இழையை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்று வசீகரன் தகவலளித்ததில் நிலைகொள்ளாமல் தவித்திருந்த பார்கவி சர்வஜித், ப்ரணவ் மற்றும் வசீகரனுடன் உள்ளே நுழைந்த மகளின் கோலம் கண்டு இன்னுமே பதறிபோனார்..
‘என்னதான் உடையை மாற்றி முகத்தை திருத்தியிருந்தாலும் அன்னையின் கண்களுக்கு மகளின் வித்யாசம் தெரியாமல் போகுமா என்ன..??’
வீடு திரும்பும் வழியிலேயே வசீகரன் எச்சரித்திருந்த போதும் பார்கவியை கண்டதுமே ‘அம்மா..’ என்ற கதறலோடு இழை அவரை அணைத்துகொள்ள மற்றவர்களுக்கும் பதற்றம் தொற்றிகொண்டது..
‘பிங்கி என்னடாச்சு ஏன் அழற..??’ என்று அபியும் நாயகியும் அவளிடம் செல்ல..,
‘தம்பு காய்ச்சல் இருந்தது ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறோம்னு சொன்ன அப்புறம் ஏன் பிங்கி ..??’ என்று திரு மகனை கேள்வியாக பார்த்தார்.
‘பிங்கி எதுக்கு அழற..?? என்ற கைலாசமும் புரியாமல் வசீயை தான் பார்த்தார்.
‘இவளை…’ என்று இழையை முறைத்துகொண்டு நின்றிருந்தான் வசீகரன்.
‘ப்பா யாரும் டென்ஷனாக வேண்டாம்’ என்று சர்வஜித் சொல்ல..,
‘என்ன பேசுற ஜித்து..??’ என்ற அபியும் அவள் அழுகையின் காரணம் புரியாமல் நின்றிருந்தார்.
‘அபிம்மா டாக்டர் இழையை நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கார் இந்தாங்க இந்த டேப்லெட்ஸ் கொடுத்து படுக்கவைங்க..’ எனவும் அபிராமி இழையோடு அவளறையினுள் நுழைந்தார்.
‘தம்பு என் பெண்ணுக்கு என்னாச்சு உண்மையை சொல்லு.. அவனோட லட்சணம் தெரிஞ்சதுக்காக என் பெண் அழமாட்டா வேற ஏதோ காரணமிருக்கு தயவுசெய்து சொல்லு..’ என்றதும் பொறுமையாக நடந்ததை வசீகரன் எடுத்து சொல்லவும்..,
‘நானே என் பொண்ணோட வாழ்க்கைக்கு எமனாகிட்டேனே..’ என்று அழுகையினூடே கீழே அமர்ந்த பார்கவியின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடியது.
‘என்ன பேசுற கவி..??’ என்று அதட்டினார் நாயகி.
‘இல்ல உனக்கு தெரியாது அம்மூ அவசரப்பட்டு நானே என் பெண்ணை படுகுழியில தள்ள பார்த்திருக்கேன் நான் என்ன அம்மா..?? என் பொண்ணு என்னை ரொம்ப நம்பினா ஆனா.. ஆனா ..’ என்றவரின் அழுகை அதிகரித்தது.
‘பார்கவி என்னம்மா இது.., இப்பவும் ஒண்ணுமாகிடலை நம்ம பிங்கி சேப்ஃபா இருக்கா..’ என்று திரு சமாதானபடுத்த முயல..
‘இல்லண்ணா உங்களுக்கு தெரியாது எப்பவும் என் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத என் பெண் முதல்முறையா இவனை வேண்டாம் வேற பாருங்கன்னு சொன்னா.. ஆனா நான்தான் என் சின்ன மாமனார் பேசினதை உண்மையாக்க போறியான்னு கேட்டு அவளை ரொம்ப பேசிட்டேன்… இவனுக்கே ஒத்துக்கோன்னு கிட்டத்தட்ட அவளை கட்டாயபடுத்தினேன்னு சொல்லலாம் …’ என்று கூறவும் வசீகரனின் முகத்தில் நிம்மதி பிறந்திட அவனையுமறியாமல் இதழ்கள் புன்னகையில் மிளிர்ந்தது.
