பழனிச்சாமி தொழிலில் செய்த நம்பிக்கைத் துரோகத்தால் தான் குமரனுக்கு ஆலை தொடங்கும் எண்ணமே எழுந்தது.
குமரன் ஆலை துவங்கிட வீரபாண்டி பணம் கொடுக்கிறேன் என்பதை மறுத்து… எம்பிரானின் மூலமாக வங்கியில் தொழில் கடன் பெற்று இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் மிளகு மற்றும் ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலையை ஆரம்பித்திருந்தான்.
ஆரம்பத்தில் மாவட்ட அளவில் மட்டுமே தொடங்கி செயல்படுத்தியவன், அப்போதைய கடனை வெகு விரைவாக திருப்பி செலுத்தியிருந்தான். அதன் பின்பு இந்தியா முழுவதும் ஏற்றுமதியை துவங்கிட நினைத்தபோது பணத்தட்டுப்பாடு ஏற்பட… அப்போதும் வீரபாண்டி, கண்ணபிரான் இருவரும் எவ்வளவோ எடுத்துக்கூறியும்…
“எனக்கே எனக்குன்னு என்னோட சுயத்துல இது இருக்கணும்” என்று சொல்லிவிட்டான்.
அதற்குமேல் அவர்களால் பேசிட முடியவில்லை.
அப்போது அதிக அளவில் பணத்தேவை ஏற்பட்டதால், ஆலையின் பெயரில் கடன் வாங்கினான்.
அதனை ஏழு மாதங்களில் திருப்பி செலுத்தியிருக்கின்றான்.
தொழிலில் எத்தனை முனைப்பும் வேகமும் இருந்திருந்தால்… வாங்கிய பெரும் மதிப்பு பணத்தை இத்தனை விரைந்து அடைத்திருப்பான்.
கடன் தீர்ந்ததற்குரிய பத்திரங்களையே எம்பிரான் தற்போது குமரனிடம் கொடுத்தது.
கைகளில் பத்திரத்தை பிரித்து பார்த்தவனுள் ஒரு முழுமை.
இப்போது அவனுக்கே அவனுக்கென்று அவனுடைய உழைப்பில் உருவாக்கியிருக்கும் சிறு சாம்ராஜ்யம்.
இதுநாள்வரை அவன் சொல்லிக்கொள்ளாத பல கஷ்டங்கள் எங்கோ காணாமல் போன உணர்வு அவனுள்.
பாத்திரத்தை கமலத்தின் கையில் கொடுத்துவிட்டு… தன் தொழிலின் வளர்ச்சியில் சிறு கர்வமும் தலைக்கேற்றாது தன்னுடைய படையுடன் வண்டியில் ஏறி சேர்வராயன் கோவிலுக்கு வந்து சேர்ந்தான்.
வரும் வழி முழுக்க குமரன் மற்றும் வெண்ணிலாவைத் தவிர மற்றவர்கள் சலசலத்தபடியே இருந்தனர்.
கோவில் வந்துதான் பேச்சினை நிறுத்தினர்.
மலை முகட்டிற்கு சற்று கீழவே அக்கோவில் இருந்தது. வெளியில் செவ்வக வடிவில் கோவில் காணப்பட்டாலும், உள்ளே குகை அமைப்பில் நீண்டு சென்று அதன் முடிவில் இறைவன் காட்சியளிக்கிறார்.
கொண்டு வந்திருந்த காப்பி கொட்டை, மிளகு, ஏலக்காய் தூவி பெருமாளை வணங்கிவிட்டு வெளியில் வந்தவர்கள் சில நிமிடங்கள் அங்கிருந்த இயற்கையை ரசித்து, குளிர் காற்றின் இதத்தை அனுபவித்தபடி படிகளில் அமர்ந்தனர்.
