குமரன் ஒரு பக்கமும், வருண் மறுபக்கமும் உறங்கியிருக்க… நடுவில் படுத்திருந்த குணா உறக்கம் வராது தவித்தான்.
அவனால் அவனின் காதலின் நிராகரிப்பை ஏற்க முடியவில்லை.
வேண்டாம் என்பவளை மறக்கத் தான் நினைக்கிறான். ஆனால் முடியவில்லை.
உண்மையிலுமே இங்கு வந்தால் மதியின் பின்னால் தன் மனம் செல்லும் என்பதாலேயே முதலில் வர முடியாதென வேலையை காரணம் காட்டிக் கூறியிருந்தான்.
ஆனால், மதிக்காக மற்றவர்களை பார்க்காமல் இருக்க முடியாதே! அதுவும் அவன் மீது தாய் தந்தையைவிட அதீத பாசம் காட்டும் அவனது குமரனின் பிறந்தநாளுக்கு அவன் உடனில்லாது எப்படி? இந்த எண்ணமே அவனை இங்கு ஓடோடி வர வைத்தது.
குணாவின் காதல் மதியின் மீது நேரம், காலம், காரணம் என ஏதுமின்றி அனிச்சையாய் முளைத்தது.
ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போதே தன்னைப்போல் அவனறியாது தன்னுடைய காதலை மதியிடம் சொல்லியிருந்தான்.
அவன் எப்படி இயல்பாக காதலைக் கூறினானோ… மதியும் அதேபோல் அடுத்த நொடி “காதலிக்கும் எண்ணமில்லை” என்று சொல்லிவிட்டாள்.
அவளின் மறுப்பு வலித்தது தான். இருப்பினும் சிரிப்போடு ஏற்றுக்கொண்டான்.
ஆனால் நாளுக்கு நாள் அதிகமாக அவளிடம் தாவும் மனதை அடக்க வழியின்றி மீண்டும் அவளிடம் தன் காதலை சொல்லி கெஞ்சி நின்றான்.
அந்நிலை அவனுக்கும் ஒப்பவில்லை தான். அதற்காகவெல்லாம் காதலை விடமுடியாதே. எறும்பு ஊர்ந்து செல்ல செல்லத்தானே கல்லும் தேயும். அதனால் தன்னுடைய காதல் கொண்டு அவளின் இதயத்தை தட்ட ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில் மதியின் மறுப்பில் இவன் தான் தன்னுடைய பிடியை தளர்த்துவதாயிற்று.
ஏற்க மறுப்பவரிடம் எத்தனை முறை தான் அன்பை காட்டிட முடியும்.
இறுதியாக ஒரு வாய்ப்பாக எண்ணி…
“உன் முடிவுதான் என்ன?” என்று குணா கேட்டிட…
“காதலில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை குணா. நீ என் உறவாகவே இருந்தாலும் அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. நாம் எப்பவும் போல் ஒண்ணாவே இருக்கலாம். ஆனால், இந்த காதலெல்லாம் எனக்கு ஒத்துவரும் தோணல. அத்தோடு உன்கிட்ட எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் வரல” என்று தன்மையாகவே எடுத்து சொல்லியவளிடம் மீண்டும் காதலென்று பேசிட அவனுக்கு மனமில்லை.
வேண்டாமென்று சொல்பவர்களுக்கு எத்தனை தூரம் அன்பை காட்டினாலும் தொல்லையாகத்தானே தெரியும். தன் காதல் அவளுக்கு தொல்லையாகத் தெரிந்திடக் கூடாது என்பதற்காகவே, அன்று முதல் விலகியே இருக்கின்றான். அதன் பின்னர் அலைப்பேசியில் கூட அவளுடன் பேச முனைந்ததில்லை அவன்.
உண்மையில் அவளை மறக்க முயன்று நினைத்துக்கொண்டே இருக்கின்றான்.
