இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே”
“அறிவிருக்கா உனக்கு இப்படி வெயில்ல எதுக்கு வந்த?”, தன்னைப் பார்த்து மகிழ்வான் என்று நினைத்தவளுக்கு அவனது கோபம் ஒருவித ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.
“உன்னைத் தான் கேட்குறேன்..”
“அது சாப்பாடு கொண்டு வந்தேன்”, என்றதும் அவனின் கோபம் சற்றே மட்டுப்பட்டது.
“அம்மா கொடுத்து விட்டாங்களா?”
“இல்ல இல்ல அத்தை எதுவும் சொல்லல நானே தான் எடுத்துட்டு போறேன்னு சொன்னேன்.”, என்றவளின் பயந்த குரல் அவனை சங்கடமாக்கியிருந்தது.
“சாரி.. உள்ளே வா..”, என்றவன் இருந்த டேபிள் ஃபேனை அவளுக்கு நேராக திருப்பி வைத்தான்.
“நான் தான் வெளியே சாப்பிட்டுக்குவேன்னு சொன்னேன்ல?”
“அது நான்..”
“சரி விடு பையை இங்கே வை.”, என்றவன் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்த வண்ணம் அவளிடம்,
“நீ சாப்டியா?”
“இல்ல நான் போயிட்டு சாப்பிட்டுக்குறேன். நீங்க சாப்பிடுங்க..”, என்றவள் தட்டை அவனிடம் நீட்ட சந்திரன் எழுந்து சென்று சிறிய தட்டு ஒன்றை எடுத்து வந்தான்.
“நீயும் சாப்பிடு நிறைய தான் இருக்கு”, என்றபடி அவள் கொடுத்த தட்டை வாங்கி உண்ண ஆரம்பித்தான்.
லேசான புன்னகையுடன் நந்தினி தனக்குமாய் உணவை போட்டுக் கொண்டு அவனோடு உணவருந்திய படி கடையை சுற்றி நோட்டமிட்டாள்.
நீளமான இடம் அதைத் தொடர்ந்து ஒரு ஓரத்தில் சிறு திரை இருக்க அதற்கு பின் கேக் செய்வதற்கான இடமாய் இருக்க வேண்டும்,என்று நினைத்துக் கொண்டாள்.
“அண்ணி!”, என்று சட்டென கேட்ட குரலில் திரும்பி பார்க்க 17-18 வயது பையன் ஒருவன் நின்றிருந்தான்.
“வா அறிவு..”
“..”
“நந்தினி இது அறிவு இங்கே எனக்கு உதவியா இருக்கான்.
இவன் இல்லாம கடையே ஓடாதுனால் பார்த்துக்கோ..”, என்றதில் அவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.
“அண்ணன் இப்படி நேரத்துக்கு சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை அண்ணி..”
“டேய்..”
“நீ சும்மா இருண்ணே.. அண்ணி வந்தன்னைக்கே என் ஓட்டை வாங்கிட்டாங்க..”
“நீங்க சாப்டீங்களா?”
“எனக்கு மரியாதை எல்லாம் வேணாம். சும்மா நீ வானு சொல்லுங்க. எப்பவும் நானும் அண்ணணும் தான் சாப்பிடுவோம் அண்ணி..”
“ஓ எனக்குத் தெரியாது. இன்னைக்கு மட்டும் வெளியே சாப்பிடு நாளையிலிருந்து உனக்கும் சேர்த்து கொண்டு வரேன்”, என்றவளைப் பார்த்தபடியே கடைசி வாய் உணவை உண்டு முடித்தவன் கை கழுவ எழுந்து கொண்டான்.
“இருக்கட்டும் அண்ணி.. அப்பறம் உங்க வீட்டு எம்டன் அதுக்கும் எதாவது சொல்ல போறாரு..”
“டேய் போய் சாப்பிட்டு வா..”, என்ற சந்திரனின் குரலில் அறிவு எழுந்துச் சென்றிருந்தான்.
“நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க நான் வேணா கடையைப் பார்த்துக்குறேன்.”
“அதெல்லாம் வேண்டாம் நந்தினி நீ கிளம்பு. வீட்டுக்கு போயிட்டு ஒரு மெசெஜ் பண்ணு.”
“சரிங்க வரேன்..”, என்றவள் சைக்கிளில் ஏறிக் கொள்ள அவளையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான் சந்திரன்.
