காலை நேர பரபரப்புடன் அவ்வீடு காட்சியளித்தது. ஒற்றை தளம் கொண்ட அடக்கமான அளவான வீடு. வீட்டைச்சுற்றி சிறு தோட்டம். நான்கடி உயரத்தில் மதில் சுவர். நான்கு மூலையிலும் நிழல் தரும் அடர்ந்த மரங்கள்.
அடுப்பில் ஒரு பக்கம் இட்லி வெந்து கொண்டிருக்க… மற்றொரு பக்கம் மதிய உணவுக்காக புலாவ் தயாராகிக் கொண்டிருந்தது. காந்தள் வதக்கி ஆற வைத்த வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் வரமிளகாய் கலவையை அரைத்து எடுத்து தாளித்து முடிக்க… குக்கர் சத்தமிட்டது.
சமையலறையிலிருந்து வரவேற்பறையில் மாட்டியிருந்த சுவர் கோழியை எட்டி பார்த்தவர், செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு வேகவேகமாக மாடியேறி மேல்தளம் சென்றார்.
மாடியின் ஒரு பக்கம் ஆக்கிரமித்திருந்தது ஒற்றை படுக்கையறை. மற்ற பக்கம் காலியான மொட்டை மாடி. அதன் மூலையில் இரண்டடி செயற்கையான மணற்பரப்பு. அதில் பல வண்ணங்களில் காசித்தும்பை (பால்ஸம்) மலர் செடிகள். அருகில் சிறு மேடை.
அம்மேடையில் கால்களைக் கட்டிக்கொண்டு, காலைநேர சூரியனின் மிதமான ஒளிக்கற்றைகள் முகத்தில் மோத, காசித்தும்பை மலர்களின் வண்ணங்களை கண்களுக்கு குளிர்ச்சியாய் ரசித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.
“நினைச்சேன். இதைத்தான் பண்ணிட்டிருப்பன்னு, டைம் ஆச்சு வெண்ணிலா. காலேஜூக்கு கிளம்பு” என்று அவளின் முகத்திற்கு நேரே வந்து நின்று விரட்டினார் காந்தள்.
“ம்மா…” என்று சிணுங்கியவள் எழுந்து அன்னையை தோளோடு கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினாள்.
“இப்போ இதற்கெல்லாம் நேரமில்லை. போ… போ… கிளம்பு” என்றவர் மகளை குளியலறைக்குள் தள்ளிவிட்ட பின்னரே கீழிறங்கிச் சென்றார்.
குளித்து முடித்து வெண்மை நிற சல்வாரில் இடைவரை நீண்ட கார்குழலை பின்னலிட்டு, நெற்றியில் புள்ளி அளவிலான கருமை நிற பொட்டை ஒட்டி கல்லூரி செல்ல கிளம்பியவள் அந்த வானிலவையும் தோற்கடித்தாள்.
தன்னுடைய அலைப்பேசியை எடுத்து பைக்குள் வைப்பதற்கு முன்பு, அதன் திரை விலக்கி புலனம் சென்று… தான் அனுப்பிய தகவல் பார்க்கப்பட்டு விட்டதா என்று ஆராய்ந்தாள். தினமும் குறிப்பிட்ட எண்ணுக்கு எழுந்ததும் காலை வணக்கம் சொல்லிய பின்னரே அவளின் நாள் தொடங்கும். இது அவள் அலைபேசி வாங்கி பயன்படுத்த தொடங்கிய நாட்கள் முதல் பழக்கமாகிப்போன ஒன்று. மாற்றிக்கொள்ள அவள் என்றுமே நினைத்தது இல்லை. பார்க்கப்பட்டுவிட்டது என்பதற்கு சாட்சியாக நீல நிறக் குறி காட்சியளித்தது. ஆனால் வழக்கம்போல் பதில் இல்லை.
‘இதற்காகவெல்லாம் இந்த வெண்ணிலா பின்வாங்கிடமாட்டாள்’ என்று சொல்லிகொண்டவள் ஒரு பெருமூச்சோடு கீழிறங்கி வந்தாள்.
