குமரன் என்னவென்று உணரும் முன்பே நடந்துவிட்ட நிகழ்வில், தலை சுற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு.
வேகமாக கிணற்றுக்கு அருகில் ஓடிவந்த குமரன்…
“என்ன அஜய் இப்படிபண்ணிட்ட?” என்று கேட்டுக்கொண்டே, “அப்பா, அத்தை, தாத்தா, பாட்டி ஓடிவாங்க” என்று உரக்க கத்தியபடி கிணற்றின் உள்ளே பாய்ந்திருந்தான்.
வெண்ணிலா கைகளை உயர்த்தியபடி நீருக்குள் அமிழ்ந்து, மேலே வந்து மூச்சுக்குத் தவித்தபடி போராடிக் கொண்டிருந்தாள். கைகள் காற்றிலும், நீரிலும் அலைமோதின. வெளியே வரும் அவள் முகத்தில் கண்கள் சொருகிய நிலையில் கிணற்று நீரை குடித்த குடித்து மூச்சுத்தடைபட… வாயினை திறந்து திறந்து காற்றை உள்ளுக்குள் இழுக்க முயற்சித்தாள்.
எட்டிப்பார்த்த அஜய்’க்கு தங்கையின் உயிர் போராட்டம் கண்டு முகத்தில் நீர்வற்றிப்போனது.
குமரனின் கைகளில் வெண்ணிலா சிக்கிடாது மீண்டும் உள்ளுக்குள் அமிழ்ந்து மேலே வர, சிறியவனான குமரன் தடுமாறினான்.
தன் தவறின் வீரியம் புரிந்த அஜய்க்கு உடலெல்லாம் நடுங்கி சில்லிட்டுப் போனது.
“அருள் என்னால முடியல. யாரையாவது கூப்பிடுடா” என்று உள்ளிருந்து குமரன் குரல் கொடுக்க…
சத்தம் கேட்டு ஓடிவந்த பெரியவர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்க்கே சென்றிருந்தனர். அதற்குள் வெண்ணிலாவைத் தூக்கிக்கொண்டு இருவரும் மேலேறியிருந்தனர்.
கண்ணபிரான் முதலுதவி அளிக்க… நீர் வெளியேறிய நொடியில் மெல்ல கண் திறந்த வெண்ணிலா தனக்கு பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்திருந்த அஜய்’யை கண்டு அரண்டு கத்தினாள். மற்றைய பக்கமிருந்த குமரனிடம் ஒண்டினாள்.
அவளின் அச்செயலிலேயே அஜய் மடிந்துபோனான்.
“எப்படிடா… எப்படி விழுந்தாள்?” காந்தள் கண்ணீரோடு கேட்க…
சொல்ல வந்த வெண்ணிலாவை தலையசைத்து தடுத்தான் குமரன்.
“நான்…” ஆரம்பித்த அஜய்’யின் கையை பிடித்து அழுத்திய குமரன்,
“கண்ணைகட்டி விளையாடினோம்… தவறி விழுந்துட்டாள் அத்தை” என்று பொய்யுரைத்தான்.
அன்று உண்மை மட்டும் அனைவருக்கும் தெரிந்திருந்தால்? இன்று நினைத்து பார்க்கவும் அஞ்சினான் அஜய்.
அன்றிலிருந்து குமரனிடம் பேசவில்லை என்றாலும் அவனிடம் வம்பு செய்வதை விட்டுவிட்டான்.
வெண்ணிலா தான் அஜய் என்றாலே பயந்து அளற ஆரம்பித்துவிடுவாள். அதனால் தங்கையின் முன்னே செல்வதையே நிறுத்திக்கொண்டான் அஜய்.
‘வெண்ணிலா தன்னோடு நெருங்கி பழகியது பிடிக்காமல் தானே அன்று தெரிந்தே அவளை கிணற்றில் தள்ளினான். தன்னிடம் அவள் பேசுவது, பழகுவதற்கே அப்படி செய்தவன்… அவளின் காதல் தன்மீதென்று தெரிந்தால் என்ன செய்வானோ’ என்கிற பயம் மனதின் ஓரத்தில் முளைக்கத்தான் செய்கிறது.
