“ஆமா, ஊர்ல இருந்து மெடிசின் படிக்க வந்திருக்கு. ஆகர்ஷன், அனன்யா காலேஜ் தான். நல்ல பொண்ணு. அமைதி, அடக்கம்ன்னு. ஆனா இவ சரியான அறுந்தவாலு…” என அனன்யாவும் வந்தமர்ந்தாள்.
“ஏன் அண்ணா, கொஞ்சமும் இவளுக்கு பயமே இல்லை. என் ப்ரெண்ட்ஸ் கேட்கறாங்க, எல்லாம் நீயும், ஆகர்ஷனும் இருக்கிற தைரியம் தானேன்னு. அவன் என்னடா என்னை பார்த்துக்கறதுன்னு என்கிட்ட இவ சொல்லி அந்த இடத்துல நீங்க மரியாதையை ஆட் பண்ணிக்கோங்கன்னு சொல்ல சொல்லி பேசறா இவ…” என்றவள்,
“அவ சொன்னா உன்னை டேமேஜ் பண்ணின மாதிரி ஆகிடுமாம். நான் அண்ணாவை சொன்னா தப்பில்லையாம். ராஸ்கல் கொஞ்சநஞ்ச அராத்தா பன்றா இவ…” என்றாள் அவர்களிடம்.
“இல்லையா பின்ன? நாம இங்க இருக்கோம்ன்னா இங்க வந்து சேர்ந்தா அந்த பொண்ணு? படிக்க வந்த இடத்துல பழக்கமானோம். அவ சொல்றதும் சரி தானே? நாம பக்கத்து வீட்டுல இருக்கோம். நாம இல்லைன்னாலும் பிரத்யு எல்லா சூழ்நிலையையும் அழகா ஹேண்டில் பண்ணுவா…” என்றார் ஷ்யாமளா.
“தட்ஸ் ரைட்….” என்ற ஆகர்ஷன்,
“பேச்செல்லாம் வளர்ந்த பொண்ணு. இன்னைக்கு இருக்கு பாருங்க. மிட்நைட்ல பாட்டு போட்டு கண்ணீர் விட்டு சோக கீதத்தை வாசிப்பா…” என கூற,
“என்ன?…” என்றார் ஷ்யாமளா.
“மேடம்க்கு நாளைக்கு பர்த்டே. ப்யூஸ் போன பல்ப் மாதிரி மூக்கை உறிஞ்சிட்டு சுத்த ஆரம்பிப்பா இன்னும் கொஞ்சநேரத்துல இருந்து…” என்று சொல்லிவிட்டு,
“ஓகே, நான் ரூம் போறேன்…” என்றவன் எழுந்து மாடிக்கு சென்றான்.
அவனின் அறையை திறந்துகொண்டு உள்ளே சென்று ஷர்ட் பட்டனை கழற்றியபடி அங்கிருந்த பால்கனி திரையை விலக்கிவிட கண்ணாடி கதவினை தாண்டி அடுத்த வீட்டின் பால்கனி கதவு தெரிந்தது.
இன்னும் திறக்கப்படாமல் இருக்க அதனை பார்த்துக்கொண்டே வேறு உடையை எடுத்தவன் இங்குமங்கும் நடக்க அப்போதும் கதவு திறக்கவில்லை.
“இப்பவே ஆரம்பிச்சிட்டாளா?…” என்ற யோசனையோடு இதழோரம் குறுஞ்சிரிப்பு பூத்தது.
தானாய் தலையசைத்தபடி குளிக்க சென்றவன் முடித்துவிட்டு இரவு உணவிற்கு தான் கீழே வந்தான்.
அனன்யாவும் ஷ்யாமளாவும் பேசிக்கொண்டிருக்க வந்தவன் டேபிளில் என்ன உணவென்று பார்த்தான்.
“அனு இங்க வா…” என்றவன் அழைக்கவுமே எதற்கு என புரிந்தே எழுந்து வந்தவள்,
“நீ பேக் பண்ணவே வேண்டாம் ண்ணா. நான் இப்போ தான் அங்க போய்ட்டு வந்தேன். அந்த வாண்டு இப்போ தான் தூங்க போயிருக்கா போல. சுஷ்மா சொன்னா. சுஷ்மா பேரன்ட்ஸ் வெளில போயிருக்காங்க. நாளைக்கு தான் வருவாங்களாம்…” என்றும் தகவல் தர,
“ண்ணா உனக்கு ஆம்லேட் இருக்கு பாரு…” என்று சொல்லி அவனுக்கு எடுத்து வைக்க,
“அம்மாவை கூப்பிடு அனு. சேர்ந்தே சாப்பிடுவோம்…” என்று அமர்ந்தான் ஆகர்ஷன்.
மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க மறுநாள் எங்கே செல்வது என்பதை குறித்து பேச்சுக்கள் சென்றது.
“நீங்க கிளம்புங்க. நான் முடிஞ்சா ஜாயின் பண்ணிக்கறேன்…” என்றும் சொல்லிவிட்டு மீண்டும் மாடிக்கு வந்துவிட்டான் ஆகர்ஷன்.
பால்கனி பக்கம் வந்து நின்றவன் பார்வை பிரத்யுக்ஷா அறையை தொட்டு நின்றது.
சிலநொடிகளில் அங்கேயே ஒரு இருக்கையை இழுத்து போட்டு கால் நீட்டி அமர்ந்து புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டான் ஆகர்ஷன்.
நேரம் கரைவது தெரியாமல் அவன் அதில் ஆழ்ந்து போக சற்றுநேரத்தில் அவனின் செவியை நிறைத்தது அந்த பாடல்.
கஸ்தூரி மான் குட்டியாம்
அது கண்ணீரை ஏன் சிந்துதாம்
பாடலை கேட்டதுமே ஆகர்ஷன் இதழ்களில் புன்னகை நிறைந்து கண்களிலும் ஒளிர,
“ஆரம்பிச்சிட்டா…” என முணுமுணுத்தபடி திரும்பி பார்க்க பிரத்யுக்ஷா அறையில் விளக்கு ஒளிர்ந்தது.
அதனை பார்த்ததுமே கீழே இறங்கி அவன் வந்துவிட ஷ்யாமளா மறுநாள் கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.
“ஆர்ஷ் இன்னும் தூங்கலையா?…” என மகனின் வரவை கண்டு அறையிலிருந்து வெளியே வர,
“கேட்கலையா?…” என்றான் அவரிடம் ஆகர்ஷன்.
“என்ன?…” என்றவர் யோசனையாக,
“இங்க வாங்க…” என அவரை ஜன்னலை திறந்து வைத்து கேட்க செய்ய மீண்டும் அதே பாடல்.
“இது அம்மாக்கு பர்ஸ்ட் டைம்ல. இதுவரை பிரத்யு பர்த்டே இருந்ததில்லையே…” என்றபடி அனன்யாவும் வந்துவிட்டாள் கையில் கேக்குடன்.
“அவங்கம்மாவை மிஸ் பண்ணும்போது இப்படி பீல் பண்ணுவான்னு தெரியும் தான்…” என்றவர்,
“கேக் பிரத்யுவுக்கா?…” என்றார்.
“ஆமாம்மா, முதல்தடவை இங்க வந்த வருஷத்துல அவளோட அம்மா புடவையை சுத்திட்டு நடுராத்திரி கார்டன்ல இங்கயும் அங்கயுமா தூக்கம் வராம ஒரே உலாவல் தான். நானும் அண்ணாவும் தான் பார்த்தோம். பிள்ளை அம்மா வேணும்ன்னு சொல்லி அப்படி அழுகை…” என்று சிரித்தவள்,
“இந்த சுஷ்மாவுக்கு அதெல்லாம் பெரிய விஷயமா இருக்காது. செண்டிமெண்டல் இடியட்ன்னு சொல்லி கேலி பண்ணுவா. நான் தான் எப்பவும் பிரத்யு கூட இருப்பேன்.அதான் கேக் ரெடியா வச்சிருந்தேன். வாங்களேன். போய் கட் பண்ணிட்டு வருவோம்…” என்றாள் அனன்யா.
ஷ்யாமளா இதற்கு முன்பும் இந்த விஷயங்களை பிள்ளைகளின் மூலம் அறிந்தது தான்.
ஆனால் இந்த நேரத்தில் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டுவதா என்றொரு யோசனை.
“அதெல்லாம் சுஷ்மா எதுவும் நினைச்சுக்கமாட்டா. வாங்க…” என ஷ்யாமளாவை இழுத்துக்கொண்டு அனன்யா செல்ல,
“ஆர்ஷ்…” என்றார் ஷ்யாமளா.