ஏதேனும் விசேட நாளில் சந்தித்துக் கொண்டாலும், மதி போல் அவனால் அவளுடன் ஒன்றுமே இல்லாததைப்போன்று இயல்பாக பேசிட முடியாது போக, மொத்தமாகவே அவளிடம் பேசுவதை நிறுத்தி விட்டான்.
அவன் பேசாதது எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவனை பார்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தானாகவே சென்று, அவன் தன்னிடம் காதல் சொல்லி, தான் நிராகரித்தோம் என்கிற நிகழ்வே நடவாததைப்போன்று பேசிடுவாள்.
அக்கணம்… ‘தான் இவள் மனதை சிறு அளவில் கூட பாதிக்கவில்லையா?’ என நொந்துபோவான்.
அந்நேரம் மனதில் பரவும் வலியை தாங்கிட முடியாது என்பதாலேயே இன்று காலை அவள் பேச வந்த போது விலகிச் சென்றான்.
அவள் பேச வந்து… தான் தவிர்த்தது அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்திடவே, கோவிலில் தானக பேசினான். அதற்கு அவள் கொடுத்த பதிலில்…
‘தன்னுடைய பாராமுகம் அவளை பாதிக்கிறது’ என்று அறிந்தவன், மீண்டும் அவளிடம் தன் காதலை சொல்லியிருந்தான்.
வருண் மற்றும் யாழினியுடன் சென்றவள், முகட்டின் ஓரம் சென்று பள்ளத்தாக்கை நோக்கி கத்தி, அதன் எதிரொலியை கேட்டு ரசித்திருக்க… மற்ற இருவரின் கவனத்தை ஈர்க்காது மதியை அழைத்தவன் அவள் வந்ததும்,
“இன்னும் எத்தனை நாளுக்கு காத்திருக்க வைக்கணும் நினைக்குற மதி? உனக்கு நான் என் காதலை சொல்லியதாவது நினைவிருக்கா?” என்று கேட்டான்.
“எனக்கு காதலில் இண்ட்ரெஸ்ட் இல்லை குணா” எனக் கூறியவள், “இனி இந்தப்பேச்சு வேறெப்பவுமே நமக்குள் வேண்டாம்” என்று அழுத்தமாகக் கூறி வருண், யாழினியுடன் இணைந்து கொண்டாள்.
மனதால் முற்றிலும் உடைந்து போனான் குணா.
வேண்டாம் என்று செல்பவளை தேடிச் சென்றிடக் கூடாதென்று மூளை அறிவுறுத்தினாலும், அவளின் நினைப்பின்றி நாளினை கடத்திடாத மனதினை நிந்தித்தான்.
உறக்கம் வராமல் எத்தனை நேரம் தான் படுத்திருப்பது… தன்மீதிருக்கும் குமரனின் கையையும், வருணின் காலையும் மெல்ல நகர்த்தி வைத்தவன் எழுந்து கொண்டான்.
அறையினுள்ளே மெல்ல நடந்தான். பால்கனியில் நின்று இருண்ட வானத்தை வெறித்தான். குளிர் காற்று உடலை பதம்பார்க்க மீண்டும் அறைக்குள் நடை பயின்றான்.
அரவம் உணர்ந்து குமரன் புரண்டு படுக்க…
தன்னால் அவர்கள் உறக்கம் கெடுகிறது என்று அறையை விட்டு வெளியில் வந்தவன் அந்த நீண்ட வராண்டாவின் நீள அகலங்களை அளக்க ஆரம்பித்தான். எதிர் பக்கமிருந்த அறையை பார்த்தவாறு முன்னிருந்த நீண்ட இருக்கையில் அமர்ந்து விட்டான்.
எத்தனை நேரம் கடந்ததோ? தன் முன்னால் நிழலாட மூடியிருந்த விழிகளை திறந்திட வெண்ணிலா நின்றிருந்தாள்.
