சக்தி சிரித்தபடி விதுரனை பார்க்க அவன் இன்னும் புன்னகைத்துக்கொண்டே தான் இருந்தான்.
“கொஞ்சமும் ரோஷமே இல்லாம பல்லை காட்டிட்டு நிக்கற. அந்த பொண்ணு நம்மளை அங்கிள்ன்னு சொல்லிட்டு போறாடா…” என சொல்ல,
“உன்னையா சொன்னா? என்னை தான?…” என்றவனை பார்த்து அதிசயித்த சக்தி,
“ஏன்டா இதுக்குத்தான என்னை தூங்க விடாம மாங்கு மாங்குன்னு வீட்டுக்குள்ள அந்த ஓட்டம் ஓடுன. இன்னைக்கு வெட்கமே இல்லாம் என்னைத்தான சொன்னான்னு சண்டைக்கு நிக்கிற என்கிட்ட. வச்சுக்கப்பா உன் அங்கிளை நீயே. ஸாரி ஸாரி மூஞ்சியில தொப்பை வச்ச அங்கிளை…” என சொல்ல,
“நீ அதை சொல்லாத. நல்லாவே இல்லை…” என சக்தியை முறைப்புடன் சொல்ல,
“இதுக்குத்தான் என்னை கூட்டிட்டு வந்தியா நீ? பார்த்தால ஸ்ரீ என்னை முறைச்சதை. அவளால நான் ரோஜாட்ட மொக்கை வாங்கிட்டேன்…” என எரிச்சல் குரலில் சொல்ல,
“உன்னை யாரு ஸ்ரீநிதி மேல இருக்க கோவத்தோட ரோஜாட்ட அப்படி பேச சொன்னா?…” என பதிலுக்கு சக்தியிடம் காய,
“உன்கிட்ட சொன்னேன் பாரு. என்னை சொல்லனும்…” என்றவனை இழுத்துக்கொண்டு வந்த வேலையை பார்க்க ஆரம்பித்தான் விதுரன்.
அறைக்கு வந்த ஸ்ரீ அவளை போட்டு திட்டிக்கொண்டிருந்தாள். ரோஜா கண்டுகொள்ளாமல் இருக்க,
“பாட்டு பாடின சரி அதென்னடி கடைசில பஞ்ச் வேற. சும்மாவே அவன் மதிக்க மாட்டான்…” என சொல்ல,
“எவன்?…” என்ற ரோஜாவின் கேள்வியில் சட்டென சுதாரித்தவள்,
“ஸாரி அவங்கன்னு சொல்ல வந்தேன். அதான் டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு…” என்ற சமாளிப்பில் அவள் சொல்வதை நம்பாத பார்வை பார்த்த ரோஜா,
“ஸ்லிப் ஆனா டங்கை தூக்கி அடக்கம் பண்ணிட்டு வா. போன் வந்ததுல யார்ன்னு பார்த்துட்டு வரேன்…” என போனை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல ஸ்ரீ ஒரு நிம்மதி மூச்சுடன் அமர்ந்துகொண்டாள்.
ரோஜாவின் எண்ணிற்கு மேலும் இரண்டு புதிய அழைப்புகள் வந்திருந்தது. அதனோடு குறுஞ்செய்தியும்.
“இட்ஸ் மீ, ஹரிஷ்…” என்று மட்டும் அதில் இருக்க அவள் பார்த்து விட்டதன் அறிகுறி மொபைலில் தெரிந்ததும் அந்த எண்ணில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது.
“ஹாய் ரோஜா…” என்றவனின் உரிமையான அழைப்பு அவளுக்கு ஒரு மாதிரி ஆனது.
‘இப்பதான் அட்டன் பண்ணேன். பேசறதுக்குள்ள பொண்டாட்டியை கூப்பிடற மாதிரி ரோஜான்னு ரொம்ப சகஜமா கூப்பிடறான்’ என இவளுக்கு புஸுபுஸுவென பொங்கிக்கொண்டு வர,
“ப்ரீயா இருந்தீங்கன்னா பேசலாமா?…” என்று கேட்க,
“சொல்லுங்க…” என்றாள்.
“தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். உங்க சிஸ்டர் எனக்கு கால் பண்ணிருந்தாங்க. என்னோட டீட்டய்ல்ஸ் ஷேர் பண்ணிட்டதா. இப்ப நீங்க கொஞ்சம் ப்ரீயா இருப்பீங்கன்னும் இந்த டைம் சொன்னாங்க…”
“விஸ்கி வேலையா இது” என நொந்துகொண்டவள்,
“இங்க அவ தான் வேலை பார்க்கறான்னு எனக்கு தெரியாம போச்சு பாருங்க…” என்று நக்கலாய் ரோஜா சொல்லவும்,
“வாட்?…” என்றான் புரியாமல்,
“இல்லை, இங்க வேலை பார்க்கறது நான். ஆனா நான் எப்ப ப்ரீயா இருக்கேன், இல்லைன்னு என்னை விட அவளுக்கு தெரிஞ்சிருக்கு. அவளும் ஒரு வேளை இங்க வேலை பார்க்கறாளோன்னு எனக்கு தெரியாம போச்சு…” என்றவளின் பேச்சில் இருந்த பேதத்தை சரியாக புரிந்து கொண்டவன் சிரிக்க,
“அவ்வளோ பெரிய ஜோக் இல்லை, ஜோக் இல்லை. ஜோக் சொல்லும் போது டைட்டில் கார்ட் மாதிரி சொல்லவும் சிரிங்க…” என்றாள் பிரஷாந்தியின் மேல் இருந்த கடுப்பில்.
“உங்க சிஸ்டர் உங்களை கேட்காம சொன்னது தப்பு தான். அதுக்கு நான் என்னங்க பண்ணுவேன்? என் கிட்ட காயறீங்க? பர்ஸ்ட் டைம் பேசறோம். பர்ஸ்ட் மீட் ஸ்பெஷல் மாதிரி இந்த பேச்சும் ஸ்பெஷலா இருக்கும் போல…” என்றான் இலகுவாய்.
ரோஜா வேண்டுமென்று தான் அப்படி பேசியது. தன்னிடம் கேட்காமல் அனைத்தையும் முடிவு செய்துவிட்டு இவனும் கூட பேசுவோமா என கேட்காமல் பேச ரோஜாவும் மடமடவென பேசிவிட்டாள்.
தன் இயலாமையை, யாரிடமும் காண்பிக்க முடியாத கோபத்தை புதிதாய் சிக்கியவனிடம் காண்பிக்க அவனோ இது ஒரு விஷயமே இல்லை என்பதை போல எதிர்கொள்ள சற்று மௌனமானாள்.
“இட்ஸ் ஓகே, எங்க வீட்ல முதல்ல சொல்லிட்டாங்க. இருந்தாலும் எல்லாம் பிக்ஸ் ஆனா பின்னால பேசலாம்னு தான் நானும் சைலன்ட். உங்களுக்கும் உங்க வீட்டில பிராப்பரா சொல்லனும் தானே? அதுக்காகவும் வெய்டிங்…”
“அந்த பேப்பர் இன்னைக்கு தான் வந்தது…” எனவும் மீண்டும் அவன் சிரிக்க,
“நீங்க கொஞ்சம் குறும்புன்னு சொன்னாங்க. ஆனா இப்படியா?…” என்றான் அவன். அந்த குரலில் வழிசல் எங்கேயும் இல்லை. ஒரு இயல்பான பேச்சு தான். ஆனாலும் ரோஜாவால் அதில் ஒன்ற முடியவில்லை.
“அதையும் அவங்களே சொல்லிட்டாங்களா? அப்ப நான் சொல்ல எதுவும் இல்லைன்னு சொல்றீங்க…” இப்பொழுதும் அவளின் விட்டேற்றியான பேச்சில் யோசனையானவன்,
“ஏன் இல்லாம? நாம நேரா மீட் பண்ணும் போது நான் தெரிஞ்சுக்க நீங்க சொல்ல நிறைய இருக்கும். அப்கோர்ஸ் என்னையும் நீங்க தெரிஞ்சுக்க…” என்றான். அப்போதும் ரோஜா பேசாமல் இருக்க,
“ரோஜா எதுவும் சொல்லாமல் இருக்கீங்க? ஓகே என்னை பார்த்தாச்சு, என்னை பத்தியும் தெரிஞ்சுருப்பீங்க. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. உங்களுக்கு நான் ஓகேவா?…” என பளிச்சென்று கேட்டுவிட திகைத்துவிட்டாள்.