‘என்ன கவி இது பிள்ளைகளோடு கல்யாணவிஷயத்துல உன்னோட விருப்பத்தை திணிக்கிறது தப்பில்லையா..?? இதை செய்தா நல்லா இருக்கும்னு சொல்ல வேண்டியது எப்படி நம்ம கடமையோ அதேபோல அவங்களுக்கு சுத்தமா விருப்பமே இல்லாத ஒன்னை நமக்காக செய்ய சொல்றது எந்த விதத்துல நியாயம்..?? இன்னைக்கு ஊருக்காக உறவுக்காக நாம அவசரப்பட்டு கல்யாணம் செய்துட்டா நாளைக்கு அதனால வரக்கூடிய கஷ்டநஷ்டத்தை அனுபவிக்க போறது யாரு..??’ என்று கேட்க பார்கவியிடம் கட்டுபடுத்தமுடியாத கண்ணீர் மட்டுமே!!!
‘என்ன வேற என்ன செய்ய சொல்ற அபி? என்னதான் கண்டிப்பா வளர்த்திருந்தாலும் எப்பவும் என் பெண்ணோட விருப்பத்தை மதிக்கிறவ நான் அது உனக்கே தெரியும்.. ஆனா என் சின்னமாமனார் என்னை கேட்க மாமனார் மாமியார்னு யாருமில்லாததால என் பெண்ணை முப்பது வயசானாலும் கட்டி கொடுக்காம முதிர்கன்னியா வச்சிருக்க போறேன்னு சொல்றப்போ நான் என்ன செய்ய..?? அதோட என்னைக்கு நான் அவங்களை மதிச்சிருக்கேன், அடங்கி இருந்திருக்கேன், என் இஷ்டத்துக்கு போய் அம்மா வீட்ல உட்காந்துட்டேன்னு எவ்ளோ பேச்சு பேசினார் தெரியுமா..??’ என்று அழுகையினூட பேசிட..
‘என்ன சொல்ற கவி ..??’ என்ற நாயகிக்கு பெரிதாக அவர்களுடன் உறவாட விரும்பாத கைலாசத்தின் சித்தப்பா இன்று அதிகாரம் செய்வதை நம்பமுடியவில்லை.
‘நடந்ததை சொல்றேன்.. எப்படி பூக்கட்டறப்போ இடையில அறுந்துபோச்சுன்னா முடிச்சு போட்டு அது தெரியாம இருக்க மேலும் நாலு பூவை வச்சு கட்டிட்டு போவோமோ அதுபோல தான் உறவு விட்டுபோயிட கூடாதுன்னு எல்லா பூசலையும் மொழுகி விரிசல் அதிகமாகாம சேர்த்து பிடிச்சேன்.. கண்டிப்பா முடிச்சு போட்டு கட்டி முடிச்சபிறகு நம்மாலேயே எங்க விரிசல் வந்ததுன்னு கண்டுபிடிக்க முடியாதுங்கிற நம்பிக்கையில ..’
‘அப்படி என்ன அவசியம் கவி… உனக்காக யாருமே நிற்க்கலையே..’
‘அதுக்காக அப்படியே விடமுடியாதே அம்மூ நாளைபின்ன என் பொண்ணுக்கு நல்லது கெட்டதுல ஆதரவு வேணுமே.. அதான் சில முடிச்சுக்கள் தெரியாத வகையில் சிலநிமிடங்களை கடந்து போக பழகிட்டேன்..’
