“அதெல்லாம் நிறைய இருக்காங்க. உங்களுக்கு தெரியலை…” என்று சொல்லியவள் ஞாபகம் வந்தவளாய் தனது பேக்கில் இருந்து ஒரு அழைப்பிதழை எடுத்தவள் அவனுக்கு தந்து,
“நேரமிருந்தா கண்டிப்பா என்னோட மேரேஜ்க்கு நீங்க வரனும்…” என்று நீட்டியவளிடம்,
“நைஸ், கண்டிப்பா வர முயற்சி பன்றேன்…” என்றான் புன்னகையுடன்.
காதலை உணர்ந்த ஒருத்தி, காதல் என்பது தனக்கு வரவே வராது என்னும் ஒருவன் இருவரின் உணர்வும் ஒருங்கே பயணிக்கும் அந்த தருணம் என்றோ என்று விதி முடிவு செய்துவிட்டாலும் அதை அடைவதற்கான வழிகள் அத்தனை சுலபமில்லையே.
அவன் பார்க்கட்டும் என்று ரோஜா காபியை குடித்துவிட்டு எழுந்து சென்று ஒவ்வொரு இடமாய் பார்த்தாள். அன்று போல இன்று வெறுமையாக இல்லை அந்த வீடு.
சில பெய்ண்டிங்ஸ், உறுத்தாத வகையில் சில அலங்கார பொருட்கள், என வீடு நிறைவாய் இருந்தது. அப்படியே பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றாள்.
அவள் செல்லவும் அழைப்பிதழை பிரித்தவன் வெளிச்சம் போதாமல் வாசல் கதவிற்கருகே சென்று பார்க்க பிரித்தான்.
மிக ஆடம்பரமான அழைப்பிதல் அத்தனை அழகாய் இருந்தது. முதல் பக்கத்தில் ரோஜா ஹரிஷ் இருவரின் புகைப்படம் இருக்க அதனை பார்த்தவன் அதன் கீழே திருமண நாளை பார்த்து உள்வாங்கிக்கொண்டது மனதில்.
“ஸார்…” என்று வாசலில் சத்தம் கேட்க இன்விடேஷனை அப்படியே அங்கே இருந்த கீ செயின் ஸ்டேண்டில் வைத்தவன் வெளியே செல்ல மேலே சென்றுவிட்டு கீழே வந்த ரோஜா அவனை காணாமல் தேடியவள் கதவை திறக்க பார்க்க அது ஆட்டோமேடிக் லாக் காற்றில் தானாக பூட்டிவிட்டிருந்தது.
மனதிற்குள் பயப்பந்து சுழல வீட்டை சுற்றி பார்த்து ஸார் ஸார் என்று கத்த தனது மொபைலை எடுத்து டார்ச்சை ஆன் செய்தவள் தொண்டை வரண்டு போனது.
மழையிருள் வீட்டையும் இருட்டடித்திருக்க கீழே உள்ள படுக்கை அறையில் இருப்பானோ என ஒரு அறைக்குள் தேடியவள் அங்கே காணாமல் இன்னொன்றிலும் வந்து தேட அங்கே இன்னும் சில பொருட்கள் அடுக்கபடாமலும் அலங்கோலமாகவும் இருக்க இருட்டில் கால் வைத்து தடுமாறினாள்.
“ஸார் பயமா இருக்கு, எங்க இருக்கீங்க?…”
“ஹேய் ரோஜா…” என்றவனின் திடீர் சத்தத்தில் பதறி கத்தியவள்,
“நான் தான் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்…” என்று சொல்லி அவளை சமாதானம் செய்ய,
“ஏன் ஸார் வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போனீங்க? நான் பயந்துட்டேன் தெரியுமா? எனக்கு இருட்டுனா பயம். அதுவும் தனியா வீட்டுக்குள்ள இருக்கறதுனா இன்னும் பயம்…” என நடுக்கத்துடன் சொல்ல வாய்விட்டு சிரித்தவன்,
“வெறும் பேச்சுத்தானா?…” என்று இன்னும் சிரிக்க,
“நீங்க கூப்பிடவும் வந்தேனில்ல. நான் போறேன் போங்க…” என கோவமாய் கிளம்பியவள் காலில் எதுவோ கிழித்த உணர்வு.
