கணினியின் முன்பு அமர்ந்திருந்தவனின் அருகிலிருந்த அலைப்பேசி நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
யாரென்று திரையை பார்ப்பதற்கு சிறிதும் எண்ணமின்றி கணினியில் தட்டிக் கொண்டிருந்தான்.
“அஜய்… இட்ஸ் யுவர்ஸ்.”
அவனின் தோள் தட்டி சொல்லிய நண்பன் ஆடம்ஸின் குரலுக்கு கூட அஜய்’யிடம் எதிர்வினை இல்லை.
கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் சென்ற பின்னரே திரையிலிருந்து பார்வையை அகற்றி… இரு கைகளையும் மேலே உயர்த்தி சோம்பல் முறித்து, கண்களை தேய்த்தவனாக தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஆடம்ஸை பார்த்தான்.
“எப்போடா வந்த?”
“நான் அப்போவே வந்துட்டேன். நீ நைட் வீட்டுக்கே போகலையா?” கேட்ட ஆடம்ஸிடம் இல்லையென உதடு வளைத்து தலையசைத்தான் அஜய்.
“வேலை முடிஞ்சிடுச்சா?”
“அதெல்லாம் முடிச்சிட்டேன்.” சுரத்தே இல்லாமல் கூறினான்.
“ஏண்டா இப்படி சலிப்பா சொல்ற, எப்பவும் உன்னோட தீம் பக்கவா இருக்குமே?” சொல்லிக்கொண்டே ஒரு விளம்பரத்திற்காக அஜய் செய்து வைத்திருந்த கரு தொகுப்பை கணினியில் பார்த்தான் ஆடம்ஸ்.
“நால்லாத்தாண்டா இருக்கு.”
“எனக்கும் தெரியும். ஆனால், எல்லாத்துக்கும் கேர்ள்ஸ் தான் மாடலிங் பண்ணனுமா என்ன? எப்பவும் ஒரே கான்செப்டில் விளம்பரம் பண்ணிக்கிட்டு. எரிச்சலா இருக்குடா. தோசைன்னா பொண்ணுங்க மட்டும் தான் சுடணுமா? இப்போ நீ, நானெல்லாம் தனியாத்தான் இருக்கோம். நாமலே தானே குக் பண்ணிக்கிறோம். இதுகூட ஓகேடா, ஆண்களோட அத்தியாவசியமான பொருட்களுக்கு கூட பொண்ணுங்க நடிக்கணுமாம். நான் அல்ரெடி கிரியேட் பண்ணி வச்சிருந்த தீம் நால்லாயிருக்காம்… ஆனால், பொண்ணு இருந்தால் தான் இன்னும் நல்லாயிருக்குமாம். கடுப்பாகிடுச்சு” என்ற அஜய்’க்கு தினம் தினம் புதிது புதிதாக யோசித்து அதை காட்சிப்படுத்துவதில் அத்தனை விருப்பம். அதற்காகவே இத்துறையை விரும்பி படித்து வேலையில் அமர்ந்தான். ஆரம்பத்திலிருந்த பிடிப்பு இப்போதிருக்கா என்றால் குறைந்துதான் உள்ளது.
“சரிவிடுடா… நாம் ஆதங்கப்பட்டு என்னாகப்போவுது” என்ற ஆடம்ஸ், “இதெல்லாம் இப்படித்தான்னு இங்கு ஒரு கோட்பாட்டையே உருவாக்கி வச்சிருக்கானுங்க. அதிலிருந்து நாம் மாற்றி சிந்தித்தால் நம்மைத்தான் பைத்தியம் சொல்லுவானுங்க” என்றான்.
“அதுவும் சரிதான்.” அஜய் சிரித்துக்கொண்டான்.
“சரிடா… நீ வீட்டுக்கு போ. ஷூட் நாளைக்கு தானே! இனி நான் பார்த்துக்கிறேன்” என்ற ஆடம்ஸிடமிருந்து விடைபெற்று இருக்கையிலிருந்து எழ,
“அஜய், விசிட்டர் ஃபார் யூ” என்று ஒரு பெண் வந்து கூறினாள்.
“என்னைப்பார்க்க யார்?” என்று யோசித்தபடி விருந்தினர் காத்திருப்பு அறைக்குச் சென்ற அஜய் நிச்சயம் கதிர் குமரனை எதிர்பார்க்கவில்லை.
