வீடு வந்து சேரும்போது நேரம் இரவு எட்டை கடந்திருந்தது.
வீரபாண்டி எஸ்டேட் என்று பொறிக்கப்பட்டிருந்த வளைவின் உள்ளே பெரிய இரும்பு கேட்டினைத் தாண்டிச் சென்ற குமரனின் ஜீப், பத்து நிமிடங்களுக்குப் பின்னர் வீட்டின் முன் நின்றது.
வீட்டைச்சுற்றி வட்ட வடிவில் பலவகை மலர்ச் செடிகள். மலைப்பிரதேசத்துக்கு ஏற்ற அனைத்து வகையான மலர்களும் அங்கு இருந்தன. அங்கில்லாத மலர்களே, வண்ணங்களே இல்லை. அடுத்த சுற்று நடைபாதை. மூன்றாவது சுற்று முழுக்க பேபி பிங்க், ஊதா வண்ணத்தில் காசித்தும்பைச் செடிகள். இலைகளே இல்லாத அளவிற்கு பூக்கள் நிறைந்து காணப்பட்டன. வீட்டின் இருபக்கமும் செயற்கை நீரூற்று. அதனைச்சுற்றியும் பல மலர் செடிகளே! அதனை தொடர்ந்து பல மூலிகைச் செடிகளும், மனதிற்கு இதம் தரும் வாசனை மலர் செடிகளும்… நிழல் தரும் பலவகை மரங்களும், வீட்டின் வெளிபக்க சுவர் முழுக்க கொடிகள் ஏற்றப்பட்டு, அதில் நிரம்பியிருக்கும் பூக்கள் அந்த எஸ்டேட்டின் அழகை கூட்டி காண்பித்தன.
ஆங்காங்கே செடிகளுக்கும் மரங்களுக்கும் நடுவில் ஒளிர்ந்த இரவு விளக்குளில் பூத்து குலுங்கும் மலர்கள் யாவும் இரவிலும் ரம்மியமாகக் காட்சியளித்தன.
பகலில் காணும் போது வீட்டைச்சுற்றி பச்சை நிறத்திற்கு பதிலாக, வானவில்லே துண்டு துண்டாக தரையில் விழுந்து கிடப்பதைப் போலிருக்கும். அவை மலர்களின் காட்சி சிதறல்.
குமரனின் அருகாமை கொடுத்த இதத்தால், நான்கு நாட்களாக சரியாக உறக்கமின்றி இருந்தவள் தன்னையும் அறியாது பயணத்தில் நன்கு உறங்கிப்போனாள்.
“நீ இன்னும் கொஞ்சம் வேகமாக வண்டியை ஒட்டியிருக்கலாம் குமரா” என்ற குணா கீழிறங்கி சோம்பல் முறித்தான்.
மலைப்பயணம் உடல் வலியை கொடுத்திருந்தது.
வெண்ணிலாவின் உறக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவன் மிதமாக வந்தானென்று குணா அறிய வாய்ப்பில்லை.
“நிலாகுட்டி தூங்கிடுச்சே!” குணா வெண்ணிலாவை எழுப்ப செல்ல… வேண்டாமெனத் தடுத்த குமரன், தன்னிருக்கையிலிருந்து இறங்கி மற்றைய பக்கம் வந்து நின்றான்.
“நீ போய் கதவை தட்டுடா?” குணாவை விரட்டினான்.
“ஏன் பெல் அடிக்கக்கூடாதா?” இடக்காகக் கேட்டான்.
“என்னத்தையோ செய்” என்ற குமரன் வெண்ணிலாவின் பக்கம் கதவினை திறந்தான்.
குணா அந்த இருளிலும் தங்கள் வீடிருக்கும் சுற்றுப்புறத்தை ரசித்தவனாக பார்வையை ஓட்டியவன் ஓரிடத்தில் அதிர்ந்து சீரானான்.
“தோட்டத்தை என்னதான் புதுசு புதுசா வடிவமைத்தாலும், அந்த பாறையை மட்டும் ஒண்ணும் செய்யமாட்டேங்கிறாய்?”
இருளில் பருத்த காட்டு யானைகள் இரண்டு ஒன்றாக அமர்ந்திருப்பது போன்று மிரள வைக்கும் பாறையை குறித்துக் கூறினான் குணா.
