ஜோதிடர் அடுத்த மாதத்தில் இரு தினங்களை குறித்து கொடுத்திட, இரண்டாவது தேதியில் சதாபிஷேகம் செய்வதாக குமரன் முடிவெடுத்து கண்ணபிரான் மற்றும் காந்தளிடம் ஆலோசனை கேட்டிட அவர்களும் அவனுடன் இணைந்து கொண்டனர்.
அதனின் முதல் கட்டமாக குணா பெங்களூர் செல்லும்போது கண்ணபிரானையும் அவனுடன் போகுமாறு கூறினான்.
ராஜேந்திரனிடம் கண்ணபிரானை வைத்து பேசுவதென நினைத்தான்.
குமரன் எடுத்து செய்கிறான். இது அவனுடைய ஏற்பாடென்று தெரிந்தால் நிச்சயம் ராஜேந்திரன் ஒப்புக்கொள்ள மாட்டார். அதனாலேயே கண்ணபிரானை நேரில் சென்று பேசிவிட்டு வருமாறு அனுப்பி வைக்க முடிவு செய்தான்.
காந்தளிடமும்… “நீங்களும் ஒருமுறை அவருக்கு அழைத்து பேசிவிடுங்க அத்தை. சித்தப்பாவையும் பேச சொல்றேன். இதை நீங்களே, அதாவது வீரபாண்டி கமலம் பிள்ளைகள் நீங்கள் எல்லோரும் சேர்ந்து செய்வதாகவே அவருக்கு தெரியட்டும்” என்றான்.
“நீயெப்போ குணா பெங்களூர் கிளம்புற?”
“நீங்க உங்க அண்ணாகிட்ட பேசணுமென்றால் இப்போவேகூட கிளம்புங்க. அதுக்காக என்னை துரத்த பார்க்காதீங்கப்பா” என்று பேசிவிட்டு கண்ணன் கையால் இரண்டு அடி வாங்கிக்கொண்டான் குணா.
“அப்பத்தா விடு அவனை.” குமரன் சொல்லியதும் கமலம் தன் பேரனை சீண்டுவதை நிறுத்தினார்.
அன்று வகுப்பு மூன்று மணியளவில் முடிந்துவிட, “ஏற்காடு தான் போகணும். ஈவ்னிங் காலேஜ் முடியுற நேரத்துக்கு வரன்னு சொன்னாங்க. இப்போ நானெப்படி அவங்களுக்கு கால் பண்றது?” யோசித்தவள் ஹேமாவின் எண்ணிலிருந்து குமரனுக்கு அழைத்தாள்.
“ஹலோ…”
“காலேஜ் முடிஞ்சிடுச்சு.” வைத்துவிட்டாள்.
அப்போது அவன் மலைக்கு கீழே காப்பி ஆலையில் இருந்ததால் விரைவாகவே கல்லூரிக்கு வந்து சேர்ந்தான். வெளியே வண்டியில் இருந்தபடியே வெண்ணிலாவுக்கு அழைத்தான்.
அவள் அழைப்பை ஏற்காது துண்டித்துவிட்டு இரண்டு நிமிடங்களில் வெளியில் வந்து வண்டியில் ஏறியிருந்தாள்.
“உன் மொபைல் என்னாச்சு. நான் கால் பண்ணப்போ நல்லாதானே ரிங் போச்சு?” வேறொரு எண்ணிலிருந்து அவள் அவனை அழைத்தது குறித்து கேட்டான்.
“என் நெம்பர் பிளாக் பண்ணியிருந்தீங்களே! எடுத்துட்டிங்களா?”
அவளின் கேள்வி அவனின் இதயத்தில் சுருக்கென தைத்தது.
அவனின் கண்களில் வலியை கண்டவள்,
“சாரி” என்று இருக்கையில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.
மேற்கொண்டு எதுவும் பேசிடாது மலை ஏறத் துவங்கியிருந்தான்.
அப்போதுதான் ஜோதிடர் அழைத்து சதாபிஷேகம் செய்வதற்கு உகந்த நாட்களைக் கூறினார்.
