குளம்பி கொட்டையின் கசந்த மணம் காற்றில் கமிழ்ந்தது. சுற்றியுள்ள இடம் முழுக்க தன் வாசத்தை பரப்பியபடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது வீரபாண்டியன் ஆரம்பித்த குளம்பி கொட்டை பதப்படுத்தும் தொழிற்சாலை.
ஆலையின் உள்ளே தன்னுடைய ஜீப்பில் நுழைந்த குமரனின் சுவாசப்பையோடு சேர்த்து இதயத்தையும் நிரப்பியது, காஃபி பழங்களின் அதீத கசப்பில் உணரும் தித்திப்பாய் அவனவளின் மணம். அதனை அவன் உணர்ந்தானா?
ஓரிடத்தை கடக்கையில் தன்னைப்போல் அவனின் மனம் சொல்லியது…
‘இங்கு தானே அத்தனை தைரியமாக தன்னிடம் கூறினாள்.’
“மாமா நான் உங்களை விரும்புறேன்.”
ஒரு மாதத்திற்கு முன்பு, காஃபி ஆலைக்கு வந்த வெண்ணிலா… உட்பக்கம் கேட்டிற்கு சற்று தள்ளியிருக்கும் சிறு தோட்டத்தில் பூச்செடிகளுக்கு நடுவில் அவனுக்காக நீண்ட நேரம் காத்திருந்து, வந்தவனை வழிமறித்து… எவ்வித முகாந்திரமும் இல்லாது நேரடியாக பட்டென்று உடைத்து சொல்லியதில் குமரன் தான் ஸ்தம்பித்து நின்றான்.
அவனின் அதிர்வையெல்லாம் அவள் கண்டுகொண்டதாகவே இல்லை. தன் மனதில் இருப்பதை எல்லாம் அப்போவே அந்நொடியே அவனிடம் கொட்டி கவிழ்த்திட வேண்டுமென்று தன்போக்கில் சொல்லிக்கொண்டே போனாள்.
“எப்போ எப்படின்னு கேட்காதீங்க. அதுக்கு பதில் எனக்கே தெரியாது. அத்தை, மாமா, இறந்த அன்னைக்கு கண்ணுல தண்ணியோட உங்களை பார்க்க எனக்கு சுத்தமா பிடிக்கல. உங்க வலி எனக்கு கஷ்டமா இருந்துச்சு. அந்த வயசுல எப்பவும் என்னோடு விளையாடும் என் மாமா அழுவது பிடிக்காமல் தான், உங்க கண்ணீரை துடைச்சேன். அப்போ உங்களோடவே இருக்கணும் தோணுச்சு. அந்த நினைப்பு இப்போ காதலா மாறியிருக்கலாம். அது இத்தனை வருடமா உங்கக்கூடவே சுத்திட்டு இருந்தும் தெரியல.
உங்க ஜாதகத்தை கண்ணன் மாமா தரகரிடம் கொடுக்கணும் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தாரு. அதை கேட்டதும் மனசெல்லாம் அடைக்குற மாதிரி, இத்தனை நாள் என்னை பாதுகாப்பாக பிடித்த கை இனி வேற ஒரு பொண்ணோட கையை பிடிக்கப்போகுதுங்குற நினைப்பே இங்க(இதயப்பகுதி) சொல்ல முடியாத வலியை கொடுத்துச்சு.”
அவ்விடத்தில் குமரனின் பார்வையில் ஓர் வியப்பு.
சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தாள்…
“என்னைத் தவிர என் மாமா பக்கத்தில் இன்னொரு பெண்ணை நிற்க விடமாட்டேன்னு… மாமா, அம்மாவிடம் கத்தி சொல்லணுமுன்னு அத்தனை கோபம் வந்துச்சு. இருந்தாலும் எனக்கே என் காதல் இப்போதானே தெரிஞ்சுது, அதை உங்கக்கிட்ட முதலில் சொல்லாமல் அவங்கக்கிட்ட சொல்ல மனசு வரல. எப்படியும் நீங்க ஓகே சொன்னாதானே அவுங்க வேற பொண்ணு பார்ப்பாங்க. நீங்க பாட்டுக்கு பொசுக்குன்னு உங்க அப்பா கேட்டாருன்னு சரின்னு சொல்லிட்டிங்கன்னா என் காதல் என்னாவது. அதான் உங்க மேல் காதல் வந்ததும் உடனே வந்து சொல்லிட்டேன். நீங்க இப்போவே ஓகே சொல்லணும் அவசியமில்லை. என்னை மாதிரியே உங்களுக்கும் ஒருநாள் தோணும். அதுவரை வெயிட் பண்றேன். இனி உங்களுக்கு கல்யாணப்பேச்சு எடுத்தாலே என் முகம், எனக்காக ஒருத்தி காத்திட்டு இருக்கான்னு தானே நினைப்பு வரும். வரணும். எனக்கு அது போதும்.”
