மீண்டும் மீண்டும் வெண்ணிலா இறுதியாக அவனிடம் சொல்லிய வார்த்தைகளே அவனின் செவிப்பறையை நிறைத்துக் கொண்டிருந்தது.
“என் பக்கத்தில் இன்னொருவன் உரிமையா நிக்குற மாதிரி நினைத்துப் பார் மாமா. உன் மனசுல சின்ன அதிர்வுகூட இல்லையென்றால், நான் உன்னை விட்டுவிடுகிறேன். தொல்லை செய்யமாட்டேன்.”
வெண்ணிலா சொல்லும் போதே அவனுக்குள் அதிர்வு தான். அதனை வெளிக்காட்டிடாது எப்படி சமாளித்து நின்றான் என்பது அவனே அறியாதது.
ஆனால் இப்போது அதனை நினைக்க நினைக்க… நொடிக்கு நொடி உள்ளே அதிரும் உணர்வு. இதயத்தில் ஒரு நடுக்கம். அவனின் மனம் அவனே உணர்வதாய். ஆனால் ஏற்கத்தான் முடியவில்லை.
‘இது சரி வராது.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
ஒரே குடும்பம் தான். அதீத உரிமை உள்ள உறவு தான். தெரிந்தால் வீட்டில் இருப்போர் மறுக்கப்போவதில்லை தான். ஏனோ அவனுக்கு காதல் என்ற பக்கம் மனதோடு ஒப்பவில்லை. தாய் தந்தையற்ற நிலையில் அவனுக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் தாத்தா, பாட்டி, கண்ணபிரான் அவர்கள் தேர்ந்தெடுத்து கொடுக்கும் பெண்ணை மணப்பதுதான் அவர்களுக்கு தான் கொடுக்கும் அதிகபட்ச சந்தோஷம், நன்றி என்ற அவனின் நினைப்பு அவனது மனதிலிருக்கும் காதலை ஒதுக்கி வைத்தது.
தொழிலில் மேலும் மேலும் முன்னேற வேண்டுமென்ற எண்ணம் வாழ்வின் மற்ற ஆசைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை அவன் உணரவில்லை. தொழில் வளர்ச்சி மட்டுமே வாழ்வின் முன்னேற்றம் இல்லை என்பதை அவனுக்கு யார் புரியவைப்பது?
அத்தோடு சிறு வயதில் தன்னோடு சேர்த்து வெண்ணிலாவை தங்கையென்றும் மறந்து பழிவாங்கும் வெறியோடு முறைத்த அஜய்யின் முகம் கண்முன் தோன்றி மறைந்தது.
‘இந்த நினைப்பு வேண்டாம்.’ அந்த நிகழ்வு மனதோடு உடலையும் பதற வைத்தது.
அவனின் காதலை, நடந்த கடந்தகால நிகழ்வு மறக்க மனம் ஒப்புக்கொண்டதா என்றால், அவனின் அதட்டலில் அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம்.
கண்ணை மூடினாலே வெண்ணிலாவின் அழுது சிவந்த விழிகள் தோன்றி அவனை பாடாய் படுத்தியது.
அதற்கு மேலும் முடியாதென மெத்தையைவிட்டு எழுந்தவன் சுவற்றில் மாட்டியிருக்கும் தன் புகைப்படத்தின் முன் சென்று நின்றான்.
புகைப்படச் சட்டத்தினை திருப்பியவன், அதில் பளீரென சிந்தும் புன்னகையில் முகம் கொள்ளா மகிழ்வோடு காட்சியளித்த வெண்ணிலாவை ஆழ்ந்து பார்த்தான்.
அலைப்புறுதல்கள் எல்லாம் நீங்கி மனம் சமன்பட்டது.
வெண்ணிலாவின் கண்ணீரும், அவள் கூறிய அந்த வார்த்தைகளும் அவனுள் சலனத்தை ஏற்படுத்தியிருப்பதை ஒப்புக்கொண்டான்.
