மொத்த குடும்பமும் கூடத்தில் அமர்ந்து பேசியபடி இருந்தனர். இனி எப்போது இந்த மாதிரி ஒன்றாக கூடப்போகிறோம் என்ற ஏக்கம் ஒவ்வொவொருவரின் மனதிலும் எழுந்தது.
ராஜேந்திரன் மற்றும் பழனிக்கு இத்தகைய சூழல் அத்தனை பிடித்தது. உறவுகளின் அருகாமையின் உன்னதம் புரியாது இருந்துவிட்டோமே என்று வருந்தியவர்கள், இனி எல்லோருக்கும் பிடித்தவர்களாக இருக்க வேண்டுமென எண்ணிக்கொண்டனர்.
“அன்பு பாசத்துக்கு முன்னால் எதுவுமே பெருசில்லைன்னு தோணுது மச்சான். போட்டி பொறாமையால் இத்தனை நாள் இதோட அருமை தெரியாமல் இருந்துவிட்டேன்.” பழனி ராஜேந்திரனிடம் கூற அதனை அவர் ஆமோதித்தார்.
“ஆமாம் மாப்ள… இந்த பசங்ககிட்ட இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லாமல் போச்சுதே. நம்ம வயசுக்கு இந்த ஒற்றுமை இருந்திருந்தால், குடும்பம் உறவுன்னு எத்தனை சந்தோஷத்தை அனுபவித்திருப்போம். அடிக்கடி முடியலன்னாலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது இங்கு வரணும் மாப்ள.
இப்படி குடும்பமா ஒண்ணா உட்கார்ந்திருப்பதே மனசுக்கு நிறைவா இருக்கு” என்றார் ராஜேந்திரன்.
அப்போதுதான் குமரன் வீட்டிற்குள் வந்தான்.
குமரனின் வாடியத் தோற்றம் கண்டு வீரபாண்டிக்கு மனம் சுருங்கிப்போனது.
எல்லா பேரப்பிள்ளைகளும் ஒன்றென்றாலும் குமரன் தனிதானே. பிறந்தது முதல் அவருடனே இருக்கிறானே. அவன் வாடினால் முதியவரால் தங்கிக்கொள்ள முடியுமா என்ன?
தங்களின் திருமணப் பேச்சுதான் காரணமோ என நினைத்தவர் அதனை கேட்டும் இருந்தார்.
ராஜேந்திரன் பெரியவர்களின் பேச்சினை சிறியவர்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்பதைப்போல் பேசிட… கூடத்தின் நடுவில் நின்றிருந்த குமரன் கருவிழியை சுழற்றி அனைவரையும் பார்த்தான்.
“குமரன் ஏதோ முடிவு பண்ணிட்டான்.” குணா சொல்ல அஜய் “எப்படி சொல்ற?” என்றான்.
“அவனுடைய ஆழ்ந்த அமைதி.” குணா சொல்லிட கவனம் குமரன் என்ன சொல்லப்போகிறான் என்பதில் பதிந்தது.
அவனின் பின்னால் நின்றுகொண்டிருந்த வெண்ணிலாவுக்குமே ஆர்வமாகத்தான் இருந்தது. அதோடு காலை அவன் நடந்துகொண்ட விதம் கண் முன்னால் காட்சிகளாய் விரிய, ‘உன் காதலை இப்போவாவது சொல்லுவியா மாமா, இல்லை உங்க விருப்பத்துக்கு சம்மதம் சொல்லப்போறியா?’ என்று பயத்தில் தடதடக்கும் ரயில் தண்டவாளமாக படபடத்து நின்றாள்.
வெண்ணிலாவை தவிர்த்து யாரையும் தன்னுடன் சேர்த்து வைத்து பேசுவதையே விரும்பதாவனாக, அதுவும் தன்னுடைய தம்பி காதலிக்கும் பெண்ணாக மதி இருக்க… தன்னுடைய காதலை சொல்லியே ஆக வேண்டுமென்ற உறுதியுடன் ராஜேந்திரனிலும், பழனியிலும் தன் பார்வையை நிலக்கைச்செய்தான்.
