“நீ இது மாதிரி ஸ்ரீநிதிட்டையோ இல்ல வேற யார்ட்டையுமே பேசி நான் பார்த்ததில்லையே. வேற என்ன நினைப்பேன்…” சக்தியின் கேள்வியில் நமுட்டு சிரிப்பு சிரித்த விதுரன்,
“உன்கிட்ட பேசறேன்ல. அப்ப உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அர்த்தமாடா?…” என கேட்டு சக்தியிடம் அடி வாங்கியவன்,
“சும்மா லூஸு மாதிரி நீ பேசினா நான் இதைத்தான் சொல்லுவேன். நான் இல்லை இல்லைன்னு சொல்றேன். நீ அதுக்குள்ளயே என்னை இன்வால் பண்ண பார்க்கற…” என சொல்ல சக்தி முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்துகொள்ள,
“இப்ப இதை உன் முன்னால தான் அப்பாவுக்கும் கூட நான் பேசினேன். என்னோட சேர்ந்து சிரிக்கத்தான் செஞ்சாரே தவிர இந்த மாதிரி அவருக்கு தோணவே இல்லை. ஏனா நான் எப்படின்னு அவருக்கு தெரியும்…” என்றவன்,
“இந்த மாதிரி நீ பேசறதை ரோஜா கேட்டா உன்னை மட்டுமில்லை, என்னை கூடத்தான் தப்பா நினைப்பா. வெகுளி பொண்ணுடா. பாவமில்லையா இப்படி பேசறது…” என கேட்க,
“பின்ன ஏன் அவளோட அவ்வளோ நேரம் பேசின? உன்னோட மேரேஜ் பத்தி என்கிட்டே கூட சொல்ல முன்ன அவக்கிட்ட ஷேர் பண்ணியிருக்க. எனக்கே இப்ப தான் தெரியும் உனக்கு வீட்ல பொண்ணு பிக்ஸ் பண்ணிருக்காங்கன்னு…”
“அட மடையா, ரோஜாக்கிட்ட நான் ஜஸ்ட் ஒரு ஷேரிங் மைண்டோட தான் இதை சொன்னேன். அவ பேசறது, கிண்டல் பன்றது எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. பட் லவ். சத்தியமா கிடையாது…”
“அவ பேச புடிக்குமாம். ஆனா லவ் இல்லையாம். நான் நம்ப மாட்டேன். நீ உன்னை ரொம்ப ஓவரா எஸ்டிமேட் பண்ணி வச்சிருக்க…”
“ம்ஹூம், நான் தெளிவா இருக்கேன். யூ நோ ரோஜா அதை விட தெளிவு. கீழே விழ போறாளேன்னு ஹெல்ப் பண்ணேன். திரும்ப கையை பிடிச்சதுக்கு வேகமா தட்டி விட்டு கோபமா என்னை ஒத்த விரல நீட்டி கொன்னுடுவேன்னு பார்த்துட்டு போறா. எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு…”
“நீ சொல்ற மாதிரி இருந்தா எனக்குள்ள ஒரு ஸ்பார்க் வரும் தானே? அவளுக்கும் எந்த எல்லையோட பழகனும்னு தெரிய போய் தான் என்னை வார்ன் பன்ற மாதிரி சொல்லிட்டு போனா. எல்லாத்தையும் விட எனக்கு மேரேஜ்ன்னு நான் சொல்லவும் அவளுக்கு எவ்வளோ சந்தோஷம் தெரியுமா?…” என்றவன்,
“ஸ்ரீநிதிட்ட சொல்லி கூட எனக்கு விஷ் பண்ண சொல்லி எனக்கு வர போற வொய்ப் குடுத்து வச்சவன்னு சொன்னா. அந்த பொண்ணை போய்…”
“நீயே சொல்ற ரொம்ப நல்ல பொண்ணு, அவளோட பேச பிடிக்குதுன்னு. இது போதுமே…”
சக்தி அவன் என்ன நினைக்கிறான் என்பதை முழுதாய் தெரிந்து கொள்ள நினைத்தான். காரணம் கயல்விழி. சடகோபம் விஷயத்தை கயல்விழியிடம் சொல்லியிருந்தார்.