இன்று இருமுறை குமரனை, அவனது நாளென்று தெரிந்தும் வேண்டுமென்றே வார்த்தையால் நோகடித்து இருந்தாள். அவனை வருந்தச்செய்த தன்மீதே கோபம் கொண்டவளுக்கு உறக்கம் தூரம் சென்றிருக்க… மதுவும், யாழினியும் உறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் கீழே சென்றவள், குமரன் எப்போதும் நின்றிருக்கும் பாறையின் மீது சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டாள்.
அவனது மடிமீதே அமர்ந்திருக்கும் இதம் அவளுள். அவனே ஆறுதல் அளிப்பது போல் உணர்ந்தாள்.
மனம் கொஞ்சம் அமைதி அடைந்து… அலைப்புறுதல் அடங்கியதும் மீண்டும் வீட்டிற்குள் வந்தவள், மாடியேறி வர, இருளில் ஏதோ ஒரு உருவம் அமர்ந்திருப்பதைக் கண்டு உண்மையில் அரண்டு தான் போனாள்.
என்னவென்று நெருங்கிடத்தான் குணா என்பதே அவளுக்கு புலப்பட்டது.
“என்னடா தூங்கலையா?” எனக் கேட்டுக்கொண்டே குணாவின் அருகில் அமர்ந்தாள்.
“கோவிலுக்கு போகும்வரை நல்லாத்தான் இருந்த? அதுக்கு பிறகு தான் என்னவோ நடந்திருக்கு, என்னாச்சு? ஏன் இவ்வளவு டிஸ்ட(ர்)ப்டா இருக்க?”
குணா எதுவும் சொல்லவில்லை. வெண்ணிலாவை கூர்ந்து நோக்கினான். அவளின் மடியில் தலை வைத்து அந்த நீண்ட இருக்கையில் உடலை குறுக்கி படுத்துவிட்டான்.
குணாவின் தலையை ஆதூரமாக வருடியவள்…
“நீ மதி பின்னால் சுத்தியதற்கு பதில் பழனி பெரியப்பா பின்னால் சுத்தியிருக்கலாம்” என்றாள்.
“நான் ஒண்ணும் அந்த மாதிரி பையனில்லை” என்று அவளின் மடி மீதிருந்த தலையை மட்டும் அவள் முகம் பார்க்கும்படி திருப்பிக் கேட்டவன், “ஹேய்… நான் மதியை… உனக்கெப்படி?” என்று வார்த்தையை சரியாகக் கோர்த்திட முடியாது அவளுக்கெப்படித் தன்னுடைய காதல் கதை தெரியுமென்று வினவினான்.
“அதெல்லாம் தெரியும்” என்றவள், “மதியை பார்த்தாலே உன் முகத்தில் லைட் எரியுமே! கெஸ் பண்ணேன். கோவிலுக்கு போயிட்டு வந்ததிலிருந்து நீ அவள் பக்கமே திரும்பாமல் இருக்கிறதை வைத்து இப்போவும் அவளுடைய பதில் நோ தான்னு தெரிஞ்சிக்கிட்டேன்” என்றாள்.
“சரி நான் மாமா பின்னால் சுத்தினால் மட்டும் மதி எஸ் சொல்லிடுவாளா?”
“லூசு மாதிரி கேட்கக்கூடாது. நான் பெரியப்பா பின்னால் உன்னை சுத்த சொன்னதுக்கு காரணம், பெரியப்பா உன்னை மதிக்குத் தேர்வு செய்தால் அவள் எப்படி உன்னை மறுப்பாள்? காதல் தான் வேண்டான்னு சொன்னாள். உன்னையில்லையே?” என்று குணாவிற்கு புரியும்படி எடுத்துக் கூறினாள்.
“நிலா குட்டி” என்று அவளின் மடியிலிருந்து வேகமாக எழுந்தவன், அவளின் இரு கன்னத்தையும் கிள்ளி, “உனக்கும் மூளை வேலை செய்யுதுடி” என்று சிரித்தான்.
குணாவை இரு கைகளாலும் மாற்றி மாற்றி அடித்தவள், “உனக்கு போய் ஐடியா கொடுத்தேன் பாரு” என்று மேலும் இரண்டு அடி கொடுத்தாள்.