எப்படி இப்படி என்ன பேசினாலும் கொஞ்சமும் எரிச்சல்படாமல் பேசுகிறான் என்ற யோசனையூடே,
“உங்களை பத்தி எதுவும் தெரியாது, இன்னைக்கு தான் தெரியும். பேசி பழக்கமும் இல்லை. திடீர்ன்னு போட்டோ அனுப்பினதும் புடிச்சிருக்கும்னு நினைச்சு கேட்கறீங்க. எனக்கும் டக்குன்னு எனக்கு புடிக்கலைன்னு சொல்ல ஆசை தான். ஆனா பாருங்க, மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க. இப்ப ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது…” என்று சொல்ல பேரும் ஹாஸ்யத்தை சொல்லிவிட்டதை போல சிரித்தவன்,
“யூ ஆர் அமேஸிங்…” என்றான்.
அது விதுரனை நினைவுப்படுத்த ஒரு நிமிடம் தடுமாறினாள் ரோஜா. தூரத்தில் சக்தியுடன் தீவிரமான முகபாவனையோடு பேசிக்கொண்டிருந்தவனை அப்பொழுதான் பார்த்தவள் பார்த்துக்கொண்டே நின்றாள்.
“தப்புதான், ஆனா பழகிட்டு கல்யாணம் பன்ற குடும்பமா நம்மளோடது? ஐ மீன் உங்க பேமிலியும், எங்க பேமிலியும். இனிமே பழகிக்கலாம். அதான் இன்னும் கொஞ்சம் நாள் இருக்கு தானே?…” என சொல்லியவன்,
“கம்மிங் சண்டே சென்னை வரேன். மீட் பண்ணலாம் ரோஜா…” என சொல்ல,
“ஹ்ம்ம், ஓகே…” என்ற முணுமுணுப்புடன் போனை வைத்துவிட்டாள்.
விதுரனை பார்த்த பின்பு எதையும் பேச அவளால் முடியவில்லை. கண்ணுக்கெதிரே மனம் விரும்பியவன். பேசிக்கொண்டிருப்பது எதிர்காலத்தில் கணவனாக போகிறான் என்பவன்.
கண்கள் கலங்கும் போல் இருந்தது. தொண்டையை செருமிக்கொண்டவள் தங்களின் கேபினுக்குள் செல்ல ஸ்ரீ இல்லை. அதை உணரக்கூட இல்லை ரோஜா.
தலை வலிப்பதை போல இருக்க அப்டியே சேரில் சாய்ந்து கண்ணை மூடிகொண்டாள். ஐந்து நிமிடம் இருக்கும். விதுரன் வந்துவிட்டான்.
“இதுக்குத்தான் உன்னை உன் ஆபீஸ்ல அப்பாய்ன்ட் பண்ணாங்களா லிட்டில் டெவில்?…” என்றவனின் குரலில் கண் விழித்தவள் சிலிர்த்துக்கொண்டு எழுந்தாள்.
“என்னை பார்த்தா குட்டி பிசாசு மாதிரியா இருக்கு? இதுக்குத்தான் என்னை உங்களுக்கு வேலை பார்க்க அனுப்பினாங்களா எங்க ஆபீஸ்ல?…” என அவனை போலவே கேட்க அவளை முறைத்தவன்,
“நான் கேட்கறதை எனக்கே திருப்பற? ஸ்ரீநிதி எங்க போனாங்க?…” என்று கேட்க,
“எனக்கு தெரியாதே….” என கையை விரிக்க,
“கூட வொர்க் பன்ற கோ வொர்க்கர் எங்க போனாங்கன்னும் தெரியலை. இந்த உலகத்தில தான இருக்க?…” என்று சொல்லவும் அமைதியாய் அவள் நிற்க,
“எவ்வளவு தைரியம் உனக்கு, சக்தியை வச்சிக்கிட்டே என்னை அங்கிள்ன்னு சொல்லுவ?…” என அவளருகே வர மேஜையின் எதிர்புறம் வந்தவனிடம்,
“அப்ப யாருமில்லாத நேரம் அங்கிள்ன்னு சொன்னா உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லை தானே அங்கிள்?…” என்று குறும்பாய் சிரிக்க அவளை பிடிப்பதை போல கையை நீட்டியவன்,
“அடிங், திரும்பவும் அங்கிள் சொல்ற…” என்றவனின் போலி மிரட்டலில் தைரியம் வர பெற்றவள்,
“நீங்க மட்டும் என்னை லிட்டில் டெவில் சொல்றீங்க, அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…” என்று பழிப்பு காட்ட அந்த விளையாட்டில் அவளை எட்டி பிடிக்க,
“மனித உயிர் என்ன அவ்வளவு கேவலமாவா போச்சு? அங், அப்புறம் நான் சொல்ல மாட்டேன். ஆமா…” என்று சொல்ல அவளின் கையை அழுத்தமாய் பற்றியவன்,
“உன்னை…” என்று அவளின் தலையில் குட்டு வைக்க போக,
“ஐ லவ் யூ அங்கிள்…” என்றுவிட்டாள் ரோஜா.
