அபியும் நாயகியும் இழை குறித்து பேசிக்கொண்டிருக்க அவளோ அர்ஜுனை அழைப்பதற்காக அவசரவசரமாக மேடைக்கு அருகே இருந்த படிகளில் இறங்கி கொண்டிருந்தாள்.
அக்கா அந்த பொண்ணு கீழ போயிடுச்சே இப்போ என்ன செய்ய..?? என்று அபி கையை பிசைந்து கொண்டு நிற்க..,
எதுக்கு டென்ஷனாகற அபி அந்த பொண்ணு எப்படியும் பெண் வீட்டுக்காரங்களுக்கு நெருங்கின சொந்தமாதான் இருக்கணும் அதனால ஏதோ அவசரவேலையா போயிருக்கும் திரும்ப வந்த பிறகு விசாரிக்கலாம் என்று தங்கையை அமரசெய்தார்.
ஆனால் அவரே எதிர்பாராவிதமாக அடுத்த சிலநிமிடங்களில் இழை அவர்களுக்கு குளிர்பானம் கொண்டு வந்து கொடுக்க அவளை தன்னருகே அமர செய்தவர், ‘இந்த புடவையில ரொம்ப அழகா இருக்கம்மா..’ என்று பேச்சை தொடங்கினார்.
‘தேங்க்ஸ் ஆன்ட்டி…’
‘கல்யாண பொண்ணு உங்களுக்கு நெருங்கின சொந்தமா..??’
‘ஆமா ஆன்ட்டி என்னோட சித்தி பொண்ணு..’
‘உன் பேர் என்னம்மா..??
‘இழையாள்’
‘ரொம்ப அழகான பேர்.., ஆமா நீ இதே ஊராம்மா..?’
‘ஆமா ஆன்ட்டி.. ஏன் கேட்கறீங்க..??’
‘இல்லம்மா உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு.. ரொம்ப பரிட்சயமான முகமா இருந்தியா அதான் எங்க பார்த்திருக்க வாய்ப்பிருக்குன்னு கேட்டேன்’
‘எனக்குமே அப்படிதான் ஆன்ட்டி இருக்கு..’ என்று புன்னகைத்தவளின் மனதிலும் நாயகி குறித்த அலசல்…
‘அப்பாம்மா என்ன பண்றாங்க? நீ படிக்கிறியா இல்ல வேலை பார்க்கிறியாம்மா..??’
‘அப்பா சூப்பர்மார்கெட் வச்சிருக்கார் அம்மா ஹவுஸ்வைப் நான் டென்டிஸ்ட் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்’ என்றவளுக்கு அழைப்பு வரவும்..,
எக்ஸ்கியூஸ் மீ ஆன்ட்டி என்று அழைப்பை ஏற்றவள்.. ‘ஸாரி ஆன்ட்டி ஒரு எமெர்ஜென்சி நான் உடனே கிளம்பனும் அப்புறம் வரேன்’ என்று விடைபெற்று கிளம்பவும்..,
‘என்னக்கா இது எங்கயோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொல்ற..??’
ஆமா அபி இழையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனா எங்க எப்படின்னு சட்டுன்னு நியாபகம் வரலை சரி அப்புறம் வருவால்ல அப்போ கேட்டுக்கலாம்’
‘தம்பு வந்தாச்சா அபி..??’ என்ற பசுபதியும் திருவும் அவர்கள் அருகே அமரவும் ,
இன்னும் இல்லைங்க கொஞ்சமுன்னதான் பேசினேன் ஃப்ளைட் டிலே ஆனதால எப்படியும் இன்னும் ஒரு அரைமணி நேரமாகுமாம்.