காந்தள் மகன் அஜய்’யிடம் ஒருமுறை இங்கு வந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இது வாரத்தில் இரண்டு நாட்கள் அவன் அழைக்கும் சமயங்களில் நடக்கும் உரையாடல் தான். ஒருமுறையேனும் அன்னையின் அன்பிற்கோ கெஞ்சலுக்கோ அவன் இறங்கி வந்தது இல்லை. வழக்கம்போல் அவரின் மகன் என்ற நினைப்பிற்காக அழைத்தவன், அவர் பேசுவதை காதில் வாங்காது இணைப்பைத் துண்டித்திருந்தான்.
காந்தளிடம் ஏக்கமான பெருமூச்சு.
அன்னையிடம் வெண்ணிலா எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. வழமையாக நடப்பதுதானே! இதில் புதிதாகக் கேட்டறிய என்ன உள்ளது?
வெண்ணிலா சாப்பிட அமர… காந்தளும் பள்ளி செல்லத் தயாராகி வந்தார். இருவரும் உண்டு முடிக்க… காந்தள் மகளுக்கான மதிய உணவினை கையில் திணித்தார்.
“அப்படியே போகும்போது என்னை ஸ்கூலில் டிராப் பண்ணிடு வெண்ணிலா. என் ஸ்கூட்டி சர்வீஸுக்கு விட்டிருக்கேன். ஈவ்னிங் வரும்போது நான் என் வண்டியில் வந்துவிடுகிறேன்” என்றதோடு மாலை தான் வர தாமதமாகுமென்றும் கூறினார்.
“ஒகேம்மா” என்றவள் தோளில் கல்லூரி பையை மாட்டிக்கொண்டே “மாமா கால் பண்ணாங்களாம்மா?” எனக் கேட்டாள். அவளது குரலில் என்னயிருந்தது என்பது அவள் மட்டுமே அறிந்தது.
“அதெல்லாம் ஒரு நாளுக்கு நாலு தரம் பண்றான். வீட்டுக்குத்தான் வரமாட்டேங்கிறான்” என்று வருத்தமாகக் கூறியவர், “நீயெதும் வம்பு பண்ணியா அவனிடம்” என மகளை அறிந்தவராகக் கேட்டார்.
இல்லையென வேகமாக இடவலமாக தலையை ஆட்டியவள் விரைந்து வெளியில் சென்றாள்.
அவள் சென்ற வேகமே அவருக்கு அவள் தான் ஏதோ செய்திருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்லியது.
வீட்டை பூட்டி கேட்டினையும் அவர் சாற்றி வர வெண்ணிலா வண்டியை முடுக்கியபடி தயாராக இருந்தாள்.
மகளின் பின்னால் ஏறி அமர்ந்த காந்தள்…
“புள்ளையை என்ன சொல்லிடி பயம்காட்டின?” என்று வினவினார்.
அதிலே அன்னை தன்னை கண்டுகொண்டாரென்று உணர்ந்த வெண்ணிலா… “உன் புள்ளைகிட்டவே கேட்டுக்கோம்மா” என்றதோடு “அப்படியே என்னை பார்த்து அவங்க பயந்துட்டாலும்” என்று நொடித்தவளுக்கு மீசையை முறுக்கியபடி நடந்து வரும் அவளது மாமன் கதிரின் முகம் கண்முன் தோன்றி இம்சை செய்தது.
‘தொல்லை செய்ய நேரங்காலமே கிடையாது. இப்போ போங்க, வண்டி ஓட்ட டிஸ்டர்ப் ஆகுது’ என்று தன்னவனிடம் மானசீகமாக உரையாடியவள் சாலையில் கவனமானாள்.
காந்தளை அவர் வேலை செய்யும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இறக்கிவிட்டாள்.
“டேக் கேர் வெண்ணிலா” என்றவர் மகளின் உருவம் மறையும் வரை நின்று பார்த்துவிட்டே உள் சென்றார்.
தான் மருத்துவம் பயிலும் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்து வண்டியை அதற்குரிய தருப்பிடத்தில் நிறுத்தியவள் அவ்விடத்தை பார்வையால் அலசினாள்.
“வெண்ணிலா” என்று குரல் வந்த திசையில் திரும்பியவள், தன்னை அழைத்த தன்னுடைய தோழி ஹேமாவுடன் வகுப்பறை நோக்கி நடந்தாள்.
“என்னடி இன்னைக்காவது பதில் வந்துச்சா?” ஹேமா ஆர்வம் பொங்கிட வினவினாள்.
