ரோஜாவின் மௌனமெல்லாம் சில நொடிகள் தான். அதற்கு மேல் அவள் அமைதியாக இருக்க முடியவில்லை.
“பார்த்தியா ஸ்ரீ எங்க வீட்ல என்கிட்டே சொல்லாமலே எல்லா வேலையும் முடிச்சுட்டாங்க. நெக்ஸ்ட் மந்த் மேரேஜ். டேட் கூட பிக்ஸ். எல்லாம் அந்த விஸ்கி வேலையா தான் இருக்கும்…” என ஆதங்கத்துடன் சொல்ல,
“ரோஜா லிசன், உனக்கான லைப் இதுதான்னு எனக்கு தோணுது. கொஞ்சம் யோசிச்சு பாரு. விதுரனும் உன்கிட்ட அவருக்கு மேரேஜ்ன்னு சொல்லிருக்கார். இப்ப உனக்கும் பேசி பிக்ஸ் பண்ணி போட்டோவோட டேட் கூட அனுப்பிட்டாங்க….”
“ஹாங் புரியுதா? எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல மேரேஜ். எப்படி சிங்க் ஆகுது பாரேன். ஆனா எனக்கு தோணின மாதிரி அங்கிள்க்கு தோணனுமே. ஆனா தோணலை. அதான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்…” என்று சீரியஸாக சொல்ல,
“என்னடி?…” என்றாள் ஸ்ரீ.
“மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது ஸ்ரீ…” என தீவிரமாக ரோஜா சொல்ல ஸ்ரீக்கு பயமாகிவிட்டது. பிடிவாதமாக இருக்கிறாளோ, விதுரனிடம் போய் பேசிவிடுவாளோ என்று அவளை பார்த்து,
“ரோஜா நான் சொல்றதை கேளு…” என,
“போடாத மயில வச்சு என்ன பன்றது? அதனால அப்படியே விட்டுட வேண்டியது தான்…” என்று சொல்லவும் ஹப்பாடா என்று இழுத்துப்பிடித்த மூச்சை விட்டவள் அவளின் முதுகில் இரண்டு அடி போட்ட ஸ்ரீ,
“எப்ப சீரியஸா பேசுவன்னே தெரியமாட்டிக்கு உன்னோட…” என்று திட்ட,
“சீரியஸா? நான் எதுக்கு சீரியஸாகனும்?. இனி அதுக்கு அவசியமில்லாம போச்சே…” என்றவள் தனது மொபைலில் பிரஷாந்தி அனுப்பியிருந்த ஹரிஷை பார்த்தாள். சிரித்த முகமாய் இருந்தான்.
“உனக்கு தெரியுமே ஸ்ரீ. என்னோட கொள்கையே லவ் பண்ணி எனக்கு புடிச்ச மாதிரி ஒருத்தனை மேரேஜ் பண்ணிக்கனும்னு. இத்தனை வருஷம் எனக்கு மனசுக்கு புடிச்ச மாதிரி யாருமே அமையலை. வீட்லயும் சும்மா இருந்தாங்க. அதுல கொஞ்சம் தெனாவெட்டாவே இருந்துட்டேன்….”
ஸ்ரீ அவளை பேசவிட்டு அமைதியாக பார்த்தபடி நின்றாள். எப்போதாவது தான் இப்படி பேசுவாள் ரோஜா. இடையில் எதையாவது கேட்டால் அப்படியே பேச்சை விழுங்கிக்கொண்டு கலகலத்துவிடுவாள்.
மனதை விட்டு அடுத்து என்றுமே அந்த பேச்சுக்கள் வெளிவராது. பேசட்டும் என்ன நினைக்கிறாள் என்பதை பார்க்கலாம் என ஸ்ரீ கவனிக்க ஆரம்பித்தாள் இடையிடாமல்.
