முன் தின இரவு. விழாவிற்கு முதல் நாள் அஜய் வந்த பின்னர்.
அனைவரின் முன்பும் அன்னையிடம் மனம் திறந்து உரையாட முடியாமல் போனதால், எல்லோரின் உறக்கத்திற்கு பின் காந்தளை அவர் தங்கியிருந்த அறையில் சந்தித்தான் அஜய்.
தங்கை தன்னிடம் முதன்முதலில் ஒன்றை கேட்டிருக்க… அதனை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டுமென்று அண்ணனாக தவித்தான்.
அதனால் அன்னையிடம் முதலில் பேசிவிட வேண்டும் என நினைத்தான்.
காந்தள் கூறினால் குமரனிடம் மறுப்பு இருக்காது என்று அவனுக்கு நன்கு தெரியும். தங்கையின் காதலை காந்தளின் மூலம் சேர்த்து வைக்க எண்ணினான்.
மகனின் வருகையில் பேர் உவகை கொண்டிருந்த காந்தள், இந்நேரம் அவன் தன்னை தேடி வந்திருப்பதில் கலக்கம் கொண்டு அவனை பார்த்தார்.
எடுத்ததும் “என்னை மன்னிச்சிடும்மா” என்றவன் காந்தளின் கைகளில் முகம் புதைத்தான்.
“அருளு… என்னப்பா?”
அன்னை பதறிவிட்டார் என்று உணர்ந்தவன், முகத்தை உயர்த்தினான்.
“இத்தனை நாள் உன்னை ரொம்பவே கஷட்படுத்திட்டே(ன்)ம்மா” என்றவன், அதற்கான காரணத்தை சொல்லிட காந்தளுக்குள் இடி விழுந்த உணர்வு.
“அறியாத வயதில் புரிந்துகொள்ளாமல் செய்தது தானென்றாலும், தெரிந்து தான் செய்தேன்” என்றான்.
அவன் செய்த தவறை இத்தனை வருடங்களுக்கு பின்பு தைரியமாக நேர்கொண்ட பார்வையாக சொல்கிறானென்றால், தன் தவறை எப்போதோ உணர்ந்துவிட்டான் என்பது அவருக்கு புரிந்தது.
“செய்த தப்பை உணர்ந்தாலே போதும் அருளு. அதற்காக நீ மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். உன்னை ஒதுக்க வேண்டியவர்களே ஏற்றுக்கொண்ட பின்னர், என்றோ நடந்ததற்கு உணர்ந்து மன்னிப்பு கேட்ட பின்பு, இன்று உன்னை தண்டித்து அறிவுரை வழங்குவது வீண்” என்றார் காந்தள்.
அன்றே தெரிந்திருந்தால் காந்தள் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பாரோ… ஆனால் நடந்த நிகழ்வு இத்தனை வருடங்களில் அதனின் வீரியத்தை இழந்திருக்க… அவரால் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடிந்தது.
“இனியும் உங்கக்கிட்ட மறைக்கக்கூடாதுன்னு தாம்மா சொன்னேன்” என்றவன், “நான் பேச வந்த விடயமே வேறு” என்று வெண்ணிலா தன்னை அழைத்தது, அவளின் காதலை சொல்லியது, குமரனின் காரணம் என அனைத்தையும் சொல்லிட காந்தளின் நெஞ்சில் பாரம் ஏறிக்கொண்டது.
‘வெண்ணிலாவிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டுமோ? அண்ணனுக்கு ஒப்புதல் அளித்து பிள்ளைகளின் ஆசையை கொன்றுவிட்டோமோ?’ வருந்தினார். ராஜேந்திரன் எப்படி எடுத்துக்கொள்வார் என்று அக்கணமே பயந்தார்.
தாயின் முகத்தில் சட்டென்று துளிர்த்துவிட்ட வியர்வையில் பதட்டம் கொண்ட அஜய் என்னவென்று வினவ, காந்தள் குமரனுக்கு மதியையும், குணாவுக்கு வெண்ணிலாவையும் பேசி வைத்திருப்பதை அவனிடம் கூறிவிட்டார்.