வீட்டிற்கு வந்ததும் அதனைப் பற்றி பேசியவன், மீண்டும் ஆலைக்கு செல்ல கிளம்ப, காந்தளும் அவனுடன் கிளம்பிவிட்டார்.
குமரனும், வெண்ணிலாவும் வருவதற்கு சற்று முன்னர் தான் குணவதி மதியுடன் தன்னுடைய இல்லம் புறப்பட்டிருந்தார்.
“என்னப்பா வந்ததும் கிளம்பிட்ட?”
“வெண்ணிலாவை விடத்தான் வந்தேன் தாத்தா. மிளகுக்கு புது நாற்றாங்கால் வேலை போயிட்டு இருக்கு. நான் அங்கு இருக்கணும்” என்றான்.
“வெண்ணிலா இங்கு தானே இருக்கிறாள். நீயேன் போறத்தா?” கமலத்திற்கு காந்தள் என்றால் கொள்ளைப்பிரியம். கூடவே வைத்திருக்க ஆசை. அதற்கு அவர் தான் ஒத்துவரவில்லை. அதனால் மகள் இன்னும் இரண்டு நாள் கூட இருக்க வைக்க நினைத்து வினவினார்.
“நாளைக்கும் லீவ் போட முடியாதும்மா. இங்கிருந்து கிளம்பி ஸ்கூலுக்கு போக சிரமம்” என்றவர் வெண்ணிலாவை பார்த்து, “இன்னைக்கே உன்னால் குமரனுக்கு எக்ஸ்ட்ரா அலைச்சல் நீயும் என்னோடு வந்திடேன்” என்றார்.
“நிலாகுட்டி நாளைக்கு லீவ் போட்டுட்டாள் அத்தை” என்றான் குணா.
“ரெண்டு பேரும் சேர்ந்து அரட்டை அடிக்கன்னு சொல்லு” என்றவர், “நீ ரொம்பத்தாண்டா செல்லம் கொடுத்து அவளை கெடுக்குற” என்று குணாவிற்கு கொட்டு வைத்தார்.
“என்னடா ரெண்டு நாளா இந்த டயலாக் வரலையே நினைத்தேன்” என்ற குணா, “ஒருநாள் தானா அத்தை. டீச்சருன்னு உன் ஸ்கூல் பசங்ககிட்ட மட்டும் நிரூபிச்சா போதும்” என்றான்.
“அவன் இப்படித்தான் கோட்டித்தனமா பேசிட்டே இருப்பான். நீ கிளம்புத்தா” என்று கமலம் தன்னுடைய பேரனுடன் மகளை அனுப்பி வைத்தார்.
“அங்க போய் ராஜேந்திரனிடம் என்ன எப்படி பேசணும் எல்லாம் யோசிச்சிக்கோ கண்ணா. அவன் உங்க பிளானை கண்டுபிடிச்சால், மலை இறக்குவது ரொம்ப கஷ்டம்” என்றார் வீரபாண்டி.
“அதான் குமரன் சொன்ன மாதிரி… எங்களுக்கு எண்ணம் இருக்குங்கிற மாதிரி பேசிடுறேன் ப்பா” என்ற கண்ணனும், வீட்டின் பின்புறமிருக்கும் சரிவில் உள்ள தங்களது ஏலக்காய் தோட்டத்திற்கு வேலையிருக்கென சென்றுவிட்டார்.
“உங்க அண்ணாவுக்கு ரொம்பத்தான் பரந்த மனசுடா குணா.” சதாபிஷேகம் அவனது ஏற்பாட்டில் நடக்கவிருக்கிறது என்பதை உடன்பிறப்புகள் தான் செய்வதாக குணாவின் தந்தையிடம் பேச சொல்லியதைப்பற்றி வெண்ணிலா கூறினாள்.
“அவன் எப்பவுமே அப்படித்தானே நிலா. எல்லாரையும் யோசிப்பான்” என்ற குணா, “அவன் குணத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு அவனுக்கு அமையணும். அப்போ தான் நாம் எப்பவும் இதேமாதிரி ஒண்ணா இருக்க முடியும்” என்றான் எதிர்காலத்தை மனதில் வைத்து.
“என்னை பார்த்தாக்கா அந்த நல்ல பொண்ணா தெரியலையாக்கும்.” அவள் முணு முணுத்தது குணாவிற்கு கேட்கவில்லை.