‘ஒரு பெண்ணுக்குகூட பிறந்தவங்க யாருமில்லாம அவ படக்கூடிய கஷ்டங்களை என்னைவிட வேற யாரும் அனுபவிச்சிருக்க முடியாது… என்னதான் இவர் என்னை ராணியா தாங்கினாலும் சிலநேரம் சொல்லி அழக்கூட நமக்குன்னு ஒரு ஆள் இருக்காது அம்மூ, எனக்கு ஆதரவா அரவணைக்க அண்ணன் தம்பி கிடையாது கஷ்டத்துல மடி சாய அம்மாவும் கிடையாது அப்பா முகமே மறந்துபோச்சு .. எங்க அம்மா இறந்தபிறகு எனக்கு போக்கிடம்கூட இல்ல அபி.. என் நிலைமை என் பெண்ணுக்கு வந்துடகூடாதுன்னு தான் நான் ரொம்பவே கவனமா இருந்தேன்..’ என்று சிறுகுழந்தையாக அவர் தேம்பி அழ..
‘அக்கா வேண்டாம் அழாதீங்க..’ என்ற அபியின் சமாதானமும் அவரிடம் எடுபடவில்லை.
‘நீயே சொல்லு அபி நானென்ன அம்மா வீட்டுக்கு பொழுது போக்கவா வந்தேன்.. எந்த மாதிரி சூழல்ல வந்தேன்னு உங்களுக்கே தெரியும் அப்படி இருக்கப்போ என்னாலதான் பின்னாடி வந்த மருமகள்கள் கெட்டு போயிட்டாங்க.. கடைசி காலத்துல யாரும் என் மாமியாரை பார்க்காம போனதுக்கு காரணம் நான்தான்.. ஆஷ்மியை சாக்கு வச்சு வீட்டுக்கு பெரியவங்க இருந்திருந்தா மூத்தவ இருக்க இளையவளுக்கு கல்யாணம் பண்ண விட்டிருப்பாங்களான்னு கேட்டவர் என்னை பதிலே சொல்லவிடாம பேசிட்டே போனவர் ஒருகட்டத்துல என்ன சொன்னார் தெரியுமா..??’ என்று குறையாத வலியோடு வசீகரனின் மொத்த குடும்பத்தையும் பார்த்த பார்கவியின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது..
‘அத்தை அதிக ஸ்ட்ரெஸ் எடுக்காதீங்க… இழைக்கு ஒண்ணுமில்ல ப்ளீஸ் காம் டவுன்’ என்று வசீகரன் அவர் முன்னே அமர்ந்தான்.
‘இல்ல தம்பு அவர் என்னை பார்த்து எல்லாரும் உன்னை மாதிரி பணப்பேயாவா இருப்பாங்க.. பெண்ணைவிட எனக்கு பணம் முக்கியமா போயிடுச்சு.. காலாகாலத்துல நடக்க வேண்டியது நடந்தாதான் எல்லாருக்கும் மதிப்பு.., உன் பொண்ணுக்காக அடுத்தவங்க காத்திருக்க முடியுமான்னு..??’ அவர் பேச பொறுக்கமுடியாம இவரும் பேச அன்னைக்கு பெரிய பிரச்சனையே ஆகிடுச்சு…
கூட வந்த இவரோட தம்பிங்க தான் சமாதானம் செய்தாங்க.. அப்பவும் விடாம இவர்கிட்ட ‘சம்பாதிக்க போறேன்னு வெளிநாட்டுக்கு போய் உன் பொண்டாட்டியை நீ தண்ணி தெளிச்சு விட்டது தான்டா என் பேத்தியை இந்த நிலையில நிறுத்தியிருக்கு.. குடும்பம்னா ஒரு கட்டுகோப்பு இருக்கணும் இங்க அது இருக்கா..??’ கேட்டு ரொம்ப பேசிட்டார்’
‘கிளினிக்ல இருந்த பிங்கி அவர்கடைசியா பேசிட்டு இருக்கப்போ தான் வந்தா.. அவகிட்டயும் எங்களை மோசமா பேசினவர் இவங்களை நம்பி இருக்காத பிடிச்சவன் யாராவது இருந்தா கூட்டிட்டு போய் உன் வாழ்க்கையை பாருன்னு சொல்லவும்.. எனக்கு மொத்தமா விட்டுபோச்சு அம்மூ நானென்ன அவ்ளோ மோசமான அம்மாவா..?? என்றார் குறையாத கதறலோடு..
