வீடே அந்த அதிகாலைப் பொழுதில் பரபரப்போடும்… அதேயளவு உற்சாகத்தோடும் காணப்பட்டது.
இன்னும் சற்று நேரத்தில் அவ்வீட்டின் மூத்த தலைமுறை தம்பதிக்கு எண்பதாவது திருமணம்.
குமரனுக்கு தொழில் தொடர்பு கொண்டவர்கள் முதல், பழனி, எம்பிரான் அவர்களுக்கு பழக்கமானவர்கள், மற்றும் அவ்வூரின் மக்கள், அவர்களது தோட்டங்கள், பண்ணைகள் மற்றும் ஆலைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் வரை அனைவரும் மூத்தவர்களிடம் ஆசிபெற வந்திருந்தனர்.
ஒரு சதாபிஷேகம் நேரில் கண்டு ஆசி பெறுவதெல்லாம் அத்தனை எளிதல்லவே.
ஆயிரத்தெட்டு பிறை சந்திரனை கண்ட ஒருவருக்கே சதாபிஷேகம் செய்ய முடியும்.
துவாரகாபுரியில் ருக்மணி தேவி, ஸ்ரீ கிருஷ்ணரிடம்…
“எல்லோரும் உங்களை வணங்குகிறார்கள் நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டாராம்.
அதற்கு கிருஷ்ணர்… தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியிருக்கிறார். அதில் ஒருவர் ஆயிரத்தெட்டு பிறை நிலவை கண்டவர். ஆதலால் சதாபிஷேகம் செய்துகொள்ளும் நபர் கடவுளுக்கும் மேலானவர் என்ற நம்பிக்கை உள்ளது.
சொல்லப்போனால் சதாபிஷேகம் செய்து கொள்பவரின் ஆசி கிடைப்பது கடவுளின் நேரடி ஆசிக்கு ஒப்பானது.
அதற்காகவே வீரபாண்டி எஸ்டேட் அன்று கூட்டத்தில் மிதந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
பொதுவாக கோவிலில் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து செய்ய வேண்டிய நிகழ்வு இது.
ஆனால் குமரனுக்கு, வீரபாண்டி கமலம் அன்பான வாழ்வை பல தலைமுறை பார்த்திட்ட அந்த எஸ்டேட்டில் வைத்திடவே விருப்பம். அவனின் விருப்பத்தை பெரியவர்கள் ஏற்க இங்கேயே இன்னும் சிறிது நேரத்தில் சடங்குகள் தொடங்கவிருக்கின்றன.
வருண், அருள், குணா என்று மூவரும் வீரபாண்டி தாத்தாவை இளமையாக தயார் செய்கிறோம் என்று அவரின் முறுக்கு மீசை, தலை முடிக்கெல்லாம் கருமை பூசி அவரை ஒருவழி செய்து கொண்டிருந்தனர்.
அந்தப்பக்கம் கமலம் பாட்டியை தாங்கள் தான் அலங்காரம் செய்வோமென்று இளம் பெண்கள் நால்வரும் வயதான பெண்மணியை வெட்கத்தில் மூழ்க வைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை ஒரு சிரிப்புடன் கடந்து நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் சரியாக உள்ளதாயென மேற்பார்வை பார்த்தபடி இறங்கி வேலையும் செய்து கொண்டிருந்தான் குமரன்.
“சீக்கிரம் தயாராகுங்க” என்ற கண்ணபிரானின் குரலுக்கு… “நங்களெல்லாம் ரெடி ப்பா. பொண்ணு பையன் தான் ரெடியாகனும்” என்று யாழினி சொல்ல அங்கே சிரிப்பு சத்தம் விண்ணை முட்டியது.
“என்னது பொண்ணு பையனா?” என்ற சுலோ, “ஒரு பத்து, பன்னெண்டு வயசிருக்குமா?” என்றும் கேட்டிட, கமலம் தன்னுடைய மருமகளை முறைக்க முயன்று தோற்றார்.