தற்போதிருக்கும் அஜய் பக்குவப்பட்டவன் என்ற போதும் மனதின் காயம் எதை எப்போது வேண்டுமானாலும் செய்ய வைத்திடுமே. இன்று நன்றாக நடந்துகொள்கிறான் என்பதற்கு முழுக்காரணம் அவனுள்ளிருக்கும் குற்றவுணர்வே. அதன் தடம் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் கொள்ளலாமே! அதற்காகத்தான் எதையெதையோ காரணம் காட்டி வெண்ணிலாவை தள்ளி நிற்க வைக்கின்றான் நிலவின் கதிர். இந்த விலகலை வெண்ணிலா அஜய்யை சேர்த்து வைக்க பயன்படுத்திக்கொள்ள நினைத்தான் குமரன்.
நடந்ததை இப்போது நினைத்தாலும் அஜய்யின் மனம் மருகியது. ஒரே ஒருமுறை வெண்ணிலாவிடம் மன்னிப்பைக் கேட்டுவிட்டாலும், அவனின் மனம் ஆறிவிடும். அவள் மன்னித்துவிட்டாள் அவனது குற்றவுணர்வு நீங்கிவிடும். ஆனால் அவள் தான் அதற்கு வாய்ப்பே அளிக்காது அவனை பார்த்தாலே மிரள்கிறாளே!
தன்மீது அத்தனை அச்சம் கொண்டிருப்பவள் இன்று தன்னை அழைப்பதை நம்ப முடியாது பார்த்திருந்தான் அஜய்.
இரண்டுமுறை அழைப்பைத் தாங்கி அலைப்பேசி அணைந்த போதும் வெறித்திருந்தானே ஒழிய… அதனை ஏற்று பேசும் திடம் இத்தனை வருடங்கள் சென்றும் அவனுக்கு வரவில்லை.
இங்கு வெண்ணிலாவுக்கோ எரிச்சலாக வந்தது.
“கால் பண்ணால் அட்டெண்ட் பண்ணாததுக்கு எதுக்கு மொபைல் வச்சிக்கணும்?” என்று அஜய்க்கு திட்டியவள், அப்போதுதான் நேரத்தை கவனித்து…
“ஒருவேளை தூங்கிவிட்டானோ?” என்று நினைத்தாள்.
நேரத்தை பாராது அழைத்த தன் நெற்றியில் தட்டிக்கொண்டவள், ‘என்னைப்போல் அவனும் என் நெம்பரை சேமித்து வைக்காமல் இருந்திருந்தால்?’ என்று சிந்தித்தவள்…
“Am vennila. I want to talk to you?” என்று புலனம் வழி தகவல் அனுப்பிவிட்டு படுத்துக்கொண்டாள்.
தகவலை படித்த அஜய்க்கு இதயம் அத்தனை பாரமாகிப்போனது.
சொந்த தங்கை. ரத்தத்தின் ரத்தம். அவள் பேசுவதற்கே மூன்றாம் மனிதர் போல் தன்னை அணுகும் நிலையை நினைத்து வருந்தினான்.
வெண்ணிலா தன்னுடைய மற்ற சோகோதர்களுடன் பேசி சிரிப்பதை நினைத்து பார்த்தவனுக்கு சொல்ல முடியாத வேதனை முகிழ்த்தது.
பல வருடங்களுக்குப் பின்னர் அவனின் கண்கள் கண்ணீரில் நனைந்தன. வெண்ணிலாவை கிணற்றில் தள்ளிவிட்ட அன்று அவன் அழுதது. அதன் பின்னர் இன்று தான்.
வாழ்வில் முதல் முறையாக குமரனுக்கு விரல்கள் நடுங்கத் தானாக அழைத்திருந்தான்.
ஒலி அடங்கும் சமயம் அழைப்பினை ஏற்றிருந்தான் குமரன்.
