கதிரும் வெண்ணிலாவும் தங்களது பேச்சினை மட்டுமே நிறுத்தியிருந்தனர். இருவரது பார்வையும் ஒன்றோடொன்று முட்டி நின்றது.
அவனது கோபமாய். அவளது காதலாய்.
காந்தளின் அரவம் உணர்ந்து தான் பேச்சை நிறுத்தியிருந்தார்கள்.
வீட்டிற்குள் வந்த காந்தள், முறைத்து நின்ற இருவரையும் விநோதமாக ஏறிட்டார்.
எப்போதும் இருவரும் அன்பை பொழிந்து தான் பார்த்திருக்கிறார். இப்படி எதிர் எதிராக சண்டையிடுவதுபோல் பார்த்ததில்லை. அதனால் அவருக்குள் மெல்லிய ஆச்சரியமும் கூட.
“புள்ளைக்கிட்ட என்னடி வம்பு பண்ண?”
அன்னையின் குரல் கேட்ட போதும், முகத்தை அவர் பக்கம் திருப்பாது பதில் வழங்கினாள்.
“அப்படியே பண்ணிட்டாலும். போம்மா! ரொம்பத்தான் உன் புள்ளையை தாங்குற. ஒருநாள் வைச்சு செய்யுறேன் இரு” என்றவளிடம் குமரன் தன்னுடைய காதலை புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறானே என்பதால் இறுதி வாக்கியத்தை அழுத்தமாக இருபொருள் படக் கூறினாள்.
“நீயாச்சு… அவனாச்சு. உங்களுக்கு நடுவில் வந்தால், சேதாரம் எங்களுக்குத்தான்” என்றவர்,
“அத்தை வீட்டுக்கு வழி தெரிஞ்சிடுச்சு போல…” குமரனிடம் நக்கலாக வினவினார்.
“அத்தை…” என்று இழுத்தபடி வெண்ணிலாவிடமிருந்து பார்வையை விலக்கி, காந்தளின் மீது பதித்தான்.
“என்னடா அத்தை, எத்தனை நாளாச்சு இங்க வந்து?” காந்தள் கோபமாக முகம் திருப்பிக் கொண்டார்.
அத்தையின் அருகில் சென்றவன், அவரை கழுத்தோடு கையிட்டு கட்டிக்கொண்டான்.
“காஃபிப்பொடி வேலை கொஞ்சம் அதிகம் அத்தை. அதான் வரமுடியல. வேலை ஸ்டார்ட் பண்ணி, டைம் கிடைச்சதும் என் அத்தையை பார்க்க ஓடி வந்துட்டேன்ல. அப்புறம் என்ன காந்தள் ரொம்ப காந்தலா இருக்கு” என்று அவரின் கன்னத்தில் பெருவிரல், சுட்டுவிரல் சேர்த்து இடித்தான்.
“ஷ்ஷ்…” அவன் இடித்ததில் மெல்லிய வலி எழ சன்னமாக சத்தமிட்டவர், அவனை தள்ளிவிட்டு முதுகிலே இரண்டடி வைத்தார்.
இருவரும் சிறுபிள்ளை போல் அடித்து விளையாடுவதை கண்ட வெண்ணிலாவுக்குத்தான் வயிறு எரிந்தது. விட்டால் அவளது கதிர் மாமாவை பார்வையாலேயே பொசுக்கிவிடுவாள் போலும்.
அவர்களுக்கிடையே அத்தை மருமகன் என்கிற உறவை மிஞ்சி ஒரு அன்பு நெருக்கமாக இருக்க… அதனை என்றும் ரசிப்பவளுக்கு, காதல் வந்த பின்னர்… அவனிடம் கொண்ட உரிமை உணர்வால் அன்னை மீதே பொறாமை பொங்கி வழிந்தது.
இப்போது குமரன் அவரது அடியில் தப்பித்தவனாக உடலை வளைத்து சாய்த்து போக்கு காட்டிக்கொண்டிருக்க, அவனை மேலும் இரண்டு அடி கொடுக்க காந்தள் முயற்சித்துக் கொண்டிருந்தார்.