உதட்டை பிதுக்கி இல்லையென்ற வெண்ணிலா தினமும் தனக்கு வேண்டிய பதில் கிடைக்குமென்று எதிர்பார்த்து ஏமாறும் ஏமாற்றத்தை முகத்தில் காட்டாது சடுதியில் விரட்டினாள்.
“உன் கதையும் கஜினி முகமது கதையாகிடும் போலவே” என்று சொல்லிய ஹேமாவிடம் நிச்சயம் கேலியில்லை.
“விடு ஹேமா பார்த்துக்கலாம். எங்கு போயிடப்போவுது. சீக்கிரமே பட்டா போட்டுடலாம்” என்றவளுக்கு அசட்டு நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. அந்த நம்பிக்கை பொய்க்கும் போது மொத்தமாக உடைந்து போகப்போகிறாள்.
அதன் பின்னர் அவளின் கவனம் படிப்பில் பதிய வேறு எண்ணங்களுக்கு நேரமின்றி போனது.
****
அது கதிர் குமரன் தொடங்கிய மிளகு மற்றும் ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை. ஏற்காட்டின் மலைச்சரிவில் உள்ளது. அதைச்சுற்றியே மிளகு மற்றும் ஏலக்காய் தோட்டங்களை பல ஹெக்டேர் அளவுகளில் பயிரிட்டிருந்தான்.
இப்போது அங்குதான் அனைத்தையும் கண்காணித்தபடி வலம் வந்து கொண்டிருந்தான். மிளகின் கார நெடி ஒரு பக்கம் வலம் வர, வாசனைகளின் ராணி என அழைக்கப்படும் ஏலக்காயின் மணம் மற்றொரு பக்கத்தை நிறைத்தது.
தொழிற்சாலையின் பின்புறம் மிளகு கொடிகளுக்கான நாற்றாங்காலும் அமைத்திருந்தான். தாய்க்கொடிகளிலிருந்து மிளகு விதை கொடிகள் வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றை சிறு பாலித்தீன் பைகளில் மண்ணை நிரப்பி நடவு செய்யும் பணியும் நடந்தபடி இருந்தது.
மிளகு விதை கொடிகளை விற்பனையும் செய்கிறான். அவனது நாற்றாங்காலில் கிடைக்கும் விதை கொடிகள் தரமானதாகவும் மகசூல் அதிகம் தரக்கூடியதாகவும் இருப்பதால் அநேகமான விவசாயிகள் அவனிடம் தான் வாங்கிச்செல்வர். முதலில் தனக்கென்று ஆரம்பித்து இப்போது அதுவும் நல்ல லாபம் ஈட்டும் தொழிலாக அவனுக்கு அமைந்தது.
“நாற்றாங்கால் புதுப்பிக்கலாமா மாரியண்ணா?”
மாரி நாற்றாங்கால் பராமரிப்பவர்.
குமரனின் கேள்வியில் செய்து கொண்டிருந்த வேலையை செய்தபடியே அவனுக்கு பதில் கொடுத்தார்.
“இன்னும் ஒரு தரம் கணு வெட்டி எடுக்கலாம் தம்பி. அப்புறம் மாத்திக்கலாம்.”
“ஹ்ம்ம்.”
அங்கு விற்பனைக்குத் தயாராக பாலித்தீன் பைகளில் வேர் பிடித்த மிளகு விதை கொடிகள் அடுக்கப்பட்டு கொண்டிருக்க…
“யாருக்கு?” எனக் கேட்டான்.
“கிள்ளியூர் அழகப்பனுக்கு கதிர் அண்ணா!” வண்டியில் கொடி கன்றுகளை ஏற்றிக் கொண்டிருப்பதன் கணக்கை குறித்துக் கொண்டிருந்த சீனு குமரனுக்கு பதில் வழங்கினான்.
“போனமுறை கணக்கே அவரின்னும் முடிக்கலையே” என்ற குமரன், “இனி காசு கொடுத்தால் தான் நாற்று கொடி தருவோம் சொல்லிடு. ஏத்துன வரை போதும்” என்றான்.
“அண்ணா அட்வான்ஸ் வாங்கியாச்சு.”
