எப்படி சென்றதென்றால் இருவரைத் தவிர மற்றவர்களுக்கு வழமையான நாட்களாகத்தான்.
குமரனின் அன்றைய பேச்சிற்கு பின் வெண்ணிலா மொத்தமாக அமைதியாகிப் போனாள். குமரன் விடயத்தில் மட்டும்.
அவனிடம் பேசாது, பார்க்காது அவளால் ஒரு நொடியை கடத்துவதே பெரிய விடயமாக இருந்த போதும், மனம் காயம் கொள்ள அவன் உதிர்த்த வார்த்தைகள் திடமாக அவளைத் தள்ளி நின்றிட வைத்தது.
காந்தளின் முகத்திற்காக சோகத்தை மனதோடு வைத்து நடமாடிக் கொண்டிருக்கிறாள்.
அன்றைய இரவு முழுக்க அழுகையில் கரைந்தவள், மறுநாள் கல்லூரியில் ஹேமாவை அணைத்துக்கொண்டு கதறி விட்டாள்.
கதிர் என்ன பேசினான் என்று சொல்லிடாது,
“மாமா எப்பவும் என்னோட காதலை ஏற்க போவதில்லை ஹேமா” என்று சொல்லி துடித்து அழுதாள்.
காதல் இத்தனை கண்ணீரை கொடுக்குமா?
ஹேமா வெண்ணிலாவின் அழுகையை பார்த்து தெரிந்துகொண்டாள்.
“அவர் என்னை பிளாக் பண்ணிட்டார் ஹேமா. அவரோட வாழ்க்கையில் இருந்தே என்னை டெலிட் பண்ண மாதிரி இருக்குடி” என்று சொல்லி அழுபவளைத் தேற்றும் வழியறியாது ஹேமா தோழியை அணைத்துக் கொண்டாள்.
வெண்ணிலாவின் வலியை நேரில் பார்க்கும் ஹேமாவிற்கு, தானே வலியை அனுபவிப்பது போலிருந்தது.
‘அன்று அப்படி அழுதவள் எப்படி தன்னை மீட்டுக்கொண்டாள்’ என்று ஹேமாவிற்கே அடுத்தடுத்த நாட்களில் வெண்ணிலாவின் நிர்மலமான முகம் கண்டு சந்தேகம் எழுந்தது.
ஆனால் என்ன இந்த நான்கு நாட்களில் வெண்ணிலாவிடம் காணப்படும் அமைதி ரொம்பவே புதிது.
எந்த காதலினால் படிப்பு வீணாகுமென்று குமரன் காரணம் காட்டினானோ, அந்த காதலின் வலியாலே தன் படிப்பு பாழாகிவிடுமோ என எண்ணியே முயன்று வலியை அடக்கி படிப்பில் தன்னை முழுதாக நுழைத்துக் கொண்டாள்.
இந்த நான்கு நாட்களில் அவள் உறங்கியதைவிட குமரனின் பேச்சை நினைத்து அழுதது அதிகம்.
சாதாரண வார்த்தைகளாக மற்றவர்களுக்கு தெரியலாம்… உரியவருக்கு உயிர்வதை கொடுக்குமல்லவா. தன்னுடைய அன்பினை தொல்லை என்பதை காதல் கொண்ட நெஞ்சம் எப்படி ஏற்கும். தவியாய் தவிக்க வைக்குமே. வலி நிரம்பியதாயிற்றே. உயிர்வதை செய்யுமே!
அதுமட்டுமா கூறினான்? மனதை இறுகச் செய்திடும் வார்த்தையல்லவா அவன் சொல்லிய அந்த ஒற்றை வார்த்தை.
‘ஆம் உனக்காக… உன் காதலுக்காக உன்னில் பித்தாய் அலைகிறேன்.’
குமரன் அவ்வார்த்தையை உதிர்த்த நொடி, மரத்த நிலையிலும் வெண்ணிலாவின் உள்ளம் அவனுக்கு மானசீக பதிலை அளித்திருந்தது.