“என்னமா இப்படி சொதப்பிட்டிங்க?” எனக்கேட்ட அஜய்க்கு அப்போதே ராஜேந்திரன், பழனியை நினைத்து ஆயாசமாக வந்தது.
நொடியும் தாமதிக்காது பழனியை தன் அன்னையுடன் சந்தித்து விட்டான். அவருடன் குணவதியும் இருக்க, அவரிடமும் விடயத்தை பகிர்ந்துகொண்டான்.
முதலில் பழனிக்கு அதிர்ச்சி தான். அவரால் குமரனை விட்டுக்கொடுக்க முடியாது எனும் நிலை. இருப்பினும் முன்பிருந்த பழனி இல்லவே இப்போது.
“சரிப்பா அவன் ஆசை என்னவோ அதுக்கு நான் உடன்படுகிறேன். ஆனால் ராஜேந்திரன் மச்சான் நிலாவை குணாவுக்கு அத்தனை உறுதியா பேசியிருக்கிறாரே அருளு. அவரை எப்படி குமரனுக்கு நிலாவை கொடுக்க சம்மதிக்க வைப்பது?” எனக் கேட்டார்.
“எப்படியும் நாளைக்கு நீங்க என்ன முடிவு செய்து வைத்திருக்கீங்களோ அதையே சொல்லுங்க. அதுக்கு மேலும் குமரன் பொறுமையா இருக்க மாட்டான். அவனே தன்னுடைய காதலை வெளிப்படையா சொல்லுவான். அப்போ அவனுக்கு சப்போர்ட்டா நீங்க பேசினால் போதும். குமரனுடைய ஆசை என்னன்னு தெரிந்திட்டால், மத்தவங்களும் அவனுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள். அதிலே ராஜேந்திரன் மாமா இறங்கி வந்திடுவார்” என்ற அஜய், “அவர் முன்பு மாதிரி இல்லைன்னு தான் தோணுது” என்றான்.
“இதில் உனக்கு எந்த வருத்தமும் இல்லையேக்கா?” காந்தள் குணவதியிடம் கேட்டார்.
“குமரன் சந்தோஷம் தான் முக்கியம். அதைவிடவா நம் விருப்பம் முக்கியம். என்ன நடக்கணுமோ அதுதானே நடக்கும்” என்று நடைமுறையை பேசிட, காந்தளுக்கு அவர்களுக்குள்ளான இந்த தெளிவே போதுமானதாக இருந்தது.
அஜய்க்கு மதி குணா காதல் தெரியாததால் அதைப்பற்றி அவன் பேசியிருக்கவில்லை.
குமரனின் காதல் தெரிந்து ராஜேந்திரன் அதிர்வை காட்டிய அளவுக்குக்கூட பழனி காட்டததற்கு முன்பே விடயம் அறிந்ததால் தான்.
குணவதி கூட “இப்போதே எல்லோரிடமும் சொல்லிவிடலாம், ராஜேந்திரன் அண்ணாவை மட்டும் நாளை குமரனாக சொல்லும்போது சரிகட்டிக்கொள்ளலாம்” என்று சொல்ல அஜய் தான் அதனை மறுத்துவிட்டான்.
‘தன்னுடைய காதலுக்காக குமரன் இறுதிவரை இறங்கி வரவே இல்லையே’ என்கிற எண்ணம் தங்கையின் மனதில் விழுந்தவிடக் கூடாது என்பதற்காக.
அவர்கள் நினைத்தபடியே எல்லாம் நடக்க அஜய் தனக்கு ஒன்றும் தெரியாது என்கிற நிலையிலேயே மௌனமாக நின்றுகொண்டான்.