இருவரிடத்திலும் வந்திருக்கும் மாற்றம் உண்மையெனில்… உறவுகளின் அன்பை புரிந்துகொண்டிருக்கும் பட்சத்தில், பிள்ளைகளின் மனதிற்கும் விருப்பத்திற்கும் அவர்களிடத்தில் இடமிருக்கும் என்று எண்ணிய குமரன் தன் மனதை நேரடியாக உரைத்துவிட்டான்.
தன்னவளிடம் கூட திறந்திடாத தன்னுடைய மனதை எவ்வித தயக்கமும் தடுமாற்றமும் இன்றி திறந்திருந்தான்.
ராஜேந்திரன் மற்றும் பழனிச்சாமியின் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்து, அவ்விருவரின் கைகளையும் தன்னிரு கைகளால் தனித்தனியாக பிடித்து அழுத்தியவன்…
“நான் வெண்ணிலாவை விரும்புறேன்” என்று சொல்லியே விட்டான்.
சிப்பியிலிருந்து கொட்டிய முத்தாக குமரனின் வாயிலிருந்து உதிர்ந்த சொல் முத்தை கேட்ட வெண்ணிலாவுக்கு எப்படி இருக்கிறதாம்?
‘தான் கேட்டது நிஜம் தானா?’ முகமெல்லம் நொடியில் பூரித்துவிட… ஆயிரம் மத்தாப்புக்களின் பிரகாசம்.
“சொல்லிட்டான்னா? அப்போ உனக்கு முன்பே தெரியுமா?” குணா கேட்க, ஒன்றாக அமர்ந்திருந்த இளையவர்கள் அனைவரின் பார்வையும் அஜய் மீது.
“ரெண்டும் லவ் பண்ணுதுங்க. எனக்கும் பத்து நாளுக்கு முன்பு தான் தெரியும்” என்று அஜய் ஒரே மூச்சில் தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்தவன் அப்போதுதான் கவனித்தான், பெரியவர்களின் பார்வையும் அவனிடத்திலேயே!
குமரன் சொல்லியதால் நிலவிய ஆழ்ந்த அமைதியில், அஜய் கூறிய அனைத்தும் பெரியவர்களுக்கும் கேட்டிருந்தது.
‘அச்சச்சோ அவசரப்பட்டுட்டோமோ!’ அஜய் முழித்தான்.
“நானே சொல்ல வேண்டியது தான்” என்ற குமரன் அஜய்யை பார்த்து கண் மூடி திறந்தான்.
ராஜேந்திரன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து அவ்விடம் விட்டு நகர முயல…
அவரின் கையை மீண்டும் அழுத்தமாக பற்றினான்.
“சித்தப்பா ப்ளீஸ். உங்களையோ உங்களுடைய பேச்சினையே மதிக்காமல் இல்லை. அப்பாக்கு அடுத்து நீங்க தான். உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நான் நிலாவை கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். ஆனால் அதுக்காக இன்னொரு பெண்ணை மணந்து கொள்வேன் என்று மட்டும் நினைக்காதீர்கள்.”
“கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன்” என்று குமரன் சொல்லியதில் சுருங்கிய வெண்ணிலாவின் முகம், அடுத்து அவன் சொல்லியதில் ஒளி கூடியது.
“வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு திருமணம். ஒருமுறை தான் நடக்கும். அது வாழப்போறவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடக்கணும். அந்த வகையில் எனக்கும் இந்த விடயத்தில் விருப்பமென்று ஒன்று இருக்கத்தானே செய்யும். என்னோட விருப்பம் நிலா தான்.
எனக்கு வீட்டிலிருக்கும் ஒவ்வொருத்தருடைய சம்மதமும் ரொம்ப முக்கியம். அந்த வகையில் அஜய் சம்மதமும் இருக்கணும் நினைத்துதான், தெரிந்தே மறுத்து அவளுக்கு வலியை கொடுத்தேன். இல்லாததை காரணமாக சொல்லி வெண்ணிலாவை அஜய்யிடம் பேசுமாறு செய்தேன்.
