அடர்ந்த காரிருள் சூழ்ந்த நேரத்தில் தன்னுடைய ஆஸ்தான இடமான பாறையின் மீது கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் குமரன்.
வானில் உலா வரும் நிலவில், கமலத்தின் வார்த்தையில் எவ்வித அதிர்வுமின்றி இயல்பாக நின்றிருந்த அவனது நிலவின் முகம். அந்நேரம் அவளது முகத்தில் என்ன இருந்தது என்று துளியும் குமரனுக்கு விளங்கவில்லை.
குமரனையும் மதியையும் ஒன்றாக விழுந்து வணங்குமாறு நேரடியாக அவர்கள் இருவருக்கும் திருமணம் என்று கமலம் பாட்டி சொல்லிட, மதியும், குமரனும் தங்களது இணையைத்தான் பார்த்தனர்.
இதில் வெண்ணிலாவோ, குணாவோ செய்வதற்கு ஒன்றுமில்லையே. அவர்கள் இருவருமே தங்களது காதலை சொல்லியிருக்க, ஏற்க வேண்டியவர்களின் பதில் மறுப்பாக இருந்திட, அவர்கள் என்ன செய்திட முடியும்.
குமரனும், மதியும் தான் எதாவது செய்ய வேண்டும்.
தங்கையின் காதல் தெரிந்திருந்த அருள் அர்த்தத்துடன் அமைதியாக நின்றான். வெண்ணிலாவின் அமைதியான முகம் அவளின் நிலையை அவனுக்கு உணர்த்திட, குமரன் தான் இறங்கி வர வேண்டுமென நினைத்தான்.
குணாவின் காதலை அப்போது தான் அறிந்து கொண்ட வருண், தன்னுடைய அண்ணனின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.
“அம் ஓகே வருண்” என்ற குணா சிரிப்பில் தன் வலியை மறைத்தானோ.
“என்னப்பா நின்னுட்டே இருக்கீங்க?” வீரபாண்டி மதியையும், குமரனையும் காலில் விழுந்து வணங்குமாறு மீண்டும் கூறினார்.
அக்கணம் குமரனின் அலைப்பேசி ஒலிக்க, எடுத்து பார்த்தவன்…
“முக்கியமான கால் தாத்தா” என்று பெரியவர் கூப்பிட கூப்பிட வேகமாக கீழிறங்கிச் சென்றான்.
அஜய் தான் என்ன செய்வதென்று தெரியாது தவித்து நின்ற குமரனை காப்பாற்ற எண்ணி கால் செய்தான். அதனை பயன்படுத்திகொண்டான் குமரன்.
“தேன்க்ஸ் டா!”
“இப்போகூட உன்னால் சொல்ல முடியாதா குமரா?” குமரனின் அதிர்ந்த முகமே அருளிற்கு அவனும் வெண்ணிலாவை நேசிக்கிறான் என்பதை காட்டிக்கொடுத்திட்டது. அதனாலேயே அவ்வாறு கேட்டான்.
குமரன் அருளை திடுக்கிட்டு பார்த்திட…
“இனி எல்லாம் உன் கையில் தான்” என்றான் அஜய்.
“இப்போ எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க அஜய். நான் அவங்க சொன்னதை மறுத்து அந்த சந்தோஷத்தை கெடுக்கணுமா?” என்ற குமரனை அடித்தால் என்னவென்று தோன்றியது அஜய்க்கு.
அஜய்யின் பார்வை மாற்றத்திலேயே அவனின் மனதை படித்தானோ…
“கல்யாணத்தன்னைக்கு சேர்ந்து வாங்குவாங்க. இப்போ நீங்க புள்ளைங்களை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா” என்று காந்தள் கூறிட மதி தொடங்கி ஒவ்வொருவராக வணங்கிய தன்னுடைய பேரப்பிள்ளைகளை ஆசீர்வாதம் செய்தனர் வீரபாண்டி கமலம்.
இறுதியாக குணா முற்பட…
“குமரனும் மதியும் கல்யாணம் செய்துக்கப் போறாங்கன்னு ஒண்ணா வாங்க சொன்னிங்களே? குணாவுக்கும் நிலாவுக்கும் தானே பின்னாளில் கல்யாணம், அவங்களும் ஒண்ணா ஆசீர்வாதம் வாங்கட்டுமே!” மகனைத் தடுத்து ராஜேந்திரன் கூறிட…
குணா திரும்பி வெண்ணிலாவை தன்னருகில் அழைத்தான்.
