அன்று காலையில் தான் கதிர் நிலவு தங்களது வாழ்க்கை பந்தத்தில் திருமணத்தால் இணைந்திருந்தனர்.
ஒருவருடம் என்று சொல்லிய குமரன், வெண்ணிலாவின் விருப்பமாக மருத்துவத்தில் மேல்படிப்பாக மகப்பேறு மருத்துவம் இரண்டு ஆண்டுகள் படிக்க வைத்த பின்னரே திருமணம் செய்துகொள்ள சம்மதித்தான்.
அந்த கோபம் வெண்ணிலாவுக்கு இன்றளவும் உள்ளது. இரண்டாம் வருடம் படிக்கும்போது அவளாகவே திருமணம் செய்துகொள்ளலாம் என்று கேட்டிருக்க…
“படிக்கும்போது படிப்பு மட்டும் தான் சிந்தனையில் இருக்க வேண்டும். கல்யாணம் ஆகிட்டால் உன்னிடம் என் கட்டுப்பாடெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிடும். என் தொல்லையில்லாம் நீ படிக்கணும்.” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லிய அதே வார்த்தைகளை சொல்லி அவளது வாயினை அடைத்துவிட்டான்.
அன்று முடிவு செய்தாள். இனி தானாக திருமணத்தைப்பற்றி பேசக்கூடாதென்று முறுக்கிக்கொண்டவள் இன்றும் இறங்கி வரவில்லை.
எப்போதும் அவனது காதலைத்தேடி இவள் தான் செல்வதைப்போன்று இருக்க… மொத்தமாக அவனைத் தேடுவதை தனக்குள் மறைத்துக்கொண்டாள்.
அவளை ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து வைத்திருப்பவனுக்கு அவள் மூச்சு விடும் காரணம் கூட அறிய முடியுமே. அவளின் எண்ணவோட்டமா புரியாது. அவளின் கவனம் இப்போது படிப்பில் இருப்பது அவசியம் என்று உணர்ந்தவன், அவளின் அமைதியை கலைக்காது அவள் போக்கிலேயே இவனும் இருந்துகொண்டான்.
இருப்பினும் தினமும் அவளை பார்த்திடாது அவன் பொழுது அடங்காது. அதற்காகவே அவளின் வீட்டிற்கு சென்று அவளின் முறைப்பை விரும்பியே பெற்று வருவான்.
வெண்ணிலாவின் மேல்படிப்பும் இறுதியை நெருங்கிட…
குமரனே திருமணப்பேச்சை கண்ணபிரான் மூலம் ஆரம்பித்துவிட்டான். அதில் வெண்ணிலாவுக்கு ஆச்சரியம் தான். இருப்பினும் தன்னுடைய ஆர்வத்தை குமரனிடம் காட்டிக்கொள்ளாது கோபமாகவே வலம் வந்தாள்.
இதோ இரண்டு நாட்களுக்கு முந்தைய நாள் வெண்ணிலாவின் படிப்பு மொத்தமாக முடிந்திருக்க இன்று அவர்களின் திருமணம் சுற்றம் சூழ கோலாகலமாக நடந்திருந்தது.
குணாவிற்கும் மதிக்கும் கூட அன்று தான். இரு ஜோடிக்கும் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் முடிந்திருந்தது.
“எங்களுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம்” என்று குமரன் எடுத்து சொல்லியும் குணா ஒத்துக்கொள்ளவில்லை. ராஜேந்திரனும் குணாவின் பக்கம் நின்றது தான் ஆச்சரியம்.
ராஜேந்திரன் வேலையை விட்டுவிட்டு குடும்பத்தோடு ஏற்காட்டிலேயே தங்கிவிட்டார். ஆலைகளை பார்த்துக்கொள்வது குமரனாக இருந்தாலும், கணக்கு வழக்குகள் அனைத்தையும் மனமுவந்து ராஜேந்திரனிடம் ஒப்படைத்துவிட்டான் குமரன். அதில் அவருக்கு குமரனை எண்ணி ஏக பெருமை.
குமரனின் காப்பி பொடி இப்போது இந்தியா முழுவதும் பிரபலம். அதற்காக அவன் உழைத்தது அதிகம்.