இதை சாதாரணமாக தான் சொல்லியிருந்தார். ஒரு பகிர்தல் தொனியில். கயல்விழிக்கு தெரியுமே மகனின் குணம். ஆனால் ரோஜாவிடம் எப்படி என்று தான் யோசித்து சக்தியிடம் பேச சொல்லியிருந்தார்.
மீண்டும் மகன் பிரச்சனை என்று அனைவரின் மீது காய்வதை அவர் விரும்பவில்லை. அதிலும் திருமணத்திற்கு பெண் பார்த்துவிட்ட நிலையில்.
“சக்தி போதும், இன்னொரு முறை என்னையும் ரோஜாவையும் இந்த மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப்ல சொல்லாத. எனக்கு கேட்கவே புடிக்கலை. அவளோட வெல்விஷரா கூட என்னை சொல்லிக்கோ. கண்டிப்பா அதுக்கு நான் ஆப்ட்டா இருப்பேன்…”
“என்னோட முடிவு என்னைக்கும் மாறாது. நான் அம்மா பார்க்கிற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன். அதுவரைக்கும் என் மனசுல காதலுக்கு இடம் கிடையாது. புரியுதா? சும்மா இன்னொரு அப்பாவி பொண்ணை…” என்று சொல்லியவன் ஒரு சிரிப்புடன்,
“கல்யாணம் ஆகாத பொண்ணை இப்படி இன்னொருத்தரோட சேர்த்து வச்சு பேசறதெல்லாம் அழகு இல்லை. அந்த மாதிரி இனி நீ பேச மாட்டன்னு நான் நம்பறேன். ஏனா இன்னைக்கு நீ பேசற பேச்சு என்னைக்காவது என்னோட மேரேஜ்க்கு பின்னால ஒரு பேச்சுக்கோ, கிண்டலுக்கோ கூட வெளிவரும். அன்னைக்கு என்னை நம்பி ஒருத்தி இருப்பா. அவளுக்கு நம்பிக்கையானவனா நான் இருக்கனும்…”
“பேச்சளவுல கூட இன்னொருத்தியோட என்னை சேர்க்காத சக்தி. என்னோட முடிவுல நான் உறுதியா இருக்கேன். அம்மா பார்க்கிற பொண்ணை கல்யாணம் பண்ணனும். சொந்த பந்தங்களோட நிறைஞ்ச சபையில் எனக்கானவளுக்கு தாலி கட்டி, எல்லா சம்பிரதாயங்களையும் பார்த்து பார்த்து ரசிச்சு செஞ்சு வாழ்க்கையை ஆரம்பிக்கனும்…”
எதிர்கால கனவுகளுடன் மிக தீர்க்கமாய் கண்டிப்புடன் சொல்லிய விதுரனை குழப்பமாய் பார்த்தான் சக்தி. இதை கயல்விழியிடம் சொல்ல வேண்டுமே.
“என்னை விடு, நீ அப்பப்போ இண்டீரியர் வொர்க்கை போய் பார்த்தா எனக்கு மத்த வேலையில் கொஞ்சம் ஈசியா இருக்கும் இல்லை…”
“அதான் சொன்னேனே எனக்கு அங்க வர புடிக்கலைன்னு. திரும்ப ஏன் கேட்கற. உனக்கு புடிக்காததை நான் பேசாத மாதிரி இதையும் நீ பேசாத…” என்றான் சக்தி.