“என்னடா பெருசுங்க சேர்ந்து உன் லவ்வை மொத்தமா காலி செய்திடுங்க போல!” அஜய் குமரனிடம் சொல்ல, அவன் என்ன உணர்வில் சிக்கி சுழல்கிறான் என்று அவனுக்கே பிடிபடவில்லை.
தனக்கு அருகில் வந்து நின்ற வெண்ணிலாவை தோளோடு சேர்த்து அணைத்த குணா…
“நிலா என்னோட செல்லக்குட்டி. ஒரு குட்டி பேபியிடம் வருமே பீல் அந்த மாதிரி. அவள் என்னோட ஃபிரண்ட். இந்த முகத்தை வேறு மாதிரி பார்க்க எப்பவுமே எனக்குத் தோணாது. அவளுக்கும் அப்படித்தான். உங்களுக்கு ஆசை இருக்குன்னா எங்களிடம் கேட்க வேண்டாமா?” அமைதியாக ஆனால் அழுத்தமாகக் கேட்டிருந்தான்.
குணாவின் பேச்சில் அஜய்க்கு விசில் அடிக்க வேண்டும் போலிருந்தது.
“குணா தைரியம் உனக்கு வராது குமரா? எல்லோரையும் யோசித்து உன் சந்தோஷத்தை இழந்திடாதே!” அஜய் சொல்லுமாறு என்றுமே அவனை மட்டுமே எண்ணி அவனால் எதையும் செய்திட முடியாதே. சுயநலம் என்ற வார்த்தைக்கு பொருள் அறிந்திடாத தன்னலமற்ற குணம் கொண்டவனாயிற்றே கதிர் குமரன்.
“என்னடா பெரியவங்களை எதிர்த்து பேசுற?” ராஜேந்திரன் மகனிடம் எகுறினார்.
“இப்போ தோணலன்னா… கல்யாணத்துக்கு அப்புறம் தோணும். வர முகூர்த்தத்தில் குமரனுக்கும் மதிக்கும் கல்யாணம். அடுத்து உங்களுக்குத்தான்.” தன் முடிவு இதுதானென்று அறிவித்தார்.
“நீங்க முடிவெடுத்தால் ஆச்சா? வாழப்போறது நாங்க” என்ற குணா, காந்தளிடம் திரும்பி… “பிள்ளைங்களோட சம்மதம் இல்லாமல் முடிவெடுக்க நீங்க எப்போ உங்க அண்ணனா ஆனீங்க அத்தை?” எனக் கேட்டான்.
உறவினர்கள் எல்லாம் பரிசு கொடுக்க கொடுக்க விருந்து உண்டு விட்டு கலைந்து சென்றிருக்க குடும்பத்தார் மட்டுமே அங்கு இருந்தனர்.
எட்டு பிள்ளைகளுக்குமே காந்தள் விருப்பமானவர், பிடித்தமானவர். எதுவாக இருந்தாலும் பிள்ளைகளின் எண்ணத்திற்கு மதிப்பளித்து செயல்படுவார். இன்று அவரும் ராஜேந்திரன் பேச்சுக்கு மௌனமாக இருக்க… இதில் அவருக்கும் விருப்பமென்று அவரிடம் கேட்டிருந்தான்.
“நாங்க நினைச்சோம் குணா. ஆனால் உங்களுடைய விருப்பமில்லாமல் ஏதும் நடக்காது” என்றார் காந்தள்.
ராஜேந்திரன் மகனை முறைத்தார்.
“எனக்கு வெண்ணிலா தான் மருமகளா வரணும். இது என்னோட ஆசை. வெண்ணிலா தவிர்த்து வேறு யாரு வந்தாலும், உனக்கு அப்பா இல்லாமல் தான் கல்யாணம் நடக்கும். நான் வரமாட்டேன்.” என்றோ நடக்கவிருக்கும் திருமணம் நாளையே நடைபெற போவதைப்போல் பேசினார் ராஜேந்திரன்.