“இரவு நீ… அத்தை, பழனி மாமாவிடம் தீவிரமா பேசிட்டு இருந்ததை பார்த்தேன். என்ன பேசுறீங்கன்னுலாம் தெரியல. ஆனால் நான் நிலாவை விரும்புறேன்னு சொன்னப்போ பழனி மாமா முகத்தில் புதிதாய் அறியும் தோற்றம் இல்லை. நான் கேட்டதும் அவரும் ஒப்புக்கொண்டாரா… வெண்ணிலா மூலமாக உனக்கு எங்களுடைய விடயம் தெரியும். அதனால் நீ இரவு இதைப்பற்றித்தான் பேசியிருப்பன்னு யூகித்தேன்” என்றான் குமரன்.
குமரன் இரவு காசித்தும்பை மலர்களை பறித்து வந்த போதுதான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பேசி முடித்து அறைக்குள் வந்தபோது தான் குமரன் பூக்களை கோர்த்துக் கொண்டிருப்பதை அஜய் கண்டிருந்தான்.
இப்போது அவர்களுக்குள் இருந்த சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்துபோனது.
“நமக்குத் தெரியாமல் நிறைய நடக்குதுடா தம்பி.” குணா வருணிடம் சொல்ல…
“நமக்குன்னு உங்களையும் ஏன் சேர்த்துக்குறீங்க? நீங்கலாம் பேசவே கூடாது. யாருமே என்கிட்ட எதையுமே ஷேர் பண்ணல” என்று பாவமாக முகம் வைத்த வருண்,
“நானும் லவ் பண்ணுவேன். அப்போ உங்க யாருக்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்று சொல்லிட மூவரும் அவனை துரத்தினார்கள்.
“அண்ணண்களிடம் என்ன பேச்சு பேசுற” என ஆரம்பித்த அவர்கள் கலாட்டாக்கள் நடுநிசி வரை நீடித்து அடங்கியது.
“நிலா குட்டியாகத்தான் இருக்கும். அவளை நீ படுத்திய பாட்டிற்கு உன்னை வச்சு செய்யப்போகிறாள் பார். இன்றே எல்லாம் பேசி முடிச்சிடுங்க. அப்போ தான் கல்யாணம் வரை நிறைய காதலிக்கலாம்” என்று அழைப்பினை பார்க்காமலே குணா சொல்லிட… அஜய் மற்றும் வருணிடம் விரிந்த புன்னகை.
குணா சொல்லியதைப் போலவே அழைத்தது வெண்ணிலா தான்.
அழைப்பைத் துண்டித்தவன் மென் முறுவலுடன் அறையை விட்டு வெளியில் வர, அவனது நிலவு நின்றிருந்தது.
குமரன் தன்னுடைய காதலை வீட்டினரின் முன்பு வெளிப்படையாக சொல்லி நான்கு மணி நேரத்திற்கும் மேல் கடந்திருந்தது. அதுவரையிலும் கூட வெண்ணிலாவுக்கு குமரனிடம் பேச வாய்ப்பு கிடைத்திடவில்லை.
சகோதரிகளின் உறக்கத்தை உறுதி செய்துகொண்டவள், குமரனிடம் பேசியே ஆக வேண்டுமென்கிற ஆவலில் அறையைவிட்டு வெளியில் வந்து அவனுக்கு அழைத்தும் இருந்தாள்.
கதவை மெல்ல சாற்றிய குமரன்,
“இவனுங்க இன்னும் தூங்கல. மாடிக்கு போகலாமா?” என்று தன்னையே விழி இமையாது ஆழ்ந்து பார்த்திருந்த வெண்ணிலாவிடம் கேட்டான்.
“பாறைக்கு போகலாம்!”
“இந்நேரத்தில்?”
அவள் நடக்கத் தொடங்கியிருந்தாள்.
வேகமாக அறைக்குள் நுழைந்தவன் சிறிதளவு கம்பளி ஒன்றை எடுத்துக்கொண்டு, மூவரும் அவனை கண்டு சிரிப்பதையும் பொருட்படுத்தாது வெண்ணிலாவின் பின் ஓடினான்.
“என்னடா இவன் இப்பவே இப்படி ஓடுறான்?”