அவளின் கையை பிடித்து அடிப்பதை தடுத்தவன்,
“உனக்கே தெரிஞ்சிருக்குன்னா குமரனுக்குத் தெரியுமா?” என்று அதிர்ச்சியாக வினவினான்.
“எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற? லவ் பன்றது அவ்வளவு பெரிய க்ரைம்மா என்ன?” எனக் கேட்டவள், “மாமாக்குத் தெரியாது” என்றாள்.
“அதெப்படி உறுதியா சொல்ற?”
“தெரிஞ்சிருந்தால் மாமா என்கிட்ட சொல்லியிருப்பாரே! அட்லீஸ்ட் உன்கிட்ட நேராக கேட்டிருந்தாலும் கேட்டிருப்பார்.”
“ஹேய் ரிலாக்ஸ் குணா. நீ டேக் இட் ஈஸி ஆன ஆளு. நீயே இப்படி உடையலாமா? அவள் மறுத்தால் என்ன? காதலே காதலை சேர்த்து வைத்துவிடுமாம். நீ படத்திலெல்லாம் கேட்டதில்லை” என்றாள்.
“வாலு… லவ் பண்ணிப்பாரு. அப்புறமும் இந்த அட்வைஸை கொடுக்குறியா பார்ப்போம்” என்றவனுக்கு மனதோடு பதில் சொல்லிக்கொண்டாள்.
‘அந்த லவ் வந்ததால் தானே அட்வைஸ் எல்லாம் தானா வருது.’
வெண்ணிலாவிடம் பெருமூச்சு.
“விடுடா வரும்போது பார்த்துப்போம். நீ நாளையிலிருந்து பெரியப்பா பின்னால் சுத்த ஆரம்பிச்சிடு” என்று அவள் சொல்ல…
“அதுதான் வழி” என்றான் குணா.
“ஆனால் மனசுல உட்கார்ந்திட்டு என்னவோ பண்றா(ள்) நிலாம்மா. ரொம்ப படுத்துறாள். வேண்டான்னு சொல்றவகிட்ட திரும்ப போகக்கூடாதுன்னு நினைச்சாலும் முடியல. அவளையே சுத்தது இந்த மானங்கெட்ட மனசு” என்று தன்போக்கில் புலம்பினான்.
“அவளை நிறைய லவ் பண்றேன், அவள் இல்லாமல் முடியாதுன்னு எப்படி புரிய வைக்கிறது தெரியல நிலா குட்டி.”
“அழுதுடாதடா… பார்க்க சகிக்காது” என்று குணாவின் தோளைச்சுற்றி கை போட்ட வெண்ணிலா… “குணா எப்பவும் சிரிச்ச முகமாகத்தான் இருக்கணும்” என்று தன்னுடைய மற்ற கை பெருவிரல் மற்றும் சுட்டு விரல் கொண்டு அவனின் உதட்டை விரித்து விட்டாள்.
வெண்ணிலா எப்பவும் குணாவுக்கு ஸ்பெஷல் தான். மதி கூட நிலாவுடன் ஒப்பிடும் போது அவனுக்கு இரண்டாம் நிலை தான். சிறு வயது முதலே அவர்களுக்குள் சொல்ல முடியாத பிணைப்பு. நண்பர்களைப்போல். அடுத்தது தான் உறவுமுறை நெருக்கமெல்லாம்.
அதனால் இயல்பாக அவனால் வெண்ணிலாவிடம் உள்ளத்து ஆதங்கத்தை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள முடிந்தது.
வெண்ணிலாவும் அவனுடன் சேர்ந்து வருந்தாமல் இதுவொரு விடயமா என்கிற ரீதியில் தேற்றிட எளிதில் மீண்டிருந்தான்.
“அம் ஓகேடி செல்லக்குட்டி” என்ற குணா அவளின் நெற்றி முட்டினான்.
“தூங்காமல் ரெண்டு பேரும் இங்கென்ன பண்றீங்க?”