மண்டபத்தின் பின்புறத்தில் அமைந்திருந்த தங்கும் விடுதியில் இருந்த ஆஷ்மியின் தோழிகள் அழைத்ததன் பேரில் அங்கே சென்ற இழை அவர்களின் தேவைகளை நிறைவேற்றி மீண்டும் மண்டபத்திற்கு திரும்பி கொண்டிருந்தாள். நேற்றிருந்த அளவு இல்லையெனினும் இன்றும் வானம் மேகமூட்டமாக இருந்ததில் எந்நேரமும் மழைக்கான வாய்ப்பு இருக்கும் நிலையில் ஏற்கனவே லேசாக வீசிக்கொண்டிருந்த காற்று இப்போது சற்று பலமாக வீச அங்கிருந்த அலங்கார விளக்குகள் எல்லாம் ஆட்டம் காண தொடங்கியிருந்தது.
பலத்த காற்றோடு இப்போது தூறலும் சேர்ந்து கொள்ள உடனே தந்தைக்கு அழைத்தவள் அலங்கார விளக்குகளின் நிலவரத்தை விளக்கி ஏதேனும் விபத்து ஏற்படும் முன்னர் அதை தடுக்குமாறு கூறி கைபேசியை அணைத்தவளின் விழிவட்டத்தில் விழுந்தான் வசீகரன்.
அதுவும் அலங்கார விளக்கின் நேர் எதிரே நின்றுகொண்டு எதிரில் இருந்த காரில் இருந்து பொருட்களை எடுத்தவாறே பேசி சென்றவன் சுற்றுபுறத்தை கவனிக்க தவறியிருந்தான்.
அவன் பின்னே இருந்த பிரம்மாண்டமான அலங்காரவிளக்கு அவன் மீது விழவிருப்பதை கண்டவள் ‘ஸார்.. ஸார்..’ என்றழைக்க எதுவும் அவன் காதில் விழவில்லை… மீண்டும் சிலமுறை அழைத்தவள் வேறு வழியின்றி வேகமாக அவனை நெருங்கி பின்புறமிருந்தே அவன் சட்டையை பிடித்திழுத்தாள். எதிர்பாரா நிகழ்வில் வசீகரனின் கைபேசி கீழே விழ கோபத்தோடு திரும்பியவன் இழையை எதிர்பாராது தடுமாறி அவள் மீதே விழுந்திருந்தான்.
ஆனால் நொடியில் சுதாரித்து அவளை தாங்கிக்கொண்டு கீழே சரிந்தவனின் மேலே இருந்தவளின் தாடையில் இருந்த வெட்டுக்காய தழும்பில் அவன் பார்வை ஆழமாக பதிந்தது.
யாரோ என்று இழை நினைத்திருக்க அங்கே வசீயை எதிர்பாராதவள் உடல்மொழியில் சட்டென பதட்டம் தொற்றிக்கொள்ள, ‘ஸாரி ஸாரி ஸார் உங்க மேல லைட் விழ இருந்தது அதான் உங்களை கூப்பிட்டேன் ஆனா நீங்க ரெஸ்பான்ட் பண்ணலைன்னதும் வேற வழி இல்லாமல்.. ப்ளீஸ் தெரியமாதான்…’ என்று அவள் பேசிக்கொண்டே சென்ற எதுவும் அவன் காதில் விழவில்லை.
இருவரும் இருக்கும் சூழல் உணர்ந்தவள் சட்டென எழுந்து கொண்டு “ஸார் காத்து பலமா அடிக்குது மழை வரும்போல இருக்கு வெளில நிற்காதீங்க” என்றவாறே அவனை நீங்கி செல்ல இங்கே வசீகரனோ தன்வசமிழந்திருந்தான்.
எத்தனை வருட காத்திருப்பு!
வருடங்கள் பலகடந்து அவன் காத்திருப்பின் பலனாக இதோ அவன் முன்னே நிஜமாகி இருப்பவளை நம்பமுடியாமல் பார்த்திருந்தவன் அவள் நீங்கி செல்வதை கண்டு இனிய கனவில் இருந்து விழித்தவனாக வசீகரன் உடனே ‘ஹே பப்ளி…’ என்றழைத்தவன் சட்டென தன் கைபேசியை எடுத்து அவளை புகைப்படம் எடுத்திருந்தான்.
