“அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா.
விளக்கம்
கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்.”
மறுநாள் காலையில் பரபரப்பாய் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த மருமகளைப் பார்த்த வண்ணம் உள்ளே வந்த ராணியிடம் மட்டும் விஷயத்தைக் கூறினாள்.
“நீ அங்கே தனியா சமாளிச்சுருவியா டி குகா?”
“எனக்கு காபி ஷாப்பில் வேலை பார்த்து அனுபவம் தான் அத்தை நான் பார்த்துக்குவேன். மாமா எதுவும் சொல்லுவாரோ?”
“தொழில் விஷயமா வெளியில் அலையுறான் அதனால் நீ போறனு மட்டும் சொல்றேன்.
அவன்கிட்டேயும் கேட்டா அப்படியே சொல்ல சொல்லு..”
“சரி அத்தை..”, என்றவள் உணவை முடித்து கணவனோடு கடைக்குக் கிளம்பியிருந்தாள்.
கடை வாசலில் இறங்கிக் கொண்டவள் தன்னிடமிருந்த ஒரு பையை சந்திரனிடம் கொடுக்க என்னவென்பதாய் மனைவியைப் பார்த்தான்.
“மதியானத்துக்கு சாப்பாடுங்க.. அங்க பக்கத்தில் கடை இருக்கோ என்னவோ.”
“சரி நந்தினி உனக்கு?”
“எனக்கும் எடுத்துட்டு வந்துட்டேன்.”, என்றவளைப் பார்த்து தலையசைத்த வண்ணம் அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு கிளம்பியிருந்தான்.
வகுப்பெடுப்பது ஒரு பெண் தான். அதைவிட அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பெண்களே. சற்று கூச்சமாய் இருந்தது சந்திரனுக்கு.
இருந்தும் வகுப்பெடுப்பவர் அவனை அழைத்து முன் வரிசையில் அமர வைத்துக் கொண்டார். அவரது வீட்டிலேயே மாடியில் இந்த வகுப்பு நடைபெற்றது.
அவர்களின் முக்கிய பாடமே செயற்கை ஈஸ்ட் இல்லாமல் பேக் செய்வது பற்றியது தான். சந்திரனுக்குமே ஆச்சரியமாய் இருந்தது.
பிட்ஸா ப்ரெட் குக்கீஸ் என அனைத்தும் கோதுமை மாவில் அவ்வளவு ருசியாய் வந்தது.
அடிப்படையிலேயே ஆர்வம் அதிகம் இருந்ததால் மிகக் கவனமாய் அனைத்தையும் தெரிந்து கொண்டான்.
வகுப்பு முடிந்து மற்றவர்கள் சென்ற பின் வகுப்பெடுக்கும் பெண்மணியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.
“சின்ன அளவில் பேக்கிரி வைச்சுருக்கேன் மேடம். என் வைஃப் தான் புதுசா கத்துக்கிட்டா உதவியா இருக்கும்னு சொல்லி அனுப்பினா..”
“கரெக்ட் தான் சார்.. இப்போ எல்லாம் சாப்பாடுங்கிறது ரொம்பவே முக்கியம் ஆகிடுச்சு.
அதாவது மக்கள் நிறைய வித்தியாசமான உணவுகளை விரும்புறாங்க.
ஜஸ்ட் என்னோட கருத்து தான். வெறும் சேல்ஸ் மட்டும் இல்லாம அங்கேயே உட்காந்து சாப்பிடுற மாதிரி கடை இருந்தால் கண்டிப்பா வாடிக்கையாளர்கள் அதிகம் ஆவாங்க.
அதே மாதிரி உங்க கடைக்குனு ஒரு சிக்னேச்சர் டிஷ் முயற்சி பண்ணுங்க. உதாரணமா சேலத்தில் இங்கே மட்டும் தான் இது கிடைக்கும்னு சொல்ற மாதிரி.
அப்பறம் பர்த் டே ஆர்டர்ஸ் சின்ன சின்ன கிராமத்து கடைகளுக்கு சப்ளை பண்றது இந்த மாதிரி எல்லாம் பண்ணும் போது இன்கம் அதிகமாக வாய்ப்பு இருக்கு சார்.”
