“அவ சரியா தான் இருக்கா. நீ ஏன் அவளை பாடா படுத்தற? பேசாம இரு கௌசி…” என்றுவிடுவார் ராம்நாத்.
தன்னை போலிருக்கும் மகன், மகள் மேல் எப்போதுமே அபரிமிதமான அன்பு ராம்நாத்திற்கு.
இப்போதும் அந்த கவலை கௌசல்யா முகத்தில் தெரிய அவரின் கையை பிடித்தாள் பிரத்யுக்ஷா.
“அதெல்லாம் சரியாகிடும் த்தை. சரி வாங்க நாம என்ன குக் பன்றாங்கன்னு பார்ப்போம்…” என்று அடுக்களைக்கு சென்று பார்த்துவிட்டு வீட்டிற்கு அழைத்து பேசி என்று இரண்டுமணிநேரம் சென்றதே தெரியவில்லை.
மருத்துவமனை கிளம்பவேண்டுமே என்னும் பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் பிரத்யுக்ஷாவை இழுக்க ஆரம்பித்தது.
ஆனால் கௌசல்யாவை விட்டுவிட்டு செல்லமுடியாதே? அது மரியாதையாகவும் இருக்காது.
ஆகர்ஷனுக்கு இன்னும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூட சொல்லவில்லை அவள்.
நள்ளிரவு அவனுக்கு வாழ்த்த அழைக்க அதனை எடுக்காமல் குறுஞ்செய்தி அனுப்பிவைத்துவிட்டான்.
“உன்னோட வாழ்த்தை என்னை பார்த்து, நான் உன்னை பார்க்கும்போது சொல்லு பிரத்யு. அந்த நேரத்துக்கு நான் வெய்ட் பன்றேன் ஹாட் சாக்லேட்….” என்று அனுப்பியிருந்தான் ஆகர்ஷன்.
‘ப்பாஹ் என்ன வாய்ஸ்’ என்று தான் மயங்கிவிட்டாள் அவனின் கிசுகிசுத்த குரலில் தொனித்த உணர்வலையில்.
உறக்கம் வரும் வரையில் அதனை மட்டுமே அவள் கேட்டுக்கொண்டிருக்க இப்போது எதிர்பாராமல் இப்படி ஒரு இடையூறு.
இதுவே ராம்நாத் வந்திருந்தால் கூட சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து கிளம்பியிருக்க கூடும்.
ஆனால் முடியவில்லை. கௌசல்யாவுக்காக மட்டுமே அங்கே இருந்தாள் பிரத்யுக்ஷா.
ராம்நாத் வந்ததும் அழைத்து சென்றுவிடுவாரோ என்னவோ என்று கௌசல்யாவை தன்னோடு உண்ணவும் சொல்லிவிட்டு தானும் சேர்ந்து அமர்ந்துகொண்டாள்.
உதவியாளரிடம் பாயாசம் செய்ய சொல்லியவள் அதனையும் எப்படி செய்யவேண்டும் என்று கூறினாள்.
“உனக்கு குக்கிங் எல்லாம் வருதே பிரத்யு. அண்ணி சொல்லவே இல்லை…” என கௌசல்யா கேட்க,
“கொஞ்சம், லைட்டா தெரியும் த்தை…” கண்கள் சிரிக்க பிரத்யு கூற,
“ஆமா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?…” என்றார் கௌசல்யா.
அவரிடம் சொல்லிவிடலாம் தான். ஆனால் சொல்லமுடியவில்லை. சட்டென்று சமாளிக்கவேண்டுமே.
“நீங்க வந்தது தான் ஸ்பெஷல். அதுக்காக தான்…” என ப்ளேட்டை திருப்பி போட்டுவிட்டாள்.
“உனக்கு தெரியாதா பிரத்யு, நான் பாயாசம் சாப்பிடமாட்டேனே…” என்றதும் பிரத்யுக்ஷா திகைப்புடன் பார்த்தாள்.
“இல்லையே த்தை…”
“எப்பவுமே சாப்பிடறதில்லை. நீ கவனிக்கலைன்னு நினைக்கறேன்…” என்றும் சிரிக்க,
“ஆமாமா, நீங்களும் அப்படியே வீட்டுக்கு வந்து நாள் கணக்குல இருக்கறீங்க. என் டாடியும் என்னை அங்க அனுப்பி வைக்கறாங்க பாருங்க….” என சலித்தவள்,
“அப்போ பாயாசம்?…” என்றாள்.
“நிறையவேற செஞ்சிட்ட. உனக்கு வச்சிட்டு யாருக்காச்சும் குடுத்திடு…” என்று சொல்ல அதற்குள் பிரத்யுக்ஷாவிற்கு அழைப்பு.
“ஒருநிமிஷம்…” என்றவள் தன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
“இன்னும் வரலையா பிரத்யு?…” எதிர்பார்ப்பும், ஆவலுமாய் ஆகர்ஷனின் குரல் அவளை அள்ளிக்கொண்டது.
“ஓஹ் நீ சொன்னியே அந்த ப்ரப்போசல்? அந்த ஃபேமிலியா? எனிதிங் ஸ்பெஷல்?…” என்றான் சன்னமான சிரிப்புடன் உல்லாசக்குரலில்.
“கொன்னுடுவேன் ராஸ்கல்…” சட்டென்று டென்ஷனில் பேச,
“ஏற்கனவே கொன்னுட்டு தான் இருக்க பிரத்யு. சீக்கிரம் வந்து மொத்தமா முடிச்சிடுடா….” என்றவன் குரலில் காற்றாகி போனாள் பிரத்யுக்ஷா.