நாட்கள் அதன் போக்கில் நகர ஒரு மாத காலம் சாதாரணமாய் கடந்திருந்தது.சந்திரனுக்குமே மனைவியின் பால் சற்று ஈர்ப்பு ஏற்பட்டிருக்க காதலர்கள் போன்று பட்டும் படாமல் ஒரு வித நெருக்கத்தோடு சென்று கொண்டிருந்தது.
வசந்தனுமே மருமகள் வந்த பின்பு அதிகமாய் தேவையற்ற பேச்சுக்கள் பேசுவதைக் குறைத்துக் கொண்டிருந்தார்.
ராணிக்கு அதுவே சற்று நிம்மதியாய் இருந்தது.
கணவன் மனைவியின் நெருக்கத்தை விட மாமியார் மருமகளுக்குள் அப்படியாய் ஒரு பிணைப்பு வந்திருந்தது.
ராணிக்கு செல்ல மகள் தான் அவரின் குகா.
மூத்த மருமகளை இன்று வரையிலுமே வாம்மா போம்மா என்று அழைப்பவருக்கு குகாவிடம் ஏன் டி குகா எனுமளவிற்கான உரிமை உண்டு.
மாலையனால் மாமியாரிடம் தலைவாரிக் கொள்வாள் மதியம் என்னவானாலும் சிறிது நேரம் அவரை ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கூறுவாள்.
அனைத்தும் சாதாரணமாய் சென்றது சுஜா குகாவை அவ்வப்போது சீண்டாமல் இருந்தவரை. கண்டும் காணதது போல் இருந்தாலும் ஒரு வகையில் அவர்களின் நெருக்கம் சுஜாவின் கண்ணை உறுத்தியது.
அன்று விடுமுறையில் வீட்டிலில் இருந்தவள் தனதறையிலிருந்தே நந்தினிக்கு குரல் கொடுத்தாள்.
“சொல்லுங்க கா..”
“ரொம்ப தலைவலியா இருக்கு குகா ஒரு காபி போட்டு தர முடியுமா?”
“சரிக்கா கொண்டு வரேன்.”
“அப்படியே ஜனனியை கொஞ்சம் பார்த்துக்கோயேன் நிம்மதியா தூங்க கூட விடமாட்டா..”, என்றதற்கும் தலையசைத்து விட்டு அவளுக்கான காபியை கொடுத்து குழந்தையோடு அமர்ந்து கொண்டாள்.
“சித்தி நீங்க இப்போ கடைக்கு போவீங்க தான?”
“ஆமா டா குட்டி..”
“சித்தப்பா கிட்ட சொல்லி எனக்கு பப்ஸ் வாங்கிட்டு வரீங்களா?எனக்கு ரொம்ப பிடிக்கும்.”
“ஜனனி குட்டிக்கு இல்லாததா நான் வாங்கிட்டு வரேன்.”, என்றவள் வரும் போது குழந்தைக்கான பப்ஸோடு வந்திருக்க ஆவலாய் அவளது பையை பார்த்த வண்ணம் நின்றிருந்த ஜனனியிடம் பப்ஸை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தாள்.
தற்செயலாய் வெளியில் வந்த சுஜா இதைப் பார்த்துவிட்டு வெடுக்கென தட்டைப் பிடுங்கிக் கொள்ள பிள்ளையோடு சேர்த்து நந்தினியுமே அரண்டு போனாள்.
“ஏய் கண்டதை சாப்பிட கூடாதுனு எத்தனை தடவை சொல்லிருக்கேன் உனக்கு?”
“அக்கா நம்ம கடையில் உள்ளது தான் கா..”
“உனக்கு ஏன் இந்த வேலை குகா.. அவளுக்கு ஸ்ட்ரீட் ஃபுட் எல்லாம் ஒத்துக்காது. நல்ல பெரிய ஹோட்டல்ல தான் வாங்கி கொடுப்போம்.”, என்றதில் நந்தினியின் முகம் வாடிவிட்டது.
“இன்னொரு தடவை இப்படி எதாவது பண்ணின அடி தான் விழும் போ ப்ரிட்ஜில் ட்ரை ப்ரூட்ஸ் இருக்கு எடுத்து சாப்பிடு போ..”, என்று மகளை விரட்டியவள் தட்டை நந்தினியின் கையில் கொடுத்துவிட்டு,
“என்ன மாவோ எப்படி பண்ணாங்களோ..ச்ச..”, என்று முனகிவிட்டுச் சென்றாள்.
அனைத்தையும் சமையலறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ராணி அமைதியாய் நந்தினியை உள்ளே அழைத்துச் சென்றார்.