அக்கணம், ‘அப்பாத்தாவுடைய தேர்வு நீயாக இருக்கணும் வேண்டிக்கிறேன் நிலா!’ என்று படத்தில் சிரிப்பவளிடம் மானசீகமாகக் கூறினான்.
வீட்டிலிருப்போரின் முடிவு கதிர், நிலா திருமணமாக இருக்கும் பட்சத்தில் அஜய்யின் செய்கையால் மறுக்க முயலும் காதலை ஏற்க முடியுமென கருதினான்.
இந்நொடி வெண்ணிலா மீது காதல் வந்துவிட்டதா எனக் கேட்டால், ஆமென்பது தான் குமரனின் பதில். ஆனால், வெண்ணிலாவின் காதலை ஏனோ அவனால் ஏற்க முடியாது மறுத்து விலக்கவே முயல்கிறான்.
அவளிடம் மனம் சலனம் கொள்கிறது. ஈர்ப்பை கடந்து தாவி உட்புகுகிறது. அவளை ரசிக்கத் தூண்டுகிறது. அவளருகில் மனம் ஆர்பரிக்கிறது. இருப்பினும் அவனாக காதல் கொண்டிட அவன் விரும்பவில்லை.
அவனை பொறுத்தமட்டில் அப்பத்தா பார்க்கும் பெண் அவனுக்கு மனைவியாக வரவேண்டும். அது நிலாவாக இருக்க வேண்டுமென பிரார்த்தித்தான். இது அஜய்யின் அன்றைய செயல் இப்போதும் தொடர்ந்துவிடக் கூடாதே என்பதற்காக அவன் அவனவளுக்காக எடுத்த முடிவு.
நிலாவை மனைவியாக ஏற்பதில் குமரனுக்கு எவ்வித தடையுமில்லை. ஆனால் அஜய்? அவன் விட்டுவிடுவானா? வெண்ணிலாவின் காதல் தெரிந்தால்? அதுவும் அவளின் காதல் குமரனென்று அறிந்தால்? நினைக்கவே அஞ்சினான்.
இருப்பினும் ஒருமனம் நிலா வேண்டுமென அவனிடம் மன்றாடியது. மற்றொரு மனம் தூரம் செல்ல துடித்தது.
நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அவனது எண்ணங்களுக்கு நடுவில் அவனின் உள்ளத்திற்குத்தான் திண்டாட்டமாகிப் போனது.
தெரிந்தே வெண்ணிலாவை தவிக்க வைக்கின்றவன், கொள்ளை கொள்ளையாய் காதலை சுமந்து தவித்து நிற்கப்போவதை அறியும் நாளும் விரைவில்.
ஏதோ ஒரு முடிவில் குமரன் உறுதியாக நின்றதும்… சிறிது நேரத்திலேயே கண்கள் உறக்கத்தை கேட்டிட, நித்திரைக்குள் விழுந்தான்.
வழக்கம்போல் புலர்ந்தும் புலராத காலை வேளையில் குன்றின் மீது நின்றிருந்தவனுக்கு, இன்று வானில் தெரியும் சூரியக்கதிர்கள் ஏனோ வெண்ணிலாவின் கையில் வரைந்திருக்கும் டாட்டூவை நினைவூட்டியது.
அதனூடே அதற்கு அவளளித்த விளக்கமும்.
இனி இதைப்பற்றி சிந்திக்கவே கூடாதென அவன் எடுத்த முடிவுகள் யாவுமே அவனுக்கு எதிராகவே நின்றன.
“கொஞ்சம் தள்ளியே நிக்கணும்.”
‘ஒரு மாதத்திற்கு முன்னாலும் இதேயேத்தான் சொலிக்கிட்ட. எல்லாம் அவளை பார்க்கும் வரை தான்.’
