நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள் நண்பர்களாக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது அவர் நட்பு.”
இரவு வீட்டிற்கு வந்தவன் உடைமாற்றி கை கால் கழுவி வர அறை வாசலில் அமைதியாய் நின்றிருந்தாள் நந்தினி. அவனுக்கான உணவை பரிமாறிவிட்டு பாத்திரங்களை எல்லாம் ஒதுக்கி போட்டு விட்டு தங்களறைக்கு வர கட்டிலின் குறுக்காய் சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்தான் சந்திரன்.
“நந்தினி..”
“ம்ம்?”
“அந்த பையை எடுத்துட்டு வாயேன்.”, என்றதும் அவனது கணக்கு வழக்கு நோட்டு இருக்கும் பையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு நகர்ந்து செல்ல எத்தனித்தவளைக் கைபிடித்து அருகில் அமர செய்தான்.
“சாரி நந்தினி..”
“…”
“ஏதோ கோவத்தில் பேசிட்டேன்.. உன்னை திட்டுறதுக்கு உரிமை இல்லையா..”
“இன்னமும் இது பிடிக்காத கல்யாணம் தானா உங்களுக்கு?”, என்று கேட்டவளுக்கு எத்தனை முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
“ஹேய்?!!”
“உண்மையை சொல்லுங்க இன்னமும் உங்க மனசில் அப்படி ஒரு எண்ணம் இருக்கு தான?”
“அப்படியெல்லாம் இல்லை மா..”
“பொய் சொல்றீங்க..”, என்றவள் மூக்கை உறிஞ்சிக் கொள்ள சிறு பிள்ளை தனமான அவளது கோபத்தில் சந்திரனுக்கு புன்னகை அரும்பியது.
“எப்படி சொன்னா நம்புவ?”
“…”
“இங்கே பாரு என் பொண்டாட்டியை சமாதானப்படுத்துறதுக்காக அவளுக்கு பிடிச்ச ஹனி கேக்கோட வந்துருக்கேன்”, என்றவன் தன் பையிலிருந்து அந்த கேக் துண்டை நீட்ட அதைப் பார்த்தளின் முகம் பூவாய் மலர்ந்தது.
“இப்பவும் நம்ப மாட்டியா?”, என்றதும் ஒன்றும் கூறாமல் கேக்கை கையில் வாங்கிக் கொண்டாள்.
“சாப்பிடு..”, என்றதும் ஒரு வாய் கேக்கை எடுத்து உண்டவள் அவனை ஓரப் பார்வை பார்த்திருக்க,
“பிடிக்காத கல்யாணம் தான் ஆனால் ரொம்ப பிடிச்சு போன பொண்டாட்டி”, என்றவனை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாய் இருந்தது. அவளது நிலை உணர்ந்தவனாய் நகர்ந்து அவளருகில் அமர்ந்த வண்ணம் கேக்கை ஒரு துண்டு எடுத்து அவளுக்கு ஊட்டினான்.
“தினமும் ஒரு கேக் சாப்பிட்டு உடம்பை தேத்துற வழியை பாரு.. ம்ம்?”
“நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க..”
“பொண்டாட்டிகிட்ட வேற எப்படி பேசுறது? நீ சொல்லிக் குடு கத்துக்குறேன்..”
“…”
“என்ன அமைதியாகிட்ட?”
“எப்போ இருந்து.. அது..வந்து..”
“உன்னை பிடிக்க ஆரம்பிச்சுதுனு தெரியனுமா?”, என்றதற்கு மௌனமாய் தலையசைத்தாள்.
“பாவமா கல்யாணத்தனைக்கு நைட் என்கிட்ட பேசிட்டு இருந்த அப்போவே..”
“என்ன??”
“ம்ம் உன்னோட ஒவ்வொரு செயலும் என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு காட்டிட்டே இருக்கு. அப்படி என் மேல் அளவுக்கு அதிகமா பாசம் காட்ற பொண்ணை எப்படி எனக்குப் பிடிக்காம போகும்?”