‘விடு கவி நாளைக்கு இழைக்காக நீ சொல்ற உன் சின்ன மாமனார் வந்து முன்ன நிற்க மாட்டார் எல்லாமே நாம தான் பார்க்கணும்.. அப்புறம் ஏன் அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்த..??’
‘எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு அவளுக்குன்னு அண்ணன் தங்கச்சி யாருமே இல்லை.. நாளைக்கு எங்க காலத்துக்கு பின்ன ஏதோ ஒண்ணுன்னா அவளுக்கு போக்கிடம்கூட கிடையாது அபி… சொல்லி அழவும் யாருமே இல்லாத நிலையில என் பெண்ணை கண்ணுக்குள்ள பார்த்ததுக்க கூடிய ஒருத்தனுக்கு கட்டி கொடுக்கணும்.. பையன் மட்டுமில்ல அவனோட குடும்பமும் அன்பா அனுசரணையா இருக்கணும்னு எதிர்பார்த்து சல்லடை போடாத குறையா தேடினது தப்பா நீங்களே சொல்லுங்க..??’ என்று கேட்க யாருக்குமே பதிலளிக்க முடியவில்லை.
பார்கவியின் முன் அமர்ந்திருந்த வசீகரன் மெல்ல அவர் கையை பிடிக்க அதில் இன்னுமே நடுக்கம் குறையாதிருந்தது… பின்னே மகள் முழுதாக சேர்ந்திருந்தாலும் அதற்கு காரணமே அவரல்லவா..?? உரிமையாக கயவன் நுழைவதற்கான வழியை ஏற்படுத்தி கொடுத்த தன்மீதே கோபம் அதிகரித்தது.
‘அத்தை சொன்னா கேளுங்க உங்க மேல எந்த தப்புமில்ல..’
‘இல்ல தம்பு என் பொண்ணு என்னை முழுசா நம்பியிருந்தா அவசரத்துல நானே சரியா விசாரிக்காம சென்னையிலேயே இருக்கான் குடும்பமும் நல்லதா இருக்கு கண்ணுக்கு நிறைவா இருக்கான்னு சரியா விசாரிக்காம அவ வாழ்க்கையை படுகுழியில தள்ள இருந்தேனே…’
‘அதான் இப்போ எதுவும் ஆகலையே அத்தை எதுக்கு அழறீங்க..? இனியும் இழைக்கு இதுபோல நடக்க நான் விடமாட்டேன்?’ என்று அவர் கண்ணீரை துடைத்தவன், ‘
நீங்க தைரியமா இருந்தாதானே இழையும் இருப்பா அழுகையை நிறுத்துங்க..’ என்றவனின் பேச்சில் தான் பார்கவியின் கண்ணீர் மெல்ல குறைந்திருந்தது.
வசீகரனுக்கு அழைப்பு வர, ‘முக்கியமான கால் பேசிட்டு வந்துடுறேன்’ என்று வெளியில் சென்றான்.
அவன் செல்லவும் ‘சரி கவி பத்திரமா பார்த்துக்கோ நாங்க இன்னொரு நாள் வரோம்’ என்று அனைவரும் கிளம்ப எத்தனிக்க.. ‘ம்மா என்னம்மா இது எதுவும் பேசாம கிளம்பறீங்க..??’ என்றான் ப்ரணவ்.
‘ப்ச் ப்ரணவ் சம்பந்தம் பேசக்கூடிய நேரமா இது!! முதல்ல அவங்க இந்த அதிர்ச்சியில இருந்து வெளில வரட்டும் அப்புறம் மெதுவா பேசிக்கலாம்..’
என்னம்மா பேசுறீங்க ஒருவேளை அத்தை திரும்ப வெளியில மாப்பிள்ளை பார்த்தா என்ன செய்வீங்க..?? நம்ம வீட்டைவிட அண்ணிக்கு பாதுக்காப்பான இடம் வேறெதுவும் இருந்திட முடியுமா சொல்லுங்க..?? அதைவிட அண்ணாவை யோசிச்சீங்களா நீங்க..?? யார் என்ன சொன்னாலும் சரி என்னால அண்ணியை விடமுடியாது’ என்றவன் யாரும் எதிர்பாரா வண்ணம் பார்கவியின் முன் சென்று,
‘அத்தை எதுக்கு அழறீங்க பேசாம அண்ணியை அண்ணாக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துடுங்க நீங்க பயப்படாம இருக்கலாம்..’ என்று போட்டு உடைத்திருந்தான்.
