“ஐயோ டேக்ஸ்…” என்று ரோஜா பதறி பார்க்க ஸ்ரீ முறைப்புடன் அவளை பார்த்து எழுந்து வந்தாள்.
“என்ன பண்ணிட்டிருக்க ரோஜா?…” என கேட்க மீண்டும் இரு கைகளையும் தலைக்கு முட்டு கொடுத்து அமர,
“இந்த வேலையெல்லாம் என்கிட்டே ஆகாது. சொல்லு…” என கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே விதுரன் வந்துவிட்டான்.
“நான் கொஞ்சம் வெளில போகவேண்டியதா இருக்கு. பர்ஸ்ட் ப்ளோர்ல வொர்க் நடக்குது. மறக்காம போய் செக் பண்ணிடுங்க. நான் வர லேட் ஆகும்…” என்றவன் ரோஜாவை ஒரு நமுட்டுச்சிரிப்புடன் பார்த்துவிட்டு செல்ல அதில் ரோஜாவை விட ஸ்ரீக்கு தான் அத்தனை கோபம்.
“இவனை போய் ஜென்டில்மேன்னு நினைச்சுட்டேன்” என எரிச்சலுடன் முணுமுணுத்தவள்,
“ரோஜா நாம ஆபீஸ்ல சொல்லி வேற ப்ராஜெக்ட் மாறிப்போமா?…” என்ற ஸ்ரீயை கேள்வியாக பார்த்தவள்,
“எதுக்கு நாம போகனும்? உனக்கு என்ன ஆச்சு ஸ்ரீ?…”
“எனக்கு எதுவும் ஆகலைம்மா. உனக்குத்தான் என்னவோ ஆச்சு. அதுவும் நேத்துல இருந்தே நீ சரியில்லை…” என சொல்ல ரோஜாவிற்கும் யாரோடமாவது சொன்னால் என்னவென்று தான் தோன்றியது.
“சொல்லி தொலையேன்டி, எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு…” என ஸ்ரீ அவாளி பிடித்து உலுக்க,
“அட ச்சீ, ஓவரா பண்ணாத. ஒன்னும் நடக்கலை. நேத்து அங்க போயிருக்கவே கூடாதோன்னு தோணுது…” என ரோஜா சொல்ல,
“என்ன செய்ய இப்ப பார்த்து ஆபீஸ்ல நமக்கு செய்வினை வைக்கறானுங்க. ப்ராஜெக்ட்க்குள்ள ப்ராஜெக்ட் நாம பண்ணினதே இல்லை. இப்ப பண்ண வச்சிட்டாங்க…” ஸ்ரீக்கு ஏக எரிச்சல்.
“ஒரே ப்ராஜெக்ட்ன்னு வேற சொன்னாங்களே?…” ரோஜா கேட்க,
“எது இப்டி ஒரு பில்டிங் வொர்க்கும், வீட்டை இன்டீரியர் பன்ற வொர்க்கும் ஒண்ணா?…” என ஸ்ரீ சொல்ல,
“ப்ளீஸ் ஸ்ரீ…” என்று ஆயாசத்துடன் முகத்தை மூடினாள் ரோஜா.
“இப்படிலாம் நீ இருந்ததில்லை ரோஜா, என்ன ப்ராப்ளம் சொல்லு…” என கேட்கவும் தான் வாயை திறந்தாள் ரோஜா.
முதல்நாள் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இருந்து அழைப்பு இவர்களுக்கு. விதுரனின் வீட்டையும் இண்ட்டீரியர் வொர்க் செய்ய வேண்டும் என்று. போய் பார்த்துவிட்டு ரிப்போர்ட் செய்யும் படி சொல்லிவிட்டனர்.
ஆபீசில் சொல்லிவிட்டபடியால் அன்றைய அலுவலக வேலையை மதியம் வரை பார்த்துவிட்டு சாப்பிட்டு முடித்ததும் விதுரனின் வீட்டிற்கு சென்றனர்.
