அவனால் தன் காதலுக்கு இருக்கும் தடையை அகற்றிட நினைத்தே பேசினாள். தவறியும் பழையதைப்பற்றி பேசிடக்கூடாதென இருந்தவளுக்கு அவனது கேள்வியால் அதிர்வு.
“நீ என்னிடத்தில் இருந்தால் மன்னிச்சிருப்பியா?”
“மன்னிக்க முடியாது தான். ஆனால் அதைத்தவிர வேறெதுவும் கேட்டிட முடியாதே. என்னை மன்னிச்சிடுடா. உன் அண்ணனை மன்னிச்சிடு. என்னால் முடியல. இந்த குற்றவுணர்வு என்னை படுத்துது. வாழ்க்கை முழுக்க துரத்தி வருமோன்னு பயமா இருக்கு.” குமுறி மருகி நின்றான்.
வெண்ணிலாவிடம் அமைதி. அமைதி மட்டுமே!
அவளால் அஜய்’யை ஏற்க முடியாமலில்லை. அவனிடம் தன்னைப்போல் தோன்றும் பய உணர்வை அவளால் துறக்க முடியவில்லை.
ஒருவேளை அவள் விலக விலக இவன் நெருங்கி சென்றிருந்தால் எல்லாம் சரியாகியிருக்குமோ?
மனதில் கொட்டும் மத்தளத்தை அடக்கி…
“நீ வறியா? எனக்கு உன்னை பார்க்கணும் போலிருக்கு” என்றாள். அவனின் கண்கள் அவள் கேட்டதில் பனித்துவிட்டன.
“நிலா…”
“நீ கூடவே இருந்தால் என் பயம் போயிருக்கும் தோணுது. நான் பேசலன்னா நீயும் அப்படியே விட்டுடுவியா? தங்கச்சி மேல் பாசமே இல்லையா?” வெண்ணிலாவின் குரல் தழுதழுப்பாக.
வெண்ணிலாவிற்கு அருளென்றால் அத்தனை பிடித்தம். தன்னுடன் படிக்கும் மாணவிகள் எல்லாம், அவர்களது அண்ணனின் கைபிடித்து பள்ளிக்கு வருவதைப் பார்த்து ஏங்கியிருக்கிறாள். ஏனோ அவனின் ஒதுக்கமும், விலகளும் இவளை அவனிடம் நெருங்கவிடவில்லை.
அதன் பின்னர் நடந்தது, அவளை அவனுடன் இணைக்கவே விடவில்லை.
இப்போது பேச நினைத்து பேசி, அவள் கேட்ட விடயமே வேறு. ஆனால் இருவருக்குள்ளும் ரத்த பந்தம் உள்ளதே. அது தந்த உந்துதலில் இருவரும் மனம் திறந்திருந்தனர்.
“சாரிடா நிலா. அண்ணன் மேல் கோபமெல்லாம் இல்லையே?” மீண்டும் கேட்டிருந்தான்.
அவள் வாய் திறந்து சொல்லிவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமென்று நினைத்தான்.
“தெரியல.”
தங்கை தன்னிடம் பேசிவிட்டாள். உரிமையாக அவளின் பிரச்சினையை சொல்லி தன்னை நெருங்கிவிட்டாள் என்று மகிழ்ந்திருந்தவன் சடுதியில் சுணங்கினான்.
“மொத்தமா மறந்துட்டேன். மாமா தான் மறக்க வச்சாங்க. அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நான் எதாவது உன்னைப்பற்றி சொன்னாலும், உன்னை விட்டுக்கொடுக்காது பேசி பேசியே என்னை அந்த நிகழ்வை மறக்கும்படி செய்திட்டார். ஆனால் கொஞ்சமே கொஞ்சம் பயம் மட்டும் இருக்கு. அதுவும் சீக்கிரம் போயிடும் ” என்றவள், “அதை உன் பாசத்தைக்காட்டி நீதான் போக்கணும்” என்றாள்.