பிரணவ் என்று அனைவரும் அவனை அதிர்வோடு பார்க்க.. பார்கவியும் அண்ணி என்ற விளிப்பில் புரியாமல் தான் அவனை பார்த்தார்.
‘ஆமாத்தை எங்க அண்ணாக்கு அண்ணியைவிட பொருத்தமான பொண்ணு இருப்பாங்களா இல்ல எங்கண்ணனை விட சூப்பரான மாப்பிள்ளையை நீங்களும் பார்த்திடுவீங்களா..?? என்று கேட்க,
‘ப்ரணவ் இதென்ன அதிகப்ரசங்கிதனம் எந்த நேரத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம உளறாத அமைதியா இரு..’ என்று பசுபதி அதட்டல் போட்டார்..,
அவனோ அதையெல்லாம் காதில் வாங்காமல் ‘நிச்சயம் எங்க அண்ணா நீங்க நினைக்கிறதைவிட அண்ணியை நல்லா பார்த்துப்பார்.. அவரை பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னா நீங்க விஜயசாரதி அண்ணாவைகூட விசாரிச்சுக்கோங்க… டேய் ஜித்து என்ன பார்த்துட்டு இருக்க சொல்லுடா..’ என்று தமையனையும் துணைக்கு அழைக்க..,
‘நான் இப்படி நடக்கும்னு எதிர்பாராத அதிர்ச்சியிலதான் அழுதேன்.. மத்தபடி நீங்க பயப்படறளவு அங்க எதுவும் நடக்கலைம்மா அதுக்குள்ள அவர் வந்து காப்பாத்திட்டார்.. ‘
‘ஒருவேளை தம்பு அங்க வரலன்னா என் பெண்ணை நான் முழுசா பார்த்திருப்பேனா..?? உன்னோட ட்ரெஸ்சை பார்த்தேன் பிங்கி..’ என்றதும் இழை சட்டென தாயை பார்த்தவள்,
‘இப்பவும் நான் உங்க பெண்ணாதான் இருக்கேன் முதல்ல அழுகையை நிறுத்துங்கம்மா..’ என்று எழுந்தமர்ந்து தாயின் கண்ணீரை துடைத்தவள் வசீகரன் வரும் முன்பு அங்கு நடந்ததை தாய்க்கு விவரிக்க பார்கவியின் கரங்கள் மகளை தன்னோடு சேர்த்தணைத்து கொண்டது.
‘ம்மா..’
‘நிஜமாவே இப்பவும் எனக்கு ஈரகுலை நடுங்குதுடா பிங்கி…’ என்றவரின் கண்ணீர் உருண்டு இழையின் மீது விழுந்தது.
தானுமே தாயை கட்டிக்கொண்டவள், ‘ம்மா ப்ளீஸ் அழாதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… ஒருவேளை அவர் வரலைன்னா என்னால அங்கிருந்து தப்பிக்கமுடியாம போயிருந்தா நான் அவனை கொன்னிருப்பேனே தவிர நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் செய்திருக்கமாட்டேன்… தப்பு பண்ண இருந்தவன் அவன்!! அப்படி இருக்கப்போ நான் ஏன் என் வாழ்க்கையை அழிச்சிக்கணும்?? எனக்கு என் அம்மா அப்பா முக்கியம்!! எனக்காக நீங்க கனவு கண்டிருக்க வாழ்க்கை முக்கியம் அப்படியிருக்கப்போ நிச்சயம் போராடியிருப்பேன்..’ என்றவள் தன் பேச்சை நிறுத்தி,
‘இங்க பாருங்கம்மா ஒரு பெண் தன்னோட மானத்தை காப்பத்திகிற போராட்டத்துல கொலையே செய்தாலும் அது குற்றமில்லைன்னு சட்டமே சொல்லுது.. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் கோழை இல்லம்மா… ப்ளீஸ் நீங்க அழுது என்னையும் அழ வைக்காதீங்க..’ என்றவளுக்கு அப்போதே தன் மறுப்பை இன்னும் திடமாக உரைத்திருக்க வேண்டுமோ அல்லது குறைந்தபட்சம் வசீயை திருமணம் செய்ய விரும்புவதை சொல்லி இருக்க வேண்டுமோ என்ற எண்ணமே மேலோங்கியது.