தன் வார்த்தைக்கு கொட்டு வைத்த மனதின் பேச்சினை அமோதிக்கவே செய்தான்.
“பார்த்தால் தானே. பார்க்காமல் இருந்து கொள்கிறேன்.”
‘முடியுமா?’
“ஏன் முடியாதா?”
‘காலையில் கண் விழிக்கும் போதே வெண்ணிலா முகம் தான் உன் கண்ணுக்குத் தெரியும். உன் எண்ணம் சாத்தியமா?’
“பார்க்கமலிருக்க பழகிக்கொள்கிறேன்.”
‘எத்தனை நாளுக்கென்று பார்க்கிறேன்.’
எடுத்த உறுதி இன்றே தகர்ந்திடும் என்பதை அறியாது, மூளைக்கும் மனதிற்கும் இடையில் நடந்த விவாதத்தில் களைத்துப் போனவானக வீட்டிற்குள் சென்றான்.
எதிர்பட்ட கண்ணபிரானிடம்…
“கணேசன் அண்ணனுக்கு கால் செய்து அவங்களுக்கு லோட் போயிடுச்சா கேளுங்கப்பா” என்றவன்,
வீரபாண்டியன், கமலத்திடம் “மருத்துவமனை செல்ல வேண்டும் வெரசா கிளம்புங்க” எனக்கூறி மறைந்தான்.
குளித்து முடித்து தயாராகியவனின் கால்கள் தன்னைப்போல் அவனது படத்திற்கு அருகில் செல்ல… தானெடுத்த முடிவின் காரணமாக சுவற்றிற்கு பக்கவாட்டாக அடி வைத்து நகர்ந்திருந்தான்.
இன்று மருத்துவமனை செல்வதால் இரண்டு ஆலைகளிலும் தனக்கடுத்து மேற்பார்வையிடும் நபர்களுக்கு அழைத்தவன் தான் வரும்வரை சரியாக பார்த்துக்கொள்ளுமாறு பேசிக்கொண்டே கீழிறங்கிவர கமலத்துடன் குணவதி பேசிக் கொண்டிருந்தார்.
சட்டை பையில் அலைப்பேசியை போட முனைந்த போதுதான் கவனித்தான் வெண்ணிலாவின் வழக்கமான காலை நேர குறுந்தகவலுக்கான அறிவிப்பு திரையின் மேல் ஒளிர்ந்தது.
‘அவளோட நினைப்பு வர முதல் காரணம் தினமும் அவள் அனுப்பும் தகவல் தான்.’ நினைத்தவன், அப்போதே தொடு திரையை விலக்கி வெண்ணிலாவின் எண்ணை பிளாக் செய்திருந்தான்.
“வாங்கத்தை… நல்லாயிருக்கீங்களா?”
கேட்டபடி அவர்களுக்கு முன்னால் அமர்ந்தான்.
“இப்போ இந்த நொடி நான் நல்லாயிருக்கேன்னா காரணம் நீதான் குமார” என்றவர் அவனின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டார்.
“ரொம்ப நன்றிப்பா… வயசுல சின்னவனா போயிட்ட, இல்லைன்னா உன் காலில் விழுந்திருப்பேன்” என்றவரின் பேச்சில் பதறியவனாக அவரின் கையில் அழுத்தம் கொடுத்தவனுக்கு என்ன பேசவென்று தெரியவில்லை.
“அதான் சரியாகிடுச்சே அத்தை. விடுங்க.”
“எங்க சரியாப்போச்சு. இந்த மனுஷனை வச்சிக்கிட்டு நான் அல்லாடுறேன். அடுத்து ஆள மகனா இருக்கான். ஒத்த பொம்பள புள்ளை. அந்த ஆலையை வந்த விலைக்கு வித்துப்புட்டு, விவசாயத்தை மட்டும் பாருங்கன்னா கேட்கமாட்டேங்கிறார். நித்தம் எந்த வம்பை விலைக்கு வாங்கி வருவாரோன்னு கவலையா இருக்கு குமரா. நீயும், அண்ணனும் இல்லைன்னா நேத்து நடந்ததுக்கு நான் என் உயிரை மாட்சியிருப்பேன்.” சேலை தலைப்பில் முகம் பொத்தி குலுங்கி அழுதார்.