தன்னை பேசவிடாது… ஒரே மூச்சில் முகத்திற்கு நேர் முகம் பார்த்து சொல்லிச்செல்லும் வெண்ணிலாவையே அசையாது பார்த்து நின்றான். உண்மையில் வெண்ணிலாவிடம் அவன் இதை எதிர்பார்க்கவில்லை. ஒருவித அதிர்ந்த உறைந்த நிலையில் அவன். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் படபடவென எண்ணெயில் வருபடும் மிளகாகவெடித்திருந்தாள். மனதிலிருப்பதை எல்லாம் மொத்தமாக கொட்டி கவிழ்த்திருந்தாள்.
நினைத்து பார்த்திடவே சுவை மிகுந்ததாய். ஏனோ அந்த சுவையை அவனால் ருசித்திட முடியவில்லை.
அத்தை மகளாக வெண்ணிலாவை குமரனுக்கு நிரம்பவே பிடிக்கும். அது காதலா என்றால் அவன் மட்டுமே அறிந்தது. வீட்டில் யாருக்கும் தெரியாது வெண்ணிலாவின் புகைப்படத்தை மறைத்து வைத்திருக்கும் போதே அவனின் மனம் அவனுக்கு புரிந்திருக்க வேண்டும். புரிந்துகொண்டு புரியாததைப்போல் வலம் வருகின்றானோ?
அன்று துக்க வீட்டில் அவரவர் தங்களுடைய சோகத்தில் மூழ்கியிருக்க, சாய்ந்து அழ தோள் கூட இல்லாமல் அழுது அழுது அரை மயக்க நிலையில் சுருண்டு கிடந்த பதிமூன்று வயது குமரனின் கண்களை பிஞ்சு கரம் ஒன்று துடைத்துவிட்டது.
கண்களில் நீர் நிரம்பியிருக்க கலங்கலாகத் தெரிந்த முகத்தை இமை தட்டி யாரென்று பார்த்த சிறுவனான குமரனுக்கு, அது வெண்ணிலா என்று தெரிந்ததும், அவளே தன்னைவிட ஆறு வயது சிறியவள்… சிறுமி என்றெல்லாம் நினைவில் இல்லாது அவளைக் கட்டிக்கொண்டு தன் சோகத்தையெல்லாம் கதறலில் கரைத்தான்.
பெண் பிள்ளைளுக்கு இயற்கையாகவே இருக்கும் தாய்மை குணத்தின் உந்துதலாலோ அல்லது எப்போதும் சிரித்த முகத்துடன் தன்னுடன் விளையாடும் தன் மாமனின் அழுகையை காண முடியாமாலோ தன்னைப்போல் அவனின் முதுகில் தன் பிஞ்சு விரல்களால் தட்டிக்கொடுத்தாள் வெண்ணிலா.
அன்று முதல் அவள் அவனுக்கு இன்றியமையாதவளாகிப் போனாள்.
மகன், மருமகளின் இறப்பில் துவண்டிருக்கும் தன் பெற்றோர் இயல்புக்கு திரும்பும் வரை அவர்களுடன் காந்தள் இருந்திட… அந்த நாட்கள் யாவும் வெண்ணிலாவுக்கு குமரனுடனே கழிந்தது.
எப்போதும் எதையோ வெறித்தபடி அமர்ந்திருப்பவனை பேச, சிரிக்க வைக்க வேண்டுமென தன் கைகளை அவனின் முகத்திற்கு நேரே விரித்து ஆட்டி பல கதைகள் பேசிடுவாள்.
அவன் உண்ணாமல் தட்டில் உணவை அளந்து கொண்டிருக்கையில், தன்னுடைய உணவு நிறைந்த கையை அவனின் வாய் அருகே நீட்டிடுவாள்.