“இதுக்குமேல நேரம் கடத்தவே முடியாது. நீ வா, நான் கிளம்பிட்டேன். ஹாஸ்பிட்டல் போய் நான் கண்ணை மூடி திறக்கும் போது எனக்கு முன்னால நீ வரனும். என் பக்கத்துல நீ நிக்கனும். நான் கை நீட்டும்போது உன் கை எனக்குள்ள விரல் கோர்க்கனும். வந்திடு பிரத்யு…” என்றவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் இவள் நிற்கமுடியாமல் உணர்வு மிகுதியில் தள்ளாடிவிட்டாள்.
“கிளம்பிடு பிரத்யு…” என்று சொல்ல,
“ப்ளீஸ், இப்படி எல்லாம் பேசவேண்டாம். சீனியர் எப்பவும் போல பேசுங்க…”
“ஆஹாங், எப்பவும் போலன்னா?…” என்றவன்,
“பேசலாம், ஹாட் சாக்லேட்டோட. நேர்ல வா. பேசலாமான்னு பார்க்கலாம்…” என்று அவளை சிறுக சிறுக வார்த்தைகளால் கொய்துகொண்டிருந்தான் ஆகர்ஷன்.
“இன்னும் நீங்களும் கிளம்பலை. என்னை மட்டும் கிளம்புன்னு சொல்றீங்க…”
“அதெல்லாம் வந்திருவேன்….”
“எனக்கு இங்க இன்னும் பக்கம். நானும் வந்திருவேன்…”
“எப்படி இப்படி பேசிட்டேவா?…” என்றான் கிண்டலுடன்.
“சரி கால் கட் பண்ணுங்க. வர்றேன்…”
“ம்ஹூம், நீ வை…”
“சீனியர்…”
“சொல்லுங்க ஜூனியர்….”
“ஹப்பா, முடியலை. என்ன இதெல்லாம்?…” என்றவளுனுள் என்னென்னவோ செய்தது.
அந்த உணர்வை தாளமுடியவில்லை. இதில் அவன் தன் விருப்பம் கூறுகையில் பதிலுக்கு தான் என்ன சொல்லவேண்டும் என்ற யோசனையே அவளை தடுமாற செய்தது.
“ஓகே, வர்றேன். உன்னை தேடி, உன்னை பார்க்க. பை பிரத்யு…” என்று சொல்லி வைத்துவிட பிரத்யுக்ஷா அப்படியே நின்றிருந்தாள்.
வருபவன் எவ்விதம் தன் காதலை தெரிவிப்பான்? சாதாரணமாய் அனைவரையும் போல் அந்த மூன்றுவார்த்தையை கூறுவானா?
இல்லை இல்லை. அவன் ஆகர்ஷன். அப்படி சாதாரணமாய் செய்யக்கூடியவன் அல்லவே.
நினைக்கையில் நெஞ்சமெல்லாம் நேசத்தில் தித்தித்தது. நாணங்களோடான நளினங்கள் அவளை அலங்கரிக்க கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
வேலையில் சேருவதற்கு ஸ்ரீவத்சன் என்ன பேசுவார், எப்படி கேட்பார் என்று தெளிவாய் அதனை போலவே யோசித்து இப்படி பேசினால் இன்ன பதில் கூறவேண்டும் என்று நினைத்திருந்தவள்.
ஆனால் ஆகர்ஷன் எப்படி இதனை ஆரம்பிப்பான், என்ன பேசுவான், அதற்கு தான் எப்படி பேசவேண்டும் என்று நினைத்து பார்க்க நினைவுகள் ஓரிடத்திலேயே தேரென நகராது நின்றது.
“அச்சோ…” என்று தலையை பிடித்துக்கொண்டாள் பிரத்யுக்ஷா.
முகத்தில் புன்னகை மிதமிஞ்சியே தெரிய, கௌசல்யா வேறு வெளியே காத்திருந்தார்.
கதவை திறந்துகொண்டு வெளியே வருகையில் ராம்நாத் வந்துவிட்டிருந்தார் கௌசல்யாவை அழைத்து செல்வதற்கென்று.
“வாங்க மாமா, சாப்பிடுங்க…” என பிரத்யுக்ஷா கூற,
“இல்லம்மா, கிளம்பறோம். அப்படியே காஞ்சிபுரம் புறப்பட்டுடுவோம்….” என்றவர் ஏகத்திற்கும் சோர்ந்திருந்தார்.
வெயிலில் வியர்த்திருக்க வேறு செய்தது. சற்றுநேரம் அமர்ந்திருந்துவிட்டு செல்லாலமே என்று பார்த்தாள் பிரத்யுக்ஷா.
“சாப்பாடு ரெடி பண்ண சொல்லிட்டேன் மாமா. ரெடியா இருக்கு…” மீண்டும் அவள் சொல்ல,
“இல்ல பிரத்யு. இப்ப போனா தான் நல்லநேரத்துல மண்டபத்தை பார்த்துட்டு அட்வான்ஸ் குடுக்க முடியும். வர்றேன்…” என்றவர் கௌசல்யாவை பார்க்க,
“வர்றேன் பிரத்யு. உடம்பை பார்த்துக்கோ…” என்று சொல்லிவிட்டு விடைபெற்றார் கௌசல்யா.