“விடு டி குகா..பெரிய மகாராணி இதெல்லாம் சாப்பிட மாட்டாங்க..என்கிட்ட கொடு. என் புள்ளையோடதை நான் சாப்பிடுவேன்.”
“உங்களுக்கும் எடுத்துட்டு வந்துருக்கேன் அத்தை”, என்று புன்னகைத்தவளைப் பார்த்தவருக்கு மனம் பாரமாகியது.
இருந்தும் நடந்த எதையுமே ஆண்களிடம் எடுத்துச் செல்லாமல் அப்படியே விட்டிருந்தனர். இரவு வீட்டிற்கு வந்த சந்திரன் மனைவியிடம்,
“நந்தினி நீ ஏன் வேலைக்கு எதுவும் முயற்சி பண்ணக் கூடாது..”
“ஏன்ங்க?”
“ஏன் னா என்ன அர்த்தம் படிச்ச படிப்பை வீணாக்க போறியா? வீட்டுக்கு நான் ஒருத்தன் போதும்..”
“அதெல்லாம் தோணிணது இல்லங்க.”
“இப்போ நான் சொல்றனே போறியா?”
“வேண்டாம்..”
“?!”
“அத்தை நாள் மொத்தம் தனியா இருப்பாங்க அப்பறம்..”
“இதெல்லாம் ஒரு காரணமா?”
“நிஜமா தான் நீங்க யாருமே அவங்களை கண்டுக்குறது இல்லையோனு தோணுது..”
“!!!”
“அவங்க என்கிட்டேயே இவ்வளவு பாசமா இருக்காங்கனா உங்க மேலே எல்லாம் எவ்வளவு அன்பு வைச்சுருக்கணும். ஆனாலும் இரண்டு வார்த்தை சேர்த்து பேசி நான் பார்க்கவே இல்லை.
உங்களோடயாவது கொஞ்சம் பேசுறாங்க மாமாவோடயும் உங்க அண்ணணோடயும் சாப்பாடு போடவானு கேட்குறதை தவிர ஒண்ணுமே இல்லை..”
“…”
“நானும் அவங்க நிலைமையில் இருந்தவ தான அதான் அவங்களை மறுபடியும் தனியா விட மனசு வர மாட்டேங்குது.”
“…”
“ஏன் எதுவும் சொல்ல மாட்றீங்க?எதாவது தப்பா சொல்லிட்டேனா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல..”, என்றவனுக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
நாட்கள் அதன் போக்கில் நகர அன்று ஞாயிறு விடுமுறை தினமாதலால் சந்திரனைத் தவிர அனைவருமே வீட்டில் இருக்கும் நாள்.
சந்திரன் காலை உணவை உண்டு கொண்டிருக்க நந்தினி அவனுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
“குகா என்னோட அந்தச் சுடிதார் அயர்ன் பண்ணித் தர சொன்னேனே பண்ணிட்டியா?”
அப்போது தான் நிலைமையை உணர்ந்தவள் என்ன செய்வதெனப் புரியாமல் பயந்து போய் நின்றிருக்க சந்திரன் விருட்டென சேரில் இருந்து எழுந்திருந்தான்.
“எத்தனை நாளா இது நடக்குது?”
“என்னங்க அது சின்ன உதவி தான்..”
“அப்படி உனக்கு யாரும் உதவி பண்றதா தெரியலையே..”
“…”
“ம்மா!!”
“என்ன டா ஏன் கத்துற?”
“இதெல்லாம் நீ கேட்க மாட்டியா எல்லாருக்கும் துணி அயர்ன் பண்ணி தர தான் இவ இருக்காளா?”, என்று போட்ட சத்தத்தில் அனைவருமாய் ஹாலில் கூடியிருந்தனர்.
“சந்திரா விடுப்பா..”
“இது ஒண்ணை சொல்லிடுங்க.. என்னைப் பேசுறதுக்கு தான் உங்க எல்லாருக்கும் உரிமை இருக்கு. என் பொண்டாட்டியை வேலை ஏவ இங்க யாருக்கும் உரிமை கிடையாது.”
“நம்ம வீட்டு வேலையை நாம பார்க்குறதுக்கு இவ்வளவு பேச்சா?”, என்ற அண்ணியை ஒரு பார்வை பார்த்தவன் தன் அண்ணனை முறைத்தான்.
“என்ன டா பொம்பளைங்க விஷயம் அதில் ஏன் நீ தலையிடுற?”,என்றான் சுரேந்தர்.