இரவில் தூங்காது விழித்திருப்பவனை, “எனக்கு தூக்கம் வரல, கதை சொல்லு. என்னை தூங்க வை” என அவனுடன் படுத்துக்கொண்டு அடம்பிடிப்பாள். அவளுக்கு கதை சொல்லியபடியே அவனும் உறங்கிவிடுவான்.
பள்ளிக்கு செல்லும் நினைவேயின்றி தாய் தந்தையின் புகைப்படத்தின் முன் அமர்ந்திருப்பவனை பள்ளிக்கு தனியாக போக பயமென காரணம் சொல்லி, பள்ளிக்கு அழைத்துச் சென்றிடுவாள்.
“அருளுடன் செல்” என்று சொன்னாலும், “பிரேக்கில் நீயிருந்தால் தான் சாக்லேட் வாங்கித்தருவாய்” என கண்களில் எதிர்பார்ப்போடு பதில் சொல்பவளை ஏமாற்ற மனமில்லாது உடன் செல்வான்.
குமரன் விரைவில் தன் இழப்பிலிருந்து மீண்டுவர வெண்ணிலா முக்கிய காரணம்.
வெண்ணிலா காந்தளுடன் அங்கிருந்து சென்ற பின்னர் கூட, வார விடுமுறை நாட்களில் குமரனை காண ஓடோடி வந்திடுவாள். அருளுக்கு பிடிக்காது தடுத்தாலும் கேட்டுக்கொள்ளமாட்டாள். அவளுக்கு குமரனுடன் இருந்திட வேண்டும்.
அழுபவனை சிரிக்க வைத்திட வேண்டுமென நெருங்கியவள், வளர வளர மனதாலும் நெருக்கமாகிப்போனாள்.
எப்போதும் தனக்காக தன் பின்னால் சுற்றும் வெண்ணிலாவை குமரனுக்கும் அதிகமாக பிடித்திட, வளர வளர அவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யத் தொடங்கினான். அதெல்லாம் அவன் மனதில் அத்தை மகள், தன்மீது அதீத பாசம் வைத்திருக்கும் சிறு குழந்தை என்ற கண்ணோட்டத்திலேயே அவன் பார்த்தாதாலோ என்னவோ வெண்ணிலா அவனிடம் வந்து காதலென்று சொல்லும்வரை அப்படியொரு நினைப்பில் அவளை என்றுமே அவன் பார்த்ததில்லை.
அவ்வாறு அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டாலும், அவனின் காதலை அவனது மனம் மட்டுமே அறியும்.
மற்ற சித்தப்பா, அத்தை பிள்ளைகள் போல் தான் அவளும். என்ன அவள்மீது அவனுக்கு சற்று கூடுதல் அன்பு. அது சிறுவயதில் தனக்கென்று பாசம் காட்டிய ஜீவன் என்பதால்.
ஆக மொத்தத்தில் இருவருக்கும் பொழுது புலருவதும், பொழுது அடங்குவதும் இருவரது நினைவுகளில் தான்.
எல்லாம் இப்போது நடந்ததைப்போல் கண் முன்னே காட்சிகளாக விரிய,
“அதிக அன்பு அக்கறையென சின்ன பிள்ளையின் மனதை கலைத்து விட்டோமோ” என்று தான் எண்ணினான். அவனுக்கு வெண்ணிலா எப்போதும் தன் கண்ணீரை துடைத்திட்ட ஏழு வயது சிறுமியாகத்தான் தெரிகிறாள். தங்களுக்கு இடையில் வெறும் ஆறு வயது தான் வித்தியாசம் என்பதோ, அவளும் இப்போது வளர்ந்துவிட்டாள் என்பதோ அவனின் கருத்திலும் மனதிலும் படவில்லை போலும்.
வெண்ணிலாவுக்கு குமரன் மீதான காதலை உணர கண்ணன், காந்தள் பேச்சு காரணமாக இருந்ததைப்போல், குமரனுக்கு வெண்ணிலாவின் மீதான காதலை உணர்த்திட ஏதேனும் நடக்க வேண்டும் போலும்.
வெண்ணிலா காதல் சொல்லிய தருணம், குமரனுக்கு அவளின் அண்ணன் அஜய் தன்னை முறைத்து பார்ப்பதுதான் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.
சிறுவயதிலேயே வெண்ணிலா குமரனுடன் சுற்றுவது அவனுக்கு பிடிக்காது. இப்போது அவன் உடனில்லை என்றாலும், வெண்ணிலாவின் தன்மீதான விருப்பம் தெரிந்தால் ஒப்புக்கொள்ளமாட்டான் என்பது திண்ணமே.