“ஏதோ குத்திருச்சு ஸார்…” என்றாள் வலியை பொறுத்துக்கொண்டு.
கீழே கிடந்த மொபைலை எடுத்த விதுரன் அவளின் காலில் காண்பிக்க அவளின் பெருவிரலில் இருந்து உள்ளங்கால் வரை கிழித்திருந்தது ஒரு கட்டை ஒன்று மிகவும் கூர்மையாக துருத்திக்கொண்டு இருந்தது. அதன் முனையில் இவளின் காலை கிழித்ததற்கான ரத்த துளிகள்.
“ரோஜா ப்ளீடிங்…” என்றவன் சட்டென்று அவளை கைகளில் ஏந்திக்கொண்டு வந்து சோபாவில் அமர வைக்க அதை எதையும் உணராமல் ரத்தமா என்ற பயத்தில் ஐயோ என்று அலறி கண்ணை மூடி இருந்தாள்.
வலி என்று உணரும் பொழுதை விட அதில் ரத்தமும் வருகிறது என்றதும் பயந்து போனாள் ரோஜா.
“ஹேய் லிட்டில் டெவில் வெய்ட் வெய்ட்….” என்று பர்ஸ்ட் எய்ட் பாக்ஸுடன் வந்துவிட்டான் அவன்.
கீழே அமர்ந்து அவளின் பாதத்தை எடுத்து தன் மேல் வைத்துக்கொண்டவன் அதனை துடைக்க துடைக்க வந்துகொண்டே தான் இருந்தது.
“இப்ப ஹாஸ்பிட்டல் கூட போக முடியாதே?…” என பதட்டத்துடன் அவளின் முகம் பார்த்தான். கண்ணீர் நிறைந்து காயத்தை பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க அவனின் எண்ணம் அன்று அவள் அழுகையுடன் தன்னோட சண்டையிட்டதை ஞாபகப்படுத்தியது.
“வலிக்குதா லிட்டில் டெவில்?…” என்றான் ஆதுரமாய்.
மெதுவாய் தலையசத்தவள் கண்களை துடைத்துக்கொண்டு விரலை அசைக்க இன்னும் வலித்தது.
“ஹேய் இரு லிட்டில் டெவில், அசைக்காத. நான் பர்ஸ்ட் எய்ட் பன்றேன். வெய்ட்…” என்றவன் காயத்திற்கு மருந்திட்டு கட்டு போட்டவன் அவளுக்கு குடிப்பதற்கு சுடுதண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.
“இப்படி ஆகும்ன்னு நினைக்கலை ரோஜா…” என்றான் வருத்தமாய். அவள் முகம் கன்ற உதட்டை கடித்தபடி அமர்ந்திருக்க அவளின் கண்களில் இருந்து உருண்டு வந்த கண்ணீர் முத்துக்களை சட்டென துடைத்தவன்,
“ஹேய் லிட்டில் டெவில் என்னடா? ரொம்ப வலியா?…” என மீண்டும் கேட்க அவனின் இந்த அன்பு ரோஜாவின் மூச்சை அடைத்தது.