மகளின் குரலில் இருந்த திடத்தை கண்ட பார்கவி, ‘ காந்தி ராத்திரியில நகையோட ஒரு பெண் தனியா போறதுதான் உண்மையான சுதந்திரம்னு சொன்னார் ஆனா இப்போலாம் பட்டபகல்லகூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாம போயிடுச்சு..’ என்று பெருமூச்சு விட்டவர்,
‘சரிடா இனி அம்மா அழமாட்டேன் ஆனா கொஞ்சநாள் நீ கிளினிக் போகவேண்டாம்..’
‘என்னம்மா இது..?? அவர்தான் இனி எந்த பிரச்சனையும் வராதுன்னு சொன்னாரே இன்னும் என்ன பயம்..’
‘ம்மா… என்று முறைத்தவள், சரி உங்களுக்காக ஒரு நாலு நாள் வீட்லயே இருக்கேன் அடுத்தவாரம் கிளினிக் கிளம்புறேன் ஓகேவா’ என்றதும் சற்று முகம் தெளிந்தார் பார்கவி.
‘சரிம்மா நீ போய் தூங்கு..’ என்று மகளை அனுப்பி வைத்தவர் கணவருக்காக காத்திருக்க தொடங்கினார்.
வீட்டினுள் நுழைந்த கைலாசம் உணவு மேஜையில் அமர்ந்தவாறே , ‘என்ன முடிவு பண்ணியிருக்க கவி..’ என்றார்.
‘எதை கேட்கறீங்க..??’
‘அந்த சின்னதம்பி போகும்போது ஒரு விஷயம் சொன்னாரே அதைபத்தி என்ன முடிவு பண்ணியிருக்க..?’
இத்தனை நேரம் மகள் குறித்த பயத்தில் இருந்த பார்கவிக்கு பிரணவ் கூறியது முற்றிலுமாக மறந்திருந்தது. ‘நான் அதைபத்தி யோசிக்கவே இல்லையேங்க…’
‘ஆனா நான் அதைதான் யோசிச்சிட்டு இருந்தேன்..’
‘ஆனா என்னால எதையும் சரியா யோசிக்கவே முடியலைங்க மனசு பதறுது..’ என்று சூடு கண்ட பூனையாக அவர் பேச..
‘இதுல யோசிக்க என்னம்மா இருக்கு.. மாப்பிள்ளையோட குடும்பத்தை உனக்கு பலவருஷமா தெரியும்..’ என்றதும்
‘மாப்பிள்ளைன்னே முடிவு பண்ணிட்டீங்களா..??’
‘ஆமா!! அந்த மூணு பிள்ளைகளோட கண்ணுலயும் கள்ளமில்ல.. அதோட வீட்டுக்குள்ள நுழையறப்போ பிங்கிக்கு பக்கபலமா இரண்டு பக்கமும் அரணா தன்வீட்டு பெண்ணா பாதுகாத்து அவங்க கூட்டிட்டு வந்ததை பார்த்த எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை… நிச்சயம் அந்த குடுமபத்துல நம்ம பொண்ணு பாதுகாப்பா இருப்பான்னு தோணுது.. பிள்ளைகளை அத்தனை அருமையா வளர்த்திருக்காங்க அதோட மிஸ்டர் திருவேங்கடமும் பசுபதியும் எதார்த்த மனுஷங்க இவ்ளோதூரம் தன் மனைவியோட ஃபிரெண்ட் பெண்ணுக்காக குடும்பமே ஓடி வரதுங்கிறது சாதாரண விஷயமில்ல…’
‘உனக்கு இன்னொரு விஷயம் சொல்லட்டா..??’