“தப்பு சக்தி, அந்த பொண்ணு வேலை பார்க்க தான் வந்திருக்கு. நீ நம்ம…”
“உன்கிட்ட வேலை பார்க்கறேன் தான். அதுக்காவெல்லாம் அங்க போக மாட்டேன்…” என பிடிவாதமாய் சொல்ல,
“என்னை முன்கோபின்னு சொல்லி இப்ப நீ தான் பின்கோபியா இருக்க…” என்றவனை முறைத்து பார்த்த சக்தி,
“உனக்குள்ள அப்பப்ப ரோஜா எட்டி பார்த்துட்டு போறா…”
“சோ வாட்? பேச்சை மாத்தாத. இன்னைக்கு நீ தான் போகனும். ஈவ்னிங் அந்த பொண்ணுங்க கிளம்பறதுக்குள்ள போய்ட்டு எனக்கு சொல்லு…” என்றவனின் கட்டளை போன்ற பேச்சை மீற முடியாமல் மேஜையை ஓங்கி தட்டிவிட்டு அவன் எழுந்து கொள்ள,
“அவங்க நம்ம ஸ்டாப்ஸ், அந்த நினைப்பு இருக்கட்டும். அதை மைண்ட்ல வச்சுட்டு மரியாதையா பேசு…” என்று வேறு எச்சரிக்க,
“ரோஜாவுக்கு ஒரு மரியாதை குறைவும் வராதுப்பா…” என்றான் வேண்டுமென்றே பல்லை கடித்துக்கொண்டு.
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட. நீ என்ன அவளுக்கு மரியாதை குடுக்க? அந்த லிட்டில் டெவில் குடுத்தா வாங்கி பத்திரமா வச்சுக்க. அவ மட்டுமில்ல அவ மரியாதை கூட ப்ரீஷியஸ் தான்…” என்று சிரித்தவனை கண்ட சக்தி மனம் மேலும் குழப்பத்தில் ஆழ,
“எதுவும் கேட்க மாட்டேன் உன்கிட்ட. ஆனா நல்லா வருவீங்கடா….” என்று எரிச்சலுடன் சொல்லி கதவை திறந்து கொண்டு செல்ல அவனை புன்னகையோடு பார்த்திருந்தவன் தானும் எழுந்து பார்வையிட உள்ளே சென்றான்.
சக்தி அவர்கள் கடையை விட்டு வெளியே வந்து பார்கிங்கில் நின்றவன் கயல்விழிக்கு அழைத்து அனைத்து விவரத்தையும் சொல்ல அமைதியாக கேட்டுக்கொண்டார்.
“ஓகே சக்தி…” என சொல்ல,
“எஸ் ஆன்ட்டி, அவன் தெளிவா தான் இருக்கான்…” என குழப்பத்தினூடே சொல்ல,
“தெளிவா ஏன் இருக்கான்னு இழுக்கற…” என்று அவனின் வார்த்தையின் பேதத்தை சட்டென பிடித்துக்கொண்ட கயல்விழி அவனை துளைக்க நாக்கை கடித்துக்கொண்ட சக்தி,
“இல்லை இங்க தெரிஞ்ச ஒருத்தரை பார்த்தேன். அதான் உங்கட்ட பேசிட்டே அவரான்னு பார்த்ததால. நீங்க கவலையே படவேண்டாம்…” என்று உறுதியாய் சொல்லிவிட அதன் பின்னர் தான் கயல்விழிக்கு நிம்மதியானது.
“ஓகே, பார்த்துக்கோ…” என்று வைத்து விட்டார்.
“ஹப்பா இந்த அம்மா பையன்கிட்ட மாட்டிக்கிட்டு நான் படற பாடு…” என பெருமூச்சு விட,
“என்னடா இன்னுமா போகலை? ஏன்டா…” என்று விதுரன் வந்துவிட,
“ஏன்டா ஏன்?…” என அழும் குரலில் அவன் பேச,
“என்னதுடா ஏன்டா ஏன்? ஹ்ம்ம், சரி நானும் வரேன். புது பில்டிங் போ…” என அவனின் பைக்கில் ஏறிக்கொள்ள,
“ஏன் நான் போக மாட்டேன்னு டவுட் வந்திருச்சோ?…”
“ஆமான்னா என்ன செய்ய போற? போடா…” என்ற விதுரனை ஒன்றும் சொல்ல முடியாமல் பல்லை கடித்தான் சக்தி.
அவனின் மனக்கண்ணில் ஸ்ரீயின் வெறுப்பான பார்வை வந்து செல்ல இன்னமும் எரிச்சலானது அவனுக்கு.