அவர்களுக்காக அவன் வீட்டில் தயாராக இருக்க இவர்கள் இருவரையும் வரவேற்று அமர வைத்தவனின் வீட்டை பார்வையால் அளந்தனர்.
அத்தனை ஆச்சர்யம். வீடு அத்தனை பெரிதில்லாமல் எளிமையாக இருந்தது. யுவர்ஸ் ஹோம்ஸ் ஓனர் வீடு என்று சொன்னால் எவரும் நம்பிவிடமுடியாது. அப்படி இருந்தது.
கீழே இரண்டு படுக்கையறையும், சமையலறையும் அதனை ஒட்டியே பூஜை அறை, மேலே செல்வதற்கு மாடிப்படி அங்கு ஒரே ஒரு படுக்கை அறை. அவ்வளவு தான் வீட்டின் மொத்த பரப்பளவும்.
பொருட்கள் என்று சொல்லும் படி கூட எதுவும் இல்லாமல் இருக்க ஹாலில் மூன்று பேர் அமரும் ஒற்றை சோபா மட்டுமே. இரண்டு பீன்பேக்.
உள்ளே நுழைந்த நொடியில் இத்தனையும் கிரகித்துகொண்டவர்களை அமர சொல்லியவன் அவர்களுக்கு குடிப்பதற்கு ப்ரிட்ஜில் இருந்து ஜூஸ் எடுத்து வந்தான்.
க்ளாஸில் ஊற்றியவன் முதலில் ஸ்ரீக்கு நீட்ட அவள் வாங்கிக்கொண்டாள். அடுத்ததை ஊற்றும் முன்னர் ரோஜா மறுக்க கேள்வியாய் பார்த்தவன்,
“ஜூஸ் பிடிக்காதா ரோஜா?…” என்றான்.
“ச்சே ச்சே அப்படி இல்லை ஸார். ரொம்ப லாங்க்ல வந்தது. வெயில் வேற. தலை வலிக்கிற மாதிரி இருக்கு. இப்ப ஜுஸ் குடிச்சா இன்னும் அதிகமாகும். அதான்…” என சொல்ல,
“இது உங்களுக்கு லாங்கா?…” என கேட்க,
“ட்ராபிக் ஸார், ட்ராபிக்…” என்றவளிடம்,
“காபி குடிக்கறீங்களா?…” என்றதும் வேகமாய் அவள் தலையசைக்க அவள் தலையை ஆட்டிய விதத்தில் சிரித்தவன்,
“வெய்ட் எ மினிட்…” என்று உள்ளே என்றான். அவன் போனதும் ரோஜாவை கிள்ளிய ஸ்ரீ,
“மனுஷியா நீ? ஏன்டி இப்படி இருக்க? அடிக்கிற வெயில்ல காபி வேற கேட்குதா? வரப்போ இங்க வரவே புடிக்கல அது இதுன்னு அத்தனை ரோஷமா பேசின. இப்ப என்னன்னா காபின்னதும் குப்புற விழுந்துட்ட…” என சொல்ல,
“காபிக்கு முன்னாடி நோ சூடு, நோ சுரணை, நோ பாடரிங். ஜெய் நித்யானந்தா ஹே…” என்று சொல்ல,
“மெதுவா பேசு ரோஜா, அவருக்கு கேட்டா என்ன நினைப்பார்?…” என்று ஸ்ரீ கண்டிக்க,
“அடி போடி. காபி குடிச்சா தான் மூளையே வேலை செய்யும். நான் வொர்க் பண்ணனுமா வேண்டாமா?…” என்று சொல்ல இவள் பேசியது கிட்சனில் நின்ற விதுரனுக்கும் நன்றாக கேட்டது.