மற்ற அனைவரும் அங்கு பார்வையாளராகிப்போக…
“எனக்கு குணான்னா ரொம்ப பிடிக்கும் மாமா. ஆனால் அந்த பிடித்தம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. குணா சொல்லியதையே தான் நானும் சொல்றேன். குணாவை நீங்க சொல்லுற இடத்தில் வைத்து என்னால் பார்க்க முடியாது” என்றவள் மேடையிலிருந்து இறங்கி வேகமாக வீட்டை நோக்கிச் சென்றாள்.
குமரனை கடக்கும் போது அவளது கண்களில் தெரிந்த வலியில் குமரன் நொறுங்கிப்போனான்.
“சின்னது ரெண்டும் புரியாமல் பேசுது. ஒருத்தரை ஒருத்தர் யாருன்னே தெரியாமல் நம்ம காலத்தில் கல்யாணம் செய்துக்கலையா? இவங்களுக்கு என்ன அப்படியா பண்றோம். சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்ததுங்க… கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாப்போகும். இவங்க கல்யாணத்தை பின்னால் பார்ப்போம். இப்போ மதி, குமரன் கல்யாணத்தை பேசுவோம்” என்று ராஜேந்திரன் கூறிட எல்லோருக்கும் அதுவே சரியெனப்பட்டது.
குணாவிற்கு இவ்வளவு சொல்லியும் புரிந்து கொள்ளாமல் அவர் பிடியிலேயே பேசும் தந்தை மீது ஆத்திரமாக வந்தது.
இருப்பினும் தன்னை மீறி என்ன நடந்துவிடுமென பொறுமையாக இருக்க முடிவு செய்தான்.
மதி அவனது காதலுக்கு சரியென சொல்லியிருந்தால், வெண்ணிலாவை முடியாது என்று சொன்னவன் அப்போதே மதியை விரும்புவதையும் சொல்லியிருப்பான். அவனுக்கு வெண்ணிலா குமரனின் காதல் தெரியாத நிலையில், மதிக்கும் தன் மீது காதல் இல்லை என்ற நிலையில், குமரனுக்கு மதி தான் என்றால் நடந்துவிட்டு போகட்டும் என்ற எண்ணம் தான்.
தன்னுடையது ஒருதலை ராகம் எனும் பட்சத்தில் அண்ணனுக்கு என்று பெரியவர்கள் எடுத்த முடிவில் குழப்பம் பண்ணிட அவனது மனம் விரும்பவில்லை.
அடுத்து அனைவரும் அமைதியாக உணவை கழித்து இல்லம் சென்றிட…
மற்ற வேலைகளை முடித்து செட்டில் செய்துவிட்டு குமரன் வீட்டிற்குள் செல்லும்போது அனைவருமே உறக்கத்தின் பிடியில் இருந்தனர். அதிகாலை விரைந்து எழுந்த அசதி.
குமரன் அறைக்குள் நுழைய அஜய் மடிகணினியில் ஏதோ செய்துகொண்டிருக்க, வருண் உறங்கிக்கொண்டிருந்தான். குணா எங்கென்று பார்க்க… வராண்டாவின் இறுதியில் மதியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
‘இறுதியாக ஒருமுறை மதியிடம் கேட்டு பார்த்துவிடலாம். அப்போதும் அவள் முடியாதென்று சொல்லிவிட்டால், தான் மொத்தமாக விலகி விடலாம்’ என்று நினைத்தான் குணா.
ஆனால் குணா கேட்பதற்கு முன்பே…
“அப்பாகிட்ட பேசு குணா. எனக்கு பயமா இருக்கு” என்று கூறினாள். அவனுக்கு புரியவில்லை.
“இப்படி மொட்டையா சொன்னால் என்னன்னு பேச?” எனக் கேட்டான்.
“உனக்கு நான் வேண்டாமா?” கண்கள் நீரால் நிரம்பிவிட்டன.
“உனக்குத்தான் நான் வேணாம்” என்றவன் முகம் திருப்பிக்கொண்டான்.
அவனுக்கு இப்போது அவள் எதைப்பற்றி பேசுகிறாள் என்பது தெளிவாக புரிந்தது. இருப்பினும், அவள் வெளிப்படையாக சொல்லி, தான் கேட்க வேண்டுமென்று ஆசை கொண்டான்.
“நானும் உன்னை லவ் பண்றேன்.” பட்டென்று கூறியிருந்தாள். ஆச்சரியமாக அவளை கூர்ந்து நோக்கினான்.