வேண்டா வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்த மென்பொருள் வேலையை விட்டுவிட்டு, தங்களது பழ பண்ணையை பார்த்துக்கொள்கிறான் குணா. தொழிலில் அவனுக்கு குரு அவனது அண்ணன் தான். எதையும் குமரனிடம் யோசனை கேட்டுத்தான் செய்திடுவான்.
தீக்ஷிக்கு ஒரு வருடம் முன்பு தான் மணமாகியிருந்தது. தங்களது திருமணத்திற்கு முன்பு தங்கைக்கு செய்திட வேண்டுமென முடித்து வைத்தனர் அண்ணன்மார்கள் இருவரும். அதற்கு ராஜேந்திரன் எவ்வித மறுப்பும் சொல்லவில்லை.
எல்லாம் தன்னுடைய மூத்த மகன் குமரன் பார்த்துக்கொள்வான் என்று வெளிப்படையாகக் கூறுமளவிற்கு ராஜேந்திரன் மாறியிருந்தார்.
அதில் மூத்த தலைமுறைக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
அஜய் இப்போது சேலத்திலேயே சொந்தமாக விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்கிவிட்டான். ஒன்றரை வருடம் ஆகிறது. பணம் கொடுத்து பக்க பலமாக அவனுடன் நின்றது குமரன் தான். உழைப்பும் நேர்மையும் இருந்தால் இருக்கும் இடம் முக்கியமில்லை என்பதில் தெளிவாகியிருந்தான். முதலில் தடுமாறினாலும் அவனது துறையில் அவனை பெரும் நிறுவனங்களால் தேட வைத்திட்டான். அவனது தொழிலில் அவன் உயரத்தில் இருக்கின்றான். இருந்தபோதும், அன்னையிடம் இழந்த அனைத்தையும் இப்போது காந்தளுடனிருந்து வட்டியும் முதலுமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறான். காந்தள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு தன் மகனோடு ஐயக்கியமாகி விட்டார்.
பழனிக்கு ஆலையின் தரம் உயர்த்தி அவரை மீண்டும் பழைய நிலைக்கு ஏற்றிவிட்டான் குமரன். இப்போதெல்லாம் பழனிச்சாமி நேர்வழியை மட்டுமே பின்பற்றுகிறார்.
எம்பிரான் தன் வேலை ஓய்வு பெரும் நாளிற்காகக் காத்திருக்கிறார். தன் வீட்டோடு எப்போதடா இணைந்திருப்போம் என்ற ஆவலில்.
வருண் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கின்றான். தன்னுடைய அண்ணன்களின் திருமணத்திற்காக பத்து நாள் விடுப்பில் வந்திருக்கின்றான்.
யாழினி பொறியியல் நான்காம் ஆண்டு செல்லவிருக்கின்றாள்.
இன்று திருமணம் முடிந்த கையோடு குணாவையும், மதியையும் தேன் நிலவிற்கு காஷ்மீருக்கு அனுப்பி வைத்துவிட்டான் அஜய். குணாவும் மதியும் தங்கள் வாழ்க்கையைத் துவங்கிட காஷ்மீரை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
அஜய்… குமரன், வெண்ணிலாவிற்கும் தேன் நிலவிற்கு ஏற்பாடு செய்திட… குமரன் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான்.
அவனுக்கு அவனது அறையில் கதிர் நிலவின் சங்கமம் நடைபெற வேண்டும். அவனது பல வருட கனவாயிற்றே! எங்கோ ஒரு மூலையில் தனக்கு சொந்தமில்லாத இடத்தில் வாழ்வைத் தொடங்குவதில் அவனுக்கு விருப்பமில்லை.
சுலோவும், செல்வியும் வெண்ணிலாவுக்கு மெல்லிய ஒப்பனை செய்துகொண்டிருக்க… குணவதி வெள்ளி சொம்பில் சூடான பாலினை கொண்டு வந்தார்.
“சூடு சரியாத்தானே இருக்கு அக்கா?” காந்தள் கேட்டிட… “மலரும் நினைவா?” என்று தங்கையை கிண்டல் செய்தார் குணவதி.
“உன் அம்மா அப்பா கல்யாண நாள் இரவு, காந்தள் நல்ல சூடா பாலை கொடுக்க, உன் அப்பா வாங்கி அப்படியே வாயில் சரிச்சிட்டார். சுட்டுடுச்சி போல. அய்யோ அம்மான்னு ஒரே சத்தம். என்ன ஏதுன்னு எல்லாரும் போய் பார்க்க, உன் அப்பா காந்தளை கை காட்டிட… அன்னைக்கு எங்களுக்கெல்லாம் என்ன தோணிருக்கும்?” என்று மறைபொருள் வைத்து குணவதி சொல்லிட செல்வியும், சுலோவும் சத்தமாக சிரித்துவிட்டனர்.
