‘வெண்ணிலவை கொள்ளையிட்ட கதிரவன் மீண்டும் அவளிடமே கொள்ளைப் போகும் விந்தை!’
*******
கதிரவனின் செங்கதிர்கள் மலை முகட்டின் உச்சியிலிருந்து மெல்ல எட்டிப்பார்த்திட, அன்றைய நாள் ஆரம்பமாகியது. சூரியன் எட்டி பார்த்த பின்பும் முழுதாக வெளிச்சமின்றி அரை இருளாகவே காட்சியளித்தது அந்த மலைப்பிரதேசம்.
முகத்தில் சுள்ளென மோதும் சூரியனின் காலை நேர இளஞ்சூடு அங்கு நிலவும் குளிரில் அடங்கித்தான் போனது. அது ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு.
அங்கிருந்த குன்றின் மீது நின்றிருந்தான் அவன். காரணமெல்லாம் ஏதுமில்லை. அவனது வழக்கம் அது. தினமும் அதிகாலை பொழுது வீட்டிற்கு முன்னிருக்கும் அந்த குன்றின் மீதுதான் அவனுக்குத் தொடங்கும். கையில் அவன் பருகும் காபி குவளை. அங்கு கொட்டிக்கிடக்கும் இயற்கையின் அழகை கண்களுக்கு விருந்தாக்கியவாறு ஒவ்வொரு மிடறாக ரசித்து தொண்டைக்குள் விழுங்குவான். அவனின் பல தேடல்களுக்கான இடம் அது.
அவன் கதிர் குமரன். இருபத்தி ஏழு வயது இளங்காலை. திராவிட நிறம். முகத்தில் வீற்றிருக்கும் முறுக்கு மீசையும், கூரிய பார்வையின் தீட்சண்யமும் அவனின் கம்பீரம் கலந்த அழகை எடுத்துக்காட்டும். இயற்கையிலேயே முறுக்கேறிய உடலும், மிடுக்கானத் தோற்றமும் அவனுக்கு தனியானதொரு வசீகரத்தை கொடுக்கும்.
நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில் நாட்டம் கொண்டவன். கொண்டதோடு களம் இறங்கி வேலை செய்பவன். சேற்றில் இறங்கிட சிறிதும் தயக்கம் காட்டிடமாட்டான். ‘இன்று யாரோ ஒருவர் சேற்றில் வைக்கும் காலால் தான் பல பேர் சோற்றில் கை வைக்கின்றனர்’ என்ற தார்பரியம் புரிந்தவன். விவசாயத்தில் அடி முதல் நுனி வரை அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறான். அதன் கனத்தை சிறிதும் தலைக்கு ஏற்றாமல் எளிமையாகவும், பணிவாகவும் நடக்கும் முறை கற்றவன்.
குடும்பத் தொழிலான காபித் தோட்டம் மற்றும் காபி கொட்டைகள் பதப்படுத்தும் ஆலை அவன் வசம்! மிளகு மற்றும் ஏலக்காய் உற்பத்தி… விவசாயத்தில் அவன் கால் வைத்த பின்னர் தொடங்கியது. நெருங்கிய உறவினர் ஒருவரின் ஏமாற்றத்தால் அவனாகத் தொடங்கியது தரம் பிரிக்கும் ஆலை. அதிலேயே தனித்தனி பிரிவு அமைத்து தங்களின் தோட்டத்தில் பயிராகும் மிளகு மற்றும் ஏலக்காயினை தரம் பிரித்து ஏற்றுமதி மற்றும் சந்தை படுத்துகிறான். அதுபோக, அவர்களின் தோட்டத்தில் ஏற்காட்டின் சூழலுக்கேற்ற பழ வகைகளான அத்தி, நீர் ஆப்பிள், நட்சத்திர ஆப்பிள், பலா, கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு போன்றவையும் விளைகிறது. வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து பழங்கள் செல்கின்றன.
(1820 ஆம் ஆண்டு முதன் முதலாக ஏற்காட்டில் காபி செடிகள் நடவு செய்யப்பட்டது.)
தொழிலை கையில் எடுக்கும்போது பள்ளி படிப்பை மட்டுமே முடித்திருந்தான். அந்த சிறுவயதில் எதிர்பார்க்காத பல நிகழ்வுகளை சந்தித்து மரத்து போய்விட்டான். அதன் தாக்கத்தால் எப்போதும் இறுகியே வலம் வருவான்.