அப்போதுதான் நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்த அலைப்பேசி அழைப்பு குமரனுடையது என்று கையிலிருந்த அலைப்பேசியை பார்த்து தெரிந்து கொண்டான்.
குமரனைக் கண்டதும் அஜய்யின் கண்களில் மின்னலென வந்துப்போன குற்றவுணர்வை மூச்சினை குவித்து வெளியேற்றியிருந்தான். தன்னை நிலைப்படுத்தி உள்ளே நுழைந்தான்.
கண்ணாடி கதவு திறந்த சத்தத்தில் திரும்பிய கதிர் அஜய்யை கண்டு மனம் மகிழ்ந்து இதழ் விரித்து புன்னகையித்தான்.
என்ன முயன்றும் அஜய்யால் இயல்பாக பதிலுக்கு புன்னகைக்க முடியவில்லை. அதையெல்லாம் குமரன் அவனிடத்தில் எதிர்பார்த்து வரவில்லை.
அன்று செய்த செயலின் குற்றவுணர்வு இன்றும் அஜய்க்கு உள்ளது. அதுவே அவனை அவனது உறவுகளிடமிருந்து தள்ளி நிற்க வைத்திருக்கிறது. அன்று அவன் செய்தது அவனது தங்கையையே முகம் கொண்டு பார்க்க முடியாது தவிக்கின்றான்.
என்ன தான் அஜய் விலகியிருந்தாலும், குமரன் அவனை விட்டுவிடவில்லை. அஜய் அழைப்பினை எடுக்கின்றானோ இல்லையோ வாரம் ஒருமுறையாவது அஜய்க்கு அழைத்திடுவான். அவனுக்கு உறவென்று நாங்கள் இருக்கின்றோம் என்ற நினைப்பு அவனுள் இருக்க வேண்டுமென.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வெண்ணிலா வேண்டாமெனத் தடுத்தாலும் நேரிலே வந்து பார்த்து சென்றிடுவான். அஜய் பேசினாலும், பேசாவிட்டாலும் அவனுடன் இரு நாட்களாவது இருந்துவிட்டு செல்வான்.
அப்போதெல்லாம் குமரன் அஜய்’யிடம் சொல்லிவிட்டு செல்வது, “வீட்டுக்கு வாடா. அத்தை உன் முகமே மறந்து போகுமோன்னு பயப்படுறாங்க. நடந்தது எதுவா வேணா இருக்கட்டும். அதையெல்லாம் மறந்திடலாம்” என்பது தான்.
ஆனாலும் அஜய்க்கு ஏனோ வெண்ணிலாவை நேரில் காணும் திடம் இன்னும் வந்திருக்கவில்லை.
கடந்த ஆறு மாதங்களாக வேலை அதிகமாக இருந்ததால் குமரனால் அஜய்’யை வந்து பார்க்க முடியவில்லை. அஜய் உண்மையிலும் எதிர்பார்த்து ஏமாந்துபோனான் என்பது உண்மை. அவனைத் தேடி வரும் ஒரே உறவாயிற்றே குமரன்.
‘அவனும் தன்னை ஒதுக்கிவிட்டான் போலும்’ என்று நினைத்துக்கொண்டான்.
இப்போது மீண்டும் குமரன் வந்த பின்னரே அஜய்க்கு மனதில் ஒரு நிறைவு.
“எப்படியிருக்க?”
“ம்ம்.. நல்லாயிருக்கேன்.” இன்று தான் முதல் முறையாக குமரன் பேசி அஜய் பதில் சொல்லியிருக்கின்றான். தடுமாற்றத்துடன்.
“வீட்டுக்கு போயிருந்தேன். பூட்டியிருந்தது.”
“கொஞ்சம் வொர்க் அதிகம். நைட் வீட்டுக்கு போகல.”
குமரன் தான் சாதாரணமாக அஜய்யின் கண்கள் பார்த்து பேசினான். அஜய்யின் பார்வை குமரனை கடந்து சுவற்றில் தான் இருந்தது.
“வீட்டுக்கு போகலாம்.”
“இல்லை அஜய், நான் இப்படியே கிளம்புறேன். அப்பத்தாவுக்கும், தாத்தாவுக்கும் சதாபிஷேகம் ஏற்பாடு பண்ணியிருக்கு. அடுத்த மாதம் முதல் தேதி. இன்னும் பன்னெண்டு நாள் தான் இருக்கு. அத்தைக்கு பத்துநாளா நீ கால் பண்ணலையாம். அவங்க பண்ணப்போவும் எடுக்கலையாம். கால் பண்ணிப் பேசு” என்று தான் வந்ததற்குரிய காரணங்கள் அனைத்தையும் கூறினான்.