காந்தளுக்கு பின்னர் வெண்ணிலாவிற்கு பிறந்துவீட்டு சொந்தமான அஜயின் உறவு, தன்மீது கொண்ட காதலால் அவள் இழந்து விடக்கூடாதென எண்ணினான். முக்கிய உறவை இழந்தவர்களுக்குத்தானே அதன் வலி தெரியும். வார்த்தையால் விவரிக்க முடியாத ஒன்றல்லவா!
அதனால் வெண்ணிலாவிடம் பேசி புரிய வைத்திடலாம் என்று சில நாட்களுக்கு விலகி இருக்கின்றான். காந்தளை பார்ப்பதற்காகக் கூட வீட்டிற்கு செல்வதில்லை.
உடனில்லாத பொழுதுகளிலும், அவனை கண்டதும் நடந்த அனைத்தையும் பகிர்ந்துகொள்பவள், அவன் கைப்பேசி வைத்துக்கொள்ள ஆரம்பித்தது முதல், காந்தளின் கைப்பேசி மூலமாக தினமும் பகிர்ந்துகொள்ள பழகியிருந்தாள். அது அவள் கைப்பேசி பயன்படுத்த தொடங்கியது முதல் ஒன்று நடந்தால், அதனை அந்நிமிடமே குமரனிடம் பகிரும் அளவிற்கு சென்றிட… அவனுக்கும் அது பழகியது. சில நாட்களில் அவனும் அவளிடம் அன்றைய தினம் நடப்பது அனைத்தையும் பகிரும் நிலைக்கு வந்திருந்தான்.
சிறுவயதில் அவளின் முகம் பார்த்து கடந்த பொழுதுகள் மனதிற்கு பழகியிருக்க… தினமும் காலை அவள் நிழலுருவத்தில் கண் விழிப்பதை வழக்கமாக்கியிருந்தான். அதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
வெண்ணிலாவை பார்க்காது, பேசாது இந்த சில நாட்களே அவனுக்கு என்னவோபோல் தானிருக்கிறது. அதனை அவன் தான் உணரவில்லை.
மீண்டும் மீண்டும் முகம் முழுக்க பூரிப்போடு வெண்ணிலா காதல் சொல்லிய கணம், நிழல் காட்சிகளாக மனதிலும் கண்ணிலும் விரிந்தது.
இதற்காகவே கடந்த நான்கு நாட்களாக ஆலை பக்கம் வராமலிருந்தான். இங்கு வந்தாளே அவனது கண்களும் மனமும் அந்த தோட்டத்தின் பக்கம் தான் செல்கிறது. எத்தனை நாட்களுக்கு தவிர்க்க முடியும்? வேலை அழைக்க தற்போது வந்திருந்தான்.
அவனை பொறுத்தவரை தன்னை வேண்டாமென்று ஒதுக்கியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து உயரத்தில் நிற்க வேண்டும். அதற்காக உழைப்பில் முனைப்பாக இருந்தவனுக்கு காதலென்ற ஒன்றின் மீது ஏனோ ஈடுபாடில்லாமல் போனது. அதுவே அவனது மனதின் ஆசையை அடக்கி கட்டி வைத்திருக்கிறது.
ஜீப்பினை அதற்குரிய இடத்தில் நிறுத்தி அதிலிருந்து இறங்கியவனின் பார்வை அவ்விடத்தையே அலசியது.
சிறியளவில் வீரபாண்டி நடத்தியதை ராஜதுரையும், கண்ணபிரானும் அப்படியே பின்பற்றி தொடர்ந்து கொண்டிருக்க… குமரன் தான் பல இடங்களிலிருந்து குளம்பி பழங்களை கொள்முதல் செய்து, பதப்படுத்தி பல பெரிய நிறுவனங்களுக்கு இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியிருந்தான்.
இவர்களின் பதப்படத்தப்பட்ட காபி கொட்டைகள் நேரடியாகவும் பல்பொருள் அங்காடிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் வகையில் சந்தைப்படுத்தினான்.
அதனால் அவனது காஃபி கொட்டைகளுக்கு மக்களிடையே சற்று கூடுதல் மவுசு என்றே சொல்லலாம்.
தற்போது கொட்டைகளை மட்டும் விற்பனை செய்யாது, தூளாகவும் மாற்றி… தொழிலை விரிவுபடுத்த முயன்று கொண்டிருக்கிறான்.