காதல் எத்தகைய இன்பத்தை வாரி கொடுத்திடுமோ… அதைவிட பன்மடங்கு வலியை திருப்பிக் கொடுத்திடும் என்பதை நிஜத்தில் அனுபவித்தாள்.
அதிலிருந்து மீள விடிய விடிய புத்தகத்தோடு மல்லுகட்ட ஆரம்பித்து வெற்றியும் கண்டாள்.
தன்னை அதிலிருந்து மொத்தமாக மீட்டுக்கொண்டாளா என்றால் ஆமென்று தான் சொல்வாள். ஆனால் உண்மையை அவளது மனம் மட்டுமே அறியும்.
இதயம் உள்ளுக்குள் ஒவ்வொரு நொடியும் சில்லு சில்லாக நொறுங்கிய வண்ணமிருக்க, வெளியில் போலி புன்னகையுடன் வலம் வர நான்கு நாட்களில் கற்றிருந்தாள்.
தனிமையில் அதிகம் வாடாமல் இருக்கவே, புத்தகமும் கையுமாக சுற்ற ஆரம்பித்திருந்தாள்.
அன்று சனிக்கிழமை. கல்லூரி விடுமுறை.
காந்தள் “ஏற்காட்டிற்கு கிளம்பலாம். அம்மாவிடம் வரேன்னு சொல்லிட்டேன்” என்று சொல்ல, “எனக்கு லைப்ரரி போகும் வேலையிருக்கும்மா” எனக்கூறி மறுத்துவிட்டாள்.
படிப்பு விடயம் என்றால் காந்தள் ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்டிடமாட்டார் என்பதால் அவருக்கேற்ற காரணத்தை சொல்லி தப்பித்துக்கொண்டாள்.
“நாளை குமரன் பிறந்தநாள் வெண்ணிலா. சாயங்காலம் போல கிளம்பி வா. நைட் நீயிங்கு தனியாக இருக்க வேண்டாம்” என்றவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் கிளம்பிவிட்டார்.
நூலகம் செல்ல வேண்டுமென்று காரணம் சொல்லியவள் அந்த நினைவே இல்லாது, கூடத்தின் நீள்விருக்கையில் அமர்ந்து முன்னிருந்த டீபாயின் மீது காலை நீட்டி, இருக்கையின் பின் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.
எப்போதும் போல் அவளவனே மூடிய விழிகளுக்குள் ஊர்வலம் சென்றான்.
“என்னாச்சு உனக்கு? ஃபோர் டேஸ் ஆச்சு நீ எனக்கு கால் செய்து. நைட் ஷிஃப்ட், பகலில் தூங்குவதால் என்னாலும் கால் பண்ண முடியல” என்றான்.
“ஸ்டடீஸ்ல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்” என்றவள், அவனுக்காக உணவினை எடுத்து வைக்க… அவன் கீழவே இருக்கும் ஒரு அறையில் குளித்து உடைமாற்றி வந்தான்.
“அத்தை எங்கடி?”
“டி போடாதன்னு சொல்லியிருக்கேன்ல” என்று பத்திரம் காட்டினாள்.
“நீ என் செல்லக்குட்டிடி. உன்னை இப்படி கூப்பிடத்தான் வருது” என்றவன் அவளின் கன்னம் கிள்ளி, உணவு மேசை இருக்கையில் அமர, அவளுக்காக காந்தள் செய்து வைத்துவிட்டுச் சென்ற உணவை அவனுக்கு பரிமாறினாள்.
“நான் கேட்டதுக்கு நீயின்னும் பதில் சொல்லல?”
“அம்மா அம்மச்சியை பார்க்க மலைக்கு போயிருக்காங்க.”
“நீ போகலையா? நாளை குமரன் பிறந்தநாள். எப்படியும் அத்தை நைட் திரும்பி வரமாட்டாங்கலே?” என்றான்.
“அவங்க அங்கு இருக்கிறது இருக்கட்டும். நீ வர முடியாது சொல்லித்தானே ட்ரெஸ் அனுப்பியிருந்த?”