அதில் அவனின் முகம் பிரகாசமாகியது.
அதன் பின்னர் எதைப்பற்றி பேச ஆரம்பித்தார்களோ அதை முற்றிலும் மறந்து ஒன்பது வருட கதையை விடிய விடிய பேசி தீர்த்தனர்.
இருவருமே ஒருவரின் அருகாமைக்கு எத்தனை ஏங்கியிருக்கின்றனர் என்று ஒருவருவருடைய பேச்சிலிருந்து மற்றவர் தெரிந்து கொண்டனர்.
அஜய் செய்தது பாததூரமான விடயம் தான். அதனையே நினைத்து விலகியிருப்பதால் வருத்தம் மட்டுமே. தாமதமாக புரிந்துகொண்ட வெண்ணிலாவுக்கு அஜய்யின் நேரடி மன்னிப்பு அவனை ஏற்கத்தான் வைத்தது.
நிறைய பேசினார்கள். பகிர்ந்து கொண்டார்கள். மறைத்து வைத்திருந்த அன்பையெல்லாம் வார்த்தையால் பரிமாற்றம் செய்துகொண்டனர்.
அவன் தனிமையில் அனுபவித்த வேதனை, அவனது படிப்பு, வேலை, இப்போதிருக்கும் நிலையென அனைத்தையும் தங்கையிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு அவளது அண்ணனின் மறுபக்கம் பெரும் வியப்பாக இருந்தது. அவனது வேலையில் அத்தனை உயரத்தில் இருந்தான் அவன்.
“சாரிடா… நீ பேசவே மாட்டியான்னு நிறைய நாள் தவிச்சிருக்கேன். அதான் ரொம்ப பேசிட்டேன்” என்றான்.
வெண்ணிலாவுக்கு அஜய்’யின் அவ்வார்த்தைகள் வலி கொடுத்தன.
‘தெரிந்து செய்திருந்தாலும் அவனின் தவற்றை அப்போதே குமரனைப்போல் மன்னித்து மறந்திருக்க வேண்டுமோ? தன்னுடைய பயத்தை காரணமாக வைத்து அவனை வதைத்து விட்டோமே. இத்தனை உறவுகள் இருந்தும், அவன் தனித்து நிற்க தான் காரணமாகிவிட்டோமே’ என்று வருந்தினாள்.
“அதான் எல்லாம் சரியாகிடுச்சே. இப்போ உன்கிட்ட பேசியதில் உன் மேலிருந்த பயம் கூட போயிட்ட மாதிரியிருக்கு” என்று கூறி அஜய்’யை மகிழ்வித்தாள்.
“சரி எப்போ வர? மாமா வந்தாருல்ல, சொன்னாரா?”
“வேலையை அப்படியே விட்டுட்டு வர முடியாதுடா. முக்கியமான வேலைகளை முடித்து லீவ் போட்டுட்டு வரணும். வரேன்” என்றான்.
மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டே வைத்தனர்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜய்யின் தவிப்புகளெல்லாம் அடங்கி இதயம் லேசானது போலிருந்தது.
அப்போதே குமரனுக்கு அழைத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து ஆர்ப்பரித்து விட்டான். கவனமாக வெண்ணிலா கூறிய அவர்கள் காதல் விடயத்தை மட்டும் தவிர்த்து மற்றவற்றைக் கூறி, அவளின் மாற்றத்திற்கு நீதான் காரணமென்று சலசலத்துவிட்டான்.
அஜய்யை இப்படி காணத்தானே குமரனும் ஆசைப்பட்டான்.
அஜய் சொல்லாதபோதும் வெண்ணிலா தானாக அஜய்யிடம் பேச காரணம் தங்களது காதலுக்காக என்று புரிந்து கொண்டான் குமரன்.
‘அஜய்யை காரணம் காட்டினால் தான், அவனிடம் சண்டையிடவாவது பேச நினைப்பாள்’ என எண்ணித்தானே இல்லாத பயத்தை காரணம் காட்டினான்.