வீரபாண்டி தாத்தா தயாராகிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்த குமரன்,
அங்கு ஒரு ஓரமாக அமர்ந்து இளையவர்கள் அடிக்கும் லூட்டியை மறைமுகமாக ரசித்தபடி அமர்ந்திருந்த ராஜேந்திரனிடம் சென்று…
“ஆரம்பிக்கலாமா பெரியப்பா. நீங்க தான் முன்ன நிக்கணும். தாத்தாவை கூட்டிட்டு போங்க” என்றான்.
குமரன் ஒவ்வொன்றையும் ராஜேந்திரனை முன்னிறுத்தியே செய்திட… அன்று துரையை முதன்மை படுத்தியதால் இத்தனை வருடங்கள் நீடித்திருந்த எதிர்மறை எண்ணம் கூட ராஜேந்திரனிடம் இப்போதில்லை எனும் நிலை தான். குமரன் மீது காரணமேயின்றி இருந்திட்ட கோபம் நீங்கிட அவனிடம் நன்றாகவே பேசினார். என்ன எப்போதும் போல் தான்தான் எல்லாம் என்று அவரின் உயரத்திலிருந்து மட்டும் இறங்கி வரவில்லை.
இந்தளவிற்கு அவர் இணக்கமாக இருப்பதே அனைவருக்கும் போதுமானதாக இருந்தது.
சிறு வயதிலிருந்தே எதிலும் துரையை முதன்மை படுத்தி, அகற்கு தகுந்தவாறு அனைவரும் அவருக்கு கட்டுப்பட்டதைப்போல் இருந்த தோற்றம், துரையிடத்தில் தானிருந்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கொடுக்க… அது கிடைக்காமல் போனதில் சொந்த அண்ணன் மீதே கோபமாக திரிந்தவருக்கு, அவருக்கடுத்து தான்தான் என்பது இயல்பாக மனதில் இருக்கத்தான் செய்தது. அதனை இப்போது பக்குவம் வந்த பின்னர் அனுபவிக்கையில் உறவுகளுக்கு முன் பழையதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றிட, தேவையில்லாது தூக்கி சுமந்திருந்த பிடிவாதம், கோபத்தை உண்மையாக மனமறிந்து விரட்டி அடித்திருந்தார்.
தானென்கிற உயரம் அன்பால் கிடைக்கப்பெறுவது தான் நிறைவைத் தருமென்று புரிந்து கொண்டவருக்கு அனைவரிடமும் இன்முகமாக பேசிட இயல்பாகவே வந்தது.
“ம்” என்றவர் பத்து வயது குறைந்து தனக்கு அண்ணன் போல் தெரிந்த தகப்பனை கண்டவர் உண்மையில் நடக்கவிருக்கும் நிகழ்வை நினைத்து சந்தோஷம் கொண்டார்.
“வாங்கப்பா போகலாம்” என்றவர் என்ன நினைத்தாரோ, “எம்பிரானையும், கண்ணனையும் வரசொல்லு குமரா” என்றவர் குமரன் நகர்ந்ததும், “பழனியையும் கூட்டிட்டு வாடா” என்று குணாவை விரட்டினார்.
“என்னாச்சுடா?” தாத்தா வினவ, “இருங்கப்பா” என்ற ராஜேந்திரன் மற்றவர்கள் வருகைக்காகக் காத்திருந்தார்.
“நாம் சேர்ந்தே அப்பாவை கூட்டிட்டு போகலாம்” என்றார்.
ராஜேந்திரனிடம் இதனை அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை.
“அண்ணா…” என்று எம்பிரான் தயங்க,
“வாங்கடா… நாலு பேரும் சேர்ந்து போவோம். அது இன்னும் நல்லாயிருக்குமே!” என்றிட சந்தோஷமாகவே அவர்களும் அவருடன் இணைந்து வீரபாண்டியை அழைத்துக்கொண்டு மேடை அமைத்திருக்கும் இடம் நோக்கி சென்றனர்.
புகைப்படம் எடுப்பதை அஜய் பார்த்துக்கொள்ள ஒவ்வொரு நிகழ்வையும் கட்சிதமாக தன்னுடைய காமிராவிற்குள் பதிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு உதவியாக வருண்.