“ஹோ… பேசுறேன்.”
“முடிந்தால் இதுக்காவது வர பாரு. பெரியவங்க சந்தோஷப்படுவாங்க.”
அஜய்யிடம் தலையாட்டால் மட்டுமே.
“அப்போ நான் கிளம்புறேன்” என்ற குமரன் வரவேற்பு அட்டை சிலதை அவனின் கையில் கொடுத்தான்.
எதற்கு என்பதைப்போல் அஜய் ஏறிட…
“உன் பிரணட்ஸ் கூட்டிட்டு வா. சுத்தி பார்த்துட்டு, பத்து நாள் இருந்துட்டு வரலாம்” என்றான் குமரன்.
அஜய் மௌனமாக இருக்க…
“காலம் எல்லாத்தையும் மறக்க வைக்கும் சொல்லுவாங்க. அதனால்கூட நடந்ததை, உன்னில் மறக்க வைக்க முடியலங்கிறது கஷ்டம் தான். கொஞ்சம் முயற்சி செய்” என்ற குமரன் கிளம்ப… அஜய்’யே அவனை அழைத்துக்கொண்டு ரயில் நிலையம் சென்று ரயில் ஏற்றிவிட்டான்.
ரயில் புறப்பட இன்னும் சில நிமிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒலிக்க…
அஜய் காத்திருந்தான்.
“நீ கிளம்பு அஜய்.”
“இட்ஸ் ஓகே. நான் இருக்கேன். ட்ரெயின் மூவ் ஆகட்டும்” என்ற அஜய் எதையோ கேட்க வந்து நிறுத்துவதும் பின் தயங்குவதுமாக இருக்க… அவனின் கண்களில் இருந்த அலைப்புறுதலில் அவனின் மனதை படித்தானோ…
“உன்னை பார்க்கத்தான் வந்தேன். நான் சொன்னதெல்லாம் இங்கு வர காரணம் மட்டுமே.”
தான் கேட்காமலே தன்னை புரிந்து குமரன் சொல்லிய பதிலில் அஜய்’க்கு ஆச்சரியம்.
அஜய்யின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி குமரனுக்கு போதுமானதாக இருந்தது.
“ரொம்ப நாளாச்சே?” அவன் சில மாதங்களாக வரவில்லை என்பதை கேட்டிடத் தயங்கி கேள்வியாக இழுத்தான்.
“காப்பி பொடி ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். அது கொஞ்சம் வேலையையும் அலைச்சலையும் இழுத்து விட்டுருச்சு. இருபது நாளாகுது” என்றான் குமரன்.
“கங்கிராட்ஸ்…” அதற்கு மேல் அஜய்க்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் குமரனுக்கு அவன் பேசிய இந்த ஓரிரு வார்த்தைகளே போதுமானதாக இருந்தது. இத்தனை வருடங்களில் அஜய், குமரனிடம் பேசியது இதுவே அதிகம்.
தனிமை அஜய்’க்கு உறவுகளின் அருமையை கற்று கொடுத்திருந்தது. இந்த தனிமை அவனாக விரும்பி ஏற்றது தான். ஆனால் நாளடைவில் குடும்ப சூழலில் பல உறவுகளுடன் வாழ்ந்த அவனுக்கு தனியாக இருப்பது அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை. அச்சூழலில் எல்லாம் அவன் ஏற்ற தனிமை கொடுமையே.
அவன் வேலை கிடைத்து தன்னை நிலைப்படுத்தும் வரை எப்போவாவது ஊருக்கு வந்து கொண்டிருந்தவன், அதன் பின் முற்றிலும் தவிர்த்துவிட்டான்.
காந்தளுக்கு மட்டும் நினைத்தால் அழைத்து பேசுவான்.
ஒருமுறை குமரன் தன்னிடம் சரக்கு வாங்கும் சென்னை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்ய நேரில் வந்திருக்க… வேலையை முடித்துக்கொண்டு அஜிய்’யினை பார்க்கச் சென்றான்.
காய்ச்சல் கண்டு என்னவோ போலிருந்தவனுக்கு உதவ யாருமில்லாததை கண்டு குமரன் தான் அவனுக்கு குணமாகும் வரை இருந்து பார்த்துக்கொண்டான்.
