கௌரவ் அங்கே வந்து கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டான் தாயை பார்த்துக்கொண்டு.
பிரத்யுக்ஷா சென்றதும் ஷ்யாமளா கௌரவ்வை பார்த்துவிட்டு கௌசல்யா புறம் திரும்பினார்.
“எப்படி இருக்கீங்க கௌசல்யா?…” என்றதும் அவரின் கண்கள் எதையோ கூற விழைந்தது.
“இப்போ பரவாயில்லையா?…” என்றார் ஷ்யாமளா.
“ஹ்ம்ம்…” என தலையசைத்தவர் திரும்பி கௌரவ்வை பார்த்தார்.
அவன் இப்போது அவர்களை பார்க்கவில்லை. கையில் கைப்பேசியில் கவனமாய் இருப்பதை போன்று இன்னும் கவனம் காண்பித்தான்.
“ஆகர்ஷனை தேடறீங்களா?…” என ஷ்யாமளாவே கேட்க கௌசல்யாவின் விழிகள் கலங்க துவங்கியது.
மீண்டும் கௌரவ்வை திரும்பி பார்த்தவர் தன் கண்களை மூடி தன்னை அமைதிப்படுத்த முனைந்தார்.
“நான் நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்டது இப்போ இதுக்காக மட்டும் இல்லை. உங்களோட வாழ்க்கையை நீங்க வாழ்ந்துட்டிருக்கற வாழ்க்கை. சந்தோஷமா இருக்கீங்க தானே?…” என்று கேட்டார் ஷ்யாமளா.
எத்தனை இருந்தும் ஆகர்ஷனை பார்த்ததுமே அடையாளம் கண்டு மயங்கி சரிந்தவர், கிருஷ்ணாவை இன்னும் மறக்காமல் ஆழ்ந்த மயக்கத்தில் உச்சரித்ததிலேயே அவரின் மனதினை அறிந்துகொள்ள தோன்றியது.
குடும்பமாய், கணவன், பிள்ளைகள் என்று வாழ்ந்தால் மட்டும் சந்தோஷமாய் வாழ்கிறார் என்று அர்த்தமாகிவிடாதே என்று தான் அவரிடம் இதனை கேட்டார் ஷ்யாமளா.
“ஹ்ம்ம், ஆமா பயப்பட எதுவுமில்லை. ஆகர்ஷன் இருக்கான். அவன் ஹார்ட் சர்ஜன். தெரியுமா உங்களுக்கு?…” என்றார் மீண்டும்.
கௌசல்யாவிற்கு வார்த்தைகள் வரவில்லை. பேசவேண்டும், மகனை பற்றி நிறைய தெரிந்துகொள்ளவேண்டும், அவனின் கைபிடித்து கன்னம் தொட்டு நெஞ்சோடு அணைத்துக்கொள்ள வேண்டும் என்று உயிரெல்லாம் கதறிக்கொண்டிருந்தது.
பால்மணம் மாறா குழந்தையை அள்ளி கொடுத்துவிட்டு இன்றளவும் அவனை அணைத்து கொஞ்சி, அருகாமையை அனுபவிக்கமுடியாத தன் நிலையை எண்ணி நித்தம் நித்தம் உயிர் தவித்திருந்தார்.
பரிதவிப்புடன் கௌரவ்வை திரும்பி பார்க்க அவன் கையிலிருந்த கைப்பேசியில் கேமரா வழி தாயின் பார்வைகளை குனிந்தபடி அவதானித்துக்கொண்டிருந்தான்.
எந்த உண்மையும் தனக்கு யாரின் மூலமாகவும் முழுமையாய் தெரியவரப்போவதில்லை. தானே அறிந்துகொள்வதில் முனைந்துவிட்டான் கௌரவ்.
“உங்க அம்மா, அப்பா, தம்பி எல்லாம் எப்படி இருக்காங்க?…” என்றார் ஷ்யாமளா அடுத்ததாய்.
“இருப்பாங்க…”
“என்ன?…” என்றவருக்கு புரியவில்லை.