நான்கடி இடைவெளியில் அறையின் வாயிலின் நிலைப்படியில் சாய்ந்து நின்றவாறு கேட்ட குமரனைக் கண்டதும் ‘எல்லாத்தையும் கேட்டிருப்பனோ’ என்று குணா அதிர்ந்தான்.
வெண்ணிலாவுக்கு அப்படி எதுவுமில்லை.
“பார்த்தா தெரியல? பேசிக்கிட்டு இருக்கோம் மாமா!” என்று அவள் குணாவுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணு முணுத்தாலும், அந்த இரவின் அமைதியில் கேட்க வேண்டியவனுக்கு நன்றாகவே கேட்டது.
குமரன் இதழ்களுக்குள் சிரிப்பினை புதைத்தான்.
“தூக்கம் வரலடா.”
“ரெண்டு பேருக்குமா?”
“இப்போ எதுக்கு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க? இங்க உட்கார்ந்து பேச பெர்மிஷன் வாங்கணுமா?” என்று குமரனிடம் சிலிர்த்தவள், “போய் தூங்குடா… அதான் சொல்றாங்களே! போ!” என்று குணாவிடம் சொல்லிவிட்டு வேகமாக அறைக்குள் சென்று மறைந்தாள்.
“எங்கே நான் என்ன பேசுனீங்கன்னு கேட்டுவிடுவோன்னு உன்னையும் அப்புறப்படுத்த பேசிவிட்டு உள்ளே போயிட்டாள் பாரு” என்ற குமரனின் முகத்தில் புன்னகை.
“எப்படித்தான் அவள் நினைப்பதையும் சரியா கண்டு பிடிக்கிறியோ!” என்ற குணா… “உண்மையாவே தூக்கம் வரல குமரா, நான் இங்கு வந்த சில நிமிடங்களில் நிலாவும் வந்தாள். அப்படியே பேசிட்டு இருந்தோம்” என்றான்.
“இப்போ நீங்க என்ன பேசுனீங்க நான் கேக்கலையேடா” என்று அறைக்குள் நுழைந்து குமரன், தன் பின்னோடு வந்தவனிடம்… “நீங்க என்ன பேசுனீங்கன்னு நான் மறைந்து நின்னுலாம் கேட்கலை” என்றிட குணா அசடு வழிந்தான்.
எம்பிரான் இவர்கள் கோவிலுக்கு கிளம்பிய சிறிது நேரத்திலேயே சென்றிருக்க. மறுநாள் காலையில் வருண் மற்றும் யாழினியை அழைத்துக்கொண்டு சுலோச்சனா கிளம்பிவிட்டார். அவர்கள் தத்தம் பாடசாலைக்கு செல்ல வேண்டுமே!
சுலோச்சனாவிடமும் குமரன், மதி திருமணத்தைப் பற்றி தாங்கள் எடுத்திருக்கும் முடிவை மற்றவர்கள் பகிர்ந்திருக்க…
“சீக்கிரம் அவனிடம் பேசுங்க” என்று சொல்லிச் சென்றார் சுலோ.
அன்று காந்தள் பள்ளிக்கு விடுப்பு எடுத்திருக்க… வெண்ணிலா விடுமுறை எடுக்க முடியாது கல்லூரிக்கு சென்றே ஆக வேண்டுமென அடம் பிடித்தாள்.
“ஒருநாள் எனக்காக லீவ் போடேன் நிலா குட்டி.” குணா கூட கேட்டுவிட்டான். முடியாதென தன் பிடியிலேயே நின்றுவிட்டாள்.
“நாங்களும் மதியத்துக்கு மேல் தான் கிளம்புவோம். நீயும் போயிட்டால் போர் அடிக்கும் வெண்ணிலா. நாளைக்கு போயேன்.” மதி கேட்க…
“இல்லை மதி…” என்று வெண்ணிலா பதில் சொல்ல வாய் திறந்திட,
“இப்போ கிளம்பினால் தான் சரியா இருக்கும். வா போகலாம்” என்று வந்து நின்றான் குமரன்.