“உனக்கு முன்பே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். நீயும் என்னை லவ் பண்றன்னு சொன்னப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனால், அப்பாவை நினைத்து பயம். அதான் விருப்பம் இல்லாததை மாதிரி காட்டிக்கிட்டேன். நீயும் என்னை லவ் பண்றங்கிறப்போ, எப்படியும் ராஜேந்திரன் மாமா வைத்து அப்பாவிடம் பேசுவ, அப்பாவே கேட்டு நான் சரி சொல்ற மாதிரி இருக்கும் நினைத்தேன். ஆனால் இவங்கெல்லாம் இப்படியொரு பிளான் பண்ணுவாங்க நினைக்கல” என்றவள் விசும்பினாள்.
அக்கணம் குணாவிற்கு எப்படி இருக்கிறதாம். சிறகில்லாமல் பறக்கும் உணர்வு.
நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த கனமான அழுத்தம் நொடியில் காணமல் போனது.
“உன் அப்பாவுக்கு நல்ல பொண்ணா இருக்கணும் நினைத்து எனக்கு வலிக்க வச்சிட்டல?”
“அப்பாவா செய்தால் ஓகே. இதே நாம் லவ் பண்றோம் தெரிந்தால் வேண்டுமென்றே பிரச்சினை செய்வார். அதான் நான் அமைதியா இருந்தேன்” என்றாள்.
“இட்ஸ் ஓகே. இப்பவும் உங்க அப்பா முடிவுன்னு அவங்க முடிவுக்கு சரின்னு சொல்லாமல், என்கிட்ட லவ் சொன்னியே இதுவே போதும்” என்ற குணா, “குமரன் மூலமாகத்தான் பெரியவங்ககிட்ட பேசணும்” என்றான்.
ஆனால் அதற்கு முன்பே குமரன் ஒரு முடிவெடுத்திருப்பான் என்பது அவர்கள் அறியவில்லை.
நீண்ட நேரமாக வெண்ணிலா கண்ணில் படாது இருக்க…
வெண்ணிலா எங்கென அவளது அறைக்குள் சென்றான் குமரன். யாழினி தீக்ஷியின் மடியில் தலை வைத்து உறங்கியிருக்க, தீக்ஷி வெண்ணிலாவிடம் தன்னுடைய கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள்.
“அண்ணா… பாட்டி, தாத்தா பேச்சை மீறி உன்மீது தான் விருப்பமென எப்பவும் சொல்ல மாட்டார். நீதான் எதாவது செய்யணும் நிலா. அட்லீஸ்ட் மதியிடம் சொல்லிடு. அண்ணாவை நீ லவ் பண்றன்னு.”
“குணாவுக்கே நான் சொல்லலை உனக்கெப்படித் தெரியும்?”
தீக்ஷி சொன்னதையெல்லாம் விடுத்து தன்னுடைய காதல் விடயம் அவளுக்கெப்படித் தெரியுமென அறிந்திட வினவினாள் வெண்ணிலா.
“உன் கையிலிருக்கும் டாட்டூ சொல்லுதே” என்ற தீக்ஷி, “யாரெல்லாம் கவனிச்சாங்க தெரியல. நான் பார்த்தேன். பாட்டி குமரன் அண்ணாவுக்கும், மதிக்கும் க…”
“ப்ளீஸ் தீக்ஷி அப்படி திரும்பத்திரும்ப சொல்லாத” என்ற தீக்ஷியின் வார்த்தையை இடை நிறுத்திய வெண்ணிலா அழுகிறாளோ என்று எண்ணினான் அவர்களின் பேச்சினை கேட்டபடி நின்ற குமரன்.
வெண்ணிலா முதுகுக்காட்டி நின்றதால் தீக்ஷிக்கும் அந்த சந்தேகம் வந்தது. வெண்ணிலாவின் குரலில் தழுதழுப்பு.
“சரி நான் சேர்த்து சொல்லல. ஆனால் மொத்த குடும்பமும் ஜோடியை மாத்தி சேர்த்து வைக்க முடிவெடுத்திருக்காங்களே!” என்றாள் தீக்ஷி.
“உனக்கெப்படி?”