மறுக்க முடியாத நிலை அதனால் அஜய் குமரனின் செயல்களை ஏற்றுக்கொண்டான்.
எப்போதும் தன்னை பார்த்ததும் தீயாய் தகித்திடும் அஜய்… அவனது அருகில் தன்னை அனுமதிப்பதே அவனது முடியாத நிலையை குமரனுக்கு வலியுறுத்திட… இன்னும் அதிகமாய் கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டான்.
குமரனின் அக்கறையும், அன்பும் அஜய்க்கு தன் தவறை புரிய வைத்ததோடு, குற்றவுணர்வையும் கொடுக்க அஜிய்’யிடம் தன்னுடைய அன்றைய தவறுக்காக மன்னிப்புக் கேட்க நினைத்தாலும் அவனின் முகம் பார்க்க என்னவோ போலிருக்க… இன்றுவரை மன்னிப்புக்கோர முடியாது எட்டி நிற்கின்றான்.
அஜய் அத்தனை கெட்டவனில்லை. சிறு வயதில் பிள்ளைகளுக்கே உண்டான உரிமை உணர்வில் குமரனின் மீது கொண்ட கோபம். இப்போது அதெல்லாம் சிறுப்பிள்ளைத்தனமாகத் தோன்றினாலும், அன்றைய நாள் விபரீதமாக எதேனுமாகியிருந்தால் அவனது தங்கை இன்று அவனுக்கில்லையே.
நினைக்கையிலேயே நெஞ்சம் பதறும். இதனை தான் தான் செய்தோமா என்று. வெண்ணிலாவை பார்க்க பார்க்க மனம் வெம்பிட… தன்னை ஒரு கொலைகாரன் போல் தானே நினைக்கும் எண்ணத்தை தவிர்க்கவே சென்னையை தன்னுடைய இருப்பிடமாக்கிக் கொண்டான்.
அஜய்க்கு உடல்நிலை சரியானதும் குமரன் கிளம்பிட… உண்மையில் அஜய்யின் முகம் சோர்ந்துவிட்டது.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு தன்னுடன் இரு என்று சொல்வான். தான் அத்தனை வெறுப்பை காட்டியும் தன்னிடம் அன்பை மட்டுமே வேண்டி நிற்கும் குமரனை அதிகம் பிடித்த போதும் அவனால் அதனை வெளிக்காட்டிட முடியவில்லை. அதற்கு அன்றை செயல் முக்கிய காரணமாகும்.
தன்னை குறித்தே வெட்கியவன் மௌனமாக நின்றான்.
குமரன் சென்ற பின்பு வாட்டிய தனிமை இன்னும் கொடுமையாய் இருந்தபோதும் தனக்கு இது தேவைதானென்று தண்டனையாய் எண்ணி அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
இரண்டு மாதங்களில் மீண்டும் வந்த குமரனின் வருகை அஜய்க்கு அத்தனை ஆறுதலை அளித்தது. அது அவன் மட்டுமே அறிந்தது.
அதன் பின்னர் குமரனின் வருகை தொடர்ந்திட… அஜய் குமரனை எதிர்பார்க்கத் துவங்கிவிட்டான்.
ஆனால் இன்று வரையிலும் குமரன் மன்னித்துவிட்ட தன் தவற்றை தன்னாலே மன்னிக்க முடியாது மனதோடு போராடி உறவுகளுடன் இயல்பாக பழகிட முடியாது தவிக்கின்றான்.
உண்மை அறிந்த வெண்ணிலாவும், குமரனும் இதைப்பற்றி இன்றுவரை யாரிடமும் மூச்சு விட்டதில்லை. அதுவே அஜய்யின் குற்றவுணர்வை இன்னும் அதிகரிக்க வைத்திட துடிக்கின்றான்.
“அஜய்…”
கடந்ததில் மூழ்கிவிட்ட அஜய்யை நிகழ் மீட்டது குமரனின் அழைப்பு.
“ட்ரெயின் மூவ் ஆகப்போகுது.”
“போயிட்டு கால் பண்ணு குமரா!”
குமரனின் முகத்தில் அத்தனை மகிழ்வு. கண்கள் சட்டென்று பனித்துவிட்டன.
எத்தனை வருடங்களுக்கு பின்னாக அஜய் அவனின் பெயரை உச்சரித்திருக்கின்றான்.
‘அஜய் விரைவில் தங்களுடன் இணைந்து விடுவான்’ என நம்பிக்கை கொண்டான்.