“கோவிலுக்கு வந்தால் நெற்றியில் பிரசாதம் வைப்பதில்லையா வருண்” என்ற மதி கேட்டதோடு அவனுக்கு வைத்தும்விட,
அப்போதுதான் யாருமே வைக்காமல் இருப்பதை கவனித்த மதி,
“யாருமே வைக்கலையா? கோவிலுக்கு வந்ததுக்கு அடையாளமே இதுதான்” என்றபடி யாழினியின் அருகில் அமர்ந்திருந்த குமரனுக்கும் வைத்துவிட… அதுவரை குமரனை திரும்பிக்கூட பார்த்திடாத வெண்ணிலா அவனை முறைத்து வைத்தாள்.
‘யம்மாடியோவ்…’ குமரன் உள்ளுக்குள் அலறினான்.
குமரனுக்கு வைத்ததோடு மதி நகர,
“நாங்களும் தான் வைக்கல… வச்சிவிடுறது?” என்று சீண்டினான் குணா.
“இப்போதான் ராசாவுக்கு நாங்க கண்ணுக்குத் தெரியுறமோ?” என்று காலை வந்தது முதல் தன்னிடம் பேசிடாததை சுட்டிக்காட்டிய மதி தன் தோள்பட்டையை முகவாயில் இடித்தவளாக… குணாவிற்கு அடுத்து அமர்ந்திருந்த வெண்ணிலாவுக்கும் வைத்துவிடாது வருண், யாழினையை கூட்டிக்கொண்டு வண்டியை நோக்கிச் செல்ல… குணாவும் அவளின் பின்னே ஓடினான்.
குணாவை விட்டுவிட்டு அவனைத் தாண்டி வெண்ணிலாவிற்கு வைக்க மதிக்கு மனமில்லை.
குணாவும் கிட்டத்தட்ட வெண்ணிலாவின் நிலையில் தான் இருக்கிறான்.
குணா மதியிடம் காதலை சொல்லி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.
இதுநாள் வரை அவனுக்கு ஏதுவாக ஒரு பார்வை கூட அவளிடமிருந்து இல்லை எனும்போது அவன் எப்படி பேசுவான். காதலை காட்ட வேண்டுமென எண்ணம் கொண்டிருப்பவன், வெறும் உறவினனாக மட்டும் எப்படி பேசிடுவான். அதனாலேயே காலை முதல் மதியிடம் தள்ளியே இருக்கின்றான்.
நால்வரும் முன்னால் சென்றிட கதிரும், நிலாவும் தனித்து விடப்பட்டனர்.
இருவரின் பார்வையும் உரசி நின்றது.
முதலில் விடுவித்துக்கொண்டது வெண்ணிலா தான்.
அங்கிருந்து செல்ல அடி வைத்திட, அவளுக்கு முன் வந்தவன்… தன்னிடமிருந்த குங்குமத்தை அவளது நெற்றியில் வைத்து விட்டான்.
“நான் உனக்கு முன்பு எப்போதும் வைத்ததே இல்லையா என்ன?” எனக் கேட்டு, கை வைத்து ஊதியும் விட்டான்.
“மதி பாவம். அப்படிலாம் இனி முறைக்காதே! என்னை தவிர்க்கணும் நினைத்தாலும் உன்னால் முடியாது” என்று அவள் தன்மீது கொண்டிருக்கும் நேசத்தின் மீதுள்ள நம்பிக்கையில் கொஞ்சம் திமிராகவேக் கூறினான்.
‘அவன் தன்னை கண்டு கொண்டானே!’ உள்ளுக்குள் கோபம் வர…
“கோவிலுக்கு வர எல்லோருக்கும் தான் ஐயர் வைத்துவிடுகிறார். இதிலென்ன ஸ்பெஷல் இருக்கு?” என்று அவனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, மதி உனக்கு வைத்துவிட்டதோ, நீ எனக்கு வைத்துவிட்டதோ தனக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக்கவில்லையென உணர்த்திட, வேண்டுமென்றே அவனை காயப்படுத்தினாள்.
அவனால் அவள் கொண்ட வலிக்கு இது இணையாகிவிடுமா என்ன?
தான் பேசியதில் நொடியில் வாடிவிட்ட அவனின் முகம் கண்டு அவளின் மரித்த இதயம், மேலும் வலி சுமந்தது.