அவன் சாதாரணமாக பேசினாலும், பழகினாலும் அவனது இறுக்கம் இரண்டடி தள்ளி நிற்க வைக்கும்.
அவன் இளகுவது அவனை தன் குடும்பத்தில் ஒருத்தனாக நினைத்து அன்பு காட்டும் நபர்களிடம் மட்டுமே. அவனின் உலகமும் அவனின் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் அவர்கள் தான். இதில் அவனது சித்தப்பா தனிதான். தாய் தந்தை அற்ற அவனுக்கு சகலமும் அவர் தான். அவனுக்காக வாழ்வின் முக்கிய அங்கத்தையே துறந்தவராயிற்றே! அதில் மற்றொரு நபருக்கு இடமிருக்குமென்றால், அவனது மனதோடு உறைந்திருக்கும் காதல் அது. அது அவனே அறியாததும்.
கதிர்குமரன் குடும்பத்தின் மூத்த தம்பதியர் வீரபாண்டியன், கமலம். அவர்களுக்கு மக்கள். நான்கு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள்.
மூத்தவர் ராஜதுரை, அவரது மனைவி சாந்தா. பெயருக்கேற்றவாறு சாந்த சொரூபி. அவர்களின் ஒரே புதல்வன் நம் கதிர்குமரன். துரை தன் தந்தைக்கு துணையாக விவாசயத்தில் ஈடுபட்டார். தேயிலை பறிப்பை பார்வையிடச் சென்றவர், அருகிலிருந்த பள்ளத்தாக்கை கவனியாது கீழே விழுந்து இறந்துபோனார். அவரின் உடலை இரண்டாவது நாள் தான் மலைப்பள்ளத்தில் கண்டெடுக்க முடிந்தது. தலை பாறையில் மோதி சிதைந்திருக்க… கணவரை அந்நிலையில் பார்த்து மயங்கி சரிந்த சாந்தா அதன் பின்னர் எழவே இல்லை. அப்போது குமரன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.
இரண்டாவது ராஜேந்திரன், அவரது மனைவி செல்வி. மகன் குணா. மகள் தீக்ஷிதா. இவர் பெங்களூரில் பெரிய கட்டுமானத் துறை கம்பெனியில் பொது மேலாளராக பணி புரிகிறார். குணா மென்பொறியாளன். தீக்ஷிதா ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு, கார்மெண்ட்ஸ் ஒன்றில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறாள்.
மூன்றாவது மகள் குணவதி அவரது கணவர் பழனிச்சாமி. மகள் மதிவழகி. மிளகு ஆலை வைத்திருக்கிறார். மதியழகி விடுதியில் தங்கி நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கின்றாள். ஏற்காட்டிலிருந்து கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிள்ளியூர் இவர்களது கிராமம்.
நான்காவது எம்பிரான் மனைவி சுலோச்சனா. மகன் வருண். மகள் யாழினி. வருண் மூன்றாம் ஆண்டு பொறியியல். யாழினி பள்ளி இறுதியில் இருக்கின்றாள். எம்பிரான் வங்கி மேலாளராக இருக்கிறார். எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டிபாடி இவர்களது ஊர்.
ஐந்தாவது காந்தள் அவரது கணவர் ராஜய்யா. மூத்த மகன் அஜய். கதிர் குமரனும் இவனும் சமவயது உடையோர். இவனுக்கு காந்தள் வைத்த பெயர் அருள்மணி. கல்லூரி படிப்பாக சென்னையில் விஸ்காம் சேர்ந்த போது, தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டான். இவன் ஒருவரை தனக்குப்போட்டியாக, எதிரியாக பார்க்கிறானென்றால் அது குமரன் தான். தற்போது சென்னையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் காட்சி வடிவமைப்பாளராக பணி புரிகிறான். இவன் படிக்கும் காலங்களில் விடுமுறையென வீட்டிற்கு வந்தது. வீடு ஒன்று என்பதே இவன் நினைவில் இருக்கிறதா என்ற சந்தேகம் காந்தளுக்கே உண்டு. மகள் வெண்ணிலா. ராஜய்யா தற்போது உயிரோடு இல்லை. காந்தள் அரசு பள்ளி ஆசிரியர். வெண்ணிலா நான்காம் ஆண்டு மருத்துவம். ராஐய்யா வெண்ணிலாவிற்கு இரண்டு வயது இருக்கும் போது உடல்நல குறைவு ஏற்பட்டு அந்த மலைப்பகுதியில் சரியான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் உயிர் இறந்தார். அதன் பொருட்டே தன்னுடைய மகள் மருத்துவம் தான் படிக்க வேண்டுமென்ற உறுதியோடு படிக்க வைக்கின்றார் காந்தள்.