இதை எதிர்பார்க்காத விதுரன் ஒரு நொடி ஸ்தம்பித்து போக கை அப்படியே அந்தரத்தில் நின்றது. சட்டென அவனிடமிருந்து விலகியவள்,
“பார்த்தீங்களா? உங்களை ப்ரீஸ் பண்ணிட்டேன். ரோஜாவை அடிக்கிறது அவ்வளோ ஈஸியா? எங்கப்பாம்மா கூட என்னை அடிச்சதில்லை தெரியுமா? உங்களை விட்டுடுவேனா? என்னை யாரும் அடிக்க முடியாது. விடவும் மாட்டேன்…” என்று சொல்லி சிரிக்க விளையாட்டிற்கு சொல்லியிருக்கிறாள் என்று புரிந்தவன் இழுத்துப்பிடித்த மூச்சை வெளியேற்றினான்.
“திஸ் இஸ் டூ மச் ரோஜா. இனி விளையாட்டுக்கு கூட இந்த வேர்ட் யூஸ் பண்ணாத. இது ஸ்ட்ரிக்ட் ஆடர்ன்னு கூட வச்சுக்க. பட் ஐ டோன்ட் கேர் அன்ட் ஐ டோன்ட் லைக் இட்…” என்று பட்டென்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட ரோஜா நின்ற இடத்தை விட்டு அசையவில்லை.
இப்படி அவன் சொல்வான் என நினைத்தும் பார்க்கவில்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. முகம் சிவக்க அவனை இப்படியே விடுவதா என்று வேகமாய் அவனை வந்து மறித்தவள்,
“என்னை நீங்க இத்தனை கீழா நினைச்சிருக்க வேண்டாம் ஸார். எனக்கும் அந்த வேர்டோட வேல்வ்யூ என்னன்னு நல்லாவே தெரியும். சொல்லனும்னு நினைச்சு சொல்லலை. என்னவோ நான் இதுக்காக காத்திட்டு இருந்து யூஸ் பண்ணிட்டது மாதிரி பேசறீங்க?…”
திடுத்திப்பென்று தன் முன்னால் வந்து நின்ற ரோஜாவை பார்த்தவனின் மனம் துணுக்குற்றது. கண்கள் குளம் கட்டி இருந்தாலும் சொட்டு கண்ணீர் கீழே இறங்கவில்லை.
அவளின் முகம் சட்டென ரத்தம் பூசியது போல சிவந்து மூக்கு நுனி மிளகாய்ப்பழம் போல இருந்தது.
“ரோஜா…”
“எஸ் ரோஜா, இனி உங்க வாய்ல இருந்தும் ரோஜா மட்டும் தான் வரனும். என் பொஷிஷனோட ரெஸ்பெக்ட்டோட. ஜஸ்ட் ப்ரெண்ட்லியா பேசினதுக்கு இத்தனையா? நீங்க பேசினா நாங்க அக்ஸப்ட் பண்ணி அப்படியே ஆஹான்னு மகிழ்ந்து போய்றனும். நாங்க பேசினா உடனே லிமிட்டை தூக்கிட்டு நிப்பீங்க. இல்ல?…”
அவள் அவனை பேசவே அனுமதிக்கவில்லை. ஆம், அவன் பேச முயன்றான். அவளிடம் அதற்கான அனுமதியே இல்லை. அவள் மட்டுமே பேசினாள். அவனை எந்த விதத்திலும் மறுப்பையோ, வருத்தத்தையோ தெரிவிக்க அனுமதிக்கவே இல்லை.