“இருக்கட்டும் சீனு. போனமுறைக்கு அவர் காசு கொடுக்கணும் தானே. இந்த அட்வான்ஸ் அதை ஈடுகட்டிடாது தான், நம்ம பணம் நமக்கு வரணுமே!” என்ற குமரன் “அவர்கிட்ட கால் பண்ணி சொல்லிடு. மேற்கொண்டு எதாவதென்றால் என்னிடம் நேராக பேசிக்கொள்ள சொல்” என்றதோடு அங்கிருந்து நகர்ந்து ஏலக்காய் காய வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் சென்றான்.
தொழிலில் இத்தனை கறாராக இருப்பதால் தான் குறுகிய காலத்தில், எட்டிப்பிடிக்க நினைத்த உயரத்தில் வளர்ந்து நிற்கின்றான்.
எங்கு யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று குமரனுக்கு நன்கு தெரியும். தனக்கென சில விதிகள் வகுத்து வாழ்கின்றான். தொழிலில் இளக்கம் இருந்தால் அதுவே பலவீனமாக அமையும் என்ற எண்ணம் கொண்டவன். அவனுக்கு எந்தயிடத்தில் தட்டிக்கொடுத்து வேலைவாங்க வேண்டுமென்றும் தெரியும் கண்டிப்பு காட்டி வழிநடத்தவும் தெரியும்.
ஏலக்காய் பதப்படுத்தும் அறைக்குள் நுழைந்தவன்…
“டெம்ப்ரேட்சர் இன்னும் கொஞ்சம் வைக்கணும் போலவே மாமா” என்றான், அங்கு மேற்பார்வை செய்யும் கந்தனிடம்.
குமரன் பராம்பரிய முறையில் தான் பதப்படுத்துகிறான்.
இந்த அமைப்பில் இரண்டு அறைகள் இருக்கும். பதப்படுத்தும் அறை மற்றும் புகையூட்டும் அறை, பதப்படுத்தும் அறை உயரமான கூரையுடன் தரைக்கு இணையாக அறையின் நடுவில் பெரிய குழாய் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். புகை அறையை விட்டு வெளியேற சிம்னியுடன் குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஏலக்காயை பதப்படுத்த செவ்வக வடிவ தட்டுக்கள் பக்கச் சுவற்றுடன் பொருத்தியிருக்கும்.
ஏலக்காய்கள் ஒரு பரவலாக தட்டுக்களில் பரப்பப்படும். பரப்பிய பின் தீமுட்டி ஏலக்காயை சூடுபடுத்த வேண்டும். மரத்திலிருந்து உதிர்ந்த கிளைகள் மற்றும் இலைகள் எரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. சூடான புகை குழாய்களின் வழியே வந்து அறையின் வெப்பநிலை 45-50°C வரை உயர்த்தும். இந்த வெப்பநிலை மூன்று முதல் நான்கு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
இதன் வெப்பத்தையே தற்போது குமரன் சரியாக வைக்கக் கூறினான்.
இந்த வெப்பநிலையில் ஏலக்காய் இனிப்பாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.
தீடீரென குளிரூட்டப்படும், இதனால் காற்று வெளியேற்றி மூலம் புகை வெளியேறிவிடும். புகை வெளியேறிவுடன் காற்று வெளியேற்றியை மூடி விட வேண்டும்.
பின் அறையின் வெப்பநிலையை 40°C அளவுக்கு இருபது முதல் முப்பது மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும். திரும்பவும் வெப்பநிலையை ஒரு மணி நேரத்திற்கு 45°C அளவுக்கு உயர்த்த வேண்டும். இந்த முறை முழுவதும் நடந்தேற இருபத்தியெட்டு முதல் முப்பத்தியாறு மணி நேரம் ஆகும். பொதுவாக, ஏலக்காயின் தரம் இந்த முறையில் பதப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
பாரம்பரிய முறை அதிக படிநிலைகளையும் நேரத்தையும் கொண்டிருந்த போதிலும், குமரன் இம்முறையைத்தான் கையாள்கிறான். இம்முறையில் ஏலக்காயின் தன்மையும் தரமும் சற்றும் மங்குவதில்லை. அதனாலேயே குமரனின் ஏலக்காயிற்கு விற்பனை மற்றும் ஏற்றுமதி சந்தையில் மவுசு அதிகம்.
குமரன் சொல்லிய பிறகு தான் கந்தனும் வெப்பநிலை குறைப்புத்தன்மையை கவனித்து சரி செய்ததோடு குமரினிடம் தன் தவறுக்கு மன்னிப்பும் வேண்டினார்.