“…”
“உண்மையை சொல்லணும்னால் எங்க அம்மாக்கு அப்பறம் என் மேல அன்பு காட்ட யாருமே இல்லைனு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்போ நீ இருக்க..”, என்றவன் மனைவியை பக்கவாட்டில் அணைத்துக் கொள்ள அவனது சட்டையைப் பற்றிக் கொண்டாள்.
கணவன் மனைவியாய் முதல் நெருக்கமான தருணம் எத்தனை முயன்றும் கட்டுப்பாடுகள் வேலைக்காகாமல் போக மனைவியின் அதரங்களை தனதாக்கிக் கொண்டான் சந்திரன்.
நிமிடங்கள் நீடிக்க முத்தத்தின் அழுத்தம் அதிகரிக்க தாக்கு பிடிக்க முடியமல் பிரிந்து அமர்ந்தவளைப் பார்த்து புன்னகைத்தவனாய்,
“பார்த்தியா ஒரு முத்தத்துக்கே இப்படி.”, என்றதில் கைகளுக்குள் முகம் புதைத்துக் கொண்டாள்.
அப்படியே அந்த சிறு கட்டிலில் அவளோடு படுத்துக் கொண்டவனாய் பல கதைகள் பேசிய படி இரவுப் பொழுது கழிந்தது.
மறுநாள் எழும்போதே ஒருவித உற்சாகமாய் விடிந்தது நந்தினிக்கு. கணவனின் அருகில் இருப்பது ஏதோ மாய உலகத்திற்குள் இருப்பது மாதிரியான உணர்வைக் கொடுக்க அந்த பூரிப்பு முகத்திலும் பிரதிபலித்தது.
மருமகளின் முகத்தைக் கண்ட ராணிக்கு பெரிய நிம்மதி தான்.
முந்தைய தினம் உணவு கொடுக்கச் சென்றவள் வீட்டிற்கு வந்த நேரம் அழுதது போன்று இருந்த முகம் இப்போது இப்படி பூரிப்பில் இருப்பதை கண்டு கொண்டவராய் வேலையைக் கவனித்தார்.
எப்போதும் போல் சற்று நேரத்தில் சோர்ந்து அமர்ந்தவரைக் கவனித்தவளாய்,
“அத்தை நான் சொன்னால் கேக்குறதே இல்லை. ரொம்ப சோர்வா தெரியுறீங்க. ஒரு தடவை டாக்டர்கிட்ட போய் என்னனு கேட்டு சத்து மாத்திரை வாங்கிட்டு வரலாம் தான?”
“அடப் போடி அங்கே போய் அவனுங்க அது இதுனு இழுத்துவிட்டு உன் மாமனார் அதுக்கும் தாம் தூம்னு குதிக்கவா?”
“என்ன அத்தை இப்படி சொல்றீங்க?”
“உண்மை தான சொல்றேன். எனக்காக ஒரு பைசா நகர்த்தினாலும் ஒன்பது தடவை சொல்லிக் காட்டுவார். விட்டுத் தள்ளு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.”
அன்று மதிய உணவு சமைப்பதில் கவனமாய் இருந்த நந்தினியின் கைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தவள் தன்னோடு கல்லூரியில் படித்த மாணவனின் பெயரைப் பார்த்துவிட்டு யோசனையாய் அழைப்பை ஏற்றாள்.
“ஹாய் குகா..”
“சொல்லு வசந்த் எப்படியிருக்க என்ன திடீர்னு போன் பண்ணிருக்க?”
“நான் நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க”
“நல்லாயிருக்கேன் டா..”
“ஒரு சின்ன ஹெல்ப் வேணும் குகா..”
“சொல்லு டா..”