“நீ அந்த பாறையில் தினமும் காலையில் தவம் செய்து தான், ரொம்ப விறைப்பாக சுத்துறேன்னு நினைக்குறேன்” என்ற குணாவின் முதுகில் வேகமாகத் தட்டிய குமரன், “கதவை திறக்கப் பார்” என்று அவனை முன் தள்ளினான்.
“எப்போ பாரு லொடலொடன்னு…”
“மீ…” குணா அப்பாவியாக வினவ பொறுமை இழந்த குமரன் தானே அலைப்பேசியை எடுத்து கண்ணபிரானுக்கு அழைத்து விட்டான்.
“தூங்கிட்டிங்களாப்பா?” அவரின் குரல் மாறுபாட்டில் வினவினான்.
“ஆமாம் குமரா… இன்னைக்கு குளிர் அதிகமா இருக்கே அதான் சாப்பிட்டு வெரசா படுத்தாச்சு” என்றவர் அவனிடம் பேசிக்கொண்டே வீட்டு வாயில் கதவை திறந்திருந்தார்.
கண்ணன் கதவை திறந்திட அவருக்கு பக்கவாட்டிலிருந்து கத்திக்கொண்டே அவரின் முன் குதித்தான் குணா.
அவர் இதனை எதிர்பார்த்திருந்தார் போல்… எவ்வித சலனமுமின்றி, “நீ கத்துற கத்துக்கு காட்டுக்குள்ளிருக்க ஓநாயெல்லாம் மதிலைத் தாண்டி குதிச்சு உள்ள வந்திடப்போகுதுடா” என்று சிரியாது அவனை வாரினார்.
“ப்பா…!” என்று அதிர்ந்து விளித்தவனை, தள்ளி நிறுத்தியவர்…
“வெண்ணிலா வரலையா குமரா?” என்று தன் மூத்த மகனிடம் சென்றார்.
“தூங்கிட்டா(ள்)ப்பா!”
“காந்தள் மலைக்கு வந்த அசதியில் ஏழு மணிக்கே தூங்க போயிட்டாளே” என்றவர் “புள்ளையை எழுப்பு, சாப்பிடணும் தானே” என்றார்.
ஆனால் குமரனுக்கு அவளை எழுப்ப மனமில்லை. இன்று அவளை பார்த்ததும் கண்டு கொண்டிருந்தானே, அவளின் தூக்கமின்மையை. தடித்த இமைகளும், சிவந்த விழிப்படலமும் அவனுக்கு காட்டிக் கொடுத்திருந்தது.
“என்னப்பா நின்னுட்டே இருக்க? எழுப்பிக் கூட்டியா, நான் சாப்படு சூடு செய்கிறேன்” என்றவர் குணாவையும் இழுத்துக்கொண்டு உள் சென்றார்.
தந்தை சொன்னதற்காக அவனுக்கே கேட்காத குரலில் இருமுறை அவளின் பெயரை உச்சரித்து எழுப்ப முயன்றான்.
அவளிடம் சிறிதும் அசைவில்லை.
பால் நிலவாய் சலனமின்றி ஆழ்ந்த நித்திரையில் இமை மூடியிருக்கும் அவளின் முகத்தை அருகில் காண அவனுள் பல மாற்றம். தெவிட்டாத ரசனையாய் அவனுள் இறங்கினாள்.
அடுத்த கணம் சிறிதும் யோசியாது தன்னவளை கைகளில் ஏந்தியிருந்தான்.
சிறு வயதில் அவளைத் தூக்கியிருக்கிறான். ஏன் இரு மாதங்களுக்கு முன்பு கூட, அவள் காலில் அடிபட்ட சமயம் அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றிருக்கிறான். ஆனால், அப்போதெல்லாம் தோன்றாத ஒன்று இப்போது தோன்றி அவனை இம்சித்தது.
வாயிலை கடந்து உள்ளே, கூடத்தின் முன்பே முதல் தளம் செல்ல படிகள் இருந்ததால் கைகளில் தாங்கியிருக்கும் மலர் கொடியவளை சுமந்தபடி மேலேறினான்.
எப்போதும் வெண்ணிலா இங்கு வந்தால் தங்கும் அறை மெத்தையில், பூவுக்கும் நோகுமோ எனும் விதத்தில் மென்மையாய் அவளை கிடத்தினான்.
முடிக்கற்றை அவளின் முன்னெற்றியில் விழுந்திருக்க, அதனை ஒதுக்க உயர்ந்த கரத்தை அடக்கி தன் வாய் குவித்து ஊதினான். கார்குழல் கவிதையாய் அதன் இருப்பிடம் சேர்ந்தது.