“மன்னிப்பெல்லாம் வேண்டாம் மாமா. செய்யுற வேலையை சரியாக செய்தால் போதும். இதை கவனிக்கமால் விட்டிருந்தால் குளிரூட்டும்போது தரம் குறையும் தானே. நம்மள நம்பி வாங்கி போறவங்களுக்கு நேர்மையா இருக்கணும்” என்றவன், “ஆந்திராவுக்கு போகவேண்டிய ஏலக்காய் எல்லாம் தயராகிடுச்சா?” என்று வினவினான்.
“இன்னும் ஒருமணி நேரத்தில் லோடு ஏத்திடலாம் தம்பி” என்றவரிடம் தலையசைத்துவிட்டு மிளகு பகுதியை பார்வையிடச் சென்றான்.
“தம்பி மிளகு லோடு அனுப்பின இடத்தில் இன்னும் ரெண்டு லோடு கேட்குறாங்க” என்றார் கணேசன். அந்த பிரிவின் மேலாளர் அவர் தான்.
ஒவ்வொரு பிரிவிலும் தங்கு தடையின்றி வேலைகள் நடக்குமாறு தனித்தனி ஆட்கள் அமர்த்தியிருந்தான். அதனால் ஓ(தொ)ய்வென்பதே இல்லாது அந்த தொழிற்சாலை இயங்கிக்கொண்டே இருந்தது.
“அனுப்ப வேண்டிய இடத்துக்கு எல்லாம் அனுப்பிட்டு எக்ஸ்டரா இருந்தால் அனுப்புறோம் சொல்லுங்கண்ணா” என்றவன், புதிதாக அறுவடை ஆகி வந்திருந்த மிளகில் இரண்டை எடுத்து வாயில் போட்டு சுவை பார்த்தான்.
“இதை கூட ரெண்டு நாள் சேர்த்து உலர்த்தனும் போலண்ணா” என்றான்.
“ஆமாங்க தம்பி” என்றவர், “எப்படி இப்படி பார்த்தே எல்லாம் சொல்லிடுறீங்க?” எனக் கேட்டார் கணேசன்.
“செய்யுற தொழிலில் நேர்மையா இருக்கணும் நினைத்தாலே போது(ம்)ண்ணா. கொடுக்குற பொருளை தரமானதா கொடுக்கணுமே” என்று கூறியவனின் நம்பகத்தன்மை அறியாதவரா அவர். அவன் இந்த ஆலையை ஆரம்பித்தது முதல் உடன் இருப்பவராயிற்றே. சிறிதாக இருந்தபோதும் சரி, இப்போது பெரிதாக செய்து கொண்டிருக்கும்போதும் சரி ஒரே மாதிரித்தான் இருக்கின்றான். அவனின் தரமும், நியாயமும் தானே வாடிக்கையாளரை அவன் பக்கம் இழுத்து வருகிறது.
அந்நேரம் குமரனைத்தேடி வந்த வேலையாள் ஒருவர்,
“தம்பி உங்க மாமா வந்திருக்கிறார்” என்று தகவல் சொல்லிச் சென்றார்.
குமரனின் உடலில் சட்டென்று ஒரு இறுக்கம். கண்களை அழுந்த மூடி தன்னை நிலைப்படுத்தியவன் தன்னுடைய அலுவலக அறை நோக்கிச் சென்றான்.
அங்கு வாடிக்கையாளர்கள் அமரும் இருக்கையில் பழனிச்சாமி அமர வைக்கப்பட்டிருந்தார்.
குமரன் அவரை வாங்க என்றும் சொல்லவில்லை, எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றும் கேட்கவில்லை.
அவரை ஒரு பார்வை பார்த்தவன் தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தான்.
அதற்குள் பழனிச்சாமியின் வருகை அறிந்த கண்ணபிரான், எங்கிருந்தாரோ எப்படி வந்து சேர்ந்தாரோ தன் மகனின் அருகில் வந்து நின்று கொண்டார்.
“வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்றவர், “என்ன விடயமா வந்திருக்கீங்க?” என்று வினவினார்.