“அவன் வரமாட்டான். விஷ் வாங்கறதுக்கு பிரத்யுவே வருவா பாருங்க…” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்கள்.
சுஷ்மா இவர்களின் வருகைக்கு தயாராய் இருப்பதை போல வந்து கதவை திறக்க,
“நான் கால் பண்ணிட்டு தான் வந்தேன்…” என்றாள் அனன்யா.
“அதெல்லாம் இல்லை ஆன்ட்டி. வெல்கம்…” என்றாள் அவள் அலட்டிக்கொள்ளாமல்.
ஷ்யாமளாவிற்கு தான் என்னவோ போலிருந்தது. என்னதான் பிரத்யுவிற்காக என்றாலும் என நினைத்துக்கொண்டே பிரத்யுக்ஷா தங்கியிருக்கும் அந்த அறையின் கதவை தட்ட சில நொடிகள் கழித்து வந்து கதவை திறந்தாள் அவள்.
உனை ஆவாரம் பூ தொட்டதோ
அதில் அம்மாடி புண்பட்டதோ
முகமெல்லாம் அழுதத்தில் சிவந்து சற்று உப்பி இருக்க கண்ணில் இன்னும் கண்ணீர் வழிந்தபடி வந்து நின்றவளை சுற்றி இருந்தது பிரத்யுக்ஷாவின் தாயின் புடவை.
“பிரத்யும்மா…” அந்த கோலத்தில் அவளை காண முடியவில்லை ஷ்யாமளாவிற்கு.
அவரை பார்த்ததுமே பாய்ந்து வந்து கட்டிக்கொண்டவள் சத்தமின்றி லேசாய் விசும்ப,
“உள்ள வாங்க ஆன்டி. வாங்க அனுக்கா…” என்று உள்ளே அழைத்தவள்,
“நான் நினைச்சேன். ஆனாலும் அம்மா வந்திருக்காங்கன்னு மறந்திருப்பீங்களோன்னும் நினைச்சேன்…” என்றாள் பிரத்யுக்ஷா அனன்யாவிடம் கண் சிமிட்டி.
“முதல்ல கேக் கட் பண்ணுவோமாம். அதுக்கப்பறம் கதை பேசலாமாம்…” என்று சொல்லி அங்கேயே வாழ்த்து பாடி கேக்கை வெட்ட,
“சுஷ்மாவை கூப்பிடலையா?…” என்றார் ஷ்யாமளா.
“கூப்பிட்டாலும் நீங்க பண்ணுங்கன்னு சொல்லிடுவா. அது ஒரு தனி பீஸ். விடுங்க ம்மா…” என்ற அனன்யா பிரத்யுக்ஷாவிற்கு கேக்கை ஊட்ட எடுக்க,
“நோ நோ. இந்த வருஷம் ஆன்ட் ஸ்பெஷல். ஸோ அவங்க பர்ஸ்ட்…” என்று பிரத்யுக்ஷா கூற,
“அடிப்பாவி…” என அனு அவளின் தோளில் ஒரு அடி வைத்தாள்.
“ஓகே ஓகே. நான் போய் சீனியருக்கு கேக் குடுத்துட்டு வர்றேன். நீங்களும் வாங்க…” என்று அந்த கேக்கை அப்படியே எடுத்துக்கொண்டு பிரத்யுக்ஷா முன்னால் செல்ல,
“நான் சொன்னேன்ல…” என்றாள் அனு ஷ்யாமளாவிடம்.
“நல்ல பொண்ணு. பாவம் இப்படி பாசமா இருக்கற பொண்ணை எப்படி தான் போர்ஸ் பண்ணி இங்க படிக்க அனுப்பினாரோ அவங்கப்பா. பெரிய பிஸ்னஸ் மேன்…” என்று சொல்லிக்கொண்டே ஷ்யாமளா அனுவை பார்க்க அவளின் புன்னகையில்,
“நான் கேட்கவே இல்லையே ம்மா…” என்று சொல்ல சுஷ்மா அவர்களை பார்த்ததும் எழுந்து நின்று பேச அவளுடன் நின்றுவிட்டார் ஷ்யாமளா.
அனன்யா தாயிடம் சொல்லிக்கொண்டு அவளின் வீட்டிற்கு வரும் முன் பிரத்யுக்ஷா கேக்குடன் உள்ளே வந்துவிட்டாள்.