“இப்ப எனக்கு அந்த அங்கிளை பிடிச்சுருக்கு. ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு. ஆனா பாரு நான் ரியலைஸ் பண்ணின நேரம் எனக்கான ஆப்பை என் குடும்பம் ரெடி பண்ணிட்டாங்க. இத்தனை வருஷம் நான் வளர்ந்த வாழ்க்கை மாறனும்னு எத்தனை ஆசையோட இருந்தேன் தெரியுமா?…”
“இப்ப வீட்ல அலையன்ஸ் பார்க்காம இருந்தா கூட அங்கிள்ட்ட என்னை சொல்லிருப்பேனான்னு தெரியலை. அவர் முகத்துல அத்தனை சந்தோஷம் அவருக்கு கல்யாணம்ன்னு. இதுக்கு மேல போய் சொல்ல எனக்கு இஷ்டம் இல்லை. அட்லீஸ்ட் அவர்க்கும் புடிச்சுருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டு சந்தோஷமா மேரேஜ் பண்ணிருப்பேன்…”
“இப்ப எதுக்கும் வாய்ப்பில்லை. எங்க வீட்ல என்கிட்டே சொல்றதுக்கு முன்னவே பார்க்க ஆரம்பிச்சு முடிவு பண்ணிருக்கனும். என்கிட்டே சொல்லி நானும் ஜஸ்ட் லைக் தட்ன்னு பாருங்கன்னு சொல்லிட்டேனா. அதான் முடிவு பண்ணிட்டாங்க. இனி நான் என்ன பண்ணுவேன்?…” என்று மடை திறந்த வெள்ளமென அனைத்தையும் கொட்டியவள்,
“வாழ்க்கையில் கால்வாசி வாழறதுக்கே இத்தனை கஷ்டம் எனக்கு. இனி மிச்ச வாழ்க்கையையும் அதே மாதிரி கழிக்க சத்தியமா முடியாது ஸ்ரீ. ஒரு மாதிரி பயமா இருக்கு தெரியுமா?…” எனும் பொழுது ஸ்ரீக்கு உருகிவிட்டது.
திருப்பூர் தொழில் சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத செல்வந்தர் சேகரனின் மகள் இன்று வாழ்க்கையை தொலைத்துவிட்டதை போல கலங்கி நிற்க பார்க்க ஸ்ரீக்கு பொறுக்கமுடியவில்லை.
வலிகளும் கஷ்டங்களும், வெளியே சொல்ல முடியாத வேதனைகளும், நினைத்தது கிடைக்காத ஏக்கங்களும் இல்லாதவர்களுக்கு மட்டுமா? இருப்பவர்களுக்கும் தான் என்பதற்கு முழு சாட்சியாய் தன் முன்னே ரோஜா.
ஆனால் அதற்காகவெல்லாம் ரோஜாவின் காதலுக்கு பச்சைகொடி காட்ட ஸ்ரீ தயாராக இல்லை. தன் கண்முன்னே தனது தந்தையின் மரணம் நிகழ்ந்ததை இன்றளவும் மறக்க முடியாமல் அவள் துடிதுடித்துக்கொண்டு இருக்கிறாளே.
“என்ன ஸ்ரீ ஸ்டன் ஆகிட்ட? ரொம்ப அறுத்துட்டேனோ?…” என்று புன்னகைக்க,
“உனக்கு இத்தனை வருத்தம், கஷ்டம் இருக்குது. ஆனாலும் காட்டிக்காம எப்படி இத்தனை ஈஸியா எடுத்துக்க முடியுது ரோஜா?…” என்றாள் வியப்பு மாறாமல்.
“அதுக்கு தான் விஸ்கி என்னை குட்டியா இருக்கறப்ப இருந்தே ட்ரெயினிங் குடுத்துட்டாளே…” என கசப்பாய் முறுவலிக்க,
“நீ இப்படி பேசறது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு ரோஜா. ஆனா அதுக்காக லவ் ஓகேன்னு சொல்ல மாட்டேன். நீ ஏன் பயப்படற? உங்கப்பா பாத்திருக்கற மாப்பிள்ளை இப்படித்தான் இருப்பாருன்னு நீயா கெஸ் பண்ணிக்காத?…”
“ப்ச்…” என்றாள் ரோஜா ஒற்றை சத்தத்தில்.
“நான் சொல்றது உனக்கு புரியாது ரோஜா, என்னோட இழப்பு அப்படி. அந்த காதல் தந்த இழப்பு. எங்க குடும்பத்தோட ஆணிவேரை என் அப்பாவை இழந்துட்டு எங்க குடும்பம் நடு வீதிக்கு வந்தது…” என்று சொல்லி விட இதை ரோஜா எதிர்பார்க்கவில்லை.
ஸ்ரீக்கு அப்பா கிடையாதென்று தெரியும். மற்றபடி எதனால் ஏன் என்று எதுவும் கேட்டுக்கொண்டதில்லை. அவளும் சொன்னதில்லை.
“ஸ்ரீ…” என அதிர்ச்சியுடன் கேட்க,
“ஹ்ம்ம் காதலே தப்புன்னு நான் சொல்ல வரலை ரோஜா. அந்த காதல் ரொம்ப சுயநலமானது. அதுக்கு ஏழை பணக்காரங்கன்னு வித்தியாசம் கிடையாது. ஆனா பயங்கரமானது. யாரையாவது வாழ வச்சா யாரையாவது உருகுலைக்காம போகாது…” என்றாள் வெறித்த பார்வையுடன்.