“நீங்க சொல்ற எல்லாமே ரொம்ப சரி மேடம். இத்தனை நாள் இப்படி ஒரு வழிகாட்டுதல் இல்லாம தான் தவிச்சுட்டு இருந்தேன்.. தேங்க் யூ சோ மச்..”
“என்னை நம்பி கத்துக்க வர்றவங்களுக்கு என்னால முடிஞ்சது சார்.”, என்றவரிடம் மீண்டும் நன்றி தெரிவித்து கிளம்பியவனுக்கு மனைவியைப் பார்க்கும் ஆர்வம் அதிகரித்திருந்தது.
இப்போது யோசித்துப் பார்த்தால் இப்படி ஒரு உந்துதல் தானே அவனுக்கு தேவைப்பட்டது. உழைப்பிற்கு அஞ்சாதவன் தான் ஆனால் இப்படி செய் இந்த பாதையில் செல் நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவாய் என ஒரு வழிகாட்டுதல் தானே அவன் எதிர்பார்த்தது.
அதற்கு காரணமானவளிடம் காதல் அளவிற்கு அதிகமாகவே எழுந்தது.
காதலித்து திருமணம் புரிவதை விட திருமணத்திற்கு பின்னான காதல் எப்படி தனி அழகோ அதே போல் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்த பின்பு செய்யும் திருமணத்தை விட இருவருமாய் கை கோர்த்து முன்னேறுவது என்பது அலாதி சுகம் அல்லவா.
அப்படியான வாழ்க்கையின் முதல் படியில் அடியெடுத்து வைத்திருந்தான் சந்திரன்.
கடைக்கு வந்த நேரம் அவனது இருக்கையில் அமர்ந்து கணக்கு புத்தகத்தில் எதையோ எழுதிக் கொண்டிருந்த மனைவியை பார்த்தவனுக்கு இன்னுமாய் உற்சாகம்.
“ஆமா நந்தினி நிறைய புது விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன். நீ என்ன பண்ற?”
“காலையில் இருந்து வந்த கணக்கெல்லாம் எழுதி வைச்சேன்ங்க.. நீங்க ஏன் கம்ப்யூட்டரில் ஏத்தி வைக்க கூடாது.”
“எனக்கு அதெல்லாம் பழக்கமில்லையே மா அதான்.”
“சரி நான் தினமும் கொஞ்சம் கொஞ்சமா என்னோட லேப்டாப்பில் ஏத்தி வைக்குறேன். கவர்மெண்ட் கொடுத்தது காலேஜுக்கும் அது தான் கை கொடுத்தது.”
“அப்பறம் நந்தினி..”, என்றவன் அந்த பெண்மணி கூறியதெல்லாம் கூற நந்தினிக்குமே உற்சாகம் தான்.
“கேட்கவே சூப்பரா இருக்கே..கண்டிப்பா பண்ணலாம்ங்க…”
“நீ வேற.. அவங்க சொன்னதெல்லாம் சரி தான் அதுக்கெல்லாம் காசு வேண்டாமா?”
“என்னங்க? இந்த மூணு வருஷத்தில் வந்த பணம் இருக்கும் தான?”
“வேலை செய்யுற மூணு பேருக்கும் சம்பளம் கடை வாடகை சாமான் வாங்குறதுக்கு எல்லாம் காசு போக சின்னதா ஒரு அமௌண்ட் இருக்கு நந்தினி.
அதை வைச்சு என்ன பண்ண முடியும்?”
“அப்போ லோன் கேட்டு பார்ப்போம்ங்க..”
“லோனா??!”
“ஆமா ஏன் அதெல்லாம் கிடைக்கும் ரினொவேஷன் பண்றதா சொல்லி கேட்போம்.
மீதிக்கு நம்ம கை காசை வைச்சு சமாளிக்கலாம்.”
“சரியா வரும்ங்கிறியா?”
“கண்டிப்பா வரும்.. ஆரம்பத்துல சிரமம் தான் ஆனால் நாம சமாளிச்சுடலாம். நீங்க துணிஞ்சு ஆரம்பிங்க..”, என்ற மனைவியின் பேச்சு பெரும் பலத்தைக் கொடுத்தது.
சற்று நேரத்தில் எல்லாம் வீட்டிற்கு வந்தவள் மாமியாரிடம் விஷயத்தைக் கூற மருமகளுக்கு திருஷ்டி கழித்தார்.