இதே பழைய வெண்ணிலாவாக இருந்தால், “என் பேர் சொல்லி இன்னும் நாலு போடும்மா” என்றிருப்பாள்.
ஆனால் இப்போது,
“போதும்… போதும், உங்க விளையாட்டு” என்று முகத்தை உர்ரென வைத்தபடி காந்தளை பிடித்து நிறுத்தினாள்.
“பசிக்குதும்மா. எதாவது செய். வீட்டுக்கு வந்து இன்னும் சாப்பிடல.” காந்தள் எதை கூறினால் திசை திரும்புவார் என்பதை அறிந்து கூறினாள்.
அவளின் கண்களில் இப்போது தென்படும் சூட்டிற்கான காரணம் குமரனுக்கு விளங்கவில்லை. இருப்பினும் அதனை புறம் ஒதுக்கினான்.
அவள்… அவளுடைய காதல்… இதைப்பற்றி சிந்தித்தால் தானே மனம் தேவையில்லாத எண்ணங்களில் சிக்கி சுழல்கிறது. அதனால் இனி ஆராய்வதே இல்லை என்று அக்கணம் முடிவெடுத்தான்.
“அப்போ… அவனுக்கு குடிக்க எதுவும் போட்டுத் தரலையா நீ?” என்று மகளை கடிந்தவர், “உட்காரு குமரா, சாப்பிட்டுத்தான் போகணும். மணி தான் ஏழாகிவிட்டதே” என்று அவனை இருக்கையில் அமர்த்திவிட்டே தன்னை சுத்தம் செய்துவர அறைக்குள் சென்றார்.
அது சதுரமான வீடு ஒரு பக்கம் சமையலறை மற்றும் பூஜை அறை. அதற்கு எதிரே இரண்டு படுக்கையறைகள். நடுவில் நன்கு விஸ்த்தாரமான பரந்த பரப்பை கடந்து உள் சென்றால் ஒரு பக்கம் குளியலறை மற்றொரு பக்கம் மாடிக்கு செல்லும் வழி. உள் செல்லும் நிலைப்படியின் மீது மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு குமரனை பார்த்தபடி சாய்ந்து நின்றுகொண்டாள் வெண்ணிலா.
அவளின் பார்வை இப்போதெல்லாம் புதிதாக அவனை என்னவோ செய்கிறது. அதனை அலசி ஆராய அவனுக்கு மனமில்லை. அவள் புறம் செல்லத்துடிக்கும் கருவிழியை வெகு சிரமப்பட்டு அடக்கி வைத்தான்.
எத்தனை நேரம் வெண்ணிலாவை தவிர்ப்பது போல் சுவற்றை பார்வையால் வலம் வருவான். தானமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னிருக்கும் டீபாயின் மீதிருந்த புத்தகம் ஒன்றை எடுத்தவன் அதனை பிரித்து பார்க்கத் தொடங்கினான்.
சில நிமிடங்களில்…
வெண்ணிலா அவனருகில் வருவதை அவனால் உணர முடிந்தது. இருப்பினும் தலையை உயர்த்தவில்லை.
“ரொம்பத்தான் அத்தை மேல பாசம் உருகி ஓடுது. என்னைத்தவிர யாரிடமும், அது நம் உறவுகளாகவே இருந்தாலும் நீ தள்ளித்தான் நிக்கணும். புரியுதா?” என்று மிரட்டியவள், அவனுக்கு இரு பக்கமும் இருக்கையில் கை குற்றி அவனை சிறை பிடித்தவளாக…
“நீ பார்க்குற பார்வையில் தெரியுற காட்சிக்கூட நானாக மட்டும் தான் இருக்கணும்” என்று அவளின் நெருக்கத்தில் அலைப்பாய்ந்த அவனது கருவிழிகளின் ஓட்டத்திற்கு ஏற்ப, தன்னுடைய விழிகளை வீசிக் கூறினாள்.