“ஹார்ட் சர்ஜனா?…” என அவர் கேட்டதினை தவிர்த்து கௌசல்யா ஆசை பொங்க தாய்மையுடன் மகனை பற்றி அறிந்துகொள்ள கேட்க,
“ஹ்ம்ம், ஆமா. நிச்சயம் பெருமைப்பட்டுக்கனும் நீங்க. அப்படி ஒருத்தனை இந்த உலகத்துக்கு குடுத்துருக்கீங்க…” என்றார் ஷ்யாமளா.
“ரொம்ப ரொம்ப சந்தோ…” என்றவருக்கு வார்த்தைகள் வராமல் பாதியில் அடைபட்டு அழுகை வர, மீண்டும் கௌரவ்வை பார்த்தவர் குரலில் அடக்கப்படும் கேவல்.
“என்னோட அப்பா என் குழந்தைய ஆசிரமத்துல விடனும்ன்னு சொன்னாங்க. ஒன்னுத்துக்கும் ஆகாம போவான்னு சொன்னாங்க. அதை மறக்கவே முடியாது. அதுக்கு பயந்து தான் நான் உங்களுக்கு கால் பண்ணினேன். அப்பவும் என் பிள்ளை என் கை விட்டு போய்ட்டான். எல்லாமே போயிருச்சு. எல்லாமே. என் சந்தோஷம் எல்லாமே…” என்று சொல்லி தேம்பியவர் மகனை திரும்பி பார்த்தார்.
கௌரவ்வின் விழிகள் கசிந்தது. தன்னை பார்த்து தன்னை கண்டு தாய் தன் உணர்வுகளை அடக்குகிறார் என்று புரிந்தது அவனுக்கு.
“ப்ளீஸ் அண்ணி, அழாதீங்க…” என்று சொல்ல,
“ம்ஹூம். அப்படி அப்படி சொல்லாதீங்க. கௌசல்யா போதும்…” என்றவர் பதற,
“ஆகர்ஷனை பார்க்கனும்ன்னு தோணலையா உங்களுக்கு? அவன் இங்க தான் இருக்கான்…” என்றார் அவர் தேடுவார் என்று எண்ணி.
உதடெல்லாம் துடிக்க பரிதாபமாய் ஒரு பார்வை பார்த்தவரை காணுபவர் இதயம் நொறுங்கி போகும். அப்படி ஒரு நிலை.
“சத்தியம் செஞ்சுட்டேனே….” என்றார் கௌசல்யா மீண்டும் கௌரவ்வை பார்த்து.
“என்ன?…” என்றார் ஷ்யாமளா.
“அவனை பத்தி நினைக்காம, அவன் பேரை கூட சொல்ல கூடாதுன்னு சொல்லிருக்காங்க. பிள்ளைங்கன்னா அது எனக்கு கௌரவ், அவனுக்கு அப்பறம் விக்ரம், சாருலதா. வேற யாரும் இல்லையாமே. இல்லைன்னு சொல்லிட்டாங்களே…” என்று சொல்லியவரின் நெஞ்சம் விம்ம,
“யாரு? யார் இதை பண்ணினது? அது எப்படி இல்லைன்னு ஆகும்? இதெல்லாம் இதெல்லாம்…” என்றவருக்கும் வார்த்தைகள் வரவில்லை.
“அவங்க தான். கௌரவ் அப்பாவும், அவர் அம்மாப்பாவும். கௌரவ் தலையில அடிச்சு சத்தியம் செய்ய சொன்னாங்க. பச்சை குழந்தை. அவன் என் கைக்கு தரும்போது ரெண்டுமாசம். அவன் மேல…” என்று சொல்லியவர் அழுகையை அடக்க முடியாமல் போராட, தாயின் நிலை காணமுடியாமல் கௌரவ் போராடினான்.
“என்ன மனுஷங்க இவங்கெல்லாம்?…” என்று பல்லை கடித்து கோபம் கொண்ட ஷ்யாமளா,
“பிரத்யு அம்மா ரொம்ப நல்லவங்கன்னு சொல்லுவா. அவங்க கூடவா இது தப்புன்னு சொல்லலை?…” என்றார்.
வேதனையுடன் லேசாய் இதழ் வளைத்த கௌசல்யா விழிகள் ஜீவனற்று பார்த்தது ஷ்யாமளாவை.