அதனை அவனுக்கு மறைத்தவளாக அவனைத் தாண்டிக்கொண்டு நடந்தாள்.
அவனவளின் எண்ணம் அவனுக்காத் தெரியாது?
‘நீ பேசியதற்கு இதெல்லாம் கம்மிடா கதிரு’ என்று புலம்பியபடி அவளைத் தொடர்ந்தான்.
குமரனுக்கு முன் சென்றவள், வண்டியில் அமர்ந்ததும் அவன் வைத்துவிட்ட குங்குமத்தை தன் விரல் கொண்டு தொட்டு, கண்களை மூடி ரசித்தாள். இதழில் மென் புன்னகை.
அவளின் ரசனையை பின்னால் வந்து கண்டு கொண்டவனின் சுணங்கிய மனதில் சில்லென்ற குளிர்காற்று மோதிய உணர்வு.
பகோடா காட்சி முனைக்கு பயணமாயினர்.
வண்டியில் ஏறியதும் அமைதியாக இருந்தவர்கள் மீண்டும் தங்கள் பேச்சினை ஆரம்பித்தனர்.
இப்போது குணா முற்றிலும் அமைதியாகிவிட்டான். பின் இருக்கையில் அவனுடன் அமர்ந்திருந்த வெண்ணிலாவுக்கு அவனில் வித்தியாசம் தெரிந்திட…
“குணா என்னாச்சு?” என்று வினவினாள்.
‘தன் மௌனம் மற்றவர்களை வருத்தம் கொள்ளச்செய்யும்’ என அறிந்தவன்,
“ஒண்ணுமில்லை நிலா குட்டி” என்று முயன்று தன்னை இயல்பாக்கினான்.
‘என்னவோ நடந்திருக்கு’ என நினைத்த வெண்ணிலாவின் பார்வை மதியைத் தொட்டு மீண்டது.
ஒருத்தனை வருந்தச் செய்துவிட்டோம் என்கிற எண்ணம் துளியுமின்றி மதி யாழினியுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களில் வருணுடன் அவனது படிப்பைப்பற்றி பேச ஆரம்பித்த குணாவும் சாதாரணமாக மாறியிருந்தான். ஆனால் உள்ளுக்குள் சில நிமிடங்களுக்கு முன் மதியிடம் பேசியதே ஓடிக்கொண்டிருந்தது. முயன்று புறம் தள்ளினான்.
கால் மணி நேரத்தில் பகோடா காட்சி முனைக்கு வந்திருந்தனர். அங்கிருந்து பார்த்தால் பள்ளத்தாக்கு வழியே சேலம் முழுவதும் நன்கு தெரியும்.
சுற்றாக அமைந்திருந்த கம்பி தடுப்பு தூண் மற்றும் உச்சியில் இருக்கும் குடை போன்ற அமைப்பிலான சிறிய கோபுரம் என ஆங்காங்கே நின்று தனித்தனியாக ஒன்றாக என பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அங்கு பாதையில் சில கடைகள் இருக்க… அதில் அம்மலைகளில் விளையும் பழங்கள், காய்கள், கிழங்குகள் விற்கப்பட்டன.
சுட்ட சோளம் வேண்டுமென யாழினி கேட்க, குமரன் அனைவருக்கும் வாங்கிக்கொடுத்தான். வெண்ணிலாவிற்கு மட்டும் பெரிய அளவில் சிவப்பு அத்திப்பழம் ஒன்றை வாங்கிக்கொடுக்க… அவளோ வருண் கையிலிருந்த சோளத்தை வாங்கிக்கொண்டாள்.
“வெண்ணிலா நீ அத்திப்பழம் வேண்டான்னு சோளம் சாப்பிடுறியா?” மதி ஆச்சரியமாக வினவினாள்.