மாலை நேர மலைப்பயணம் உகந்தது அல்ல என்பதோடு, மெதுவான பயணம் மற்றும் ஏற்காடு மலையில் இருபது கொண்டையூசி வளைவுகள் இருப்பதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு… மகளின் மருத்துவ படிப்பிற்காகவே மாற்றல் வாங்கிக்கொண்டு சேலத்தில் குடியேறி விட்டார்.
ஆறாவது கண்ணபிரான். தன்னுடைய அண்ணன் மகனுக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரின் வாழ்வு குமரனென்றானது.
அன்றைய சூழலில் குமரனை தங்களுடன் வைத்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை. காந்தள் தன்னுடன் அழைக்க… ஏற்கனவே கணவரற்ற அவருக்கு பாரமாக இருக்க குமரனுக்கு விருப்பமில்லை. அவரை தங்களுடனே தங்க சொல்லி ராஜய்யா இறந்த போதே கமலம் மற்றும் வீர பாண்டியன் சொல்ல மறுத்திருந்தார்.
ராஜதுரைக்கும் ராஜேந்திரனுக்கும் சிறு வயதிலிருந்தே ஆகாது. துரையின் மீது மட்டும் குடும்பத்தாருக்கு தனிப்பாசம் என்ற எண்ணம் அவருக்கு.
இப்பொழுது இதே எண்ணம் தான் கதிர்குமரன் மீது அஜய்க்கு(அருள்மணி).
துரை தந்தைக்கு உதவியாக தொழிலில் இறங்க… குடும்ப பொறுப்பு யாவும் துரையின் கையில் அடங்கியது. அது இன்னும் ராஜேந்திரனுக்கு அவர் மீது கோபத்தை உண்டாக்கியது. ஒருமுறை எவ்வித காரணமுமின்றி ராஜேந்திரன் லட்சக்கணக்கில் பணம் கேட்க,
“கணக்கு வழக்கெல்லாம் துரை தான் பார்த்துக்கொள்கிறான். அவனிடம் வாங்கிக்கொள்” என்றார் வீரபாண்டியன்.
“அவன்கிட்ட நான் பிச்சை எடுக்கணுமா?” என்ற ராஜேந்திரன், “அதென்ன குடும்பத் தொழிலில் வரும் பணம் முழுக்க அவன் பொறுப்பில்” என்றும் கேட்டிட…
“களத்தில் இறங்கி வேலை அனைத்தையும் செய்வது அவன்தானேப்பா” என்று வீரபாண்டியும் பட்டென்று பதில் கொடுத்தார்.
“அப்போ இந்த வீட்டில் அவன் உழைப்பில் நாங்கள் சாப்பிடுகிறோமென்று சொல்லி காட்டுறீங்களா?” என்று கோபம் கொண்ட ராஜேந்திரன் அடுத்த இரண்டு நாட்களில் யார் சொல்லியும் கேட்காது தன் மனைவி பிள்ளைகளோடு பெங்களூரில் வேலை கிடைத்திருப்பதாக சென்றுவிட்டார்.
அதன் பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வந்தது தன்னுடைய அண்ணனின் இறப்பிற்குத்தான். அப்போதுதான் ராஜேந்திரன் வேலையில் கொஞ்சம் முன்னேறத் தொடங்கியிருந்தார். தனக்கெதற்கு வீண் பாரமென்று அவர் குமரனை கண்டுகொள்ளவில்லை. இறுதி காரியங்கள் முடிந்ததும் கிளம்பிவிட்டார்.
எம்பிரானுக்கு குமரனை தங்களுடன் வைத்துக்கொள்ள விருப்பமிருந்தாலும், தன்னுடைய மனைவி சுலோச்சனாவிற்கு பயந்தே அமைதியாக இருந்துவிட்டார். சுலோச்சனா தான் தனதென்று சற்று சுயநலவாதியாக எதிலும் சிந்திக்கக்கூடியவர். குமரனின் மீது பாசமிருந்தாலும், நாளை உடனிருக்கும் நாட்களில் தன் பிள்ளைகளை மட்டுமே முன்னிறுத்தி அவர் எதாவது செய்துவிட்டால், குமரனின் மனம் நோகுமே என்கிற பயம் எம்பிரானுக்கு. எட்ட இருந்தால் தான் சில உறவுகளில் பிடித்தமிருக்கும். அந்த எண்ணமே சுலோவிற்கு. அதனால் அவர் குமரனை தங்களுடன் வைத்துக்கொள்ள எண்ணவில்லை. மற்றபடி எட்ட நின்று முடிந்தளவு குமரனுக்கு அப்பப்போ ஏதேனும் செய்தார்.