இன்னுமே நம்பமுடியாமல் அவள் சென்ற வழியையே பார்த்திருந்தவனுக்கு அவள் காயம் மனதிலாட எங்கே அவளுக்கு தன்னை நினைவில்லையா..?? என்ற கேள்வி எழுந்து மனதை ஆட்கொள்ள சிலநொடிகள் அசைவற்று நின்றுவிட்டான். ஆனால் இழையோ எங்கே அங்கிருந்தால் ஏதேனும் பேசிவிடுவானோ என்று விறுவிறுவென மண்டபத்தினுள் ஓடி மறைந்தாள்.
**************************************
அடுத்த சில நிமிடங்களில் மண்டபத்தினுள் நுழைந்திருந்த வசீகரன் ‘எனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு..’ என்றதில் குடும்பமே அவனை அதிசயித்து பார்த்து நின்றது…
‘என்ன சொல்ற கரண்?’ என்று அதிர்வில் இருந்து முதலில் மீண்ட பசுபதி கேட்கவும்…
‘தெளிவா தானே சொன்னேன் உங்களுக்கு காதுல ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே’ என்றான் அவர் பின்னே இருந்த கூட்டத்தில் விழிகளை ஓடவிட்டு…
‘நிஜமாவே உனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கா ?’
‘ஆமா’
‘யார் தம்பு அது ? பொண்ணு பேர் என்ன?’
‘பப்…’ என்று ஆரம்பித்தவன் குரலை செருமி ‘தெரியாது’ என்றான்.
எந்த ஊர்..??
தெரியாது
என்ன படிச்சிருக்கா..?
தெரியாது
‘எங்க இருக்கா..?? அம்மா அப்பா என்ன பண்றாங்க..?’
தெரியாது
வேலைக்கு போறாளா இல்லையா ..?
தெரியாது
கேட்கும் கேள்விக்கெல்லாம் தெரியாது என்று பதிலளிப்பவனை என்னடா இது? என்பதாக குடும்பம் மொத்தமும் ஒருவரை ஒருவர் அடுத்து என்ன கேட்பது என்று புரியாமல் பார்த்துக்கொள்ள..
‘இவ்ளோ நாள் நாயா பேயா அலைஞ்சு பொண்ணு தேடினோமே முன்னாடியே சொல்றதுக்கு என்ன? சரி சொல்லு எவ்ளோ வருஷமா?’ என்று திரு பல்லைகடிக்க
‘வருஷமெல்லாம் இல்லை ‘
‘அப்போ எத்தனை மாசம் ..??’
‘மாசமா..??’
‘அப்போ எவ்ளோ நாள்ண்ணா?’ என்றான் ஜித்து.
‘ப்ச்’ என்று வாட்சை பார்த்தவன் ‘ஜஸ்ட் செவென் மினிட்ஸ் முன்னாடி தான் பார்த்தேன் பிடிச்சிருக்கு கட்டி வைங்க’ என்று நாற்காலியில் அமர்ந்தவன் ‘அப்பு பாதாம் டிரிங் எடுத்துட்டு வா’ என்றான்.
‘என்னது ஏழு நிமிஷமா..??’ என்ற அபிராமிக்கு தலை கிறுகிறுத்து கொண்டு வந்தது..
‘என்னடா சொல்ற ஏழு நிமிஷத்துக்கு முன்னாடி பார்த்த பெண்ணை கட்டி வைக்கணுமா ..??’
‘ஆமா! இல்லனா கல்யாணமே வேண்டாம்’ என்று அசால்ட்டாக சொன்னவன் பாதாம் பாலை குடிக்க தொடங்க பெற்றவர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது.
‘அண்ணா நீங்க லவ் பண்றீங்களா?’ என்றான் ப்ரணவ் குதூகல குரலில்…
‘லவ்வா?’ என்று கீழ்கண்களால் தம்பியை பார்த்து ‘இல்லை’ என்பதாக தலையசைத்தவன், ‘உனக்கு எப்படி தோணுதோ அப்படி வச்சுக்கோ..’ என்றிட
‘அப்புறம் எப்படிண்ணா..??’