“என்னன்னு தெரியல மதி. இப்போலாம் முன்பு பிடித்தது எதுவும் பிடிக்கிறது இல்லை” என்று குமரனை பார்த்துக்கொண்டு கூறியவள், அங்கு சுற்றுலா பயணிகளுக்காக ரிமோட் கண்ட்ரோலின் உதவியோடு மலைப்பாதையில் இருவர் மட்டும் அமர்ந்து ஓட்டும் ஜீப் ரைட் செய்யும் வசதியிருக்க, அதனைக்காட்டி யாழினியுடன் சோளத்தை கடித்தபடி சென்றுவிட்டாள்.
குமரன் தன்னை வேண்டுமென்றே வார்த்தையால் நோகடித்து செல்லும் தன்னவளின் முதுகையே வெறித்து நின்றான்.
பத்து நிமிடத்திற்கு ஐம்பது ரூபாய் என்று சொல்ல… பணம் எடுத்து வராததே அப்போதுதான் வெண்ணிலாவுக்கு நினைவிற்கு வந்தது.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை இருக்கிறதா என்று கேட்டவளுக்கு, QR அட்டையை காண்பித்து வேலை செய்யவில்லை என்று கூறிட…
வந்தவனும் வெண்ணிலாவைப்போல் அலைப்பேசியை நோண்டியபடி எவ்வளவு என்று QR அட்டையை கேட்க…
“டேய்… அது வொர்க் ஆகலடா” என்று பல்லைக் கடித்தாள் வெண்ணிலா.
“அக்கா விடுங்க… அடுத்தமுறை வந்தால் ரைட் போயிக்கலாம்” என்று யாழினி எழுந்துவிட,
“கையில் பணம் வச்சிக்கமாட்டியாடா? நீயெல்லாம் என்னத்த ஐடி’யில் சம்பாதிக்குற? இப்படியா சின்ன பிள்ளையை ஏமாத்துவ?” என்று குணாவின் தலையிலேயே கொட்டினாள்.
“எதே…” என்றவன் தலையை தேய்த்தபடி “ஐடி’ல வேலை செய்வதற்கும் இதுக்கும் என்ன சமமந்தம்” என்று அவளை கேட்டு நிற்க…
அவள் எப்படியும் தன்னிடம் கேட்கமாட்டாளென்று அங்கு வந்த குமரனே சூழலை அறிந்து பணம் செலுத்த… யாழினியுடன் மதியை அனுப்பி விட்டு வெண்ணிலா நின்றுகொண்டாள்.
“நிலா போகல?” குணா கேட்டிட,
“இப்போ தோணல” என்றவள் பள்ளத்தாக்கை ஒட்டியவாறு இருந்த கல்லில் சென்று அமர்ந்து கொண்டாள்.
வருண் ரைடுக்கு அழைத்திட குணாவும், அவனும் ஜீப் ரைட் சென்றிட, குமரன் வெண்ணிலாவிடம் வந்தான்.
“உனக்கு என்ன பிரச்சினை வெண்ணிலா?” என்றவன் அவள் மறுக்க மறுக்க கையை பிடித்து எழுப்பி அவளுக்கு பின்னால் இருந்த பள்ளத்தை பார்த்துவிட்டு… சற்று தள்ளி கூட்டிவந்து கோபுரத்தின் சிமெண்ட் மேடையில் அமர வைத்தான்.
“உனக்கு உட்கார வேற இடமில்லையா, இடறினால் என்னாவது?” என்று கேட்க,
“எனக்கு என்ன ஆனால் உங்களுக்கு என்ன?” என்று வேகமாக கேட்டிருந்தாள்.
“எனக்கு என்னன்னா?”
“ம்ப்ச்.” சலித்தவளாக அவனுக்கு முதுகுக்காட்டி எழுந்து நின்றுகொண்டாள்.
“என்கிட்ட உங்களுக்குத்தான் பேச பிடிக்காதே! எரிச்சலாக இருக்கும். நான் தான் அலை…யு…”
“வெண்ணிலா!”
“என்ன கோபம் வருதா?” அவனைத் திரும்பி பார்த்து கேட்டவள், “நீங்க சொன்னது தான். நான் சொல்லித்தான் காட்டுறேன். அதையே உங்களால் தாங்கிக்க முடியலையா?” தன் கட்டுப்பாட்டை மீறி விழுந்த கண்ணீர்த் துளிகளை புறங்கையால் துடைத்தபடியே மேற்கொண்டு பேசினாள்.