பழனிச்சாமியின் அடாவடி குணமறிந்த குணவதி உடனில்லை என்றாலும் அடிக்கடி வந்து பார்த்துக்கொள்கிறேன் என்றதோடு முடித்துக்கொண்டார்.
காந்தள் எவ்வளவோ மன்றாடி பார்த்தும்…
“தாத்தா, அப்பத்தா கூடவே இருந்து கொள்கிறேன்” என முடிவாக சொல்லிவிட்டான் குமரன்.
“வயசான காலத்தில் உன்னை எப்படி வளர்த்து ஆளாக்கப்போறோம் ராசா” என்ற கமலம், தான் பெற்ற மக்களின் சுயநலத்தை நேரில் கண்டு கண்ணீர் வடித்தார்.
மற்றவர்களின் பாரமான எண்ணம் குமரனை ஏற்காது விட்டுச் சென்றது என்றால், அத்தகைய பாரத்தை அன்போடு அழைக்கும் காந்தளுக்கு கொடுக்கக்கூடாது என்று நினைத்து, அவருடன் இவன் போகவில்லை.
“யாரும் பார்த்துக்க வேண்டாம். என் குமரனுக்கு நானிருக்கிறேன். அவனுக்கு இனி அப்பா நான்தான்” என்று அன்று அனைவரின் முன்பும் சொல்லிய கண்ணபிரான் இன்றுவரை அவனுக்காக மட்டுமே வாழ்கிறார்.
குமரனுக்காக திருமணம் கூட செய்து கொள்ளவில்லை அவர். பெண் பார்த்த இடங்களில் எல்லாம் குமரனை காரணம் காட்டிட, தனக்கு திருமணமே வேண்டாமென்று தன் பெற்றோரிடம் கண்டித்து சொல்லிவிட்டார்.
குமரன் பள்ளி படிப்பை முடித்தபோது கண்ணபிரான் மலைச்சரிவில் உருண்டு கால் உடைந்து சில மாதம் படுக்கையில் ஆழ்த்தியது. அச்சமயம் மீண்டும் தொழிலுக்கு வந்த வீரபாண்டியன் திணறிப்போனார். தனியாக தொழிலை கவனிக்க முடியாது ரொம்பவே கடினப்பட்டார்.
தேர்வு முடிவுகள் வரும்வரை கணக்கு வழக்குகளையாவது பார்த்துக்கொள்ளலாம் என்று காபி கொட்டைகள் பதப்படுத்தி தரம் பிரிக்கும் தங்களது ஆலைக்கு செல்லத் துவங்கினான் குமரன். அப்போதுதான் அங்கிருந்த கணக்கர் நிறைய பொய் கணக்குகள் எழுதியிருப்பதை கண்டறிந்து, யாவற்றையும் தானே பார்த்துக்கொள்வதாகச் சொல்ல… கண்ணபிரானால் மறுக்க முடியவில்லை. அவருக்கு கணக்கெல்லாம் சுத்தமாக வராது, அத்தோடு வீரபாண்டியனுக்கும் இந்த சிறுவயதிலேயே அனைத்தையும் பொறுப்பாக செய்யும் பேரனிடம் செய்யாதே என்று சொல்ல முடியாது போனது.
நாளடைவில் கணக்கைத் தவிர தொழிலில் மற்ற நெளிவு சுழிவுகளை கண்ணபிரான் தன்னுடைய மகனுக்கு சொல்லிக்கொடுக்க ஆர்வமாகக் கற்றுக்கொண்டான். அதுவே குமரனுக்கு பிடித்து போக கண்ணபிரான் உடலநலன் தேறி வந்த பின்பும் அவருடனே தொழிலை கவனித்தான். அவருக்கே சொல்லிக்கொடுத்தான் என்றும் சொல்லலாம். குருவை மிஞ்சிய சீடனாகத் திகழ்ந்தான்.