“ஓ அப்போ நாளைக்கு என் பொண்டாட்டியோட ட்ரெஸை அயர்ன் பண்ணி வைக்க சொல்லு”
“நான் ஏன் பண்ணணும்?”
“அதை தானே இப்போ நான் கேட்டேன். என் பொண்டாட்டி ஏன் இதையெல்லாம் பண்ணணும்?”
“அம்மா தாயே நல்ல சண்டை இழுத்து விடுற மா நீ.. செய்யுற மாதிரி செஞ்சுட்டு புருஷனை ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்குற.. சின்ன பொண்ணுனு நினைச்சா விஷமாயில்ல இருக்கு..”
“அக்கா நான் எதுவும் சொல்லலை கா..”, என்றவளுக்கு கண்கள் கலங்கியது.
“சுஜா நீயும் தான் கொஞ்சம் பொறுமையா இரேன்”, என்று ராணி பிரச்சனையை முடிக்கப் பார்க்க அது வேறு விதமாய் போனது.
“ஓகோ அப்போ யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசலாம். நான் வாயை மூடிகிட்டு இருக்கணுமா?”
“அம்மாடி அப்படி சொல்லலை..”
“போதும் அத்தை உங்களுக்கு எப்பவும் சின்ன மகன் தான் உசத்தி இப்போ சின்ன மருமக தான் பெருசா போயிட்டா..
நானும் என் புருஷனும் இந்த வீட்டுக்கு உழைச்சு கொட்ட தான் இருக்கோம்.”
“எந்தப் பிரச்சனையைப் பத்தி பேசுறோமோ அதைப் பத்தி பேசுங்க.. இப்போ ஏன் தேவையில்லாத பேச்செல்லாம்?”
“ஏன் சொல்ல மாட்டீங்க? எனக்காக நான் பேசினா தேவையில்லாம பேசுற மாதிரி தான் இருக்கும்.”
“காலங்காத்தலேயே என்ன அக்கப்போரு இது. குடும்பம் பண்ற இடம் மாதிரி தெரியலை.”, என்ற வசந்தனின் அதட்டலில் அத்தனை பேரும் அமைதியாகிவிட்டனர்.
சந்திரன் கோபமாய் கடைக்குக் கிளம்பி விட ராணி நந்தினியை அழைத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
“அத்தை…”
“நீ ஏன் டி அழற.. என்னால தான் பேச முடியலை நீ பேசுறதுக்கு என்ன?”
“நீங்களும் என்னையே திட்டுறீங்க அத்தை..”
“இன்னும் குழந்தையாவே இருக்காத குகா.. பேச வேண்டிய இடத்தில் பேசலைனால் நம்மை ஊமையாக்கி உட்கார வைச்சுருவாங்க.. நானே அதுக்கு பெரிய உதாரணம் தான்.”
“அவரு வேற கோபமா போனாரே அத்தை..”
“அவனுக்கு சும்மாவே கோவம் வரும். புண்ணியவதி அவளால முடிஞ்சதை பண்ணி விட்டுட்டா.. விடு சாய்ந்திரத்துக்குள்ள சரி ஆகிருவான்.”, என்றதற்கு சம்மதமாய் தலையசைத்தாலும் கணவனை நினைத்து பயமாய் இருந்தது.
மதியம் எப்போதும் போல் உணவை எடுத்துக் கொண்டு வந்தவளைப் பார்த்தவன் இன்னுமும் காலை நடந்ததின் கோபத்தில் தான் இருந்தான்.
“இது மட்டும் தானா இல்லை வேற என்ன எல்லாம் பண்ணிட்டு இருக்க?”
“இல்லங்க அது..”
“இதுக்காக தான் இந்தக் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன் யாரு கேட்டா..”, என்றதில் நந்தினியின் கண்கள் கலங்கிவிட அடுத்து அவன் எதுவும் பேசுவற்குள் அறிவு வந்து விட்டிருந்தான்.
கண்களைச் சிமிட்டி கண்ணீரை அடக்கிக் கொண்டவளாய் இருவருக்கும் பரிமாறிவிட்டு கிளம்பியிருந்தாள்.
சந்திரனுக்கு மனமெங்கும் கண்ணீரோடு சென்ற மனைவி தான் நிறைந்திருந்தாள். அவள் செய்தது தவறு தான் என்றாலும் அளவிற்கு அதிகமாகவே கோபப்பட்டு விட்டதாய் தோன்றியது.