“எதையாவது சொல்லி பிள்ளையை பயம் காட்டாதீங்க?” கண்ணபிரான் தான் அவர்களின் பேச்சுக்கு புள்ளி வைத்தார்.
“எதுக்குடா இந்நேரம் வரை உட்கார்ந்திருக்கீங்க? போய் படுங்க போங்க.” கமலம் விரட்டிட, குமரனைத் தவிர்த்து ஆண்கள் தத்தம் அறைகளுக்குள் புகுந்தனர்.
வீரபாண்டியும் எழ, “நீங்க இருங்க திருநீறு பூசிவிட்டு போவீங்க” என்று கணவரை உட்கார வைத்தார்.
மற்ற இளையவர்களை இருட்டியதுமே கீழிருக்கும் அறைகளுக்குள் தள்ளிவிட்டிருந்தார் கமலம்.
சிறிது நேரத்தில் பெண்கள் நால்வரும் சேர்ந்து வெண்ணிலாவை கிளப்பி வெளியில் அழைத்துவர,
“ரெண்டு பேரும் சேர்ந்து சாமி கும்பிடுங்கப்பா” என்று புது தம்பதியனரை பூஜை அறைக்கு அழைத்துச்சென்ற கமலம் வெண்ணிலாவை விளக்கேற்ற சொல்ல, அவளோ குமரனின் கை பிடித்து இணைந்து ஏற்றினாள்.
பார்த்திருந்தவர்களுக்கு மனமெல்லாம் நிறைந்து போனது.
“தாத்தா பாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க.” சுலோ சொல்லிட இருவரும் பெரியவர்களை வணங்கி எழுந்தனர்.
இருவரையும் ஆசீர்வதித்து திருநீறு பூசிவிட்ட வீரபாண்டி, “அப்பா, அம்மாவிடம் தொடங்குற வாழ்க்கை நல்லபடியா இருக்கணும் வேண்டிக்கோப்பா” என்று தன் மூத்த மகனின் நினைவில் கண் கலங்கினார்.
சட்டென்று குமரனின் முகத்தில் தாய் தந்தையை நினைத்து வருத்தத்தின் சாயல். வெண்ணிலா அவனின் கரம் பற்றி ஆறுதல் அளித்தாள்.
“நல்ல நாள் அதுவுமா கோட்டித்தனமா கண்ணை கசக்கிக்கிட்டு. புள்ளை முகம் சோர்ந்து போச்சுதே! இந்த மனுஷனை” என்று குணவதியிடம் கண்ணைக்காட்டிவிட்டு கணவரை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார் கமலம்.
“உனக்கு துணையா அவங்க எப்பவும் இருப்பாங்க குமரா. சந்தோஷமா இருக்கு வேண்டிய நேரம் இது.” காந்தள் தேற்றிட தன்னை இயல்பாக்கிக்கொண்டான்.
சில நிமிடங்கள் கழித்து வெண்ணிலாவை செல்வியும், சுலோவும் மாடிப்படியின் இறுதிவரை சென்று, விட்டு வந்தனர்.
வெண்ணிலாவிற்கு தயக்கமோ கூச்சமோ ஒன்றுமில்லை. அவளது மாமா, அவனிடம் அவளுக்கென்ன வெட்கம்.
தாழிடப்படாத கதவினை திறந்து கொண்டு உள் சென்றாள் வெண்ணிலா. அறை எவ்வித அலங்காரமும் இன்றி அளவான வெளிச்சத்தில் இதமான வாசனையோடு இருந்தது. அதுவே அவளை மேலும் இயல்பாக வைத்தது. குமரன் பால்கனியில் நின்றிருந்தான்.
பால் சொம்பை மெத்தைக்கு அருகிலிருந்த சிறு மேசையில் வைத்தவள், குமரனுக்கு அருகில் சென்று அவனை பின்பக்கமாக அணைத்திருந்தாள்.