படிப்பைத் தொடர சொல்லி மூவரும் எவ்வளவு சொல்லியும் குமரன் கேட்கவில்லை.
“படித்தும் இந்த வேலையைத்தானே பார்க்கப்போகிறேன்” என்று அவர்களின் வாயினை அடைத்துவிட்டான்.
இருப்பினும் கண்ணபிரானின் வார்த்தைக்காக தொலைதூர கல்வியின் வாயிலாக இளங்கலை ஆங்கிலம் படித்தான். அத்தோடு படிப்பு போதுமென்று நினைத்து, முழுமூச்சாக விவசாயத்தில் இறங்கிவிட்டான்.
அவன் இளங்கலை படித்தான் என்பதே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. கண்ணனும் காந்தளும் மட்டுமே அறிந்தது. மற்றவர்கள் அவனுக்கு தூரமாக இருந்ததால் தெரியவில்லை என்றால் தாத்தா பாட்டிக்கு படிப்பைப்பற்றி, அதுவும் வீட்டிலேயே இருக்க, என்றோ ஒரு சில நாட்கள் மட்டும் கல்லூரி சென்று தேர்வு எழுதி வருவதால் தெரியாமல் போனது. இவனும் சொல்லிக்கொள்ளவில்லை.
என்று கண்ணபிரான் தனக்காக வாழ்க்கையே வேண்டாமென்று சொன்னாரோ அன்று முதலே அவரை அப்பா என்று அழைக்கத் தொடங்கியிருந்தான்.
“குணா உனக்கு போன் போட்டுட்டே இருக்கான். நான் என்ன விடயமென்று கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கிறான்” என்றவர் அவனது அலைபேசியை கொடுத்துவிட்டு கையிலிருந்த குவளையை வாங்கிக்கொண்டுச் சென்றார்.
ராஜேந்திரன் குடும்பத்தை பிரிந்து சென்றபோது குணாவிற்கு பத்து வயது. குமரனைவிட இரண்டு வயது சிறியவன். மீண்டும் குமரனை அவன் பார்த்தது, தாய் தந்தை இறப்பை ஏற்க முடியாது கதறி அழுபவனாகத்தான்.
அன்று முதல் தன்னுடைய தந்தை மறுத்தாலும் குமரனிடம் பேசுவதை மட்டும் குணா நிறுத்தவில்லை. ஒவ்வொரு விடுமுறைக்கும் குமரனைத்தேடி ஏற்காடு வந்துவிடுவான். குமரனுக்கு குணா தம்பி என்பதைவிட அவனுக்கு இருக்கும் ஒரே நண்பன் என்றும் சொல்லலாம்.
“என்ன குணா, என்ன விடயம்?” குணாவிற்கு குமரன் அழைத்திருந்தான்.
“அடுத்தவாரம் உன் பிறந்தநாள் வருதே குமரா. என்னால் வர முடியாது நினைக்குறேன். லீவ் கிடைக்கல. காந்தள் அத்தை வீட்டு அட்ரெஸ்ஸுக்கு உனக்கு ட்ரெஸ் ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ணியிருக்கேன். நீ மலையிலிருந்து கீழே போகும்போது போய் வாங்கிக்கோடா” என்றான். வெகுவான தயக்கம் அவனிடம்.
“உனக்கெதுக்குடா இந்த வேண்டாத வேலை. நான் இப்போ உன்கிட்ட எனக்கு ட்ரெஸ் எடுத்து தரச்சொல்லிக் கேட்டேனா? அதுவும் அத்தை வீட்டு அட்ரெஸ்ஸுக்கு.” அத்தனை நேரமிருந்த அமைதியை துறந்து காட்டமானான்.
“நான் கேட்டுதான் எவ்ரி மன்த் எனக்கு பணம் அனுப்புறியா? ஒன் இயர் வேலையில்லாமல் வீட்டில் வெட்டியா இருந்தப்போ அப்பா கூட எனக்குன்னு பணம் கொடுத்தது இல்லை. ஆனால் நீ நான் கேட்காமலே கொடுத்ததானே. பர்ஸ்ட் மன்த் சேலரி உன்கிட்டதான் கொடுக்கணும் ஆசைப்பட்டேன். ஆனால் நீ அப்பாகிட்ட கொடுன்னு கொடுக்கவச்சிட்ட. அதுக்கு பிறகாவது நான் கொடுத்தால் வாங்குனியா. அண்ணன் தான் தம்பிக்கு செய்யணும் டயலாக் விடுவ. உன் தம்பிக்கு நீ செய்யுற மாதிரி என் அண்ணனுக்கு நான் செய்யணும் ஆசை இருக்காதா சொல்லுடா?” என்றவன் பொறிந்து கொண்டே போக…
‘சும்மா கிடைந்தவனை சொறிஞ்சி விட்டுட்டோமா?’ என்று மனதில் நினைத்தான் குமரன்.