“ஹேப்பி பார்த்த டே டூ மீ…” என்று பாடிக்கொண்டே வர கிட்சனிலிருந்து வெளியே வந்தான் ஆகர்ஷன்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரத்யுக்ஷா…” என்று கை கொடுக்க,
“ஹப்பா இந்த வருஷமும் அதே வாழ்த்து….” என்றவள் கேக்கை நீட்டினாள்.
“கட் பண்ணியாச்சா?…”
“ஹ்ம்ம், அப்பவே…” என்றவள் டைனிங் டேபிளில் கேக்கை வைத்து அவனுக்கு வெட்டி தட்டில் வைத்து நீட்ட அனன்யாவும் வந்துவிட்டாள்.
“உனக்கும் ஒன்னு வச்சிருக்கேன்…” என்றவன் உள்ளே சென்று தட்டில் சூடான இட்லியும், இட்லி முழுவதும் மூழ்கடிக்கும் தக்காளி சாம்பாரும் எடுத்துக்கொண்டுவந்து டேபிளில் வைத்தான்.
“சாப்பிடு….” என்று சொல்ல பிரத்யுக்ஷா விழிகள் மீண்டும் நீர் நிரம்பியது.
“கண்டிப்பா அடுத்த வருஷம் உன் அம்மாவோட தான் உன் பர்த்டே. இப்ப சாப்பிடு. நானும் கேக் சாப்பிடறேன்…”என்று அவளை அமர சொல்லிவிட்டு பிளேட்டை அவளருகில் நகர்த்தினான்.
“இன்னைக்கு முழுக்க சாப்பிடாம தான் இருந்திருப்பா. அந்த பசில தான் அத்தனை தடவை ஹாட் சாக்லேட். அதானே?…” என்று சொல்ல ஆமாமென்று தலையை மட்டும் அசைத்தாள் பிரத்யுக்ஷா.
“ப்ச், நல்ல மூட்ல இருக்கும்போதே சாப்பிடலாம்ன்னா இப்படி பன்றீங்க…” என்றவள் கையை கழுவிவிட்டு வந்தமர பசியில் முழுவதும் கடகடவென்று இறங்கியது.
“செம்ம டேஸ்ட்…” என்றாள் அவள் கண்கள் கலங்க.
அவளின் தாய் காவேரியும் இதை போலவே தான் செய்வார் அவளுக்கு. சாம்பாரில் அதிகமாய் தக்காளி சேர்த்து செய்வதென்றால் அதனை விருப்பம் அவளுக்கு.
இப்போதும் அதனை ரசித்து ருசித்து உண்டு முடித்தவள் இருக்கிறதா என்று பார்க்க,
“உதை விழும். மிட்நைட்ல இதுவே அதிகம்…” என்றான் ஆகர்ஷன்.
“பசிக்குதே…” என்று தலையை சாய்த்து அவள் கேட்க, கேக்கின் க்ரீமை ஒற்றை விரலால் எடுத்தவன் அவளின் நுனிமூக்கில் பூச, ஷ்யாமளாவும் உள்ளே வர சரியாய் இருந்தது.
பார்த்தவருக்கு ஒருகணம் நெஞ்சம் துடித்தடங்கியது தான். கொஞ்சமும் விகல்பமின்றி அதனை துடைத்த பிரத்யுக்ஷா, தாய் பார்த்த பொழுதும் பதட்டமில்லாமல் புன்னகைத்த ஆகர்ஷன்.
அவரால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நிச்சயம் பிரத்யுக்ஷா மனதில் எதுவுமில்லை என்பது நிச்சயம்.
ஆனால் தன் மகன். இருந்தால்? அவனை பார்த்துக்கொண்டே தானும் பதில் புன்னகை சிந்தி அவர்களிடம் வந்தார்.
“பாருங்க ஆன்ட்டி பசிக்குதுன்னு சொல்றேன்…” என அவரிடம் பிரத்யுக்ஷா கூற,
“உன்னை இங்க யாரும் பட்டினி இருக்க சொல்லலை. நாளைக்கு மார்னிங் இங்க வந்திடு. இப்போ கிளம்பு. கோ…” என்றான் அவளிடம்.
“இரு நான் தோசை வார்க்கறேன்…” என ஷ்யாமளா சொல்ல, மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்தான் ஆகர்ஷன்.
“ம்ஹூம், வேண்டாம். நான் போய் தூங்கறேன்…” என்று சிணுக்கத்துடன் சொல்லியவள் அவனை முறைப்பாய் பார்த்தாள்.