சத்தமின்றி சிரித்தவன் காபியை மிக சிரத்தையுடன் கலக்கியவன் மேலும் அவள் என்ன பேசுகிறாள் என்பதை காதை தீட்டிக்கொள்ளாமலே அவன் கேட்க அதை அறியாத ரோஜா,
“பாரு ஸ்ரீ, நம்ம ஓல்ட் மேன்க்கு ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கிறத இன்னும் விடல பாரேன். ஒரு வேலைக்கு அனுப்பிட்டு இப்ப ரெண்டா வேலை வாங்கறாரு. இதுக்கும் சேர்த்து இந்த மந்த் சேலரி கரெக்ட்டா அவர் தராம இருக்கட்டும்…” என்ற ரோஜாவிடம்,
“ஏய் அவர் நம்ம பாஸ். பாவம் விட்டுட்டு அவரை. சும்மா ஓல்ட் மேன் ஓல்ட் மேன் சொல்லி வெறுப்பேத்துற. அவரும் போனா போகுதுன்னு பேசாம இருக்கார்…”
“யாரு அவரு போனா போகுதுன்னு இருக்காரா? தாத்தாவா? மனசுல இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைப்பு. இத்துனூண்டு தலைக்கு ஒரு வண்டிக்கு கரியை பூசிட்டு வந்துட்டா யங் ஆகிடுவாரா? நாடி நரம்பெல்லாம் ஆடிப்போனவருக்கு இளமை ஊஞ்சல் ஆடாதது ஒன்னு தான் குறை…”
“திஸ் இஸ் டூ மச் ரோஜா. அவர் யங்கா இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? அதை விடு. உன்னோடது வாயா என்ன ரோஜா?…” என்றவளின் கண்டிப்பை கண்டுகொள்ளாதவள்,
“இளமைன்னா என்ன தெரியுமா? இப்ப நம்ம சாரை எடுத்துக்கோ. அவரை சொல்லலாம் யங்கர்ன்னு. என்னை கேட்டா இந்த சென்னையோட ஐக்கான் அவர்தான்னு சொல்லுவேன்…”
“ஷட் அப் ரோஜா…” என ஸ்ரீ பதற,
“ப்ச், முழுசா கேளு ஸ்ரீ. ஸார் வரவரைக்கும் பொழுது போக வேண்டாம். என்ன ஒன்னு நம்ம டெம்ப்ரவரி பாஸ் முகத்துல கன்னம் கொஞ்சம் பன்னு மாதிரி புசுபுசுன்னு இருக்கு. அது கூட க்யூட் தான்…”
“க்ராஸிங் யுவர் லிமிட். இது உனக்கே ஓவரா இல்லை. அன்னைக்கு மூஞ்சியில தொப்பைன்னு சொல்லி கலாய்ச்சிட்டு…” என்று ஸ்ரீ சொல்லியும் ரோஜா அடங்குவதாக இல்லை.
ஸ்ரீக்கு எங்கே இதை விதுரன் கேட்டுவிடுவானோ என்கிற பயம். அவன் தான் இவள் பேச்சை கேட்டபடி சிரித்துக்கொண்டு இருந்தானே!!!
காலையில் இருந்த டென்ஷன் கூட குறைந்தது எனலாம். விதுரன் மனதிற்கு ரோஜாவின் அந்த லொட லொட பேச்சு அத்தனை இதமாக இருந்தது. அவளின் கேலியை ரசித்தான் என்றே சொல்லலாம்.
“நாம கலாய்க்காம வேற யார் கலாய்ப்பாங்கலாம்? சொல்ல போனா நாம தான் உள்ளுக்குள்ள கலாய்ச்சு சிரிச்சுக்கனும். மூணாவதா இன்னொருத்தர நாம கலாய்க்க விடவே கூடாது…” என்றவள்,
“அன்னைக்கு கோபத்துல அவர் பேசறப்ப பல்லை கடிக்கிறப்ப கன்னச்சதை கிடுகிடுன்னு ஆடுச்சு பாக்கனும். செம்ம காமெடி. பாக்க விஜயங்காந்த் அங்ன்னு சொல்லி நாக்கை மடிச்சு தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோன்ற மாதிரியே இருந்துச்சு. அதான் மூஞ்சில தொப்பை வச்ச ஹேண்ட்சம்ன்னு சொன்னேன். அதுவும் காம்ப்ளிமென்ட் தான் டேக்ஸ்…”
ரோஜாவின் விளக்கத்தில் அடிப்பாவி என வாயை பிளந்தது ஸ்ரீ மட்டுமல்ல விதுரனும் தான்.