“அதைத்தான் நீ சொல்ல விடலையே” என்ற தீக்ஷி… “பாட்டி வெட்டிங் பற்றி சொன்னதும், அண்ணா உன்னை பார்த்த மாதிரி, மதி குணாவை பார்த்தாள். சோ, ஐ ஜஸ்ட் கெஸ்ட் இட்” என்று தோள் குலுக்கினாள்.
“அப்போ குணா, மதி லவ் உனக்கும் தெரிந்திருக்கு” என்று தீக்ஷி கேட்க,
“குணா மட்டும் தான் லவ் பண்றான். மதி அக்செப்ட் பண்ணல. லவ்வெல்லாம் இண்ட்ரெஸ்ட் இல்லை சொல்லிட்டாள்” என்று பதில் வழங்கிய வெண்ணிலா…
“இதில் நானோ குணாவோ செய்வதற்கு ஒன்றுமில்லை தீக்ஷி. மதிக்கு குணா மீது காதலில்லை. அதே மாதிரி மாமாக்கு என்மீது காதலில்லை” என்றதோடு, “அவரை காதலிக்குற எனக்குத்தான், அவரோட அன்பு அக்கறையெல்லாம் காதலா தெரிந்தது போல” என்றாள்.
அன்று இரவில் அவளின் உறக்கத்தின் போது அவன் பேசிச்சென்றது தன் கற்பனையோ என எண்ணினாள். குமரனின் மௌனத்தைக் கண்டு.
வெண்ணிலா கண்களை துடைப்பது தெரிந்தது.
குணாவை போன்றே வெண்ணிலாவும் நினைத்தாள்.
“ஒருவேளை மதியும், மாமாவும்… அதுதான் சரியாக இருக்கும் போல. அவங்க ரெண்டு பேருக்குமே எங்களோட காதல் புரியலங்கறப்போ, நாங்க தொல்லையா இருந்திடக் கூடாதே தீக்ஷி.
மாமாக்கு என்மீது விருப்பமிருந்தால் அவர் தான் எதாவது செய்யணும். நான் செய்ய ஒன்றுமில்லை. எனக்கிருக்கும் விருப்பத்தை நான் எல்லோர் முன்பும் சொல்லிய பிறகு, எனக்கு அப்படியொரு எண்ணமே இல்லைன்னு மாமா சொல்லிட்டால்? என்னால் அதை தாங்கிக்கவே முடியாது தீக்ஷி. இதுவரை என்கிட்டவே அவர் சொன்னது இல்லையே. வெறும் யூகத்தின் நம்பிக்கையில் என்னால் அடி வைத்திட முடியாது தீக்ஷி” என்ற வெண்ணிலா மடங்கி அமர்ந்து கைகளால் முகம் மூடி வெடித்து கதறினாள்.
அதுவரை தன்னுடைய மடியில் யாழ் தலை வைத்திருக்கிறாள் என்று வெண்ணிலாவின் அருகில் செல்லாமல் இருந்த தீக்ஷி வேகமாக வெண்ணிலாவின் அருகில் ஓடியிருந்தாள்.
வெண்ணிலாவின் கதறல் கேட்டு, மதியும் குணாவும் கூட ஓடிவந்தனர்.
அறையின் வாயிலில் நின்றிருந்த குமரனை விலக்கிவிட்டு உள்ளே சென்ற குணா வெண்ணிலாவின் அருகில் மண்டியிட்டு அமர, அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.
தாழ்வாரத்தின் விளிம்பில் இருந்தவர்களுக்கே அவளது அழுகுரல் கேட்டது என்றால் எதிர் அறையில் இருந்த அஜய்க்கு கேட்டிராதா என்ன? அவனும் வந்திருந்தான்.
உறக்கத்தில் சத்தம் கேட்டு விழித்த யாழினி என்ன நடக்கிறதென்று புரியாது விழித்தாள்.
மதி மற்றும் யாழினியைத் தவிர மற்றவர்களுக்கு வெண்ணிலாவின் அழுகைக்கான காரணம் என்னவாக இருக்குமென்று கணிக்க முடிந்தது. அதனால் அவர்கள் வெண்ணிலாவிடம் எதையும் கேட்காது அமைதியாக நின்றிருக்க… மதி வினவினாள்.
“வெண்ணிலா என்னாச்சு? ஏன் அழற?”
அப்போதுதான் சுயம் பெற்று நிமிர்ந்து பார்த்தாள் வெண்ணிலா.