குமரனின் முகத்தின் ஒளியே அஜய்’யை நெகிழ வைத்தது. தன்னை நினைத்து எத்தனை தூரம் வேதனை கொண்டுள்ளனர் என அக்கணம் புரிந்து கொண்டான்.
ரயில் நகர்ந்திட இருவரிடமும் சிறு தலையசைப்பு.
ஒருவரின் கண்களுக்கு மற்றவரின் பிம்பம் மறையும் வரை பார்த்திருந்தனர்.
பெங்களூர் சென்ற கண்ணபிரான் ஏற்காடு வந்து சேர்ந்ததும்…
“எல்லாத்தையும் நம்மையே பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டார்” என்று அங்கு ராஜேந்திரனுடன் நடந்த உரையாடலை அப்படியே கூறிட, அடுத்தடுத்து வேலைகளில் துரிதமாகினான் குமரன்.
ஆடம்பரத்திற்கு என்றில்லாமல் வெகு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கூடப்போவதை கொண்டாடுவதற்காகவே அத்தனை பெரிதாக செய்ய நினைத்து பலவற்றை ஏற்பாடு செய்தான்.
அவனுக்கு துணையாக அனைத்திலும் கண்ணன் உடன் நின்றார்.
காந்தள் குமரன் கூறியவற்றை குணவதியை உடன் சேர்த்துக்கொண்டு செய்தார்.
எம்பிரானும் தன்னால் முடிந்தவரை உதவி செய்தார். இதில் தனித்து… எதுவும் செய்யாதது பழனியும், ராஜேந்திரனும் மட்டுமே!
அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க… அழைப்பிதழ் அச்சடித்து வர அனைவருக்கும் எத்தனை வேண்டுமெனக் கேட்டு பிரித்துக் கொடுக்க, அனைவரும் அழைப்பிதழ் வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
சதாபிஷேகம் முடிவானதிலிருந்து காந்தள் தன்னுடைய மகனுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். வேலைப்பளு காரணமாக அவனால் எடுக்க முடியாது போக, குமரனே கிளம்பி சென்று அவனை பார்த்துவிட்டு திரும்பி வந்தும் சேர்ந்திருந்தான்.
இரவு எட்டு மணிவாக்கில் சேலம் வந்தவன் காந்தள் வீட்டிற்குத்தான் சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் குமரனின் கண்கள் அவனவளைத்தான் தேடியது.
குமரனை உட்கார வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தவர் தன்னுடைய மகனைப் பற்றி வினவினார்.
“கண்டிப்பா வருவான் தோணுது அத்தை” என்றவன், “ரொம்ப வேலை போலிருக்கு. நைட் கூட வேலை பார்க்கிறான். நானே காலையில் அவனுடைய ஆபிசிற்கு சென்றுதான் பார்த்தேன்” என்று அவருக்கு வேண்டிய பதில்களை கொடுத்தான்.
“அவன் ஏன் இப்படியிருக்கான் ஒண்ணும் விளங்கல. மத்த புள்ளைங்களாட்டம் இல்லாமல் இவன் மட்டும் என்னத்தக்கு வனவாசம் இருக்கானோ?” என்றவர், “வரலைன்னா… எதையாவது செய்து அவனை வரவழைத்து கால்கட்டு போட்டு உட்கார வச்சிடணும் குமரா. அப்புறம் அவன் எங்க போனாலும் எனக்கு கவலையில்லை. இப்படி ஒத்தையில நிக்குறான்னு தான் மருக வேண்டியதா இருக்கு” என்று தன் மனம் ஆறும் மட்டும் புலம்பிக் கொண்டிருந்தார்.
“பயணம் செய்து களைப்பா வந்த புள்ளைய சாப்பிடக்கூட வைக்காமல் நான்பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் பாரேன்” என்ற காந்தள், “ரொம்ப இருட்டிடுச்சே குமரா மலைக்கு போறியா? நைட் இருந்துட்டு காலையில் போயேன்” என்றபடி உணவினை எடுத்து வைத்தார்.
“ஜீப் ஆலையில் நிக்குது அத்தை. இந்நேரம் ஆலைக்கு எப்படி போறது. காலையில் போயிக்கிறேன்” என்றவன் கீழிருந்த அறை ஒன்றின் உள் நுழைந்தான்.
“என்ன காந்தள் வாசனை தூக்குது.” கேட்டுக்கொண்டே மேலிருந்து வந்த வெண்ணிலா உணவு மேசை இருக்கையில் அமர்ந்தாள்.