“என்ன நிலா… என்ன சொல்ற?”
அவன் கேட்ட பிறகே தான் உளறியது தெரிந்து… “ஒண்ணுமில்லையே” என்று சமாளித்து வைத்தாள்.
“உனக்கும் அவனுக்கும் நடுவில் என்ன நடக்குதுன்னு சுத்தமா எனக்கு புரியவேயில்லை. அவன்கிட்ட நீ சரியாவே பேசலையே?”
“நீயா எதாவது யோசிக்காதே குணா. அதெல்லாம் பேசிட்டு தான் இருக்கோம்” என்றவள், “டயர்டா இருக்கு. நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன்” என்று கீழவே வீரபாண்டி அறைக்குள் சென்றாள்.
செல்லும் அவளை ஆராய்ச்சியாக பார்த்திருந்தான் குணா.
“வாடாம்மா…” என்ற வீரபாண்டி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க…
அவருக்கு கீழே அமர்ந்தாள்.
“மெத்தையில் உட்காருடா.”
“இருக்கட்டும் தாத்ஸ்” என்றவள் அவரின் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அவரின் மடியில் தலை சாய்த்தாள்.
“என்ன வெசனம் நிலா குட்டிக்கு?” அவளின் முதுகை வருடியவராகக் கேட்டார்.
“கதிர் மாமா என் மாமா தானே தாத்தா?”
“அவன் உன் மாமா தானேடா!
வெண்ணிலா கேட்க வேண்டுமென்று நினைத்து கேட்கவில்லை. அந்நொடி குமரனால் உண்டான மனதின் அழுத்தம் தாங்காது தன்னைப்போல் கேட்டுவிட்டாள். குமரன் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்கிற அர்த்தத்தில் அவள் கேட்க, அவர் புரிந்துகொண்ட கோணமே வேறு.
குமரனை மதியுடன் சேர்த்து வைக்கும் எண்ணம் இல்லாமல் இருந்திருந்தால், வெண்ணிலாவின் வார்த்தைகளை சரியாக புரிந்திருப்பாரோ என்னவோ?
சின்ன பெண் உரிமை உணர்வில் கேட்கிறாள் என்று கருதியவர், அதற்கு தகுந்த பதிலை கேள்வியாகவே கேட்டிருந்தார்.
“ஆமாம்… என் மாமா தான்” என்றவள் அப்படியே உறங்கிவிட, சத்தமில்லாது குணாவை அழைத்து அவளை மெத்தையில் படுக்க வைத்தார்.
“ரெண்டு நாளா ஆள் கலகலப்பாவே இல்லையேடா. நீங்க ஏதும் சேட்டை பண்ணிங்களாடா?”
“அதை வெளங்குறாப்போல சொல்ல வேண்டியது தானேடா” என்று பக்கத்திலிருந்த தன்னுடைய நடக்கும் குச்சியை எடுத்து ஒன்று கொடுத்தார்.
“என்ன சண்டை.”
“ரெண்டுமே சொல்லலை.”
“குமரன் நிலாவிடம் சண்டை போடமாட்டானே!”
“எதாவது உப்பு உரைப்பு இல்லாத காரணமா இருக்கும்” என்றவர் குணாவின் வேலையைப்பற்றி பேச்சினை கொண்டு சென்றார்.
“நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கேயே வந்திடப்போறேன் தாத்தா. குமரன் கிட்ட ஒரு ஆலையை என் பேரில் எழுதித்தர சொல்லி கேட்கப்போறேன். அதை அப்படியே பார்த்துகிட்டு… இந்த இயற்கையை ரசிச்சிக்கிட்டு ஜாலியா இருக்கப்போறேன்” என்றவனை ஏற இறங்க நோட்டம் விட்டார்.
“என்ன தாத்தா அப்படி பாக்குற?”