உடனடியாக சத்தமாக சிரித்துக்கொண்டே கண்களை துடைத்தவள்,
“எல்லாரும் பயந்துட்டிங்களா?” எனக் கேட்டு, “நான் அழுதால் யாரெல்லாம் ஓடிவருவீங்கன்னு சும்மா டெஸ்ட் பண்ணேன்” என்றவள் மெல்ல எழுந்து நின்றாள்.
“லூசு, எதில் விளையாடுவதுன்னு ஒரு வரையறை இல்லை” என்று வெண்ணிலாவின் புஜத்தில் இரண்டு அடி வைத்தாள் மதி.
“நீங்க எல்லாரும் அவளுக்கு கொடுக்கும் செல்லம் தான். முட்டாள் மாதிரி தேவையில்லாததை விளையாடி பார்க்கிறாள்” என்று அங்கிருந்த குமரனையும் குணாவையும் குற்றம் கூறினாள் மதி.
“ம்ப்ச் மதி விடும்மா” என்று அஜய் வெண்ணிலாவுக்கு பரிந்துவர,
“இப்போ நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா?” என்ற மதி உண்மையிலேயே வெண்ணிலாவுக்கு என்னவோ என்று அத்தனை பயத்தோடு ஓடி வந்திருந்தாள்.
“இவ அழுறதை பார்த்து உடம்பே நடுங்கிப்போச்சுண்ணா” என்றவள் மெத்தையில் ஆசுவாசமாக அமர்ந்தாள்.
“சரி இதை இத்தோடு விடுங்க” என்ற குமரன் வெண்ணிலாவை அழுத்தமாக பார்த்தபடி நகர்ந்திருந்தான்.
அப்போது வந்து அந்த பாறையில் அமர்ந்தவன் தான்… இரவு படிந்த பின்னரும் அசையாது அமர்ந்திருக்கின்றான்.
குமரன் அந்த பாறையில் இருக்கின்றான் என்றாலே, யாரும் அவனை தொல்லை செய்திட மாட்டார்கள். மாலை சிற்றுண்டி நேரத்தில் கூட காந்தள் அழைத்து வருவதாகக் கூற, கமலம் வேண்டாமென்று விட்டார்.
அமைதிக்காக, தெளிவிற்காகவே குமரன் அந்த பாறையை நாடுவது. அதனால் கமலம் மறுத்துவிட்டார்.
‘இப்போ என்னத்த சுமந்துகிட்டு கவலையில் நிக்குறான்னு தெரியலையே!’ இரவு உணவிற்கு ஒருவர் பின் ஒருவர் சென்று அழைத்தபோதும் குமரன் வராது இருக்க கமலம் உள்ளுக்குள்ளே புலம்பினார்.
எத்தனை அழகாக புலர்ந்த பொழுது… இப்படி வதையோடு முடியுமென்று துளியும் அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.
தீக்ஷியிடம் வெண்ணிலா பேசியவற்றைத்தான் மீண்டும் மீண்டும் தனக்குள் அசைபோட்டுக் கொண்டிருந்தான்.
‘அப்போ என்னை விட்டுக்கொடுக்க முடிவு பண்ணிட்டாளா?’ வெண்ணிலாவின் வலி அவன் உணர்வதாய்.
கூடவே ராஜேந்திரன் குணாவிடம் சொல்லியது அவனை வண்டாகக் குடைந்தது.
குணாவின் காதலும்.
யார் பக்கம் என்ன முடிவெடுப்பதென்று தெரியாது அவனது மணடைக்குள் பல எண்ணங்களின் சுழல்.
குமரனால் வெண்ணிலாவை விட்டுக்கொடுக்க முடியாது. குணாவின் காதலை மரிக்கச் செய்திட முடியாது. அதே சமயம், ராஜேந்திரனின் ஆசையையும் எதிர்க்க முடியாது.
ராஜேந்திரன் இப்போது தான் குடும்பத்தாருடன் இணக்கமாக இருக்கின்றார். இதுவரை அவர் குடும்பத்தாரிடம் எதையும் எதிர்பார்த்தது இல்லை. மரியாதை (முதன்மை) ஒன்றைத் தவிர. தங்களின் காதல் விடயம் தெரிந்தால், அவர் எப்படி மாறுவாரென்றே அவனால் கணிக்க முடியவில்லை.