“அவ வேற என்னவோ அவங்கப்பாவ நான்தான் கழுத்த நெரிச்சு கொன்னது மாதிரி என்னை கொலைகாரன பார்த்த மாதிரி பார்ப்பா. ச்சை என்ன வாழ்க்கைடா இது?” என்ற முணுமுணுப்புடன் சாலை போக்குவரத்தில் கலந்தான் சக்தி.
அங்கே செல்லும் நேரம் முதல் தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் சாப்பிட சென்றிருக்க மேலே மதிய உணவை முடித்துவிட்டு ஸ்ரீயும், ரோஜாவும் அப்பொழுதான் மீண்டும் வேலையை துவங்க ஆரம்பித்தனர்.
விதுரனை கண்ட ஸ்ரீ ரோஜாவை பார்த்துவிட்டு மௌனமாய் குனிந்துகொள்ள அவனுடன் கேட்ட பேச்சு சத்தத்தில் மீண்டும் நிமிர்ந்து பார்க்க அங்கே சக்தியும் உடன் வருவதை கண்டவள் உடலெல்லாம் எரிச்சல் மூண்டது.
ரோஜாவோ விதுரனை பார்த்ததும் எதையும் காண்பித்துகொள்ளாமல் பளீரென்ற புன்னகையை சிந்தினாள். காலையில் நடந்தது அனைத்தையும் மனதின் ஆழத்தில் புதைத்தவள் முகம் எப்பொழுதும் போல் மாறியது.
“இன்னைக்கு வரலைன்னு சொன்னேங்க ஸார்?…” என்றாள் ஸ்ரீ விதுரனிடம்.
“ஹ்ம்ம் வரவேண்டிய வேலை, அதான்…” என்று மட்டும் பதிலளித்தவனை பார்த்துவிட்டு இவனை ஏன் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என நினைத்தபடி அமைதியாகினாள்.
சக்தியோ அவளின் பார்வையை வைத்தே அவள் எண்ணத்தை கண்டுகொண்டவன் “இவ வேற” என்னும் பதில் பார்வை கொடுத்துவிட்டு ரோஜாவிடம் திரும்பினான்.
“வேலை எல்லாம் எப்படி போகுது ரோஜா?…” என்று தேவையில்லாமல் வளவளக்க விரும்பாமல் ஸ்ரீயின் மேல் இருந்த கோபத்தில் அதிகாரமாய் நேரடியாக வேலையை பற்றி கேட்க,
“வெய்ட்டிங் லிஸ்ட்ல தான் ஸார் இருக்கு. ஆர்ஏசி கூட கன்பார்ம் ஆகலை. ஆகிட்டா கிளம்பிடும்…” என்றாள் ரோஜாவும்.
விதுரனுக்கு சிரிப்பு வந்தாலும் அவன் வந்ததும் ஸ்ரீ அவனிடம் சில வரைபடங்களை காண்பிக்க அதில் திரும்பினான். ஆனாலும் தன்னை பரிதாபமாய் பார்த்த சக்தி புறம் திரும்பி கண்ணடித்துவிட்டு ஸ்ரீ காண்பித்தவற்றில் கவனத்தை திருப்பினான்.
ஆனால் ஸ்ரீக்கு சந்தோஷமாகிவிட்டது. “சூப்பர் ரோஜா, நல்ல நோஸ்கட்” என்று உள்ளுக்குள் குதூகலித்தாள்.
இதையெல்லாம் கவனியாத ரோஜா, என்கிட்டயேவா? அடுத்து என்ன?” என்பதை போல சக்தியை பார்க்க ஷக்தி கோபமாய் ரோஜாவை முறைத்தான்.
பின்னே விதுரன் கூட முதலாளி தோரணையை ரோஜாவிடம் காண்பித்ததில்லை. ஆனால் சக்தி வந்து கேட்ட விதமும், அவன் பார்வையில் இருந்த திமிரும், அகம்பாவமும் ரோஜாவை எரிச்சல் மூட்ட அப்படி பேசி வைத்தது.