அனைவரிடமும் திமிரிக்கொண்டு, விறைப்புடன் முகம் காட்டுபவன அவளிடம் மட்டும் ஒவ்வொரு முறையும் தடுமாறி தவித்தான்.
“அத்தையை பார்க்க வந்தால்… பார்த்தோமா, நலம் விசாரிச்சோமான்னு கம்முன்னு இருக்கணும்” என்றவள், “என்கூட பேசி சிரிக்க முடியல. உங்க நொ(அ)த்தைகிட்ட மட்டும் உதடு காது வரை விரியுது. கொன்னுடுவேன்” என ஒரு விரல் நீட்டி எச்சரித்தவள், காந்தளின் வருகை அறிந்து வேகமாக அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
“இதோ கொஞ்ச நேரத்தில் சாப்பாடு ரெடி பண்ணிடுறேன் குமரா” என்றவர் அடுக்களைக்குள் நுழைய,
“அப்பாவுக்கும் சேர்த்து செய்யுங்க அத்தை. இங்க தான் வருவார்” என்றான் குமரன்.
“தம்பி இங்க தான் இருக்கானா?” என்றபடி, பிரிட்ஜில் காய்களை எடுத்துக் கொண்டிருந்தார் காந்தாள்.
“ஆமாம் அத்தை” என்ற குமரன், “போலீஸ் ஸ்டேஷன் வரை போயிருக்கிறார். வேலை முடிச்சிட்டு இங்கு வர சொல்லியிருக்கிறேன்” என்றான்.
சரக்கு அனுப்புவதாகக் கூறி முன்பணம் பெற்றுக்கொண்ட பழனிச்சாமி, உரியவருக்கான மிளகு லோடினை சரியான முறையில் டெலிவரி செய்திடாது காலம் தாழ்த்திட, அந்நபர் நேரிலேயே வந்து கத்தி சென்றிருந்தார்.
அதன் பின்னர் அனுப்பி வைத்த சரக்கின் அளவு, அதிக அளவில் குறைவாக இருந்ததோடு தரமற்றதாகவும் இருக்க… அவர் பழனிச்சாமியை சந்தித்து “பொருளை கொடுத்துவிடுகிறேன், பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று தன்மையாகவே கேட்டிருக்கிறார்.
ஆனால், பழனிச்சாமி அதற்கு ஒப்புக்கொள்ளாது… அவரையும் மிரட்டி அனுப்பியிருக்கிறார்.
அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திட, பழனிச்சாமி கைது செய்யப்பட்டார்.
விடுமுறைக்காக விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த மதி விடயமறிந்து, குமரனுக்கு அழைத்து சொல்லிவிட்டாள்.
“இப்போ என்ன பண்றது குமரா?”
குமரனின் வாயிலாக தகவல் அறிந்த கண்ணபிரானுக்கு என்ன செய்வதென்று தெரியாது மகனிடமே கேட்டார்.
குமரன் சற்றும் யோசிக்காது…
“தரமான சரக்கை அனுப்புவதாக அவரிடம் பேசிப்பாருங்கப்பா. இல்லையா உங்க மச்சானிடமிருந்து அவர் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கி கொடுங்க” என்றான்.
“பழனிக்கிட்ட சரக்கு இல்லாமத்தானே, எதையோ அனுப்பி வச்சியிருக்கான். இப்போ மட்டும் எங்கிருந்து சரக்கு வரும்?”
கண்ணபிரானுக்கு குமரன் சொல்லியது விளங்கவில்லை.
“காலையில், நாம் அனுப்பின இடத்திலிருந்து எக்ஸ்டரா மிளகு லோடு கேட்டிருந்தாங்கப்பா. இந்நேரம் அதுக்கு லோடு ஏத்தி முடிசிருப்பாங்க. அதை அவங்களுக்கு அனுப்பிடலாம். அவர் ஒப்புக்கொண்டால்.” இறுதி வார்த்தைகளை மட்டும் அழுத்தமாகக் கூறியது போலிருந்தது.