‘ப்ச் நீங்க தானே பொண்ணு பிடிச்சிருந்தா கூட்டிட்டு வரசொன்னீங்க… ஆனா இந்த கூட்டத்துல அவளை தேடி கூட்டிட்டு வர எனக்கு நேரமில்ல’
‘ஆமா அந்த பொண்ணுகிட்ட பேசினியா..??’
‘இல்லை’
‘ஒருநிமிஷம் அப்போ நீ கேட்ட..’ என்று திரு தன் வாக்கியத்தை நிறைவு செய்யும் முன்னமே..
‘இருக்கு’ என்று அழுத்தமான குரலில் சொன்னவன் கைபேசியை திறந்து பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து …
‘இவதான் உங்க மருமகள் சீக்கிரம் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க தாலி கட்டுறேன்’ என்ற மகனை என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்திருந்தனர்.
வசீயின் கைபேசியை வாங்கிய திரு, ‘என்னடா இது பொண்ணோட முகமே தெரியலை.. நாங்க எப்படி கண்டுபிடிக்க?’ என்று கேட்டவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது.
பின்னே அவனிடமிருந்து விலகி ஓடிய இழையை ‘ஹே பப்ளிமாஸ் நில்லு..’ என்று அழைக்கவும் அவள் முன்னிலும் வேகமாக ஓட அவசரமாக கைபேசியில் புகைப்படம் எடுத்திட அவள் பின்புறம் தான் கைபேசியில் பதிந்திருந்தது.
அவனுக்கு தான் அவளுருவம் மனபெட்டகத்தில் பத்திரமாக சேமிக்கபட்டுள்ளதே புகைப்படம் மற்றவர்களுக்கு காட்டுவதற்காக மட்டுமே !
இப்போ என்ன தெரியனும் உங்களுக்கு அங்க பாருங்க கிரீன் அண்ட் கோல்ட் கலர் ஸாரி தலை நிறைய மல்லிகை பூ இது போதாதா கண்டுபிடிக்க.. என்ற மகனை என்ன சொல்வது என்று புரியாமல் குடும்பமே பார்க்க..,
சரி சரி உங்களுக்காக இன்னொரு ஐடெண்டிபிகேஷன் மார்க் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க..
என்னது..??
அந்த பெண்ணோட சின்ல (chin)ஒரு ரெண்டு இன்ச்க்கு ஆழமான வெட்டுகாயம் ஏற்பட்டு அதுக்கு தையல் போட்ட வடு இருக்கும் அதுக்கு பக்கத்துலையே சின்ன மச்சம் இதை வச்சு கண்டுபிடிங்க…
என்னது ரெண்டு இன்ச் ஆழமான வெட்டுகாயமா… தம்பு ஏழு நிமிஷத்துல இதெல்லாம் கண்டுபிடிச்சியா.. அது எப்படி இத்தனை இன்ச்னு கரெக்டா சொல்ற..??
அவளுக்கு காயம் ஏற்படுத்தியதே அவன்தான் எனும்போது அவனும் என்ன பதில் சொல்ல..?? சிலநொடி அமைதியாய் அவர்களை வெறித்தவன் குரலை செருமி.., ‘என்ன அபிம்மா கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க இப்போ நான் கல்யாணம் செய்துக்கவா வேண்டாமா..??’ என்று போர்க்கொடி ஏந்த…
சரி சரி தம்பு நாங்க பார்க்கிறோம்… ஆமா மச்சம் சொன்னியே அது எந்த பக்கம்..?
அவளோட தாடையில இருக்க காயத்துக்கு ரைட் சைட்ல சின்னதா வட்டமா அழகா இருக்கும்..
அது சரி என்ற குடும்பமே ஆளுக்கு ஒருபுறமாக தீவிர வேட்டையில் இறங்கி இருந்தது.. அனைவரும் செல்லவும் நாற்காலியில் அமர்ந்து கைகளை தலைக்கு பின் கோர்த்துகொண்டவன் அகத்தில் மீண்டும் அவள் தழும்பு ஊர்வலம் வர வசீகரனும் சுகமாய் அன்றைய நினைவில் மூழ்கினான்.