“நீ கேட்டால் மொத்தத்தையும் கூட அவன் கொடுத்திடுவான். உன் மேல மட்டுமில்ல எல்லார் மேலயும் அவ்வளவு பாசம் வச்சிருக்கான். அவனைத்தான் என்னமோ ஆகாதவன் மாதிரி உன் அப்பன் எட்ட நிறுத்தி வைக்குறான். இப்படியொரு புள்ள எந்த குடும்பத்துக்கு வாய்க்கும். நீங்கயெல்லாம் அவன் பொறந்தநாளுக்குன்னு பரிசு கொடுத்ததை எப்படி பல மடங்கு திருப்பி கொடுத்தான் பார்த்தல. கொடுக்கவும் மனசு வேணும் குணா. உங்களுக்குன்னா அவன் உயிரையும் கொடுத்திடுவான்” என்ற பெரியவருக்கு தங்களுக்கு பிறகு அவனை அவன் நேசிக்கும் உறவுகள் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம்.
“அதெல்லாம் அவரும் ஒருநாள் அவனை புரிஞ்சிப்பார் தாத்தா. நீ பெரியப்பாகிட்ட காட்டுன அதிகமான பாசம் என் அப்பாவுக்கு பிடிக்காமல் ஒரு கோபம். அந்த கோபம் இப்போ குமரன் மீது. அவனைவிட்டு ஒதுங்கித்தான் இருக்காரே தவிர, அவன் மேல் பசாமில்லன்னு சொல்லிட முடியாது” என்ற குணாவின் பேச்சினை மறுக்க முடியாது.
ராஜேந்திரன் குமரனிடம் பாசமாக பேச மாட்டார், நடந்துகொள்ள மாட்டாரே தவிர… இந்த சிறு வயதில் அவனிடமிருக்கும் உழைப்பை கண்டு அத்தனை பெருமை கொள்வார். கண்ணனிடம் அதைக்கூறி மகிழ்வார்.
என்ன வெளிப்படாயாக அவனை நெருங்கிட அவருக்கு விருப்பமில்லை. துரையின் இடத்தில் அவனை வைத்து பார்ப்பதே அதற்கு காரணம். அதனாலே குமரன் ஏதேனும் செய்தால் அதனை அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ளமாட்டார்.
அதற்காகத்தான் தன்னுடைய பங்கு இல்லாமல் சதாபிஷேகம் நடக்க இருப்பதாக அவரிடம் கோடிட்டுக் காட்டிடக் கூறினான் குமரன்.
இரண்டு நாள் வேகமாக சென்றிட, அன்றைய தினம் வெண்ணிலா கல்லூரிக்கு செல்ல வேண்டுமென விரைவாக கிளம்பி வந்தாள்.
குணாவும், கண்ணபிரானும் கூட ஊருக்கு செல்ல ஆயத்தமாகியிருந்தனர்.
“என்னடா இப்போவே கிளம்பிட்டிங்களா? நைட் எதுவும் சொல்லவேயில்லை” என்று குணாவிடம் கேட்டாள்.
“அப்பா வராங்கன்னு நைட் டிராவல் வேண்டாம் சொல்லிட்டான் குமரன். ட்ரெயின் டிராவல்.”
“ஹோ…”
இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
“அவன் இன்னும் தவம் கலைத்து வரலையா?” குணா கேட்கும்போதே குமரன் உள்ளே வந்தான்.
“அப்படி அந்த பாறையில் நின்னு என்னடா பண்ணுவ?”
குமரன் சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை.
கண்ணபிரான் பெங்களூர் செல்வதைப்பற்றி அவருடன் பேசிக்கொண்டே உண்ண ஆரம்பித்தான்.
சில நிமிடங்களில் மலை இறங்க பயணத்தை ஆரம்பித்தவர்கள் ஒரு மணி நேரத்தில் சேலம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர்.
குணாவையும், கண்ணபிரானையும் பெங்களூர் செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டு… வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு கல்லூரி நோக்கி சென்றான் குமரன்.
கல்லூரி வாயிலில் வெண்ணிலாவை இறக்க விட்டவன், உள்ளே செல்லும் வெண்ணிலாவை அழைத்தான்.
திரும்பி அவனை பார்த்தாளே தவிர என்னவென்று கேட்கவில்லை.
“உள்ள வா நிலா!” வண்டிக்குள் ஏறும்படி கூறினான்.