அஜய்யின் சம்மதமே வேண்டும் என நினைத்த நான், உங்களுடைய சம்மதத்துக்காக எத்தனை வருடங்கள் ஆனாலும் காத்திருக்கிறேன்” என்றவன் பழனியிடம் திரும்பி…
“உங்களை பழிவாங்குவதற்காக மதியை மறுக்கிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள் மாமா. என் மனசு முழுக்க நிலா மட்டும் தான் நிறைஞ்சிருக்காள்” என்றதோடு, “குணாவும் மதுவும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்க” என்றான்.
ராஜேந்திரன் தன் மகனை ஏறிட்டார்.
“உன்னை தவறாக நினைத்த காலமெல்லாம் எப்பவோ போயிடுச்சு குமரா. ஒருத்தருடைய சந்தோஷத்தில் நம்முடைய மகிழ்ச்சி இருக்குன்னு புரிஞ்சி ரொம்ப நாளாகுது. எனக்கு குமரனும் குணாவும் ஒண்ணுதான். மதியோட எந்த விருப்பத்தையும் ஒரு அப்பாவா நான் தெரிந்துகொண்டதே இல்லை. மதி எஞ்சினியரிங் படிக்கிறான்னு தெரியும். ஆனால் எந்த துறை, பிரிவு ஒன்றும் தெரியாது. எவ்வளவு பீஸ் கட்டுறான்னு கூடத் தெரியாது. இந்த பிள்ளைங்க எல்லாம் ட்ரெஸ் எடுக்கணும் என்றால் கூட உன்னைத்தான் கேட்குதுங்க. அப்பாவா முன்ன நின்னு எதையுமே நான் செய்ததில்லை. அப்படி இருக்கும்போது இதில் மட்டும் என்னோட விருப்பத்தை திணிப்பது சரிவராதே குமரா. பெத்தவங்களை மதிச்சு பிள்ளைங்க விருப்பத்தை சொல்லும்போது நல்லதா இருந்தால் ஏத்துக்கிறது தானே பெத்தவங்களுக்கு அழகு.”
பழனியின் பக்குவப்பட்டப் பேச்சு ராஜேந்திரனுக்கு பலவற்றை உணர வைத்தது.
பழனி சொல்லியது எத்தனை உண்மை.
பிள்ளைகளை மதித்து இதுவரை உனக்கு பிடித்திருக்கிறதா என்றுகூட ராஜேந்திரன் கேட்டதில்லை. இன்றும் தீக்ஷியின் ஆடை முதற்கொண்டு அவரின் தேர்வு தான். குணாவின் படிப்பு முதல் எல்லாம் அவரது விருப்பமே நிறைவேறியிருக்கிறது.
அவன் வாங்க வேண்டுமென்று கேட்ட இருசக்கர வாகனம் கூட பெரும் மதிப்பென்று மறுக்கவே செய்தார்.
குமரன் வாங்கிக்கொடுத்தாக அவன் சொல்லும்போது, ‘நான் வேண்டாமென்று மறுத்ததை வாங்கிக் கொடுத்திருக்கிறானே!’ என்று கோபம் தான் கொண்டார்.
தான் மறுப்பதினால் குணாவுக்கு உண்டாகும் வருத்தத்தைப் பற்றி அவர் யோசிக்கவில்லை.
ஆனால் இப்போது அனைத்தும் விளங்கியது.
தன்னுடைய முடிவை மற்றவர்கள் ஏற்காது மறுக்கும் போது தனக்குள் எழும் ஏமாற்றமும் அதனால் உண்டாகும் கோபமும் தானே மற்றவர்களுக்கும். எல்லாம் அனுபவித்து முடித்த இந்த வயதிலும் தன்னுடைய விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல் குணா எதிர்த்து பேசியது எத்தனை கோபத்தை அவருள் ஏற்படுத்தியது. அனைவரின் முன்பும் அதனை காட்ட பிடிக்காமலே அப்போது அமைதியாக இருந்துவிட்டார்.
ராஜேந்திரன் தனக்குள் உழன்றவராக நின்றுவிட்டார்.