‘ஹே பப்ளிமாஸ் எந்த கடையில அரிசி வாங்கற நீ..?? சுத்தமா என்னால உன்னை வச்சு மிதிக்க முடியலை’ என்று காட்டமாக கேட்க..,
‘என் பேர் பிங்கி எதுக்கு இப்படி சொல்றீங்க..?? நான் அப்புறம் அம்மாகிட்ட சொல்லுவேன்’ என்று அவனை மிரட்ட.,
‘அடிங்க நீ எந்த ஊர் மங்கியா வேணும்னா இருந்துட்டு போ இப்போ நீ ஹிந்தி கிளாஸ் போகலைன்னு யார் அழுதா..? எவ்ளோ வேலை இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு உனக்கு டிரைவர் வேலை பார்க்கனும்ன்னு என் தலையெழுத்து’ என்று கடுகடுத்தவனுக்கு அவனுக்காக காத்திருக்கும் ஸ்வேதாவை சந்திக்கவிருக்கும் நொடிகள் இழையால் தள்ளி செல்கிறதே என்ற ஆதங்கம்..
‘உங்களுக்கு முடியாதுன்னா அம்மாகிட்ட சொல்ல வேண்டியதுதானே எதுக்கு என்னை டீஸ் பண்றீங்க’ என்றவளுக்கு பார்கவியின் கவனிப்பில் சிறுவயது முதலே பூசினார் போன்ற உடல்வாகு.. அவள் வகுப்பிலும் சிலர் அவளை குண்டூஸ், மோட்டி என்று பல்வேறு பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பதுண்டு ஆனால் ஏனோ வசீ கேட்டதை தாள முடியாதவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
‘ஏய் இப்போ என்ன சொல்லிட்டேன்னு அழற ? அழுமூஞ்சி முதல்ல கண்ணை துடை இல்ல இங்கயே இறக்கி விட்டுட்டு போயிடுவேன் பார்த்துக்கோ’ என்றதில் அவள் அழுகை இன்னுமே அதிகரித்தது.
‘ப்ச் சொன்னா கேட்கமாட்டியா..?? வாயை மூடு’ என்று வேகத்தை அதிகரித்தவனுக்கு சீக்கிரம் இவளை ஹிந்தி வகுப்பில் சேர்த்துவிட்டு ஸ்வேதாவை சந்திக்கும் ஆர்வம்..
‘ஒழுங்கா என்னை பிடிச்சிட்டு உட்கார் இல்ல விழுந்துடுவ’ என்ற அவன் வார்த்தைகளை காதில் வாங்காமல் தன் போக்கில் இழை அமர்ந்திருக்க வேகமாக சென்று கொண்டிருந்தவனின் மிதிவண்டி அவன் கட்டுபாட்டை இழந்ததில் அவன் பின்னே அமர்ந்திருந்த இழை கீழே விழுந்திருந்தாள்.
விழுந்த வேகத்தில் கூர்மையான கல் அவள் தாடையை பதம் பார்க்க மறுநொடி ரத்தம் வேகமாக வெளியேறியது…
‘சொன்னா கேட்டியா..?? இப்போ பார்’ என்றவாறே தன் கர்சீப்பை எடுத்து தண்ணீரில் நனைத்து ரத்தம் வெளியேறாத வகையில் அழுத்திபிடித்தவன் இப்படியே பிடி இங்க பக்கத்துல ஹாஸ்பிட்டல் போயிடலாம் என்றவன் அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்து பார்கவிக்கும் திருவிற்கும் தகவல் அளித்திருந்தான்.