அவளின் கண்ணீரில் அழுகையில் அவன் வெதும்பிப்போனான்.
“நான் உங்களை விட்டு விலகிப்போகணும் தானே ஆசைப்பட்டிங்க? இப்போ அப்படித்தான் நானிருக்கேன். நீங்க பேசணும் நினைத்தால் நான் பேசணும், வேண்டான்னா பேசக்கூடாது. அப்படி என்னால் இருக்க முடியாது. நீங்க அன்னைக்கு பேசியதே இந்த ஆயுளுக்கும் போதும்” என்றவள் அவனை கடந்து செல்ல… நின்ற நிலையிலேயே அவளின் கையை பிடித்திருந்தான்.
இருவரின் முதுகும் பார்த்திருக்க… கைகள் இணைந்திருந்தது. அவனின் வலது கைக்குள் அவளின் இடது கை.
குமரனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அக்கணம் என்ன பேசவேண்டுமென்று கூட அவனுக்குத் தெரியவில்லை.
வெண்ணிலாவின் அழுகையிலேயே அனைத்தும் காலியான உணர்வில் மௌனித்து நின்றான். ஆனால் அவள் தன்னைவிட்டு விலகிச் செல்கிறாள் என்பதை ஏற்க முடியாது கை பிடித்து தடுத்திருந்தான்.
குமரனின் பிடியிலிருந்து கையை உருவ முயன்றவள் முடியாது போக, திரும்பி அவனின் அழுத்தமான கைக்குள் சிக்கியிருந்த தன்னுடைய கையை ஆழ்ந்து பார்த்தாள்.
அவன் அணிந்திருந்த அவளளித்த காப்பில் அவளின் கண்ணீர் துளிகள் சொட்டாய் விழுந்து தெறித்தது.
கதிர் நிலவாய் பிணைந்திருந்த காப்பினை பார்த்துக்கொண்டே…
‘இனி இந்த கதிர் தான் நிலவைத்தேடி வரணும் மாமா’ என்று தனக்குள் சொல்லியபடி தன்னுடைய மற்றொரு கரத்தால் தன் கை பிடித்திருந்த அவனின் கை விரல்கள் ஒவ்வொன்றாய் பிரித்து விடுத்துக்கொண்டவள் தள்ளிச் சென்றாள்.
ரைட் முடித்து நால்வரும் அவர்களிடம் வர… அங்கே அரட்டை கச்சேரி ஆரம்பமானது.
அதிகம் பேசாவிட்டாலும் அவர்களுடன் இருக்கும்போது அவர்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும் ஈடு கொடுக்கும் வகையில் பதில் பேசிடும் குமரன் இன்று மொத்தமாக அமைதியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டவன் போலிருக்க, அவனைத் தங்களுக்குள் இழுக்க நினைத்து கேள்வி கேட்டாள் மதி.
“ஆமாம், நானும் கேட்கணும் நினைத்தேன். இந்த ட்ரெஸ் உனக்கு நல்லாயிருக்கு குமரா” என்ற குணா, “நான் வாங்கிக்கொடுத்த ட்ரெஸ் தானே போடுறேன்னு சொன்னாய்?” என்று உரிமையாகக் கோபம் கொண்டான்.
“அந்த கவரில் தான்…” என்று சொல்லிய குமரனின் மீதி வார்த்தைகளான, “இந்த ட்ரெஸ்ஸும் இருந்தது” என்பதை வெளியில் வராது தொண்டைக்குள்ளே மடிந்தது.
அக்கணம் குமரன் வெண்ணிலாவை பார்க்க… அவள் தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்ற ரீதியில் அவனது பார்வையை கண்டும் காணாது குணாவின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
‘என்னை வேணுன்னே தவிர்க்கிறாயா அம்மாடி?’