காந்தளுக்கு தான் ஆசைப்பட்ட தன்னுடைய குமரனே மருமகனாகும் வாய்ப்பு ஏற்பட்டதில் அத்தனை மகிழ்ச்சி. அது அவரின் முகத்திலும் பிரதிபலித்தது. ஆனால் ராஜேந்திரன் என்ன சொல்லுவாரோ என்று கலக்கமாக பார்த்திருந்தார்.
குணவதிக்கு தன்னுடைய அண்ணன் பிள்ளைகள் யார் தனக்கு மருமகனாக வந்தாலும் சந்தோஷம் என்கிற நிலை தான். அவருக்கு அவரது தாய் தந்தைக்கு பின்னரும் பிறந்த வீட்டு உறவு ஆயுளுக்கும் வேண்டும். அவ்வளவுதான்.
“பிள்ளைங்களோட மனசு தெரியாமல் நாம் முடிவு பண்ணது தப்புப்பா. நாம் வாழ்ந்து முடிச்சிட்டோம். இனி வாழப்போறதுங்க விருப்பத்துக்கு வாழ்க்கை அமைந்தால் தானே சந்தோஷமாக இருக்கும். அவங்க வேதனைப்பட்டால் நம்மாள் பார்த்துக்கிட்டு இருந்திட முடியுமா? பிள்ளைகளுக்காக இறங்கி வருவதில் தப்பில்லை ராஜேந்திரா!” வீரபாண்டி தன் பேரப்பிள்ளைகளுக்காக தன்னுடைய மகனிடம் பேசினார்.
“நாங்க தான் அவசரப்பட்டுட்டோம் ராஜேந்திரா.” கமலம் தன் மகனிடம் என்ன பேசுவதென்று தவித்து நின்றார். குமரன் பிறந்தது முதல் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இதுவரை அவனுக்கென்று எதையும் ஆசைப்பட்டதில்லை. முதல் முறையாக அவன் ஆசைப்பட்டு கேட்கும் ஒன்று வெண்ணிலா. எப்படியாவது பேரனின் ஆசையை நிறைவேற்றிட வேண்டுமென்று கவலை கொண்டார்.
அன்னையின் முகத்திலிருந்த கவலை ராஜேந்திரனுக்கு புரியத்தான் செய்தது. ஆனால் அவரால் சடுதியில் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
ராஜேந்திரனுக்கு அருகில் வந்த குணவதி…
“உனக்கு என் பொண்ணு மருமகளா வரக்கூடாதாண்ணா. நான் உன் தங்கச்சி இல்லையா?” என்று கேட்டுவிட ராஜேந்திரனுக்கு நெஞ்சோரம் சுருக்கென்று தைத்தது.
‘காந்தளை மட்டுமே யோசித்த தான், குணவதியை மறந்தோமே!’ என்று வருந்தினார்.
ராஜேந்திரனுக்கு குணவதியை விட காந்தளை அதிகமாகவே பிடிக்கும். எப்போதும் தங்கையை தன் கைக்குள்ளே வைத்திருப்பார். துரையின் மீது உண்டான கோபத்தால் குடும்பத்தையே பிரிந்து விலகி சென்றுவிட்டாரேத் தவிர காந்தளுடன் நெருக்கமாக உறவாட முடியவில்லையே என்று வேதனை கொண்டிருக்கிறார். அந்த வேதனையை போக்குவதற்கே வெண்ணிலாவை மருமகளாக்கிட ஆசை கொண்டார். இப்போது குணவதி இப்படி கேட்கவும், மதியும் தன்னுடைய தங்கை மகள் தானே என்று சிந்தித்தார்.
“சரின்னு சொல்லுங்கண்ணா. பசங்களவிடவா நம்ம பிடிவாதம் நமக்கு முக்கியம்?” எம்பிரான் கூட பேசி பார்த்தார்.