ஆனால் அவனின் திமிரும், அகம்பாவமும் ஸ்ரீயின் மீதான கோபத்தில் வந்ததென அவளுக்கு தெரியாதே.
முதலாளி என்றால் கேட்க வேண்டியது தான். அதற்கு இப்படியா என்று நினைத்துக்கொண்டே அமைதியாக அப்பாவியாக முகத்தை வைத்து ரோஜா அமர்ந்திருக்க,
“என்ன பேசறீங்க ரோஜா? ஆர் யூ சீரியஸ்?…” என்ற சக்தியிடம்,
“ஸார் நீங்க இன்னைக்கு தான் இங்க வந்திருக்கீங்க? பொதுவா வேலை பத்தி ஸார் தான் கேட்பாரு…” என்று விதுரனை காண்பித்து சொன்னவள்,
“அன்னைன்னைக்கு முடிஞ்ச வொர்க், மறுநாள் ஆரம்பிக்கிற வொர்க்ன்னு பேசிடுவார். சோ நாங்களும் அவர் எப்ப, எதை கேட்கராருன்னு இத்தனை நாள்ல புரிஞ்சிருக்கோம். சோ கேட்டதும் என்னன்னு தெரிஞ்சு சொல்லுவோம். நீங்க திடீர்ன்னு வந்து பொத்தாம்பொதுவா கேட்டா எதைன்னு எனக்கு தெரியலை…”
“இங்க என்ன வொர்க் நடந்திட்டு இருக்கு. அதை தானே கேட்பேன்…” என சக்தியும் சொல்ல,
“ஆனா நீங்க கேட்டது அப்படி தெரியலையே ஸார்…” என்றாள் ரோஜாவும் விடாமல்.
“சக்தி பர்ஸ்ட் உட்கார். நான் ஸ்ரீநிதிட்ட பேசிட்டு வரேன்…” என்ற விதுரன் அவனுக்கு தண்ணீர் பாட்டிலை நீட்ட வாங்கிக்கொண்டவன் பார்வை இதற்கு தான் வரமாட்டேன்னு சொன்னேன் என்றது.
பாட்டிலை திறந்து குடிக்க ஆரம்பித்தவன் “கும்பலாக சுத்துவோம், நாங்க ஐயோயம்மான்னு கத்துவோம். எங்க புள்ளிங்க எல்லாம் பயங்கரம்” என்று திடீரென்று அலறிய ரோஜாவின் போன் சத்தத்தில் பதறி தண்ணீர் புரையேறிவிட்டது.
தண்ணீர் மூக்கில் ஏற எழுந்து நின்று இருமினான் சக்தி. அதற்குள் அங்கிருந்த பேப்பர்கள் சிலவற்றில் தண்ணீர் தெறித்திருக்க விடாமல் இருமியவனை பார்க்க ஸ்ரீக்கே ஒரு நொடி பாவமாகிவிட,
“ஸாரோட ப்ரெண்ட்க்கு தண்ணி கூட குடிக்க தெரியலை ஸ்ரீ. பாவம்…” என்று ரோஜா ஸ்ரீயிடம் உச்சு கொட்ட அவளின் கையை கிள்ளிய ஸ்ரீ பேசாதே என கண்களால் மிரட்டினாள்.
“நாங்க கீழே போறோம். ஒரு அரைமணி நேரம் கழிச்சு உங்க டிஸைன்ஸ் எடுத்துட்டு வாங்க…” என்ற விதுரன் சக்தியை கூட்டிக்கொண்டு சென்றான்.
“ஏன் ரோஜா அப்படி பேசின?…” என்றாள் ஸ்ரீ அவர்கள் சென்றதும்.
“பின்ன என்னமோ நாம அவனோட அடிமை மாதிரி வந்து வள்ளுன்னு விழறான். எப்படி கேட்டான்னு நீயும் பார்த்த தான? அதோட முறைப்பு வேற…” என்று அதற்கு மேல் எரிந்து விழுந்தாள் ரோஜா.