“என் தங்கம் இப்போ சொல்றேன் நான் எத்தனை நாளைக்கு இருப்பேனோ.. என் பிள்ளைக்கு என்னைக்கும் நீ கூட இருக்கணும் டி..”
“என்னத்தை இப்படியெல்லாம் பேசாதீங்க..”
“தீனு சொன்னா சுட்டுற போகுதா.. நீ அவன் கூடவே இருக்கணும் டி குகா..”, எனும்போதே ஹாலில் சுஜாவின் குரல் கேட்க பெண்கள் இருவருமாய் வெளியே சென்றனர்.
“இப்போ என்ன பண்ணணும்ங்கிற சுரேந்தர்..”, என்று நடு ஹாலில் கணவனிடம் கத்தி நிற்க மற்ற பெண்கள் இருவரையும் பார்த்தவனாய்,
“உள்ளே வா சுஜா.. நாம பேசலாம்.”
“என்ன பேசணும் ஐ அம் டயர்ட்.. நீ சொல்றது தான் சரினு பேசினா என்னால எதுவும் பண்ண முடியாது.”, என்றவள் சோபாவில் அமர்ந்துவிட சுரேந்தர் கோபமாய் அறைக்குள் சென்றிருந்தான்.
பாவம் போல் ஒரு ஓரமாய் ஜனனி நின்று தன் தாயைப் பார்த்திருக்க ராணி சத்தம் எழுப்பாமல் பேத்தியை உள்ளே அழைத்துக் கொண்டார்.
“இதுவே பொழப்பா போச்சு இவங்களுக்கு.. பிள்ளை முன்னாடி சண்டை போடக் கூடாதுனு கூட தெரியலை படிச்சு என்னத்துக்கு?”
“என்ன பிரச்சனை அத்தை?”
“வேற என்ன பெரியவனுக்கு அப்படியே அவங்க அப்பா குணம் அவரை மாதிரியே பொண்டாட்டியை அடக்கி வைக்கணும்னு பார்க்குறான். அது நடக்குமா?”
“அக்கா சொல்லிருக்காங்களா?”
“ம்ம் சூரியன் மேற்கே உதிச்சுட்டாலும். அதெல்லாம் இல்லை.. இத்தனை வருசமா பார்க்குறதை வைச்சு சொல்றேன். அவளும் படிச்சு கை நிறைய சம்பாதிக்கும் போது இவன் சொல்றதுக்கு அப்படியே ஆமாம் போட முடியுமா?”
“…”
“ஆனால் ஒண்ணு இந்த ஆம்பளைத் தனத்தை காட்டிட்டு திரிஞ்சா வாழ்க்கையில் ஒண்ணும் உருப்படாது. இதெல்லாம் எப்போ தான் புரியுமோ..”
இரவு வந்த கணவனிடம் நடந்ததைக் கூற அவன் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.
“இதெல்லாம் இங்கே அடிக்கடி நடக்குறது தான். உனக்கு புதுசா இருக்கு. அதை விடு..”
“நீங்க அத்தை மாதிரில..”, என்றவள் தன் இரு முட்டியிலும் தலை சாய்த்த வண்ணம் கணவனையே பார்த்திருந்தாள்.
லேசாய் அவளது மூக்கைப் பிடித்து திருகியவனாய் தலை முடியை காதோரம் ஒதுக்கி விட்டான்.
“ஏன் ஒண்ணும் சொல்ல மாட்றீங்க?”
“என்ன வேணும் உனக்கு?”, என்றவன் அவளை அப்படியே தூக்கி தன் மீது அமர்த்திக் கொண்டான்.
“ஐயோ என்ன பண்றீங்க!!!”
“சும்மா இருந்த என்னை நீ தான வம்புக்கு இழுத்த இப்போ சொல்லு என்ன வேணும்..”
“ஒண்ணு சொல்லணும்..”
“என்னது?”
“ஐ லவ் யூ..”, என்றவளைப் பார்த்து விழி விரித்தான் சந்திரன்.
“திரும்ப சொல்ல மாட்டீங்களா?”
“நீதான் இப்போ காலேஜ் முடிச்ச சின்ன பொண்ணு எனக்கு ஏழு கழுதை வயசாகுது..”
“அதனால என்ன பொண்டாட்டிகிட்ட சொல்லலாம்..”
“அதெல்லாம் வராது.. நான் சொல்லலைனாலும் உனக்குப் புரியுதுல அப்பறம் என்ன?”