“வொர்க் டைட் தான். எப்படியோ மேனேஜ் பண்ணிட்டு, மிட் நைட் அப்புறம் கிளம்பிட்டேன். உனக்குத் தெரியாததா, அவன் பிறந்தநாளுக்கு மட்டும் கூடவே இருக்கணும் தோணும். குமரன் நமக்கு ஸ்பெஷல் ஆச்சே. அதோடு மேடத்தையும் பார்த்து ரொம்ப நாளாச்சே! சரியா பேசிக்கவும் முடியல. அதான் கிளம்பிட்டேன்” என்றவன் பேச்சோடு அவள் சாப்பிட்டுவிட்டாளா என்பதை கேட்டு, அவளுக்கும் ஊட்டியபடி உணவில் கவனமானான்.
சாப்பிட்டு முடித்து ஓய்வாக அமர்ந்ததும்…
“இப்போ சொல்லு, என்னாச்சு உனக்கு?”
குணாவின் இந்த கேள்வியில் வெண்ணிலா தடுமாறினாள்.
“அம் ஓகேடா.”
“சீரியஸ்லி?”
“யா, ஷூயர்.”
“நம்பிட்டேன்” என்றவன், “குமரனிடம் என்ன சொன்னாய்? அவன் வீட்டுக்கு வருவதில்லைன்னு அத்தை சொன்னாங்களே?”
கேள்விகளாகக் கேட்டு அவளைத் தொல்லை செய்தான்.
“அவர் ஏன் வரலைன்னு அவரிடம் தான் கேட்கணும்” என்றவள், “இந்த வாரம் இங்கு வந்தாரே. நீ அனுப்பிய ட்ரெஸ் வாங்கிட்டு போனார்” என்றதோடு பழனிச்சாமி செய்த தகிடுத்தத்த வேலையையும், அதற்காக குமரன் செய்ததையும் கூறினாள்.
“இவர் என்ன பண்ணாலும் இவனால் மட்டும் தான் இப்படி ஒண்ணுமே நடக்காத மாதிரி உதவ முடியும்.” பழனிச்சாமிக்கு குமரன் உதவி செய்து பெரிய சிக்கலிலிருந்து மீட்டிருக்கிறான் என்பதை குணாவால் ஏற்க முடியவில்லை. பழனி குமரனுக்கு தொழிலில் செய்தது எத்தனை பெரிய துரோகம். அதனை மறந்துவிட்டு எப்படி இப்படி என்கிற கோபம் குணாவுக்கு.
“நீ இதை நினைத்து டென்ஷன் ஆகாத குணா. சிலரையெல்லாம் மாற்ற முடியாது. மறப்போம் மன்னிப்போமென எப்படி இருக்க முடிகிறதோ? கேட்டால், பெரியம்மாவுக்காகவும் மதிக்காகவும் செய்தேன் சொல்றாரு” என்றவள் அவனின் குடும்பத்தில் உள்ளவர்களின் நலனை கேட்டு தெரிந்துகொண்டாள்.
“தீக்ஷியை கூட்டி வந்திருக்கலாமே?”
“அவளும் கிளம்பினால்… அப்பா என்னையும் போகவேண்டாம் சொல்லிருப்பாரு” என்ற குணா, “அம் வெரி டயர்ட் டி செல்லக்குட்டி. கொஞ்ச நேரம் தூங்குறேன். ஈவ்னிங் காஃபியோடு வந்து மாமனை எழுப்பி விடு” என்று எழுந்து கொண்ட குணா, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவனாக அறைக்குள் சென்றுவிட்டான்.
******
காந்தள் பேருந்தில் ஏற்காடு சென்றிருந்தார். பேருந்து நிலையத்திலிருந்து பத்து நிமிட பயண மேட்டில் வீடு இருக்க, அவருக்காக கண்ணபிரான் வண்டியோடு காத்திருந்தார். பேருந்து நிறுத்துமிடத்தில்.
பார்த்து இரண்டு வாரங்கள் ஆகிறது. இருந்தபோதும் மகளின் வருகையில் பூரித்திருந்தார் கமலம்.
