மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏற்காடிருக்கும் சேர்வராயன் மலையின் உச்சியில் ஏற்காட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சேர்வராயன் குகைக்கோவில்.
காவேரித்தாயுடன் சேர்வராயன்(பெருமாள்) அருள்பாலிக்கின்றார். வைகாசி விசாக தேரோட்டம் பிரசித்தி பெற்றது.
இம்மலைத் தொடரில் இருக்கும் அறுபத்தி ஏழு கிராம மக்களும் ஒன்றுக்கூடி தங்களது நிலத்தில் விளைந்த மிளகு, காப்பி கொட்டைகள், பழங்கள் ஆகியவற்றை தூவி வழிபடுவர்.
இப்போது குமரனின் பட்டாளம் இங்கு தான் கூடியிருக்கிறது.
விடியலின் போதே எம்பிரான் தன் குடும்பத்தோடு வந்துவிட்டார். அவருக்கும் விடுமுறையாக இருக்க… குமரனிடம் பேச வேண்டிய அவசியம் இருக்கவே தன் மக்களுடன் வந்துவிட்டார்.
அவர்கள் வந்த சில நிமிடங்களில் குணவதியும் மதியும் வந்து சேர்ந்தனர்.
குமரனுக்கும் மதிக்கும் திருமணப் பேச்சு எடுத்ததற்கு பின், குமரனின் விசேட நாளை தவிர்க்க முடியாததால் குணவதி வந்திருந்தார்.
இரவு வெண்ணிலாவின் அறையிலிருந்து வந்த குமரன், தன்னவள் தன்னை வாழ்த்தவில்லை என்கிற ஏமாற்றத்தால் தூக்கம் வராமல் மீண்டும் பால்கனி இருக்கையிலேயே தஞ்சம் அடைந்திருந்தான்.
அதிகாலை கண் விழித்த குணா, குமரன் அருகில் இல்லாது பார்வையை சுழலவிட… இருக்கையில் உட்கார்ந்திருந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தான் குமரன்.
அவனைத் தட்டி எழுப்பிய குணா…
“இந்நேரம் அந்த அசையாத பாறை மேல நின்னு தவம் பண்ணிட்டு இருப்பியே! இன்னைக்கு என்ன இந்நேரம் வரை தூங்குற, அதுவும் இங்கு?” எனக் கேட்டிருந்தான்.
“தூக்கம் வரல… இங்கு உட்கார்ந்தேன். தூங்கிட்டேன் போல” என்ற குமரன் எழுந்து செல்ல…
அவனை தடுத்து அணைத்த குணா…
“நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் குமரா” என்று மனம் நெகிழ்ந்துக் கூறினான்.
அவன் அணைத்ததுமே எங்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிடுவானோ என்று பயந்த குமரன் குணாவின் வார்த்தையில் சீரானான்.
குணாவிற்கு ஏனோ ‘ஹேப்பி பர்த்டே’ என்று சொல்லத் தோன்றவில்லை. அது குமரனின் எண்ணத்திற்கு ஏதுவாக அமைந்துவிட்டது.
குணாவின் அணைப்பிலிருந்து விலகிய குமரன் தாரளமாக புன்னகைத்தான். முக அளவில் மட்டுமே!
குமரன் குளியலறைக்குள் செல்ல,
“நான் வாங்கிக்கொடுத்த ட்ரெஸ் தான் போடணும்” என்று சொல்லிச் சென்றான் குணா.
அறையைவிட்டு வெளியில் சென்றால் எதிர்படும் யாரும் வாழ்த்திவிடுவார்களோ என்று குளித்து முடித்து வந்தவன் ஆடை மாற்றும் எண்ணம் கூட இன்றி இடையில் கட்டிய துண்டோடு மெத்தையில் அமர்ந்துவிட்டான்.
பல பேச்சுக்குரல்கள் ஒன்றாக கேட்க, வெகமாகச் சென்று அறையின் கதவினை உட்பக்கமாகப் பூட்டியிருந்தான்.
“அண்ணா…” யாழினியின் குரல் கேட்க, பதில் கொடுக்க விழையும் வாயினை கைகொண்டு மூடினான்.
“மாமா…”
“அண்ணா…”
வருண், யாழ், மதி மூவரின் குரலும் மாற்றி மாற்றி ஒலிக்க…
“டென் மினிட்ஸ்” என்று தன்னையும் அறியாது சொல்லியிருந்தான்.