“சொல்ல மாட்டீங்களா?”
“ஏன்டி படுத்துற..”, என்றவன் இன்னுமாய் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
அந்த வாரம் முழுவதும் வகுப்பை முடித்தவனுக்கு பெரும் நம்பிக்கை வந்திருந்தது. அடுத்த வாரத்திலேயே வங்கியில் கடன் கேட்டு அதற்குத் தேவையான வேலைகளைத் தொடங்கியிருந்தான் சந்திரன்.
நினைத்ததை விட எளிதாகவே இருந்தது கடன் பெறுவது. அடுத்ததாய் அவனது கடையிலிருந்து இரு கடைகள் தள்ளி சற்றே பெரிய இடம் காலியாக இருக்க அதை வாடகைக்குப் பேசி முடித்தான்.
முந்தைய கடை போல் சாதாரணமாய் இல்லாது ஒரு கஃபே போன்று மாற்றலாம் என்று நந்தினி கூற அவளையே பெயரை தேர்ந்தெடுக்குமாறு கூறிவிட்டான்.
கணவனும் மனைவியுமாய் கடை வேலைகளில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருக்க வீட்டில் ராணியைத் தவிர யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
அன்றைய இரவு களைத்துப் போய் வந்த கணவனுக்கு நந்தினி உணவு பரிமாறிக் கொண்டிருக்க. சுஜாவும் சுரேந்தரும் வசந்தனின் அறையில் அமர்ந்து அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
பேச்சு முடிந்து மூவருமாய் வெளியே வர வசந்தன் ஜாடை மாடையாய் சந்திரனை பேச ஆரம்பித்திருந்தார்.
“இரண்டு பிள்ளையையும் பாகுபாடு இல்லாம தான் வளர்த்தேன் ஆனா பாரு ஒண்ணு தான் புத்தியோட பொழைக்கத் தெரிஞ்சு வாழுது..”
“….”
“ராணி காலையில் சீக்கிரமா எழுப்பிவிடு பேங்க்கில் தெரிஞ்சவரை பார்க்க போகணும்.”
“சரிங்க..”
“என்னனு எல்லாம் கேட்க மாட்டியா?”
“என்ன விஷயம்ங்க?”
“பெரியவன் ஒரு வீட்டை பேசி முடிச்சுருக்கான் அதுக்கு லோன் விஷயமா பேசத் தான் போகணும். அந்த இடம் நல்ல மதிப்பு தெரியுமா.. இன்னும் பத்து வருஷத்தில் எங்கேயோ போயிடும்.”
“ஓ நல்லதுங்க.. நம்ம சின்னவன் கூட பெரிய கடையா ஆக்க போறான்ங்க லோன் போட்டு சீக்கிரமே கிடைக்கவும் போகுதாம்.”
“துரை சொல்றதெல்லாம் நீ நம்பிட்டு இரு. இப்படி கை நிறைய சம்பாதிக்குறவனுக்கே நான் சிபாரிசு பேச தான் போறேன். இதில் அஞ்சு பைசா இல்லாம உன் புள்ள லோன் வாங்கிட்டானாமா?”, என்றதும் சுஜா சிரித்திருந்தாள்.
அத்தனை நேரம் அமைதியாக இருந்த நந்தினிக்கோ சற்றே கோபம் வந்திருந்தது.
“ஆமா மாமா அத்தை சொல்றது உண்மை தான். சீக்கிரமே வேலை ஆரம்பிச்சுருவோம்.”
“அது சரி நீயும் இந்த வீணா போன வேலைக்கு கூட்டா..
இந்தாம்மா முடிஞ்சா புத்தி சொல்லி உன் புருஷனை வேலைக்கு எங்கேயாவது போக சொல்லு.. இந்த பிஸினஸ் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.”
“அதென்னவோ உண்மை தான் மாமா நமக்கெல்லாம் 9-5 வேலை தான் சரி.
முதலாளி ஆகணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும் தான் ஆனால் நம்ம தகுதிக்கு மீறி ஆசைப்பட்டால் இருக்குறதையும் விட்டுட்டு தான் உட்காரணும்.”, என்றதில் சந்திரன் எழுந்து உள்ளே செல்ல நந்தினி இயலாமையாய் மாமியாரைப் பார்த்திருந்தாள்.