“எல்லாம் உனக்கு பிடிச்சது தான் சாப்பிடு” என்றவர், அவளுக்கு உணவினை தட்டில் எடுத்து வைத்தார்.
“குறு மிளகு சென்னைக்கு போனாரே வந்துட்டாராம்மா?”
“ஏன் கேட்குற?”
“சும்மா தெரிஞ்சிக்க.”
“எதாவது வாங்கிட்டு வர சொன்னியா?”
“இல்லையே?”
“எத்தனை தரம் சொல்றது அவனுக்கு செலவு வைக்காதன்னு” என்ற காந்தள், “அவன் கஷ்டப்பட்டு உழைக்கிறதை, நீங்க எளிதா செலவு செஞ்சிடுறீங்க” என்று வெண்ணிலா இல்லையென சொல்லியதையும் காதில் வாங்காது அவளை பேச ஆரம்பித்துவிட அவளுக்கு கோபம் வந்துவிட்டது.
“அச்சோ அம்மா திட்டுவதை முதலில் நிறுத்து” என்று கத்தினாள்.
வெண்ணிலா கத்தியதில் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு ஆடை மாற்றிக்கொண்டிருந்த குமரன் விரைந்து அறைக்குள்ளிருந்து வெளியில் வந்திருந்தான்.
வெண்ணிலா அவனுக்கு முதுகுக்காட்டி அமர்ந்திருக்க அவனின் வருகையை அறியாது அன்னைக்கு பதில் பேசினாள்.
“இப்போ எதுக்கும்மா திட்டுற… என் மாமா, நான் கேட்கிறேன். அவர் வாங்கிக்கொடுக்கிறார். இதில் உனக்கென்ன பிரச்சினை. எனக்கு வாங்கித்தராமல் வேறு யாருக்கு வாங்கித்தர இவ்வளவு சம்பாதிக்கிறாராம். நான் கேட்டால் இருக்குற ரெண்டு ஆலையையும் சொடக்கு போடுற நேரத்துல எனக்கு எழுதி கொடுத்திடுவாரு. இப்படியொரு மாமா இல்லையேன்னு உனக்கு பொறாமை” என்ற வெண்ணிலாவின் குரலில் குமரனை நினைத்து என் மாமா என்கிற பெருமை தூக்கலாகவே இருந்தது.
“கேட்டுக்கோ குமரா.”
காந்தள் சொல்லிட, தன்னவளின் பேச்சினைக் கேட்டுக்கொண்டிருந்த குமரனுக்கு அவளின் உரிமை பேச்சு அவனுள் தித்திப்பாய் இறங்கியது
அன்று கல்லூரியில் இதயத்துடிப்பு மானியை அவளிடம் கொடுத்தபோது அவளை பார்த்தது, பேசியது. அதன் பின் இன்று தான் அவளை காண்கிறான். குரலை கேட்கிறான். விழா வேலையில் மூழ்கியவனுக்கு, அவளை பார்த்திட நேரம் கிட்டிடவில்லை என்பதைவிட, கிடைக்கும் சந்தர்ப்பத்தை எல்லாம் வெண்ணிலாவே முறியடித்துவிட்டாள்.
இரு வாரங்களுக்கு பின்னர் அவளை காண்கிறான். அதுவரையிருந்த தவிப்புகள் எல்லாம் அவளின் பேச்சில் மொத்தமாக காணாமல் கரைந்து போன உணர்வு.
“என்ன கேட்டுக்கோ குமரா” என்று திரும்பி பார்த்தவள், குமரனை எதிர்பார்த்திடாத நிலையில், தான் பேசியதை எண்ணி கண்களை சுருக்கி, நாக்கினை கடித்து அசடு வழிந்தாள்.
குமரனிடம் விரிந்த புன்னகை.
“என்னடா சிரிக்குற?”
இருக்கையில் வெண்ணிலாவின் அருகில் அமர்ந்தவனுக்கு உணவினை இட்டவாறே வினவினார்.
“பார்த்து குமரா… சொல்றதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சிக்கோ! நாளைக்கு உனக்குன்னு ஒருத்தி வந்த அப்புறமும் இப்படியே சொல்லிட்டுத் திரியப்போறாள்” என்றவர் சன்னமாக சிரித்து வைக்க… அவரின் அத்தகைய பேச்சு இருவருக்குமே ரசிக்கவில்லை.