பெண் பிள்ளைகளுக்கு பிறந்த வீடென்றால் தனிப்பாசம் தான். பெற்றோருக்கும் உடனிருக்கும் மகன்களை விட எப்போதாவது வந்து செல்லும் மகள் மீது அன்பு அதிகம் இருக்கும்.
கமலம் தன்னுடைய அன்பை சமையலில் காட்டியிருந்தார். காந்தளுக்கு பிடித்த உணவுகளாக செய்து உண்ண வைத்தார்.
கண்ணபிரான் கூட காந்தளுக்கு பிடித்த பழங்களை தங்களது பண்ணையிலிருந்தே கொண்டு வந்திருந்தார்.
வீரபாண்டி மகளின் வேலை விடயம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் கமலம் குமரனின் ஜாதகம் குறித்து கேட்டார்.
ஆனால் காந்தள் குமரனைப்பற்றி பேசிடாது ராஜேந்திரன் கால் செய்ததை குறித்து பேசினார்.
முந்தைய நாள் இரவு காந்தளை அலைப்பேசி வாயிலாக ராஜேந்திரன் அழைத்திருந்தார்.
“வெண்ணிலாவுக்கு எப்போ படிப்பு முடியுது?” எடுத்ததும் அவர் வெண்ணிலாவைப் பற்றித்தான் வினவினார்.
“இன்னும் ஒரு வருடம் இருக்கேண்ணா” என்று காந்தள் சொல்லவும்,
“ம்ம்ம்” என்றவர், “குமரனுக்கு பொண்ணு பார்க்கிறதா கேள்விப்பட்டேன்” என்றார்.
“ஆரம்பிக்கலான்னு கண்ணன் அண்ணன் சொன்னார். தரகர் மூலமாக தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி வைக்கலான்னு பேசினோம். அவ்வளவு தான் அண்ணா.”
காந்தள் விவரம் கூறிடவும் ராஜேந்திரனிடம் சில நிமிடங்கள் அமைதி.
“உன் முடிவு என்ன?”
“இதுல நான் என்னண்ணா முடிவு எடுக்கணும்?” அவர் எதற்கு அடி போடுகிறார் என்பதை அறிய… தனக்குள்ளிருக்கும் ஆசையை மறைத்தவறாக பதில் வினா எழுப்பினார்.
“இல்லை குமரனுக்கு வெண்ணிலாவை கொடுக்கலான்னு உனக்கு எதுவும் எண்ணமிருக்கா?” எனக் கேட்டவர், காந்தள் பதில் பேசும் முன்னரே… “அந்த மாதிரி எண்ணமெல்லாம் வளர்த்துக்காதே! வெண்ணிலா எனக்கு மருமகளாக வரணும் ஆசைப்படுறேன்” என்று உடைத்து பேசிவிட்டார்.
“குணாவுக்குத்தான் வெண்ணிலா” என்று மீண்டும் கூறியவர், “மதியை வேண்டுமென்றால் குமரனுக்கு பேசுங்க” என்றார்.
நாளை தனது பெற்றோரிடம் குமரனுக்காக வெண்ணிலாவை பேசுவோம் என்று காந்தள் நினைத்திருக்க…
ஆட்டத்தையே தன் பேச்சால் மாற்றிவிட்டார் ராஜேந்திரன்.
அப்போதைக்கு அவரிடம் என்ன பதில் பேசுவதென்று தெரியாமல், சரியென வைத்துவிட்டார் காந்தள்.
காந்தள் சொல்லியதை கேட்ட கண்ணபிரான்… “நான்தான் நேத்து காலையில் அண்ணனிடம் பேசும்போது விடயத்தை சொன்னேன். ஆனால், அண்ணன் இப்படி யோசிப்பாருன்னு நினைக்கலையே” என்றார்.
“நம்ம உறவே வேணான்னு தனியா இருக்கவன், இப்படி கேட்டது சந்தோஷம் தானே காந்தள். அதுக்கு ஏன் சுரத்தே இல்லாமல் இருக்க?” வினவிய அன்னையின் முகத்தை ஏக்கமாக ஏறிட்டார் காந்தள்.