அதன் முதல் கட்டமாக சிறிய அளவில், தங்களது மாவட்டத்தில் மட்டும் ஆரம்பித்து பார்ப்போமென்று எண்ணி, குளம்பித்தூள்களை தயார் செய்கின்ற முயற்சியில் இறங்கியிருக்கின்றான்.
அதற்காகத்தான் இப்போது புரவியின் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறான்.
குமரனுக்கு எப்போதும் அவனின் மீது அதிக நம்பிக்கை உண்டு. ஒன்று முடியாதென்று யாரவது சொன்னால், அதனை முடித்துவிட்டு தான் அடுத்த வேலையை கவனிப்பான். அவனின் அந்த திடம், அவன்மீது அவன் வைத்துள்ள நம்பிக்கை தான், அவனை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது.
பயணம் எதுவாக இருப்பினும் பாதை உன்னுடையதாக இருக்க வேண்டும். குமரன் தனக்கென தனிப்பாதை அமைத்து யாரையும் கருத்தில் கொள்ளாது, தனக்குத் தோன்றியதை செய்துகொண்டு அவன்பாட்டிற்கு சென்றுகொண்டே இருக்கின்றான்.
அதில் பழனிச்சாமிக்கு அவன்மீது மிகுந்த பொறாமை. அது அவனும் அறிந்ததே. அதற்காக அவன் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை.
இப்போது குளம்பித்தூள் தயாரிக்க, அரசு ஒப்புதல் பெற வேண்டிய இடங்களில் எல்லாம் பழனிச்சாமி குமரனுக்கு கிடைக்கவிடாது பல செயல்களை செய்தார். அதையெல்லாம் தன்னுடைய நேர்மை கொண்டு உடைத்து, இன்று துவங்கியும் விட்டான்.
பொதுவாக குளம்பி பழங்கள் இரண்டு முறையில் பதப்படுத்தப்படும்.
உலர்முறை, ஈரமுறை.
உலர்முறையில் பழங்கள் நேரடியாக சூரிய ஒளியில் காய வைத்து, வறுத்து, உராய்தல் மூலமாக தோல் நீக்கப்படுகிறது.
ஈரமுறையில் பழகூழாக்கும் இயந்திரம் கொண்டு, சதைப்பகுதி நீக்கப்பட்டு கொதிக்க வைத்து அல்லது என்னறும்புகள் சேர்த்து நொதிக்கவிட்டு கொட்டைகள் காயவைக்கப்படுகின்றன.
குமரன் தன்னுடைய ஆலையில் இரண்டு முறைகளையுமே பயன்படுத்துகிறான்.
பதனிடப்பட்டவை அதன் வடிவம், அளவுகள் பொறுத்து பிரிக்கப்படுகின்றன.
அதேபோல் பிரிக்கப்பட்ட கொட்டைகள் இரண்டு முறையில் தூளாக்கப்படுகின்றன. குளம்பி கொட்டைகளை மட்டும் வறுத்து அரைத்தல் மற்றும் கொட்டைகளுடன் பாதிக்கு பாதி சிக்கரி சேர்த்து அரைத்தல். சிக்கரி சேர்த்து அரைப்பது பிரெஞ் காபி எனப்படும்.
இவை இரண்டு முறையிலுமே தயாரிக்க முடிவு செய்து அதனை இன்று தொடங்கியும் விட்டான்.
அரைப்பதில் பெரிய துகள்கள் அதிக மணமும் சுவையும் கொண்டது… இருப்பினும் மென்மையான துகள்களின் ருசி பிடித்தவர்களும் இருப்பதால் இதிலும் இரண்டு வகைகளையும் தயார் செய்கின்றான்.
உலர் மற்றும் ஈர முறையில் பதனிடப்பட்ட கொட்டைகளின் உலர் தன்மையை பரிசோதித்தவன், அங்கு தனக்கு முன்னதாக வந்து அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டிருந்த கண்ணபிரானிடம்… தயாராக இருந்த அரவை இயந்திரத்தின் மின் பொத்தானை அழுத்தி அவரது கையினால் தொடங்கி வைக்கக் கூறினான்.
அவனுக்கு எதிலும் கண்ணன் தான் முன். அவரின்றி எதையும் செய்திடமாட்டான். அதுவொரு விதமான நன்றி கலந்த அன்புடன் கூடிய மரியாதை.