“அவன் இந்த சாப்பாடு வேணுன்னு கூட வாய் திறந்து கேட்டது இல்லைண்ணா. அவன் முதல் முதலா கேட்கிறது இதுதாண்ணா.” அதற்கு மேல் கண்ணனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“என்ன மாமா ரொம்ப யோசிக்கிறீங்க. மதியும் உங்க தங்கச்சி மகள் தானே! குமரனுக்கு துரை மாமா உயிரோடு இருந்து செய்யுறதை இப்போ நீங்க தானே செய்யணும். சரின்னு சொல்லுங்க மாமா. அப்படியே திரும்பி எல்லா பிள்ளைங்க முகத்தையும் பாருங்க. உங்க பதிலுக்காக எப்படி காத்திருக்குதுங்கன்னு. சின்னதுல இருந்து பெருசு வரை ஜோடி மாறக்கூடாதுன்னு தவிக்கிறது உங்களுக்கு தெரியலையா மாமா?” சுலோ படபடவென்று கேட்டிட பிள்ளைகள் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டனர்.
“அண்ணா பாவம்’ப்பா! எங்களுக்காக” என்று தீக்ஷி ஆரம்பித்திட…
“என்னை நீங்க மருமகளாக ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை மாமா. குமரன் மாமா, வெண்ணிலாவுக்கு ஓகே சொல்லுங்க…” மதியைத் தொடர்ந்து அவளது பேச்சினை ஆமோதித்து, “எங்களுடைய காதலுக்கு கூட நீங்க ஓகே சொல்ல வேண்டாம் ப்பா. அவனுக்கு சொல்லுங்க ப்ளீஸ்” என்றான் குணா.
“நீங்க கன்வீன்ஸ் ஆக நாங்க என்ன பண்ணனும் சொல்லுங்க மாமா, பண்றோம்.” அஜய் கேட்டிட, “ஆமாம் பெரியப்பா. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறோம்” என்று ஒருசேர வேண்டினர் யாழும், வருணும்.
‘இந்த மனுஷன் பிடிவாதம் தெரியாது எல்லாம் கெஞ்சி நிக்கிதுங்களே!’ செல்வியால் வாய் திறந்து சொல்ல முடியவில்லை. சொல்லிவிட்டால் ராஜேந்திரனிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமே. அந்த பயம் தான்.
ஒருத்தனுக்காக மொத்த குடும்பமும் வேண்டி நிற்பது ராஜேந்திரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியொரு உறவுகளை சம்பாதித்து வைத்திருப்பவன், மனதால் அவர்கள் மீது எத்தனை அன்பு கொண்டவனாக இருப்பான். தனக்குள் அசைப்போட்டார்.
இன்னமும் ராஜேந்திரனின் கை குமரனின் கைக்குள் தான் இருந்தது.
“பெரியம்மா இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா பெரியப்பா? இருந்தால் எப்படியிருக்கும்?” எனக் கேட்ட குமரன், “நிலா இல்லாமல் எனக்கும் அப்படித்தான் பெரியப்பா” என்றிட ராஜேந்திரனின் உள்ளுக்குள் அவரது பிடிவாதம் உடைந்தது.
“ஆக மொத்தத்தில் எல்லோரும் பசங்க விருப்பம் தான் முக்கியமென்று நல்லவங்களாகிட்டீங்க. நான் மட்டும் கெட்டவனா தெரியணுமா?” என்று வாய் திறந்தவர், தன் கையை பிடித்திருந்த குமரனின் கை மீது தன்னுடைய மற்றொரு கையை வைத்து அழுத்தியவராக “உன் மனசு போல சந்தோஷமா இருடா” என்று கூறினார்.
“வெண்ணிலா மருமகளா வரணும் ஆசைப்பட்டேனேத் தவிர நீ வரக்கூடாதுன்னு நினைக்கலடா” என்று குணா மதியின் காதலுக்கும் தன்னுடைய சம்மதத்தை வழங்கியவர் மதியின் தலையை ஆதுரமாக தடவி கொடுத்தார்.
சிறியவர்கள் அனைவரும் உற்சாகக் கூவலுடன் ராஜேந்திரனை மொத்தமாகக் கட்டிக்கொண்டு ஆரபரித்தனர்.