மனதோடு கேட்டுக்கொண்டவனுக்கு அவளை நெருங்கும் ஆவல் கூடிக்கொண்டே போனது. அன்று வார்த்தையை சிதறவிட்டதை எண்ணி இப்போது வருந்தினான்.
ஆத்திரம் கண்ணை மறைக்கலாம் காதலையுமா மறைக்கும்?
“ட்ரெஸ் நீ எடுத்ததா?” குணா குனிந்து வெண்ணிலாவின் காதில் கேட்டிட,
“ம்.” ஒற்றையாய் பதில் வழங்கினாள்.
“அவனுக்குத் தெரியாதா?”
“இப்போ தெரிஞ்சிடுச்சு.”
“நீயே கொடுத்திருக்கலாமே?”
அவனின் தோளிலிருந்து நிமிர்ந்தவள்,
“எதுக்குடா கேள்வியாய் கேட்குற? பதில் சொல்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என்றவளின் பாவனையில் குணா சிரித்துவிட்டான்.
மற்றவர்கள் குணாவிடம் என்னவென்று கேட்க…
“எனக்கும் என் நிலா குட்டிக்கும் நடுவில் ஆயிரம் இருக்கும்” என்று மழுப்பினான்.
“என்னண்ணா கையில் புதுசா காப்பெல்லாம்?” என்று அப்போதுதான் கவனித்த வருண்… குமரனின் கையிலிருந்து கழட்டியவனாகத் தன் கையில் அணிந்து பார்த்தவன்,
“அண்ணா நானே போட்டுக்கவா?” என்று கேட்டிட… என்ன பதில் சொல்வதென்று குமரன் தடுமாற, வெண்ணிலா அவனையேத்தான் பார்த்திருந்தாள்.
“உனக்கு வேறு வாங்கித் தருவான். இதை அவனே போட்டுக்கட்டும் வருண். பிறந்தநாள் அதுவுமாக கையில் போட்டிருப்பதை ஏன் கழுட்டுற?” என்று வாயில் வந்ததைக் கூறி வருணை திருப்பி குமரனிடம் கொடுக்க வைத்துவிட்டான்.
குமரனுக்கும் வெண்ணிலாவுக்கும் நடுவில் காதல் இருக்குமென்றெல்லாம் குணா நினைக்கவில்லை.
வெண்ணிலா ஒன்று கொடுத்தால் அதனை குமரனால் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாதென… சிறு வயதிலேயே அறிந்து வைத்திருந்த குணா, அந்த காப்பு நிலா கொடுத்ததென அறிந்தே குமரனுக்கு உதவினான்.
காப்பு மீண்டும் கை சேர்ந்த பின்னரே குமரனின் துடிப்பு சீரானது.
மேலும் சில மணி நேரங்கள் அங்கே கொட்டம் அடித்துவிட்டு மதியத்துக்கு மேல் வீடு வந்து சேர்ந்தனர்.
சுற்றிய களைப்பில் உணவை முடித்துக்கொண்டு அனைவரும் ஓய்வெடுக்க அறைக்குள் புகுந்திட குமரன் ஆலைக்கு கிளம்பிவிட்டான்.
“இன்று கூடவா?” என்று கேட்ட குணாவிற்கு, “நீங்கயெல்லாம் தூங்கி எழுவதற்குள் வந்துவிடுவேன்” என்று சென்றுவிட்டான்.
உண்மையிலும் வெண்ணிலாவின் ஒதுக்கத்தை ஏற்க முடியாமல் போகவே ஆலைக்கு கிளம்பியிருந்தான்.
இரண்டு ஆலைகளையும் சுற்றி வந்து அன்றைய வேலைகளை ஆராய்ந்துவிட்டு இரவு ஏழு மணிக்கு வீடு வந்து சேர்ந்தான்.
“இன்னைக்கும் வேலைன்னு ஓடணுமா கண்ணா?” என்ற வீரபாண்டியின் கேள்விக்கு சிரிப்பு மட்டுமே பதிலாக அவனிடம்.
“இந்த வயதில் தான் தாத்தா உழைக்க முடியும். உழைக்க நாள் கணக்கு ஏது?” என்றவன், வருணின் கையில் தங்க காப்பினை மாட்டிவிட்டான்.