குணவதியிடம் குமரன் பேசுவான், அவருக்காக அவனின் அப்பா இடத்திலிருந்து எல்லாம் செய்வான். ஆனால் காந்தளிடம் இருக்கும் நெருக்கம் குணவதியிடம் அவனுக்கு கிடையாது.
அவரின் அழுகைக்கு எப்படி தேறுதல் சொல்வதென்று மௌனமாக பார்த்திருக்க…
“துரை இடத்துல இப்போ குமரன் இருக்கான். அவன் பார்த்துப்பான் எல்லாம். நீ வெசனப்படாம(ல்) இருத்தா.” வீரமாண்டியனின் வார்த்தை குணவதியை சமன் செய்தது.
“சரிம்மா! அப்போ நான் கெளம்புறேன். மதி தனியா இருக்கும். குமரனை பார்த்துப் போலாமுன்னு தான் வெள்ளென வந்தேன்.”
எழுந்துகொண்ட குணவதியிடம்,
“நாங்க மலைக்கு கீழப்போறோம், உனக்கு எதாவது வேணுமாட்டி?” என்று வினவினார் கமலம்.
“ஒண்ணும் வேணாம்மா. தங்கச்சி வாரக்கடைசி இங்க வரன்னு சொன்னாள். முடிஞ்சா நானும் வரேன்” என்றவர் விடைபெற அவரது கையில் மதிக்காக எடுத்து வைத்திருந்த நீர் ஆப்பிள் பழம் நிறைந்த பையை கண்ணன் கொண்டு வந்து தங்கையிடம் கொடுத்தார்.
அதனை கண்ட குமரனுக்குள், அத்தனை நேரம் மறந்திருந்த வெண்ணிலாவின் நினைப்பு நீரில் அமுங்கிய பந்தாய் வெளி வந்தது. உடன் நேற்றைய பேச்சுக்களும். தலையை குலுக்கி விரட்டினான்.
“எனக்கே நினைப்பு இல்லை. குமரன் தான் மதிக்குட்டிக்காக எடுத்து வைத்தான்” என்றார்.
“எல்லாருக்கும் சின்ன சின்ன விடயம் கூட பார்த்து பார்த்து செய்யுற புள்ளையை அந்த மனுஷனுக்கு புடிக்காம போச்சே. விரோதியா பாக்குறாரே!” புலம்பியபடியே வெளியேறினார் குணவதி.
அவரின் பேச்சு செவி நுழைந்த போது, பழனியை நினைத்து குமரனிடம் ஒரு கசந்த முறுவல்.
நால்வரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரம் கமலம் பாட்டி மெல்ல தன் பேச்சினை ஆரம்பித்தார்.
சர்க்கரை பரிசோதனைக்காக வயதானவர் இருவரும் உண்ணவில்லை.
“கண்ணா காந்தளுகிட்ட கொடுத்துட்டோமுன்னு கம்முனு இருந்திடாதய்யா. நீயும் நாலு பேத்துகிட்ட சொல்லி வைய்யீ.”
அவர் எதை சொல்லுகிறார் என்பது புரிந்ததைப்போல் தலையசைத்தார் கண்ணபிரான்.
இதைப்பற்றி கண்ணபிரான் நேற்று இரவு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது தங்கை காந்தளிடம் வினவினார்.
அதற்கு காந்தள் தன் மனதில் ஒன்று இருப்பதாகவும், அது சரி வராதென்றால் மேற்கொண்டு பார்ப்போமென்று சொல்லியிருந்தார். குமரன் முன் வேண்டாமென்று இதனை அன்னையிடம் சொல்லாமல் விடுத்தார்.