இப்போது அவன் நினைத்தது நடந்ததில் சந்தோஷம்.
“எனக்கு இப்போ தான் குமரா மனசுல ஒரு நிம்மதி.”
“ஹ்ம்ம்… சீக்கிரம் இங்கு வாடா. அத்தை ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்றான் குமரன்.
“வரேன்… வந்துதான் ஆகணும்.” அஜய் ஒன்றை மனதில் வைத்துக் கூறினான்.
*******
பழனிச்சாமி மனதில் குன்றலோடு தூரத்தில் தெரியும் மலையின் முகட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தார்.
மதி தேர்விற்கு முன்பு படிப்பதற்காக அளிக்கும் விடுமுறை முடிந்து விடுதிக்கு கிளம்பிச்சென்று ஒரு வாரம் மேலாகிறது.
காவல் நிலையம் சென்று வந்தது முதல் அவரிடம் மாற்றம் தெரிகிறது. அதனை நம்பி குமரனை பற்றி பேசலாம் என்று நினைத்து பழனியின் அருகில் சென்றாலே தானாக நடுக்கம் வந்து ஒட்டிக்கொள்ள சொல்ல முடியாது திரும்பி விடுவார்.
இன்னும் நான்கு நாட்களில் சதாபிஷேகம். அப்போது தெரிந்தால் பழனி என்ன கூறுவாரோ என்று பயந்து, அதற்கு அவரை தயார்படுத்தவே முன்னதாக பேசிவிட வேண்டுமென குணவதி எடுத்த முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராய் ஆனது.
இன்று என்ன நடந்தாலும் பேசிவிட வேண்டுமென்று கணவருக்கு அருகில் கீழே அமர்ந்தார்.
குமரனின் மீதான அவரின் கோபம் குணவதி அறிந்தது தானே! எங்கே தன்னை அடித்து விடுவாரோ என்கிற எச்சரிக்கை அவரிடம்.
மனைவியை அழுத்தமாக சில கணங்கள் ஏறிட்டார்.
“எனக்கு சம்மதம்.” எழுந்து வெளியில் சென்றுவிட்டார்.
பழனி சொல்லிச் செல்வதை நம்ப முடியாது பார்த்திருந்தார் குணவதி. அவருக்கு அவரின் இந்த உடனடி சம்மதம் பெருத்த ஆச்சர்யத்தை கொடுத்தது.
அவர் என்னென்னவோ நினைத்து, பழனி என்ன பேசினாலும் அதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டுமென நிறைய யோசித்து வைத்திருந்தார். அதற்கு வேலையே இல்லை என்றானது.
‘என்னடா இது அதிசயம். ஒருவேளை திருந்திட்டாரோ!’ குணவதி நெஞ்சை நீவிக்கொண்டார்.
‘இப்படியெல்லாம் பொசுக்குன்னு அதிர்ச்சியைக் கொடுக்காதீங்க என் மனசு தாங்காது.’ வாயை திறந்து வைத்துக்கொண்டு மனதில் முணு முணுத்துக் கொண்டிருந்தார்.
உண்மையிலேயே பழனி மனம் மாறியிருந்தார். தன்னுடைய ஒற்றை செயலால் அதனை சாத்தியமாக்கியிருந்தான் குமரன்.
குமரன் நினைத்திருந்தால் பழனி செய்த துரோகத்தை மனதில் வைத்து உதவாமல் இருந்திருக்கலாம். நிச்சயம் பணமும், சரக்கும் இல்லாத நிலையில் பழனி வெளியில் வந்திருக்கவே முடியாது. தண்டனை ஏற்றே ஆக வேண்டிய நிலையில் தான் அவர் இருந்தார்.
கண்ணபிரான் காவல் நிலையம் வந்து பேசியபோதும் குமரன் தான் அனுப்பி வைத்திருப்பான் என்று அவர் நினைக்கவில்லை.