“சொல்லு அருள்… இந்நேரத்தில், உனக்கு ஒன்றுமில்லையே?” குமரனின் பதட்டம் அவனை நெகிழ்த்தியது. முதல் முறையாக அவனின் நலனில் அக்கறை கொண்டு துடிக்கும் ஜீவனை காண்கிறான். அவனுக்கான பதட்டம், அத்தனை பிடித்தது அவனுக்கு.
என்றும் பேச விழைந்திடாதவன் இந்நேரத்தில் அழைத்தால் பதட்டம் கொள்ளத்தானே செய்யும்.
அஜய்’யிடம் பதிலின்றி இருக்க…
“அஜய்… அருள்…” என்று படுக்கையை விட்டு எழுந்துவிட்டான் குமரன்.
குமரனின் பதட்டம் கூடியது அவனது குரலில் தெரிந்திட… தன்னை சரி செய்துகொண்டு,
“ஒண்ணுமில்லை குமரா. நான் நல்லாயிருக்கேன்” என்று வேகமாக சொல்லி அவனை ஆசுவாசப்படுத்தினான்.
“நிஜமாவா?”
“உண்மையாவே நான் ஓகே தான்.”
“ம்ம்..”
அடுத்து என்ன பேசுவதென்று இருவருக்குமே தெரியவில்லை.
சில நிமிடங்கள் நீண்ட மௌனம்.
“என்ன அஜய் எதாவது சொல்லணுமா?”
குமரன் தான் அமைதியை உடைத்துக் கேட்டிருந்தான்.
“அது… நி…ந்…நில்.” அவனுக்கு தொண்டை அடைத்தது. கண்கள் உடைப்பெடுக்க பேச்சே வரவில்லை.
“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ் அஜய்” என்று குமரன் கூறிட, தலையை உயர்த்தி வாயால் காற்றை இழுத்து ஊதி தன்னை நிலைப்படுத்தினான்.
“நிலா கால் பண்ணாள். என்னால் அட்டெண்ட் பண்ண முடியல. என்கிட்ட பேசணும் மெசேஜ் அனுப்பியிருக்காள்.” படபடவென வேகமாக சொல்லியிருந்தான்.
“அப்போ கால் பண்ணிப்பேசு.”
“எப்படி குமரா? எனக்கு என்னவோ…” வார்த்தை வராது தடுமாறினான்.
“இப்போ என்கிட்ட பேசுறதானே! அதே மாதிரிதான்.”
அஜய்’யிடம் வார்த்தையில்லை.
“என்னால் தான் நீ அன்னைக்கு அப்படி நடந்துகிட்ட. தப்பு செய்யுறவங்களவிட, செய்யத் தூண்டுறவங்களுக்குத்தான் தண்டனை அதிகமென்று சட்டமே சொல்லுது. அப்படி பார்த்தால் உன்னை அப்படி செய்ய வைத்த என்னிடம் தான் நீங்க ரெண்டு பேரும் கோபத்தைக் காட்டணும். ஆனால் என்கிட்ட நல்லாத்தானே இருக்கீங்க?” எனக் கேட்டான்.
“செய்யாத தப்பைக்கூட தன் தலையில் ஏற்றிக்க உன்னால் மட்டும் தான் முடியும் குமரா. அன்னைக்கு ஏதோவொரு கோபம், ஆத்திரத்தில் அப்படி செய்துவிட்டேன். ஆனால், அதை நினைத்து வருந்தாத நாளில்லை. கில்டினெஸ் என்னைப்போட்டு படுத்தி எடுக்குது. நீயா என்னைத்தேடி வராது, என்னிடம் பேச முயலாது இருந்திருந்தால் நிச்சயம் இப்போதுகூட நானாக பேசியிருக்க மாட்டேன். நான் தெரிந்தே செய்த தப்புக்கு என்னால் மன்னிப்பும் கேட்க முடியவில்லை. இந்நிலையில் நானெப்படி அவளிடம் பேசுவது?”
தன்னுடைய உள்ளத்து உணர்வையெல்லாம் மொத்தமாக குமரனிடம் இறக்கி வைத்தான்.