“இட்ஸ் ஓகே ஸார். என்னை வீட்ல கொண்டு போய் விடுங்க ப்ளீஸ்…” என்க,
“இரு என்கிட்டே பெய்ன் கில்லர் இருக்கு. குடுக்கலாமான்னு கேட்டுட்டு தரேன்…” என்றவன் மருத்துவம் படிக்கும் தனது சித்தப்பா பெண்ணிற்கு அழைத்தவன் மொட்டையாக தெரிந்தவருக்கு அடிபட்டுவிட்டது, மழையில் வெளியில் செல்ல முடியாது, இதை கொடுக்கலாமா என்று சொல்ல அதன் பெயரை கேட்ட பெண்,
“பெய்ன் கில்லர் சும்மா சாப்பிடறது அட்வைஸபில் இல்லை. ரொம்ப வலின்னா குடுக்கலாம். சில நேரம் பீவர் கூட வரும். பெய்ன் கில்லர் குடுத்து தூங்க வை அண்ணா. தூங்கி எழுந்ததும் பீவர் இருந்தா அந்த டேப்லெட் குடு. மழை விடவும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் கால்ல அந்த மரத்தூள் எதுவும் இருக்கான்னு பார்த்துட்டு ஒரு இன்ஜெக்ஷன் போட்டுட சொல்லு…” என்று வைத்துவிட்டாள்.
பேசிவிட்டு வைத்தவன் மீண்டும் சென்று குடிக்க நீர் சூடு செய்து எடுத்து வந்து ரோஜாவிற்கு தர,
“இப்பதான் தண்ணி குடிச்சேன். போதும், நான் வீட்டுக்கு போகனும்…” என்று ஆரம்பிக்க,
“முதல்ல இந்த டேப்லெட் போட்டுக்கோ ரோஜா. பெய்ன் கம்மியாகும். இப்ப மழை விடட்டும். கண்டிப்பா போகலாம்…” என சொல்ல அவள் வாங்காமல் இருக்க,
“என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ரோஜா?…” என்றான் வருத்தமாய்.
“அட அங்கிள், போடா டேய்” என சலித்தது அவளின் மனது. வேகமாய் வாங்கி போட்டவள் அப்படியே சோபாவில் சாய்ந்துவிட,
“ஸ்ரீக்கு மெசேஜ் பண்ணிடுங்க ஸார் ப்ளீஸ்…” என்றாள் பேச கூட திராணியற்று.
காலையில் இருந்தே அவளின் மனது அடித்துக்கொண்டே தான் இருந்தது. இப்பொழுது விதுரனை பார்த்தது அவனுடன் இங்கே வந்தது என வரிசையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகள்.
அப்படியே கண்ணயர்ந்தவளின் அசவுகரியமான நிலையை கண்டவன் அவளை மெதுவாய் தூக்கி சென்று உள்ளே படுக்க வைத்துவிட்டான் அவனறையில்.
“அங்கிள்…” என்றவளின் விசும்பல் குரலில் துணுக்குற்று திரும்பியவன் அவளின் பயம் உணர்ந்து அங்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு வெளியே வந்தான்.
ஸ்ரீக்கு அழைத்து விஷயத்தை சொல்ல உடனே வரவேண்டாம் என அவன் சொல்ல சொல்ல ஸ்ரீ விலாசினியை அழைத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். அதில் இன்னுமே எரிச்சல் மூண்டது விதுரனுக்கு.
“இந்த பொண்ணுக்கு என் மேல அப்படி என்ன சந்தேகம்?” என கடுப்புடன் அமர்ந்திருந்தான் அந்த அறையின் வாசலில் பீன்பேக் ஒன்றை எடுத்து போட்டு.
எதற்கும் இருக்கட்டுமென்று வாசல் கதவையும் திறந்து தான் வைத்திருந்தான் ஸ்ரீயை ஓரளவு கணித்தவனாக.
எப்படியோ அரைமணி நேரத்தில் வந்துவிட்டிருந்தாள் ஸ்ரீ. உடன் விலாசினியும் தங்கள் அப்பார்ட்மெண்டில் தெரிந்த ஒரு வயதானவரும்.
“ஸார் ரோஜா…” என வேகமாய் வர கடுகடுவென்ற முகத்துடன் அவளை பார்த்தவன் அந்த அறையை காண்பிக்க நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பினாள் ஸ்ரீ.