“ஈவ்னிங் எங்க ஆபீசில் ஒரு சின்ன பார்ட்டி அதுக்கு பப்ஸ் கட்லட் அந்த மாதிரி பல்க் க்வாண்டிட்டி வேணும். உன் ஹஸ்பெண்ட் பேக்கிரி தான வச்சுருக்காரு. ஏற்பாடு பண்ண முடியுமா?”
“கண்டிப்பா டா நீ எதெது எவ்வளவு வேணும்னு சொல்லு நான் கேட்டு சொல்றேன்.”, என்றவள் விவரங்களைக் கேட்டுவிட்டு கணவனுக்கு அழைத்தாள்.
“பண்ணிக்கலாம் நந்தினி. நீ அட்ரெஸ் அனுப்ப சொல்லு நான் போய் கொடுத்துடுறேன்.”
“எது நீங்க போறீங்களா? நம்ம இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர்ங்க..”
“அதெல்லாம் பார்த்தா முடியாது மா.. நீ கேட்டு சொல்லு..”
“என்னங்க நீங்க! இப்போ தான் சாப்பாடு டெலிவரி பண்றதுக்கு அப் எல்லாம் இருக்கே அதில் போட்டு விடுங்க காசை அவங்களே கொடுத்துரட்டும்.”
“இருங்க நான் இப்போ கடைக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன் வந்து பேசலாம்.”, என்றவள் கணவனுக்கான உணவோடு கிளம்பியிருந்தள்.
“என்ன நந்தினி நீ சொல்றதெல்லாம் வேலைக்கு ஆகுமா?”
“ஏன் ஆகாம என் க்ளாஸில் ஒருத்தி எல்லாம் வீட்டில் சார்ஜரை விட்டுட்டு வந்தாலே அவங்க அம்மாகிட்ட அனுப்பி விட சொல்லுவா..”
“எதே!!”
“ம்ம் அப்படியே உங்க போனை கொடுங்க”, என்றவள் அந்த அப்பை தரவிறக்கம் செய்து அதில் அவனது விவரங்களை எல்லாம் பதிப்பித்து அவனிடம் நீட்டினாள்.
“இதுவரை டெலிவரிக்கு எல்லாம் தனியா காசு வாங்கினது இல்லை நந்தினி.
நானே கொண்டு போய் கொடுத்துருவேன்.. வர்ற ஆர்டரும் போயிற போகுது.”
“ஏங்க வண்டி என்ன தண்ணியிலேயா ஓடுது.. இருங்க நான் அவன்கிட்ட பேசுறேன்.”
“ஹலோ..”
“சொல்லு குகா..”
“நீ கேட்டதெல்லாம் ரெடி பண்ணிடலாம்னு சொல்லிட்டாங்க டா.. உனக்கு எத்தனை மணிக்கு வேணும்னு சொன்னா *** அதில் போட்டு விட்டுறோம் டெலிவரி சார்ஜஸை நீ கொடுத்துடு..”
“சூப்பர் குகா தேங்க் யூ கடைசி நிமிஷம் சொல்றோமேனு யோசிச்சுட்டு இருந்தேன். சரி நீ முடிச்சுட்டு மொத்த அமௌண்ட் சொல்லு ஜீபே பண்ணிடுறேன்.”
“சரி வசந்த் வைச்சுடுறேன்..”, என்றவள் புன்னகையாய் கணவனைப் பார்க்க அவனுக்குமே மகிழ்ச்சி தான்.
“சரிங்க நீங்க வேலையைப் பாருங்க நான் அப்படியே கிளம்புறேன்.”,என்றவளைச் சட்டென இழுத்து கன்னத்தில் இதழ் பதிக்க அந்நேரம் உள்ளே வந்த அறிவு என்ன செய்வதென தெரியாமல் வந்த வழியே திரும்பியிருந்தான்.
“மானமே போச்சு..”,என்று சிணுங்கியவளைப் பார்த்தவன் மீண்டுமாய் நெருங்க பையை எடுத்துக் கொண்டு ஓடியிருந்தாள்.