எப்படி அவன் தன்னை எழுப்புகிறான் என்பதை அறியவே விழி மூடியபடி காத்திருந்தவள், நிச்சயம் அவன் தன்னை தூக்கிச்செல்வான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
அவன் கை பட்ட இடத்தில் இப்போதும் குறுகுறுப்பை உணர்ந்தாள்.
அவனின் செய்கை முற்றிலும் அவன் பேசியதிலிருந்து மொத்தமாக வேறுபட்டு மாறுபட்டு இருந்திட பெண்ணவள் அவனின் செயலில் குழம்பினாள். அவனில் எதை நம்புவது ஏற்பதென்று தெரியாது முழித்தாள்.
‘ஆகமொத்தம் தன்னுடைய விலகல் அவனை நெருங்க வைக்கிறது’ என்பது மட்டும் புரிய அத்தனை நாட்கள் இருந்த வலி, வருத்தம் ஆகியவற்றை மறந்து நிம்மதியான உறக்கம் கொண்டாள்.
குமரனுக்கும் அவள் மீது காதல் உள்ளது என்பதற்கு சான்றாக இந்த சிறு நிகழ்வே வெண்ணிலாவிற்கு போதுமானதாக இருந்தது.
ஆனால் இந்த நிம்மதியும் குலைய காத்திருக்கிறது காலம்.
“பேரன் வந்திருக்கேன். கொஞ்சம் கூட பாசமில்லாமல் இப்படியா இருப்பாங்க உங்க அப்பா அம்மா. இதையெல்லாம் கேட்கமாட்டிங்களா கண்ணபிரான்?” பேசிக்கொண்டே அவர் சூடு செய்து கொடுத்த உணவினை வாயில் அடைத்தவனின் முதுகில், அதிக சத்தத்தோடு ஒன்று வைத்தான் குமரன்.
“வயசானவங்கடா. எவ்வளவு நேரம் முழிச்சிருப்பாங்க? அதுவும் நம்ம சூழலுக்கு எட்டு மணியே நடுநிசி தான்” என்று கண்ணன் அவனுக்கு பதில் வழங்கிட, “வேணுன்னு கேட்கிறவனுக்கு என்னத்துக்கு பதில் சொல்றீங்கப்பா?” எனக் கேட்டான் குமரன்.
அவன் அடித்த அடியின் வலியில் நெளிந்துக்கொண்டிருந்த குணா,
“என்னையும் பெரிய மனுஷனா மதிச்சு பதில் சொல்றாருங்கிற பொறாமை உனக்கு” என்றவன் குமரனின் வாயில் உணவை திணித்தான்.
குணாவின் திடீர் செய்கையில் திணறினாலும் சமாளித்து உணவை விழுங்கி வைத்தான் குமரன்.
“உனக்கெல்லாம் வாய் இல்லைன்னா…”
கண்ணன் மேற்கொண்டு என்ன சொல்லியிருப்பாரோ? போதுமென்று கை காண்பித்து அவரை தடுத்த குணா,
“இந்த வாய் வைத்து தான் உங்க அண்ணனை சமாளிச்சிட்டு இருக்கேன்” என்று குறும்பாக சொல்லிட மூவருக்கும் சிரிப்பு எட்டிப்பார்த்தது.
“வெண்ணிலா எங்கப்பா?”
“சாப்பாடு வேண்டான்னு மேல போயிட்டா(ள்)ப்பா” என்று சில நொடி தயங்கிக் கூறியவன், உணவு வேண்டாமென்றுவிட்டு அவர் காய்ச்சி கொடுத்த பாலை மட்டும் பருகினான்.
“வருண், யாழ் பேபி எப்போ வராங்க?”
“நாளைக்கா இருக்கும்” என்ற கண்ணன், “தொனத்தொனத்துட்டு இருக்காம அவனைத் தூங்க விடு. நீயும் தூங்குடா” என்று மகன்களிடமிருந்து நகர்ந்தார்.
குமரனின் பிறந்தநாள் அன்று அனைவரும் ஒன்றாக கூடுவது அவர்களுக்குள் எழுதப்படாத விதி. அருகருகே இருந்தாலும், வெண்ணிலாவைத் தவிர மற்ற பிள்ளைகள் யாரும் அடிக்கடி அங்கு வரமாட்டார்கள். குமரனின் ஒரு பிறந்தநாளுக்கு அனைவரும் தற்செயலாகக் கூடிட, அன்று அவர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை.