“காதலித்துப்பார்…” அஜய் கேட்டதற்கு குணா கவிதை நடையில் சொல்ல முனையை, வருணும் அஜய்’யும் ஒருசேர குணாவின் கழுத்தை நெறிப்பதைப்போல் கையை கொண்டு சென்றனர்.
“விடுங்கடா தூங்கணும்.” அவர்களை தள்ளிவிட்டு குணா கவிழ்ந்து படுக்க மற்ற இருவரும் அவனை பின்பற்றினர்.
குளிர்காற்று ஊசியாய் உடலை துளைக்க… குமரன் வருவதற்கு முன் பாறையின் மீது உடலோடு கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
சில்லென்ற காற்றின் இதம் மனதிற்குள் மென்மையை பரவச் செய்திட… மெல்ல தன்னவளை நெருங்கியவன், கையோடு கொண்டு வந்த கம்பளியை வெண்ணிலாவின் முதுகு பக்கமாக உடலோடு சுற்றி போர்த்தி, அவளுக்கு அருகில் சிறு இடைவெளியில் அமர்ந்தான்.
எப்போதும் போல் இப்போதும் அவனின் அக்கறை அவளுள் தித்திப்பாய்.
இரவு பூச்சிகளின் ரீங்காரம் இருளிற்கு இசை சேர்த்திட… எங்கும் ஆழ்ந்த அமைதி. இருவரும் ஒருவரின் அருகாமையை ஒருவர் ரசித்தபடி.
கருமையை வெறித்திருக்கும் தன் நிலவை தொட்டு விடும் ஆவலில் வெறித்திருந்தது வெய்யோனின் கதிர் கரங்கள். பார்வையை நிலவில் நிலைத்துவிட்டவனின் கண்களிலும் கதிரின் தாக்கம்.
மனம் கவர்ந்தவனின் ரசனையான பார்வை… பிடிக்கத்தான் செய்தது. இதயத்தில் புதுவித அவஸ்தை. தனக்குள் பொதிந்து கொண்டாள்.
மௌன மொழியை கிழித்து வெளிவந்தது வெண்ணிலாவின் குரல்.
“என்ன பேசணும் தெரியல மாமா. இப்படி நீ பக்கத்தில் இருந்தாலே போதும். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.” வெகு சாதாரணமாக, அவள் சொல்லிய சந்தோஷத்திற்குரிய துள்ளலோ, ஆர்ப்பாட்டமோ அவளிடம் இல்லை. உள்ளுக்குள், பருகும் காப்பியின் சுவையாய் சொட்டு சொட்டாய் ஆழ்ந்து அனுபவித்தாள்.
“ஆனால், எனக்கு நிறைய பேசணும் அம்மாடி.”
…..
“என்னை பார்த்து உட்காரு.”
“முடியல மாமா. உன் முகத்தை… உன் கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியல. இம்சைப்படுத்துற மாமா” என்றவள் அவனின் பக்கம் நகர்ந்து அவனது தோளில் தலை சாய்த்துக்கொண்டாள்.
அவனின் காதல் ஏற்கனவே தெரிந்திருந்தபோதும், இன்று அவனாக வெளிப்படையாக சொல்லிக் கேட்டிருக்க, அவனை பார்க்கவே அவனருகில் தவித்துப்போனாள்.
அவனிடம் பேச வேண்டுமென்று காத்திருந்தவளுக்கு பேச மொழியற்று போனது.
“எனக்கு உன் முகம் பார்த்து பேசணும் அம்மாடி.”
குமரன் அவ்வாறு சொல்லியதும், சற்று நகர்ந்து அவன் பேசுவதை கேட்க ஆவலாக விழி உயர்த்தி அவனை ஏறிட்டாள்.
வெண்ணிலாவை முறைத்தவன், “பக்கத்தில் உட்கார்ந்தே பேசலாம்” என்று அவளுக்கு முன் நகர்ந்து அமர்ந்தான்.