“நீயும் போடா” என்று குணாவையும் அவர்களுடன் செல்லுமாறு கூறிய குமரன், கமலம் தயாராகிக் கொண்டிருந்த அறை நோக்கிச் சென்றான்.
“என்ன கல்யாணப்பொண்ணு” என்று கேட்டபடி குமரன் அறைக்குள் நுழைய,
வெண்ணிலாவின் கையை விட்டவன் அவளுக்கு சற்று தள்ளி நின்று, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளை கீழிருந்து மேலென பார்த்தான்.
அவன் பார்வையை அவளும் தொடர்ந்து தன்னை குனிந்து பார்த்தாள்.
“என்ன… என்ன மாமா?” அவன் இப்படி அவளை பார்ப்பதெல்லாம் புதிது. அவளுக்கு உள்ளுக்குள் படப்படப்பாக வந்தது. உதடுகள் நடுங்க, கீழ் உதட்டை பற்களால் அழுந்த கடித்தாள். சட்டென்று நெற்றியில் பூத்த வியர்வையை புறங்கை கொண்டு ஒற்றி எடுத்தாள்.
அவளின் பதட்டமும் தடுமாற்றமும் அவனுக்கு சுவரஸ்யமாக இருந்தது. கடிப்பட்டிருக்கும் உதட்டை தன் விரல்கள் கொண்டு விடிவிக்க ஆவல் கொண்டான்.
“போகவா?” திக்கித் திணறினாள்.
“என்ன ட்ரெஸ் இது?”
அவள் அணிந்திருந்த லெகங்காவை குறிப்பிட்டு வினவினான்.
“ஏன் இதுக்கென்ன? நல்லாத்தானே இருக்கு.”
“நல்லா இல்லைன்னு நான் சொல்லவேயில்லையே” என்றவன் “என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. பார்த்ததிலிருந்து ஒரு வேலையும் செய்ய முடியல. கண்ணு முன்னால வந்து அவஸ்தையை கூட்டுது” என்றான்.
‘என்ன சொல்கிறான், எதைப்பற்றி?’ என்று புரியாதவள் அவன் பார்வை பயணித்த இடத்தை வைத்து பட்டென்று சோலிக்கும், நீண்ட பாவடைக்கும் இடையில் தெரியும் இடத்தை கைகட்டி மறைத்தாள்.
வெளிப்படாயாக காதலை ஒப்புக்கொள்ளவே மறுப்பவனா இவன் என்றுதான் இருந்தது அவளுக்கு.
இன்று அவனின் பார்வை பேச்செல்லாம் புதிதாய், காதல் கொண்டவளுக்கு ரசனையாய்.
“மதி, தீக்ஷி எல்லாம் இது மாதிரி தான் போட்டிருக்காங்க.” அவனின் பார்வை மாற்றம் பெறாமல் இருக்கவே மெல்லக் கூறினாள்.
அவளிடம் ஒரு கவரை கொடுத்தவன்,
“மாத்திக்கிட்டு சீக்கிரம் வா” என்று நகர,
கவருக்குள் பார்த்தவள்… “புடவையா?” என்றாள்.
“பார்த்தால் தெரியலையா?” எனக் கேட்டுத் திரும்பினான்.
“புடவை வாங்கித்தர அளவுக்கு உங்களுக்குத்தான் அது இல்லையே?” என்றாள். இப்போதாவது சொல்லிவிடமாட்டானா என்று எதிர்பார்ப்போடு. அஜய் தடையாக இருப்பானென்ற அவனின் காரணத்தை இல்லாமல் செய்துவிட்டாளே! அதனால் உண்டான எதிர்பார்ப்பு இது.
அவனிடம் பதிலில்லை என்றதும் ஆடையை பையிலிருந்து வெளியில் எடுத்தாள்.
அவனது ஆடை நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் இருந்தது புடவை. அடர் ஊதா நிறம். ஆங்காங்கே வெள்ளி சரிகை வேலைப்பாடு. சரிகை நிறத்தில், புடவை வண்ண வேலைப்பாடுகள் கொண்ட சோலியும் இருக்க அதிர்ந்து அவனை பார்த்தாள்.