“என்ன கண்ணு… என்ன வெசனம் உனக்கு?”
“எனக்கு குமரனுக்கு வெண்ணிலாவை கட்டிக்கொடுக்கணும் ஆசைம்மா. ஆனால், அண்ணன் இப்படி கேட்கும்போது முடியாதுன்னும் சொல்ல முடியல” என்றார்.
“எனக்கும் இதே ஆசை தான்.” கமலம் சொல்லிட மகளையும் தாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்த வீரபாண்டி பேச ஆரம்பித்தார்.
“நம்ம காலத்துக்கு அப்புறமும் நம்ம குடும்பம் ஒண்ணா இருக்கணும். அதுக்கு இதுதான் சரி” என்றவர், “எப்பவும் இறங்கி வராத உன் பெரிய மகனுக்கு தங்கச்சி மகளை மருமகளாக்கிக்கனும் எண்ணம் வந்ததே பெருசு. அதை ஏன் வேணாம் சொல்லணும்.
எப்படியும் வெண்ணிலாவுக்கு படிப்பு முடிய ஒரு வருடம் இருக்கே. மதிக்கு இன்னும் ரெண்டு மூணு மாசத்தில் முடிஞ்சிடும்.
குமரனுக்கு முன்ன குணா கல்யாணம் செய்துக்க சம்மதிக்கமாட்டான். அதோட குமரனை விட அவனுக்கு இன்னும் வயசிருக்கே!
அதனால இதுதான் ஒத்து வரும்.
குமரனுக்கு மதியை கட்டிவச்சால், பழனிக்கு ஆவாதவங்களா இருக்க நம்மளை அவன் ஏத்துகிட்டுத்தானே ஆவணும். அதேபோல, வெண்ணிலாவை குணாவுக்கு கல்யாணம் செய்றது மூலமா ராஜேந்திரனை நம்மளோட இழுத்து பிடிச்சி வச்சிக்கலாமே!” என தன் எண்ணத்தைக் கூறினார்.
வீரபாண்டி சொல்லும் வகையில் யோசித்தால் அங்கொன்று இங்கொன்றுமாக இருக்கும் குடும்பம், ஒன்றாக வாய்ப்பிருப்பதாகவே மற்றவர்களுக்கும் தோன்றியது. அவர்கள் ஆசைப்படுவதும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைத்தானே. அதற்கு ராஜேந்திரன் வழியை ஆரம்பிக்க, ஒன்றாக கடந்திட இவர்கள் பாதை அமைத்தனர்.
“குணாவை உனக்கு பிடிக்காதா காந்தள். அவனும் உன் அண்ணன் மகன் தானே?” கண்ணன் பட்டென்று கேட்க, காந்தளுக்கு என்னவோப்போல் ஆனது.
“அய்யோ தம்பி… குணாவை பிடிக்காதுன்னு இல்லை. குமரன் எப்படியோ அப்படித்தான் குணாவும். ஆனால் குமரனுக்குன்னு ஆசைப்பட்டுட்டேன் அதான் கொஞ்சம் வருத்தம். மத்தபடி குணாவுக்கு கொடுக்கக்கூடாதுன்னு இல்லை.”
காந்தளின் மனம் கண்ணனுக்கு தெளிவாக புரிந்தது.
“உனக்கு என்ன விருப்பமோ செய்(ம்)மா” என்றுவிட்டார்.
“குணாவுக்கு மதியை கொடுக்கக்கூடாதாப்பா?”
“ராஜேந்திரனும், பழனியும் நெருக்கமாகிட்டால் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்க கதைதான். ஏற்கனவே ரெண்டும் தனித்தனி ரகம். இதுல இன்னும் நெருங்கிட்டால் நம்ம பாடு திண்டாட்டம் தான். ஜென்மத்துக்கும் நம்ம குடும்பம் சேராது. இப்போ மாதிரி ரெண்டு பேரும் எப்பவும் திசைக்கு ஒண்ணாத்தான் பிரிஞ்சி இருப்பானுவ. அவுனுங்க ரெண்டு பேரும் நானே ராஜா! நானே மந்திரிங்கிற மாதிரி இன்னும் கோட்டித்தனமா நடப்பானுங்க.”