ஒருவருக்கொருவர் எதிரெதிர் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்க… இருவரின் கால் விரல்களும் பட்டும் படாமல் முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
“எனக்கு அந்த மூன்று வார்த்தையை சொல்லி என் காதலை காட்டத் தெரியல அம்மாடி. மூன்று வார்த்தையின் எல்லையில்லாதது எனக்கு உன்மீதிருக்கும் பிரியம். நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருக்கணுங்கிறது மட்டும் தான் என்னுடைய சின்ன ஆசை. இதுதான் ரொம்ப பெரிய ஆசையும் கூட. ஒவ்வொரு நொடியும் என்னால் உன் காதலை உணர முடியுற மாதிரி, உன்னையும் என் காதலை உணர வைப்பேன். வாழ்க்கை முழுக்க உணர்த்திக்கிட்டே இருப்பேன். என் அன்பாலும், அக்கறையாலும். நமக்கு குழந்தை பிறந்தாலும், முடியின் கருமை மறைந்து தோல் சுருங்கினாலும், என் காதல் இருக்கும்.” மென்மையிலும் மென்மையாய் மெல்லொலியாய் செவித்தீண்டிய குமரனின் வார்த்தைகளினால், வெண்ணிலாவினுள் இதயத்தின் துடிப்பு தாறுமாறாக வேகமெடுத்தது.
ஆயிரம் பட்டாம்பூச்சிகளின் அணிவகுப்பு உடலை சிலிர்க்க வைப்பது போல் மயிர்கூச்செறிந்தாள்.
பல நாட்களாக ஏங்கி தவித்த ஒன்றை நேருக்கு நேர் கண் பார்த்து அவன் உரைத்திட அவ்விருளிலும் பல வண்ண கலவைகளின் சாரல் அவளது கருவிழியில்.
“மாமா!” உதடு மட்டுமே துடித்தது.
இதழில் புன்னகை, விழியில் கண்ணீர். பூவின் மீது அமர்ந்திருக்கும் முத்தான பனி நீர் காற்றில் இழுப்பட்டு இருப்பதை அவனுக்கு நினைவூட்டியது.
“அம்மாடி” என்றவன் தன் கை நீட்டி அவளின் கையுடன் பிணைத்துக்கொண்டான்.
“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் தெரியும். ஆனால், அருளிடம் உன்னை பேச வைத்திட இதைவிட வேறு நல்ல வழி கிடைக்கும் எனக்கு தோணல. பல வருடங்கள் நான் சொல்லி நீ கேட்காத விடயம். அதோடு எல்லார் முன்பும் சொன்னது தான், எல்லோருடைய நிறைந்த மனதோடும் நமக்கு கல்யாணம் நடக்கணும். இதையெல்லாம் விட இன்னொரு பெரிய காரணம் இருக்கு” என்று தன் பேச்சை நிறுத்தியவன், பின் தலையை அழுத்தமாக தடவிக் கொடுத்தான். ஒற்றை கையால்.
“என் மேல் எனக்கு நம்பிக்கையில்லை. காதலை உன்கிட்ட சொல்லிட்டு தள்ளியிருக்க முடியுமென்று தோணல. உன் பார்வை, பேச்சு எல்லாம் அவஸ்தையை கூட்டுது. இப்பவும் உன்னை அணைக்கத் துடிக்கும் கைகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பது அவ்ளோ கஷ்டமா இருக்கு. இன்னும் ஒரு வருடம் எப்படி விலகி இருக்கப்போறேன்னே தெரியல” என்றவன்,
“நீ அருகில் வந்தாலே உள்ளுக்குள் என்னவோ உடையுது அம்மாடி” என்று சட்டென்று எழுந்துவிட்டான். இடுப்பில் கைகளைக் குற்றியபடி காற்றினை இழுத்து வாய் குவித்து வெளியேற்றி உள்ளுக்குள் பேயாட்டம் போடும் உணர்வு கொந்தளிப்பை அமைதிபடுத்தினான்.