அன்று வெண்ணிலாவின் வீட்டிலிருந்து வாங்கி வந்திருந்த பையை பிரித்துக்கூட பாராது வார்ட்ரோப்பில் வைத்திருக்க… இப்போதுதான் அதனை கையில் எடுத்து பிரித்து பார்த்தான்.
மூன்று வகை ஆடைகள் இருந்தன.
“நீ ஜீன்ஸ், டி-சர்ட்லாம் போடமாட்டியா மாமா? போட்டால் நல்லாயிருக்கும்.” என்றோ வெண்ணிலா கேட்டது.
“நாம் செய்யும் வேலைக்கு ஏற்றவாறு தான் உடை உடுத்த வேண்டும்.”
“இந்த வயதில் போடாமல் வேறெப்பத்தான் போடுவதாம்?” அவளின் அன்றைய முகச்சுழிப்பு கண்முன் தோன்றியது.
பால் வண்ணத்தில் ‘V’ கழுத்து டி-சர்ட்டும், அடர் சாம்பல் வண்ணத்தில் ஜீன்ஸ் கால்சட்டையும் எடுத்து அணிந்து கொண்டான்.
இது மாதிரியான உடைகள் குமரன் அடிக்கடி அணிந்தது இல்லை. ஆலைக்கு செல்வதால் எப்போதும் முழுக்கைச்சட்டை மற்றும் பருத்தி காலச்சட்டையும் தான் அணிவான். அதிகமாக வேட்டி தான் உடுத்துவான். அது தனியானதொரு மதிப்பையும் கம்பீரத்தையும் கொடுப்பதாக அவனுக்குத் தோன்றும். எப்போதாவது வெளியில் தன் சகோதரர்களுடன் செல்லும்போது மட்டுமே இன்றைய இளைஞர்கள் போல் அணிவான்.
அதனால் அவனுக்கு புதிதாக உடுத்தும் வித்தியாசம் இல்லை. ஆடையிருந்த பையினை எடுத்து வைக்க முயலும்போது தான் கவனித்தான், அதனுள் சிறிய பெட்டி ஒன்று வண்ண காகிதத்தால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
கையிலெடுத்து பார்த்தவன் என்னவென்று பிரித்து பார்க்க… சிறிய அளவில் நகைப்பெட்டி ஒன்றிருந்தது.
“இதெல்லாம் இவனிடம் யார் கேட்டா?” என்ற முணுமுணுப்புடன் அதனை திறந்த குமரனின் இதழோடு சேர்ந்து கண்களும் மகிழ்வில் விரிந்தன.
அப்பெட்டியில் வெள்ளியில் காப்பு இருந்தது. அதனூடே சிறிய அட்டை. அதில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா’ என்று எழுதி, வெண்ணிலாவின் கையிலிருக்கும் டாட்டூ வரையப்பட்டிருந்தது. அதுவே சொல்லியது அது வெண்ணிலாவின் பரிசென்று.
அந்த அட்டையை கையிலெடுத்தவன் கண்களை மூடி தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டான்.
அவ்வார்த்தைகள் அவளது குரலாக செவி நுழைந்தது.
அவனிடம் அத்தனை நேரமிருந்த சுணக்கம் எல்லாம் இருந்த இடம் தெரியாது காணமல் போயிருந்தது.
இது போதுமே! முகம் பார்த்து வாய் வார்த்தையாக சொல்லாவிட்டாலும், அவனவளின் வாழ்த்து அவனை சேர்ந்துவிட்டது. இதற்காகத்தானே காத்திருந்தான். காத்திருப்பின் பலன் அதீத தித்திப்பாய் அவனுள் இறங்கியது.
அட்டையை பார்த்து மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தான். தவறி கீழே பின்பக்கமாக விழுந்திட, அங்கும் சில வார்த்தைகள் எழுதியிருந்தது.
வேகமாக எடுத்து படித்தான்.
“கேண்டின் பப்ஸ், சமோசாவை தியாகம் செய்து, காந்தள் கொடுத்த பாக்கெட் மணியை சேர்த்து வைத்து வாங்கியது. அதனால் எதுவும் சொல்லாது போட்டுக்கோ மாமா” என்றிருந்தது.
சன்னமாக இதழ் விரித்தான்.