அன்று முதல் அதனை வருடா வருடம் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். எப்போதும் குணாவுடன் தீக்ஷியும் வந்துவிடுவாள், இம்முறை ராஜேந்திரன் அனுப்ப மறுத்துவிட்டார். அஜய் இவர்களிடமிருந்தெல்லாம் தள்ளித்தான் இருப்பான். தன்னுடைய சகோதரர்கள் இப்படியெல்லாம் ஒன்று கூடுகின்றனர் என்பதே அவனுக்கு தெரியுமோ தெரியாதோ? தனக்கும் குடும்பமென்று ஒன்று உள்ளதென நினைப்பு இருந்தால் தானே!
“வருண் இன்னைக்கே வந்திடுவேன் சொன்னான் குமரா” என்ற குணா வருணிற்கு அழைத்து விட்டான்.
“டேய்! நேரத்தைப் பார். அவன் தூங்கியிருப்பான்.” குமரன் அதட்டினான்.
எம்பிரான் பட்டிப்பாடி கிளை வங்கியில் மேலாளராக இருப்பதால், தாய் தந்தையுடன் இல்லாது அவ்வூரிலேயே வசிக்கிறார். விடுமுறை தினங்களில் வந்து செல்வார்.
“நான் வந்துட்டேன். நீயும், பேபியும் ஏண்டா வரல? எல்லோரும் வந்திருந்தால் இன்றிரவு கச்சேரி கலை கட்டியிருக்கும்.” அதில்லை என்கிற ஏமாற்றம் அவனை சின்னவனிடம் எகிற வைத்தது.
“யாழுக்கு ஸ்பெஷல் கிளாஸ் அண்ணா. ஈவ்னிங் லேட்டாத்தான் வந்தாள்.” வருண் காரணம் சொல்லிட…
“விடியும்போது இங்கிருக்கணும்” என்று மிரட்டிவிட்டே வைத்தான் குணா.
“அவனை ஏண்டா மிரட்டுற?”
“போடா… பேருக்குத்தான் அண்ணன் தம்பி, ஆளுக்கு ஒரு மூலையில் இருக்கோம். இந்த மாதிரி அமையும் சந்தர்ப்பங்களிலும் ஒன்றாக இல்லைன்னா என்னடா?” குணாவிடம் உறவுகளுடன் இணைந்து வாழும் ஏக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டது.
“எல்லாம் சரியப்போகும் குணா.” ஆறுதலாக சொல்லிய குமரனுக்கும் அது சாத்தியமா என்கிற சந்தேகம் இருந்தது.
“பழனி மாமாவைக்கூட ஒருவகையில் சேர்த்திடலாம். என் அப்பாவை முடியாது” என்ற குணா விரக்தியாக இதழ் வளைத்தான்.
“சரிபண்ணிடலாம் வாடா” என்ற குமரன் தன் தம்பியை இழுத்துக்கொண்டு உறங்கச் சென்றான்.
அவ்வீட்டில் மேல், கீழென அறைகள் பல இருந்தாலும் அனைவரும் கூடும் நேரம் ஆண் பிள்ளைகள் குமரனின் அறையிலும், பெண் பிள்ளைகள் ஒரு அறையிலும் தான் தங்குவர். அதனாலே அவ்விரு அறைகளிலும் நால்வர் தாராளமாக உருண்டு புரளும் அளவிற்கு பெரிய அளவில் கட்டில் போட்டிருந்தான் குமரன்.
“ஆலையில் வேலை அதிகம்டா” என்ற குமரன் வேகமாக திரும்பி படுத்து தன் தம்பியை ஏறிட்டான்.
“என்னடா?”
“பன்னெண்டு மணிக்கு விஷ் பண்றன்னு ஒன்றரை மணி நேரத்தில் எழுப்புன ஓடவிட்டு உதைப்பேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
“போடா… நீயென்ன என் கேர்ள் ஃபிரண்டா சரியா பன்னெண்டு மணிக்கு விஷ் பண்ண. ஆசையைப்பாரு. ரொம்பத்தான்” என்ற குணாவின் பேச்சில் விளைந்த மென்மையோடு கண்களை மூடிக்கொண்டான் குமரன்.
குணா உறங்கிய பின்னர் சத்தமின்றி மெல்ல எழுந்தமர்ந்தான்.