அவளுக்காக அவன் ஏங்கி தவிப்பது அவளை பனிச்சாரலாய் நனைய வைத்தது. அவன் மீதான காதல் மேலும் மேலும் ஊற்றாய் பெருக வைத்தது. அவனின் அவளுக்கான தேடல், அவள் எதிர்பார்த்த ஒன்று. இதைவிட வேறென்ன வேண்டுமாம்?
“உங்களை யாரு இன்னும் ஒரு வருடம் கழித்து கல்யாணம் வச்சிக்கலாம் சொல்ல சொன்னது? இப்போ எதுக்கு அவஸ்தை படணும்? என்னை கேட்டிங்களா? இப்போவே என்னை கேட்காமல் முடிவெடுக்க ஆரம்பிச்சிட்டீங்க மாமா” என்று பொய்யாகக் குறைபட்டாள்.
“இப்போவே மேடம் அதட்ட ஆரம்பிச்சிட்டீங்க!” என்றவன் மீண்டும் அவளருகில் அமர்ந்தான்.
“என்னிடமே வந்து, கொஞ்சநாள் போனால் நான் சரியாகிடுவேன். நீங்க குடும்பத்தை மீறி என் காதலை ஏத்துக்க வேண்டான்னு டயலாக் பேசுற… ஆங்!” அவளின் காதினை வலிக்காது திருகினான்.
அவனுக்கு மிக அருகில், அவன் காதை திருகியதால் அவளது கண்கள் சுருக்கிய முகம். ‘பால் நிலவும் தோற்றிடுமோ தன்னவளின் வெண்ணிற முகத்தில்.’ அக்கணம் அப்படித்தான் தோன்றியது அவனுக்கு.
கேட்டவன் அவளின் பதிலை எதிர்பார்க்கவே இல்லை. இதமாய் பதமாய் தனக்குள் தன்னவளை புதைத்துக் கொண்டான்.
“என் தொல்லை இல்லாமல் படிக்கணுமே நீ! கல்யாணம் ஆகிட்டால் உன்னிடம் என் கட்டுப்பாடெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிடும்.” இருபொருள்பட, சற்று முன் திருமணத்தை தள்ளி வைத்தற்காக அவள் குறைபட்டதற்கு தனக்குள் வைத்துக்கொண்டு கூறினான்.
“உங்களுக்கு இப்படிலாம் பேச வருமா? நம்ம பசங்க கேட்டால் நம்பவே மாட்டாங்க.”
“இப்போ நம்பிட்டோம்.”
அவள் குரல் அடங்க பல குரல் ஒருங்கே கேட்ட அதிர்வில் இருவரும் பதறி விலகினர்.
பாறைக்கு கீழே மறைவிலிருந்து அவர்களது படை அறுவரும் வெளியில் வந்தனர்.
அவர்கள் எப்போது வந்தார்கள், தாங்கள் பேசியதை எதிலிருந்து கேட்டார்கள் என்பது தெரியாது முகத்தில் தோன்றிய வெட்கத்தை குமரன் புன்னகையில் ஒளித்திட, வெண்ணிலா அவனது நெஞ்சத்தில் மறைத்தாள்.
“நீங்க எப்போடா வந்தீங்க?”
“அதெல்லாம் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்து… கேட்க வேண்டியதை கேட்டுட்டோம்.” ஒன்றாகவேக்கூறி குமரனை அசடு வழிய செய்தனர்.
“உன் வெட்கம் அழகா இருக்குடா!” அருள் சொல்லிட…
“செமயா லவ் பண்றீங்கடா! எனக்கும் டிப்ஸ் கொடுங்களேன்.” குணா கேட்டிட அங்கே சிரிப்பின் ஆட்சி.
ஒற்றை பாறையாய் தன் உறவுகளின் அன்பின் கனம் தாங்கி நின்றான் கதிர் குமரன்.
சிறு சிறு விடயத்திலும் குடும்பத்தை முன் நிறுத்தி தன் உறவுகளையும், காதலையும் ஒன்றாக நிலைப்படுத்திக் கொண்ட குமரனின் கைகளுக்குள் அவனது பாசப்பறவைகள்.