‘வாலு…’ மனதோடு சொல்லிக்கொண்டான்.
முன்பென்றால் நிச்சயம் இதெல்லாம் எதற்கென்று கேட்டிருப்பான். இப்போது அவனவள் அளிக்கும் பரிசு அவனுக்கு பொக்கிஷமாகத் தெரிந்தது.
காப்பினை கையில் எடுத்து வருடினான்.
(அது கஃப் கட் வகை காப்பு.)
காப்பு சேரும் இடத்தில், ஒரு முனையில் பிறை நிலாவும், மறு முனையில் கதிரோடு பிரகாசிக்கும் சூரியனும் குட்டியாக காட்சியளித்தன.
அவனின் நெஞ்சம் முழுக்க நிறைந்து போனது.
கையில் அணிய, கதிரும் நிலவும் பிணைந்து காணப்பட்டது.
‘எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாளோ’ என்றவனுக்கு அவள் கூறும் ‘கதிர் நிலவு’ நினைவில் எழுந்து உள்ளத்தை மகிழ்ச்சியில் திணற வைத்தது.
முகத்தில் புன்னகை நிரந்தரமாக குடிகொண்டது.
“அண்ணா… எவ்வளவு நேரம்? தாத்தா உன்னை எதிர்பார்த்திட்டு இருக்கிறார்.”
யாழினியின் குரல் கேட்ட பின்னர் தான் வேகமாக வெளியில் வந்தான்.
“வாவ்… அண்ணா, செம!”
அவனை அழைக்க வந்திருந்த யாழினி அவனின் புதிதானத் தோற்றத்தில் ஆச்சர்யம் கொண்டாள்.
குமரனுக்கு முகமே சிவந்துவிட்டது. அதனை லாவகமாக தங்கைக்கு காட்டாது தலை கவிழ்ந்து மறைத்தான்.
இந்த நாணம் அவனுக்கு முற்றிலும் புதிது.
இன்று எல்லாமே அவனுள்… அவனிடம் புதிதாய்.
காதல் முளைத்தால் அனைத்தும் வானவில் கோலம் கொள்ளுமாம். பார்க்கும் பார்வை, பேசும் பேச்சு, செய்யும் செயல் யாவும் வண்ணங்கள் அடங்கிய ரங்கோலியாக.
வெண்ணிலாவின் பரிசு ஸ்பெஷலாகத் தெரிந்திட, அதனை மற்றவர்களிடம் வெளிப்படையாக சொல்ல அவனுக்கு மனமில்லை.
அதனைக்கூறி… ஆராயத் தொடங்கினால்?
என்ன பதில் சொல்வான்?
சிறு புன்னகையில் மதியின் கேள்வியை தவிர்த்துவிட்டான்.
மூவரும் கீழே வர, வருண் ஓடிவந்து அண்ணனின் கரம் பற்றி வாழ்த்துக்கூறினான்.
“எங்கடா கிஃப்ட்டெல்லாம் ஒண்ணுமில்லையா?”
குமரன் கேட்டதில் அங்கிருந்த அனைவரும் விழிவிரித்தனர். தனக்கு வேண்டுமென்பதைக்கூட வெளிப்படையாகக் கேட்டிடாதவன் உரிமையாகக் கேட்டால் அதிர்வு இருக்கத்தானே செய்யும்.
“இவன்கிட்ட ஏதோ மாற்றம் தெரியுது நிலா!” தன்னருகே அமர்ந்திருந்த வெண்ணிலாவிடம் சொல்லிக்கொண்டான் குணா.
“இந்த ட்ரெஸ்ஸில் அழகா இருக்கான்ல?” காந்தள் தன் தம்பியிடம் வினவிட, அவரும் மகனின் தோற்றத்தில் கர்வம் கொண்டார்.
“சின்ன வயசில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் விடுத்து வேலை வேலைன்னு ஓடியவனை பெரிய மனிதனா பார்த்துதான் பழக்கம். இன்று தான் வயதுக்கு ஏற்ற தோற்றத்தில் இருக்கான்.” கண்ணனின் கண்கள் பனித்தது.
“அவன் பார்த்தால் சங்கடப்படுவான் தம்பி. கண்ணைத் தொடைச்சிக்கோ!” காந்தள் அதட்டிட கண்ணபிரான் முகத்தை மாற்றிக் கொண்டார்.