“டேய் போதும் நிறுத்துடா” என்று அதட்டியவன், “சாயங்காலம் காபி பேக்டரி போவேன். அப்போ போய் வாங்கிக்கிறேன் போதுமா?” என்றான்.
“இப்போலாம் நீ சரியா வீட்டுக்கு வரது இல்லைன்னு அத்தை சொன்னாங்க. வாட் இஸ் த மேட்டர் ப்ரோ?”
“… ஒன்னுமில்லை.”
“யோசிச்சு பதில் சொன்னப்பவே தெரியுது. எப்படியும் நீயா சொல்லுவ!”
“ஆபீஸ் கிளம்பலையா நீ?”
“தொரத்தி விடுறதுலேயே இருங்க” என்ற குணா “டேய் அண்ணா எனக்கு ஒரு வேலைப்போட்டுத்தாடா, இங்க ஓவர் பிரஷரா இருக்கு” என்றான். படிப்புக்கு ஏற்ற வேலை, இருப்பினும் அவனிடம் சலிப்பு.
“முதலாளி சீட் ஒன்னு காலியா இருக்கு வந்து உட்கார்ந்துக்கோ.” கிண்டலாகக் கூறினாலும் மனம் நிறைந்துதான் அழைத்தான்.
“வேணா(ம்)ப்பா… வேணாம். மொத்தமா என்னை போட்டுத்தள்ள பிளான் பன்ற” என்ற குணா வேலைக்கு செல்ல நேரமாவதாக சொல்லி அழைப்பைத் துண்டிக்க… குமரனின் முகத்தில் மெல்லிய கீற்று புன்னகை.
“இன்னும் என்னய்யா அங்கவே நின்னுட்டு இருக்க. நேரமாவுது பாரு. அப்புறம் சாப்பிடாமலே ஓடுவ” என்ற கமலத்தின் அழைப்பில் வீட்டிற்குள் சென்றவன் இருபது நிமிடங்களில் குளித்து முடித்து கிளம்பியிருந்தான்.
சுவற்றில் மாட்டியிருந்த தன் படத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த உருவத்திடம் போய் வருவதாகக் கூறியவன் தன்னுடைய அறையிலிருந்து வெளியில் வர, கமலம் ஆவி பறக்கும் இட்லியை ராஜேந்திரனின் தட்டில் வைத்துக் கொண்டிருந்தார்.
“இன்னைக்கும் இட்லியா?” கண்ணன் முகம் சுழித்தார்.
“வக்கணையா சாப்பிடணுமுன்னா காலத்துல கல்யாணம் செய்திருக்கணும்” என்று கமலம் வார்த்தையால் கொட்டு வைக்க, கண்ணன் கப்சிப். அடுத்து ஒரு வார்த்தை அவர் பேசவில்லை. தட்டிலிட்ட இட்லியை நிமிர்ந்து பாராமல் விழுங்கி வைத்தார்.
அவரின் செயலில் சிரித்துக்கொண்டே உண்ட குமரன்…
“தாத்தா நாளைக்கு உனக்கும், அப்பத்தாவுக்கும் மாஸ்டர் செக்கப் இருக்கு. சேலம் ஹாஸ்பிட்டல் போகணும்” என்று தகவலாகக் கூறினான்.
“என்னத்துக்கு நாங்க ரெண்டு பேரும் நல்லாத்தானே இருக்கோம். எதுக்கு காசு விரையம். இல்லாத நோய இருக்குன்னு சொல்ல செக்கப்பு” என்று நீட்டி முழக்கி மறுப்பு தெரிவித்தார் கமலம்.
“போனவாரம் தாத்தா திடீரென மயங்கி விழுந்தார் தானே அப்பத்தா. அதுக்குத்தான். எனக்காக வாங்க” என்றவன் கை கழுவ எழுந்து சென்றான்.
“எனக்காக எனக்காகன்னு சொல்லியே எல்லாம் சாதிச்சிப்புடறாங்க இந்தப்பய” என்று கமலம் தன் கணவரிடம் கிசுகிசுக்க…