“ஸ்ரீ, ஸ்ரீ இங்க பாரு…” என சொல்லவும் தன்னிலை மீண்டு வந்த ஸ்ரீ,
“அதுக்குத்தான் சொல்றேன். உங்க வீட்டில இருக்கறவங்களை வச்சு பாத்திருக்கும் மாப்பிள்ளையை ஜட்ஜ் பண்ணாத. அவரை ஒரு தடவை நேர்ல பேசி பார்த்துட்டு முடிவு பண்ணு ரோஜா….” என்றவளை ஆழ்ந்து பார்த்தவள்,
“ஹ்ம்ம் பார்க்கலாம். வேற வழி இல்லையே…”
“ஏன் இல்லாம ஒரு வேளை உனக்கு புடிச்ச மாதிரியான ஒருத்தரா இருந்தா? உன் லைப் நீ தேடாமலே மாறிடும் இல்லையா? நீ மிஸ் பண்ணிடாத. எனக்கு என்னவோ இந்த மாப்பிள்ளை தான் உனக்கானவர்ன்னு தோணுது…” என்று சொல்லும் பொழுது அமைதியாய் நின்ற ரோஜாவை பார்த்தவள்,
“கஷ்டமா இருக்கா ரோஜா?…” என கேட்க அதற்கும் புன்னகைத்த ரோஜா,
“இல்லைன்னும் சொல்ல முடியாது. கற்பனைகளுக்கு உருவம் வேணா கொடுக்கலாம். உயிர் குடுக்கறது எல்லாராலையும் முடியாது. அதுக்கு ஒரு குடுப்பினை வேணும் போல. என்னோட லவ் கூட அப்டித்தான். இதை லவ்ன்னு டிக்ளர் பன்றதுக்குள்ள இத்தனை ஸ்பீட் ப்ரேக். ப்ச், இட்ஸ் ஓகே…” என்றவளின் மனது சமாதானம் ஆக மறுத்தது.
“ஓகே சிட்…” என்றவள் தானும் அமர்ந்து மனதை வேலையின் பக்கம் திருப்ப முயன்றாள். ஸ்ரீக்கு தான் அவள் சொல்லியதில் மனது வலித்தது.
“ரோஜா…”
“ஹேய் டேக்ஸ் என்னை பாரேன், நான் நார்மல் தான். நீ வேலையை பாரு…” என்று தனக்கும் சேர்த்து சமாதானம் சொல்லியவள் கவனத்தை திருப்பிக்கொண்டாள்.
“ஒரே நாள்ல இத்தனை தூரம் புடிக்குமாடி?…” ஸ்ரீ அதை விடமுடியாமல் மீண்டும் பேச்சை துவங்க அவளின் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தவள்,
“ஏன் புடிக்காம? நான் அவர் வீட்டுக்கு போய்ட்டு வந்ததனால இப்படி பினாத்தறேன்னு நினைக்கறியா ஸ்ரீ?…” என நேரடியாக கேட்க,
“இல்லை ரோஜா வந்து…” மறுக்க முடியாமல் தயங்கினாள்.
இத்தனை நாள் விதுரன் தான் ரோஜாவை ஆர்வமாக பார்க்கிறான் என நினைத்திருக்க அதற்கு நேர்மாறாய் ரோஜா காதல் என்று வந்து நின்றதை தான் நம்ப முடியவில்லை அவளுக்கு.
“ஹ்ம்ம் லவ்ன்னு நாள் பீல் பண்ணினது வேணா அவர் வீட்டுக்கு போய்ட்டு வந்ததால இருக்கலாம். ஆனா அதுக்கு முன்னமே எனக்கு புடிச்சிருக்குன்னு தான் நினைக்கறேன். இல்லைனா பார்க்கிற இடமெல்லாம் அவரோட கோபத்தை அலட்சியம் செஞ்சு அவரோட அத்தனை வார்த்தை வளர்த்திருக்க மாட்டேன்…”
“ரோஜா நான் அதை மீன் பண்ணலை…”
“நீ கருவாடே பண்ணினாலும் எனக்கு அப்படித்தான் தோணுது…” என ரோஜா சொல்ல ங்கே என்று விழித்தாள் ஸ்ரீ.