**********************************************
அபியும் நாயகியும் பெண்கள் கூட்டத்தில் இழையை தேடிகொண்டிருக்க அவர் பின்னே இருந்து.., ‘நீங்க… நீ நீ அம்மூ தானே..??’ என்ற குரல் கேட்கவும் திரும்பியவர்..,
ஆமா! நீங்க..? என்றதுமே பாய்ந்து அவரை இறுக அணைத்துக்கொண்ட பார்கவி “அம்மூ நான் தான் கவி பார்கவிடி! எப்.. எப்படிடி இருக்க ? ” என்று பலவருடங்கள் கழித்து தோழியை சந்தித்த மகிழ்வில் வார்த்தைகளின்றி தவித்தவர்..,
“ஏய் உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு… ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் உன்னை தேடுவேன்.. ஏன்டி வேற ஊருக்கு போனவ எனக்கு எந்த தகவலும் சொல்லலை” என்று உரிமையாக கோபித்தவர் அருகே இருந்த அபியிடம் நீயாவது தகவல் சொல்லமாட்டியாடி என்று அவரையும் அதட்ட..,
ஒருநொடி திகைப்பில் என்ன பேசுவது என்று புரியாமல் நின்றுவிட்ட அகிலாண்டநாயகி, ‘ஹே கவி நீயாடி இது ? என்று தோழியை தலை முதல் கால்வரை வருடி ‘என்னடி இது ஆளே டோட்டலா மாறிட்ட என்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியலை’
‘ஏன் அம்மூ எப்படி மாறிட்டேன் ..?? என்னால உன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சது உன்னால முடியலையா..?? அந்தளவுக்கு தான் நான் உன் மனசுல இருக்கேனா..?? அவ்ளோ சீக்கிரம் என்னை மறந்துட்டல நீ..’
‘ஹே அப்படி இல்லடி … உன்னை நினைக்காத நாள் இல்லை தெரியுமா… ஆனா முன்னத்துக்கு இப்போ நீ ரொம்ப மெலிஞ்சுட்ட கவி அதான் மேடையில நின்னுட்டு இருந்த உன்னை பார்த்த பிறகும் என்னால டக்குன்னு கண்டுபிடிக்க முடியலை…’
கவிக்கா எப்படி இருக்கீங்க..?? ஆனா உங்களை பார்த்தா சண்டை போடணும்னு அக்கா காத்துட்டு இருந்தாங்க தெரியுமா..?? என்று அபி எடுத்து கொடுக்க..,
‘சண்டையா..?? எதுக்கு அபி’
பின்ன என்னக்கா நீங்க குவைத்ல இருந்தப்போ கொடுத்த நம்பர் மாத்தினதை எங்களுக்கு ஏன் சொல்லாம் விட்டீங்க..??
சரி சரி எவ்ளோ நேரம் இங்கயே நின்னுட்டு இருப்பீங்க வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று கவி அழைக்க இழையை மறந்தவர்களாக இருவரும் தோழியோடு ஐக்கியமாகி இருந்தனர்.
‘சொல்லு அம்மூ என்ன கோபம் என்மேல..??’
‘அண்ணாவோட குவைத் போன நீ எப்போ இந்தியா வந்த.. நீ கொடுத்த நம்பர்ல கூப்ட்டா அதுல நீ இல்லன்னு சொல்லிட்டாங்க… ஏன் நம்பர் மாத்தினா எனக்கு சொல்லமாட்டியா..?? நானும் அபியும் எவ்ளோ நாள் ட்ரை பண்ணி கடைசில விட்டுட்டோம்.. அட்லீஸ்ட் இந்தியா வந்த பிறகாவது எனக்கு ஒரு தகவல் கொடுத்திருக்கலாமே ஏன்டி கொடுக்கலை ..’
அதை ஏன்டி கேட்கிற அது ஒரு பெரிய கதை… உனக்கு தான் என் மாமியார் பத்தி தெரியுமே..
‘தெரியும் அதனாலதானே அண்ணா உன்னை உங்கம்மா வீட்ல விட்டுட்டு போனார்… ‘
‘ஆமாடி ஆனா குவைத் கூட்டிட்டு போன சில மாசத்துலயே அவங்களுக்கு ஸ்ட்ரோக் வந்துடுச்சு யாருமே கண்டுக்கலை அதனால நாங்க உடனே திரும்ப வேண்டியதா போச்சு..’