“என்னை பார்த்தது போதும், சீக்கரம்” என்றவன் அவ்வறைக்குள்ளே இருந்த பிரிட்ஜிலிருந்து நூலில் அடர்த்தியாக பந்துபோல் கோர்க்கப்பட்ட ஊதா வர்ண காசித்தும்பை மலர் சரத்தை எடுத்து வந்து அவளது கையில் திணித்தான்.
தன்னுடைய வார்ட்ரோப்பை திறந்து அவளது புடவை நிறத்திலேயே கல் பதித்த ஆரம் மற்றும் அளவான அளவில் இருந்த ஜிமிக்கியையும், நான்கு வளையல்களையும் நீட்டினான்.
பார்த்தவள் விழி விரித்தாள்.
அப்போதுதான் கவனித்தாள் அவனும் அதே வர்ணத்தில் சட்டையும், கரையிட்ட வேட்டியும் அணிந்திருந்தான்.
“இதெல்லாம் எதுக்கு?”
“எப்போதிலிருந்து நான் கொடுப்பதற்கு காரணம் கேட்க ஆரம்பிச்ச நிலா?”
“என் காதலை எப்போ மறுத்தீங்களோ அப்போதிலிருந்து.” அசராது பதில் கொடுத்தாள். அவளை உள்ளே மெச்சிக்கொண்டான்.
“இப்போ விளக்கம் கொடுக்க நேரமில்லை. இந்த விழா முடியட்டும் பேசலாம்” என்றான். அதற்கு வாய்ப்பில்லை என்பதை அறியாது.
“இதெல்லாம் வேண்டாம்” என்றவள் கையிலிருக்கும் அனைத்தையும் மெத்தையில் வைத்திட…
“அம்மாடி” என்று உடைந்துவிட்டான்.
அவனின் சோர்ந்துவிட்ட முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருவதற்காகவே பிடிவாதத்தை ஒதுக்கி வைத்தவளாக,
“நீங்க வெளியில் போனால் தான் மாத்த முடியும்” என்றாள்.
சடுதியில் அவனது முகம் புன்னகை பூசியது.
“வரும்போது போட்டிருக்கும் கொண்டையை அவிழ்த்திட்டு, பின்னல் போட்டு வா” என்றவன் வேகமாக வெளியேறி மேடையிருக்கும் இடத்திற்கு ஓடினான்.
புடவையை கட்டி அவன் கொடுத்த நகைகளை போட்டவள், அவள் முன்பு அணிந்திருந்த ஆடைக்கு ஏற்ற வகையில் ஒரு பக்கமாக மொத்த குழலையும் வரி வரியாக தெரியும்படி கொண்டையிட்டு செயற்கை மலரை சூடியிருந்தவளுக்கு, அவன் சொல்லிவிட்டு சென்றது சிரிப்பை வரவழைத்தது. இதழ் விரிப்போடே இடை தாண்டும் குழலில் பிரெஞ்சு பின்னலிட்டு, பின்னலைச்சுற்றி வட்ட வடிவில் காசித்தும்பை மலர்களைச் சூடியவள் தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்திட கண்கள் விரிந்தன.
முதல் முறையாக புடவை உடுத்துகிறாள். அவளின் பால் நிறத்தை அடர் ஊதா வண்ணம் நன்கு எடுத்துக்காட்டியது. தன் உருவம் தனக்கே அழகாகத் தெரிந்திட அவளின் முகத்தில் தோன்றிய சிவப்பு அழகுக்கே அழகு சேர்த்தது.
‘லவ் இல்லையாம். ஆனால் இதெல்லாம் கவனித்து செய்வாராம்.’ மனதிற்குள் செல்லமாக அவனை சடைத்துக் கொண்டாள்.
‘இந்த பூ எப்போ எப்படி பறித்து கட்டினாங்க தெரியலையே’ என்று யோசித்தபடி விழா நடக்கவிருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றாள்.
போட்டிருந்த அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது.
வீரபாண்டி, கமலம் மேடையில் ஐயர் முன்பு அமர்ந்திருக்க, அவர்களைச்சுற்றி வீட்டு ஆட்கள் அனைவரும் நின்றிருக்க அவளின் கண்கள் குமரனைத் தேடியது.
