் அமர்ந்து,
“டேய் மூஞ்சியில தொப்பை வச்ச ஹேண்ட்சம், நீ விதுரன் இல்லை. என் விதி…” என சத்தமாக கத்தியவளின் மனதோ எரிச்சல் மிகுதியில் முரண்டியது.
அவள் வந்ததில் இருந்து ரோஜாவையே பார்த்துகொண்டிருந்த ஸ்ரீ அவளின் செயலில் குழம்பி இருக்க கடைசியில் அவள் சொல்லியது அதிர்ச்சிக்குள்ளாக்க,