வெண்ணிலா குமரனையேத்தான் பார்த்திருந்தாள். அவன் பார்க்காதபோது.
“அடுத்த வருடம் ரெண்டு பேராகியிருக்கணும்.” சுலோ சொல்லிட, “அதுக்குத்தான் வாயை தொறக்க விடமாட்டேங்கிறானே” என்று அங்கலாய்த்தார் கமலம்.
“அதெல்லாம் நடக்க வேண்டிய நேரம் வந்தால் தானா நடக்கப்போவுது” என்றார் சுலோ.
“நாம் பார்த்து பண்ணி வச்சால் மறுக்கவாப்போறான்.” குணவதி ஜாடையாக தங்கள் எண்ணப்படித்தான் குமரனின் திருமணம் என்று பேசினார்.
ஒருவர் மாற்றி ஒருவர் தன்னுடைய திருமணத்தைப் பற்றியே பேசிட, குமரனின் விழி வட்டம் யாவும் தன்னவள் மீதே.
‘காந்தளிடம் விளையாடியதற்கே உரிமையாகக் கடிந்தாள். மதியுடன் சேர்த்து சீண்டியதற்கு… வார்த்தைகளை முடிக்கவிடாது அத்தனை கோபம் கொண்டாள். இப்போது என்ன செய்வாளோ?’ என்ற எதிர்பார்ப்பு குமரனிடம்.
ஆனால் வெண்ணிலா குமரனின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டாள்.
அவர்கள் பேசுவதை கவனித்தாலும் கண்டுகொள்ளாத பாவனை.
முன்பு தன்மீது காதலில்லை என்று சொல்லியவனிடம் ஒருவித பயத்தால் உரிமை உணர்வு அதிகம் எழுந்தது.
தற்போது தன்னைப்போல் அவனுக்கும் காதல் உள்ளது என்பதை இரவில் அவனது வாய் வார்த்தையாகவே கேட்ட பின்னர், இனி என்ன நடந்தாலும், யார் என்ன பேசினாலும், என்ன முடிவெடுத்தாலும் அவன் பார்த்துக்கொள்வான் என்கிற திடம் அவளை தெளிவாக வைத்திருந்தது.
இரவில் குமரனுக்கு வாழ்த்து சொல்ல மனம் தவியாய் தவித்தாலும், அவன் வீசிய வார்த்தைகளிலிருந்து வெளிவர முடியாது அவனிடம் சென்று பேசிட மனம் ஒப்பவில்லை.
காதல் எதையும் மன்னிக்கும். ஆனால் காதல் இல்லையென்ற நிலையில் யாசிக்கும் நிலையை என்றும் ஏற்காதே. அதனால் தவிக்கும் மனதை அடக்கி தன்னுணர்வுகளை கட்டுப்படுத்தி படுத்திருந்தவள் அறையின் கதவு திறக்கவும்… இந்நேரத்தில் அவனைத் தவிர யாரும் தன்னை தேடி வரமாட்டார்கள் என்று உறங்குவதைப்போல் கண்களை மூடி படுத்திருந்தவள் குமரன் அவளிடம் கொட்டிய அனைத்தையும் கேட்டுவிட்டாள்.
கிடைக்காதோ என ஏங்கிய அவனின் காதல்… தனக்கே தனக்கென்று அறிந்த பின்னர் அவளுக்கு எப்படி இருக்கிறதாம்? நெஞ்சை முட்டிய ஏக்கம் நீங்க கண்ணீர் கரை உடைத்தது.
இனி அவனாகத்தான் வர வேண்டும். காதல் கொண்ட நெஞ்சம் ஆசை கொண்டது.
அவனாக வந்தால் தான், வேறெப்போதும் அவன் கூறிய காரணங்களை பிடித்துக்கொண்டு மீண்டும் தொங்கமாட்டான். தன்னை தள்ளி வைத்திட யோசித்திட மாட்டானென்று எண்ணியவள் தன்னவனின் காதலை… அவன் பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மனதோடு அசை போட்டவளாக மகிழ்வில் திளைத்தாள்.
அக்கணம் முதல் அவனாகத் தன்னிடம் வரும்வரை என்ன நிகழ்ந்தாலும் அமைதியாக மிகவும் பொறுமையாக இருந்திட வேண்டுமென முடிவெடுத்தாள்.