நேற்று பழனிச்சாமியிடம் குமரன் பேசியதை வைத்து எங்கு அவரை இவன் மொத்தமாக விலக்கி வைத்துவிட்டானோ என்று கண்ணனுக்கு இருந்த கவலை இப்போது நீங்கியிருந்தது.
மெலிதான புன்னகை அவரிடம்.
“இதை அவருக்காக நான் செய்யல. அவரை எப்பவும் என்னால் மன்னிக்க முடியாது. இது அத்தைக்காகவும், மதிக்காகவும். அவருக்கு ஒண்ணுன்னா அவங்க ரெண்டு பேரும் வருத்தப்படுவாங்களே!”
இதென்ன பதில்? கண்ணபிரானுக்கு அவனை கணிக்க முடியவில்லை.
“என்னை உறவாக ஏற்பவங்களுக்காக மட்டும் தான் இது.”
தந்தையின் முகம் வைத்தே அவரின் மனம் படித்தவன் கூர்மையாகக் கூறியிருந்தான்.
அத்தோடு நின்றுவிடாது தன்னுடைய வக்கீலை அழைத்தவன், அவரோடு கண்ணனையும் காவல் நிலையம் அனுப்பி வைத்துவிட்டே வெண்ணிலாவின் வீட்டிற்கு வந்தான்.
“ஏன்தான் இவர் இப்படி இருக்கிறாரோ!” என்று அலுத்துக்கொண்டார் காந்தாள்.
“ம்க்கும்… இது என்னவோ புதுசு மாதிரி சொல்றம்மா நீ. மாமாவையே ஏமாற்றியவர் தானே உன் அக்கா வீட்டுக்காரர்.” சற்றும் மரியாதையின்றி என்றோ நடந்ததை இன்று நினைவூட்டினாள் வெண்ணிலா.
“இதென்னப் பேச்சு நிலா…” குமரன் தான் அவளை கடிந்துகொண்டான். காந்தளும் அவள் சொல்லியது உண்மை தானே எனும் விதமாக மௌனமாக காய்களை வெட்டிக்கொண்டிருந்தார்.
“பாருடா! மாமா மேல பாசமோ?” என்று ஒரு மாதிரி வினவியவள், “உன்னை மாதிரி மறப்போம் மன்னிப்போம் என்கிற ஆளில்லை நான்” என்றாள் வெடுக்கென.
“நீயென்னடி ஒரு நேரம் அவனை மரியாதையா கூப்பிடுற, சில நேரம் ஒருமையில பேசுற?”
குமரனுக்கு பழனிச்சாமி என்றோ செய்ததை இன்று பேசிட விருப்பமில்லை. அத்தோடு அது நினைவுக்கு வரும் நேரம் கோபமும் அத்தனைக்கு அதிகமாக வரும். அதனை அவனது முகம் கண்டு உணர்ந்தே வெண்ணிலாவின் பேச்சினை திசை திருப்பிட எண்ணி அந்நொடி அவளின் பேச்சில் கவனித்ததை வினவினார்.
“அதெல்லாம் அப்படித்தான். என் மாமா! நான் எப்படி வேணாலும் கூப்பிடுவேன். டா போட்டும் பேசுவேன். மாமாவே எதுவும் சொல்லமாட்டார். உனக்கென்னம்மா?” என்று அவள் படபடவென பேசியதை குமரனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவளின் இந்த அதீத உரிமை உணர்வும் பிடிக்கத்தான் செய்கிறது.
“எல்லாம் அவளுக்கு நீ கொடுக்கும் இடம் குமரா” என்றவர் சமையலில் கவனமாகினார்.
காந்தளை ஒருமுறை எட்டிப்பார்த்த வெண்ணிலா…
“மதி வந்திருக்கா போல?” என்று அவனிடம் அர்த்தமாக வினவினாள்.
“ஏன் உனக்குத் தெரியாதா?”