“விஜயகாந்தா?” என்று நினைத்துப்பார்த்தவன் இதற்கு மேல் விட்டால் இவள் எதை எதை உதாரணமாக சொல்லுவாளோ என பயந்தே காபியுடன் வந்துவிட்டான் விதுரன்.
அவன் கொண்டு வந்து கையில் கொடுக்கும் முன் எழுந்து வாங்கிக்கொண்டவள் அதன் வாசத்தை ஆழ்ந்து சுவாசிக்க ஸ்ரீக்கு முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.
“வேகமா குடிச்சுட்டு வா ரோஜா. டைம் போகுது…” என ஸ்ரீ சொல்ல,
“காபி ரொம்ப சூடா இருக்கு ஸ்ரீநிதி. நீங்க வீட்டை சுத்தி பாருங்க. ரோஜா மெதுவா குடிக்கட்டும். இங்க முடிச்சுட்டு நீங்க நேரா வீட்டுக்கு கிளம்பலாம். நாளைக்கு ஆபீஸ் வந்தா போதும். சோ பதட்டமில்லாம இருங்க…” என விதுரன் சொல்லிய பின் ஸ்ரீ எங்கே பேசுவது?
அதை மீறியும் அங்கே ரோஜாவுக்கருகே அமர்ந்து இருந்தால் தவறாக நினைத்துக்கொள்வானோ என்று எண்ணியவள்,
“ஓகே ஸார், நான் போய் பார்க்கறேன்…” என்றவள் தான் கையோடு கொண்டு வந்திருந்த கேமராவை வெளியில் எடுத்து, அதனுடன் ஒரு நோட்பேடையும் தூக்கிகொண்டாள்.
“குடிச்சு முடிச்சுட்டு சீக்கிரம் வா…” என மீண்டும் அறிவுறுத்திவிட்டு எழுந்து கொள்ள ரோஜா நிதானமாய் காபியை குடித்தாள். அவள் ரசித்து குடிப்பதை பார்த்துக்கொண்டே தனக்கு ஜூஸ் ஊற்றி எடுத்து வந்து பீன்பேக்கில் அமர்ந்தவன்,
“ரோஜாவுக்கு காபினா ரொம்ப புடிக்கும் போல?…” என்று பேச்சுவார்த்தையை துவங்க அது போதாதா ரோஜாவிற்கு.
“ஹ்ம்ம் ரொம்ப ரொம்ப. நாள் முழுக்க கூட குடிப்பேன். கொஞ்சம் அடிக்ட்…” என்று அசடு வழிய அவள் சொல்லிய விதத்தில் சிரித்தவன்,
“கொஞ்சமா? நம்பற மாதிரி இல்லையே?…” என,
“நோ ப்ராப்ளம்…” என்றாள் பட்டென்று.
“நீ எப்பவுமே இப்படித்தானா?…” என விதுரன் சிரித்தபடி கேட்டான். அவனுக்கு அவளுடன் பேச பிடித்திருந்தது.
அதனால் மரியாதை தன்மை அவனை விட்டு தன்னை போல் விடுபட்டு எங்கோ சென்றிருந்தது. அதை அவளுமே உணரவில்லை.
“தெரியலை. எப்போ இருந்துன்னு. ஆனா இப்ப இப்படித்தான்…” என ரோஜா சொல்ல,
“ஆஹா இந்த கேள்விக்கு இப்படி ஒரு பதிலை யாரும் இப்படி சொல்லி கேள்விப்பட்டதில்லை…”
“அதான் ரோஜா…” என அவளே அவளை சில்லாகித்துக்கொள்ள மாடிக்கு சென்ற ஸ்ரீ இன்னும் வராமல் இருக்க,
“இந்த வீட்ல நீங்க மட்டும் தானா ஸார்?…” என்றாள் காபியை கடைசி சொட்டுவரை குடித்துவிட்டு.