‘மதியும் குணாவை விரும்புவதாக இருந்தால், அதனைக்கூறி பேசலாம். மதி தனக்கு குணாவின் மீது ஈடுபாடில்லை என்றுவிட்டால்? இதனை வைத்தும் பேசிட முடியாது.’ குமரனுக்கு மண்டை வெடிப்பதைப் போலிருந்தது.
குமரனால் தன் காதலை சொல்லிட முடியும். ஆனால் ராஜேந்திரனின் ஆசை அவனுக்கு தடையாக நின்றது.
எப்போதுமே குமரன் செய்வது யாவும் ராஜேந்திரனுக்கு… அவரது பார்வையில் எதிராகத்தான் இருக்கும். இதிலும் அவருக்கு எதிராக தான் செயல்படுவதாக நினைத்துவிடுவாரோ என்று பயந்தான்.
முன்பு அஜய், வெண்ணிலாவை ஒன்று சேர்ப்பதற்காக இல்லாத தடை இருப்பதைப்போல் கூறினான். ஆனால் இப்போது எல்லா பக்கமும் முட்டுச்சந்தாக இருக்கிறது.
ராஜேந்திரன் ஒரு முடிவெடுத்தால் அதனை அத்தனை எளிதில் மாற்றிக் கொள்ளமாட்டார்.
இதில் பழனி வேறு.
‘அவர் சம்மதம் சொல்லாது மதியை தனக்கு பேச நினைத்திருக்க மாட்டார்கள். மதியை மறுத்தால், இத்தனை நாள் அவர் செய்ததற்கு மொத்தமாக பழிவாங்கிவிட்டதாக நினைப்பார்.’
‘யாரிடம் என்ன, எப்படி பேசுவது?’ நேரம் ஓடியது உணராது தீவிர யோசனையில் ஆழ்ந்து விட்டான்.
“மாமா.”
வெண்ணிலாவின் குரலில் திரும்பி பார்த்தான்.
“ரொம்ப யோசித்து உன்னை வருத்திக்காத மாமா. எனக்கு ஒண்ணுமில்லை. கொஞ்ச நாளில் இதுதான் நிதர்சனம் என்று புரிந்துகொண்டால் நான் சரியாகிடுவேன். நம் குடும்பத்து ஆட்களுக்கு எதிரா நீ ஒரு அடி கூட வைக்க மாட்டன்னு எனக்கு நல்லாத்தெரியும். அதிலும், மாமாவும், பெரியப்பாவும் இப்போ சேர்ந்திருக்கும் சூழலில் மீண்டும் அவர்கள் விலகிச் செல்வதை நீ விரும்பமாட்டாய். மதியை மறுக்காது இருக்க இந்த காரணமே உனக்கு போதுமே மாமா. இதில் என் காதல் எல்லாம் எங்கே உனக்கு முக்கியமாகத் தெரியப்போகிறது. உனக்கு காதலைவிட குடும்பம் முக்கியமென்று எனக்குத் தெரியாதா? நீதான் என்னை காதலிக்கவேயில்லையே அப்புறம் ஏன் இங்கு வந்து இப்படி உட்கார்ந்திருக்க. எழுந்து வா! எல்லாரும் சாப்பிடாமல் உனக்காக காத்திட்டு இருக்காங்க” என்றாள்.
அவள் பேசுவதை குறுக்கீடு இல்லாது கேட்டவன், அமைதியாக எழுந்து சென்றான் ஒரு முடிவோடு.
வெண்ணிலா நீண்ட பெருமூச்சோடு அவன் பின்னால் சென்றாள்.
“என்னப்பா உன்னை கேட்காமல் உன் கல்யாணம் முடிவு பண்ணிட்டோமேன்னு வருத்தமா?” தாத்தா வினவினார்.
“கல்யாணம் பெரியவங்க பார்த்துதானே செய்யணும். இதில் அவன்கிட்ட கேட்க என்ன இருக்கு?” பேசிய ராஜேந்திரனின் அருகில் சென்ற குமரன், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பழனியையும், ராஜேந்திரனையும் மாற்றி மாற்றி பார்த்தான்.
“நான் வெண்ணிலாவை விரும்புறேன்.” எவ்வித பூசலுமின்றி தெரிவித்தான்.
ராஜேந்திரன் இருக்கையைவிட்டு விருக்கென எழுந்து விட்டார்.