‘என்னங்க..??’
‘இன்னைக்கு இல்ல எப்போ அந்த தம்பியை மண்டபத்துல பார்த்தேனோ அப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சது… அதுவும் நீ சொல்லுவியே மிஸ்டர் அகனெழிலன் மாதிரி இருக்கணும்னு அன்னைக்கு அவர் உன்கிட்ட உரிமையோடு பேசினப்போ சாப்பிட வச்சப்போ எனக்கு மனசுக்கு அவ்ளோ நிறைவா இருந்தது தெரியுமா..??’ என்றதும் பார்கவியின் முகத்தில் புன்னகைகீற்று..
‘தம்பு எப்பவுமே அப்படிதாங்க!! தங்கமான பிள்ளை..’
‘இன்னொரு விஷயமும் சொல்லணும் கவி..’
‘என்னதுங்க..’
‘அன்னைக்கு என் சித்தப்பா பேசினதுல நீ ரொம்ப எமோஷனலா இருந்த பிங்கி போலவே எனக்கும் அந்த சம்பந்தத்துல பெருசா விருப்பமில்ல ஆனா உனக்காகத்தான் ஒத்துக்கிட்டேன்…’ என்றதும் பதறிப்போனார் பார்கவி…
‘ஏங்க … என்னங்க சொல்றீங்க நீங்களாவது என்னை தடுத்திருக்கலாமே..??’
‘இல்லம்மா மனசளவுல காயபட்டிருக்க உன்னை மேலும் காயபடுத்த என்னால முடியல..’
‘ஆனா பிங்கி வேண்டாம்னு சொன்னாளேங்க அதை நான்தான் மதிக்காம போயிட்டேன் நீங்களாவது எனக்கு சொல்லி புரிய வச்சிருக்கலாமே..’
‘நம்ம பொண்ணு மனசுல யாரும்மில்ல ஒருவேளை நீ என் சித்தப்பாகாக சொல்றதால அவசரபட்டு கேட்டதுக்கு மறுக்கிறா பின்னாடி சரியாகிடும்னு நினைச்சேன்… ‘
‘என்னமோ போங்க.. ஏதோ கஷ்டகாலம் நாம அனுபவிக்கனும்னு ஆண்டவன் எழுதி வச்சுட்டான் போல..’ என்று கலங்கிய விழிகளுடன் கணவரின் தோள்சாய்ந்தார்.
‘விடும்மா நல்லவங்களுக்கு கடவுள் கஷ்டம் கொடுத்தாலும் கைவிட மாட்டார்னு சொல்லுவாங்க அதான் மாப்பிள்ளையை அனுப்பி நம்ம பெண்ணை மீட்டு கொடுத்துட்டாரே…’
‘ஆமாங்க நல்லவேளை தம்பு நிச்சயத்துக்குள்ள இதை எல்லாம் கண்டுபிடிச்..’ என்றவரை இடையிட்ட கைலாசம்
‘மாப்பிள்ளையும் அவர் குடும்பமும் மனசுக்கு பிடித்தமா இருந்தாலும் நான் இந்த சம்பந்தத்துக்கு ஒத்துக்க முக்கிய காரணம் நீ கவி..’
‘நானா..??’
‘ஆமா உன் ஃபிரெண்ட் குடும்பத்தை பார்த்ததுல இருந்து நான் புது பார்கவியை பார்க்கிறேன் அது நிரந்தமா வேணும்… அதனால் இப்போ நீ சம்மதிச்சா போதும் நான் சம்பந்திக்கு கால் பண்ணி நாளைக்கு வர சொல்லிடுவேன்’
‘நான் ஒரு மடச்சிங்க… கையில வெண்ணை இருக்க எங்கெங்கோ நெய்யை தேடியிருக்கேன் ஆனா இப்போ என்னோட சம்மதத்தைவிட நீங்க பிங்கிக்கு இதுல விருப்பமான்னு முதல்ல கேளுங்க’ என்றார்.