“என்னப்பா அதுக்குள்ள கிளம்பிட்ட… இன்னும் சாப்பிடலையே?”
“ஏலக்காய் கொள்முதல் பண்ண வேறொரு பண்ணைக்கு போகணும் அப்பத்தா. காலையில் போனால் தான் மதியத்துக்குள் தரம் பார்த்து ஆலைக்கு அனுப்ப முடியும்” என்றவன் வெண்ணிலாவிடம், “கிளம்பு” என்றான்.
“இல்லை நான் பஸ்ஸிலே…”
“பஸ் எட்டரை மணிக்குத்தான். அதில் நீ போனால் காலேஜூக்கு பத்தரை மணிக்குத்தான் போவ.” கமலம் நிதர்சனம் சொல்ல, அவர்களுக்குத் தலையாட்டிவிட்டு வெண்ணிலா குமரனுடன் சென்றாள்.
“நிலா ஈவ்னிங் இங்குதான் வரணும். நானிருக்கும் வரை நீயும் இங்கு தான்” என்று குணா கூறிட, சரியென்றாள்.
“இங்கு வரணும், இருக்கணும் சொன்னாலே துள்ளிக்கிட்டு வருவாள். நான் இங்கு வரன்னைக்கும் அப்படித்தான் லைப்ரரி போகணும் சொல்லிட்டு வீட்டிலே இருந்திருக்காள். என்னாச்சு தெரியலையே! ” காந்தள் புலம்பினார்.
ஜீப்பில் செல்லும்போது இருவரிடமும் கனத்த அமைதி.
“நானிருக்கும் இடத்தில் இருக்க உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா?”
குமரன் தான் மௌனத்தை உடைத்து வினவினான்.
சட்டென்று அவனை ஏறிட்டு பார்த்த வெண்ணிலாவின் கண்கள் கலங்கிவிட்டன.
முகத்தை வேறு புறம் திருப்பியவள்,
“நிஜமாவே முக்கியமான கிளாஸ் இருக்கு.” மெதுவாக ஒலித்தது அவள் குரல்.
“ம்ம்ம்…”
“நீ டிசைன் பண்ணாதா?”
“ஆங்…?”
அவனின் கேள்வி புரியாது விழித்தாள்.
குமரன் தன் வலது கையினை அவள் முன் நீட்டி அணிந்திருந்த காப்பினை சுட்டிக்காட்டினான்.
“எப்போ வாங்குனீங்க? குணா கிஃப்டா?”
அப்படி கேட்டவளை மேலும் கீழும் பார்த்தவன்,
“அப்போ இதை நீ வாங்கல… அப்படித்தானே?” என்றான்.
“ம்.”
“இதுல இருக்க கதிர் நிலவு நீதான்னு காட்டிக்கொடுக்குதே!” என்று அவளின் முகத்தை பார்த்தபடி சொல்ல…
“நீங்களா எதாவது கற்பனை பணிக்கிட்டால் நான் பொறுப்பாக முடியாது” என்று வெடுக்கெனக் கூறினாள்.
“நீதான் எம்மேலிருக்கும் கோபத்தில் நேரில் கொடுக்காமல் பைக்குள்ள வச்சிட்டேன்னு நினைச்சு போட்டுக்கிட்டேன். யாருன்னு தெரியாமல் எப்படி போட்டுக்கிறது?” என்றவன் அப்போதே ஜீப்பை ஓரமாக நிறுத்துவிட்டு அதனை கழட்டிட…
“எதுக்கு இப்போ கழுட்டுறீங்க? நல்லாத்தானே இருக்கு.” வேகமாக தடுத்தாள்.
“அப்போ உண்மையை ஒத்துக்கோ?”