“அவன் அதிகாரமா கூட கேட்டிருக்கட்டும், தாராளமா சொல்லிருப்பேன். அவன் கேட்டது உன்கிட்டலாம் கேட்க வேண்டியதிருக்கேன்ற மாதிரி. அவ்வளோ ஈஸியா நினைப்பானா? இந்த ப்ராஜெக்ட் இல்லைனா இன்னொன்னு….” என்று கோபத்தில் ரோஜா கத்த ஸ்ரீ அமைதியாகிவிட்டாள்.
சக்தியின் கோபம் தன்னை கண்டே என்று நன்றாகவே தெரியும் ஸ்ரீக்கு. ஆனால் ரோஜாவிடம் சொல்ல தோன்றவில்லை. தன்னை பார்ப்பதை போல அவளையும் பார்த்து பேச வாங்கிக்கட்டி சென்றான் என நினைத்தவள் அதன் பிறகு பேசவில்லை.
விதுரன் சொல்லியதை போல அரைமணி நேரத்தில் வரைபடங்களை எடுத்துக்கொண்டு கீழே சென்றனர் இருவரும். இவர்களை பார்த்ததும் சக்தியின் முகத்தில் அலட்சிய பாவம் வந்தமர கண்டுகொள்ளாததை போல திரும்பிக்கொண்டான்.
அங்கே விதுரன் போனில் பேசிக்கொண்டிருக்க சக்தி வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களின் அருகில் நின்று கொண்டிருந்தான். அங்கு இருந்தவரின் மொபைலில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. அதை சக்தி ஹம் செய்துகொண்டிருந்தான்.
“மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக உன்ன விட்டேன்” என்ற பாடல் வரியில் சரத்குமார் உருகிக்கொண்டிருக்க அதில் சக்தி கண் மூடி ஆழ்ந்துபோய் இருந்தான்.
“ஏன் ஸ்ரீ, இந்த பாவக்காகொடி பொடலங்கா கொடியெல்லாம் ஆவாதாமா? பறிச்சு வச்சு சமைச்சு சாப்பிடவாச்சும் உதவும். மல்லிகைப்பூவை பறிச்சு தலையிலையா வச்சுப்பாங்க இந்த பசங்க? சோ சேட். தமாசு தமாசு…”
சக்திக்கு கேட்கும் படி அவள் சொல்லி சிரிக்க ஸ்ரீ வாயை மூடிக்கொண்டு சிரிக்க சக்தி நெற்றிக்கண்ணை திறந்தான். ரோஜாவை அவன் முறைக்க,
“அச்சோ பாஸ் உங்க காதுல புசுபுசுன்னு திடீர் புகை…” என்றவளை பார்த்து பல்லை கடித்தவனிடம் விடாமல்,
“கோவமாகிட்டீங்களா? என்னை என்ன புகழ்றதா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா புகழ்ந்துருங்க. முதுகுக்கு பின்னால புகழ்ந்தா எனக்கு புடிக்காது. நான் தீப்பொறி திருமுகத்தோட சங்கத்த சேர்ந்தவ…” என்று சொல்ல சக்தி பேந்த பேந்த விழித்தான் இதற்கு என்ன பதில் சொல்வதென.
“உங்க திருமுகத்த ஒருமுகமா திருப்புங்கோ…” என்று பாடிக்கொண்டே ஸ்ரீயை பார்க்க அவளின் பக்கத்தில் சற்று தள்ளி விதுரன் முறைப்புடன் நின்றான்.
“போச்சு சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா. இன்னைக்கு ரோஜா ஜூசுடா…” என்று சொல்லியவள்,
“வந்து அதை மறந்துட்டேன். அங்கிள், இந்தா வந்துடறேன்…” என்றவள் வேகமாய் அங்கிருந்து நகர்ந்துவிட அவளின் பின்னே ஸ்ரீயும் ஓடிவிட அவர்கள் சென்றதை பார்த்த விதுரன் சிரிக்க ஆரம்பிக்க சக்தியின் முகத்தில் கூட புன்னகையின் சாயல்.