“நீ தொட்டதெல்லாம் பொன்னாகனும் கண்ணா” என்று மகனை வாழ்த்தியவர், மின் பொத்தனை அழுத்தி… இயந்திரத்தின் சுழற்சியை கண்களில் சிறு மின்னலோடு பார்த்திருந்த குமரனின் முகத்தை வாஞ்சையாக வருடினார்.
“அத்தையிடம் சொல்லிட்டியா குமரா?”
“சொல்லிட்டே(ன்)ப்பா… அத்தை இந்த வார இறுதியில் வீட்டுக்கு வரேன் சொன்னாங்க” என்றவன் ஒவ்வொன்றாக பார்வையிட கண்ணபிரானும் அவனின் பின்னே சென்றார்.
இரு வேறு துகள்களாக வெவ்வேறு பாதையில் வெளியேறும் குளம்பித்தூள்கள் அனைத்துவிதமான தர சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு, தொடர்வண்டி பாதைப்போல் பயணித்து வெவ்வேறு அளவுகளில் இயந்திரத்தின் உதவியின் மூலம் சிறிய முதல் பெரிய வடிவில் வரை பைகளில் அடைக்கப்பட்டன.
பின்பு வேலையாட்களின் உதவி கொண்டு தனித்தனி பெட்டிகளில் சந்தைப்படுத்தலுக்கு அடுக்கப்பட்டு விற்பனைக்கு தயாராகி தனிப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டன.
சில பல நிமிடங்களில் நடந்து முடிந்த மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த செயல்முறையை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த கண்ணபிரான்,
“எல்லா வேலையையும் மிஷினே முடிச்சிடுச்சே குமரா… ருசி எப்படியிருக்கும்?” என்று தன்னுடைய சந்தேகத்தை வினவினார்.
“கண்டிப்பா மக்களுக்கு பிடித்த சுவையில் இருக்கும் அப்பா” என்றவன், இரண்டு விதமான தூள்களை கண்ணனிடம் கொடுத்து நுகர்ந்து மற்றும் சுவைத்து பார்க்கக் கூறினான்.
கண்ணபிரானின் நாசி நுழைந்த காபித்தூளின் மணமே அவரின் சுவை அரும்புகளை சிலிர்க்க வைத்தன.
“வண்ணம், வாசனையெல்லாம் நல்லா இருக்குப்பா” என்றவர் இரு விரலால் எடுத்து வாயில் சுவைத்தார்.
“கசப்பா இருக்கே குமரா?”
“அதீத கசப்பு அதீத சுவை அப்பா” என்ற குமரன், “இதில் சிக்கரி கலந்ததும் இருக்கு, அது கசப்புத்தன்மை குறைந்ததாக இருக்கும். இப்போதும் ஒருசில வீடுகளில் கொட்டையை வாங்கி வறுத்து அரைத்து காபி குடிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சிக்கரி பயன்படுத்துவதில்லை. அதோடு பால், நீர் மற்றும் சக்கரை உடன் இத்தூள் சேரும் போது கசப்புத்தன்மை குறைந்து சுவை இன்னும் மாறுபடும்” என்று கூறியவனின் விளக்கத்திலேயே அவன் எவ்வளவு தூரம் இதனைப்பற்றி தெரிந்து வைத்து, களம் இறங்கியிருக்கின்றான் என்று கண்ணனுக்கு புரிந்தது.
அவனின் ஆர்வமும் உழைப்பும் எப்போதும்போல் இப்போதும் அவருக்கு வியப்பைக் கொடுத்தது.
இத்தனை வருட அனுபவத்தில் அவருக்கு தெரிந்திடாத பலதும் குமரன் அறிந்து வைத்திருந்தான். அது அவருக்கு பெருமையே!
“இதை வீட்டில் அப்பத்தாவிடம் கொடுத்திடுங்கப்பா. நான் சாயங்காலம் போல அத்தை வீட்டுக்கு போயிட்டு, திரும்ப இங்கு வந்து ஏற்றுமதி வேலையெல்லாம் முடித்து வீடுவர இரவாகிவிடும். நீங்க கிளம்புங்க” என்றவன் அவரது கையில் சில காஃபித்தூள் பைகளை கொடுத்தான்.
“உன் அப்பத்தா சொல்லிப்புடும் இதன் ருசியை” என்ற கண்ணன், அங்கிருந்து நகர…
குமரனின் கைப்பேசிக்கு மதியிடமிருந்து அழைப்பு வந்தது.