“தெரியும்… தெரியும். அவள் உங்க அத்தை மகளெல்லாம் இல்லை. நான் மட்டும் தான், நினைவிருக்கட்டும்.”
அவள் சொல்லியதன் உட்பொருளை புரிந்து கொண்டவனுக்கு சிரிப்பு வந்தது. கடினப்பட்டு புதைத்துக்கொண்டான்.
இடுப்பில் இரண்டு பக்கமும் கைகளை குற்றி புசுபுசுவென மூச்சினை வெளியேற்றியவள்,
“என்னைத்தவிர வேற பொண்ணு பக்கம் உன் பார்வை போச்சு… கொன்னுடுவேன்” என்று வெளிப்படையாகவே மிரட்டினாள்.
விலகி இருக்க வேண்டுமென்று எவ்வளவு முயற்சித்தாலும் அவனால் முடியாதென்பதை அவளருகில் இந்த சில மணிநேரங்களில் நன்கு தெரிந்து கொண்டான்.
ஆனால் ஏனோ காதல் என்ற வரையருக்குள்ளிருந்து எட்டி நிற்கவே விரும்பினான்.
“போடி!” எழுந்து வெளியில் போனான்.
வரும்போது அவனது கையில் சிறு பையிருந்தது. அவளின் முன் நீட்டினான்.
“என்னது மாமா?” என்றபடி பையினை வாங்கி பிரித்து பார்த்தவள்,
“ஹைய்… சிவப்பு அத்தி. சீசன் ஆரம்பிச்சிடுச்சா மாமா?” எனக் கேட்டதோடு, “எப்போ எனக்கு எது பிடிக்கும் தெரிஞ்சி வச்சிருக்க… இதுவே நீ என்னை லவ் பண்றன்னு சொல்லுது. உனக்கு புரியலையா மாமா?” என்றாள்.
“உனக்கு கொண்டு வந்ததே தப்பு.” தலையில் தட்டிக்கொண்டான்.
“மதிக்கும் தான் நீர் ஆப்பிள் பிடிக்குமுன்னு நேத்து அறுவடை முடிஞ்சதும் எடுத்து வச்சேன். நாளைக்கு போயிட்டு கொடுக்கணும். அப்போ மதியையும் நான்…”
“மாமா!”
குமரனை மேற்கொண்டு சொல்லவிடாது வீடே அதிர கத்தி தடை செய்திருந்தாள்.
காளி உருவமாய் அவனை சுட்டெரித்தாள்.
காந்தள் என்னவோ ஏதோவென்று சமையல் கட்டிலிருந்து ஓடி வந்திருந்தார்.
நொடியில் தன்னை சமன் செய்தவள்,
“அத்தி பழம்மா. கொஞ்சம் எக்ஸைட் ஆகிட்டேன்.” குமரனை பார்த்தபடியே காந்தளிடம் கூறினாள்.
“இதுக்கா… இந்த கத்து கத்தின? அவனை பாரு அரண்டு நிக்குறான். ஒரு மாசத்துக்கு அப்புறம் இன்னைக்குத்தான் வந்திருக்கான். ஓட வச்சிடாதே” என்று சொல்லிச் சென்றார்.
அவனை ஆழ்ந்து பார்த்தாளே தவிர எதுவும் பேசாது மாடியேறி சென்றுவிட்டாள்.
குமரனின் கண் முன் அவளின் கோப முகமே மின்னி மின்னி ஓடியது.
‘ப்பா… என்னா கோபம் வருது. நாளை பின்ன அப்பத்தாவிடம் பேசினாலே சண்டைக்கு வருவாள் போல.’
குமரன் யோசனையில் உழன்று கொண்டிருக்க… கண்ணபிரான் வீட்டிற்குள் வந்தார்.
மகனிற்கு அருகில் அமர்ந்தார்.
“காந்தள் தண்ணீ கொண்டுவாம்மா.”
கண்ணனின் குரலில் தான் குமரன் கலைந்தான்.