“ஹ்ம்ம் ஆமா. நான் மட்டும் தான். அப்பப்போ என்னோட ப்ரென்ட் வந்து ஸ்டே பண்ணுவான். ஆனா இனி அதுக்கு வாய்ப்பில்லை…” என சொல்ல,
“உங்க வீடு குட்டியா கம்பெக்ட்டா ரொம்ப நல்லா இருக்கு. ஆனா இவ்வளோ நாள் ஏன் இன்டீரியர் பண்ணாம இருந்தீங்க?…” என்று கதை கேட்க தன்னை அறியாமல் இலகுவாய் பேச ஆரம்பித்திருந்தான் விதுரனும்.
வேறு யாராவதாக இருந்திருந்தால் வந்த வேலையை கவனி என்பதோடு இருந்திருப்பான். ஆனால் ரோஜாவிடம் அவனால் அப்படி இருக்க முடியவில்லை.
“இத்தனை நாள் கல்யாணத்தை பத்தி பேச்சு எடுக்காம இருந்தாங்க வீட்டில. நேத்து தான் சொன்னாங்க பொண்ணு பார்த்திருக்கறதா. அதான்…” என்று சொல்லி புன்னகைக்க ரோஜாவின் தொண்டைக்குள் முள் சிக்கிய உணர்வு.
“கல்யாணம் உங்களுக்கா ஸார்?…” என,
“ஆமா, இந்த வீட்டுல நான் தானே இருக்கேன். அப்போ எனக்கு தானே?…” என்று சிரிக்க ரோஜாவும் புன்னகைத்தாள்.
“அப்பாம்மா வந்தா இங்க தங்க மாட்டாங்க. எங்களுக்கு வேற வீடு இருக்கு. எங்களோடது பெரிய குடும்பம். பிஸ்னஸ் கூட பொது தான். சித்தப்பா மாமா எல்லாரும் சேர்ந்து ஆரம்பிச்ச பிஸ்னஸ். இப்ப பெருசாகிருக்கு…” என சொல்ல,
“சென்னைக்கு வரப்ப கட்டப்பையோட வந்துட்டு இன்னைக்கு உங்க கடை பையில்லாத வீடில்லைன்னு சொல்லுங்க…” என தன் வழக்கமான துடுக்குடன் சொல்லவும் அவன் ஜெர்க் ஆகி பார்க்க “ஐயோ” என்று திருதிருத்தாள். அவனின் முறைப்பை பார்த்து,
“வந்து ஸார், ஒரு ப்ளோல வந்துருச்சு…” என்று முகத்தை சுருக்கியவள் காதை பிடித்துக்கொண்டு கெஞ்சலாய் பார்க்க அவன் இவளை பார்த்து உதட்டை கடித்து ஒற்றை விரலை நீட்டி எச்சரிப்பதை போல சொல்ல,
“ஹி ஹி ஹி சோக்கு சோக்கு. நோ டென்ஷன், நோ பிபி. நீங்க சொல்லுங்க ஸார்…” என்றவளின் முக பாவனையில் சிரித்தவன்,
“யூ ஆர் அமேஸிங்…” என்றான் மனதார.
“நல்லது நல்லது.நீங்க கூட ஏசிங் தான் இப்ப…” என்றதும் புரியாமல் பார்த்தவன்,
“மேபி சீக்கிரமே மேரேஜ் பிக்ஸ் ஆகிடும். சோ அதுக்குள்ளே வீட்டை கொஞ்சம் பக்காவா ரெடி பண்ணனும். இத்தனை நாள் நான் இருந்த வரைக்கும் பிரச்சனை இல்லை. இனி வாழ வர பொண்ணுக்கு புடிக்கனும் இல்லையா?…” என,
“ஆமாமா உங்க வொய்ப் ரொம்ப லக்கி ஸார். காபி சூப்பரா போடறீங்க…” என்று சர்டிபிகேட் கொடுக்க அதற்கும் சிரித்தான்.