“ஆமாம் நான் தான் வாங்கினேன். ஹேமா அப்பா நகை கடை வைத்திருக்கிறார். அவங்களே நகையும் செய்றாங்க. அவள் மூலமாக நான் தான் டிசைன் கொடுத்து செய்ய சொன்னேன். கொடுத்தால் வாங்கிக்க மாட்டிங்கன்னு குணா ட்ரெஸ் கவரில் வைத்துவிட்டேன். பர்த்டே அன்னைக்கு நீங்க போட்டுகிட்டால் உண்மையை சொல்லலாம் இருந்தேன். அப்புறம் ஏதேதோ நடக்கவும், நீங்க என்னை தள்ளி வைக்க நினைக்கும் போது சொல்லக்கூடாதுன்னு சொல்லவில்லை” என்று ஒரே மூச்சாக கடகடவென அனைத்தையும் ஒப்பித்தாள்.
அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் படபடவென அடித்துக்கொண்டு இமைகள் பட்டாம்பூச்சியை நினைவூட்டிட, அவள் சொல்லியதை கேட்டதைவிட அவளை மொத்தமாக ரசித்திருந்தான்.
கண்ணிலிருந்து கீழிறங்கிய அவனது பார்வை, பேச்சில் பிரிந்து பிரிந்து ஒட்டும் அவளது வதனத்தில் தங்கிவிட்டது.
அவளருகில் ஏற்படும் இந்த தடுமாற்றமெல்லாம் முற்றிலும் புதிதாய் அவனுள். இன்னும் வேண்டுமென ஆர்பரித்தது அவனது மனம். அவளிடம் தகரும் கட்டுப்பாடுகளையெல்லாம் அறிந்தே இருந்தான்.
‘மொத்தமா சுருட்டிக்க பாக்குறாள்.’ அரற்றினான்.
இது சரிவராதென வண்டியை இயக்கி, சாலையில் கவனமாகினான்.
அவனின் புதிதான பார்வையிலும், வித்தியாசமான பேச்சு மற்றும் செயலிலும் உள்ளுக்குள் தடதடத்தாள்.
குமரனின் காதலை தெரிந்திருந்தவளுக்கு, இதெல்லாம் அவனது காதலின் வெளிப்பாடென புரிந்தும் புரியாததைப்போல் இருந்தாள்.
‘நீயா சொல்லணும் மாமா. என் முகம் பார்த்து, என் கண் பார்த்து சொல்லணும். நீ சொல்லி நான் கேட்கணும். நான் உன்னை விரும்புறேன் வெண்ணிலான்னு… ம்ஹூம், அம்மாடின்னு நீங்களா என்கிட்ட வரணும்’ என்று சொல்லிக்கொண்டவள் பக்கவாட்டாகத் திரும்பி அவனை பார்த்தாள்.
‘சீக்கிரம் சொல்லிடு மாமா. ரொம்ப காக்க வச்சிடாதே!’
“எதாவது கேட்டியா?”
இல்லையென இடவலமாக தலையசைத்தவள் சன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.
‘சொல்லணும் மனசு தவிக்குது அம்மாடி. ஆனால் உன்னை வார்த்தையால் நோகடிச்சிட்டு, அதை சரி செய்யாமல் எப்படி சொல்றது தெரியல. நான் பேசிய பேச்சினால் என்னை மாமான்னு சொல்லவே உனக்கு கஷ்டமா இருக்கும்போது, நானெப்படி என் காதலை சொல்வேன். இதிலே உன்னால் என்னை என்னுடைய அந்த வார்த்தைகளை மன்னிக்க முடியாதுன்னு தெரியுது. மாமான்னு நீ அழைத்தால் தான் என்னை மன்னிச்சிட்டன்னு அர்த்தம். உன் மனதிலிருந்து மாமான்னு வர வார்த்தைக்காகக் காத்திருக்கேன் நிலாம்மா. நான் காதலை சொல்றது உன் கையில் தான் இருக்கு.’
அவளின் எண்ணம் அவனறிந்தானோ அவளுக்கு வேண்டிய பதிலை அவன் மனம் உரைத்தது.
இருவரின் எண்ணப்போக்கும் ஒன்று சேர்ந்திடுமா அல்லது வெவ்வேறு திசையில் பயணித்திடுமா?