“இறங்குவதற்கு முன்பே சொல்லியிருக்கலாமே?” என்றபடி அவனருகில் ஏறி அமர்ந்தாள்.
அவள் முன்பு செவ்வக வடிவில் பெட்டி ஒன்றை நீட்டினான்.
“என்னதிது?”
“திறந்து பார்.”
“எல்லோருக்கும் கிஃப்ட் கொடுத்த அன்னைக்கு எனக்கு ஏதும் வாங்கித்தரலன்னு இன்னைக்கு கொடுக்குறீங்களா?” அவள் சாதரணமாகத்தான் கேட்டாள்.
“இல்லை.”
“அப்புறம்?”
“அன்னைக்கே இதை வாங்கிட்டேன். வாங்கும்போது உன்கிட்ட இதை எதுக்கு வாங்கிக்கொடுத்தேன்னு விளக்கம் சொல்லணும் தோணுச்சு. அதை எல்லோர் முன்பும் சொல்ல முடியாது. அதான் அப்போ கொடுக்கல. ஆலையிலே வச்சிட்டேன். நேத்து கொடுக்க முடியாமல் போச்சு” என்றான்.
‘அப்படியென்ன ஸ்பெஷல்’ என்று சிந்தித்துக்கொண்டே பிரித்து பார்த்தாள். அதிலிருந்தது இதயத்துடிப்பு மானி (ஸ்டெதஸ்கோப்).
மருத்துவ மாணவியான அவளுக்கு அந்த கருவி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆசையாக அதனை வருடியவள், மகிழ்வில் கலங்கிவிட்ட கண்களோடு அவனை ஏறிட்டாள். நீரினால் விழித்திரை நிரம்பியிருக்க, அவனின் பிம்பம் கலங்களாக. உதட்டில் புன்னகை.
“பிடிச்சிருக்கு.”
“உனக்கு ஒண்ணு தெரியுமா நிலா?”
அவள் என்ன என்பதைப்போல் புருவம் உயர்த்திட…
அவளின் கண்களை துடைத்துக்கொண்டே பேசினான்.
“நீயொரு மெடிக்கல் ஸ்டூடண்ட். கண்டிப்பா இதோட ஹிஸ்டரி தெரிந்திருக்கும். இருந்தாலும் எனக்கு சொல்லத் தோணுது” என்றவன், “ஸ்டெதஸ்கோப்பை கண்டுபிடித்தது பிரான்சில் உள்ள பாரிஸ் நெக்கர் என்ஃபண்ட்ஸ் மலேட்ஸ் மருத்துவமனையில் 1816-ல் ரெனே லானெக் என்பவர்.
அதுவரை ஒருத்தரோட இதயத்துடிப்பை, மார்பில் காதை வைத்து தான் அறிந்து கொண்டிருக்கிறார்கள். அவருக்கு ஒரு பெண்ணோட மார்பில் காது வைத்து கேட்பது அத்தனை இலகுவாக இல்லை. அதனால் அவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சுருட்டப்பட்ட பேப்பர், உடல் தொடர்பு இல்லாமல் இதயத்தின் ஓசையை பெருக்கும் என்பதை கவனித்து… மரத்தால் உருளை வடிவில் வடிவமைத்து பயன்படுத்தினார். அதுதான் காலப்போக்கில் வடிவம் மாறிப்போச்சு” என்றான்.
‘இப்போ இந்த கதை எதற்கு?’ என்று அவளின் மனதில் வினா எழுந்தது.
அவளின் பார்வையை வைத்தே மனதின் ஓட்டத்தை புரிந்து கொண்டவன்,
“அவர் டாக்டர், ஒரு பெண்ணோட இதயத்துடிப்பை கேட்பதற்குத்தான் இதை கண்டுபிடித்தார். அவருக்கு அந்த பெண்ணோட துடிப்பு கேட்டுதா இல்லையான்னு தெரியல. ஆனால், உனக்கு என்னோட துடிப்பு, என் துடிப்போட சத்தம் கேட்கணும்” என்று வெண்ணிலாவை ஆழ்ந்து பார்த்து அழுத்தமாகக் வெளியில் கூறியவன், ‘ஒவ்வொரு முறையும் வெண்ணிலான்னு ஒலித்து அடங்கும் என் மனக்குரல் உனக்கு கேட்கணும் அம்மாடி’ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.