“எப்போப்பா வந்தீங்க?”
“வா தம்பி!” காந்தள் தண்ணீர் அடங்கிய குவளையை அவரிடம் அளித்தார்.
இருவருக்கும் ஒன்றாக தலையசைத்த கண்ணபிரான் தண்ணீர் குடித்து அலைச்சினால் ஏற்பட்ட அலுப்பு நீங்கிய பின்னரே பேசினார்.
“இந்த பழனி ஏன் இப்படியிருக்கான்னே தெரியல. பணம் கொடுக்க மாட்டேன்னு அவ்வளவு அழிச்சாட்டியமா பேசுறான். எத்தனை தூரம் இறங்கி பேசுறது. எனக்கு வந்த கோபத்துக்கு அப்படியே அங்கவே கெடக்கட்டும் வந்திடலாமா நினைச்சேன். அந்நேரம் பார்த்து மதி போன் பண்ணதால், புள்ளை அழுகைக்காக புகார் கொடுத்தவரிடம் லோட் அனுப்புவதாக சொல்லி வாபஸ் வாங்க வைத்தேன்” என்று காவல் நிலையத்தில் நடந்ததை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
வக்கீல் மூலமாக ஏற்கனவே அறிந்திருந்ததால் குமரன் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருந்தான்.
காந்தள் தான் புலம்பியபடி இருந்தார்.
“குடும்பத்தில் ஒண்ணு இப்படித்தான் இருக்கும் போல. நம்ம வீட்டில் ராஜேந்திரன் அண்ணன் இப்படின்னா. அங்க பழனி மச்சான்.”
“இப்போ லோட் ஏத்த சரக்கு?”
“நம்ம ஆலையில் இருந்து தான் அனுப்பனும்.”
காந்தளும் கண்ணனும் பேசியபடி இருக்க, குமரன் அலைப்பேசியுடன் எழுந்து சென்றான்.
கணேசனுக்கு அழைத்தவன், விடியலிற்குள் சரக்கு அனுப்பியிருக்க வேண்டுமெனக் கூறி வைத்தான்.
“நாளை காலை லோட் போயிடும். நீங்க அவரிடம் தகவல் சொல்லிடுங்கப்பா. தொடர்பிலே இருங்க” என்றவன்,
“பசிக்குது அத்தை. சாப்பாட்டை கண்ணில் காட்டுவியா மாட்டியா?” என்று அவர்கள் இருவரின் கவனத்தையும் மாற்றினான்.
“உனக்கு இது நஷ்டம் தானே குமரா?” காந்தள் மனத்தாங்கலோடு கேட்டுவிட்டார்.
“நம்ம குணவதி அத்தைக்காகத் தானே! பொறந்த வீட்டு சார்பாக அவங்களுக்கும் இதில் பங்கிருக்குத்தானே” என்றான்.
“உன் குணம் அவருக்கில்லையே கண்ணா” என்று காந்தள் உணவினை எடுத்து வைக்க நகர்ந்தார்.
“மிளகு ஆலை உன் உழைப்பில் உருவானது குமரா. அதிலெல்லாம் அவங்களுக்கு உரிமையில்லை.” கண்ணபிரான் காட்டமாகவேக் கூறினார்.
கூடத்தில் உள்ள உணவு மேசையில் சாப்பாடு நிறைந்த பாத்திரங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த காந்தளும் கண்ணனின் பேச்சினை ஆமோதித்தார்.
“நீங்க ரெண்டு பேரும் உங்க மச்சானை விடுத்து அத்தையை வைத்து மட்டும் பாருங்க. அத்தைக்கு நம்மை விட்டால் யாருமில்லை.”
அதற்கடுத்து அவர்களால் ஒரு வார்த்தை அவனிடம் பேச முடியவில்லை.
“உன் மனசுக்கு நீ நல்லாயிருப்பய்யா” என்ற காந்தள், இருவருக்கு முன்பும் தட்டு வைத்து சப்பாத்தியும், காய் குருமாவையும் பரிமாறினார்.