அவனது வருத்தம் யாவும் வெளிவரட்டுமென்று அவன் சொல்லி முடிக்கும்வரை அமைதியாகக் கேட்டிருந்தான் குமரன்.
“அது சிறிய வயதில் விவரம் தெரியாது செய்தது அஜய். அதை மறந்திடு. அடுத்து என்னன்னு யோசி. இன்னும் எத்தனை நாட்களுக்கு நிலாவோடு பேசாமல் இருப்ப? அவளுக்கு நாளைக்கே ஒன்றென்றால் நீ துடிக்க மாட்டாயா? அவளுக்கு நல்லதென்றால் முன்வந்து நிற்கமாட்டாயா? அத்தைக்கு அப்புறம் நீதான் அவளுக்கு எல்லாம் செய்யணும்” என்று எடுத்துக்கூறினான்.
“அவள் எதுக்கு பேச நினைக்கிறாள் உனக்குத் தெரியாதா?”
“உண்மையில் தெரியாது அஜய். அவள் என்னிடம் சொல்லவேயில்லை” என்றான் குமரன்.
“ஹோ… உனக்குத் தெரிந்திருக்கும் நினைத்தேன்” என்ற அஜய்’க்கு தங்கையிடம் பேச அத்தனை ஆசை. ஆனால், முடியாது தவிக்கின்றான்.
“எதையும் ரொம்ப ஆழமா யோசிக்காதடா. அவளிடம் பேசணும் உனக்கு ஆசையில்லையா? உனக்குன்னு இருக்க ரொம்ப முக்கியமான உறவு அவள். திட்டினாலும் வாங்கிக்கோ. கால் பண்ணிப் பேசு. அண்ணன் தங்கை உறவெல்லாம் வரம். மிஸ் பண்ணிடாதே!” குமரன் நிதர்சனத்தைக் கூறினான்.
“வெண்ணிலா உன் தங்கைடா… எதையும் நேருக்கு நேர் நின்னு சமாளிச்சிட்டால் எல்லாம் சரியாப்போகும். ஒருமுறை உன் மனசில் இருப்பதை அவகிட்ட எல்லாம் சொல்லிடு. மன்னிப்பு கேட்கணும் நினைக்கிறியா? தயங்காமல் கேட்டுடு. பயந்து ஒதுங்கிப்போனால் தான், இன்னும் பெருசா தெரியும்.”
குமரன் இந்தளவிற்கு அக்கறையோடு பேசுவானென்று அஜய் எதிர்பார்க்கவில்லை. வெண்ணிலா பேசவேண்டுமென தகவல் அனுப்பியதும், குமரனுக்கு இதைபற்றித் தெரிந்திருக்கும் என்பதாலேயே அழைத்திருந்தான். ஆனால் இவ்வளவு அன்போடு எடுத்து சொல்வான், மன சஞ்சலத்தைப் போக்குவான் என்று சற்றும் எண்ணவில்லை.
‘இப்போ தான் புரியுது இந்த பசங்களுக்கு இவன்னா ஏன் ரொம்ப பிடிக்குதுன்னு.’ மனதோடு சொல்லிக்கொண்டான்.
‘அப்போ உனக்கு குமரனை பிடிக்கலையா?’ மனசாட்சி கேள்வி கேட்டது.
“இத்தனை அன்போடும் அக்கறையோடும் இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. நான் தான் அவனுக்கு எதிரில் நின்னு எதிரியாவே பார்த்துட்டேன்” என்று தன்னோடு வருந்தியவன்…
“எல்லாத்துக்கும் சாரிடா குமரா” என்று வெளிப்படையாக அனைத்தும் உணர்ந்து கேட்டிருந்தான்.
குமரனுக்கு சட்டென்று கண்கள் கலங்கிவிட்டன.
“விடுடா… நமக்குள் என்ன?” அஜய்’யை இளகுவாக்கினான்.
“நான் கால் பண்ணும்போது, நீ அட்டெண்ட் பண்ணுவன்னு கூட நினைக்கல.” உள்ளத்து உண்மையைக் கூறினான் அஜய்.