முதல் அணைப்பு, அவனது பரந்த முதுகில் கன்னம் வைத்து அழுத்தினாள். குமரனின் தேகம் சிலிர்த்து அடங்கிட தலையை உயர்த்தியபடி கண்களை மூடிக்கொண்டான். இருவருமே அக்கணத்தை ஆழ்ந்து ரசித்தனர்.
குமரன் முகம் வானோக்கி உயர்ந்தே இருக்க… அவனுக்கு இரவு வானில் பவனி செல்லும் சந்திரனை காண பிடிக்குமாகையால், என்ன பேசவதென்று தெரியாது, அதனை காரணமாக வைத்து பேச்சை ஆரம்பித்திருந்தாள்.
“நிலா தான் என் கைக்குள் வந்துவிட்டதே வெண்ணிலவாக” என்றவன் அவளின் கரம் பற்றி சுழற்றி இழுத்தவனாக அவளின் வயிற்றில் கரம் பதித்து, அவளின் முதுகு தன் மார்பில் உரசிட கட்டிக்கொண்டான்.
மிக மிக இயல்பாய் முதல் நெருக்கம் அவர்களுக்குள். இருவருக்குமே பதட்டமோ, தடுமாற்றமோ இல்லை. இருவருக்குமேயான அதீத காதல், அதனின் நீண்ட காத்திருப்பு, அவர்களுக்கு நிதானத்தை கொடுத்திருந்தது.
“மாமா…” உதடு மட்டுமே அசைந்தது. காற்றாய் அவளின் விளிப்பு அவன் செவி நுழைந்தது.
“அம்மாடிக்கு கோபமெல்லாம் போயாச்சா?” அவளின் வெற்றுத் தோளில் தன்னுடைய நாடியை பதித்தவனாக வினவினான்.
“இப்படி நிக்க வச்சு கேட்டால்… இருக்குன்னு எப்படி பொய் சொல்வதாம்?” அவன் முன் திரும்பியவளாக, அவனை இடையோடு கட்டிக்கொண்டு முகம் உயர்த்தி வினவினாள்.
கதிரின் சிரித்த முகம் என்றுமே அவளை வசம் இழக்கச்செய்திடுமே!
“எனக்கு நீ சிரிக்கணுமென்றெல்லாம் இல்லை. என் பார்வை படும் தூரம் நீ இருந்தாலே, நான் மொத்தமும் காலி அம்மாடி.” குமரனின் முகத்தில் அத்தனை காதல். அவனின் முகத்தை இமை சுருங்காது ரசித்தாள்.
இருவருக்குமிடையே காதலிக்கத்தான் தடைகள் இருந்தனவே தவிர, கணவன் மனைவியாக வாழ்வதற்கு எவ்வித தடையுமில்லை.
“மாமா” என்று சிணுங்கியவள் அவனின் மார்பிலே அடித்தாள்.
“இப்படியே வாழ்க்கை முழுக்க உனக்குள் அடங்கியிருக்கணும் அம்மாடி.”
“இப்படியே இருந்தால் கால்வலி தான் வரும்.” வெண்ணிலா பட்டென்று சொல்ல, அவளை செல்லமாக முறைத்தான். சில நொடிகளில் இருவருமே பக்கென்று ஒருசேர சிரித்தனர்.
“நீ சந்தோஷமா இருக்கியா அம்மாடி?”
“நீதான் என் பக்கத்துலே இருக்கியே மாமா. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும். நான் நினைக்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் செய்திடுவ. நீ காட்டலன்னாலும் உன்னுடைய ஒவ்வொரு செயலிலும் என்னால் உன் காதலை உணர முடியுது மாமா. உன்னால் நான் அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்” என்றவளை மேலும் தனக்குள் இறுக்கினான்.
“என்னை திருப்பி கேட்கமாட்டியா நிலாம்மா?”
“என்னது?”
“நான் உன்னை கேட்டேனே?”
“உனக்கென்ன மாமா… நீ ஆசைப்பட்ட மாதிரியே நம்முடைய மொத்த குடும்பமும் ஒண்ணாயிருக்கு. ஒருத்தருக்கொருத்தர் நீ நினைத்த மாதிரி அத்தனை அன்போடும் பாசத்தோடும் இருக்கோம். அதைவிட இந்த கதிரோடு கரத்தில் இந்த நிலா.” நீ சொல்லாமலே உன்னை நானறிவேன் என்பதாக இருந்தது அவளின் பதில்.