கண்ணனின் பழனிச்சாமியிடமான கேள்விக்கு குமரன் பதில் அளித்தான். அதுவும் அவன் இறுதியில் அப்பா என்று சொல்லிய வார்த்தையில் இருந்த அழுத்தம் பழனிக்கானது. அவர் கண்ணனிடம் உங்க அண்ணன் மகன் என்று சொல்லியதற்கு, நான் அவரின் மகன் என்று இவன் திருப்பிக் கொடுக்கும் பதில் அது. பழனிக்கும் அது நன்றாகவே புரிந்தது.
அவர் குமரனை முறைத்து பார்த்தார்.
குமரன் அலட்சியமாக தன் பார்வையை திருப்பிக்கொண்டான்.
“என்னடா திமிரா? சின்ன வயசுலே நிறைய சம்பாதிக்கிறோம் கொழுப்பு.”
“வார்த்தை ரொம்ப முக்கியம் மிஸ்டர்.பழனிச்சாமி.”
அவரின் பேச்சு குமரனை சீண்டியது. கோபம் கொள்ளச்செய்தது.
ஏற்கனவே இருவருக்கும் ஆகாது. பார்க்கும் போதெல்லாம் முட்டிக்கொள்ளும். உறவும் சுமுகமானாதாக இல்லை. இதில் மேலும் விரிசல் அதிகமாகிவிடக் கூடாதே என்று நினைத்தார் கண்ணபிரான்.
“இங்க பாருங்க மச்சான், அவன் செய்யுறது சரிகிடையாது அவ்வளவுதான் நான் சொல்லுவேன்” என்ற பழனி, “இத்தனை வருடமாக நான் தொழில்தொடர்பு வச்சிக்கிட்டிருந்த மசாலா கம்பெனியை இவன் பக்கம் இழுத்துகிட்டான். இதனால் எனக்கு எத்தனை இழப்பு தெரியுமா?” என்றார் காரமாக.
“நீங்க கொடுக்குற பொருளை தரமானதாக கொடுத்தால் அவங்க ஏன் என்கிட்ட வரப்போறங்க? ஒருத்தவங்களை ஏமாற்ற நினைத்தால் அங்கு ஏமாறப்போவது நாம் தான்” என்றவனின் வார்த்தையில் பலமாக அடி வாங்கினார் பழனிச்சாமி.
தமிழ்நாட்டில் பிரபலமான மசாலா நிறுவனம் ஒன்று மிளகு மற்றும் ஏலக்காயினை பழனிச்சாமியிடம் தான் கொள்முதல் செய்து கொண்டிருந்தனர். அவர் சுய லாபத்திற்காக, தரமற்ற பொருட்களையும், அவர்கள் கேட்பதற்கு கிலோவுக்கு இத்தனை கிராமென்று குறைத்தும் கொடுக்க அவர்கள் வேறு இடம் பார்த்தனர். அது குமரனாகிப்போனது பழனிச்சாமிக்கு குறையாகிப்போனது.
“நானா அவங்களைத்தேடி போகல… அவங்க தான் என்னைத்தேடி வந்தாங்க. வரும் வாடிக்கையாளரை விட்டுவிடும் அளவிற்கு நான் முட்டாளும் இல்லை… விட்டுக்கொடுப்பதற்கு அத்தனை பரந்த உள்ளம் கொண்டவனும் இல்லை.”
“சொந்த பந்தம், உறவுமுறையெல்லாம் தொழிலில் ஒத்துவராது” என்றான்.
என்றோ அவர் சொல்லிய வார்த்தை இன்று அவரையே பதம் பார்த்தது.
“குமரா…!” தன்னுடைய மகன் இப்படி பேசும் ஆளில்லையே. தெரியாதவர்கள் என்றாலும் தன்மையாக பேசுபவன் சொந்த மாமனிடம் வெட்டிவிடுவதுபோல் பேசுவது அவருக்கு வருத்தத்தை அளித்தது.
“தொழிலென்று வந்துவிட்டால் நான் பக்கா பிஸ்னெஸ் மேன் தான். அதில் யாரும் விதிவிலக்கல்ல!”
குமரனின் வார்த்தைகளில் பழனிச்சாமியின் முகம் கருத்து சிறுத்தது.
அவர் அவனுக்கு செய்ததன் பலன் இது. அன்று அமைதியாக வாங்கிக்கொண்டவன் இன்று திருப்பிக் கொடுக்கின்றான். அவ்வளவே.
தான் செய்த வினையின் பலனையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. வினை விதைத்தவன் அறுக்கும் காலமும் வருமென்று உணராது போனார்.