“நீ மீன் சொன்ன, நான் கருவாடு சொன்னேன்…” என்ற ரோஜாவின் மீது பேனாவை தூக்கி வீச சிரித்தபடி விலகியவள்,
“புடிக்கிறதுக்கு இதுதான்னு இல்லை. காரணமும் தேவை இல்லை. ஆனா நமக்கே நமக்கான ஒரு உறவு, பார்த்தா தான நேத்து நான் சொல்லாமலே எனக்கு காபி குடுத்ததை…” என்றதும் அட கொடுமையே என்று பார்த்த ஸ்ரீ,
“ஏன்டி காபி குடுத்தது எல்லாம் ஒரு விஷயமா? இதுக்கு லவ்வா?…”
“உனக்கு அதெல்லாம் புரியாது ஸ்ரீ…” என்றவளின் கண்கள் மூடிக்கொள்ள எங்கே அவள் சோகமாகிவிட்டாளோ என்று நினைத்த ஸ்ரீ,
“ரோஜா வொர்க்…”
“ஹ்ம்ம் ஹ்ம்ம் அதான் கண்ணை மூடிட்டு யோசிக்கறேன். அங்கிள் வீட்டுல இன்டீரியர் பார்த்து பார்த்து எல்லாம் பண்ண கூடாது. பார்க்க முடியாத படிக்கு பண்ணிவிடனும்…”
“என்னது?…”
“ஸ்ரீ இந்த லவ்ல பொசசிவ்னெஸ் ரொம்ப இம்பார்ட்டன்ட்னு சொல்லுவாங்க இல்ல. அதை நான் இதில் காண்பிக்க போறேன்…”
“இதுக்கு பேரு வில்லத்தனம். அதுகெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட…”
“ஓகே நான் சரிப்பட்டு வரமாட்டேன். நீ தான் சின்சியர் சிறுத்தைக்குட்டி ஆச்சே. நீ சரிப்பட்டு வருவ…” என்று கண்ணடிக்க,
“என்னைய பலி குடுக்கனும்னு முடிவு பண்ணிட்டா ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிரு ரோஜா. சங்கை கோர்த்துவிட்டுட்டு நான் எஸ்கேப் ஆகிக்கறேன். அப்புறம் நீயுமாச்சு சங்கு ஸ்கர்ட்டுமாச்சு…” என்று கண்ணடித்த ஸ்ரீயை முறைத்தவள்,
“என் ப்ரெண்டா இருந்துட்டு என் லவ் பெயிலியருக்கு கூட ஹெல்ப் பண்ணமாட்டியா நீ? அந்த அங்கிளுக்கு போதும் போதும்னு சொல்ற மாதிரி வீட்டை நீ தயார் பன்ற…”
“அதுசரி, அப்ப நீ என்ன பண்ண போறே?…”
“நான் உனக்கு அசிஸ்ட் பன்றேன். அதுவே பெரிய ஹெல்ப் தான?…” என்றவள்,
“இன்னும் ஒன் மந்த்ல மேரேஜ். என்னை எப்டியும் ஊருக்கு கூப்பிட்டுப்பாங்க. இன்னும் என்னென்ன பண்ண இருக்காங்களோ? முதல்ல விஸ்கி நம்பரை ப்ளாக் பண்ணனும்…” என்று போனை எடுத்தவள் ஒரு நொடி யோசித்து விட்டு,
“ப்ச், ஒரு ஆணியும் புடுங்க முடியலை ஸ்ரீ. அதுக்கும் எக்கச்சக்க கேள்வி, என்கொயரின்னு உயிரை எடுப்பாங்க…” என்று மீண்டும் சலிப்புடன் மொபைலை கீழே வைக்க ,
“ரோஜா ரிலாக்ஸ். இப்ப எதையும் யோசிக்காத. லீவ் இட்…” என்ற ஸ்ரீயை பார்த்தவள்,
“ஆ’ம் ஓகே. லெட்ஸ் ஸ்டார்ட்…” என்று சிறு தோள் குலுக்கலில் அனைத்தையும் உதறியவளாய் வேலையில் ஆழ்ந்து போனாலும் அவளின் மனதோரம் விதுரன் துடித்துக்கொண்டே தான் இருந்தான்.
இங்கு ஒருவளின் மனதில் நுழைந்ததை அறியாமல் சக்தி கேட்ட கேள்வியில் வாய்விட்டு சிரித்த விதுரன்,
“ஏன்டா அது சின்ன பொண்ணு. என் வயசென்ன? அவ வயசென்ன?…” என கேட்க,
“எல்லாம் ரெண்டு பேருக்கும் மேட்ச் ஆகற வயசு தான். நீ கிழவனும் இல்லை, அவ கைக்குழந்தையும் இல்லை. சும்மா எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி இருக்காத விது…” என்ற சக்தியின் கோபத்தில் சிரிப்பை தள்ளி வைத்தவன்,
“எனக்கு ரோஜாவை புடிக்கும் தான். ஆனா அதுக்கு நீ சொல்றது தான் அர்த்தம்னா உன் பார்வை தப்புன்னு தான் நான் சொல்லுவேன்…”