கண்ணன் உரிய வியாபாரிக்கு பணம் கொடுத்துதான் தன்மீதான வழக்கை திரும்ப பெற்றார் என்று நினைத்திருக்க… எம்பிரான் மூலம் விடயமறிந்து பழனி கூனிக் குறுகிப்போனார். மனதில் எழுந்த குன்றாலோடு தனக்குள் ஒடுங்கிப்போனார்.
அன்றைய ஏமாற்றத்தோடு விட்டாரா அவர், குமரன் ஆலைத் தொடங்க முயற்சித்த போது வங்கிக்கடனில் உதவ கூடாதென்று எம்பிரானிடம் அவ்வளவு சண்டை போட்டார். உரிமம் பெற எத்தனை தடைகளை உருவாக்கியிருப்பார். எல்லாவற்றையும் முறியடித்து முன்னேறியிருக்கிறான்.
குமரனுக்கு தான் செய்த துரோகத்தை எண்ணி எண்ணி இப்போது வருந்திக் கொண்டிருக்கிறார்.
‘இன்றைய வலி தானே அன்று அவனின் உழைப்பை ஏமாற்றிய போது அவன் அனுபவித்திருப்பான்’ என்ற எண்ணம் மேலும் வலியைக் கூட்டியது.
எத்தனையோ பேச்சுக்கள் கொடுக்காத மாற்றம், குமரனின் உதவி அவரிடம் கொண்டுவந்திருந்தது.
நடந்த செயல் எவ்வளவு பெரிய அவமானத்தை அவருக்கு கொடுக்கவிருந்தது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் தொழில் தொடர்பாளர்களுக்குத் தெரியாது போனது. இதே வியாபாரிகள் சங்கத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாக அந்த வியாபாரி பழனியின் மீது குற்றம் சுமத்தியிருந்தால் மதிப்பாய் தலை நிமிர்ந்து நடந்த இடத்தில் அவருக்கு எத்தனை தலைகுனிவு ஏற்பட்டிருக்கும்.
அதனை நினைத்து நினைத்து மாய்ந்து போனார்.
அவமானத்திற்கு அத்தனை சக்தி உண்டு. எளிதில் எவரது நிலையையும் தலைகீழாக மாற்றிவிடும்.
அவமானம் என்கிற எண்ணமே பழனியிடம் மாற்றம் உருவாக காரணம். அதனை குமரனின் செயல் முழுமைப்படுத்தியது.
குமரனிடம் மன்னிப்பு வேண்டிட மனதால் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறார். இரண்டு நாட்கள் அவனை காண்பதற்காக ஆலை வரை சென்றுவிட்டு அவன் முகம் பார்க்க முடியாது திரும்பிவிட்டார்.
எப்படியாவது குமரனிடம் மன்னிப்பு கேட்டால் தான் மனம் ஆறும் என்று அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில் தான் குணவதி குடும்பத்தாரின் விருப்பமென குமரன் மதி திருமணம் பற்றி பேசினார்.
முன்பிருந்த பழனியாக இருந்திருந்தால் குணவதி சொல்லியதும் அவரின் பதில் பேச்சே வேறாக இருந்திருக்கும்.
இப்போதிருக்கும் பழனி, தொழிலில் சரிந்து, எழ முடியாது நலிந்து, ஒருவரின் உதவி தவறை உணரவும் வைக்கமென்று அறிந்து, மேலிருந்து கீழ்… கீழிருந்து மேலென வாழ்வு சடுதியில் மாற்றம் பெரும் என்ற வாழ்வின் தார்பரியம் புரிந்து, அனைவரையும் அரவணைத்து போவதுதான் குடும்பம், உறவென்று உணர்ந்து மனிதனாக மாறியிருப்பவராயிற்றே!
தன்னுடைய மாற்றம் மற்ற உறவுகளுக்கும் தெரியப்படுத்தவே, எவ்வித எதிர் பேச்சுமின்றி தன்னுடைய சம்மத்தைக் கூறியிருந்தார்.