“மொத்தமா இழுக்குற அம்மாடி” என்று அவளின் முதுகுக்கு பின்னால் குமரனின் குரல் ஒலிக்க, அவள் திரும்பிடும் முன்னே… அவளின் இடையை ஆடை இழுத்து மறைத்தவனாக முன்னிருந்தவரிடம் ஏதோ கேட்டபடி நகர்ந்தான்.
அவளுக்கு அவன் விரல் உரசியதில் மூச்சடைக்கும் உணர்வு.
‘மாமா இன்னைக்கு சரியேயில்லை. தப்பு தப்பா பாக்குறாங்க’ என நினைத்தவள் வேகமாக மேடையேறி தன் சகோதரிகளுடன் கலந்தாள்.
“என்ன வெண்ணிலா ட்ரெஸ் மாத்திட்ட?” மதி கேட்டிட…
“வரும்போது தோட்டத்தில் விழுந்துட்டேன் மதி. ட்ரெஸ் சேராகிடுச்சு” என்று தடுமாறாது பொய் கூறினாள்.
வெண்ணிலாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாது சிரித்து சமாளித்தாள்.
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அஜய் தங்கையின் அருகில் வந்து,
“பய ஓகே சொல்லிட்டானா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான்.
“இல்லையே” என்று தலையை ஆட்டியவள், “ஏன் கேட்குற? என் தங்கச்சிக்கு ஓகே சொல்லுன்னு நீ எனக்காக சிபாரிசு செய்தியா?” எனக் கேட்டாள்.
“ம்ப்ச் இல்லை” என்றவன், “நைட் நாங்கெல்லாம் தூங்கிய அப்புறம் பால்கனியில் ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தான். நான் சத்தமில்லாமல் கிட்ட போய் பார்த்தப்போ பால்ஸம் ஃபிளவர்ஸை கோர்த்திட்டு இருந்தான். உனக்கு இந்த பூ பிடிக்கும்ல?” என்றதோடு, “இப்போ அவன் கோர்த்த பூ உன் தலையில் இருக்கே அதான் கேட்டேன்” என்றான்.
விழாவின் முதல் படியான ரக்ஷபந்தனம் தம்பதியருக்கு ஐயர் கைகளில் கட்டிட அனைவரின் கவனமும் அங்கு சென்றது. கீழிருந்த குமரன் வேகமாக ஓடிவந்து வெண்ணிலாவின் அருகில் நின்றுகொள்ள, அஜய் விஷமப் புன்னகையோடு தங்கையை பார்த்து கண்சிமிட்டி விட்டு புகைப்படம் எடுக்க ஏதுவாக மேடைக்கு கீழே சென்றான்.
“அம்மாடி ஒன் செல்ஃபி” என்றவன் தங்கள் இருவரையும் சேர்த்து சுயமி எடுக்க அலைப்பேசியை உயர்த்தி பிடித்திட… வெண்ணிலாவைத் தொடர்ந்து தொடர்வண்டி போல் குணா, யாழினி, தீக்ஷி, வருண், மதி என ஒவ்வொருவராக தோள்களை பற்றிக்கொண்டு நின்றிட, அப்போதுதான் கீழிறங்கிய அஜய்’யும் வேகமாக ஓடி வந்து மதியின் தோள் பற்றி நின்றான்.
குமரனின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போலாகி சடுதியில் சீர் பெற்றது. வெண்ணிலா பீறிட்டு வந்த சிரிப்பை கன்ன கதுப்பில் ஒளித்தாள்.
அவ்வீட்டின் இளம் தலைமுறை அனைவரும் ஒரே காட்சியில். அழகாக குமரனின் அலைப்பேசியில் இடம் பிடித்தது.
பிள்ளைகள் அனைவரையும் அந்நிலையில் கண்ட பெற்றோருக்கு மட்டுமல்லாது வந்திருந்த விருந்தினர்களின் முகத்திலும் ரசனையான புன்னகை பதமாய் வீற்றியது.