“என் பேத்தியில் ஒருத்தி இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தால் நல்லாத்தான் இருக்கும்.” அவரது ஆசையின் அளவு அவரின் முகத்திலேயே தெரிந்தது.
“கேட்டால் கொடுக்காமலா இருக்கப்போறாங்க… மதிதான் மூத்தவள். முதலில் குணவதியிடம் கேட்டு பார்ப்போம்.” வீரபாண்டியன் மனைவிக்கு ஆலோசனை வழங்கினார். ஆனால் கமலத்திற்கு வெண்ணிலா தான் இஷ்டமாக இருந்தாள்.
அவர்களது பேச்சு இன்னதென விளங்க…
“இப்போ நான் சாப்பிடவா, வேண்டாமா?”
“அன்னைக்கு சொன்னதுதான். முதலில் உங்களுக்கு விசேடம் பண்ணனும். நான் ஜோசியரை பார்த்து பேசிட்டேன். அவர் நாள் குறிச்சி கொடுத்திட்டா(ல்), வேலையை ஆரம்பிச்சிடலாம்” என்று உரக்க பேசியவன் பாதி உணவிலேயே எழுந்து கொண்டான்.
வீட்டிற்கு வெளியில் பாறை மீது நின்றவனின் மனம் அனலாய் தகித்தது.
‘மதியா? மதி… மதியை எனக்கு எப்படி?’
கை முஷ்டியை மடக்கி தொடையில் குத்திக்கொண்டான்.
வெண்ணிலா சொல்லியது நினைவுக்கு வந்தது.
“இனி உங்களுக்கு கல்யாணப்பேச்சு எடுத்தாலே என் முகம், எனக்காக ஒருத்தி காத்திட்டு இருக்கான்னு தானே நினைப்பு வரும். வரணும். எனக்கு அது போதும்.”
‘இந்த வாலு எனக்கு என்னவோ சூனியம் வச்சிடுச்சு.’ புலம்பினான்.
வெண்ணிலா ‘காதல், நான் தான் உங்களுக்கு,’ என அவனோடு அவளை சேர்த்து பல பேச்சுக்கள் இப்படி பேசும்போது எழுந்திடாத கோபம் மதியை வைத்து பேசும்போது கட்டுக்கடங்காது பொங்கியது.
உண்மையில் அந்நேரம் அவன் மறைக்க நினைக்கும் காதல் அவனையும் மீறி வெளிப்பட்டது. அதனாலேயே கத்திவிட்டு பாதி உணவில் எழுந்து வந்திருந்தான்.
‘அப்பத்தா சொல்லும் பெண் யாராக இருந்தாலும் ஓக்கேன்னு சொன்னாய்? இப்போ சும்மா பேச்சுக்கே இத்தனை கோபம்.’
உண்மையில் அவர்கள் அவன் கல்யாணத்தைப் பற்றி பேசியதும் வெண்ணிலாவின் நினைவு வந்ததாலே அந்த கோபம்.
மனம் அவனது நிலையை சுட்டிக்காட்டியது.
“ஆமாம்… அப்பத்தா காட்டும் பெண் மதியாக இருந்தால் ஏன் கோபம் வரணும். எனக்கு ஓகே தான்.”
அவனின் வரட்டு பிடிவாதம் தவறாக சிந்திக்க வைத்தது.
அங்கு ஒருவன் மதியின் மீது பித்தாக இருப்பது தெரியாமல், இங்கு ஆளாளுக்கு அவளை குமரனோடு இணைக்க நினைத்தனர்.
“ச்ச… அப்பத்தா, தாத்தாவிடம் கத்தியிருக்கக் கூடாது” என்று வருந்தியவன் திரும்ப…
“எதாவது எடுக்கணுமா கண்ணா, வீட்டை பூட்டிடவா?” என்றபடி அவனருகில் வந்தார் வீரபாண்டி.