“எனக்கு ஒரு குழந்தை இருந்ததே அவங்க யாருக்குமே தெரியாது. நான் கல்யாணமானவன்னு கௌரவ் அப்பா, அவரோட அம்மாப்பாவை தவிர வேற ஒருத்தருக்கும் தெரியாது. சொல்லக்கூடாதுன்னு சொல்லி கல்யாணத்தை முடிச்சாங்க….” என்றார் ஷ்யாமளாவிடம்.
அடுத்தடுத்ததாய் அதிர்வுகள். ஷ்யாமளா இப்படி கூட செய்யக்கூடுமா மனிதர்கள் என்று தான் பார்த்தார் கலங்கி போய்.
இன்னும் எத்தனை எத்தனை துயரங்களை உள்ளடக்கி இவர் வாழ்ந்திருக்கிறார் என்று மருகி பார்க்க,
“எதுவுமே உணர கூடிய நிலையில நான் இல்லை. கிருஷ்ணா போயாச்சு. என் பிள்ளையும் போயாச்சு. எனக்குன்னு ஒரு ஆறுதலா நான் தொலைச்ச எல்லாமுமா கௌரவ் எனக்கு கிடைச்சான். அவனை அப்படித்தான் நான் பார்த்தேன். தொலைச்ச உறவு என் கண்ணெதிரே இருந்தும், நான் எல்லாம் பாவி தானே? என்ன பாவம் பண்ணினேன்னு தெரியலையே…” என்றவரின் சத்தமின்றிய கதறல் கௌரவ்வின் செவிகளை கிழித்து இதயத்தை உடைத்தது.
கண்ணிலிருந்து இருசொட்டு நீர் கைப்பேசியில் விழ, அதற்குள் கதவு தட்டும் சப்தம்.
விக்ரம், சாருலதா இருவருமே உள்ளே வந்தனர். பிரத்யுக்ஷா உடன் வர கௌரவ் தன்னை நொடியில் சுதாரித்து எழுந்துகொண்டான்.
“அப்பாவை பார்க்கலாமாம். அம்மாவை கூட்டிட்டு போக வந்தோம்…” என்றான் விக்ரம்.
“ஹ்ம்ம்…” என்றுமட்டும் சொல்லியவன் கௌசல்யாவை பார்க்க அவனை கண்டு ஆதுரமாய் புன்னகைத்தார்.
பிள்ளைகள் மூவரும் உள்ளே செல்ல கௌசல்யா கௌரவ்வின் கையை பிடித்துக்கொண்டார்.
“அம்மா நல்லா இருக்கேன் கௌரவ்….” என்று சொல்ல அவரின் கரத்தை பிடித்தவனின் கைகள் அழுத்தம் கூட்ட,
“நான் கூட்டிட்டு வரேன் ண்ணா…” என்றான் விக்ரம்.
“ஹ்ம்ம்…” என்றுவிட்டு தலையசைத்து வெளியில் வந்து நின்றான் கௌரவ்.
அவன் செல்லவும் அடுத்ததாய் கௌசல்யாவை அழைத்துக்கொண்டு ஷ்யாமளா, பிரத்யுக்ஷா, விக்ரம், சாருலதா என அனைவரும் வர அந்த தளத்திற்குள் அப்போது தான் நுழைந்தான் ஆகர்ஷன் கிருஷ்ணகுமாருடன்.
வெளியே வந்த கௌசல்யாவின் பார்வை ஆகர்ஷனை கண்டதும் மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க எங்கே வலுவிழந்து போவோமோ என்று பயந்தவர் உள்ளுணர்வின் உந்துதலில் பார்வையை திருப்ப மறுபக்கம் கௌரவ் கண்களில் கவ்வியிருக்கும் ஏக்கத்துடன்.
ஆகர்ஷன், கௌரவ் இருவரின் பார்வையும், கௌசல்யாவிடம் பரிதவிப்புடன் நிலை கொள்ள, கௌசல்யா விழிகள் இங்குமங்குமாய் தன்னுயிரினுள் அல்லாட ஆரம்பித்தது.