ராஜேந்திரனுக்கு, இத்தனை வருட வாழ்வில் என்றுமே அனுபவித்திடாத அழகி தருணம் அது. ‘இந்த சந்தோஷத்திற்காக இன்னும் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்திடலாம், எத்தனை அடிகள் வேண்டுமானாலும் இறங்கி செல்லலாம்’ என்றே அக்கணம் தோன்றியது.
“கத்தாதிங்க பிள்ளைகளா! ராத்திரி நேரம்” என்ற செல்வி, “இப்போவாவது சாப்பிடலாம் வாங்க” என்று அழைத்தார். அவருக்கு கணவர் தன்னுடைய பிடிவாதத்திலிருந்து முதல்முறை இறங்கி வந்திருப்பது ஆச்சரியமே.
வீரபாண்டி ராஜேந்திரனை அணைத்து விடுவித்தார்.
மற்றவர்களும் ஒவ்வொரு விதத்தில் ராஜேந்திரனுக்கு தங்களது அன்பை வெளிப்படுத்திட, மனிதர் நெக்குறுகிப் போனார்.
தன்னுடைய வாழ்வே இன்று தான் முழுமை அடைந்ததாக உணர்ந்தார்.
அனைவரும் சாப்பிட உணவுக்கூடம் செல்ல… வெண்ணிலாவும் குமரனும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றிருந்தனர்.
“முதலில் வந்து சாப்பிடுங்கடா. அப்புறம் உங்க பஞ்சாயத்தை வச்சிக்கோங்க” என்று அஜய் இருவரையும் இழுத்துச் சென்றான்.
சாப்பாட்டு நேரம் இனிமையானதாக கரைந்தது.
அடுத்து அவரவர் தங்களது ஊருக்கு செல்வதைபற்றி பேசிட…
“அப்புறம் குமரன் வெண்ணிலா திருமணத்துக்கு தான் இதுபோல் ஒண்ணு சேருவோம்” என்றார் எம்பிரான்.
“இந்த நாள் மறக்கமுடியாத நாளாகிருச்சுடா தம்பி. எதையோ சாதித்த உணர்வு. இப்படி எல்லாரும் ஒண்ணா இருப்பதே சந்தோஷம் தான்ல” ராஜேந்திரன் மனம் நெகிழ்ந்து கூறினார்.
“அப்போ இன்னும் ரெண்டு நாள் இருங்கண்ணா. குமரன் கல்யாணத்துக்கு தேதியை குறிச்சிட்டு கிளம்பலாம்” என்றார் கண்ணபிரான். காந்தளும் அதையே வழிமொழிந்தார்.
“தடையா பேசுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்” என்று அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பிய குமரன்.
‘திரும்பவும் முதலில் இருந்தா? இப்போ என்னத்த காரணம் காட்டப்போகிறார்?’ குமரனை முறைத்தாள்.
“என்ன குமரா இது, நீதானே வெண்ணிலாவை விரும்புறேன் சொன்னாய். இப்போ வந்து இப்படி சொல்லுற?” கமலம் ஆதங்கமாகக் கேட்டார். அவருக்கு தங்களின் மூத்த வாரிசின் திருமணத்தை விரைவில் பார்த்திட வேண்டுமென்கிற ஆவல்.
“ஏனாம்?” குணாவிற்கு அவன் திருமணம் செய்துகொண்டால் தானே தன்னுடைய ரூட் கிளியராகும் என்கிற எண்ணம்.
“நிலாக்கு இன்னும் ஒரு வருடம் படிப்பு இருக்கே! ஹவுஸ் சர்ஜன் பீரியட் அவளது படிப்பில் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை முடிக்கட்டுமே” என்று மற்றவர்கள் மறுத்து பேச காரணமின்றி தகுந்த பதிலை கூறினான்.
“நீ ஒண்ணு செய்தால் அதில் நிச்சயம் ஏற்கும்படியான காரணம் இருக்குமென்று ஒவ்வொரு முறையும் நிருபிக்கிற குமரா” என்று முதல் முறையாக வார்த்தை வழியாக மனம் திறந்து பாராட்டியிருந்தார் ராஜேந்திரன்.