கைலாசத்திற்கும் அதுவே சரியாகபட மகள் அறைக்கு சென்றவர் ஏதோ வேலையாக இருந்தவளிடம் விஷயத்தை தெரிவித்து,
‘உடனே இப்படி உன்னை கட்டாயபடுத்துறதா நினைக்கவேண்டாம் பிங்கி… இன்னைக்கு நடந்ததை கெட்ட கனவா நினைச்சு எவ்ளோ சீக்கிரம் மறக்கறமோ அது நமக்கு நல்லது..’ என்றவர்.,
தந்தை தன் பதிலுக்கு காத்திருப்பதை கண்டு மெல்ல தரையிறங்கியவள், ‘நான் எப்பவும் சொல்றது தான்பா உங்களுக்கும் அம்மாக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதமே..’ என்று அவள் வழக்கமான பல்லவியை பாட..,
‘மாப்பிள்ளையோட ஃபிரெண்ட் விஜய் மாப்பிள்ளை அவரோட குடும்பத்து கிட்டயும் விசாரிச்சுட்டு தான் பேசுறேன் பிங்கி எங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம்!! உன்னோட பதில் தெரிஞ்சா அடுத்து செய்ய வேண்டியதை பார்ப்பேன்…’
‘அப்பா எதுக்கு என்னை கேட்கறீங்க இப்பவும் சொல்றேன் எனக்கு எது நல்லதுன்னு உங்களைவிட எனக்கு தெரிஞ்சுடுமா என்ன..??’
‘ம்மா அன்னைக்கு அந்த சம்பந்தத்தை நீங்க முழுமனசா ஏற்பாடு பண்ணீங்களா..??’
‘இல்லை..’
‘அப்புறமென்னம்மா இப்போ உங்களோட சந்தோஷம்தான் என்னோடதும்..’ என்று மறைமுகமாக தன் சம்மதத்தை தெரிவிக்க நிறைவாக கிளம்பினர் பெற்றோர்.
இங்கு திருவும் பசுபதியும் ப்ரணவை வறுத்தெடுத்து கொண்டிருந்தனர்…
‘ப்பா போதும் அவனை எதுக்கு பேசுறீங்க..?? கால் முடிச்சுட்டு வந்து நானே அத்தைகிட்ட பேசுறதாதான் இருந்தேன்..’ என்றவாறு அங்கே வந்தான் வசீகரன்.
‘என்ன பேச இருந்த..??’
‘உங்க பெண்ணை எனக்கு கட்டிகொடுங்கன்னு தான்’ என்றான் அசராமல்..
‘என்ன தம்பு அவன்தான் சின்ன பையன் யோசிக்காம பேசிட்டான் நீயுமா..??’
‘ம்மா அத்தை எப்படி குற்றஉணர்ச்சியில தவிச்சாங்கன்னு பார்த்தீங்கதானே அதோட இழைக்கும் பெருசா இஷ்டமில்ல.. அப்படியே விட்டிருந்தா எத்தனை நாளானாலும் அதையே யோசிச்சு தன்னை வருத்திப்பாங்களே தவிர மீள மாட்டாங்க…’
‘இப்போ அப்பு அவங்களை டைவேர்ட் பண்ணினது நல்லதுதான்’ என்று வசீகரன் பேசிக்கொண்டிருக்கும் போதே கைலாசத்திடமிருந்து திருவேங்கடத்திற்கு அழைப்பு வந்தது.
‘ஹலோ சொல்லுங்க கைலாசம் கவி பிங்கி எல்லாம் சமாதானமாகிட்டாங்களா..??’ என்றதற்கு மறுபுறமிருந்தவர் கூறிய பதிலில் திகைத்து போனார் திருவேங்கடம்.
பின்னே முதல் வேலையாக வசீகரனின் ஜாதகத்தை அனுப்ப சொன்னவர் நாளை பெண்பார்க்க அழைத்தால் மனிதர் திகைக்காமல் வேறென்ன செய்ய..??