“அச்சோ அத்தை, ஏன் இத்தனை யோசிக்கிறீங்க? நீங்க வராம இருந்தா தான் கஷ்டமா இருக்கும். இப்படி யோசிக்காதீங்க…” என்று சொல்லிக்கொண்டிருக்க ராம்நாத் வந்துவிட்டார் இன்னொரு அறையில் இருந்து.
“என்னையும் கௌரவ் கூப்பிடறான். நானும் போய் பார்த்துட்டு வர்றேன். நீ இங்க இரு கௌசி…” என்றார் மனைவியிடம்.
“சரிங்க…” என்று தலையசைத்தார்.
“சரிம்மா பிரத்யு, நான் போய் பார்த்துட்டு வர்றேன். வந்து மண்டபம் பார்க்க போகலாம்…” என்றார்.
“ஓகே மாமா…” என்றவள் வேறு எதுவும் அவரிடம் பேசவில்லை.
ராம்நாத் கிளம்பி சென்றபின்னர் தான் நிம்மதியானது. காலையில் திடுதிப்பென்று காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பி வந்திருந்தனர் ராம்நாத்தும், கௌசல்யாவும்.
சாருலதா திருமணத்திற்கு முதலில் பேசியிருந்த மண்டபம் சரியில்லை என்று ராம்நாத் கூற, இப்போது வேறொரு மண்டபத்தை பார்த்து பேச வந்திருந்தனர்.
வந்த இடத்தில் கௌரவ் இரண்டு பஸ் விலைக்கு வருவதாய் இருப்பதை பார்க்க வந்திருக்க அதனை முதலில் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பிவிட்டார் ராம்நாத்.
அதுவரையில் இருப்பதற்கு மட்டும் கௌசல்யாவை அங்கே விட்டுவிட்டு செல்ல நினைத்தது ஆச்சர்யம் தான் பிரத்யுக்ஷாவிற்கு.
“ஆனாலும் இதெல்லாம் ஓவர் அத்தை. இந்த மண்டபத்துக்கு என்ன குறைச்சல்? ரொம்ப நல்லா இருக்கே…” என்றாள் அவர்கள் முதலில் பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிய மண்டபத்தினை கூகுளில் பார்த்துக்கொண்டே.
“மண்டபம் எல்லாம் பெரிய மண்டபம் தான் பிரத்யு. ஆனா மாப்பிள்ளையோட அப்பாவும், மாமாவும் உன் மாமாக்கிட்ட ஒருவார்த்தை சொல்லலையாம்….”
“சிரிச்சே சமாளிங்க. மம்மீ கூட அப்பப்ப எங்ககிட்டையாச்சும் டாடியை பேசுவாங்க. கிண்டல் செய்வாங்க. நீங்க இருக்கீங்களே? பிராணநாதா காலத்துலயே இருங்க போங்க…” என்று சலித்தாள்.
அதற்குமே கௌசல்யா முகத்தில் புன்னகை மட்டுமே. அது பழகியும்விட்டது பிரத்யுக்ஷாவிற்கு.
“சரி என்ன காரணம்ன்னு இப்ப சொல்லலாமா? அதான் மாமா கிளம்பிட்டாங்களே…” என்று கேட்க,
“கல்யாணம் பொது செலவு. அப்படி இருக்கும்போது நானும் தானே மண்டபத்தை பார்த்து முடிவு பண்ணனும்ன்னு சொல்லி அதை வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க உன் மாமா…”
“சரி மாப்பிள்ளை வீட்டுல என்ன தான் சொல்றாங்க?…”
“அவங்க மன்னிப்பு கேட்டாங்க பிரத்யு. மண்டபம் பார்க்க போய் கேட்கவுமே கிடைச்சது. அதான் அப்பவே புக் பண்ணிட்டு வந்தோம். சொல்லாம செய்யனும்ன்னு நினைக்கலைன்னு சொல்லி எவ்வளவோ சொல்லி பார்த்தாங்க. வீட்டுல யாரும் கேட்கலை…”
“யாரும்ன்னா, உங்க நாதனும், கௌரவுமுமா? சரியான சேடிஸ்ட்…” என்று முணுமுணுத்தாள் மெல்லிய குரலில்.
கௌசல்யாவிற்கு கடைசி வார்த்தைகள் கேட்கவில்லை. அவள் கூறிய நாதனும், கௌரவமும் வார்த்தை மட்டும் கேட்டிருக்க அதற்கும் சிரித்தார்.
“ஹப்பா இப்பவே இந்த ஆட்டம்? கல்யாணத்துல மாப்பிள்ளை வீட்டை என்ன பாடு படுத்துவார் உங்க வீட்டுக்காரர்?…”
“உன் தாய்மாமாவும் தான் பிரத்யு…” என்றார் சிரிப்புடன் கௌசல்யா.
“அட போங்க த்தை. யாரா இருந்தா என்ன? அப்படி என்ன வீம்பு வேண்டியதிருக்கு? அந்த மண்டபம் சென்டரான பிளேஸ். வெளியூர்ல இருந்து வர்றவங்களுக்கு ஈஸி அக்சஸ். இப்படி கிடைச்ச இடத்தை விட்டுட்டு வேற மண்டபம் பார்க்கிறதெல்லாம்…” என்று பல்லை கடித்தவள்,
“ஆமா மத்த பிள்ளைங்க என்ன சொல்லுவாங்க? உங்க மூத்தது என்ன சொன்னார்?…” என்றாள்.
“கௌரவ் அவங்கக்கிட்ட இனிமே இப்படி செய்யாதீங்க, கலந்து பேசிட்டு எங்களுக்கு தெரிவிச்சிட்டு பண்ணுங்கன்னு சொன்னான். அவன் சொன்ன பின்னாடி மத்த பிள்ளைங்க என்ன சொல்லுவாங்க?…”
“அதானே பார்த்தேன். ஆமா, இதை இப்ப நீங்க சொன்ன டோன்ல தான் சொன்னாரா உங்க கௌரவம்?…” என்றாள் அதையும் பல்லை கடித்துக்கொண்டு.
கௌசல்யா திருதிருவென்று பார்த்தார் அவளை. எத்தனை சரியாய் கணித்து கூறுகிறாள் என்றும் நினைத்தார்.
“சரி அதைவிடுங்க. இங்க எல்லாம் வரமாட்டாராமாம். ரொம்ப ஓவர் அத்தை. வரவே வேண்டாம்…” என்றும் அவள் கூற,
“வருவான். வரவேண்டிய நேரம்…” என்றார் புன்னகைத்து.
“அச்சச்சோ, வேண்டவே வேண்டாம். நான் எல்லாம் இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். அப்பறம் எவ்வளோ பெரிய அவமானம் பண்ணிட்டா உங்க பொண்ணுன்னு என் டாடிட்ட சொல்லிட்டு உக்கார்ந்து குமுற வேண்டியதுதான்…” என்றதும் கௌசல்யா சற்றே பெரிதாய் சிரித்துவிட்டார்.
“செய்யமாட்டேன்னு தானே சிரிக்கறீங்க. போனா போகுதுன்னு விடறேன். மனுஷி பேசுவாளா அந்த கௌரவத்துக்கிட்ட. இதுல உங்க நாதாவுக்கு பெருமை வேற…”
“சரிடா, அதைவிடு. நீ வேணும்னா ஹாஸ்பிட்டல் கிளம்பேன் பிரத்யு. நான் இருந்துப்பேன். மாமா வரவும் அப்படியே கிளம்பிருவோம்…”