உள் வாயிலை கடந்து மாடிப்படியை ஒரு பார்வை பார்த்த குமரன், உணவில் கை வைக்காது இருக்க…
“வெண்ணிலா எங்கத்தா?” என வினவினார் கண்ணன்.
“மேல இருக்கா தம்பி” என்றவர் படிக்கு அருகில் நின்று மகளை நோக்கி குரல் கொடுத்தார்.
குமரனிடம் கோபமாகக் கத்திவிட்டு எதுவும் பேசாது வந்து விட்டாள். ஆனால் அவனின் மீது காதல் கொண்ட அவளின் மனதால் அவன் சொல்ல வந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
‘எளிதாக இன்னொரு பெண்ணை அவரோடு இணைத்து வைத்து அவரால் எப்படி பேச முடிந்தது?’
‘அப்போ அத்தை மகள் என்ற பாசத்தை தவிர என்மீது வேறு எண்ணம் அவருக்கு இல்லையா?’
‘என்னை மாற்ற, வேண்டுமென்றே கூறினாரா? இருந்தாலும் எப்படி முடிந்தது?’
‘மாமா…’ கையிலிருக்கும் டாட்டூவை தொட்டு பார்த்தாள்.
கன்னம் தாண்டி கண்ணீர் உருண்டோடியது.
‘என்னால் முடியாது மாமா. எனக்கு நீ வேணும்.’
செடிகளுக்கு அருகிலிருந்த மேடையில் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவள் மனமும் முகமும் வெகுவாக சுணங்கியிருந்தது.
“எப்போப்பாரு செடி… சரி, சாப்பிடு” என்றவரும் அவர்களுடன் உண்ண ஆரம்பித்தார்.
பெரியவர்கள் இருவரும் உண்டு முடித்து வீட்டின் முன்பக்கத் தோட்டத்திற்கு சென்ற பின்னரும் உணவில் கை வைக்காது அமர்ந்திருந்தாள் வெண்ணிலா.
குமரனுக்கு என்னவோ போலானது.
‘பொறுமையாக எடுத்து சொல்லியிருக்கலாம்.’ காலம் கடந்து சிந்தித்தான்.
“அழுதியா?”
உணவினை வாயில் வைத்தவனாக வினவினான்.
“நான் அழுதா உனக்கென்ன மாமா?” என்றவள், சாப்பிடாது எழுந்துகொள்ள… அவளின் கை பிடித்து அமர வைத்தான்.
அவள் இப்போ என்ன என்பதைப்போல் பார்த்திட,
உணவடங்கிய தன்னுடைய கையினை அவள் வாயருகில் நீட்டினான்.
“சாப்பிடு” என்று அவன் சொல்ல வாய் திறந்து வாங்கிக்கொண்டாள்.
அவளது தட்டிலிருந்த இரு சப்பாத்திகளை முழுதாய் ஊட்டி முடித்த பின்னரே குமரன் அவளை விட்டான்.
“நான் ஊட்டி விட்டதை வைத்து நீ சொல்லியதை ஏற்றுக்கொண்டேன் என்று நினைக்காதே! இது வேறு அது வேறு. நீ சாப்பிடாமல் அடம் செய்யும்போது ஊட்டி விடுவேனே அது மாதிரிதான். “
தன் செயலில் அவள் காதலுக்கு சாதகமாக எண்ணம் கொண்டுவிடக் கூடாதென விளக்கினான்.
குமரன் சொல்லியதில் அவள் கண்கள் மேலும் சிவந்து போனது. அதிலேயே அவள் அழுகையை அடக்க முற்படுவது தெரிந்தது.
“என் பக்கத்தில் இன்னொருவன் உரிமையா நிக்குற மாதிரி நினைத்துப் பார் மாமா. உன் மனசுல சின்ன அதிர்வுகூட இல்லையென்றால், நான் உன்னை விட்டுவிடுகிறேன். தொல்லை செய்யமாட்டேன்.”