ஆமா அம்மூ நாங்க தான் அவங்களோட கடைசி காலத்துல அவங்களை பார்த்துக்கிட்டோம் இதுக்கு இடையில பாகபிரிவினை, பூர்வீகசொத்து பிரச்சனை அது இதுன்னு ஒரு வருஷத்துக்கும் மேல மூச்சுவிட முடியாத அளவு பிரச்சனை நெருக்கி பிடிச்சிட்டு இருந்தது… குவைத்ல இருந்து கிளம்பி வர அவசரத்துல உன்னோட போன் நம்பரை மிஸ் பண்ணிட்டேன் சரி நேர்ல வந்து பார்த்துக்கலாம்ன்னு இருந்தா அதுக்குள்ள இவ்ளோ நடந்துடுச்சு எங்கயும் அசையமுடியலை.
ஒருவழியா எல்லாம் தீர்ந்த பிறகு நான் ஊருக்கு வந்து பார்த்தா அங்க நீங்க இல்லை… அக்கம்பக்கம் விசாரிச்சா யாருக்கும் சரியா விவரம் தெரியல… திரு அண்ணாவோட சொந்த ஊருக்கு போயிட்டதா சொன்ன யாருக்குமே பெருசா வேற எந்த தகவலும் தெரியலை..
‘நானும் ஒவ்வொரு வருஷம் ஊருக்கு வரும்போதும் உங்களை தேடுவேன் தெரியுமா..??’
‘ஆமா கவி நீ குவைத் கிளம்பின ஒரு வருஷத்துக்குள்ள அப்பா தவறிட்டார்.. உனக்கே தெரியும் நாங்க அங்க இருந்ததே அப்பாக்காக தான்… அவர் இல்லைன்னு ஆன பிறகு இனியும் அவரை அங்க இருக்க சொல்றது நியாமில்லை இல்லையா…?’
கண்டிப்பா அம்மூ திரு அண்ணா மாதிரி ஒரு மனுஷனை பார்க்க முடியாது… அவரோட வீட்டை விட்டு ஊரை விட்டு உனக்காக உங்க வீட்ல வந்து இருக்கிறது என்ன சாதாரண விஷயமா அதுவும் பசுபதி அண்ணாவும் உங்க அப்பா நிலைமையை புரிஞ்சிட்டு இவ்ளோ அனுசரணையா யார் இருப்பா..?? என்றார்.
நாயகியும் பார்கவியும் சிறுவயது முதலே இணைபிரியா தோழிகள் பக்கத்துக்கு வீட்டில் வசித்தவர்கள்… நாயகி அபிராமியின் தந்தை நாற்பதுகளின் ஆரம்பத்தில் தான் திருமணம் செய்தவர் ஆனால் அவர் மனைவி அபிராமியை பிரசவத்தின் போது தவறிவிட்ட போதும்… இருபெண்களையும் தம்மிரு கண்களாக வளர்த்து ஆளாக்கியவர்…
அவர்களுக்கு திருமணம் என்று வந்தபோது திருவும் பசுபதியும் மாமனார் வீட்டின் மேல்போர்ஷனில் தங்கிகொண்டனர்… ஆனால் திரு மாற்றலாகி கொண்டே இருந்ததில் பசுபதியும் அபிராமியும் தான் முழுபொறுப்பை ஏற்றிருந்தனர்.
‘ஆமா கவி அதான் அப்பா தவறின பிறகு நாங்க அவரோட சொந்த ஊருக்கு போயிட்டோம்.. தருமபுரிக்கு வரதே ரொம்ப ரேர்.. ஆனா ஒவ்வொருமுறையும் அங்க போறப்போலாம் உன்னை நினைக்காத நாளில்லை தெரியுமா..?? என்று அவர்களின் பேச்சு நீண்டுகொண்டே சென்றது.