அவனின் அணைப்பு கூடிக்கொண்டே போனது.
இயற்கைக்கு மாறாக கதிரின் அருகில் குளிர்ச்சியை உணர்ந்தாள் நிலவவள்.
“நிலாவால் தான் கதிருக்கு அதீத சந்தோஷம்” என்றவன் பெண்ணவளை கைகளில் ஏந்தியிருந்தான்.
குமரன் கட்டிலை நோக்கி ஒவ்வொரு அடியையும் வைத்திட, வெண்ணிலாவுக்குள் இனிய படபடப்பு. அன்றைய நாளுக்கே உரிய அவஸ்தை. அவனின் கைகளில் நெளிந்தவாறே, கணவனின் கழுத்தில் கரம் கோர்த்தாள்.
முதல் தொடுகையல்ல, ஆனால் உரியவனாக எல்லாம் முதல் தான். காதலை சொல்லிய பிறகு சாதாரண தொடுகையையும் தவிர்த்தான். தன்மீதே அவனுக்கு அத்தனை நம்பிக்கை. இன்றைய நாள் வரை இரண்டடி தள்ளி நின்றே காதலித்தான். அதனால் அவர்களுக்குள் எல்லாமே முதல் தான்.
முதல் தேக உரசல்… கதிரவனுக்கே பற்றி எரிந்தது. அக்னி தலைவனுக்கே அனல் மூச்சு தகித்தது. அவனது சூட்டில் உருகினாள் பால் நிலா.
மெத்தையை ஒட்டி வந்தவன்,
தன்னவளின் விழிகளை தன்னுடைய கூர் பார்வையால் குத்தி கிழித்தான்.
“இதுக்குமேல முடியும் தோணல அம்மாடி.” கிறக்கமாக அவளது காதில் ஒலித்தது அவனவளின் காதலோடு தாபம் நிறைந்த குரல்.
கணவனின் கழுத்தை கைகளால் மாலையாக கோர்த்திருந்தவள், அவனின் முகத்தை தன் முகத்தருகே இழுத்து, அவனை தன்மேல் சாய்த்தவளாக மெத்தையில் சரிந்தாள்.
இருவரின் முடி முதல் பாதவிரல் வரை காதலின் ஆலிங்கைக்குள் கட்டுண்டது.
கதிரின் வெம்மையும், நிலவின் குளுமையையும் ஒருங்கே உணர முடியுமா? அந்நிகழ்வும் அங்கே சாத்தியமாகிற்றே.
“நிலவு சூரியனின் கதிரில் அடங்கிப் போவது இயற்கையின் நியதியாக இருக்கலாம்… ஆனால் இங்கு, நிஜத்தில் இந்த கதிர் எப்பவும் இந்த வெண்ணிலாவுக்குள் தான் அடக்கம்.”
என்றோ பெண்ணவள் அவனிடம் சொல்லியது… இன்று உண்மையாகியது.
ஆம்… பூரண நிலவின் குளிர்ச்சியில், கதிரின் கடும் வெம்மை அங்கே அடங்கித்தான் போனது.
அவனுள் அவளுக்காக எத்தனை தேடல். தேடி தேடியே பித்தம் கொள்ள வைத்தான்.
வெண்ணிலவின் வார்த்தை நிஜமாகியதில் நிறைவான புன்னகையோடு விலகி படுத்தவன், தன்னை ஒட்டி படுத்தவளின் கரம் பற்றி அதில் வரைந்திருந்த டாட்டூவில் அதிக அழுத்தத்துடன் இதழ் பதித்து… மீண்டும் தன்னவளை தனக்குள் அடக்கி, அவளுள் தன்னை புதைத்துக் கொண்டான்.
‘வெண்ணிலவை கொள்ளையிட்ட கதிரவன் மீண்டும் அவளிடமே கொள்ளைப் போனது.
இனி அவர்களின் இல்லறம் என்றும் நல்லறமே.
குமரனை மட்டுமே நித்தமும் நினைத்து, அவனை தனக்குள் காதலால் பத்திரப்படுத்திக் கொண்டவள் வெண்ணிலா.
காதலுக்காக குடும்பத்தை மறுக்கும் பலரில், குடும்ப பாசத்தின் அங்கமாக காதலை மாற்றிக்கொண்டவன் வெண்ணிலாவின் கதிர் குமரன்.