வீரபாண்டி அவ்வாறு சொல்லிட சிறிது நேரம் யோசித்த காந்தளுக்கு, வெண்ணிலாவை கொடுக்கவே இல்லையென்றாலும் குமரன் தன்னுடன் எப்போதும் பாசமாக ஒட்டுதலோடு இருப்பான் என்பது திண்ணமே. அதனால் விலகியிருக்கும் ராஜேந்திரனை தங்களோடு இணைக்க கிடைக்கும் வாய்ப்பை தவறவிட வேண்டாமென்று நினைத்து வீரபாண்டி சொல்லிய யோசனைக்கு சம்மதம் வழங்கினார்.
“நாம திட்டம் போட்டால் ஆச்சா?” என்ற கண்ணன், “குமரனுக்கு மதியை கொடுக்க பழனி மச்சான் ஒத்துப்பாரா?” என்றார்.
“வில்லங்கமே அவன் தானே.” கமலம் மோவாயை நொடித்துக் காட்டினார்.
“அதெல்லாம் நான் ஒத்துக்கிட வச்சிடுறேன்” என்ற குரலில் நால்வரும் திரும்பி பார்த்திட, குணவதி வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தார்.
“நீங்க என்ன பேசிக்கிட்டிங்கன்னுலாம் தெரியாது. கடைசியா தம்பி கேட்டது மட்டும் நல்லா கேட்டுச்சு” என்றார் குணவதி.
“அவர் பண்ணதையெல்லாம் மறந்துட்டு எம் புள்ளை எவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கு. இப்படியொரு புள்ளைக்கு பொண்ணை கொடுக்க கசக்குதா அந்த மனுஷனுக்கு?” என்ற குணவதி, பழனியை எப்படியும் ஒப்புக்கொள்ள வைத்திடுவாரென்று மற்றவர்கள் நிம்மதி அடைந்தனர்.
“நினைத்தது நடந்தால் சந்தோஷம் தான்.”
“அப்புறம் என்ன ஆக வேண்டியதை ஆரம்பிப்போமே?” குணவதி உற்சாகமாகக் கூறினார்.
“குமரன்கிட்டவும் ஒரு வார்த்தை கேட்கணும்” என்று தாத்தா சொல்லிட,
“அதெல்லாம் நான் சொன்னால் அவன் ஏத்துக்கிடுவான்” என்று உறுதியாக சொன்னார் கமலம்.
“மதிக்கு படிப்பு முடியணுமே” என்ற கண்ணபிரான், “இவங்களுக்கு சதாபிஷேக கல்யாணம் செய்து வைக்க குமரன் ஆசைப்படுறான்” என்று பெற்றோரை சுட்டிக்காட்டி தன்னுடைய சகோதரிகளிடம் கூறினார்.
“நமக்குத் தோணல பாரேன் தம்பி” என்ற குணவதி, “உன் மருமகன் உன்னிடம் சொல்லியிருப்பானே” என்று காந்தளிடம் கேட்டார்.
“இல்லக்கா… ஏதும் ஏற்பாடு பண்ணிட்டு சொல்லலாம் இருக்கானோ என்னவோ” என்றார் காந்தள்.
“அப்போ அந்த விழாவில் வைத்தே குமரன், மதி கல்யாணத்தை உறுதி படுத்திப்போம்” என்று குணவதி மகிழ்வாய் சொல்லிட, அனைவரும் சரியென்பதாக ஆமோதித்து தலையசைத்தனர்.
இரண்டு காதலை மரிக்கச் செய்துவிட்டோம் என்பதை உணராது அவர்கள் மகிழ்ந்திருந்தனர். இந்த மகிழ்வுக்கு காலம் வெகு குறைவு, தங்களது முடிவை நினைத்து அவர்கள் வருந்தும் நாள் அருகில் என்பதை அறியவில்லை.