ரக்ஷபந்தனம் என்பது காப்பு. அதனை சதாபிஷேகத்திற்கு முதல் நாள் அல்லது சடங்குகளின் முதலாய் கைகளில் கட்டுவர்.
அடுத்தது ராஜேந்திரன் புதிய வஸ்த்திரங்களை தன் மனைவியுடன் சேர்ந்து கொடுத்திட, தம்பதியினர் மாற்றி வந்து மனையில் அமர்ந்தனர். இது அனுக்கிங்கை எனப்படும்.
பின்னர் மூத்த முதல் கடவுளான கணபதிக்கு பூஜை செய்து பிரார்த்தனை நடைபெற்றது.
“நல்லா வேண்டிக்கோ மதி. நம்ம லவ் சக்ஸஸ் ஆகணுமென.” அனைவரும் கண்மூடி கைகூப்பி நின்றிருக்க செவி நுழைந்த குணாவின் மெல்லொலியில் மதி திடுக்கிட்டு பார்த்தாள்.
மதியை ஒட்டி நின்றிருந்த வருணுக்கும் கேட்டுவிட… “ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?” என விழிகள் தெரித்துவிடுமளவிற்கு அதிர்வாக வினவினான்.
குணாவை பார்த்து பற்களை கடித்த மதி…
“நானில்லை” என்று வருணுக்கு சொல்லிவிட்டு, யாழினி மற்றும் தீக்ஷிக்கு நடுவில் நின்று கொண்டாள்.
“என் அண்ணன் எதுக்கு இருக்கானாம்? அவன் தம்பி நான் ஆசைப்படுறது எதுவாயிருந்தாலும் நொடியில் நிறைவேற்றிவிடுவான்” என்ற குணாவின் பார்வை தங்களுக்கு சற்று தள்ளி நின்றிருந்த குமரனின் மீது படிந்திருந்தது.
“அதென்னவோ நிஜம் தான்” என்ற வருண், “இது அண்ணாக்குத் தெரியுமா?” எனக் கேட்டான்.
“சொல்லணும். விழா முடியட்டும்.”
எல்லோரும் ஒவ்வொரு எண்ணத்தோடு முடியவிருக்கும் விழாவிற்காக காத்திருக்கின்றனர். யாருடைய எண்ணம் நிறைவேறப் போகிறது என்பது விதியின் கையில்.
கும்ப கலசம் வைத்து, கும்ப ஜெபம், ஹோமம் என அடுத்தடுத்து நடந்த சடங்குகளில் அனைவரும் அதனோடு ஒன்றிப்போயினர்.
அடுத்து கும்பாபிஷேகம். பத்ம வடிவில் ஆயிரம் துளைகள் உள்ள வெள்ளி அல்லது தாமிரத்தட்டில், தங்கம், நாணயம், பூக்கள் ஆகியவற்றை இட்டு சதாபிஷேகம் செய்யும் வீரபாண்டியின் தலைக்கு மேல் வருணும் யாழும் பிடித்து நிற்க, மூத்த மகன் நீர் ஊற்றிவிட்டால் அதன் பின் யாரும் நீர் ஊற்றிடக் கூடாது என்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள், உற்றார் உறவினர்களும் வரை அனைவரும் ஒவ்வொருவராக ஹோமம் முன் வைத்து பூஜை செய்த கும்ப கலசங்களில் உள்ள நீரை ஊற்றி அபிஷேகம் செய்திட, வீரபாண்டியின் மூத்த மகன் துரை உயிருடன் இல்லாததால் அந்த இடத்தில் இப்போதிருக்கும் ராஜேந்திரன் அபிஷேகம் செய்து முடித்து வைத்தார். இதுவே சதாபிஷேக சடங்காகும்.
சதாபிஷேகம் முடிந்த பின்னர் வீரபாண்டி மூன்று முறை புதிய ஆடைகள் அணிந்து வந்து மனையில் அமர்ந்து தன்னுடைய பத்தினிக்கு மாங்கல்யம் பூட்டிட அவ்விடமே பூக்கள் மழை தூறியது.