“நீதான் எங்களை தள்ளி வச்ச, நாங்களில்லை அருளு.” ஒத்த வரியில் அஜய்க்கு எல்லாவற்றையும் உணர்த்திவிட்டான்.
“தப்பு பண்ணிட்டேன்!”
“சரி செய்திடலாம். நிலாகிட்ட பேசு” என்ற குமரன் அழைப்பை “வைத்திடவா?” என்று வினவ, “இனி நீ கால் பண்ணால் நான் அட்டெண்ட் பண்ணுவேன்” என்றான் அஜய்.
குமரனிடம் நிறைவான புன்னகை. மனம் எதையோ எண்ணி லேசானது. அவனது காதலுக்கு பெரும் தடையாக இருந்த அஜய் அவன் பக்கம் வந்துவிட்ட மகிழ்வோ! ஆனால் அவனின் மாற்றம் எந்தளவிற்கு உண்மையானதென்று குமரனால் கணக்கீடு செய்ய முடியவில்லை. அஜய்யை குமரன் நம்பாமல் இல்லை. மீண்டும் அவன் எதிர்த்து நின்றுவிடுவானோ என்ற அச்சம்.
தன்னுடைய காதலுக்காகவாவது அஜய்யை எதிர்த்து நிற்போமென்று அவனால் நினைக்கக்கூட முடியவில்லை.
‘தற்போதைக்கு அஜய் நெருங்கி வருவதே நன்மைக்குத்தான். அவன் இன்னும் நெருங்கட்டும், விழாவில் தன்னுடைய மனதை வெண்ணிலாவிடமும் பெரியவர்களிடமும் சொல்லிவிடலாம்’ என்று தீர்மானித்து, விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
குமரனிடம் பேசிய பின்னர் மனம் அமைதியாக இருப்பதை உணர்ந்தான் அஜய்.
நேரத்தை பார்த்தான். நடுநிசியை நெருங்கியது.
“இந்நேரத்தில் தூங்கியிருப்பாளே! நாளை பண்ணுவோம்” என நினைத்தவன், தன் தங்கை அனுப்பிய தகவலை நம்ப முடியாது புலனம் திறந்து பார்த்தான்.
வெண்ணிலா இணைய தொடர்பில் இருந்தாள்.
ஹேமா பாட சம்மந்தமாக குறிப்பு வேண்டுமென அழைத்திருக்க… உறக்க கலக்கத்தில் அவளைத் திட்டிக்கொண்டே அனுப்பிக் கொண்டிருந்தாள்.
‘இந்நேரத்தில் தான் படிக்கத் தோணுமா? பேய்க்கு சொல்லித்தறியாடி?’ என்று முணு முணுத்தபடி.
குமரன் அத்தனை சொல்லிய பின்னர் அஜய் யோசிக்கவேயில்லை, வெண்ணிலா விழித்திருக்கிறாள் என்று அறிந்ததும் உடனடியாக அழைத்துவிட்டான்.
தேர்வு நேரம் என்பதாலேயே இரவு என்றும் பாராது, ஹேமா கேட்ட குறிப்புகளை தேடி எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தவளுக்கு அஜய்யின் எண்ணமோ, அவனிடம் தான் பேச முயற்சித்ததோ நினைவில் இல்லை. திரையில் ஒளிர்ந்த எண் அஜய்’யுடையது என்பது கருத்திலில்லாமலே ஏற்றிருந்தாள்.
“ஹேய் ஹேமா… அனுப்பிட்டு தாண்டி இருக்கேன். அதுக்குள்ள எதுக்கு கால் பண்ற?”
புத்தகத்தை புரட்டிக்கொண்டே பேசினாள்.
“நான்…” வார்த்தை சத்தமின்றி தடுமாற, தொண்டையை செருமி சரிசெய்தான்.
“நான்… அஜய்.”
அலைப்பேசியை காதிலிருந்து எடுத்து திரையை பார்த்தவள்,
‘ஹேமா இல்லையா?’ என நினைத்தாள்.