சகோதரனின் ஆழ்ந்த உறக்கத்தை உறுதி செய்துகொண்ட குமரன், தன்னுடைய அலைப்பேசியை எடுத்துக்கொண்டு பால்கனி இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
இப்போதிருக்கும் சூழலில் வெண்ணிலா நிச்சயம் முகம் பார்த்து வாழ்த்து தெரிவிக்க மாட்டாளென்பது திண்ணம்.
அதனால் புலனம் வழியாவது வாழ்த்து தெரிவிப்பாள் என்று ஆவல் கொண்டு காத்திருக்கிறான்.
எப்போதும் இப்படி எதிர்பார்த்து காத்திருந்தது கிடையாது. யார் வாழ்த்தினாலும் குறுநகையோடு கடந்திடுவான்.
ஆனால், இந்த முறை வெண்ணிலாவின் வாழ்த்து முதலாக இருக்க வேண்டுமென ஆசைப்பட்டான்.
காதல் வேண்டாமென்று மறுப்பவன்… மறுத்து சென்றவனுக்கு, எல்லாம் அவளெனத் தோன்ற தொடங்கியிருந்ததை உணர்ந்தே இருந்தான்.
நான்கு நாட்களில் அவளில்லாது முடியாது என்பது, புத்தியில் அறைந்த மாதிரி புரிந்திருந்தது.
தனக்கும் தன்னுடைய நிலா மீது காதல் உள்ளது என்பதை, விலக விலக அவளை நெருங்கத் துடிக்கும் மனம் அவனின் தலையில் கொட்டி தெரிய வைத்திட, தூரம் செல்ல வைத்தவனே அவளின் சாதாரணப் பேச்சிற்காக ஏங்குகிறான்.
காண்ணாடித் துண்டங்களாக சிதறிப்போன இதயத்தை சேர்த்து கோர்ப்பது அத்தனை எளிதானதா என்ன?
வலி கொடுத்தவனும், வலியை ஏந்தித்தானே ஆக வேண்டும்.
அவனுக்குத் தெரியும் தான் பேசிய வார்த்தைகளின் தீவிரம். மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடாதே. உடைந்த நெஞ்சத்தின் விரிசலை அவனது காதலையிட்டு நிரப்பித்தான் சரிசெய்திட முடியும்.
தன்னுடைய நிராகரிப்பு அவளைவிட தன்னை அதிகம் பாதித்திருப்பதை உணர்ந்தவன் தன்னுடைய காதலுக்காக மற்றவற்றை தள்ளி வைக்க நினைத்தான்.
தன்னவளின் ஓய்ந்த தோற்றம், ஜீவனற்ற பார்வை, நீரோடையாய் சுறுசுறுப்பாக சலசலக்கும் அவளிடம் புதிதாக குடியேறிய அமைதி யாவும் மொத்தமாக அவனது கூட்டைவிட்டு, அவன் அடுக்கிய பல காரணங்கலிலிருந்து வெளிவர வைத்தது.
முன்பு வேண்டாம் என்றவனுக்கு இப்போது வேண்டுமென்கிற எண்ணம். வேண்டுமென்பது நாளை மீண்டும் வேண்டாமென்று மாறிட வாய்ப்புகள் உள்ளது தானே?
பலவகையான எண்ணங்களில் உழன்றவன் தன்னுடைய கையிலிருக்கும் அலைப்பேசியின் சத்தத்தில் தான் சுயம் பெற்றான்.
அந்த நிசப்த வேளையில் திடீரென ஒலிக்கும் ஓசையில் எங்கே குணாவின் உறக்கம் கெட்டுவிடுமோ என அனிச்சையாக சத்தத்தை அணைத்தவன் திரையில் யாரென்று பார்க்க, வருண் அழைத்திருந்தான்.
முன்பென்றால் தன்னுடைய தம்பியின் வாழ்த்தை பெற அழைப்பை உடனடியாக ஏற்றிருப்பான்.
தன்னவளின் வாழ்த்தை முதலாவதாக பெற்றிட என்றுமில்லா புதுமையாக வேண்டி நிற்கும் மனதை ஏமாற்ற விடாது, வருணின் அழைப்பை வேண்டுமென்றே தவிர்த்தான்.
சில நொடிகளில் மதியிடமிருந்து அழைப்பு.