உண்மையில் குமரனை போன்றொரு பையனை மதிக்கு அவராகத் தேடினாலும் கிடைக்காது.
குமரனின் உழைப்பு ஒன்று போதுமே அவனது திறமையையும், பண்பையும், குணத்தையும் அதுவே காட்டிக்கொடுத்திடும்.
மதியை மணந்தால் நிச்சயம் தன்னைவிடவே தன் மகளை அவன் பார்த்துக்கொள்வான் என்கிற எண்ணம் அவருக்கும் இருக்கவே செய்தது.
மகளை குமரனுக்கு கொடுக்கும் நிலையில், தன் தவற்றிற்கு மன்னிப்பு கேட்டிடாது காலம் தாழ்த்துவது இனியும் சரியாக இருக்காது என்பதால் நடந்தவகைளை அசைபோட்டவாறு குமரனைக் காண சென்று கொண்டிருந்தார்.
வழியிலேயே கண்ணபிரான் மூலம் குமரன் வீட்டிலிருக்கிறான் என்பதை தெரிந்துகொண்டவர் இரண்டு வருடங்களுக்குப் பின்பு வீரபாண்டி எஸ்டேட்டில் கால் வைத்தார்.
அன்று வழக்கமான வேலையை தவிர்த்து வேறெதுவுமில்லையென வீட்டிற்கு பின்னால் சரிவிலிருக்கும் ஏலக்காய் தோட்டத்தில் தான் காய்ப்புகளை கணக்கிட்டு கொண்டிருந்தான்.
பழனியின் வண்டியை கண்டதுமே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த வீரபாண்டிக்கு… ‘இப்போ எந்த பூதத்தை கிளப்பி கூட்டிட்டு வரான்னு தெரியலையே’ என்று மனதில் நினைத்தபடி நடையை நிறுத்தியிருந்தார்.
வண்டி சத்தம் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து சன்னல் வழி யாரென பார்த்த கமலம், வேகமாக குணவதிக்கு அழைத்து… “உன் புருஷன் என்னடி இங்கு வந்திருக்கிறாரு… என்ன எழவை கூட்டபோறாரு?” என்று வினவினார்.
“இந்த மனுஷன் அங்க போறேன்னு ஒரு வார்த்தை சொல்லலையேம்மா. குமரனுக்கு மதியை கேட்குறாங்கன்னு சொன்னேன். என்னைக்குமில்லாத அதிசயமா, ஒத்த பேச்சு வேறயா பேசமா சரின்னு வெளிய போயிட்டார். அங்க வருவாருன்னு நினைக்கலையே” என்று படபடத்தார்.
“சரி சரி… நீ கண்டதையும் யோசிக்காமல் அமைதியா இரு. என்ன நடக்குதுன்னு பார்ப்போம். நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்று கமலம் வைத்துவிட்டு வெளி வாயிலுக்கு ஓடினார்.
“என்ன மாமா வாங்கன்னு கூப்பிடமாட்டிங்கலா?”
வீரபாண்டி அப்படியே நின்றிருக்க… வண்டியிலிருந்து இறங்கிய பழனி கேட்டிருந்தார். வழக்கத்திற்கு மாறாக சிரித்த முகமாக இருந்தார்.
ஏதோ பார்க்கக் கிடைக்காத அதிசயம் போல் அவரின் சிரித்த முகத்தை பார்த்து உறைந்து இருந்தார் வீரபாண்டி.
இருக்கையில் அமர்ந்ததும் கமலம் பலகாரம் எடுத்துவர அடுக்களைக்குள் சென்றிட… எதுவாக இருந்தாலும் பழனியே ஆரம்பிக்கட்டுமேன வீரபாண்டி மௌனமாக இருந்தார்.