“அஜய்… யாரு?” அவளுக்கு உண்மையிலேயே அஜய் என்ற பெயர் மூளையில் பதிந்திருக்கவில்லை.
வீட்டிலிருப்பவர்கள் பேசும்போதுகூட யாரோபோன்று கடந்து விடுபவளுக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
தங்கையின் கேள்வியில் மொத்தமாக மரித்துவிட்டான் அஜய். இந்நிலைக்குத் தான்தானே காரணமென அத்தனை வலி பரவியது அவனுள்.
அடைத்த தொண்டையை தண்ணீர் குடித்து சரிசெய்தவன்,
“அருள்” என்றிருந்தான்.
வெண்ணிலா உறைந்தாள். கண்கள் மிரண்டு விரிந்தன.
நீருக்குள் அமிழ்ந்து, மூச்சு அடைப்பதை உணர்ந்தாள். உடல் வியர்வையில் நனைய, விரல்கள் நடுங்கின. அன்றைய அவளின் உயிர் போராட்டம் கண்முன்னே காட்சியாய். பிடி நழுவியது. அலைப்பேசி கீழே விழுந்தது.
அந்தப்பக்கம் அஜய் வதை கொண்டான்.
தங்கையின் நீண்ட மௌனம் அவனைக் கொன்றது.
வேகமாக மூச்சினை வெளியேற்றியவள் பட்டென்று அலைப்பேசியை எடுத்து அழைப்பைத் துண்டித்தாள்.
வெண்ணிலா வேண்டுமென்று அவனது அழைப்பை முறியடிக்கவில்லை. அவளால் முடியவில்லை. அவனது குரல் பழைய நினைவுகளை தட்டி எழுப்பிட அவளுள் படபடப்பு. உயிர் பிரிந்து செல்லும் காட்சி கண்முன்னே வலம் வந்திட, அன்றைய தாக்கத்தால் அச்சம் கொண்டு அழைப்பை முறித்திருந்தாள்.
அவனிடம் பேச வேண்டுமென்று நினைத்து இவளாக தொடர்புகொண்ட போது வராத மிரட்சி நெடு நாட்களுக்குப் பின்னர் அவனது குரல் கேட்ட நொடி வந்தது.
‘அந்நிகழ்வின் தாக்கம் தனக்குள் இப்போதும் இருக்கிறதா?’ விடையில்லா கேள்வி அவளிடம்.
கண்களை மூடி தன்னை நிதானித்தாள். மனதை சமன் செய்து திடப்படுத்தினாள்.
அஜய்யிடம் வெண்ணிலா ஒதுங்கிப்போவது பிடிக்காது, குமரன் இதைப்பற்றி அந்நிகழ்வைப்பற்றி நிறைய பேசியிருக்கிறான். அதன் தாக்கம் அவளை பாதித்துவிடக் கூடாதென்று. பின்னாளில் அவளின் அஜய் மீதான அச்சம், உறவின் சுமுகத்திற்கு தடையாக இருந்திடக் கூடாதென.
அஜய்யின் காரணம். அவனின் மனம். அதில் தன்மீதிருக்கும் கோபம். இப்படி அனைத்தையும் சொல்லி, அஜய்யை பற்றி நல்ல விதமாக எடுத்து சொல்லித்தான் வெண்ணிலாவை அந்த வயதில் அத்தனை பெரிய பாதிப்பான சம்பவத்திலிருந்து மீட்டிருந்தான். என்ன தான் அதிலிருந்து மீண்டுவிட்டதாக நினைத்திருந்தாலும் அவன் தன்னைவிட்டு தள்ளியிருக்கின்றான் என்கிற தைரியத்தில் தான் இத்தனை நாள் இருந்திருக்கிறோம் என்பது அஜய்யின் குரல் கேட்ட கணம் தெரிந்து கொண்டாள்.
அவளின் அச்சத்தின் பின்னே அன்றைய நாளில் தன்னை மீட்க குமரன் பேசியவை அனைத்தும் காதில் எதிரொலிக்க, ஆழ்ந்த மூச்சினை எடுத்து அஜய்’க்கு அழைப்பு விடுத்தாள்.