“இல்லை தாத்தா. போகலாம்” என்றவன் அவரின் முகத்தை தயக்கமாக ஏறிட…
“எங்களிடம் உரிமையா கோபித்துக்கொள்ளவும் உனக்கு உரிமை இருக்குப்பா. வருத்தப்படாதே” என்ற வீரபாண்டி அவனின் முதுகில் தட்டிச்சென்றார்.
நால்வரும் ஜீப்பில் புறப்பட்டு மலைக்குகீழ் சேலம் வந்து சேர்ந்தனர்.
கண்ணபிரானை காஃபி ஆலையில் இறக்கிவிட்டவன் வெண்ணிலா படிக்கும் மருத்துவக்கல்லூரி நோக்கிச் சென்றான்.
மருத்துவமனையில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால், உடனடியாக அனைத்து பரிசோதனைகளும் மூத்தவர்களுக்கு எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு பரிசோதனையின் போதும் கமலம் தான் புலம்பி தீர்த்தார்.
“காசு கொள்ளையடிக்க என்னென்ன டெஸ்டு எடுக்குறானுவ.”
“டேய் குமரா போதும்டா.”
“எம்புட்டு ரத்தத்தை எடுத்துப்போச்சு அந்த நர்ஸு.”
இப்படி அவரின் புலம்பல்கள் நீடித்தது.
ஒருகட்டத்தில் குமரன் பொறுக்க முடியாது முறைத்த பின்னரே அவர் அமைதியாகினார்.
அனைத்தும் முடிய மதியம் இரண்டு மணி ஆகியிருந்தது.
“இதுக்கு முடிவெல்லாம் எப்போ வரும் குமரா?”
“ஏன் தாத்தா பயமா இருக்கா?”
“உழைச்ச கட்டைடா. எங்களுக்கு ஒண்ணுமிருக்காது. உன் திருப்திக்காகத்தான் நாங்க வந்ததே” என்ற வீரபாண்டியனின் பதிலில் மெச்சுதலாய் ஒரு பார்வை குமரனிடம்.
“அவ்வளவுதானே, வீட்டுக்கு போலாமா?”
“போகலாம் தாத்தா” என்ற குமரன் கமலத்தை பார்க்க… அவரோ அந்த வளாகத்தையே நின்ற இடத்திலிருந்து அலசிக்கொண்டிருந்தார்.
“என்னத்த பராக்கு பாக்குற அப்பத்தா?”
“நம்ம வெண்ணிலா கண்ணு இங்கு தானே படிக்குது. பார்த்து ரொம்ப நாளாச்சே. அதான் தட்டுப்படுதா பார்த்தேன்” என்றார்.
“இவ்வளவு பெரிய பரப்பில், நின்ன இடத்திலிருந்தே உன் பேத்தியை கண்டு பிடிச்சிடுவியோ” என்றவனிடம் வெண்ணிலாவுக்கு அழைக்கச் சொல்லி கமலம் கேட்டார்.
“அவளுக்கு வகுப்பு நடந்திட்டு இருக்கும் அப்பத்தா. இப்போ நாம் கூப்பிட்டால் தொல்லையாக இருக்காதா?” என்றவன், “வாங்க கேண்டின் போகலாம். எதாவது சாப்பிட்டு உடனே கிளம்பலாம்” என்று வெண்ணிலாவை தவிர்ப்பதற்காக வேகமாக செயல்பட்டான்.
காலையில் இங்கு வந்தது முதல் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும், அவனின் பேச்சையும் கட்டுப்பாட்டையும் மீறி, கண்களும் மனமும் வெண்ணிலா எங்கேனும் பார்வையில் விழமாட்டாளா என்று அலைப்புறும் தவிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அவனைத் தடுமாற வைப்பதை வெறுத்தவனாக அங்கிருந்து விரைந்து நகர்ந்து வளாகத்தினுள்ளேயே இருக்கும் உணவகத்திற்கு வந்திருந்தான்.