“இப்போ என்ன சொல்ல வறீங்க? எனக்கு புரியல?”
‘புரிஞ்சிருந்தாலும் புரியலன்னு தான்டி நீ சொல்லுவ’ என்று மனதிற்குள் முணு முணுத்தவன்,
“இதுவரை லேப் அப்பாரட்டஸ் மாதிரி இதை யூஸ் பண்ணியிருப்ப. இனி அப்படியில்லை. இந்த எக்ஸாம் முடிந்ததும், மருத்துவமனையில் தான் முழுநேர வேலை. இது எப்பவும் உன் கழுத்திலே இருக்கும் தெரியும். அதுக்குத்தான் ஸ்டெதஸ்கோப்” என்றான்.
குமரன் உட்பொருள் வைத்துக் கூறிய அனைத்து வார்த்தைகளும் வெண்ணிலாவிற்கு நன்கு புரிந்தது.
அவனுடைய துடிப்பு சத்தம் கேட்கணும் என்று மறைமுகமாக காதலை சொல்லியது, உன்னோடு எப்பவும் நானிருப்பேன் என்ற அர்த்தத்தில், உன் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் எப்போதுமிருக்கும் என்று சொல்லியது எல்லாம் விளங்கியது. ஆனால் அவளுக்கு இது போதாதே!
இந்த மனசும் மனசும் பேசிக்கொள்ளட்டும் என்ற மௌன மொழி வேண்டாம்.
முகம் பார்த்து… விழி பார்த்து… எவ்வித உட்பொருளுமின்றி… உனக்கு நான், எனக்கு நீ எனும் நிலையில் மனம் உடைத்து வெளிப்படையாக அவன் காதலை சொல்ல வேண்டும்.
அதற்காக அக்கணம் உள்ளுக்குள் ஓடிய சிலிர்ப்பை அவனிடம் மறைத்தாள். பொங்கும் உவகையை அடக்கினாள்.
அவனுடைய விளக்கம் கேட்டு அவனைத் தாவி அணைக்க பரபரத்த கைகளை கட்டுப்படுத்தி, அவனளித்த இதயத்துடிப்பு மானியை இறுக பற்றியவள்…
“தேன்க்ஸ்” என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்றுவிட்டாள்.
அவளின் முன் சென்று பார்த்திருந்தால், அவளின் முகத்தின் பிரகாசம் அவனுக்குத் தெரிந்திருக்குமோ!
குமரனுக்கு இன்னும் வெளிப்படையாக காதலை சொல்லிட முடியவில்லை. அதனாலே உணர்த்த முயன்றான். இப்போது அவள் உணர்ந்து கொண்டாளா இல்லையா என்று தெரியாது கண்களில் தோன்றிய தவிப்போடு செல்லும் அவளின் முதுகையே பார்த்திருந்தேன்.
“இதுக்கே சோர்ந்து போயிட்டால் எப்படி கதிரு. இப்போதானே சுத்த ஆரம்பிச்சிருக்க… நீ கடக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.” தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன் தன்னுடைய அலுவல் காண புறப்பட்டான்.
தனக்குள் சிரித்தபடி எதிரில் வந்த தன்னையும் கண்டுகொள்ளாது செல்லும் வெண்ணிலாவை விநோதமாக பார்த்த ஹேமா, அவளை அழைத்துக்கொண்டே பின்னால் ஓடினாள்.
வெண்ணிலாவுக்கு முன்னால் மூச்சிரைக்க சென்று நின்றாள் ஹேமா.
“எதுக்குடி இப்படி ஓடிவர, என்னை கூப்பிட வேண்டியது தானே.”
“சொல்லுவடி சொல்லுவ… அங்கிருந்து உன் பின்னால் கத்திக்கிட்டே ஓடிவரேன். நீதான் கவனிக்கல. அப்படியென்ன கனவு, நடந்துகிட்டே?” என்றாள் ஹேமா.
“மாமாவும் என்னை விரும்புறார் ஹேமா” என்றவள் அவளின் இரு பக்கமும் பிடித்துக்கொண்டு சுற்றினாள்.