‘வேண்டாம்’ என சொல்ல நினைத்தாலும் கையை கட்டிக்கொண்டு பார்த்தபடி தடுக்காமல் நின்றான்.
கண்களை திறக்க முடியாமல் உறக்கத்தில் இருந்த ரோஜாவிற்கு நனைந்த உடையுடன் படுத்திருந்ததால் காய்ச்சலும் கண்டிருக்க,
“வினி, இவளை ஒரு கை பிடி. ஹாஸ்பிட்டல் போய்டுவோம். பீவர் வேற இருக்கு…” என்று பதட்டமாய் சொல்ல விதுரனுக்கு தொண்டையடைத்தது தன்னால் தானே என.
“ஸார், ரொம்ப நன்றி, எங்க பொண்ணை பத்திரமா பார்த்துக்கிட்டதுக்கு…” என ஸ்ரீயுடன் வந்த பெரியவர் சொல்ல,
“உங்க பொண்ணா? அப்ப ரோஜாவோட அப்பாவா நீங்க?…” என அழுத்தமாய் கேட்டான் அவன். அவன் கேட்ட விதமே நக்கலாய் இருக்க,
“என் பொண்ணுங்க மாதிரி ஸார். வெளியூர்ல இருந்து வேலைக்காக வந்திருக்காங்க. பெத்தவங்க வேற சொல்லிட்டு போய்ருக்காங்க. பார்த்துக்க வேண்டியது எங்க கடமை தான?…” என சொல்ல,
“அப்ப ஏன் அந்த பொண்ணை தனியா இன்விடேஷன் வைக்க அனுப்பனீங்க இந்த மழையில?…”என்று எரிச்சலுடன் கேள்வி கேட்க அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார் அவர்.
“அங்கிள்…” என ஸ்ரீ சொல்ல கொலைவெறியுடன் அவளை திரும்பி பார்த்தவன்,
அங்கிள் அது ரோஜாவுக்கு மட்டுமே சொந்தம் என்பதை போல அவன் பேச விதுரனை விசித்திரமென பார்த்தாள் ஸ்ரீ.
“ரோஜா, இங்க பாரு….” என்று விலாசினி அழைப்பில் லேசாய் கண் விழித்தவள்,
“வலிக்குது வினி. ப்ளீஸ். முடியலை…” என்று அனத்த விதுரனின் மனம் வலித்தது.
“நான் காரை திருப்பி வைக்கேன்ம்மா. நீங்க கூட்டிட்டு வாங்க…” என்று சொல்லி உடன் வந்த அவர் வெளியே செல்ல இருவரால் ரோஜாவை தூக்க முடியவில்லை. அதிலும் ஒற்றை காலை வேறு ஊன்ற முடியாமல் அவள் வலியில் முகம் சுளிக்க,
“ப்ச், தள்ளுங்க. அவளுக்கு முடியலைன்னு சொல்றா. தூக்கி நிப்பாட்டிட்டே இருக்கீங்க?…” என எரிந்து விழுந்தவன் ரோஜாவை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல,
“ஸார் ப்ளீஸ் இருங்க குடை விரிக்கறேன். கார் வரைக்கும் நனையாம இருக்க…” என ஸ்ரீ ஓடி வர அவள் மீதான கோபத்தில்,
“அதான் காய்ச்சல் வந்திருச்சு தானே? இதுக்கும் சேர்த்து ட்ரீட்மென்ட் பண்ணுங்க…” என்று அவளை தவிர்த்தவனாய் அந்த காரை நோக்கி சென்று பின்பக்கமாய் ரோஜாவை கிடத்தியவன் அவளின் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.