“உங்களைப்பற்றி மட்டும் பக்கம் பக்கமா என் காது தீயுற வரை பேசுறா(ள்). என்னைப்பற்றி எதுவுமே சொன்னதில்லையா?” என்று ஹேமா கேட்டிட அவளை நீயென்ன லூசா என்பதைப்போல் ஏற இறங்க பார்த்து வைத்தான்.
அதற்குள் அவர்கள் நின்றிருந்த கவுண்டரில் குமரன் கேட்ட பழச்சாற்றினை கொடுத்திட, எடுத்துக்கொண்டு அவன் நகர்ந்தான்.
“அண்ணா நில்லுங்க” என்றவள் அவசரமாக தான் ஆர்டர் செய்ததை பிடுங்காத குறையாக பெற்றுக்கொண்டு குமரனின் பின்னே வேகமாக ஓடினாள்.
பேரனின் பின்னால் ஓடிவந்த பெண்ணை பார்த்து…
“யாருப்பா இந்தப்பொண்ணு?” என்று கமலம் வினவிட,
இதுவரை வெளியில் பெண்களிடம் பேசி பழகிடாத குமரனுக்கு ஒரு பெண் தன்னை தொடர்வது ஆத்திரம் மூட்டிட…
“நான்தான் உங்களை தெரியல சொல்லிட்டனே! பிறகும் எதற்கு பின்னாலேயே வறீங்க?” விட்டால் அடித்து விடுவான் போலும்.
அவனின் கோபத்தில் முகத்தை மூடிக்கொண்ட ஹேமா…
“அச்சோ அண்ணா அடிச்சிடாதீங்க. நான் வெண்ணிலா ஃபிரண்ட்” என்றவள் கேன்டினிலிருந்த தடுப்பை கடந்து ஒரு மூலையை நோக்கி… “வெண்ணிலா” என குரல் கொடுத்தாள்.
ஹேமா அழைத்த பக்கம் அவர்கள் மூவரும் பார்த்திட… வெண்ணிலா ஹேமா அழைத்ததற்காக தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து கையை மட்டும் உயர்த்தி காண்பித்தாள்.
அங்கு வெண்ணிலாவின் முன் இளைஞன் ஒருவன் அமர்ந்திருக்க, வெண்ணிலா இவர்கள் பக்கம் திரும்பி பார்க்கவில்லை.
“அவர் எங்க சீனியர். ஏதோ பேசிட்டு இருக்கா(ள்) நினைக்குறேன். நான் கிட்டப்போய் கூட்டிவரேன் அண்ணா” என்று ஹேமா இரண்டடி எடுத்து வைக்க…
“நீங்க ஹேமா தானே?” எனக் கேட்டிருந்தான் குமரன்.
“ஷப்பா… இப்போவாவது தெரியுதா?” என்றாள்.
“உங்களைப்பற்றி வெண்ணிலா சொல்லியிருக்கா(ள்). ஆனால் பார்த்தது இல்லை. அதான் நீங்க யாருன்னு தெரியாது கோபப்பட்டுட்டேன்” என்று தன்பக்க வருத்தத்தை தெரிவித்தான்.
“இட்ஸ் ஓகேண்ணா! நான் அவளை கூட்டிட்டுவரேன்” என்று வெண்ணிலாவை நோக்கி நகர்ந்தவள்…
திடுக்கிட்டு, கண்கள் அகல விரிய சமைந்து நின்றாள்.
அவ்விடமே அதிரும் வகையில் வெண்ணிலா தனக்கு முன் அமர்ந்திருந்தவனை பளாரென அறைந்திருந்தாள்.
வெண்ணிலாவையே பார்த்திருந்த அவளது குடும்ப உறுப்பினர்களுக்கு அவள் ஒரு ஆடவனை அறைந்ததில் அத்தனை அதிர்ச்சி.