இரவு வீட்டிற்கு வந்தவன் தனது கையில் வைத்திருந்த பணத்தை அப்படியே நந்தினியிடம் கொடுத்திருந்தான். இத்தனை நாட்களில் இருவருமாய் சேர்ந்து கணக்கு வழக்கு பார்த்ததெல்லாம் உண்டு தான் எனினும் பணமாய் அவள் கையில் கொடுத்தது இல்லை.
இன்று மொத்த பணத்தையும் அவளிடம் கொடுக்க மகிழ்ச்சியாய் வாங்கிக் கொண்டவள் சரிபார்த்து உள்ளே வைத்துவிட்டு வந்து அமர்ந்தாள்.
“என்னங்க சாய்ந்திரமா எனக்கு திடீர்னு ஒரு யோசனை..”
“என்ன நந்தினி?”
“இல்லை நீங்க ஏன் லேட்டஸ்ட் பேக்கிங் பத்தி ஒரு, ஒரு வாரம் இல்லை பத்துநாள் க்ளாஸ் எதாவது சேரக் கூடாது..”
“என்ன?”
“இல்ல நீங்க பண்றதெல்லாமே நல்லாயிருக்கு தான். ஆனாலும் இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி மாறுறதுனு ஒரு விஷயம் இருக்கு இல்ல..”
“!!”
“இப்போ இதுக்கெல்லாம் நிறைய க்ளாஸ் இருக்காம்.. நெட்ல பார்த்தேன்.”
“எல்லாம் சரி தான் மா.. ஆனால் அந்த நேரத்தில் கடையைப் பார்த்துக்க ஆள் வேணுமே..”
“பத்து நாளைக்கு தான நான் பார்த்துக்குறேன்.”
“!!”
“என்னங்க?”
“இதெல்லாம்..”
“உங்க கனவு ஆசை எல்லாம் இந்த பேக்கரி தான் அப்படி இருக்கும் போது அதை வளர்த்த வேணாமா? முயற்சி பண்ணி பார்ப்போம் அப்பறம் ஆண்டவன் விட்ட வழி..”, என்றவளை வாஞ்சையாய் பார்த்திருந்தான்.
“இந்த குட்டி மண்டைக்குள்ளே இவ்வளவு யோசனையா?”
“என் ப்ரெண்ட் போன் பண்ணி எல்லாம் நல்லாயிருந்ததுனு சொன்னான். அப்படியே நீ கம்ப்யூட்டர் ஸ்டுடண்டட் தான இப்போ எவ்வளவோ டெக்னாலஜி வளர்ந்துடுச்சு ஹஸ்பெண்ட்க்கு அதெல்லாம் சொல்ல மாட்டியானு கேட்டான்.
அப்போ தான் எனக்குமே தோணிச்சு. இத்தனை நாள் எதுவுமே பண்ணாம விட்டுட்டோமேனு.. போயிட்டு வரீங்களா சொல்லுங்க?”
“சரி விசாரிச்சு பார்ப்போம் நந்தினி. ஆனால் பணம் அதிகமா இருந்தா வேண்டாம்..”
“சரிங்க கேட்டு பாருங்க”, என்றவள் இரண்டு மூன்று போன் நம்பர்களை எடுத்துக் கொடுக்க பேசிப் பார்த்தவனுக்குமே சற்று ஆசை வந்திருந்தது.
மூன்றில் சிறந்தது என தோன்றிய ஒரு இடத்தில் நாளை முதல் பயிற்சிக்கு வரலாமா என்று கேட்டு ஒரு வாரத்திற்கான வகுப்பிற்கு முன்பதிவு செய்து கொண்டான்.
அத்தனையையும் அருகில் அமர்ந்து பார்த்திருந்தவளுக்கும் ஒரு வகையில் மனம் உற்சாகமாய் மாறியிருந்தது.