“அப்போ குணா, மதிக்காவது ஏற்பாடு பண்ணலாமே! வெண்ணிலாவுக்கு மதி அக்கா தானே. அக்காவுக்கு பண்ணிட்டு தங்கச்சிக்கு பண்ணுவோம்” என்று கமலம் சொல்லிட…
“அப்படி பார்த்தால், எனக்கு குமரன் அண்ணன். அவனுக்கும் எனக்கும் ஒரே நாளில் நடந்தால் கூட ஓகே. ஆனால் அவனுக்கு முன்னால் எனக்கு வேண்டாம்” என்றான் குணா. அழுத்தமாக.
“அவன் சொல்லுவதும் சரிதானே! அப்படி ஒண்ணும் வயசாகிடலையே! வெண்ணிலாவுக்கு இந்த வருடம் படிப்பு முடிந்ததும் ரெண்டு கல்யாணத்தையும் ஒட்டுக்கா வச்சிடலாம்.” கண்ணபிரான் சொல்லிட அனைவருக்கும் அதுவே சரியெனப்பட்டது.
“சரி சரி பேசிட்டு இருந்தது போதும். நாளைக்கு சீக்கிரமே கிளம்பனும். போய் உறங்குங்க” என்று தத்தம் அறைக்கு அனுப்பி வைத்தார் கமலம்.
பெரியவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்த பின்னரும் இளம் தலைமுறையினரின் பேச்சுக்கள் நின்றபாடில்லை.
ஆண்கள் நால்வரும் குமரனின் அறையில் அவனை வைத்து செய்துவிட்டனர்.
இங்கு வெண்ணிலாவின் நிலையும் சகோதரிகளின் கையில் அதேதான்.
“என்னிடம் கூட சொல்லவே இல்லையே குமரா?” குணா முறுக்கிக்கொண்டான்.
“நானவது ரெண்டு மாத கதையைத்தான் சொல்லவில்லை. சாரு ரெண்டு வருட கதையை சொல்லவில்லை” என்று குமரன் இழுக்க…
“அதானே… நீயும் மறைச்சிருக்க. அப்புறம் எதுக்கு அவனை கேள்வி கேட்கிறாய்?” என்றான் அஜய்.
“மதி ஓகே சொல்லியிருந்தால் நானும் சந்தோஷமா ஷேர் செய்திருப்பேன்” என்று தான் சொல்லாமல் விட்டதற்கான காரணத்தை மொழிந்த குணா, “இப்பவும் என்னால் நம்பவே முடியல குமரா. அப்பாவை நினைத்துதான் அத்தனை பயம். ஆனால் அவரையே உன் பக்கம் சாய வச்சிட்டியேடா” என்றான்.
“உன் அப்பா ஒத்துகிட்டதுக்கு முதல் காரணம் பழனி பெரியப்பா எந்தவித எதிர்வாதமும் இல்லாமல் குமரன் சொல்லியதை ஏற்றது தான். அவர் கொஞ்சம் முறுக்கியிருந்தாலும், உன் அப்பாவும் வீம்புக்கு அவருக்கு மேல் கொம்பில் ஏறி நின்றிருப்பார்” என்றான் அஜய்.
“எனக்கே ஆச்சரியம் தான் அண்ணா. பழனி மாமா எப்படி திடீரென இப்படி மாறினாரென்று.” வருண் தன் சந்தேகத்தை முன் வைத்தான்.
“அவர் கல்யாண விடயத்தில் அமைதியாக ஏற்றுக்கொண்டதுக்கு, அந்த சரக்கு விடயம்… நீ உதவி செய்தது மட்டும் காரணமில்லைன்னு தோணுது குமரா!” குணா யோசனையாகக் கேட்டிட…
“எல்லாம் தங்கச்சிக்காக அண்ணன் பார்த்த வேலை” என்று குமரன் அருளை கை காட்டிட…
“எப்பிடிடா?” என்ற பாவனை குணாவிடம்.
முன்தினம் நடந்த நிகழ்வை அவர்களுக்கு ஓட்டிக்காட்டினான் அருள்.