கமலம் கொடுத்ததை மறுக்காது உண்டவர்,
“பெரியவங்க ரெண்டு பேரும் என்னை மன்னிக்கனும்” என்று பட்டென்று சொல்லியிருந்தார்.
கமலமும் வீரபாண்டியும் குழம்பிய நிலையில் அவரை ஏறிட்டனர்.
“எதுக்குன்னு கேட்காதீங்க. நினைவு வச்சிகிறதுக்கு மேல தானே நான் செஞ்சிருக்கேன். பொதுவா எல்லாத்துக்குன்னே வச்சிக்கோங்க” என்றவர், “குமரன் இல்லையா?” என்று கேட்க… பெரியவர்களுக்கு பயம் சூழ்ந்தது.
‘குமரன் என்றாலே இவனுக்கு ஆவாது. இப்போ என்ன பிரச்சனை பண்ண அவனை கேட்குறான் தெரியலையே!’ வீரபாண்டியின் மனப்போக்கு.
“நான் இங்கிருக்கேன்.” பழனி கேட்டதற்கு, கேள்விக்குரியவனே பதில் சொல்லியபடி அங்கு வந்தான்.
கண்ணபிரான் தான் பழனி குமரன் இருப்பை பற்றி கேட்ட தகவலை குமரனிடம் சொல்லியிருந்தார்.
அதனாலே அவர் வீட்டிற்கு வருவாரென்று செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்திருந்தான் குமரன்.
விலகியிருந்தாலும் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரின் நிலையையும் கண்காணித்துக்கொண்டு தான் இருப்பான். அதன்படி பழனியின் அமைதியும், மாற்றமும் குமரன் அறிந்ததே! இப்போது அவர் எதற்கு வந்திருக்கிறார் என்பதைக்கூட சரியாக யூகித்திருந்தான்.
மனம் திருந்தி மன்னிப்பு வேண்டி வருபவரை ஏற்றுக்கொள்வது தான் அவருக்கான தண்டனை என்பது குமரனின் எண்ணம். அதனால் அவர் செய்த எல்லாவற்றையும் மறந்துவிட்டு இயல்பாக அவரிடம் பேசினான்.
“வாங்க மாமா! எப்போ வந்தீங்க?”
கமலமும் வீரபாண்டியும் இப்போது ஆச்சரியமாக பார்ப்பது தங்களின் பேரனை.
ஒரு மாதத்திற்கு முன்புகூட பழனியிடம் அத்தனை கோபமாக பேசியவன் இவனா என எண்ணும் வகையில் இருந்தது குமரனின் கனிவும், வரவேற்பும்.
எதுவுமே நடவாததைப் போன்ற அவனின் பேச்சில் தன்னை குறித்து வெட்கினார் பழனி.
“குமரா…” என்றவர் தன்னுடைய இரு கரங்களையும் குவிக்க உயர்த்திட, வேகமாக பற்றி தடுத்தான்.
“நடந்தது எதையும் இல்லைன்னு மாற்ற முடியாது மாமா… ஆனால், மறக்க முடியும். என்ன நடந்தாலும் அதனை ஏற்று மறப்பது தான் உறவுகளுக்கிடையே கசப்பு வராமல் பார்த்துக்கொள்ளும்” என்றவனை அணைத்துக் கொண்டார்.
மன்னிப்பு கேட்க வேண்டுமென வந்திருந்தாலும், எப்படி கேட்பது… கேட்டால் ஏற்றுக்கொள்வானா? இல்லை ஏளனம் செய்திடுவானோ? என்ற அச்சத்தோடு தான் வந்தார்.
பெரியவர்களிடம் எளிதாகக் கூற முடிந்த வார்த்தையை, அவருக்கு பல வயது சிறியவனான குமரனிடம் சொல்லியிருக்க முடியாது என்பது திண்ணமே!
அதற்கெல்லாம் அவசியமில்லை எனும் விதமாக அவரிடம் அப்பேச்சினையே தவிர்த்தவனாக நடந்துகொண்ட குமரனை அந்நொடி அவருக்கு அத்தனை பிடித்தது.