மனவலியில் சுருண்டிருந்தவன், மொபைல் ஒலித்ததும் வேகமாக எடுத்திருந்தான்.
அஜய், “நிலா” என்று சொன்னது தான் தாமதம். பேச நினைத்த யாவற்றையும் ஒரே மூச்சாக படபடவென சொல்லி முடித்திருந்தாள்.
“எனக்கு என் மாமா வேணும். நான் அவரை விரும்புறேன். மூச்சு முட்டும் அளவுக்கு காதலிக்கிறேன். காதலிக்கிறேங்கிற எனக்கு காதலிக்கப்படுறோமுங்கிற சந்தோஷம் கிடைக்கல. கிடைக்காது போலிருக்கு. காரணம் நீ. உன்னால் என் காதல் என் கை சேர முடியாத நிலையில் இருக்கு. மாமாவும் என்னை விரும்புறார். ஆனால் உன்னை நினைத்து பயப்படுறார். மாமா மீதிருந்த கோபத்தால் தான் நீ அன்னைக்கு என்னை அப்படி பண்ண. இப்போ திரும்பவும் பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம். நான் அவரை காதலிக்கிறேன்னு தெரிந்தால் நீ என்ன பண்ணுவியோன்னு நினைத்தே என்னை விலக்கி வைக்கிறார். நீ முன்ன மாதிரி இப்போ இல்லைதானே? நான் என் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டால் உனக்கு கோபம் வராது தானே?” நெஞ்சடைக்க ஆரம்பித்தவள் இறுதியில் சிறுபிள்ளையென தேம்பினாள்.
“மாமாக்கு என்னைவிட நீதான் முக்கியம் போல. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தால், எங்கே மொத்தமாகவே எங்களையெல்லாம் மறந்துடுவியோன்னு கவலைப்படுறார். நீ அப்படி பண்ண மாட்டல?” அவளின் வார்த்தைகளும் விசும்பல்களும் அவனை உலுக்கியது.
குமரனின் மீது வார்த்தையால் சொல்ல முடியாத ஒன்று மனம் முழுக்க பரவுவதை அவனால் உணர முடிந்தது.
தனக்காக யோசிக்கும் அவனின் மீது மதிப்பு கூடியது.
‘வெண்ணிலாவை தான் ஏதும் செய்துவிடுவேனென்று என்னை குறித்து குமரனுக்கு அச்சமெல்லாம் இல்லை. அவன்மீதுள்ள வெறுப்பில் நான் குடும்பத்தைவிட்டு விலகிவிடுவேன் என்பதே அவன் வெண்ணிலாவின் காதலை ஒதுக்க காரணம். அதனை கூறினால் அவள் ஏற்கமாட்டாளென்று இப்படி கூறியிருக்கிறான்.’ தங்கையின் பேச்சிலிருந்து குமரனின் எண்ணத்தை சரியாக யூகித்தான் அஜய்.
“எனக்கு மாமான்னா ரொம்ப பிடிக்கும் அருளண்ணா. அவரை என்னோடு சேர்த்து வச்சிடேன் பிளீஸ்.”
உணர்வின் பிடியில் இருந்தவளின் வாயிலிருந்து அண்ணா என்கிற விளிப்பு அனிச்சையாய் வந்திருக்க, அதனை அவள் அறியவில்லை.
சிறு வயதில் என்றோ கேட்டது. இன்று அந்த ஒற்றை வார்த்தை, அவனின் நெஞ்சம் முழுக்க இதம் பரப்பியது. அவன் ஏங்கிய வார்த்தை. அந்த ஒற்றை விளிப்பிற்காக என்னவும் செய்திடலாமென்று தோன்றியது.
அதற்கு அவன் தங்கையுடன் இயல்பாக இருக்க வேண்டும். அந்நொடி அவனுக்கு அவளின் மன்னிப்பு அவசியமென்று புரிந்தது.
“என்னை மன்னிச்சிட்டியாடா நிலா?” எனக் கேட்டிருந்தான்.