அம்முடிவு அளித்த திடத்தாலே, குமரனின் திருமணம் குறித்து பேசிய போதும் எவ்வித எதிர்வினையும் காட்டாது அவளால் இயல்பாக இருக்க முடிந்தது.
இதை அறிந்திடாத குமரன்… வெண்ணிலாவின் உரிமையா எதிர்பார்த்து ஏமாந்து போனான்.
அதுவும் நொடி நேர ஏமாற்றமே!
எதுவோ பேசிட மதி குமரனின் அருகில் அமர்ந்திட… அதுவரை இருந்த பொறுமை எங்கோ ஓடி ஒளிந்திட வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள் வெண்ணிலா.
குமரன் மனதோடு சிரித்துக்கொண்டான்.
‘கோபமா இருந்தாலும், என்னை விட்டுத்தர முடியல.’ அவ்வுணர்வு இதமாய் அவனை சுருட்டிக்கொண்டது.
‘உன்னோட இந்த காதல் தாண்டி… உன்னை விடக்கூடாதுன்னு உன் பின்னால் போகச் சொல்லுது. தாத்தா, அப்பத்தா சதாபிஷேகம் முடியட்டும். அன்னைக்கே நம்மைப் பற்றி பேசுறேன்.’
இந்த ஞானோதயம் அவளின் மனதை வருந்தச் செய்வதற்கு முன் வந்திருக்கலாம்.
அவர்கள் எடுத்த முடிவு தெரியாது இவனொன்று நினைத்தான்.
தெரிய வரும்போது என்ன செய்திடுவான். அவனது காரணங்கள் நடைமுறையாகும் போது, குடும்பத்தின் முன் காதலை துறந்து வெண்ணிலாவை விட்டுக் கொடுத்திடுவானா?
அவனது காதலில் நிலையாக நின்றிடுவானா? அன்றைய நாளில் தான் அறிந்துகொள்ள முடியும். காத்திருப்போம்!
அடுத்து பேச்சும் சிரிப்புமாய் உணவு நேரம் கழிந்திட… அப்போதும் வெண்ணிலா அமைதியாகத்தான் இருந்தாள்.
அனைவருக்குமே வெண்ணிலாவின் இந்த அமைதி வித்தியாசமாகப்பட, யாழினி வாய்விட்டே கேட்டுவிட்டாள்.
“என்னக்கா அண்ணா பார்த்டேன்னா நீங்கதான் அதை செய்யணும் இதை செய்யணும் முன்னடி நிப்பீங்க. இன்னைக்கு இவ்வளவு சைலன்ட்டா இருக்கீங்க?”
என்ன சொல்வதென்று திருதிருத்தாலும்… “ஸ்டடிஸ் டென்ஷன்” என்று வாயில் வந்ததை சொல்லி சமாளித்தாள்.
அவள் சொல்லியது உண்மையில்லை என்று தெரிந்திருந்த குமரனுக்கு அவளை நினைத்து மனம் கனத்தது.
வெண்ணிலாவின் இந்நிலைக்கு அவன் தானே காரணம்.
‘தன்னுடைய காதலை சொல்லிவிடலாமா?’ என நினைத்தவன், நொடியில் வேண்டாமென்று நினைத்தான்.
‘என் கண்ணீரை பார்த்து… சோகம் பார்த்து… பாவப்பட்டு காதலிக்கிறீங்களா?’ அவள் கேட்டு விட்டால் அவன் காதலுக்கு மதிப்பில்லாது போய்விடுமே!
உண்மையிலும் அவளின் கண்ணீர் முகம் காணாது தானே, மனதின் அடி ஆழத்தில் அமிழ்ந்து போக வைத்த காதலை மீண்டும் மேலெழும்பச் செய்திருக்கிறான். அந்த குற்றவுணர்வே அவனுக்கு காதலை சொல்லிடத் தடையாக அமைந்தது.
அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க… கமலம் கருப்பட்டி கலந்த திணை பாயாசம் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தார்.
பாயாசத்தை ருசித்தபடி பெரியவர்கள் ஒரு பக்கமும், சிறியவர்கள் ஒரு பக்கமும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க…
“எங்காவது வெளியில் போகலாமா?” யாழினி ஆவலாகக் கேட்டிட…
“எங்கே போகலாம் சொல்லு?” என்றான் குணா.
“‘அண்ணா பூங்கா’ போகலாம். அப்படியே போட்டிங்.” மதி ஆர்வமாகக் கூறினாள்.