“அய்யோ அண்ணா… நான் நீங்க போட்டிருந்தது நல்லாயிருக்குன்னு கேட்டேன். அதுக்கு கோல்ட்?” என இழுத்தவனாக அவன் சுலோவை பார்க்க…
“வீண் செலவு எதுக்கு குமரா?” எனக் கேட்டார் சுலோச்சனா.
“என் தம்பி கேட்டதை வாங்கிக் கொடுக்க இல்லாத பணம் வேறெதற்கு சித்தி” என்று அவரின் வாயை அடைத்துவிட்டான்.
“அப்போ தம்பிக்கு வாங்கித்தர மட்டும் தான் பணமிருக்கா மாமா?” என்று மதி கேட்டிட… அவள் வெகு நாட்களாக பழனிச்சாமியிடம் கேட்டுக்கொண்டிருந்த அலைப்பேசியை அவள் முன் நீட்டினான் குமரன்.
“வாவ் மாமா…” என்று குதுகளித்தவள் நன்றி கூறி வாங்கிக்கொண்டாள்.
யாழினிக்கு மடிகணினி கொடுத்தான்.
“எனக்கில்லையாடா?” குணா கேட்டிட… “உன் அக்கௌண்டில் பணம் போட்டுட்டேன். ஏதோ புது மாடல் பைக் வாங்கணும் பணம் சேர்த்து வைக்குறியாமே தீக்ஷி சொன்னாள். பெங்களூர் போயிட்டு வாங்கிக்கோ” என்றவன், “இது தீக்ஷிக்கு. போகும்போது கொண்டு போய் கொடுத்திடு” என்று கிரிஸ்டல் ரோஸ் கோல்ட் வாட்ச் ஒன்றை குணாவிடம் அளித்தான்.
சுலோச்சனாவிடம் கூறிய பதில் தான், தான் கேட்டாலும் வருமென்று நினைத்த குணவதி வாய் வரை வந்த “வீண் செலவு” என்ற வார்த்தையை உதிர்க்கவில்லை.
“வெண்ணிலாவுக்கு ஒண்ணுமில்லையாடா?” கமலம் வினவிட, இங்கு நடப்பதற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையென்ற ரீதியில் அமர்ந்திருந்த வெண்ணிலாவை பார்த்தபடியே…
“அவள் கேட்டதை இப்போ என்னால் கொடுக்க முடியாது அப்பத்தா” என்றான். அவனின் குரலில் என்ன இருந்ததென்று அவன் மட்டுமே அறிவான்.
அவன் சொல்லியது அவளைத் தீண்டியதோ? அவனை பார்த்தவள், கதிரின் வீச்சு தாங்காது தலை கவிழ்ந்தாள்.
“எதுக்கு குமரா இது?” குணா அடக்க முடியாது கேட்டுவிட்டான்.
“பேக்டரி எனக்கே எனக்குன்னு ஆனதுக்கு. என்னோட சந்தோஷத்தை உங்கக்கூடத்தானே பகிர்ந்துக்க முடியும்” என்று புன்னகையோடு கூறியவனை சிறியவர்கள் அனைவரும் ஒன்றாகக் கட்டிக்கொண்டனர்.
அவர்களின் ஒற்றுமையையும் பாசத்தையும் கண்ட கமலம், அடுக்களைக்குள் நுழைந்து கல் உப்பும், காய்ந்த மிளகாயும் கொண்டு வந்து, தனித்திருந்த வெண்ணிலாவையும் உடன் நிற்க வைத்து…
“பெரியவங்க எப்படி வேணா இருந்துட்டு போகட்டும். நீங்க எல்லோரும் இதே மாதிரி எப்பவும் ஒட்டுக்கா இருக்கணும். எங்க கண்ணே பட்டிருக்கும்” என்று சொல்லி பிள்ளைகளுக்கு சுத்திப்போட்டார்.
தாங்களே அவர்களை பிரித்து வைக்க போவது அறிந்திடாமல்.