“உன்னை புரிஞ்சிக்காமல் என்னென்னவோ செய்திட்டேன்” என்ற பழனியின் தோளில் உள்ளங்கையால் தட்டிக்கொடுத்தார் வீரபாண்டியன்.
“நடந்ததையே நினைத்து பேசிக்கொண்டிருந்தால் வலியும் வேதனையும் தான் மிஞ்சும். இனி அடுத்து என்னன்னு இருப்போம்” என்ற கமலம் சூழலை இயல்பாக்கினார்.
மூவரும் சேர்ந்து பழனியை தங்களோடு இயல்பாக்கினர் என்பதே சரியாகும்.
சதாபிஷேகம் விழா பற்றி பழனியே குமரனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
அன்று மாலையே அனைவரும் வீரபாண்டி எஸ்டேட்டிற்கு வருவதாகவும், ராஜேந்திரன் மட்டும் இரண்டு நாட்கள் கழித்து வருவார். மதி இன்னைக்கு காலேஜ் முடிச்சிட்டு கிளம்பிடுவாள் என்று அவரின் மகளின் வரவைப்பற்றியும், எம்பிரான் கூட குடும்பத்தோடு சேர்ந்து இருப்பதற்காக நான்கு நாட்களுக்கு விடுப்பு எடுத்திருக்கிறார் என்பதையும் குமரனின் மூலம் அறிந்தவர், தானும் இன்றே வந்துவிடுகிறேன் என்று அவர்களால் நம்ப முடியாததை சொன்னார்.
சொன்னபடி வீட்டிற்கு சென்றவர் குணவதியையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
மதியத்திற்கு மேல் சேலம் வந்த குணா, செல்வி, தீக்ஷி மூவரையும், “காந்தள் பள்ளியில் இருப்பாங்க, வீடு பூட்டியிருக்கும். அக்காவும் அங்குதானே வரப்போகுது. பார்த்துக்கலாம்” என்று காந்தளின் வீட்டிற்கு செல்லாது கண்ணபிரான் மலைக்கு அழைத்து வந்துவிட்டார்.
காந்தள் நாளை வெண்ணிலா கல்லூரி சென்றபின் வந்துவிடுவதாகக் கூறியிருந்தார்.
எம்பிரானும் இரவுக்கு முன் பிள்ளைகளோடு வந்து சேர்ந்திட்டார்.
“நான் எஸ்டேட் போறேன் வெண்ணிலா. நைட் பத்திரமா இருந்துக்கோ! இல்லைன்னா குமரனை அனுப்புறேன் எக்ஸாம் எழுதிட்டு அங்கு வந்துடேன். நாளைக்கு அவனே காலேஜ் கொண்டுவந்து விடுவான்” என்றார்.
வெண்ணிலா மறுத்துவிட்டாள்.
“பசங்க எல்லாரும் இருப்பாங்கம்மா. அதுவும் குணா கூடயிருந்தால் படிக்கவே தோணாது. நாளைக்கு எக்ஸாம் முடிச்சிட்டு எப்போ வரேன்னு கால் பண்றேன்” என்று வெண்ணிலா கூற காந்தளுக்கும் அவள் சொல்வதே சரியெனப்பட்டது.
வெண்ணிலா கல்லூரி செல்ல, காந்தள் மலைக்குச் சென்றார்.
ராஜேந்திரனைத் தவிர்த்து வீரபாண்டி கமலத்தின் மக்கள் அனைவரும் ஒரேயிடத்தில்.
பல வருடங்களுக்குப் பின்னர் அவ்வீடு உறவுகளால் நிறைந்து பூவனமாய் காட்சியளித்தது. சுவற்றின் ஒவ்வொரு செங்கலிலும் அன்பின் மணம் கமழ்ந்தது.
ராஜேந்திரனின் வருகைக்கு பின்னரும் உறவுகளின் வாசம் நீடிக்குமா?