அடுத்து வெண்கல பாத்திரத்தில் நெய் விட்டு தங்க காசு ஒன்றை அதில் வைத்து மூடி தம்பதியர் திறந்து பார்த்துவிட்டு சடங்குகள் நடத்திக்கொடுத்த ஐயருக்கு காணிக்கை அளித்தனர்.
சதாபிஷேகம் செய்துகொண்ட வீரபாண்டி தனது கையால் உடை, பசு, வெள்ளி, உப்பு, நெல் என பத்து தானங்கள் செய்திட வேண்டும். ஆனால் தங்களுடைய ஆலை மற்றும் பண்ணைகளில் வேலை செய்யும் அனைவருக்கும் ஆடைகள், இனிப்புகள், வெள்ளி தட்டு, பசு என கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான். அதனை மூத்த தம்பதியர் ஒவ்வொருவருக்கும் வழங்கிட, ஆசி பெற்று பெற்றுக்கொண்டனர்.
“எல்லாம் குமரன் ஏற்பாடு தான். என்கிட்ட ஒத்த பைசா கேட்கல” என்று பெருமை தூக்கலாகவேக் கூறினார்.
ராஜேந்திரனுக்கு அக்கணம் குமரனை பிடிக்கத்தான் செய்தது. அவரின் நினைவில் துரையின் நினைவு எழுவதை தடுக்க முடியவில்லை.
“துரையும் இப்படித்தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வான். குமரனை பார்க்கும் போதெல்லாம் அவன் முகம் தான் கண்ணுல வருது. என்ன ரெண்டு பேரையுமே புரிஞ்சிக்காமல் தள்ளி நின்னுட்டேன். ஆட்டம் அடங்கும்போதுதான் உறவோட அன்பு புரியுது.” உளமாரக் கூறினார் ராஜேந்திரன்.
கண்ணபிரானும், எம்பிரானும் ராஜேந்திரனின் இரண்டு பக்கம் வந்து நின்று அவரின் கைகளை பிடித்துக் கொண்டனர்.
எல்லாம் முடிய… “குடும்பத்தார் பெரியவங்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க” என்று ஐயர் சொல்ல ராஜேந்திரன் தன் மனைவி செல்வியுடன் தாய் தந்தை காலில் விழுந்து வணங்கி எழ, அடுத்தடுத்து எம்பிரான், சுலோ… பழனி, குணவதி தம்பதிகள் ஆசி பெற, காந்தள் அடுத்து கண்ணன் வணங்கி எழுந்தார்.
அஜய் அருகிலேயே நிற்கவும் அவனை முதலில் ஆசி பெற குணா சொல்ல…
விழாவிற்கு வந்திருந்த பெரியவர் ஒருவரை வழுயனுப்பிக் கொண்டிருந்த குமரனை சத்தமிட்டு அழைத்தான் அஜய்.
அருகில் வந்தவனை… “ஆசீர்வாதம் வாங்குடா” என்று கூறினான்.
அஜய்யின் அச்செயலை பிள்ளைகள் அனைவரும் விழிவிரித்து பார்த்தனர். குமரன் மீது அஜய் கொண்டிருந்த போட்டியை அறிந்தவர்களாயிற்றே அவர்கள். அவர்களுக்கு கண் சிமிட்டி புன்னகைத்தான் அஜய்.
குமரன்… தாத்தா, பாட்டி காலில் ஆசீர்வாதம் வாங்க குனிய இருந்த நிலையில் அவனைத் தடுத்த கமலம்,
தன் மக்களை அர்த்தமாக பார்த்துவிட்டு மதியை அருகில் அழைத்தார்.
எதற்கு என்று குமரன் உட்பட இளைய தலைமுறையினர் அனைவரும் குழம்பி பார்க்க…
“ரெண்டு பேரும் சேர்ந்து விழுங்கப்பா. உங்களுக்கு கல்யாணம் செய்ய நினைக்கிறோம்” என்று குணவதி பூரித்த முகமாகக் கூறினார்.
குமரன் ஓரடி பின் நகர்ந்து நின்றான்.
குமரன் வெண்ணிலாவையும், மதி குணாவையும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஏறிட, அவ்விருவருமே தங்களுக்கு ஒன்றுமில்லை எனும் நிலையில் நின்றிருந்தனர்.