தானும் உடன் செல்வோமா என யோசிக்கையில் ஸ்ரீ வந்துவிட அவன் கையை பார்த்தவள் வேகமாய்,
“தேங்க்ஸ் ஸார், தள்ளுங்க…” என சொல்லி தான் ஏறிக்கொண்டு விலாசினியை மறுபக்கம் ஏற சொல்லியவள்,
“சீக்கிரம் கிளம்புங்க…” என்றாள் அவரிடம்.
கார் கிளம்பி சென்ற திசையை பார்த்தபடி நின்றவன் வீட்டிற்குள் செல்ல அங்கே ரோஜாவின் பொருட்கள் எதுவும் இல்லை.
காபி குடித்துவிட்டு வைத்த கப்பை தவிர வேறு எதுவும் இல்லை. அவள் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே அமர்ந்தவன் கரண்ட் வந்த பின்பு மொபைலை பார்த்தபடி இருந்தான். மழை நன்றாகவே வெறித்துவிட்டிருந்தது.
மதிய உணவிற்கு அழைத்தும் விதுரன் வராமல் இருக்க வீட்டிற்கே அவனை தேடி வந்துவிட்டான் சக்தி.
“என்ன விது, லஞ்ச்க்கு வான்னா வரலைன்னு சொல்லிட்ட?…” என நுழைந்ததும் கேட்க,
“ப்ச், காபி குடிச்சேன். பசிக்கலை…” என்று மட்டும் சொல்லி கண்ணை மூட அப்போதுதான் சோபாவின் அருகே இருந்த ரத்தத்துளிகளை பார்த்தவன்,
“என்னடா ரத்தம்?…” என்று சக்தி பதற,
“ரோஜா இன்விடேஷன் குடுக்க வந்தா…” என்றவன், அவளை தான் மழையில் அழைத்து வந்ததை சொல்ல,
“எதாச்சும் ஏடாகூடமா பேசிட்டியா? அடிச்சுட்டாளா அந்த பொண்ணு? எங்க எங்க அடிச்சா?…” என்று சக்தி அவன் உடம்பில் காயத்தை தேட,
“உன் மூஞ்சி, என்னை நல்லவனாவே நினைக்க மாட்டியா நீ?…” என்று எரிந்து விழுந்தான்.
“சரி சரி, என்ன நடந்துச்சுன்னு கோவப்படாம சொல்லு…” என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டவன்,
“ஸ்ரீ பண்ணதுல என்ன தப்பு? கல்யாணம் ஆகப்போற பொண்ணு. இப்படி உன்னோட தனியா இருந்தா யாராவது ஏதாவது சொல்லிட்டா? அந்த கவலை அதனால அப்படி ரியாக்ட் பண்ணிருப்பா…” என முதன் முறையாக அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசியவன்,
“அதை விடு, அம்மா உனக்கு போட்டோ அனுப்பினாங்களாமே? பார்த்துட்டு எதுவும் பேசலை நீ?…” என கேட்க,
“அம்மா நீ மேரேஜ்க்கு ஓகே சொன்னதை சொல்லலை. பொண்ணை பார்த்துட்டு அவங்க எப்படி இருக்காங்கன்னு எதுவும் சொல்லலையாம்? உனக்கு பார்த்திருக்கற பொண்ணை பத்தின உனோட அபிப்பிராயம் என்னன்னு தெரிஞ்சுக்கனும்னு நினைக்காங்க…” என்றதும் மீண்டும் காலை வந்திருந்த அந்த போட்டோவை எடுத்து பார்த்தான்.
பார்த்தான், பார்த்தான், பார்த்தபடியே தான் இருந்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை. சக்தி அவன் பார்க்கும் விதத்தை பார்த்தபடி இருக்க,
“ஏன்டா சக்தி, எனக்கு ஏன் இந்த பொண்ணை பார்த்து எந்த பீலிங்கும் வரலை? ஒரு சின்ன ஸ்பார்க் கூட இல்லை?…” என கேட்டு சக்தியின் வயிற்றில் புளியை கரைத்தான் விதுரன்.