மதியின் எண்ணை பார்த்ததும், அன்று மதியை வைத்து அவன் பேசிய வார்த்தைகள் நினைவில் ஆட… அதற்கு வெண்ணிலா திருப்பிக் கொடுத்த பதில் வார்த்தைகளும் எண்ணத்தில் எழுந்து காதல் கொண்ட அவனின் இதயத்தை அதிர வைத்தது.
அன்றைய நாளைவிட அதிர்வின் தாக்கம் இன்று அதிகமாக இருந்தது.
அந்நொடி வெண்ணிலாவின் வலியை இன்னும் அதிகமாக அவன் உணர்வதாய்.
அழைப்பு முடிய, தகவல் வந்திருப்பதற்கான அறிவிப்பு திரையின் மேல் ஒளிர்ந்தது. வருண் மற்றும் மதி குடும்பக் குழு கணக்கில் வாழ்த்துக்கூறி தகவல் அனுப்பியிருந்தனர்.
அதனை திறந்து பார்க்க மனமின்றி சிறிது நேரம் அப்படியே இருந்தவன், என்ன முயன்றும் முடியாது போகவே வெண்ணிலா உறங்கிக் கொண்டிருக்கும் அறை நோக்கிச் சென்றான்.
வெண்ணிலா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
எப்போதும் அவனை வாழ்த்தும் முதல் நபர் அவளாகத்தான் இருக்கும். அதை என்றும் குமரன் கவனித்து பார்த்தது இல்லை. ஆனால், இன்று? தன்னுடைய பிறந்தநாளெனத் தெரிந்தும் வாழ்த்தும் எண்ணமின்றி படுத்திருப்பவளை பார்க்கையில் தலையில் ஓங்கி கொட்ட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
வெண்ணிலாவின் அருகில் அமர்ந்தவன் அவளின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.
“எனக்கு விஷ் பண்ண மாட்டியா நிலாம்மா?” மென் குரலில் அதீத ஏக்கத்தோடு வினவினான்.
“இதற்கு முன்னால் சின்ன பையன் மாதிரி இப்படியெல்லாம் எதிர்பார்த்தது இல்லை. இன்னைக்கு நீ முதலில் வாழ்த்து சொல்லி கேட்கணும் போல இருக்கு. வருண், மதி பண்ண கால்ஸ் அட்டெண்ட் பண்ணவே தோணல” என்று தன் மனதின் நிலையை எடுத்துக் கூறியவன்,
“நான் பேசியது தப்பு தான். நான் சொல்லிய காரணங்கள் எல்லாம் இன்னமும் அப்படியேத்தான் இருக்கு. இருந்தாலும் உன்னை விட முடியாதுன்னும் தோணுது. நான் என்னடா செய்யட்டும்? இந்த காதல் விடயத்தில் ஒண்ணுமே புரியல. அஜய் நினைச்சாலே முன்பு நடந்ததுதான் நினைவுக்கு வருது. என்னிடம் பேசுவது பிடிக்காமலே அப்படி செய்தவன், இந்த விடயமறிந்தால் அமைதியா விட்டுவிடுவானா? அத்தோடு நம்மீது நம்பிக்கை வைத்து, விகல்பம் இல்லாது நாம் பழகுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினரின் நம்பிக்கையை நாமே கெடுக்கலாமா? அது ஒரு மாதிரி குற்றவுணர்வா இருக்குடா அம்மாடி” என்று தன்னுடைய எண்ணத்தையெல்லாம் அவளின் காதலை மறுப்பதற்கு தன்பக்கமுள்ள காரணமாகக் கூறினான்.
வெண்ணிலாவின் முகத்தில் இருந்த அவனின் பார்வை தற்போது அவள் வரைந்திருக்கும் டாட்டூவில் படிந்தது.
“என்னை அவ்வளவு பிடிக்குமா நிலாம்மா? எத்தனை தைரியமாக என்னிடமே சொல்கிறாய்? இந்த கதிரை எனக்குள் பொத்தி வச்சிக்கணும் அப்படின்னு. சத்தியமா அப்போ உன்னை அணைக்கத் துடித்த கைகளை அடக்கிட நான் பட்டப்பாடு.” காற்றினை இழுத்து வெளியேற்றினான்.
“இப்போலாம் உன் பக்கத்தில் நான் நானாகவே இருக்க முடிவதில்லை” என்றவன், தன் கைகளில் அடங்கியிருக்கும் அவளின் கையை தட்டிக்கொடுத்தவனாக வெளியேறினான்.