“அங்கு நிறைய முறை போயாச்சு.” உடனடியாக மறுத்தான் குணா.
மதி அவனை வாய்க்குள்ளே வறுத்தெடுத்தாள்.
குணா மதியை ஆழ்ந்து பார்த்தான். ஒரு நொடி தான். அதன் அழுத்தம், அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
“கிள்ளியூர் ஃபால்ஸ்?”
“அச்சச்சோ அப்பா பார்த்திட்டால் அவ்வளவு தான்.”
வருண் கூறிட, கிள்ளியூர்… மதுவின் ஊர் என்பதால் ஊர் சுற்றுவதை பழனி பார்த்துவிட்டால் நிச்சயம் அவளுக்கு மண்டகப்படி உண்டு. அதனால் பயந்தாள்.
“ஹேய் நிலா குட்டி! நீ சொல்லு, எங்கே போகலாம்?” குணா வெண்ணிலாவை தங்கள் பேச்சிற்குள் இழுத்தான்.
“பர்த்டே உன் அண்ணாக்குத்தான். அதனால் அவரிடமே கேள்” என முடித்துக் கொண்டாள்.
குணாவிற்கே வெண்ணிலாவின் இத்தகைய நடத்தைக்கு காரணம் விளங்கவில்லை.
குமரனையும் வெண்ணிலாவையும் மாற்றி மாற்றி பார்த்தான்.
மூச்சுக்கு ஓராயிரம் மாமா சொல்லும் வெண்ணிலா, மாமா என்ற விளிப்பை தவிர்த்தவளாக சொல்லியதில் அவளைத்தான் அவதானித்தபடி இருந்தான் குமரன்.
அவனுக்கு குணா கேட்டது காதில் விழவில்லை.
தொட்டு மீண்டும் வினவினான்.
“நீயே சொல்லுடா?”
“ஹாங்…”
“ஒரு இடம் போறதுக்கு இவ்வளவு யோசிக்கணுமா?” என கமலம் அவர்களுக்கு இடையில் வர,
“சேர்வராயன் கோவிலுக்கு போங்க. அப்படியே கொஞ்சம் போனால் பகோடா பாயிண்ட்டில் சுத்திட்டு வரலாம்” என்று காந்தள் யோசனை வழங்கினார்.
“ஓகே… அத்தை சொல்ற மாதிரியே கோவிலுக்கு போயிட்டு அடுத்து என்னன்னு அங்கு போய் டிசைட் பண்ணலாம்.” குணா சொல்லிட இளையவர்கள் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு உற்சாகமாகக் கிளம்பினர்.
குமரன் செல்லும்போது அருகில் வந்த எம்பிரான்…
சில காகிதங்களை அவனிடம் கொடுத்தார்.
“நீங்க திரும்பி வரும்போது நான் இங்கிருப்பனாத் தெரியல குமரா. அதான் இப்போவே கொடுக்கிறேன்” என்றார்.
“சித்தப்பா!” பிரித்து பார்த்தவனுக்கு கண்களில் ஒளி கூடியது. ஒரு நிறைவு.
“உன் முயற்சி உன்னை கைவிடலப்பா. இப்போ ஆலை முழுக்க உனக்கு… உனக்கு மட்டுமே சொந்தமானது. இதுதான் இந்த அப்பாவுடைய உன் பிறந்தநாள் பரிசு” என்றவர் மகனின் தோளினை தட்டிக்கொடுத்தார்.
“இன்னும் மேல வருவ குமரா.”
எம்பிரான் இதுநாள் வரை வார்த்தையால், செயலால் வெளிக்காட்டிடாத குமரனின் மீதான பாசத்தை முதல் முறையாக… அவனின் தொழில் வளர்ச்சியைக் கண்டு வெளிப்படுத்தியிருந்தார்.
பாசத்தை காட்டவில்லையேத் தவிர, குமரனுக்கு பண விடயங்களில் வங்கி மேலாளராக அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார் எம்பிரான்.
“எல்லாம் உங்க ஆசீர்வாதம் சித்தப்பா” என்றவன், மௌனமான இதழ் விரிப்பில் கடந்துவிட்டான்.
அவனை நினைக்கையில் அவன்மீது அன்பு கொண்டுள்ள பெரியவர்களுக்கு பெருமையே!